கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

துயரில் மூழ்கிய பொழுதுகள்

Wednesday, December 29, 2004

இறுதியாய் கிடைக்கும் செய்திகளின்படி வடகிழக்குப்பகுதியில் அம்பாறையில்தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. எம் கையே எமக்கு உதவி என்று அனுப்பப்படுகின்ற உதவிகள் கூட திசை திருப்பப்படுகின்ற செய்திகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போலவிருக்கிறது.
........
ஆரம்பத்தில் திருகோணமலைக்கு அனுப்பப்படவிருந்த நிவாரணப்பொதிகளுடன் இருந்த கப்பலை திசைதிருப்பிய முயற்சி இறுதியில் தமிழ் எம்பி ஒருவரால் முறியடிக்கப்பட்டது. இன்று கூட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு மலையகத்திலிருந்து உதவிகளுடன் சென்ற லொறிகளை இராணுவம் தாங்கள் சொல்லும் இடங்களுக்குத்தான் அனுப்பவேண்டும் என்று கட்டளையிட்டதாக வானொலிச்செய்திகள் கூறுகின்றன. எனது உறவினர் இரண்டு லொறிகளை நிவாரணப்பணிகளுக்காய் கொழும்பில் மாணவர்களிடம் கொடுத்திருக்கின்றார். அதில் ஒரு லொறியை பொதிகளுடன் காலிக்குச் செல்லவேண்டுமென அரசாங்க அதிகாரிகள் கட்டளையிட்டிருக்கின்றார்கள். அத்துடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஓடிய லொறிகளை (கொடுத்தவர் இலவசமாகத்தான் சேவைக்கு கொடுத்தார்) சிங்கள விதானைமார்கள் தங்கள் பெயரில் பதிந்து அதற்கான கட்டணங்களை அறவிட்டிருக்கின்றார்கள். இன்னும் உதவிகள்/நிவாரணங்கள் எதுவுமே பாதிக்கப்பட்ட மக்களை எட்டவில்லை என்றுதான் அங்கிருந்து பேசும் நேரடியாகப்பேசும் மக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அம்பாறையில் சிங்கள மக்கள்/முஸ்லிம் மக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அங்கே உதவிப்பொருட்களை அனுப்பினால் அது தமிழ் மக்களுக்கும் போயிவிடும் என்ற பயத்தில் பலவிதத்தில் இனவாதிகள் இடையூறு விளைவித்துக்கொண்டிருப்பதாய் புலிகளின் குரலிலும் கூறினார்கள். இடையிடையில் நம்பிக்கையூட்டும் சின்ன விசயங்களும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. குருணாகலிலிருந்து சிங்கள மக்கள் தங்கள் உதவிக்கரத்தை திருகோணமலைக்கு நீட்டியிருக்கின்றார்கள். உதவிய ஒரு சிங்களவர் சொன்னார், முந்தி எங்களுக்கு வெள்ளப்பெருக்கின்போது புலிகளும் வன்னிமக்களும் உதவினார்கள். அதை நாங்கள் நன்றியுடன் மனதில் இருத்தி வைத்திருந்தோம். இது நாங்கள் உதவுவதற்கான அரிய தருணம் என்றார்.

...............
இன்று வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கிறிஸ்தவ sister யாழிலிருந்து நேரடியாகப் பேசியிருந்தார். அவர் கற்பித்த பாடசாலை முற்றாக அழிந்துபோயிருக்கிறது. கற்ற மாணவர்களில் பத்திற்கு மேற்பட்ட சிறார்கள் இறந்திருக்கின்றார்கள். பேசுவதற்கு சற்றுமுன்கூட ஒரு சிறுமியைப் புதைத்துவிட்டுத்தான் பேசினார். அவர் வானலையில் சொன்ன இரண்டு விசயங்கள் முக்கியமானது. போர் என்றாலும் ஆகக்குறைந்தது கொஞ்ச உடுப்புக்களையும் கையிலிருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டாவது ஓட முடியும். ஆனால் இந்த அழிவு அப்படிப்பட்டதல்ல. பல ஆயிரம் மக்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டிருக்கிறார்கள், உயிரைத்தவிர. மரங்களில் தப்பியிருந்த பலர் ஆடைகளில்லாது கூட பல மணித்திலாயங்கள் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். எனவே புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அவர்களுக்கான உடனடித்தேவைகளை மட்டும் நிறைவேற்றுவதோடு மட்டுமில்லாமல், அவர்களது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளையும் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். காயப்பட்டு மற்றும் தப்பியிருக்கும் அநேகர், எல்லாப் போய்விட்டது. இனி என்ன செய்வது?' என்ற மனப்பிறழ்வுடன் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மற்றது இந்த அனர்த்தத்தில் அதிகம் இறந்துபோனது குழ்ந்தைகள் மற்றும் சிறார்கள். இதனால் எங்கள் பிரதேசங்களிள் ஒரு generation gap வரும் அபாயம் வருமென்று கூறினார். உண்மைதானே.
........
இங்கும், CNN னிலிருந்து CBC (Canadian Broadcasting Cooperation) வரை எல்லோருக்கும் இலங்கையில் பாதிப்படைந்தது தெற்குப்பகுதி மட்டுந்தான். எல்லா video clipsம் அதைத்தான் காட்டுகின்றன. இது குறித்து CBC தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு பெண்மணி நேரடியாக அழைத்துக்கேட்டபோது, தங்களால் அங்கே போகமுடியாதுள்ளதால், வடகிழக்குப்பிரதேசங்களின் பாதிப்புப் பற்றி எதுவும் அறியமுடியாதிருக்கின்றது என்று கூறினார்களாம். அழைத்த பெண்மணியும் சளைக்காமல், நாங்கள் video clips எடுத்துத்தந்தால் ஒளிபரப்புவீர்களா என்று கேட்டபோது கிடைத்தால் செய்கிறோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், உண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்னரே தமிழ் தொலைக்காட்சியினரால் video clips & information எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டதாம். என்ன செய்வது இயற்கை மட்டுமல்ல, aftermathம் எங்களுக்குச் சதி செய்துகொண்டுதானிருக்கிறது.
........
ஒன்று மட்டும் புரிகிறது. எமக்கென்றொரு சட்டரீதியான அரசாங்கம் இல்லையென்றால் எவருமே எங்களைக் கவனிக்கப்போவதில்லை என்பதே. இன்னும் தெற்குப்பகுதியில் நடைபெறும் சம்பவங்கள், தமிழ்-சிங்கள உறவை மேம்படுத்துவதற்கு பதிலாக இன்னும் விரிசலடைவதற்குத்தான் வித்திடுவதாய் தோன்றுகிறது.

HELP!!!

Tuesday, December 28, 2004

people who are willing to help...
http://www.geotamil.com/pathivukal/notice_tsunami_fund.html
http://kavithai.yarl.net/archives/002482.html
(thanx to pathivukal.com & EelaNathan)

யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?

Sunday, December 26, 2004

இயற்கை எங்களையும் பழிவாங்கியது. உயர்ந்துகொண்டிருக்கும் உயிரிழப்புக்களில் சிறுவர்களும், பெண்களும் அதிகம் என்ற செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிகழ்வு இரவில் நிகழ்ந்திருந்தால் இன்னும் அதிகமாய் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அங்கிருந்து கதைப்பவர்கள் சொல்கிறார்கள். இலங்கை அரசாங்கமும், புலிகளும் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தி மீட்புப்பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். அதிகமான உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் சொல்லிக்கொண்டிருப்பதைவிட அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதே முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அத்தியாவசிய தேவைகளும், ஆறுதல் வார்த்தைகளுமே இந்தக்கணத்தில் தேவையானது.
..........
பல இடங்களில் சிறுவர்கள் பலியாகிப்போனது நெஞ்சை உருக்கவைப்பவை. மட்டக்களப்பு மாகாணத்தில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாற்பது பிள்ளைகளைக் காணவில்லையாம். அதைவிடக் கொடுமை, முல்லைத்தீவில் பெற்றோரில்லாத பிள்ளைகளைப் பராமரிக்கும் செந்தளிர் இல்லத்தில் நூற்றியெழுபதிற்கும் மேற்பட்ட பிள்ளைகள் அதைப் பராமரித்த ·பாதருடன் காணாமற்போய்விட்டனர். பத்து இருபது சிறுவர்கள் தப்பியிருக்கலாம் என்று கடைசியாக ஒருவருடன் கதைத்தபோது சொன்னார். மட்டக்களப்பு மாகாணம்தான் மிகக்கோரமாய் சிதைந்து போயிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏற்கனவே வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை இந்தப்பெரும் அனர்த்தம் எதுவுமே இல்லாதவர்களாக்கிவிட்டது. அங்கிருந்து பேசிய ஒருவர் கூட, கனடாவிலிருந்து ஏற்கனவே வெள்ளப்பெருக்கிற்காய் வந்து நிதியில் லொறியில் ஏற்றிய நிவாரணப்பொதியை இந்த அழிவில் சிக்கிக்கொண்டவர்களுக்காய் பாவிக்கப்போவதாய் சொன்னார். ஒருநாள் முழுதும் உண்ண எந்த உணவுமின்றி மக்கள் தவிர்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் வானொலியொன்றில் கூறினார்.தொலைபேசிகளில், வானொலிகளில் அங்கிருந்து வந்து விழும் கதைகள் நினைத்தே பார்த்து முடியாதன.
..........
எனது அக்கா கொழும்பில் வசித்து வருகிறார். அவரது வீடு கடற்கரையோரமாய் தானிருக்கிறது. வீடு, பிறகு ஒரு தண்டவாளம் அதற்கடுத்து பெருங்கடல். அக்காவின் வீட்டிலிருந்த ஒரு பெண், இந்த பெரும் கொடும் அலையை (30 அடிக்கு மேலேயென்கின்றனர்) கண்டிருக்கிறார். திடீரென தண்ணீர் வற்றி (கடலின் ஆழத்திலுள்ள கற்கள் எல்லாம் தெரிந்ததாம்) பெரும் அலைகள் பனையளவு உயரத்திற்கு எழும்பியது என்றார். இன்னும் எமது உறவினர் ஒருவரின் வான் (அவர் டிரைவர் வைத்து யாழ்-கொழும்பு சேவை செய்பவர்) யாழ்ப்பாணத்தின் (அல்லது முல்லைத்தீவின்) கடற்கரையோரமாய் நின்றபோது அதில் இருந்த அனைவரும் வானோடு கடலிற்கு அடித்துச்செல்லப்பட்டு காணாமற்போய்விட்டனர். டிரைவர் தற்செயலாய் வெளியில் நின்றதால் கடலோடு இழுத்துப்பட்டாலும் நீந்தித் தப்பி வந்து இதைச் சொல்லியிருக்கிறார். இப்படி இன்னும் எத்தனையோ கதைகள்? புலிகளின் கட்டுப்பாட்டில் அதிகம் சேதத்திற்குள்ளானது முல்லைத்தீவுக் கடற்கரையோரம். இதுவரையே உயிரிழப்புக்கள் ஆயிரத்தைத் தாண்டிவிட்டிருக்கின்றது. இன்னும் வெளிநாடுகள் கொடுக்கும் எந்த உதவியையும் புலிகளின் கட்டுப்பாடுகளுக்கு வரவில்லை/வராது என்று அங்கிருந்து வரும் குரல்கள் மேலும் கவலையை அதிகரிக்கின்றது.
........
இங்கேயிருந்து கொண்டு என்ன இழவைச் செய்வது? விடிகாலையில் எழும்பி செய்தி கேட்டபின் பிறரைப் போல எனது அண்ணாக்களுடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை வானொலிக்கு கொடுத்தோம். (வானொலிக்காரர்கள் உடனடியாக நிதியைச் சேகரித்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறார்கள்). பிறகு, பல்கலைக்கழக/உயர்கல்லூரி மாணவர்கள் அவசரமாய் ஒரு கூட்டத்திற்கு வரச்சொல்ல சென்றிருந்தேன். ஒவ்வொரு குழுவாகப் பிரித்து, சில வேலைத்திட்டங்களைச் செய்வதாய் முடிவெடுத்தோம். முதலில் media குழுவில் நான் இருந்தபோதும், உடனடியாக வேறெதாவது செய்வது நல்லது என்று நிதிசேகரிக்கச் சென்ற குழுவோடு இணைந்து கொண்டேன். அவசரமாக எந்த வசதிகளும் இல்லாமல், எல்லா இனத்தவரின் வீடுகளைத் தட்டி இயன்றளவு நிதியைத் திரட்டிக்கொள்வதே எங்களின் இலக்காக இருந்தது. பயங்கரமாய் ஸ்நோ கொட்டிக்கொண்டிருக்க, வீதியில் கார் circus விளையாட்டுக்காட்டியது. இதை எல்லாவற்றையும் விட அங்கிருந்த மக்களின் துயரும், எல்லாவற்றையும் உதறிப்போட்டுவிட்டு உதவுவதற்கு வந்த தோழர் தோழிகளின் விரிந்த மனதும் எதையாவது செய்யவேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.. எம்மைப்பார்த்துப் பூட்டிய கதவுகள் எத்தனை? நீங்கள் யார் என்ன அடையாளம் உங்களிடம் உள்ளது என்று கேட்டு எங்களின் பொறுமையைச் சோதித்த மனங்கள் எத்தனை? அனுமதியில்லாமல் வீட்டைத்தட்டியதால் பொலிசிற்கு அடிப்போம் என்று பயமுறுத்தியோர் எத்தனை பேர்? இதையெல்லாம் மீறி ஏதோ இராமர் பாலம் கட்ட உதவிய அணிலைப்போல நாங்களும் ஏதோ செய்தோம் என்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. இப்போதுதான் வீடு வந்து சேர்ந்தேன். நாளைக்கும் வருவதாகவும் இன்னும் அதிகமாய் நிதி சேகரிக்கவேண்டும் என்ற கனவும் எங்களில் பலருக்கு உண்டு.

THE BLACK SUNDAY

போர் ஓய்ந்த இந்தவேளையிலும், நிம்மதியாக இருக்கமுடியாதவென சீற்றம் கொண்ட இயற்கை நம்முறவுகளைப் பலிகொண்டபடியிருக்கிறது. தமிழகத்திலும், இலங்கையிலும் தான் அதிகம் மனித இழப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருக்கின்றன என்று வரும் செய்திகள் மிகுந்த கவலை தருகின்றது. இயற்கையை ஒருபொழுதில் தம் கடவுள்களாய் வழிபட்டவர்கள் நம் மூதாதையர். எல்லாம் போயிற்று போ. இந்தக்கணத்தில் சபிக்கிறேன் இயற்கையையும், இந்த ஞாயிறையும்.

தோணிகள் வரும் ஒரு மாலை

Saturday, December 25, 2004

இசைத்தட்டு வெளியீட்டு விழாவும், அரங்கினுள் குளிர் நுழைந்த கதையும்

தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டு வெளியீட்டு விழா மாலை ஐந்து என்று போட்டிருந்தனர். நல்ல நித்திரையிலிருந்த நான் அரக்கப்பரக்க எழுந்து ஐந்து மணிக்கு கிட்டவாக விழா நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். இங்கே நடக்கும் விழாக்கள் எப்போதும் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் ஆரம்பிப்பது சம்பிரதாயம் என்றாலும், நான் இந்த விழாவிற்கு நேரத்திற்கு ஒரு காரணமிருந்தது. எனென்றால் முந்தி ஒருக்காய் புத்தக வெளியீடு ஒன்றிற்கு கொஞ்சம் தாமதாய் போக புத்தகம் எல்லாம் விற்று தீர்ந்திருந்தது. ஆனால் அதிசயமாய் புத்தக வெளியீடை இன்னும் நடத்தப்படாமல் இருந்தது. என்னடா இதுவென்று வரவேற்று கொண்டிருந்தவரிடம் கேட்டபோது, 'ஏன் எல்லாம் சம்பிரதாயமாய் இருக்கோணும்? புத்தகவெளியீட்டிற்கு பிறகுதான் புத்தகம் வெளியிடோணும் என்று ஏன் நினைக்கிறியள்?' என்று போட்டுத்தாக்கினார். 'சரி நீங்கள் சொன்னால் சரியாகத்தான்' இருக்குமென்று அவரிடம் சொல்லி அமைதியாகிவிட்டேன். அந்த அனுபவத்தால் இந்தவிழாவிற்கு கொஞ்சம் பிந்திப்போனாலும் இசைத்தட்டு விற்று முடிந்துவிடுமோ என்று பயத்தில் நேரத்திற்கு போயிருந்தேன். இவர்களும் சம்பிராதயத்தை உடைப்பவர்கள் என்ற என் எண்ணத்தை ஒரு மணித்தியாலம் பிந்தித் தொடங்கி, நாங்கள் typical தமிழாக்காள், நீயன்டும் பயப்பிடத்தேவையில்லை என்று நிரூபித்துவிட்டினம். இப்ப நிகழ்ச்சிகளுக்கு போக சரியாய்ப் பயமாயிருக்கிறது. வரும் மனிதர்கள் எல்லாம் இறுக்கமாய் உட்கார்ந்து இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தங்கள் கூட்டணியாக்களோடு மட்டும்தான் பேசுகிறார்கள். சிலருக்கு வெங்கட்சாமிநாதனைப்பற்றி பதிவுகளில் நானெழுதியது மனவருத்தம் போல. வழமையாய் சிரித்துப்பேசும் ஒருவர் சுவரோடு ஒதுங்கிக்கொண்டார். இன்னொருத்தரிடம் அவரிடம் படைப்புக்களை பேசுக்கொண்டிருக்கும்போது உட்காரப்போறன் என்டார். சரியென்று அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கதைக்க, சரியாய் குளிராய்க்கிடக்கிறது என்று முன்னுக்குப்போனார். மனுசனுக்கு குளிருது போல இருக்கிறது என்று நானும் முன்னுக்கு போய் உட்கார்ந்தேன். பிறகும் தம்பி இதிலையும் குளிராய்க்கிடக்கிறது என்று சொன்னபோது, என்னடாப்பா நான் Jacket கழட்டிப்போட்டிருந்தே குளிரவில்லை. இந்த மனுசன் Jacketயோடு இருந்தும் குளிருது என்கிறதே எண்டு யோசித்தேன். பிறகுதான் என்ரை ஆறாம் அறிவு (?) விழித்துக்கொள்ள, அண்ணை இலக்கிய அரசியல் ஆடத்தொடங்கிறார் என்று புரிந்துவிட்டது. நாளைக்கு இந்தவிழாவைப்பற்றி ஏதாவது எழுத, யாராவது பக்கத்தில் இவர்தான் உட்கார்ந்திருந்தார் என்று சொன்னால் அவருடைய இமேஜ் என்னாவது? சரி நீங்கள் போய் முன்னுக்கு இருங்கோ. நான் கனநேரம் நிற்கமாட்டேன். CDஐ வாங்கிக்கொண்டு போய்விடுவன் என்று சொல்லி பின்னாலிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டேன். எவ்வளவு வயதுபோனாலும், தனிமனித நட்பையும், இலக்கிய விமர்சனத்தையும் பிரித்துப்பார்க்க பலரால் முடிவதில்லை. உண்மையில், வெங்கட்சுவாமிநாதனின் விருதிற்கு பின்பான சுந்தர ராமசாமியிற்கும் வெங்கட்சாமிநாதனுக்கிடையிலான விவாதம் மிகுந்த கவலையைத் தந்தது. வெ.சா ஒருகட்டத்தில் சொல்லியிருந்தார், சுராவை இனி சுந்தரராம்சாமி என்று கூட அழைக்கமுடியாது என்று. எதற்கு நட்பையும் இலக்கிய விமர்சனத்தையும் ஒன்றாக கலக்கின்றனர் என்று யோசித்தேன். எத்தனை காலமாக பேணிய நட்பை ஒரு விருதிற்கான விவாதத்தில் தொலைத்துக்கொண்டு இருவேறு துருவங்களாகிவிட்டனர்.

சரி விசயத்திற்கு வருவோம். தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டில் 12 பாடல்கள் இருக்கின்றது. ஏற்கனவே இதற்கு இசையமைத்தும் பாடிய ராஜ் ராஜரத்தினம் கண்ணீரும் குருதியும் காத்திருப்பும் என்ற இசைத்தட்டை சிலவருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். இது இவரது இரண்டாவது வெளியீடு. 12 பாடல்களில் 9 பாடல்கள் சேரனுடையது. ஏனைய மூன்றில், இரண்டு வ.ஜ.ச.ஜெயபாலனுடையது. ஒன்று செழியனுடையது. பாடல்களைக் கேட்கும்போது ஜெயபாலனுடைய பாடல்கள் இலகுவாய் பாடுதற்குரியதான ஒருவிதமான இலயத்தில் இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது( அவருடைய கவிதைகளில் எல்லாம் இப்படியான ஒருபண்பு இருப்பது அவர் இன்னும் மரபுக்கவிதை முறையை முழுமையாக அறுக்கவிரும்பாமல் இருப்பதால் இருக்கக்கூடும்). ஜெயபாலனுடைய பாடல்களில் ஒருவித குதூகலமும், தவறுகளை இழைத்தும், வருந்தியும், குறும்புசெய்தும் வாழ்வில் நகர்ந்துகொள்ளும் மனிதமனத்தைக் காணலாம். சேரனுடைய பாடல்கள்/கவிதைகள் அப்படியில்லை. ஒரு வித அறிவுஜீவித்தனத்துடன் ('எல்லோரையும் போல அந்த நேரத்தில் நீ அழவில்லை', 'நான் தரையில் வாழும் பறவை அல்ல/நான் உனக்கும் அல்ல') என்று சோகம் நிரப்பிக்கிடக்கும் பொழுதிலும் உணர்ச்சிவசப்படுவதேயில்லை. இந்த இசைத்தட்டில் இரண்டாம் பாடலான 'காற்றோடு போனதெல்லாம்' சேரனின் புலம்பெயர்வாழ்வை சொல்வது போலப்பட்டது. 'வேற்றவர் நாட்டுக்குள்ளே/வெறென்ன கிடைக்குமென்று/தீட்டிய பாடலொன்று/ தெருவோரம் முழங்கக்கேட்டேன்' பாடலில் புலம்பெயர்ந்த ஒரு கவிஞனின் நம்பிக்கையீனம் மற்றும் நம்பிக்கை தெரிகிறது. தமிழை வாழ்த்தியும் சேரனின் ஒருபாடலுண்டு. தமிழை வாழ்த்திப்பாடும்போது, எப்படியென்றாலும் பாரதியின் தாக்கம் எல்லாக் கவிஞர்களுக்கு வந்துவிடுகிறது. 'பூமியின் அழகே/ பரிதியின் சுடரே/ பொறுமையின் வடிவே/தமிழே' என்று பாடல் ஆரம்பிக்கும்போது பாரதியும் உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுகிறார். இன்னும், 'எங்கும் அலைந்து திரிந்து கிடப்பினும்/ ஏதிலி வாழ்வில் உதிரம் வடிப்பினும்/எங்கள் மொழிக்கொரு புதுவளம் சேர்ப்போம்/எண்ணமெல்லாம் தமிழென வாழ்வோம்' என்கின்றபோதும், வேற்று நாடுகள் சென்றெனினும் தமிழுக்கு வளங்கள் சேர்ப்பீர் என்று பாரதியின் ஏக்கம் நினைவிற்கு வந்து விடுகிறது. ஒருவிதமான் பைலா பாடலும் உண்டு. ஆடுங்கள் ஆடுங்கள் என்று எல்லா வசனமும் முடிகிறது. இப்போதைக்கு கேட்கும்போது சாதாரமாய்த்தான் தெரிகிறது. இதிலை சேரனின் எழுதுகோல வைரமுத்து வந்து உட்கார்ந்தது மாதிரித்தெரிந்தது. பாடல் ஆடக்கூடியதாய் இருக்கிறதா இல்லையா என்று Molson Canadian குடித்து கேட்டபின் சொல்கிறேன். எவடம் எவடம் என்ற பாடலும் சாதாரண வகைப்பாடல். இது சேரனின் நாடகப்பிரதியான, ஊர்ப்போக்கில் இணைக்கப்பட்ட பாடல் என்று பிறகு கேள்விப்பட்டேன். சாதியைப்பற்றித்தான் சாடைமாடையாகச் சொல்கிறது. எப்பதான் சேரன் தன் ஞானக்கண்ணைத் திறந்து சாதி பற்றி பேசப்போகிறாரோ தெரியாது. கவிஞர் எல்லாவற்றையும் எழுதவேண்டுமா என்று யாராவது கேட்கக்கூடும்? ஆனால் ஆரம்பத்திலிருந்தே 'பேரிளம் பெண்களின் காதலனாகவே கழிந்த இவ்வாழ்வில்' என்று எழுதி, இந்த இசைத்தட்டிலும் 'முற்றாத காதலோடு முழுமையத் தேடுகிறேன்' என்று காதலை PhD அளவில் வெட்டிக்கொத்தி ஆராய்ச்சி செய்பவர் மற்ற விசயங்களுக்கும் கொஞ்சம் நேரத்தைச் செலவழிக்கலாம் என்பது என்னுடைய நினைப்பு.

ஜெயபாலனுடைய இரண்டு பாடல்களும் மனதில் சட்டென்று அமர்ந்துகொள்கின்றன. ஒரு பாடலின் ஆரம்பமே, 'கால மகள் மணலெடுத்து/ கோலமிட்ட கடற்புரத்தில்/ஏழைமகள் ஒருத்தி... என்று பாடலுக்குரிய அமைவுடன் வார்த்தைகள் வந்துவிழுகின்றன. வாழ்வின் துயரம் இலகுவான சொற்களில் பாடப்பட்டாலும் மனதை நிரப்புகிறது. 'தானாய் விடிவெள்ளி/ தோன்றுகின்ற சங்கதிகள்/வானத்தில் மட்டும்/ வாழ்வினிலே இருள் தொடரும்' என்ற வரிகளில் வாழ்வின் நியதி துலங்குகிறது. எனக்கு மற்றப்பாடல்தான் நன்கு பிடித்திருந்தது. மலையகப்பெண்ணின் துயரைச் சொல்லும் பாடல். ஒரு இடத்தில், தேயிலை கொய்யும் பெண்ணின் கண்ணீர்தான் மகாவலியாய் பெருக்கெடுக்கிறதோ என்கின்றமாதிரி அருமையான உவமையுடன் வரும். இன்னும், 'யாழ்ப்பாண செம்மண்ணில் புல்லறுக்கும் தேவதையே/ வன்னியிலே காடழித்து வயல் விளைக்கும் அருந்ததியே/ மீன்பாடும் தேனாட்டின் தெம்மாங்கு ஊர்வசியே/ மலையகத்து தேவதையே பேரணியில் வாரீரோ!' வரிகளில் கவிஞரின் நுண்ணிய அவதானங்கள் கேட்பவரின் மனதிலும் எட்டிப்பார்க்கிறது. செழியனின் 'மழை பெய்த நாளொன்றில்' பாடலின் துயர் பெருக்கெடுத்தோடுகிறது. விட்டு வந்த சொந்தமண்ணையும், வேரைப் பதிக்கமுடியாத அந்நியநாட்டிலுமான வாழ்வின் கொடுங்கனவை இந்தப்பாடல் பேசுகிறது. 'துயரங்கள் போவேன்று நிலம் விட்டு நிலம் வந்தும் துயராய் வழிகின்றதே/ பெருந்துயராய் வழிகின்றதே/ வாழ்வு துயராய் வழிகின்றதே'. நம்மில் பலருக்கு இதுதானே யதார்த்தம்.

மற்றபடி ராஜ் ராஜரத்தினத்தின் உழைப்பு மதிக்கப்படவேண்டியது. 'எங்களுக்கென தனித்துவமான இசை வடிவங்களை உருவாக்கிற ஒரு பெரும் முயற்சியில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது' என்ற அவரது ஆதங்கத்தைப் புரிந்து அவரை நாமும் உற்சாகப்படுத்துவோம். இரண்டாவது இசைத்தட்டில் நிறைய சினிமா முன்னணிப்பாடகர்கள் பாடியிருக்கின்றனர். இது பலமா பலவீனமா என்பதை காலத்தை தீர்மானிக்கவிடுவோம். முதல் இசைத்தட்டில் சொன்ன, 'ஒரு வழிப்பாதையாக இருந்துவரும் ஈழ-தமிழக கலை இலக்கியப் பாலம், இரு வழிப் பாதையாக திறந்துவிடப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் இவ்வேளையில்...' என்கின்ற வரிகளில் ராஜ் ராஜரத்தினம் போன்றவர்களின் விருப்புக்கள் எத்தனை விதம் சாத்தியப்பட்டிருக்கின்றது என்பது பற்றி அறியவும் ஆவல்.

SORRY

Friday, December 24, 2004

FRIENDS,
I HAVE FOUND DIFFICULTIES IN MY BLOG. I AM NOT SURE WHAT IS HAPPENING HERE. MY POSTINGS ARE MESSED UP. I TRY TO FIX IT UP BEFORE TONIGHT.

DJ

ஜெயமோகனின் நாவல்கள்

Sunday, December 19, 2004

ஜெயமோகனின் நாவல்களில், 'ஏழாம் உலகம்' தவிர்த்து அனைத்தையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து, கொழும்பில் நின்றபோது தமிழ்ச்சங்கத்தில் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமாரி எல்லாம் எடுத்து வாசித்து, இப்போது காட்டில் வந்து நிற்கிறேன்.

ரப்பர் 90களில் எழுதப்பட்ட ஜெயமோனின் முதலாவது நாவல். நாவல் என்பதை விட நாவலிற்கான ஒரு முயற்சி என்றே என் வாசிப்பில் அடையாளப்படுத்துகிறேன். அங்கே சாதிப்பெயர்களால் உருவகிப்பட்ட பாத்திரங்கள் இப்போதும் காட்டிலும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படுவதால், தசாப்தம் தாண்டியும் ஜெயமோகன் எங்கே நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயமோகனின் நாவல்களை இலகுவாய் ஒருவிதமான வகைக்குள் அடக்கிவிடலாம். எப்போதும் அவரின் நாவல்கள் ஊடாடிக்கொண்டிருப்பது பெருங்கனவும் அதன் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியும். எல்லா நாவல்களும் ஒருவிதமான சோகத்துடனும் இயலாமையுடனும் முடிகின்றன.

ரப்பரில் எந்தப்பாத்திரமும் மனதில் நிற்கமுடியாமல் வாசித்தவுடன் மறைந்துவிடுகின்றனர். நாவல்முழுவதும் கனக்க கதாபாத்திரங்கள். ஒரு விதமான தொடர்பை/நீட்சியை ரப்பரிலும் காட்டிலும் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஆனால், தனது நாவல் என்ற கட்டுரைத்தொகுப்பில் 90களிலே நாவல்கள் தமிழில் முகிழத்தொடங்குகின்றன என்று குறிப்பிடுகையில் அவர் எதைக்குறிவைத்து சொல்கிறார் என்று சொல்லத்தேவையில்லை.

விஷ்ணுபுரம் அவரின் அடுத்த நாவல் என்று நினைக்கிறேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நான் முதல் பாகமும் இறுதிப்பாகமும் மட்டுமே வாசித்திருக்கிறேன். தத்துவப்பகுதியில் என்னால் நுழையவே முடியவில்லை. விஷ்ணுபுரம் ஒரு இந்துத்துவ பிரதியை 'நடுநிலைமை' என்று வாசிப்பவர்கள் எண்ணும்படி கவனமாகப்பின்னப்பட்டிருக்கிறது. அரவிந்தன்(காலச்சுவடு ஆசிரியர்) அண்மையில் காட்டிற்கும் ஏழாம் உலகத்திற்கும் விமர்சகம் எழுதுகையில் விஷ்ணுபுரம் மட்டுமே ஜெயமோகனின் சிறந்தபிரதி என்கின்றபோது பிரதியின்நிலை என்னவென்று கூறத்தேவையில்லை. ஒருகாலத்தில் ஜெயமோகனின் நெருங்கிய நண்பனாகவும், RSSன் தீவிர அங்கத்துவராயும் அரவிந்தன் இருந்திருக்கிறார் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பின் தொடரும் நிழலின் குரலின் முதல் அத்தியாயத்தை வாசிக்கும்போதே ஜெயமோகன் என்ன சொல்லவருகின்றார் என்று புரிந்துபோகிறது. அதற்காய் இவ்வளவு பக்கங்களைக் கொண்டு நிரப்பியிருக்கவோ, அல்லது மூன்றுவருடமாக ஆராய்ச்சி செய்தோ எழுதியிருக்கவேண்டியதில்லை. செய்திருக்கவேண்டியது. ஆக்ககுறைந்து பத்துப்பக்கத்தில் (பத்து பக்கம் என்பது ஜெயமோகனின் எந்தக்கட்டுரையையும் 10 பக்கங்களுக்குள் நான் வாசித்திருக்காததால்) 'ஸ்டானின் கொடுங்கோலாட்சி' என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தால் போதுமாயிருந்திருக்கும். இப்போது கூட, இடதுசாரிகள் (கட்சி இடங்கொடுக்காத போதும்) ஒளித்து வாசிக்கிறார்கள் என்று ஜெயமோகன் புளங்காகிதம் அடைகிறார். உண்மையில் இப்படி ஸ்டானினின் பாசிசம் தெரியாதவர்கள் இடதுசாரியாயிருக்காமல் இருந்தாலே கம்யூனிசத்திற்கு செய்யும் நன்றிக்கடனாயிருக்கும் என நினைக்கிறேன்.

நான் வாசித்த ஜெயமோகனின் நாவல்களில், மிக மோசமான நாவல் என்றால் கன்னியாகுமரியைத் தான் சொல்வேன். உற்றுப்பார்த்தால், எஸ்.பொவின் 'தீ'யை தத்துவம், தேடல் என்று கொஞ்சம் கலந்து கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எஸ்.பொவாது தனது 25 வயதில் முதல் நாவலாய் எழுதியிருந்தார், ஆனால் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் என்று எழுதியவர் ஏன் இப்படி எழுதினார் என்று புரியவில்லை. இல்லாவிட்டால், தமிழ் சினிமா இயக்குநனர்கள் சொல்வதுபோல, இந்தக்காலத்தில் மசாலா கலந்து கொடுத்தால், சூப்பர் ஹிட் கிடைக்கும் என்ற மாதிரி, ஜெயமோகனும் ஒரு சூப்பர் ஹிட் இலக்கிய உலகத்தில் அவசரமாய் கொடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இதை எழுதியிருக்கலாம்.

காடு பற்றி அறிந்துகொண்டபோது இது எனக்குப்பிடித்தமாயிருக்கும் என்று நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன். முக்கியமாய் காதலையும் அழகியலையும் இது விரித்துச்சொல்லும் என்று நினைத்தேன். என்ன ஒரு அபத்தம், மலைவாழ் பெண் முலைகள் தெரிய இடுப்பில் துண்டுடன் நீராடும்போது கண்ட கதாபாத்திரமான கிரிக்கு அவள்மேல் அளவற்று காதல் பெருக்கெடுக்கிறது. ஒருபொழுதில் அவள் முலைகளில் எல்லாம் கண்கள் முளைத்து தன்னை உற்றுப்பார்ப்பது போலவும் தெரிகிறது கிரிக்கு. ஒருமுறை மட்டும் முலைகளைப்பார்த்து பெண்ணின் மீது காதல் கொண்டவன், பிறகு வாசிப்பவரைப் பார்த்து, 'இந்தக்கணத்தில் மார்பில் கைவைத்துச் சொல்வேன். காதலிக்காதவர்கள் கடவுளையும் அறிவதில்லை. ஆம் இது உண்மை' என்கிறான். இதை வாசித்தபோது நானும் கணக்கிடத்தொடங்கினேன், ஒருமுறை பார்த்து பெண்களில் ஆசைப்பட்டது என்றால், நானும் எத்தனைவிதமான கடவுள்களை தரிசித்திருக்கின்றேன் என்று. தமிழ் சினிமாக்கள் கெட்டது போங்கள். ஆனால் காட்டின் இறுதி அத்தியாயங்கள் பிடித்திருந்தன. ஒரு பெருங்கனவின் வீழ்ச்சியைச் சொல்வதால் பிடித்திருக்கக்கூடும். மனதிற்குள் புதைந்திருக்கும் சோகங்களை இணைத்துப்பார்ப்பதால் அப்படி அமைந்துமிருக்கலாம். காடு எனக்கும் பிடிக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த நாவலில் வரும் பாத்திரத்திற்கு குறிஞ்சிப்பூவை பார்த்தபின் எப்படி ஒரு உணர்வு வருகிறதோ அப்படியே எனக்கும் வாசித்துமுடித்தபிறகு ஏற்பட்டது.

ஜெயமோகனின் நாவல்களில் காமம் மதம்பிடித்தலையும் யானை போல அலைகிறது. பல பாத்திரங்களின் விபரிப்பை வாசிக்கும்போது ஆண்குறியை வெட்டிவிட்டு வாசித்தால் நமக்கும் நிம்மதி கிடைக்கும்போலத் தோன்றியது. முரண் என்னவென்றால், ஜெயமோகன் தான் நிஜவாழ்வில், ஒழுக்கம் கட்டுப்பாடு (உ+ம்: தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு, மற்றும் திருவள்ளுவர் பற்றிய தமிழ்நாடு அரசு வெளியிட்ட புத்தகத்தில் ஒழுக்கம் பற்றிய கட்டுரை) என்று பேசிகொண்டிருக்கிறார். ஆனால் அவரின் நாவல்களின் பாத்திரங்கள் எங்கிருந்து எல்லாம் உயிர்பெறுகின்றன என்பது ஆச்சரியம். ஜெயமோகனின் நிறைவேறாத பெருங்கனவுகள்தான் அந்தப்பாத்திரங்களில் மிதக்கின்றனவோ தெரியாது. ஜெயமோகனின் நாவல்களின் மிகப்பெரும் பலவீனம் என்னவென்றால், அந்தந்தப் பாத்திரங்கள் அவற்றிற்குரிய சட்டத்தை விட்டு வெளியேறி எழுதுபவரகி விடுவது. காட்டில் பதினெட்டு வயதில் நுழைந்த கிரி சங்க இலக்கியங்களை எல்லாம் கரைத்துக்குடித்திருக்கிறான். பாடல்களையெல்லாம் அப்படியே நெட்டுயுருக்கிறான். இன்னொரு நாவலை ஒப்பிடுவது சரியில்லை என்றாலும் உதாரணத்திற்கு யூமாவாசுகியின் ரத்த உறவு, கண்மணி குணசேகரனின், கோரை போன்றவற்றைச் சொல்லாம் என்று நினைக்கிறேன். ரத்த உறவில் குடித்து குடித்து சித்திரவதை செய்யும் அப்பா பற்றி எந்தப் பெரிய விமர்சனமுமில்லை. பெரியம்மாவுடனான் அப்பாவின் உறவுகூட போகிறபோக்கில்தான் சொல்லிச்செல்லப்படுகிறது. எனெனில் கதையைச் சொல்பவன் சின்ன வயதுக்காரன். அவன் வளர்ந்தபின் கதையை எழுதுகிறதாய் வைத்துக்கொண்டாலும் அவன் ஒரு காலத்தில் எப்படி இருந்தானோ அது மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. கோரையில் வயலும், கோரையும், பன்றியும் தான் திருப்பத்திருப்ப வருகிறது. ஆனால் முடியும்மட்டும் நாவலை அலுப்பின்றி வாசிக்கமுடிகிறது. எனெனில் இரண்டு நாவல்களிலும் கதாபாத்திரங்கள்தான் பேசுகின்றன. ஜெயமோகனின் நாவல்களிலோ ஒரு கட்டத்திற்குப்பிறகு அவரே நேரடியாகப் பேசத்தொடங்கிவிடுகிறார். கதாபாத்திரம் அநாதரவாய் ஒரிடத்தில் ஒதுங்கிக்கொள்கிறது.

ஜெயமோகன் இன்னும் நிறைய எழுதவேண்டும். அப்போதுதான் வாசிக்கும் நமக்கு எது சிறந்த படைப்பு என்று இலகுவாய் அடையாளங்கொள்ள முடியும். துக்ளக் சோ எழுதும்போதுதான் பெரியாரின் தேவை எவ்வளவு அவசியம் என்று தோன்றுகிறதோ, அப்படித்தான் ஜெயமோகனின் நாவல்களை வாசிக்கும்போதுதான் மாற்று நாவல்களை இலகுவாய் என்னால் அடையாளங்கொள்ளமுடிகிறது. மற்றபடி, தான் ஒரு இந்துத்துவா ஆதரவாளர் இல்லை என்று ஜெயமோகன் கூறினால், இன்றைய பிஜேபி, ஆர் எஸ்.எஸ், நரேந்திரமோடி, அத்வானி, சங்கராச்சாரியார் என்று எல்லாம் கலந்து ஒரு நாவலை எழுதட்டும். அவர் இப்போது எங்கே நிற்கிறார் என்று அவரை வாசித்துப்புரிந்துகொள்கிறேன். எங்கையோ இருந்த USSRற்கும் மார்க்சிற்காகவும் மிகவும் கவலைப்பட்டவர் அல்லவா அவர்?

சொந்தப்புராணம் அல்லது அலம்பல்

Monday, December 13, 2004

வாழ்விலே பல விடயங்கள் காரணங்கள் என்னவென்று புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. அதற்காய் ஒருகணம் தரித்து நிற்பதுவும், பிறகு நீளநடப்பதுவும் வாழ்வியல் நியதி போல. எத்தனையோ மாற்றங்களை, ஏமாற்றங்களை கடந்துவந்தாலும், ஒரு சின்னதுன்பம் கூட என்னை ஒருகணம் அடித்துப்போட்டுவிட்டுத்தான் நகரும்.

இன்றைக்கு வேலைக்கு போய்விட்டு, பின்னேரம் வெளியே போவதற்காய் காரையெடுப்பம் என்டு போனால் கார் நின்ற space கிடக்கிறது, காரைத்தான் காணோம். ஒரு கணம் தலையைச் சுற்றி, பூமி சுழல்வது தெரிந்தது. பொலிசுக்கு அடித்து (வந்து ரெலிபோனால்தான்), பிறகு காப்புறுதி நிறுவனத்திற்கு அடிக்க அவங்கள் இன்னொரு பெரிய குண்டைப்போட்டாங்கள். நண்பரே நீங்கள் full coverage செய்யவில்லை. One way மட்டுமேதான் செய்துள்ளீர். ஆகவே களவுபோனாலும் எம்மால் ஒரு சல்லிக்காசுக்கூட நஷ்ட ஈடாகத் தரமுடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.
........
கார் வாங்கின கதையை சொல்லோனும் பாருங்கோ. இப்பதான் ஒருமாதிரி படித்து பட்டம் என்று ஒன்றைப்பெற்றனான். என்ன படித்தனான், எப்படி படித்தனான் என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். படித்து என்ன கிழித்தேன் என்றும் தெரியாது, ஆனால் படிப்பதற்காய் பெற்ற கடனை எண்ண கைவிரல்களும், கால்விரல்களும் பத்தாது (அல்லது கைவிரல்கள் + கால்விரல்களின் இரண்டு மடங்கைவிட கொஞ்சம் அதிகமான ஆயிரங்களில் கடன் என்றும் சொல்லலாம்). படித்து ஆறுமாதங்களின் கடனை வட்டியுடன் திருப்பக்கட்டவேண்டும் என்பது விதி. வேலை ஒன்றும் ஒழுங்காய் கிடைக்காமல் வாறதும் போறதுமாய் இருக்க அதிலை சேமித்த காசிலைதான் இந்தக் கார் வாங்கினனான். காப்புறுதி full coverage செய்ய ஆசையிருந்தும், கிடந்த காசையெல்லாம் வாரி காரிற்கு கொடுத்ததால், காப்புறுதியிற்கு அவ்வளவு கட்ட பணம் போதாதால் குறைந்த காப்புறுதியைத் தான் எடுத்தேன். அத்தோடு காப்புறுதிக்கு ஒருவருடத்திற்கு கட்டுகிற பணத்தில் இன்னொரு காரையே வாங்கிவிடலாம். கார் வாங்கி ஒரு மாதம் ஆகாதபடியால் பிறகு full coverage காப்புறுதியைப் பற்றி யோசிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
......
இப்ப காரும் போய்விட்டது. ம்...காசும்தான் போய்விட்டது. பொலிசிட்டை சொன்னால் அவன் சொல்றான், இந்த model கார் அடிக்கடி களவுபோகிறதுதான் என்று coolயாய் சொல்கிறான். அவனும் என்ன செய்ய எத்தனை களவுகளுக்கு எண்டு கவலைப்படுவது? ஓசியில வந்து ஓசியில போயிருந்தால் இப்படி நானும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஏதோ கொஞ்சம் உடம்பை முறித்து வேலைசெய்து இப்படி கைநழுவிப்போனதுதான் சகிக்க முடியாமல் இருக்கிது. சோர்ந்து போகும்போதெல்லாம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகரும் தோழிகளை தொலைபேசியில் அழைத்தேன். எல்லோரும் பரீட்சை, வேலை என்று அவசரமாய் ஓடிக்கொண்டிருப்பதால் ஒருவரையும் லைனில் பிடிக்கமுடியவில்லை. கொஞ்சம் கவலையாயும், சோர்வாயும் இருந்து கட்டிலில் சரிந்து படுக்க, நேற்று christmas gift என்று அண்ணா அழகான வர்ணப்பேப்பரில் சுற்றிக்கொண்டுவந்த கார் viper என்னை இன்னும் யோசிக்கவைத்தது. எனது கார் viperல் ஏதோ கொஞ்சம் பிழை இருந்து ஸ்நோவை வடிவாய் தள்ளாததால், அவர் காரிற்கென வாங்கிவந்திருந்தார் நேற்றிரவு. படுத்தாலும் தூக்கம் வராது காரில்லாது வெறுமையாயிருந்த இடந்தான் நினைவில் அலைவுற்றுக்கொண்டிருக்க, திடீரென தொலைபேசி அடித்தது. சரி யாராவது தோழிதான் எடுக்கின்றனரோ என்று எடுக்க எதிர்முனையின் அண்ணாவின் ஐந்து வயது மகன். அண்ணிக்கு அம்மா நடந்த விவரம் சொல்லியிருக்க அவன் என்னோடு பேசப்பிரியப்பட அண்ணி திருப்பி தொலைபேசியை எடுத்திருந்தார். அவன் சொன்னான், 'சித்தியா (சித்தப்பா என்பதை அப்படி அவன் ஆக்கிவிட்டான்) கார் களவுபோனாலும் என்னட்டை ஏழு டொலர் காசு இருக்குது. அதை நான் தாறன் நீங்கள் இன்னொரு கார் வாங்குங்கோ. எத்தனை முறை களவுபோனாலும் நான் காசு தருவன்' என்று கூறி தன்ரை pig உண்டியலை உடைக்கப்போனான்.
............
ஒன்று புரிந்தது. மனிதர்கள் மீதும், வாழ்வின் மீதும் நம்பிக்கையிழக்க காலம் இன்னும் வரவில்லை என்பது.

அம்பையும் சிறுகதைகளும்

Friday, December 10, 2004

அம்பையின், உயிர்மையில் வெளிவந்த, கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி சிறுகதையை வாசித்தபோது நான் நீண்டகாலமாய் தேடிக்கொண்டிருந்த வினாவிற்கு சற்று விடை கிடைத்தாற்போலத் தெரிந்தது. எப்போதும் தேடல்,இருத்தல், இருத்தலின்மை/போதாமை என்ற சொற்களை ஆண்களாகிய நாங்கள் மட்டும் பாவித்து எழுதிக்கொண்டிருக்கும்போது இவைபற்றிய பெண்களின் அவதானங்கள் எப்படியிருக்கும் என்று நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு.
.............
சிறுகதையிலிருந்து சில பகுதிகள்...
இருத்தல் இருத்தலின்மை பற்றிய கேள்விகள் பெண்களைப் பாதிக்கவில்லையா என்று கேட்டார்கள் உதயனும் கதிரும்.

பெண்ணும் காமுவைப் படிக்கிறாள். சார்த்தரைப் படிக்கிறாள். திருமந்திரத்தையும் அக்க மகாதேவியையும் ஸ¤·பி கவிஞர்களையும் அவளும் படிக்கிறாள். ஆனால் ஒட்டுமொத்தக் குடும்பமும் வீட்டின் நாயகனான ஆணை உருவாக்குவதில் முனைந்திருக்கும்போது, அதன் இண்டு இடுக்குகளில் புகுந்து தன் இருத்தலையே ஆதாரமாக்கி அவள் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இருத்தல் பற்றிய வேதாந்தபூர்வமான கேள்விகளை அவள் எழுப்பிக்கொண்டிருப்பதால்தான் அன்றாட வாழ்க்கைப் புதைகுழியிலிருந்து அவள் மீண்டு மீண்டு வரமுடிகிறது. குறியீடுகள் சூழ்ந்த உலகில் அவள் வாழ்கிறாள். "சன்னல் பக்கம் என்ன வேளை?" என்ற கேள்விதான் அவள் வாழ்க்கையின் அடித்தளம். சன்னல், புற உலகின் குறியீடு. சன்னலுக்கு வெளியேதான் அவள் சுதந்திரம். ஓடும் ஆறும், தேங்கிய கிணறும் கூட அவளுக்கு குறியீடுகள்தான். சாவின் குறியீடுகள். "ஆற்றிலோ கிணத்திலோ விழுந்து சாவேன்" போன்ற சொற்கள் அவள் மொழி உலகின் ஒலிகள். "தேவிடியா முண்டை" தான் அவளுக்கான முடிவான கண்டணம்.

"சரிதான். இதெல்லாம் மாரடிப்பு. பெண் பலியாடுங்கறியா? 'பெண்ணாகப் பிறந்தாலே உலகின் எந்நாளும் துயர்தானே' மாதிரி பாட்டுக்கள் பின்னணியில் கேக்குது எனக்கு" என்றான் உதயன்.

அவள் மறுத்தாள். இருத்தலின் கனம், கனமின்மை இரண்டையும் உணர்ந்தவள் பெண் என்றாள். இருத்தலின்மையே சிலசமயம் அவள் இருத்தலாகிப்போகிறது என்றாள். இல்லாமலே சிலசமயம் அவள் இருக்கிறாள். இருந்து கொண்டே சில சமயம் இல்லாமல் போகிறாள்.
...............................
அம்பையின் சிறுகதைகளை அவ்வப்போது கிடைக்கும்போது வாசித்தாலும், அவருடைய சிலதொகுப்புக்களை நாலைந்து மாதங்களுக்குமுன் வாசிக்க சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பத்தில் எழுதிய அம்பையில் துடிப்பும், வெகுளித்தனமும், சினமும் கரைபுரண்டு ஓடுகிறது (வயதும் ஒரு காரணமாயிக்கக்கூடும்). எதையும், எவரையும் தயவு தாட்சண்யமின்றி தனது நிலையில் நின்று விளாசுகிறார். காலச்சுவடில் வந்த அம்பையின் பேட்டியிலும் இந்த அனுபவங்களை அம்பை தெளிவாக முன்வைத்திருந்தார் என்று நினைவு.

இன்றைய பொழுதில் அந்தக்கதைகளை வாசிக்கும்போதும், அம்பையின் பல கதைகள் காலத்தை மிஞ்சி நிற்கும் என்று தெளிவாய் சொல்லமுடியும். பல தசாப்தங்களுக்கு முன்பே அம்பை இப்படி சுதந்திரமாய் தனது கருத்துக்களை பொதுப்பார்வைக்கு வைத்திருக்கிறார் என்றெண்ணும்போது வியப்பேற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவிதமான சமரசமும் எல்லாவற்றையும் அனுசரித்துப்போகும் பார்வை அவரது கதைகளில் தெரிகின்றது. பெண்மொழி என்பதற்கு என்ன வரைவிலக்கணம் என்று தெளிவாகத்தெரியவிட்டாலும் (பெண்ணின் அனுபவத்தைக் கொண்டு எழுதப்படுபவை/பேசப்படுபவை என்று நான் அர்த்தம் கொள்கிறேன்) அம்பையின் சிறுகதைகளே தமிழில் பெண்மொழியில் எழுதப்பட்ட முதற்கதைகள் என நினைக்கிறேன். அம்பை உட்பட பலபெண்கள் இப்படிப்பிரிப்பதை விரும்பாமாட்டார்களெனினும், ஒருவித அடையாள வாசிப்பிற்காய் இப்படிச்சொல்லாம் என்று நினைக்கிறேன். அம்பையிலிருந்து இன்றைய உமா மகேஸ்வரிவரை பெண்மொழியை மிகச்சிறப்பாகத் தமது கதைகளில் கையாள்கின்றனர் என்பதை அவர்களின் கதைகளை வாசிக்கும்போது புரியும். தமிழ்ச்சிறுகதைகள் வரலாற்றில் புதுமைப்பித்தன் எவ்வாறு தவிர்க்கபடமுடியாதவரோ அவ்வாறே அம்பையும் விலத்தப்பட முடியாதவர் என்றே நம்புகிறேன்.

மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்-2

Tuesday, December 07, 2004

சில அவசரக்குறிப்புக்கள்

கடந்த பதிவிற்கான கருத்தாய், சுகுமாரன் எழுதிய தற்கொலை பற்றிய கட்டுரை வாசித்தீர்களா என்று ஒரு நண்பர் எழுதியிருக்க, அந்தக்கட்டுரையை வாசிக்கவேண்டும் என்று ஆவல் உண்டாயிற்று. இங்கே ஒரேயொரு கடையில்தான் காலச்சுவடு, உயிர்மை விற்பனையாகிறது. எனக்கு அந்தக் கடைக்காரருடன் அவ்வளவு ஒத்துவராதது என்பதால் அங்கே போவது மிகவும் குறைவு. ஞாயிற்றுக்கிழமை ஒரு விடயம் காரணமாக அந்த இடத்திற்கருகில் போகவேண்டியிருந்தததால், நவம்பர் உயிர்மையும், டிசம்பர் காலச்சுவடும் வாங்கக்கூடியதாயிருந்தது. சுகுமாரன், சாவதும் ஒரு கலை என்ற தலைப்பில் உயிர்மையில் அருமையான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்

'எல்லோரும் ஒருமுறையாவது தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் அல்லது தாமாக வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இறுதிக்காட்சி பற்றி கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். ஓரிருமுறை மனத்துக்குள் ஒத்திகை பார்த்து ஒருமுறை தற்கொலைக்குத் துணிந்தேன்.' என்று தனது தற்கொலை முயற்சியை தொடர்ந்து விபரிக்கிறார். எல்லாவற்றையும் போல சாவதும் ஒரு கலை என்று கூறிய ஸில்வியா பிளாத், பிறரைப்போலல்லாது விதிவிலக்காக அதை அவர் நேர்த்தியாக செய்தார் என்று சுகுமாரன் அந்தக்கட்டுரையில் எழுதுகிறார்.

ஸில்வியா பிளாத் போலத்தான் சிவரமணியும் சாவதை ஒரு கலையாக, நேர்த்தியாக தனது தற்கொலையைச் செய்தார் என்று நினைக்கிறேன். மிக ஆறுதலாக் திட்டமிட்டு மாய்த்துக்கொண்டவர் அவர். இறந்த அந்த நாளில் கூட தன்னிடம் படிக்கவருபவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து மிக நிதானமாய் இருந்தவர் சிவரமணி என்று எனது தமக்கையார் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

தற்செயலாக எஸ்.ராமகிருஷ்ணனின் உயிர்மை கட்டுரையை வாசித்தபோது அதுவும் ஜப்பானியர்களின் தற்கொலையைப் பேசுவதாய் இருக்கிறது. திரைப்பட இயக்குனர் அகிரா குரசோவா கூட மூன்றுமுறை தற்கொலையை மேற்கொண்டு காப்பாற்றப்பட்டவர் என்ற குறிப்பிடப்படுகிறது. சாவது ஒரு கலை என்று காம்யு சொல்லியிருக்கிறார் என்று எஸ்.ராமகிருஷணன் குறிப்பிடுகிறார். (ஸில்வியா பிளாத், காம்யு இருவரும் coincidence இப்படி சொல்லியிருக்கிறார்களா? OR சுகுமாரன் அல்லது எஸ்.ராமகிருஷ்ணன் தவறுதலாக்குறிப்பிட்டனரோ சரியாகத்தெரியவில்லை).

சுகுமாரன் தனது தற்கொலை முயற்சி பற்றிச்சொல்லும்போது, ஸில்வியா பிளாத் அதை நேத்தியாகச் செய்தார், ஆனால் தான் இருபத்து நான்காம் வயதில் அதை நேர்த்தியில்லாமல்தான் செய்திருக்கிறேன் என்பது மாதிரி நானும் நேர்த்தியில்லாமல்தான் ஒருமுறை செய்திருக்கிறேன் என்பது கடந்தகாலம் பதிவுசெய்த ஒரு விடயம்.

மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்

Saturday, December 04, 2004

சில நாட்களுக்கு முன்னர், ஒரு பெண் தனது கணவன் மற்றும் மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார். நல்லவேளையாக இரண்டு பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுவிட்டன. சுதந்திரம், வசதிகள் என்று இன்னபிற விடயங்கள் கோலோச்சுகிற இடத்தில்தான் இப்படியான கொடூரமான விடயங்கள் அதிகம் நிகழ்கிறதோ என்ற எண்ணம் வந்தது. இந்தப்பெண்ணும், அடுத்தடுத்து பிள்ளைகள் பெற்றதால் வருகின்ற ஒரு உளவியல் வியாதிக்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று இப்போது காரணம் சொல்கிறார்கள். இந்தவிடயம்பற்றிப்பேசும்போது, ஒரு குழந்தை அழுவதைவிட பன்மடங்கு அதன் தாயார் குழந்தையைக் கருவில் சுமக்கும்போதும், குழந்தைபிறந்தபிறகும் அழுகின்றார். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு குறைவென்று உளவியல் நிபுணர் ஒருவர் தொலைக்காட்சியில் சொன்னார்.
................
தற்கொலைகள் மிகுந்த பீதியை ஏற்படுத்தக்கூடியன. கனடா வந்தபுதிதில், எனக்கு இங்கே முதன்முதலில் அறிமுகமான நண்பன் தற்கொலை செய்தபோது, போரிலிருந்து தப்பிவந்த நாங்கள் நிம்மதியாக இங்கேயும் இருக்கமுடியாது என்ற உண்மை புரிந்துபோனது. அதுவும் அவன் தற்கொலை செய்துகொண்டுவிதம் கொடுரமானது. தன்னை பொலீத்தினால் சுற்றி நெருப்பு வைத்து மாய்த்துக்கொண்டான். பிறகு பலநாட்களாய் அவன் எரிந்த இடத்தில் புற்கள் கருகியிருந்ததைப் பார்த்தபடி பாடசாலை போயிருக்கிறேன். அந்த சுவடுகள் என்றைக்கும் அழிய முடியாதன. பிறகு கொஞ்சம் வளர்ந்து, வளாகத்தில் இருக்கின்றபோது ஒரு தோழியின் (நல்ல நெருக்கம் இல்லையென்றாலும்) தற்கொலை மனதைக் கரைத்தது. அதுவும் கோடையில் பாடத்திற்கு பதிவுசெய்துவிட்டு, வகுப்பிற்கு போகாது நண்பர்களோடு கிறிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஏன் girlsஐ விளையாட்டில் சேர்க்கமாட்டீர்களா என்று கேட்டு எம்மோடு சேர்ந்து விளையாடிய சில தினங்களின் பின், ஆறொன்றில் குதித்து தன்னை இல்லாமல் ஆக்கிக்கொண்டாள். இப்படி இன்னும் செவிவழிக்கதையாக, பத்திரிகைகளில் வாசித்தவையாக எத்தனையோ தற்கொலைகளை கேள்விப்பட்டாயிற்று. கணவனை இழந்த ஒரு தமிழ் தாய், தனது இரண்டுபிள்ளைகளை காரின் trunkற்குள் வைத்து மூடி தன்னையும் மாய்த்துக்கொள்ள முயன்றது அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாதது. இறுதியில் அவர் காப்பாற்றப்பட இரண்டு பிள்ளைகளும் இறந்துபோய்விட்டனர். அந்தத்தாய் தன்னை ஏன் சாகவிடாமல் காப்பாற்றினீர்கள் என்று கதறியது பார்த்தவர்களின் மனதை நிச்சயம் பிசைந்திருக்கும்.
..............
எல்லா வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும் ஏன் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன என்பதற்கான அடிப்படைக்காரணங்கள் இன்னமும் சரியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை போலத்தான் படுகிறது. ஒரு சில நிமிடங்களில், நொடிகளில் இந்த விடயத்திற்கு முடிவெடுக்கிறவர்களுக்கு கவுன்சிலிங் போன்றவை எவ்வளவு உதவும் என்றும் சொல்ல முடியாது. தொழில்நுட்பத்தாலும், விஞ்ஞானத்தாலும் உலகைச் சிறிதாகச் சுருக்கவும், எம்மைப்போல இன்னொருவரை உருவாக்கவும் முடிகின்ற நம்மால், இன்னமும் பக்கத்தில் இருக்கின்றவர்களில் உளஅலைகளை கண்டுபிடிக்கமுடியாமல் இருப்பது எவ்வளவு கொடுமை.

புலம்பெயர் நாவல்கள்

Sunday, November 21, 2004

புலம்பெயர் நாவல்கள் பற்றிய சில குறிப்புக்கள்

ப.சிங்காரத்தின், 'புயலிலே ஒரு தோணி', தமிழில் முக்கியமான நாவலென பலர் எழுதியுள்ளனர். இதன்ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு விதச் சலிப்புத்தட்டினாலும் (செட்டியார் வட்டிக்கடைப் பகுதி), பின்னர் ஒரே நீட்சியாக நாவலில் அமிழ்ந்து போகமுடிந்தது. ஆனால் செட்டியார் வட்டிக்கடைப் பகுதிகள் கூட ஒரு அத்தியாவசிய நோக்கில்தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று நாவலை முழுதாய் வாசித்தபிறகு புரிந்துகொள்ள முடிந்தது.

இந்த நாவல், ஒரு சாகசக்கதை என்ற ரீதியில்தான் பார்க்கப்படும் என்றும் அதற்கான காரணங்களையும் ஜெயமோகன் இத்தொகுப்பின் பின்னுரையில் சொல்வதும் சரியானதே. என்னைக் கவர்ந்த பகுதிகள், நாவலின் முக்கிய கதாபாத்திரமான பாண்டியன், I.N.A தமிழர்களை பிரிட்டிஷ் இராணுவத்திற்கு காட்டிக்கொடுக்கும் சுந்தரத்தை மிகப்பொறுமையுடன் வஞ்சினம் தீர்த்துக்கொள்ளும் பகுதியும் (முக்கியமாய் சுந்தரத்துடன் நிகழும் உரையாடல்), மற்றது club ஒன்றில் மதுவருந்திக்கொண்டு பாண்டியன், கே.கே.ரேசன் போன்றவர்கள் பிரித்தானியரை நகைச்சுவையாய் கிண்டல் செய்யும் பகுதியும். கிண்டலின் உச்சியில் ஒரு பிரிட்டிஷ் கேர்னலுக்கு அடிப்பதும், எதிராளிகளின் துப்பாக்கிகள் உருவப்பட, அதற்குப் பயப்பிடாமல், பாண்டியன் போன்ற தமிழர்களும் துப்பாக்கிகளை எதிராய் உருவுவதும்... அதில் கூட அற்புதமான வரிகள் வந்துவிழுகின்றன..."பிஸ்டல்-கைகள் குறிபார்த்து இருந்தன. ஒரு விநாடி-ஒரு தோட்டா. பலரின் உயிர் ஒரு விநாடி-ஒரு தோட்டாவில் அடங்கி நின்று வேடிக்கை பார்த்தது. ஒரே ஒரு தோட்டா வெடித்தால் போதும்..." .

வீரமாய் தமிழர்கள் நிமிர்ந்து நிற்கும்போது வீர வர்ணனைகள்தான் அனுபவமில்லாதவர்க்கு தொடர்ந்து வரும், அனுபவங்களிடையே வாழ்ந்த ப.சிங்காரத்திற்கு அது நிகழாதுதானே. இன்னும் பல நுட்பமான இடங்கள பலதைச்சொல்லிப்போகலாம். இந்த நாவல், 62ல் எழுதப்பட்டுவிட்டது என்று நினைக்கும்போது வியப்பாயிருந்தது. ஒரு நவீன நாவலிற்குரிய இயல்போடும், கிட்டத்தட்ட Non-linear வகையிலும் எழுதப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.

'கடலுக்கு அப்பால்', போருக்கு பின்பான நாள்களைப் பற்றிப்பேசுகிறது. அந்த நாவல் நிச்சயம் ஒரு கழிவிரக்கத்தை வாசிப்பவரின் மனதில் படியவிடுகிறது. போர்க்களத்தில் சாகசங்களும், வீரதீரச்செயல்களும் செய்பவர்கள் போர் ஓய்ந்தபொழுதில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிர்ப்பதுவும் காலங்காலமாய் இருக்கும் போலத்தானிருக்கும். புயலிலே ஒரு தோணியில் அல்லாத வேறு பெயருடைய பாத்திரங்கள் இருந்தாலும், நுணுக்கமாய் பார்த்தால், இரண்டு நாவல்களின் பல பாத்திரங்கள் ஒன்றெனச்சொல்ல முடியும் (போருக்கு முன்/பின்). ஆனால் ஒரு நாவல் என்றவகையில் இது தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை என்பது பலவீனமாய்த்தான் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட சம்பவங்களை புனைவதோடு ப.சிங்காரம் சோர்ந்துபோய்விடுகிறார். அதனால்தான் 'புயலிலே ஒரு தோணி'யளவிற்கு, இதைக்குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமல் போகிறது.

மற்றுமொரு நாவல், ஹெசிப்பா ஜேசுதாசன் எழுதிய, 'மா-னீ' என்ற நாவல். இது பர்மாவின் பின்புலத்தில் ஆரம்பித்து இறுதியில் இரண்டாம் உலகயுத்த ஜப்பானிய ஆக்கிரமிப்பால் தமிழ்நாட்டிற்கு திரும்புவதான கதை. தமிழ்நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து(பெயர் ஞாபகமில்லை) பர்மாவில் வனத்துறையதிகாரியாக பணியாற்றப்போகும் தகப்பனுடன் குடிபெயரும் ஒரு குடும்பத்தின் கதை. நாவல் முழுவதும் ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதப்பட்டுள்ளது. அதீத sentiment அல்லது அடிபணிதலோ இல்லாமல் சாதாரணபோக்கில் கதை சொல்லப்படுகிறது. ஆரம்ப அத்தியாயங்களில் பர்மிய பெயர்கள், பேச்சு வழக்குகள் என்று நிரம்பியிருக்க கதையில் நுழைய சற்று கடினமாயிருந்தாலும், உள்ளே சற்று நுழைந்தால் ஒரு சுவாரசியமான நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கும். கதையின் முக்கியபாத்திரமான ராணிக்கு இரண்டு மூத்த அண்ணாமார்கள் இருக்கிறார்கள். இருவரின் வாழ்வுமே இறுதியில் அலங்கோலமாய் போகிறது. யுத்தம் போரிட்டுக்கொண்டிருப்பவரை மட்டுமல்ல, அதனோடு சம்பந்தப்படாதவர்களையும் எப்படி பாதிக்கச்செய்கிறது என்பதற்கு இந்த நாவல் நல்ல உதாரணம். 80களின் ஆரம்பத்தில் இந்தக்கதை பதிப்பாக்கம் செய்யப்பட்டதாய் நினைக்கிறேன். எழுதிய ஆண்டு எப்போது என்று தெரியவில்லை. ஆனால் நானறிந்தவரை இந்த நாவல் குறித்து எவரும் எந்தக்குறிப்பும் எழுதியதாய் காணோம்.

புலம்பெயர்வு வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவல்கள் என்றவகையில், ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', 'கடலிற்கு அப்பால்', ஹெசிப்பா ஜேசுதாசனின் 'மா-னீ' போன்ற படைப்புக்களை விலக்கிவிட்டு புலம்பெயர்நாவல்களை பற்றி எந்தக்குறிப்புக்களும் எழுத முடியாது என்றே நினைக்கிறேன்.

பி.கு: தற்சமயம் இந்த நாவல்கள் எதுவும் என் வசம் இல்லாததால், ஞாபகத்தில் உள்ளதைக் கொண்டும், முன்பொருமுறை பதிவுகளில் ஒரு குறிப்பாய் உள்ளிட்டதையும் வைத்தும் இதை எழுதியிருக்கிறேன். பிழைகள் காண்பின் சுட்டிக்காட்டுவீராக!

Eminem

Saturday, November 20, 2004

Eminem 'n' Encore

Eminemத்தின் பாடல்களை சிலவருடங்களுக்கு முன் கேட்டபோது, அவர் ஒரு women-hater என்ற அறிந்தபிறகு அவரது பாடல்களுடன் ஒன்றிப்போக முடியாமல் போய்விட்டது. எனினும் அவ்வப்போது MTVயில் அவரது பாடல்களை காட்சிப்படலங்களாய் பார்க்கும்போது அவரது எள்ளலும் கிண்டலும் மற்ற artists (கலைஞர்கள்?) களில் இருந்து வித்தியாசப்படுத்திக்காட்டியது.

சில மாதங்களுக்கு முன் தான் அவரையும் அவரது பாடல்களையும் ஆழமாய் அறியவேண்டும் என்று ஒரு விருப்பம் ஏற்பட்டது. பிறப்பால் வெள்ளையினத்தவரானவர் ஒரு rapperயாய் பிரபலமடைவது அவ்வளவு இலகுவில்லை என்பதையும் மீறி தனது பாடல்களால் Eminem பிரபலமடைந்திருக்கிறார். அண்மையில்தான் அவரது புதிய இசைப்பேழை Encore வெளியிடப்பட்டிருக்கிறது. அவரது ஏனைய இசைப்பேழைகளைப்போலவே, இதுவும் Parental Advisory: Explicit Content என்றுதான் வந்திருக்கிறது. நான் கேட்டவரையில் ஒரேயொருபாட்டில்தான் ஒரேயொரு f* word இருக்கிறது. மிச்சத்தில் எல்லாம் எண்ணி மாளாது. Raggae இசையில் இதுவெல்லாம் மிகச்சாதாரணம் என்பதைக் கேட்பவர்கள் அறிவார்கள்.

இந்த இசைப்பேழையிலும் அவரின் பெண்கள் மீதான வெறுப்பு அடிநாதமாய் கேட்டுக்கொண்டிருந்தாலும், Bushலிருந்து Michael Jackson, Britney Spears, Justin Timerlake, Janet Jackson என்று எல்லோரும் கிண்டலடிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாய் Bush மீதான் கடும் விமர்சனம் Mosh என்ற பாடலில் வைக்கப்பட்டிருக்கிறது. உன்னிப்பாய் பார்த்தால், Bushஜயும் Moshஐயும் உச்சரிக்கும்போது கிட்டத்தட்ட ஒரே ஒலிவருவதைக்காணமுடியும் (இந்தப்பாடல்தான் அண்மையில் வந்த மிக கடுமையான எதிர்அரசியல் பாடலென எங்கையோ வாசித்தாய் நினைவு). அதில் நேரடியாகவே Bush திட்டப்படுகிறார். '...STOMP PUSH, SHOVE, MUSH, FUCK BUSH, UNTIL THEY BRING TROOPS HOME...' என்றும் பிறகொரு இடத்தில், '...LET THE PRESIDENT ANSWER A HIGHER ANARCHY/ STRAM HIM WITH AN AK47/LET HIM GO FIGHT FOR HIS OWN WAR/ LET HIM IMPRESS DAD THAT WAY..' என்றும் கடுமையாக Bush மீது நேரடியாகவே விமர்சனம் வைக்கப்படுகிறது.

இன்னொரு பாடல் அமெரிக்கா பொலிசாரை நல்லாய் கிண்டலடிக்கிறது. பொலிசார் உபயோகிக்கும் Freeze என்ற வார்த்தையை பாவித்து பாடப்பட்ட பாடல் மிகவும் எள்ளல்பாணியுடையது. ஒவ்வொருமுறையும் அந்தப்பாடலைக் கேட்கும்போது சிரிப்புத்தான் வரும். சிலவேளைகளில் பஸ்சினுள்ளோ அல்லது சப்வேயினுள்ளோ இதைக்கேட்டால், சனம் ஒருமாதிரி நினைக்குமோ என்று கஷ்டப்பட்டுத்தான் சிரிப்பை அடக்கவேண்டியிருக்கும். எனக்கு பிடித்த இன்னொரு பாடல் YOU DON'T KNOW HOW SICK YOU MAKE ME என்று தொடங்கும் பாடல். நல்ல beatலும் உண்மையான உணர்வுகளாலும் அமைந்திருப்பதால் பிடித்திருந்ததோ தெரியவில்லை.

Eminemன் பாடல்களில் நான் அவதானித்த இன்னொரு அம்சம் என்னவென்றால், அழகியலை மறுதலித்தபடி பாடல்கள் பாடப்படுகிறது. Pukeல் சத்தியெடுப்பதும், காறித்துப்புவதுமாய் ஆரம்பிப்பதுவும் (காதலிற்காய் உருக்கமான வார்த்தைகள் பேசாமல், எப்படி அது sick ஆக்கியிருக்கிறது என்பது மாதிரியும்), Michael Jacksonஐ பற்றிப்பேசும் பாடலான Just Lose It ஆரம்பமாவது கழிவறையிலிருந்து தொலைபேசியில் message விடுவதுமாதிரியும், ஒவ்வொருபாடலின் introம் வித்தியாசப்பட்டிருக்கிறது.

ஒரே கெட்டவார்த்தைகளாயும், துப்பாக்கிச்சத்தங்களாயும் இருக்கின்ற பாடல்களில், Mockingbird ஒரு உருக்கமான பாடல். என்னதான் வன்முறையான மனதாய் இருந்தாலும் எங்கோ ஓரிடத்தில் அன்புக்காய் மனம் ஏங்கிக்கொண்டிருக்கும் என்பதற்கு இந்தப்பாடல் நல்ல உதாரணம். இது Eminem தனது குழந்தைக்காய் பாடுவது. விவாகரத்துப்பெற்றுப்போன பெற்றோரிடம் வளரும் பிள்ளை நிச்சயம் பல மனநெருக்கடிகளைச் சந்திந்தபடிதான் வளரும். முரண்நகை என்னவென்றால், Eminemன் நிசவாழ்க்கையிலும், Eminem, single motherல் தான் வளர்க்கப்பட்டிருக்கிறார். அந்தக்குற்றவுணர்ச்சியோ என்னவோ அவரது Ex-Wife Kimடன் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் சேருவதும் பிரிவதுமாய் இருந்து, சிலவருடங்களுக்கு முன் தான் முற்றாக விவாகரத்து வாங்கியிருக்கிறார். எனினும் தான் உலகில் மிகவும் நேசிக்கும் பெண் தனது குழந்தை என்று பலவிடங்களில் சொல்லியிருக்கிறார். அதனால்தான் இறுதியாய் வந்த ஒலியிழைநாடாவிலும் ஒரு பாடலை தனது குழந்தைக்காய் மிக உருக்கமாய் பாடியிருக்கிறார்.

இவ்வளவு வன்முறையான பாடல்வரிகள் எப்படி Eminem இடமிருந்து வருகிறது என்று காரணங்களைத்தேடினால் அவரது இளமைகாலங்கள் ஒரு காரணமாகலாம் (விருப்பமெனில் அவரின் biodataஐ வாசித்துப்பாருங்கள்). ஒரு talk showவில் eminem பேசும்போது 'நீங்கள் இப்படி கடுமையான வன்முறையை கேட்பவரின் மனங்களில் விதைக்கிறீர்களே?' என்று கேட்கப்பட்டபோது, 'நீங்கள் எனது பாடல்களை இப்படி விமர்சிக்கின்றீர்கள். நான் பார்த்த illest movie, Saving Private Ryan. அதில் உள்ள வன்முறையைப் பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை. விமர்சிப்பதில்லை' என்று Eminem திருப்பிக்கேட்டிருந்தார் (யோசிக்கும்போது அதில் உண்மையும் இருக்கிறது).

அண்மையில் கூட ஒரு நேர்காணலில், தனக்கு இந்த புகழ், மற்றும் autograph இடுவது எதுவும் பிடிக்கவில்லை எனவும், தன்னை இயல்பாய் பழையபடி இருக்கவிட்டாலே நல்லது எனவெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். நிச வாழ்வில் அவரது தாய் drugsற்கு அடிமையாய் இருப்பதுவும், அவரது நெருங்கிய உறவுகள் பலர் தற்கொலைசெய்வதுவும் நிச்சயம் Eminemற்கு மனஅவசத்தைக் கொடுக்கும். இவ்வாறான நெருக்கடிகள்தான் கடுமையான வார்த்தைகளாய் பாடல்களில் தெறிக்கிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

*Well i din kow old ppl can be like diz

Tuesday, November 16, 2004

இன்று காலமை எழும்பி வெளியே வெளிக்கிட்டபோது, மாலையில் சிலவிடயங்களை வலைப்பதிவிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். பிறகு மதியப்பொழுதில் ஒரு தோழியுடன் இணையத்தில் ஒரு விடயம் பேசியபின் சோம்பலில்லாமல் இரவிற்குள் பதிப்பித்திடவேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்தபத்தியின் முடிவில் தோழி சொன்ன விசயத்தைச் சொல்கிறேன்.

நான் இப்போது எழுதப்போகிற விசயங்கள் சிலவருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. இருபத்துநான்கு மணித்தியாலமும் பேசக்கூடிய மூன்று நான்கு வானொலிகளும், பத்திற்கு மேற்பட்ட வாரப்பத்திரிகைகளும் இங்கே வருகிறதென்றால், ஊடகங்கள் எவ்வாறு எங்கடை சனங்களால் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லித் தெரியத்தேவையில்லை. அந்த செல்வாக்கில், அங்கே பணிபுரிகின்றவர்வர்கள் தங்களை மாமனிதர்களாக ஆக்கி ஆடும் ஆட்டங்கள்தான் சகிக்கமுடியாதன. பாலியல் சுரண்டல்கள் தெரியாதவிதமாக நடைபெறுவதும் அதுவும் நல்ல கிழவயசில் இருப்பவர்கள் இந்தச்சேஷ்டைகள் செய்யும்போது எதுவுமே செய்ய இயலாது பெண்கள் தவிர்ப்பதையும் நான் பலசமயங்களில் கண்டிருக்கிறேன்.

எனது தோழி ஒருவர் ஒரு ஊடகத்தில் பகுதிநேரமாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்கே ஒரு வயசுபோன ஒருவர் வேலைசெய்துகொண்டிருந்தார். அவருக்கு எனது தோழியின் வயசில் ஒரு மகள் இருப்பதாய் கேள்விப்பட்டிருந்தேன். படிப்பின் நிமிர்த்தமாய் தொலைதூரத்தில் இருந்த நான் தோழியைச் சந்திக்க அவர் வேலைசெய்யும் இடத்திற்கே செல்வேன். என் கண்முன்னாலேயே அந்த வயசுபோனவர் தோழியைத் தொட முயற்சிப்பதுவும், தொலைபேசியை எடுப்பது மாதிரி கரங்களைப் பற்றுவதாயும் abuse செய்துகொண்டிருந்தார். நான் இதை அவதானித்துவிட்டு தோழியைக்கூப்பிட்டு, 'அவர் உங்களை abuse செய்கிறார் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே?' என்று கேட்க, 'அய்யோ அவர் அப்படி நினைத்துச்செய்திருக்கமாட்டார்' என்றார். 'இதுவா முதல்தடவை' என்று கேட்க 'இல்லை முந்தியும் இப்படி முயற்சித்திருக்கிறார்' என்றார் தோழி. நான் எவ்வளவு எடுத்துக்கூறியும் தோழி விளங்கிக்கொள்ளவில்லை. பிறகுதான் எனக்கு ஒருவிடயம் உறைத்தது. நாம் பெரியோரை மதிக்கவேண்டும், அவர்கள் சொல் கேட்கவேண்டும் என்று போதிக்கப்பட்டு வந்தவர்கள். ஆகவே ஒரு வயசுபோனவர் sexual abuse செய்யப்பார்க்கிறார் என்பதை நமது மனம் உடனே ஏற்கமாட்டாது என்று. நல்லவேளையாக அந்தத்தோழி விரைவிலேயே வேலையை விட்டுவிட்டு பிறகு உயர்கல்வி படிக்கப்போய்விட்டார்.

இன்னொரு சம்பவம். என்னொடு படித்துக்கொண்டிருந்தவருக்கு நிகழ்ந்தது. ஏதோ ஒரு ஊடகம் புதிதாய் தொடங்குகிறார்களாம். நேர்முகத்தேர்விற்கு போகப்போகிறேன் என்று எனக்கு சொன்னார். சில நாள்கள் தொடர்ந்து அந்த ஊடகத்திற்கு சென்றார். திடீரென ஒருநாள் அந்தவேலையை விட்டுவிட்டேன் என்று முகம்வாடிசொன்னார். என்ன காரணம் என்று கேட்டபோது சொல்ல மறுத்தவர், மிகவும் உறுக்கிக் கேட்டபோது விசயத்தைச் சொன்னார். வேலையைப் பழக்கிறேன் பேர்வழி என்று தோழியை தொட முயற்சித்திருக்கிறார் அந்த ஊடகத்தின் பொறுப்பாளர். தோழி ஆத்திரத்தில் 'நாயே என்னைத்தொட்டாய் என்றால் அடிப்பேனாடா' என்று கோபமாய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இத்தனைக்கும் பொறுப்பாளருக்கு திருமணமாகி தோளுக்குமேல் வளர்ந்தபிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இன்னொரு சம்பவம் ஒன்று. இவரும் எனது தோழிதான். ஊடகம் ஒன்றில்தான் வேலைசெய்தவர். ஒருமுறை இவரது கணனி பழுதாகிப்போய்விட, திருத்துவதற்காய் என்னையும் அழைத்துசென்றிருந்தார். திருத்தபவர் அவ்வவ்போது ஒரு வானொலியில் நிகழ்ச்சிகள் கொடுப்பவர். அவரது தமிழ் எங்கடைமாதிரி இருக்காது. கடைக்கு கணணியுடன் போனதுதான் தாமதம், மனுசன் நான் ஒருத்தன் நிற்பதுகூடத் தெரியாமல், 'என்ன பிள்ளை make-up கூடப்போட்டிட்டாய் போல' என்று கன்னத்தைத் தடவித்தொடங்கிவிட்டது. எனக்கு கோபம் வந்திட்டுது. 'அதுக்கு உங்களுக்கென்ன?' என்றேன். பிறகு தோழிதான் மெல்லிய குரலில் 'கோபப்படாதே இப்ப ஏதும் சொன்னால் இந்த மனுசன் கண்டகிண்ட கதையெல்லாம் பரப்பிவிடும்' என்று சொன்னாள்.

மேலே கூறின சம்பவங்கள் அனைத்திலும் வயது முதிர்ந்தவர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பெடியன்களின் abuseல் கவனமாய் இருக்கின்ற பெண்கள் அதிகம் சறுக்கிப்போவது இந்த இடத்தில்தான். எனென்றால், பெரியவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, abuse செய்யமாட்டார்கள் என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்டு அது அடிமனதில் தங்கிவிட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் தாங்கள் இப்படி வயதுபோன மனுசன்களால் abuse செய்யப்படுகிறோம் என்பதை அறியாமல், வாழ்வில் பெண்கள் நகர்ந்துகொண்டிருப்பதேதான். (இவ்வளவும் நானறிய நடந்தவை, நானறியாமல் எத்தனை நடைபெற்றதோ/ நடைபெறுகிறதோ?)

சரி இன்று நடந்த சம்பவத்திற்கு வருவோம். மதியவுணவுநேரத்தில் தொலைதூரத்தில் இருக்கும் தோழியுடன் இணையத்தில் உரையாடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு 'எனக்கு ஒரு கடினமான் நாள்' என்றாள். ஏன் என்றபோது, அது பெரிய கதையென்றாள். அவள் இன்று காலை வளாகம் செல்வதற்காய் பஸ்சிற்காய் காத்திருந்திருக்கிறாள். அவள் பஞ்சாபி இனத்தவள். அங்கே ஒரு வயசுபோன சிங் ஒருவர் வந்திருக்கிறார். இவளிடம் இந்தியாவில் எந்த இடத்தைச் சேர்ந்தவள் என்று கேட்டிருக்கிறார். பிறகு நகரம், தெரு என்றெல்லாம் கேட்க, தானும் அவளது இடத்திற்கு அருகில்தான் என்று சொல்லியிருக்கிறது கிழடு. பிறகு பஸ் வர, அந்தக்கிழவனும் இவளுக்கு அருகில் அமர்ந்து இவள் போற இடத்திற்குத்தான் தானும் போவதாய் சொல்லியிருக்கிறார். பிறகு இவளது வீட்டு முகவரி கேட்க இவள் நல்லவேளை கொடுக்கவில்லை. பிறகு நீ என்ரை மகளைப்போல இருக்கிறாய், நல்லாய் ஆங்கிலம் பேசுகிறாய், கெட்டிக்காரி என்று ஏதோ ஏதோ எல்லாம் சொல்லியபடி, பஸ்சினுள் hugs பண்ணத்தொடங்கிவிட்டார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த நான் இடைமறித்து, அவர் உன்னை abuse செய்திருக்கிறார், நீ மற்றவர்களிடம் சொல்லியிருக்கலாம்தானே என்று கேட்டேன். அவள் சொன்னாள், 'Are you crazy? He is just an old man'. பிறகு இப்படித் தொடர்ந்து torture செய்திருக்கிறது கிழடு. இறுதியாய் தன்ரை இடம் வந்திட்டு என்று சொல்லி கிழடு hug செய்துவிட்டு, kiss பண்ணியிருக்கிறது. இவள் நல்லவேளையாக திரும்பியதுதால் அந்த tortureல் இருந்து ஓரளவு தப்பிவிட்டாள். இவள் இதையெல்லாம் இப்படி எல்லாம் சொன்னாப்பிறகும், நான் அவளிடம், For sure, the old man abused you என்று பலமுறை கூறியதுபோதும் அவள் அதை ஏற்றுக்கொள்ளாமல், அவர் mentally challenge யாய் இருக்கக்கூடும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள். இல்லை இப்படி abuse செய்பவர்கள், அப்படித்தான் நடிப்பார்கள், பிடிபடாமல் இருக்க என்றும் கூறிப்பார்த்தேன். அவள் அதையும் ஏற்றுக்கொள்வதாய் இல்லை. கடைசியாக நான் சொன்னேன், If you don't beleive,the old men can't abuse, then read the yesterday news. என்று சொல்லிவிட்டு ஒரு 75 வயது முதியவர், 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காய் கைதுசெய்யப்பட்டதை கேள்விப்பட்டாயா என்றேன். அதன் பிறகுதான் அவள், இனி தானும் வயது போனவரிகளிடம் கவனமாயிருக்கவேண்டும் என்று சொன்னாள். இதை எழுதிக்கொண்டிருந்த இந்தக்கணத்தில் அவளோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன். அவள் தாயிடம் இதைப்பகிர்ந்துகொண்டபோது அவளது தாயும், நான் சொன்னதைத்தான் சொன்னதாய் சொன்னாள். ஆனால் தனது பெயரில் what a bad day என்பதை அவள் இணைத்தபடிதான் உரையாடுகிறாள். காயங்கள் இலகுவில் மறக்கமுடியாதன.

* - The heading was taken from my friends' conversation

கஸ்தூரியின் ஆக்கங்கள்

ஓர் அறிமுகம்

கஸ்தூரி அவரது கவிதைகளினால் பரவலாக அறியப்படுகின்றவராயினும், நல்ல பல சிறுகதைகளையும் தனக்குரித்தான உலகினுள் நின்று படைத்துள்ளார். சிவரமணி, செல்வி போன்றோர் தீவிரமாய் இயங்கியபொழுதிலே இவரது பல ஆக்கங்களும் எழுதப்பட்டதாய் தெரிகிறது. சிவரமணியைப்போலவே மிக இளம்வயதில் (22 வயதில்) இவரும் அகால மரணமடைந்தவர். 'கஸ்தூரியின் ஆக்கங்கள்' எனத் தொகுப்பட்ட இவரது தொகுப்பிலே, ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழப்போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிப்பவையாய் இவரது அநேக கதைகள் அமைந்திருக்கின்றன. அமைதிப்படை என்ற பெயரில் வெண்புரவிகளின் மீதேறி வந்தவர்கள் திசைமாறிப்போனதையும், அவர்கள் விட்டுச்சென்ற அழியா வடுக்களுமே அதிகம் கஸ்தூரியின் கதைகளில் உள்ளுறைந்து கிடக்கின்றது.

'நிர்ப்பந்தங்கள்' என்று கிட்டத்தட்ட குறுங்கதையாக நீளும் கதை யாழ்ப்பாணத்து சராசரிப் பெண்கள் இருவரின் வாழ்வினைக் கூறுவதாய் அமைந்திருக்கின்றது. தன்னை, தனக்குள்ளும் சமுகத்திற்குள்ளும் ஒடுக்கியபடி இருக்கும் அக்காவினதும், எதையும் கேள்விக்குட்படுத்தி சுதந்திரமாய் திரிய விரும்பும் தங்கையினதும் வாழ்வின் பன்முகங்கள் பேசப்படுகின்றன. கதை அக்காவின் மரணத்தின் புதிரிலிருந்து தொடங்கி அக்காவின் இறுதிச்சடங்குகளுக்கான ஆயுத்தங்களுடன் முடிகின்றது. அதனிடையே, தனதும் அக்காவினதும் நினைவுகளை தங்கை அசைபோடுவதாய் கதை நீள்கிறது . எவருக்கும் தீங்கு செய்ய விரும்பாத, எல்லோரையும் அனுசரித்துப்போகும் அக்கா, இறுதியில் தான் மணந்த வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு, வெளிநாட்டிலும் ஒரு குடும்பம் இருப்பதாய் அறிந்து தற்கொலை செய்து கொள்கிறார். அக்காவின் மீது அதீத பாசமும் விருப்பும் கொண்ட தங்கையிற்கு அக்காவின் அரளிக்காய் உண்ட மரணம் அவமானமாய்த் தெரிகிறது..."சீ...அக்கா எடுத்தது எவ்வளவு கோழைத்தனமான முடிவு! தவறு செய்தவன், தண்டிக்கப்படவேண்டியவன் என்ன மாதிரித் திரிகிறான். அவனுக்கென்ன இன்னொரு மனைவியோடு வாழுவான். இல்லாவிட்டால் அந்த வெளிநாட்டு மனைவியோடு வாழ்வான். ஆனால் அக்கா இத்தனை காலமும் தன் வாழ்வில் பயந்து என்ன சுகத்தைக் கண்டாள்? எல்லோருக்கும் பயந்து பயந்து வாழ்ந்ததுதான் மிச்சம்' என்கின்றதோடு கதை நிறைவுறுகிறது. பெண்ணுக்கு சமுகம் வழங்கும் மட்டுபடுத்தப்பட்ட சுதந்திரம், சாமர்த்திய வீடுகள், விதவைகள் வாழ்வு எனப்பல பெண்ணிய மனநிலையில் இருந்து ஒரு தசாப்பத்திற்கு முன் எழுப்பப்பட்ட கேள்விஅலைகள் இன்னமும் அதிர்ந்து கொண்டே இருப்பது நமது சமுகத்தின் சோகம்.

இன்னொரு கதையான 'மக்களைப் பிரிந்த துப்பாக்கிகள்', ஈழமண்ணில் இந்திய இராணுவம் மக்களிற்கு பெண்களிற்கும், சாதாரண மக்களிற்கும் ஏற்படுத்திய அழியா வடுக்களைப் பேசுகின்றது. சுமதி என்கின்ற கல்லூரியில் கற்கும் பெண்ணை தன்வசமாக்க விரும்பும் ஒரு இராணுவத்தினனின் கோரமுகம் சித்தரிக்கப்படுகின்றது. ஓர்நாள் ரீயுசனிற்கு சென்ற சுமதியை, பாதுகாப்பு பரிசோதனை என்ற பெயரில் நடுவீதியில் ந்¢றுத்துகிறான் ஒருவன் அவனைப்பார்த்து, 'உன்ரை லச்சணத்திற்கு நாங்கள் கதைக்காதது ஒன்றுதான் குறை. எளிய மூதேசி, நீயும் ஒரு தமிழனே' எனப்பேசுகிறாள். பலவந்தமாய் அந்த இராணுவத்தினன் சுமதியை மணக்கவும் ஆசையைத் தீர்க்கமும் முயல்கையில் தன்னை விடும்படி மன்றாடியவளை கைகளால் அறைந்து கெட்ட வார்த்தைகளால் பேசுகிறான். மக்கள் அதிகம் நடமாடும் வீதியாகையால் சுமதி ஒருவழியாக தப்பிக்கிறாள். ஆனால் பாலியல் வக்கிரம் பிடித்த மிருகம் தன் கூட்டாளிகளுடன் சுமதியின் வீடு நகரை ஒரு அந்தியில் செல்கிறது. அடுத்து என்ன நிகழும் என்ற அறிந்த சுமதி, வீட்டின் பின்வளவால் தப்பியோடுகிறாள். எனினும் கோபம் கொண்ட இராணுவத்தினன், அவளின் தந்தையை அடித்து வானில் ஏற்றிவிட்டு, சுமதியின் தாயிடம், 'உனக்குப் புருசன் வேணுமெண்டா நாளைக்கு மேளைக் கொண்டாந்து தந்திட்டு புருசனைக் கூட்டிக் கொண்டுபோ' என ஆண்மை பேசுகிறான். கெடு முடிகிறது, சுமதியின் தந்தை திரும்புகிறார் இறுதியில் பிணமாக. பிறகும் விடவில்லை, 'பிரேதத்தை அரை மணித்தியாலத்துகுள் எரிச்சுபோடோணும், அழுது ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது' என்றும் பயமுறுத்தியபடி, இன்னும் யாரைப்பலியெடுக்கலாம் என்று அந்தக்கொடியவர்களின் வாகனம் உறுமிக்கொண்டே செல்வதாய் கதை முடிகிறது. அந்த உறுமலும், அது தரும் பீதியும் வாசிப்பவர் அனைவரையும் திடுக்குறவே செய்யும்.

மற்ற ஒரு கதையான, ' அவர்களுக்குதான் எமக்கு விடிவதில் விருப்பமில்லையே' யில் ஒரு தாய், தனது மகளை இராணுவ டாங்கி ஏறிமிதித்துச் சென்ற ஐம்பது அப்பாவி மக்களில் ஒருவராய் இழக்கிறாள். அவளது சோகம் முடியவில்லை. பிறகொருபொழுதில் செல்விழுந்து தனது மகனையும் காவுகொடுக்கிறாள். இழப்பே வாழ்வாகிப்போன தாயின் வாழ்வு முழுதும் கொடுங்கனவுகள் துரத்துகின்றன. ஒருநாள், நினைவுகளின் பெருங்கடலில் அலைவுற்று, தாகம் நீள தன் பிள்ளைகளின் பாதங்களைப் போய்சேருவதாய் கதை முடிகிறது. இதைபோன்ற பல தாய்மார்களின் கதைகள் நம் மண்ணில் புதைந்து போயும், மிதந்தபடியும் இருப்பதான பிரமையை கஸ்தூரியின் வார்த்தைகள் ஏற்படுத்துகின்றன.
'இடம்மாறியுள்ள துப்பாக்கிகளால்...' கதை போராளிகளுக்கு உதவும் இரண்டு பிள்ளைகளின் தாயை, இந்திய இராணுவமும் அதனோடும் இயங்கும் உள்ளூர் இராணுவமும் செய்யும் சித்திரவதைகளையும், இறுதியில் அவரின் உயிரினைப் பறிக்கும் கொடூரத்தையும் சித்தரிக்கிறது. இறுதியில் தன் முடிவை முன்னமே அறிந்துவிட்ட தாய், தன் குழந்தைகள் குறித்து எண்ணுகிறாள், ' போகட்டும்... இன்று எத்தனை தமிழ்க்குழந்தைகள் அநாதைகளாகிவிட்டனர். அவர்களோடு இவர்களும் சேர்த்து கொள்ளட்டும். அடிமைகளாக வாழ்கின்றவரை நாட்டின் அகதிகளும், அநாதைகளும் தானே நிரம்பி வாழ்வார்கள்'. ஒரு தாய் சொல்லக்கூடிய வார்த்தைகளா இதுவென அந்தச் சூழலிற்கு வெளியிலிருக்கும் நமக்கு வியப்பு ஏற்படுதல் இயல்பு. ஆனால் அதைவிட யதார்த்தம் மோசமாய் இருக்கிறதாய் கதாசிரியர் வார்த்தைகள் சோகத்துடன் கசிகின்றன.

கஸ்தூரியின் கதைகளில் அநேகமானவை எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டதாய் தோன்றுகின்றன. ஒரு போராளி அமைப்புக்குள்ளிருந்து, தீவிரமான யுத்தகளம், தலைமறைவு வாழ்வு என்கின்ற நிலைகளை மீறி படைப்புக்கள் எழுத்தாக்கம் பெற்றிருக்கின்றன. அதீத பிரச்சாரத் தன்மையோ அல்லது தான் சேர்ந்த அமைப்பைத் தேவையின்றி புகழாமலே எழுதியிருப்பது இன்னுமொரு சிறப்பு. போராடும் கரங்கள் சிலவேளைகளில் கறைகள்பட்டாலும் அவையும் மானிடத்தின் விடுதலையை நோக்கியே நகரத்துடிக்கின்றன என்பதற்கு கஸ்தூரியின் யதார்த்தப்பாணியிலான இந்தக் கதைகள் முக்கிய எடுத்துக்காட்டாகும். மண்ணையும் மக்களையும் ஒருசேர நேசித்த ஒரு படைப்பாளி இளவயதில் நம்மை விட்டகன்றது ஈழத்து இலக்கியத்தின் துரதிஸ்டம்.

நன்றி: பதிவுகள் ஈழத்துச் சிறப்பிதழ்

பச்சை தேவதை

Sunday, November 14, 2004

சல்மாவின் 'பச்சை தேவதை'
சில அவசரக்குறிப்புக்கள்

சல்மாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாய் பச்சை தேவதை வந்திருக்கிறது. முதலாவது தொகுப்பு (ஒரு மாலையும் இன்னொரு மாலையும்) பெற்ற கவனத்தை இந்தத் தொகுப்பு பெறவில்லையெனினும் அண்மைக்காலத்தில் வெளிவந்த கவிதைத்தொகுப்புகளில் அதிகம் ஏமாற்றம்தராத தொகுப்பு இதுவென துணிந்து சொல்லாம். சல்மாவின் உலகம் எப்போதும் மனித உறவுகளை அதிகம் கவனித்தபடியே இருக்கிறது. அது வீட்டில் இருந்தால் என்ன, வெளியில் திரிந்தால் என்ன உறவுகளே முக்கிய கவனப்பொருளாகின்றன.


தாய்மை எப்போதும் நிறைவைத்தருவதும், எல்லாத் துன்பங்களிலிருந்தும் பெண்ணை ஆசுவாசப்படுத்தவும் கூடும் என்ற நம்பிக்கைகளை சல்மாவின், இருட்தேர் கேள்விக்குட்படுத்துகிறது. '...என் தாய்மையைத்/ தன் கண்ணீரால் கடைந்து/ திரள்கின்ற பிரியத்தில்/ தம் பங்கை எடையிடுகிற இளம் மனங்கள்/சோர்வின் விதையையே/ ஊன்றினாலும்/ஒடாத தேராய்க் கூடவேயிருக்கிற/இருளின் வடம்பிடிப்பேன்/அவர்களின் துணையோடு...' என்ற வரிகளில் தாய்மையின் வெறுமையையும். அதனூடு நீள்கின்ற விரக்தியையும் படிப்பவரிடையே படியவிடுகிறது. இன்னும், நானில்லாத அவனது உலகத்தில், ஒரு தாய்க்கும், பிள்ளையிற்கும் இடையில் விழும் இடைவெளியையும், பாசத்திற்கான போராட்டமும் பேசப்படுகிறது. '..தனது குழந்தைப் பருவத்தை/ துடித்துக் கடக்கும் அவனும்/ கைப்பற்ற நானும்/ போராட்டத்தினூடே/ கரைகிறது பழைய நெருக்கம்...' காலங்காலமாய் இந்த பாசப்போராட்டம் தாய்மார்களுக்கு இருக்கும் போலத்தான் தோன்றுகிறது. பிள்ளைகள் தமது வளரிளம்பருவத்தை அனுபவிக்கத் துடிக்கின்ற பொழுதுகளில், அதுவரை எல்லாமாக இருக்கும் தாய்மார்கள் இலகுவாய் மறக்கப்படுவதன்/புறக்கணிக்கபடுவதன் வாதையை சல்மாவின் இந்தக் கவிதை பேசுபொருளாக்கிறது.

பெண்கள் உணரக்குரிய வலியை, தனிமையை, 'நிலை', 'விடுபடல்', 'தனித்தொரு பொழுது', 'புழு' போன்ற கவிதைகள் பேசுகின்றன. தனித்தொருபொழுதில், 'கைபிடிச்சுவரில் விழிதீட்டும் ஆந்தையும்', புழுவில், 'தன் உணவை/ என் உடலிருந்தே/ உறிஞ்சியபடி/ என் குரல்வளையை பற்றும்' புழுவும், அவற்றின் உருவங்களை மீறிய வேறொரு வெளியில் அர்த்தம்கொள்வதை முழுக்கவிதையும் வாசிக்கும்போது புரிந்துகொள்ளலாம்.
அதேவேளையில் பெண்கள் மட்டுமே உணர்ந்து எழுதக்கூடிய பல்வேறு விதமான படிமங்கள், காட்சிப்படலங்கள் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் நிரம்பிக்கிடக்கிறது. ஒரு பின்னேரப்பொழுது, 'மாதவிடாய் ஈரம் நிரம்பிக் கனக்கிற பஞ்சைப் போல' கனத்து விடுவதாயும், ஒரு ஆண்குறி, 'எங்கோ துளிர்த்துப் பெருகிய வன்மென நீள்கின்ற'தாகவும் அமைந்து விடுகிறது.
காலம் நகர்ந்துகொண்டிருப்பதாயும், பழசை எல்லாம் அடித்துப்போட்டு போய்விடும் என்பதை, சல்மாவின் வரிகள் மறுக்கின்றன. 'நகர்வதில்லை காலம்/ படிந்து உறைகிறது/ ஒவ்வொன்றின் மீதும்' (காலப்பதிவு ) என்றும், 'உன் அசுத்தங்களை/ அடித்துக் கொண்டுபோக/ இது நதியில்லை/ ஏரி' (ஏரி ) என்றும் எதிர்மறையில் கூறுகின்றது.
முதல்தொகுப்பில் தனிமையை/வலிகளை மிக உக்கிரமாய் பதிவுசெய்ததைப்போலவே இந்தத்தொகுப்பிலும் சல்மாவின் பல கவிதைகள் பதிவு செய்கின்றன. அதிலும். 'இருளில்/ இருப்பதென்பது/ வெறுமனே/ இருளோடிருத்தல் மட்டுமில்லை' (இருளோடிருப்பதென்பது), 'ஒரு மனநோயாளியென/ அறியப்பட்ட உன்னோடு/ இருந்து கொண்டிருக்கும் வேளைகளில்/கனத்துவிடும் என் வாதைகளுக்கு/ உன்னிடத்தான கருணை மட்டுமே/ காரணமெனச் சொல்லமாட்டேன்' (ஒரு மனநோயாளியென அறியப்படும் உன்னொடு), 'உன் ஞாபகங்களை/ நினைவிலேற்றிக்கொளவதென்பது/ பல்லாண்டு காலப் பாலையின் வெம்மையை/ மேலும் தொடரத்தானேயன்றி/ வேறெதற்காகவுமேயில்லை/ (விரியும் பாலை), போன்ற வரிகளில் வெறுமை ததும்பி வாசிக்கும் மனங்களைக் கனக்கச்செய்கின்றது.

பெண்கள், அதிர்ச்சியிற்காகத்தான், பெண்ணுடலை எழுத்தில் பயன்படுத்துகின்றனர் என்று எழும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறமாதிரி, பெண்ணுடல் மீது காலங்காலமாய் நிகழ்த்தப்படும் வன்முறைகளையும், தாம்பத்தியத்தில் கூட ஏற்படும் உறவுகள் சிலவேளைகளில் தவிர்க்கமுடியாத பாலியல் வல்லுறவாக நீட்சிகொள்வதை...'உன்னை நிறுவிடவியலாத/ உன் வருடலில் கிளர்ச்சியுறாத/ இவ்வுடலின் மீது/ பெரும் விருட்சமெனப் படர்கிறது வன்மம்' ( விடியும் பொழுதில்) என்றும் 'இருளின் தடித்த போர்வை கிழித்து/ என்மீது தடுக்கி விழுந்துகொண்டிருக்கும்/ உன் ஸ்பரிசங்களில்/ தளர்வுற்று மயங்கிச் சரிகிறது/ நீ தொடவியலாத தனிமை' ( )ஆகவும், 'தடயங்கள் பதிந்து/ புதைவுண்ட உடலில்/ தோண்டி உயிர்ப்பித்தல் என்பது/ ஒரு கதவைத் திறப்பது போல/ எளிதானதில்லை' ( இரவின் நிழல்கள்) என்றும், 'துணைவேண்டும் இரவொன்றில்/ அடிபடிந்துன்மீது படினென்கிற/கர்வத்துடன்/ மர்மம் பூணும் உன் புன்னகை (உன் நம்பிக்கைகளின் திசைமீறி)என்றும் உறவின் மீதான நம்பிக்கையீனங்களை, வேதனைகைளை சொல்கின்றன சல்மாவின் இந்தக்கவிதை வரிகள்.

இந்தத்தொகுப்பில், 'பயங்கள்', 'எல்லை', 'ஒரு பூ மலர', 'நம் வீடு' போன்றவற்றை வித்தியாசமான வாசிப்புத்தருகின்ற கவிதைகள் என அடையாளப்படுத்தலாம்.
'இன்றும்
என்னை வீழ்த்திக்கொண்டிருப்பது
உன் வலிமையில்லை
உன் பயங்கள்'
இந்த வரிகள் சொல்லும் விடயந்தான், அநேகமான பெண்களின் முக்கிய பிரச்சினையாக, அகமனக் குளத்தில் கல்லெறிந்து உறவுகளில் நம்பிக்கையீனங்களைக் கொண்டுவருகின்றதோ என்று ஒரு கணம் எண்ணவும் தோன்றுகிறது.

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்

Saturday, November 13, 2004

சி.புஸ்பராஜாவின், 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'
எனது குறிப்புக்களும், சில அவதானங்களும்


இலைமறைகாயாக மறைக்கப்பட்ட வரலாற்றின் இருண்மையான பக்கங்களைப் பற்றிப்பேசும் எந்தப் புத்தகமும் எனக்கு சுவாரசியமூட்டக்கூடியன. அந்தவகையில், சி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' முக்கியமான ஒன்று. வரலாற்றை அதனுடன் சம்பந்தப்படாத அடுத்த தலைமுறை வாசிக்கும்போது/அறியும்போது உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால், அதிலிருந்து முற்றாக விலகியிருந்து சமரசமற்று வெளிப்படுத்தும் ஒர் பார்வையாகும்.

எனது ஐந்து அல்லது ஆறு வயதில், புலிகளுக்கும், ரெலோவிற்கும் நடந்த அழித்தொழிப்பு யுத்தத்தின் நீட்சியில், எங்கள் கிராமத்திலும் துப்பாக்கி சூடுகள் நடைபெற, வெளியே அந்தசமயம் போயிருந்த அப்பாவையும், அண்ணாவையும் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு, அக்காவோடும் அம்மாவோடும் நானும் பயந்தபடி சுவரொடு ஒட்டியிருந்தது நினைவிலிருக்கிறது. அது ஒரு மாலை வேளையாகியபடியால், வானமும் கடும் சிவப்பாய் வெளிறியிருக்க, துப்பாக்கிச் சூட்டின் புகைதான் இப்படி ஆக்கிவிட்டதோ என்று அந்தவயதிற்குரிய அறிவுடன் யோசித்திருத்திருக்கிறேன்.. அதைவிட பெரிதாக எனக்கு எந்தவிடயமும் இயக்கங்களின் வளர்ச்சியில்/வீழ்ச்சியில் நினைவினில்லை.

சி.புஸ்பராவாவின் இந்த நாவல், எமது போராட்டத்தின் பல சிடுக்குகளை இழைகளாகப் பிரித்துபோட்டிருக்கிறது. சுயவரலாற்று நாவல்கள் பலவற்றிற்கு உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எழுதுபவர் தன்னை வரலாற்றில் நேர்மை உள்ளவராகக் காட்ட அதீதமாக முனைவதுதான். அந்தக்குறைபாடுடன் தான் இந்த நூலையும் வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பதிப்பாசிரியர்கள் (?) கூறுவதுபோல, 'வரலாறுகள் எழுதப்படும்போது பல்வேறு கோணங்கள் சாத்தியம். கோணங்களுக்கு ஏற்ப வரலாறுகளும் வேறுபடும்' என்பதை வாசிப்பில் நினைவுகொள்ளவேண்டும்.

சி.புஸ்பராஜாவின் இந்தநாவல், அவரும் பிறதோழர்களும் தொடங்கிய, ஈழப்பேரவை அமைப்பின் ஆரம்பத்துடன் தொடங்கி, வெளிநாட்டில் EPRLFன் பிரதிநிதியாய் இயங்கிய காலம் வரைக்கும் அவரது பார்வையில் பக்கங்கள் விரிகின்றபோதும், வரலாற்றின் தேவை கருதி அவர் சம்பந்தப்படாத விடயங்களும் (சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடியதன் மூலம்) சேர்க்கப்பட்டு நூல் பூர்த்திபெறுகிறது.
இளயவயதிலேயே, சி.புஸ்பராஜாவின் போராட்டத்தன்மை நமக்குள் ஓர் வியப்பையும் பிரமிப்பையையும் ஏற்படுத்துகிறது. மலையகத்திற்கு எல்லாம் இந்தபோராட்டம் விரிவு பெறவேண்டும் என்பதுவும், அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கவேண்டுமெனவும் அந்தக்காலத்திலேயே நினைத்து அதற்கான வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தவிரும்பியதில் (யாழ்ப்பாணிய புத்திக்கு மாறாய்) உண்மையான ஓர் போராளியின் மனது தெரிகிறது. போராட்டமும், சிறையுமாய் எத்தனையோ இளைஞர்கள், யுவதிகள் தங்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டு திரிந்திருக்கின்றனர் என்பதை நேர்மையுடன் இந்த நூல் விபரிக்கிறது. அதுவும் சிறைகளில் நடைபெறும் சித்திரவதைகள் நாம் நினைத்தே பார்க்கமுடியாதன. எழுத்திலேயே இப்படி கோரமாயிருப்பின், அதனை அனுபவித்தவர்கள் என்னவிதமான மன/உடல் உளைச்சல்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

நூலாசிரியர், EPRLF உடன் தொடர்புள்ளவர் என்றபடியால், அந்த இயக்கம் பற்றியும் அதனோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அடிக்கொருதரம், நான் அந்த இயக்கத்தவன் இல்லை என்கின்ற தொனியில் எழுதி எதை சி.புஸ்பராசா வாசகர்களுக்கு புரியவைக்க முயல்கிறாரோ தெரியவில்லை. உண்மையில், இந்தப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது, நான் இதுவரை EPRLF பற்றி வைத்திருந்த அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டதை குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும். எனெனில் எனது அனுபவங்கள், EPRLFன் வீழ்ச்சிக்காலமாகிய, 1987ற்குப்பிறகுதான் (இந்திய இராணுவ வருகையின்பின்) ஆரம்பிக்கிறது. அவ்வளவு ஜனநாயகத்தன்மையுடனும்(?), மார்க்சிய சிந்தாந்தத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்த இயக்கம் சடுதியில் எப்படி தன் கோரமுகத்தைக் காட்டியது (1987பின்) என்பதற்கான காரணம் சரியாக இந்த நூலில் இனங்காட்டப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த இயக்கத்தின் இருந்த ஒரு சிலராலேயே இப்படியான ஒரு சீரழிவு ஏற்பட்டது என்று ஆசிரியர் கூறுகிறார் என்றாலும் அது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகத்தான் எனக்குப்படுகிறது. அப்படியெனின், எல்லா இயக்கங்களும் தமது பிழைகளை ஒரு சிலர் மீது போட்டுவிட்டு இலகுவாய் தப்பித்துக்கொள்ளலாம்தானே.

இந்தநூலின் ஒரு இயக்கத்தின் மீதான் பக்கச்சார்பான பார்வையில் எழுதப்பட்டிருப்பதை எவரும் மறுக்கமுடியாது. புலிகள் தொடங்கி, புளோட் என்று எல்லா இயக்கங்களின் உட்கொலைகள் இன்னபிற எல்லாம் விபரமாய் எழுதப்பட, EPRLF செய்த எந்தக்கொலைகளுமே விபரமாய் சுட்டிக்காட்டப்படவில்லை. அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்து, பயங்கர பாதுகாப்புடன், பத்மநாபா, வரதராஜாப்பெருமாள் என்று எல்லோருடனும் (தேர்தலின் பின்) பல இடங்களைச்சுற்றிப்பார்க்கும் சி.புஸ்பராஜாவிற்கு அவர்களின் சிறைகளிலிருந்து வரும் அலறல்களைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை. EPRLF ம் பிழைகளைச்செய்திருக்கின்றனர் என்று பொதுப்படையாக கூறுகின்றாரே தவிர எதையும் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. அவர்கள் கட்டாயமாகச் சேர்த்த இளைஞர்களை (தமிழ் தேசிய இராணுவம்?) எல்லாம் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின்பின், EPRLF தலைமை எப்படிக் கைவிட்டு தப்பியோடியது என்பது பற்றிய எந்த்க்குறிப்பும் புத்தகத்தில்லை. தான் அவர்களின் செயல்களுக்கு விமர்சனம் செய்ததாகக் கூறும் சி.புஸ்பராஜா ஒரு உண்மையான ஜனநாயகவாதியாக இருந்திருந்தால், அவர்கள் செய்த அட்டூழியங்கள் தெரிந்தபின்னும் (1993ம் ஆண்டுவரை) EPRLFன் பிரதிநிதியாய் பிரான்சிஸ் செயற்பட்டிருக்கவே முடியாது.
...................
எனக்கு சி.புஸ்பராஜாவிற்கு நினைவுபடுத்த (7,8 வயதில் நடந்தவை எனினும்) சில சம்பவங்கள் ஞாபகத்திலுண்டு. சிறு வயதில் ஆஸ்மாவால் நான் அவஸ்தைப்பட அநேகமாய், விடியற்காலைகளில் எனது தாயார், தூரத்திலுள்ள பரியாரியிடம் சிகிச்சைக்காக கூட்டிச்செல்வார். அப்படியான பல காலைவேளைகளில் எங்கள் ஊரிலுள்ள சந்தயில் எங்களை வரவேற்பது இரவில் உறைந்துபோயிருக்கும் இளைஞர்களின் உடல்கள்தான். வேடிக்கை என்னவென்றால், சந்தியின் ஒரு மூலையில் முழித்தபடி காவலிருப்பவர்கள் இந்திய இராணுவமும் EPRLF போராளிகளுந்தான். இன்னும் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவரும் என்மீது மிகவும் பிரியம் வைத்திருந்தவருமான, ஒரு தபாலதிபரை, கொடும் சித்திரவதைக்குபின் கொலைசெய்தவர்களும் சி.புஸ்பராசா சார்ந்திருந்த இயக்கத்தவர்கள்தான். அது காணாது என்று அந்த தபாலதிகாரியுடன் வேலை செய்த ஒரு ஊழியர், சோகம்தாங்காது குடித்துவிட்டு உளறித்திரிந்தபோது அவரையும் இழுத்துக்கொண்டு சுட்டதும் EPRLFம் தான். என்ன சோகமென்றால், அந்தத்தபாலதிபர் புலிகள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர் என்பது கூட இல்லை என்பதுதான்.
..................
எல்லா இயக்கத்தவர்களும் தங்கள் தலைமையை கொண்டாட விரும்புவதுபோலத்தான், சி.புஸ்பராஜாவும் பத்மநாபாபை அடையாளப்படுத்த விரும்புகிறார். ஆனால், இலண்டனிலிருந்து ஈழப்போராட்டத்தில் தானும் பங்கேற்கவேண்டும் என்று விரும்பி அதற்காகவே ஏதோ ஒருவகையில் தன்னுயிரை இழந்துபோன பத்மநாபா என்பார்வையில் முன்னையதைவிட உயர்வாக இருக்கிறார் என்பதுவும் உண்மை. ஏனைய இயக்கத்தைவிட அதிக புத்திஜீவிகளுடன் (சிங்கள மார்க்க்சியவாதிகளுடன் கூட) இயங்கிய ஒரு இயக்கத்தின் வீழ்ச்சி நமது இனத்திற்கான சாபமெனத்தான் கொள்ளவேண்டும் அல்லது அறிவுஜீவிகளால் ஒருகட்டத்திற்கு பிறகு போராட்டத்தை நகர்த்தமுடியாது என்பதையாவது ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த நூலில் நல்ல அம்சம் என்னவென்றால், எவர் மீதும் அதீத காழ்ப்புணர்ச்சி காட்டப்படவில்லை என்பதுதான். அவரவர் குறைகளையும், பிழைகளையும் இயன்றளவு இயம்பவும், நல்லவிடயங்களை முழுமனதுடன் அடையாளப்படுத்த தவறவில்லை என்றுதான் கூறவேண்டும். நூலின் எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. சில்வேளைகளில் வாசிப்பையே இடைஞ்சல் செய்யுமளவிற்கு. அத்துடன், தொடர்ச்சியாக ஆண்டுவரிசைப்படி எழுதப்படவில்லை. சிலவேளைகளில் சடுதியாக இடையிலிருந்து எல்லாம் சம்பவங்கள் விபரிக்கப்பட வாசிப்பவர் மீண்டும் முன்னைய வருடங்களுக்கு ஓடவேண்டியிருக்கிறது.

இந்த நூலை வாசித்து முடிக்கும்போது ஒன்றுதான் நினைவிற்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டு விலகி இன்று புலம்பெயர்ந்து இருப்பவர்களாயினும் சரி, இல்லை ஈழத்தில் இன்னும் தாம் சார்ந்த கொள்கைகளுக்காக போராடிக்கொண்டிருப்பவர்களாயினும் சரி, அல்லது போராட்டத்திற்காய் தமது உயிரைக்கொடுத்தவர்களாயினும் சரி, அவர்களைக்கொச்சைப்படுத்தாது அவரவர்களின் நியாயங்களுடன் அவரவர்களை நேசிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்பதே.