கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழத்திலிருந்து சில கவிதைகள்

Sunday, February 27, 2005

பாம்பு நரம்பு மனிதன்
-சோலைக்கிளி

வலி தாங்கமுடியவில்லை.
எனது கண்களை யாரோ ஒரு கல்லில் வைத்து
இன்னுமொரு கல்லால்
தட்டுகின்றனர்.

என் கண்
ஒவ்வொரு நாளுமே கெடுகிறது.
அது இருந்த இடத்தில்
பாம்புகள் நுழைகின்றன
எனக்குள்.

ஆம், என் நரம்புகளெல்லாம் இப்போது பாம்புகளா!
ஒவ்வொரு நரம்பும்
ஊர்வதைப் போலவும்,
நெஞ்சைக்
கொத்துதல் மாதிரியும்,
உணர்கிறேன்.

ஊரே
நான் பார்க்கும் உலகே
என் கண் தட்டும் மனிதரை
விழுங்கு!
கையிலொரு பூவோடு
பிறர் நெஞ்சை
தடவிச் சுகம் கொடுக்கும் மானிடராய்
மண்ணில் பிறக்க
தவம் செய்!

ஒரு நரம்பு
இப்போது
என் மூளையைக் கொத்துகிறது!
இன்று காலையில்தான் இந்தப் பாம்பு
எனக்குள்ளே வந்தது.
நேற்று முன்தினம்
இரு தரப்பிலும்
சுமார் நூறுபேர்வரை மரணம் என்ற
பத்திரிகைச் செய்தியைப் பார்க்கையில்,
யாரோ என் கண்ணை
கல்லால் தட்ட
நுழைந்தது.


உயர்ந்து
-சோலைக்கிளி

நான் அள்ளி எறிந்த மொழி நீ
அதுவும் தமிழ்
செத்தாலும் சோர்ந்தாலும் மென்மேலும் துளிர்ப்பது
மழை தேவையில்லை கோடையிலும் பூப்பது
எட்டி
ஒரு றப்பர் கட்டியாய் துள்ளி
என் தோளில் கூத்தாட முனைந்து
தோற்றாய்
நான் உயரம்
பிணம் புதைத்துப் புதைத்து
திடலான பூமியிலே நிற்கின்றவன்

அதனால்-
உன் போன்ற கட்டைகள் றப்பர் கட்டிகள்
புருஷனது தோள் ஏறி பழம் ஆய்ந்து கனி ருசித்து
கொட்டை பிதுங்கி எறிவதற்கு

தடைதான் - அங்கே ஒரு அவிந்த தலை
தலைமுடியில் சாம்பல் பூத்ததைப் போல வெள்ளை

பூமி திடலாகி ஆகாயம் தட்டியதில்
இரவில்
என் பழைய சித்திர ஆசிரியை
செத்துப்போனாலும் என் கலையை விடமாட்டேன்
என்று சொல்லி வந்து
நசிகின்ற அந்த நீலத் தகரத்தில்
பூக் கீறும்போது
கை தடுக்கி மை உதிர்ந்தும் சித்திரத்தை விட்டாவோ
அம்மா


உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்
-பா.அகிலன்

எனக்குத் தெரியாது
ஒரு ஆர்ப்பரிக்கும் கடலோரமோ
அல்லது
வனத்தின் புறமொன்றிலோ
உன் கிராமம் இருந்திருக்கும்.
பெரிய கூழாமரங்கள் நிற்கிற
செம்மண் தெருக்களை
வசந்தத்தில் வந்தமர்ந்து பாடும்
உன் கிராமத்துக் குருவிகளை
எனக்குத் தெரியாது.

மாரிகளில்
தெருவோரம் கண்மலரும் சின்னஞ்சிறிய பூக்களை
நீள இரவுகளில்
உடுக்கொலித்து நீ பாடிய கதைகளை
நிலவு கண்ணயரும்
உன் வாவிகளை
நானறியேன்

காற்றும் துயர்ப்படுத்தும்
இவ்விரவில்
நானும், நீயும் ஒன்றறிவோம்.
ஒரு சிறிய
அல்லது பெரிய
சுடுகாட்டு மேடுபோலாயின
எமது கிராமங்கள்.
அலைபாடும் எங்கள் கடலெல்லாம்
குருதிபடர்ந்து மூடியது.
விண்தொட மரமெழுந்த வனமெல்லாம்
மனிதக் குரல்கள் அலைவுற
சதைகள் தொங்கும் நிலையுமாயிற்று.
முற்றுகையிடப்பட்ட இரவுகளில்
தனித்துவிடப்பட்ட நாய்கள் ஊளையிட
'முந்தையர் ஆயிரம்' காலடி பரவிய
தெருவெல்லாம் புல்லெழுந்து மூடியது.
நானும், நீயும் இவையறிவோம்.
இறந்துபோன பூக்களை
கைவிடப்பட்ட பாடலடிகளை
நினைவுகூரப்படாத கணங்களைக் கூட
அறிவோம்.

ஆனால்
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்கள் தொன்மைச் சுடர்கள் மோனத்திருப்பதை
அவர்களைப் போல
நீ அறியாது விடின்
இன்றறிக
'ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்'
ஒர்நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.


இராத்திரிப்பூச்சியின் போர்ப்பாட்டு
-கருணாகரன்

இராத்திரிப்பூச்சியே
என்னோடு இரு
உன் பாடலை நிறுத்தி
இரகசியமாக உணர்;
காற்றின் சருமம் நடுங்குவதை,
ஒரு கண்ணிழந்த பறவையென
இந்த இரவு திசைகெட்டுப் பரிதவிப்பதை.

இது உயிரை உசுப்பும் துயரமல்லவா?

இந்தக் கணம்
என்னோடு இரு
எந்தச் சத்தமுமின்றி
காலத்தின் சொல்கேட்டு
மிக அவதானமாக
மிக ஆக்ரோசமாகக் காவலிருப்போம்.
எதிரே, வாழைகள் நெரிபடும்
தோட்டத்தின் பின்னே
வெளியில்; புற்கள் மண்டிய வெளியில்
ஏதோ நாலுபறவைகள்
திடுமெனப் பறந்தெங்கோ சிதைய
பாழடைந்த நிழல்களாய்
பகை மூட்டமசையும்.

ஆட்களற்ற வீடுகளிலிருந்து
பரியலங்கள் உலாவுகின்ற
வாடைபடும் எல்லை இது
அழுக்கு மாலை அணிந்து பிணத்தின்
வாடையுடன்
சூரர்கள் வெறிகொண்டு வருவர்.

வாடையின் குறிப்புணர்ந்து
நீமருள்வாய்
காலம் நசுங்கி முனகுவதை
நானறிவேன்
என் பூச்சியே நீயும் உணர்
காலமும் சூழலும் நெருங்கி வர
மூளும் யுத்தம்
வெற்றி வரும் வரை யுத்தம்.

நெஞ்சுகள் கொதித்துக் கொதித்துக்
குமுறும் வெம்மையில்
நூற்றாண்டுகால அடிமைச் சாசனங்கள்
எரியுண்டுபோக
இராத்திரிப் பூச்சியே
அப்போது பாடு
மருளாமல் ஆக்ரோசமாகப் பாடு
நம் நிலத்தில் முளைத்த போர்ப்பாட்டை.


நீள்வழியில் நிழலாகி
-கருணாகரன்

சாம்பலாய் நிழலுருக் காட்டும்
பனைகளும் சிறுபற்றைகளும் தொலைவில் கரைய
படகேறிப் போகிறதென் பயணம்

வள்ளங்களை அலைக்கும் காற்றில்
என்ஜின்கள் இரைய
ஒரு படகின் பின்னால் - இழுவையில்
பிணையுண்டு இழுபடும் படகுகள்...

மெல்லச் சிறுத்து
தொலைவு கொண்டு போகின்றது
கிளாலிக்கரை

கையசைக்கவும்
முகம் திருப்பவும் முடியவில்லை.

என் சிறுகடலே கேளம்மா
உன்னரும் புதல்வரின்
உதிரத்தில் மூழ்கிய தேவி
நீ வேதனையில் விசும்பும்
ஒலியில் திசையடைத்துக் கிடப்பதறிவேன்
எனினும்
என் மனதையும் மடியிருத்திக் கொள்ளம்மா.

பீதியுண்டு அலையும் விழிகளும்
மருளும் மனமுகமாக
ஒரு வாழ்வை இழந்து
ஒரு வாழ்வு தேடிப்போகுமென் விதி

பகல் நேரப் பொழுதொன்றில்
வலசையாய்
நொய்த மனிதரில் ஒருவனாய்
விம்மி அழுதபடி
விழிநீரை உன்மடியில் சிந்திச் செல்கிறேன்.

கரையில் மோதி
மோதிச் மோதிச் சிதறும் உன் விதிபோல
இன்றென் கதையும் ஆயிற்றென்று
காற்றிடம் சொல்வதா
இந்த கடற்பறவைகளிடம் சொல்வதா.

நன்றி: எரிமலை, உயிர்நிழல், பாம்பு நரம்பு மனிதன்

3 comments:

-/பெயரிலி. said...

நன்றி.

இலங்கைக்கவிதைகளிலே மற்றேந்தக்கவிஞரிலும்விட வாசிப்பிலே என்னுள்ளே பாதிப்பினை ஏற்படுத்தியவர் சோலைக்கிளி - அவரது மூன்றாவது மனித நேர்காணல் அவரின் மதம்சார் நம்பிக்கையின் ஆழம் பயமூட்டியபோதுங்கூட.

2/27/2005 03:40:00 PM
Anonymous said...

பதிந்தது:Eelanathan

கவிதைகளுக்கு நன்றி டி.சே
சோலைக்கிளியின் கவிதைகளை மதுரைத் திட்டத்தில் வாசித்த ஈர்ப்பில் நானும் இரண்டு மூன்று கவிதைகளை எனது பதிவில் போட்டிருந்தேன்.அருமையான வார்த்தைப்பிரயோகங்களுடன் உவமை,படிமம்,குறியீடு என்பவற்றை அழகாகப் பயன்படுத்தியிருப்பார்.நாட்டுப்புற வழக்குச் சொற்கள் அவரது கவிதைக்குப் பலம்.

கருணாகரன் வெளிச்சம் ஆசிரியர் சரிதானே?

28.2.2005

2/27/2005 06:59:00 PM
இளங்கோ-டிசே said...

பெயரிலி, ஈழநாதன் நன்றி.
ஈழநாதன் சரிதான். வெளிச்சம் ஆசிரியர் கருணாகரனும் இவரும் ஒருவர் தான். இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் கருணாகரன் வெளியிட்டிருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

2/28/2005 12:02:00 AM