கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாரயிறுதிகள்: நாட்குறிப்பில் எழுத மறந்த நினைவுகள்

Thursday, June 16, 2005

சனிக்கிழமை
(அ)புல்வெளியில் கவிதைகள் வாசித்தல்

pic2

வெள்ளி பின்மாலையில்தான் அடுத்தநாள் சனிக்கிழமை இப்படி ஒரு நிகழ்வு நடத்துவது என்று நண்பர்களின் வீட்டில் நின்ற சமயம் உறுதிப்படுத்தப்பட்டது. பத்மநாப ஜயரும், மதியும் தான் இந்நிகழ்வு நடக்கவேண்டும் என்று மும்முரமாக நின்றனர். ஏற்கனவே முதல் சனிக்கிழமை மொழிபெயர்ப்பு பட்டறை நடந்திருந்தாலும், வெளிச்சுழலில் இறுக்கமற்று, மூலக் கவிதைகளும் (ஆங்கிலத்தில்) மொழிபெயர்த்த கவிதைகளும் விரும்பிய போக்கில் வாசித்து உரையாடுவதே முக்கிய நோக்கமாக இருந்தது. சனிக்கிழமை பத்மநாப ஜயர், மு.நித்தியானந்தன், ராஜா போன்றவர்களை பூங்காவுக்கு அழைத்துவரும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. வழமைபோல ஒரு மணித்திலாயம் தாமதாகத்தான் அவர்களை உரிய இடத்துக்கு என்னால் அழைத்துச் செல்ல முடிந்தது. காத்திருந்த நண்பர்கள் என்மீது கோபப்படாதது (இல்லை மனதுக்குள் திட்டிக்கொண்டு வெளியில் காட்டாதிருந்தார்களோ தெரியாது) சற்று நிம்மதியாயிருந்தது. அவசரமாக ஒழுங்கு செய்திருந்தாலும், கிட்டத்தட்ட இருபது பேர் பங்குபற்றியிருந்தோம். வெளிச்சூழலில் கவிதை படிப்பதற்கு இந்தளவுக் கூட்டந்தான் அளவானது போலத் தோன்றியது. அல்லாவிட்டால், அது உள்ளக அரங்குகளில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டம் போலவாகிவிடும். வட்டமாக அமர்ந்து ஒலி/ஒளிபெருக்கிகள் இல்லாது இயல்பாய் பேச இந்த அளவு எண்ணிக்கைதான் சரிவரும்.

meeting1

பத்மநாப ஜயரும், மு.நித்தியானந்தனும் வாசிக்கப்பட்ட கவிதைகளை எழுதிய கவிஞர்களைப் பற்றி முன்னுரைகள் கொடுக்க தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை வாசிப்புக்கள் நடந்தேறின. மிக நட்புறவான சூழலில், எவரது கருத்தையும் எவரிலும் திணிக்காது அமைந்தது மனதுக்கு இதமாயிருந்தது. பிறகு ராஜாவும், பா.அ.ஜயகரனும் நீலாவாணனின் 'ஓ வண்டிக்கார', சண்முகம் சிவலிங்கத்தின், 'ஆட்காட்டியே' மற்றும் மகாகவியின் கவிதைகளாகப் பாடிக்காட்டியது கவிதை வாசிப்புச் சூழலுக்கு இரம்மியத்தைக் கொடுத்தது. அத்தோடு புதிய/இளைய முகங்கள் பலதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. பத்மநாப ஜயர், நித்தியானந்தன், ராஜா போன்றவர்கள் தங்கள் தலைகளின் பின்னால் ஒளிவட்டம் எதையும் சுழலவிடாது மிக இயல்பாய் நம் அனைவருடனும் உரையாடியதையும் குறிப்பிட்டுச் சொல்லதான் வேண்டும்.

pic3

(ஆ) மாணவர் எழுச்சி நாள்

அன்றைய மாலைப் பொழுதில் மாணவர் எழுச்சி நாளுக்குப் போயிருந்தேன். மாணவர் எழுச்சி நாள், சிவகுமாரன் சயனைட் அருந்தித் தற்கொலை செய்துகொண்ட நாளில் ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்படுகின்றது. அரங்கத்தின் வாயிலை அடைந்தபோது நண்பர்கள் அடுத்தநாள் ட்சுனாமியால் பாதிப்புற்ற மக்களூக்காய் நடத்த இருந்த நடைபவனிக்கு (walkathon) flyers வழங்கிக்கொண்டிருக்க அவர்களோடு இணைந்து கொண்டேன். பிறகு அரங்கத்துக்கு உள்ளே சென்று சில நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். சில நடனங்கள் மேடையில் போய்க்கொண்டிருந்தன. மூன்று மாணவிகள் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக ஆடினர். நடனத்தின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லாவிட்டாலும், இப்படி தொடர்ச்சியாக ஆட (ஒரே வித அசைவுகளுடன்) எவ்வளவு பயிற்சி செய்திருப்பார்கள் என்றும், நடனக்குறிப்புக்களை எந்த மொழியில் எழுதி விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்றும் வழமைபோல யோசித்தபடி நான் பின்னேரக் கனவு காணத்தொடங்கியிருந்தேன் . பிறகு மாணவர்களாய் எழுதி, பாடிய இசைத்தட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதற்கு பாடல் எழுதும்படி என்னையும் அழைத்திருந்தனர் (படித்து ஒரு வருடம் முடிந்தபின்னும் மாணவன் என்று அழைப்பு விடுத்த அந்த நண்பர் குழாமுக்கு நன்றி). தோழியொருத்தி தொலைபேசியில் அழைத்து அழைத்து தொண்டையில் பிடித்தபோதும் என்னால் இந்த விளையாட்டுக்கு வரமுடியாது என்று விலத்திவிட்டேன். சில பாடல்களைக் கேட்டேன். நன்றாக இருந்தது. அரங்கம் வெக்கையாக இருந்ததாலும், ஒலிபெருக்கிகள் பாடுவதற்குப் பதிலாக அலறவும் தொடங்கியதாலும், நான், கிஸோ மற்றும் ஒரு நண்பன் வெளியே ஒரு கோப்பிக்கடைக்கு தேநீர் குடிக்கப்போய்விட்டோம். பிறகு நண்பர்கள் மீண்டும் விழாவுக்கு சென்றபோதும், நான் அடுத்த நாள் காலை நடக்கும் நடைபவனிக்கு நேரத்துக்கு வரவேண்டும் எனவே என்னை வீட்டிற்கு சென்று படுக்கவிடுங்கள் என்று நல்ல சாட்டுக்கூறிவிட்டு வந்துவிட்டேன்.

ஞாயிற்றுக்கிழமை

(அ) ட்சுனாமியால் பாதிக்கப்பட்டவர்க்காய் நடந்த நடைபவனி

ட்சுனாமி அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்நிர்மானத்துக்காய் இந்த நடைபவனி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்தளவில் இந்த வருடத்தில் நடந்த மூன்றாவது நடைபவனி இது. மூன்று நடைபவனிகளிலும் ஏதோ கொஞ்சம் நானும் பங்குபற்றியிருந்தேன். முதலாவது நடைபவனி, யோர்க் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் மாலை 6.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணிவரை நிகழ்ந்தது. நான் வழமைபோல அங்கும் தாமதாக (இரவு பதினொரு மணியளவில்) சென்று முடியும் வரை பங்குபற்றியிருந்தேன். நின்ற ஏழு மணித்தியாலங்களில் ஆகக்குறைந்தது நான்கு மணிகளாவது நடந்திருக்கின்றேன் என்பது அதிசயமான விடயம்தான். அரைவாசி பகல்/இரவு நடந்த அந்த நடைபவனியில் முடியும்போது கிட்டத்தட்ட நூறுபேர் இருந்திருப்போம். இளைஞர்கள் என்றால் வன்முறையும், குழப்படியும் செய்பவர்கள் என்பதைத் தாண்டி பெண்களும் ஆண்களும் அங்கே கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை நம்பி அனுப்பிய பெற்றொரையும் பாராட்டத்தான் வேண்டும். இடையில் கிளித்தட்டு விளையாடினோம். கூடைப்பந்தாட்டம் ஆடினோம். பதின்ம வயதுப் பையன்கள் கானாப்பாடல்களுக்கு அந்தமாதிரி நடனம் ஆடினார்கள். அதைப் பார்த்து கொஞ்சம் வெட்கமும் நிரம்ப திறமையுடன் பெண்களும் தங்களுக்குள்ளே ஆடி மகிழ்ந்தார்கள். இடையில் சில ஜேர்சிகள் ஏலத்தில் விட்டபோது, பெண்களின் ஜேர்சியை இறுதியாய் வாங்கிய ஒரு பெண்ணோடு வேண்டுமென்று போட்டி போட்டு ஏலத்தைக் கூட்டி, சற்று அதிகப்படியான விலைக்கு அவரை வாங்க வைத்திருந்தோம். அந்தப்பெண் எங்களோடு பலவருடங்களுக்கு முந்தி தமிழ் வகுப்பொன்றில் இருந்ததும், எனக்கு கொஞ்சமும், நண்பனுக்கு சற்று அதிகப்படியான நனவிடைதோய்தலும் அவரால் இருந்ததும் இந்த விலையுயர்த்தலுக்கு முக்கிய காரணமெலாம். அன்றைய பொழுதில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பல தோழர்/தோழிகளுடன் ஆறுதலாகப் பேச ஒரு சந்தர்ப்பமும் வாய்த்திருந்தது. சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்ற பத்து பேர் கொண்ட குழுவில் முக்கால்வாசிப்பேரை மீண்டும் அங்கே கண்டது அருமையான அனுபவம்.

helpingposter

இரண்டாவது நடைபவனி ஒரு பூங்காவிலிருந்து ஆரம்பித்து ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் வரை நீண்டு முடிந்திருந்தது. அந்த நடைபவனியின்போதே பத்மநாப ஜயரின் சந்திப்பு/மொழிபெயர்ப்பு பட்டறை நடந்ததால் என்னால் முழுமையாய் பங்குபெறமுடியவில்லை. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளில் கொஞ்சம் ஈடுபடமுடிந்தது. முக்கியபணிகளை இரண்டு பெண்களே எடுத்து நடத்தியிருந்ததனர். தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவழித்து அருமையான நடைபவனியை நடத்திக்காட்டிய அந்தத் தோழியரும் அவர்களோடு தோள் கொடுத்த அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள். மூன்று நடைபவனிகளும் எந்தக் குழப்பமோ, பிறருக்குத் தொந்தரவோ இல்லாது நடந்தேறியது குறிப்பிடவேண்டியது. முதலாவது நடைபவனியில் 12,000 டொலர்களும், மூன்றாவது நடைபவனியில் 13,000 டொலர்களும் சேகரிக்கப்பட்டிருந்தாய் நான் அறிந்தேன். இரண்டாவது நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியினளவு தெரியவில்லை. இந்த நிதி ஈழத்திற்கு ஒழுங்காய்ப் போய்ச்சேர்ந்து அங்கு ட்சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் சிலவற்றையாவது நிவர்த்தி செய்தால்தான் இங்கு கடுமையாக உழைத்தவர்களின் உழைப்பு மேன்மைப்படுத்தப்பட்டதாக இருக்கும். TEDDOR அமைப்பு இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும், சில திட்டங்களுக்கான முன்வரைவுகள் ஏற்கனவே பொதுப்பார்வைக்கு இங்கே வைக்கப்பட்டிருந்தாயும் நினைவு.

(ஆ)பத்மநாப ஜயருக்கு இயல் விருது

iyrer3

ஞாயிற்றுக்கிழமை இரவு பத்மநாப ஜயருக்கு இயல் விருது விழா வழங்கும் வைபவம் நடந்தேறியது. ஜயரினதும், 'அசை' சிவதாசனினது உரைகள் நன்றாக இருந்தன. பத்மநாப ஜயர் இன்றைய தமிழ் இல்க்கிய உலகத்தில் நடப்பது என்னவென்று up-to-date யாய் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. பத்மநாப ஜயர் குறித்து, மு.நித்தியானந்தனால் (?) எடுக்கப்பட்ட ஒரு விவரணப்படமும் ஒளிபரப்பட்டிருந்தது. பத்மநாப ஜயருக்கு இந்த விருதால் பெரிதாய் ஒரு பிரயோசனமும் இல்லையென்றாலும், இன்னும் தமிழுக்காய் உழைக்க அவருக்கு இது ஒரு உந்துசக்தியாக அமையக்கூடும். ஆக்ககுறைந்து புதிய நண்பர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பாவது அவருக்குக் கிடைத்திருக்கும். தான் ஒருவித திசையில் இலக்கிய உலகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன் என்றால், தான் கால்வைக்க் முடியாத இன்னொரு திசையில் சோபாசக்தி, சுகன், கற்சுறா போன்றவர்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே ஈழத்து/புலம்பெயர் இலக்கியம் என்பது இப்படியான பல்வேறு போக்குகளால்தான் முழுமைபெறுமே தவிர, தன்னால் மட்டும் ஈழத்து/புலம்பெயர் இலக்கியம் விகாசிக்காது என்று ஜயர் புரிந்துவைத்திருப்பதுதான், அவரோடு பழகிய சில நாள்களில் எனக்கு முக்கிய அவதானமாய்ப்பட்டது.

19 comments:

-/பெயரிலி. said...

ஏன் டிஜே, இன்னும் சிக்கனமாக பெருவிரல்நகத்துண்டு படம் போட்டிருக்கலாமே... Flickr சொடுக்கிவிட்டு வரும் ஆத்திரத்துக்கு இரண்டு எழுத்துகளை விலக்கிப்போட்டு இரண்டு எழுத்துகளைச் சேர்த்துத் திட்டலாம் போல இருக்கிறது.

6/16/2005 09:24:00 AM
இளங்கோ-டிசே said...

பெயரிலிக்கு, தன்னுடைய பதிவில் படங்களைப் போட்டு போட்டு, இப்போது பதிவுகள் வாசிக்கும் ஆர்வத்தைவிட, படங்களைத் துருவிப்பார்க்கும் ஆர்வம் கூடிவிட்டது போலத் தெரிகிறது :-). ஏற்கனவே ஆண்-பெண் என்று பேதமில்லாமல், வலைப்பதிபவர்களிடம் கடி வாங்கியது பத்தாது என்று நீங்கள் 'நல்ல வார்த்தைகளில்' இனி அன்போடு திட்டவும் போகின்றீர்கள் போலக் கிடக்கிறது. பேயன் மாதிரி கொம்பியூட்டருக்கு முன்னாலே இருந்து தட்டமல் முட்டாமல், பேசமால் படுத்துத் தூங்கு என்று கூறும் அம்மா எவ்வளவோ மேல் போலத் தெரிகின்றது :-).

6/16/2005 09:43:00 AM
SnackDragon said...

//Flickr சொடுக்கிவிட்டு வரும் ஆத்திரத்துக்கு இரண்டு எழுத்துகளை விலக்கிப்போட்டு இரண்டு எழுத்துகளைச்
சேர்த்துத் திட்டலாம் போல இருக்கிறது.//

same here. GGGGGGGrrrrrrrrrrrrrrrrrr

6/16/2005 10:33:00 AM
கறுப்பி said...

டீசே, கடந்த சில வாரங்கள் ரொறொண்டோவில் இலக்கிய நிகழ்வுகள் பல நடந்தது மனதுக்குச் சந்தோஷமாக இருக்கின்றது. நான் அந்தக் கவிதைச் சந்திப்பில் கேட்டது போல்த்தான் மீண்டும் கேட்கின்றேன் ரொறொண்டோவில் பல இலக்கிய விரும்பிகள் இருக்கின்றார்கள் ஒரு இலக்கியச் சந்திப்பு நிகழ்வதற்கு லண்டனில் இருந்து யாராவது வரவேண்டியுள்ளது. ஏன் நாம் ஒன்றாக இணைந்து மாதம் ஒரு இலக்கிய நிகழ்வை நிகழ்த்தக் கூடாது? புத்தக வெளியீடுகளை நான் இதற்குள் அடக்கவில்லை. அது அப்படைப்புக்கள் வெளி வருமுன்னர் இடம்பெறுவது. சிலர் மட்டும் படித்து விட்டு விமர்சித்து விட்டுப் போய் விடுவார்கள். நான் “அகவி” ரதனுடன் இது பற்றிக் கதைத்தேன். அவருக்கும் எனது யோசனை பிடித்திருக்கின்றது. இன்னும் சிலர் தாம் கலந்து கொள்வதாகக் கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் முதலாவதாக 2004ம் ஆண்டின் பெண்கள் சந்திப்பு மலரை விமர்சிக்கும் நிகழ்வாக ஜீன் 26ம் திகதி மாலை 6மணிக்கு சிவிக்சென்ரறில் ஒரு மண்டபத்தை எடுத்திருக்கின்றோம். அதன் பின்னர் தொடர்ந்து அந்த நிகழ்விற்கு வருபவர்களிடம் கலந்தாலோசித்து மாதம் ஒரு படைப்பைத் தெரிவு செய்து விமர்சனமும் கலந்துரையாடலும் நடாத்தலாம் என்று விரும்புகின்றோம். தாங்கள் தங்கள் நண்பர்களுடன் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன். இது ஒருவரின் தலமையில் கீழோ அமைப்பின் கீழோ நிகழாது. சுதந்திரமாக இலக்கிய விரும்பிகள் கலந்து கொண்டு கலந்துரையாடுவதாகவே இருக்கும். தங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள்.

6/16/2005 10:52:00 AM
கிஸோக்கண்ணன் said...

//ஒலிபெருக்கிகள் பாடுவதற்குப் பதிலாக அலறவும் தொடங்கியதாலும்\\
எனது செவிகளும் அதைத்தான் சொல்லின. எட்டு வருடங்களுக்கு முந்தி ஒலி பெருக்கிகள் எப்படியிருந்தனவோ அப்படியேதான் இப்பவும் இருக்கின்றன. கொண்ட கொள்கையில் உறுதி என்பதை நம்மடை ஆக்கள் பிழையா விளங்கிக் கொண்டிருக்கினம் போலை. இதாலை நான் எவ்வளவு நொந்து போயிருக்கிறன் எண்டு எனக்கும் என் செவிகட்கும் மட்டுமே புரியும்.

கறுப்பி முன் வைத்திருப்பது நல்ல திட்டம். என்னால் எவ்வளவு பங்களிப்பு வழங்க முடியும் என்று தெரியவில்லை...

6/16/2005 12:47:00 PM
இளங்கோ-டிசே said...

கார்த்திக், GGGGGGGoooooooooorrrrrr
என்று கொட்டாவி விட்டு நித்திரை கொள்வதென்றால் உமது வீட்டை போய் படுங்கோ. என்ரை குடிலுக்கு வரவேண்டாம் நித்திரை கொள்ள. ஏற்கனவே எனக்குத் தூங்குவதற்கு இடமில்லை என்று என்ரை குடிலில் ஒண்டிக்கொண்டிருக்கின்றேன் :-). மேலும் இது குறித்து எதுவும் தகவல் தேவையென்றால் அலுவலகத்தில் குட்டித்தூக்கம் போடுவது எப்படி என்று கறுப்பி எழுதிய பதிவைப் புகைத்துப் ....oopps படித்துப் பாரும்.

6/16/2005 02:09:00 PM
இளங்கோ-டிசே said...

கறுப்பி நல்ல விடயம். ஏற்கனவே உங்கள் பதிவில் பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக்கூட்டம் பற்றி வாசித்திருந்தேன். சுதந்திரமான கருத்துச் சொல்லும் வெளி இருந்தால் எந்தக்கலந்துரையாடலும் நீர்த்துப் போகாது என்றுதான் நினைக்கின்றேன். நிதானமாய் நல்ல விமர்சனம் தரமுடியும் என்பதற்கு உங்கள் நூல் வெளியீட்டு விழாவில் விமர்சனம் செய்தவர்கள் நிரூபித்துக்காட்டினார்கள் அல்லவா? உற்சகமாய் இவ்வாறான கலந்துரையாடல்களை நடாத்த என் வாழ்த்து!

6/16/2005 02:31:00 PM
Anonymous said...

Passionated AnionMass எ. அனோனிமாசு Disappointment DJ ஆகிச் சொல்வதாவது:

|"என்ரை குடிலுக்கு வரவேண்டாம் நித்திரை கொள்ள. ஏற்கனவே எனக்குத் தூங்குவதற்கு இடமில்லை என்று என்ரை குடிலில் ஒண்டிக்கொண்டிருக்கின்றேன்"

+

"சுதந்திரமான கருத்துச் சொல்லும் வெளி இருந்தால் எந்தக்கலந்துரையாடலும் நீர்த்துப் போகாது என்றுதான் நினைக்கின்றேன்" -

-->

"இந்தப்பதிவிலே கருத்துச்சுதந்திரம் இல்லை"|

6/16/2005 02:48:00 PM
இளங்கோ-டிசே said...

ஆகா வந்துட்டாரய்யா, வந்திட்டாரு (என் நிலை மேலும் தெளிவாய்த் தெரிய வடிவேலின் பரிதாபமுகத்தை உங்கள் மனக்கண்ணில் தயவுசெய்து கொண்டுவரவும்). ம்...my bad... என்னுடைய தவறுதான். ஒத்துக்கொள்கின்றேன். கதிர்காமஸ், கவனமாய் கேட்டுக்கொள்ளும், நான் மேலே சொன்னதை வாபஸ் பெற்றுக்கொள்கின்ரேன். நீர் என்ரை குடிலில் தூங்கமட்டுமல்ல. உழலாம், பயிரிடலாம், ஏன் பாயசம் வைத்து அறுசுவை உணவு கூட நீர் ஆற அமர அருந்தலாம்...சரியோ :-). அதுசரி இந்த அனோநிமஸ் எந்த அனோநிமஸ் என்று காட்ச் பிடிக்க ஏதாவது stat. counter இருக்கா மக்களே :-)

6/16/2005 03:12:00 PM
SnackDragon said...

இந்த வலையுலகிலே (என்னை) கதிர்காமாஸை நேசிக்கிற ஜீவன் கூட இருக்கா? தோத்திரம்.
ரொம்ப சந்தோசம் :-) அது எந்த அனினாமஸோ - ஆனியன் மாஸோ.. இருந்துவிட்டு போது விடுங்கள்.

6/16/2005 03:21:00 PM
-/பெயரிலி. said...

டிஜே,
statcounter என்பதே தேடத்தானே இருக்கிறது. அஃது ஒன்றினைப் பொருத்திக்கொள்ளவும். மற்றைய எண்ணிகள் திறம்படக் காட்டா. நானும் செர்ரீகாமாஸும் மேலே கெட்டவார்த்தைகளிலே திட்டினதைக்கூட ஆனியன் மாஸ் பொட்டட்டோ காணவில்லையோ? :-(

ஒரு முறையெண்டு விட்டீரெண்டால், அடுத்த முறையும் ஆனியன் மாஸ் பண்ணுவினம். ஒனியனை முளையிலேயே கிள்ளி எறியவேணும்.

6/16/2005 03:35:00 PM
ரவி ஸ்ரீநிவாஸ் said...

நீர் என்ரை குடிலில் தூங்கமட்டுமல்ல. உழலாம், பயிரிடலாம், ஏன் பாயசம் வைத்து அறுசுவை உணவு கூட நீர் ஆற அமர அருந்தலாம்...சரியோ :-)

is smokung permitted :-)

6/16/2005 07:01:00 PM
-/பெயரிலி. said...

/smokung/??
Is it a kind of Chinese Pork Chop?

6/16/2005 08:28:00 PM
இளங்கோ-டிசே said...

//
/smokung/??
Is it a kind of Chinese Pork Chop?
//
I think its kinda of karate:
'Smo Kung Fu' :-)

6/16/2005 10:53:00 PM
சினேகிதி said...

DJ முதல் படத்தில கண்ணாடி போட்டிருக்கிறது தேன்மொழி ரீச்சரா?

6/20/2005 05:20:00 PM
இளங்கோ-டிசே said...

//முதல் படத்தில கண்ணாடி போட்டிருக்கிறது தேன்மொழி ரீச்சரா? //
ஓம். அவர்தான். தேவகாந்தனின் கதாகாலம் புத்தக விழாவிலும் விமர்சனம் செய்தவர்களில் அவரும் ஒருவர்.

6/20/2005 06:19:00 PM
கயல்விழி said...

DJ பல தடவைகள் முயன்றேன் உங்கள் குடிலுக்கு வரமுடியவில்லை காரணம் தெரியவில்லை.? மற்றைய குடில்கள் வேலை செய்தன உங்களது மட்டும் அடம்பிடித்தது காரணம் என்ன. வேறு ஒரு தளத்தில் கருத்து எழுதிவிட்டு அங்கிருந்து வரமுயன்று பாருங்கள் வரமுடியவில்லை. காரணம் என்னவோ? :(

6/25/2005 11:39:00 AM
இளங்கோ-டிசே said...

கயல்விழி,
பிழை எங்கிருக்கின்றதென சரியாகத் தெரியவில்லை. என்னுடைய இணைய அறிவும் அப்படிப்பட்டது :-(. நேரடியாக எனது தளத்தின் முகவரியில் முயற்சிசெய்தும் வேலை செய்யவில்லை என்றால் என்ன காரணம் என்று புரியவில்லை. blogger.comம் அடிக்கடி புதுப்புதுப் பிரச்சினைகள் கிளப்புகின்றது என்று நினைக்கின்றேன்.
மற்றது, எனக்கும் சிலரது பின்னூட்டங்களைப் பிடித்து அவர்களது தளங்களுக்கு போகும்போது இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றது. சிலரது தளங்களில் நான் எழுதிய பின்னூடங்களில் இருந்து தற்போது முயற்சித்துப்பார்த்தபோது வேலை செய்கின்றது. இயலுமாயின் என்னுடைய மின்னஞ்சலில் தொடர்புகொள்ளமுடியுமா?
dj_tamilan25@yahoo.ca
நன்றி.

6/25/2005 11:58:00 AM
கயல்விழி said...

உங்களது முகவரியை தனி உலாவியில் அடிக்க வருகிறது. அதில் பிரச்சனையில்லை. மற்றவர்கள் தளத்தில் உள்ள பின்னூட்டலில் முயல வரவில்லை. காரணம் தெரியாது. :( நன்றி DJ

6/26/2005 04:46:00 PM