கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Monday, February 27, 2006

- ஒவ்வொரு விவாதமும்
அந்தக் கொலையில் மையங்கொள்ளும்
அல்லது
மூச்சுத்திணறவைத்தபடி முற்றுப்பெறும்
அதே கொலையில்
.......
- ஆணாதிக்கத்தைப் போல
என்றும் வெறுப்பேன்
உங்களின் மேலாதிக்கத்தையும்.
...........
- இரும்புக் கவசத்தால்
கோதுமைமா அள்ளித்தந்தவர்
பிறகு
மண்டைகள் உடைத்ததையும்
வீட்டினருகிலிருந்த முகாமிலிருந்து
அலறும் குரல்கள்
நம் இரவுகள் தின்றதையும்
மறந்தும்விடலாம்
செம்மணிப் புதைகுழிபோல
...........
- புதைந்த குழியிலிருந்து
எலும்புக்கூடுகளை எடுத்தால்
வெறுப்புத்தான் எஞ்சும்
மனிதத்தை இழக்காதிரெனும்
உம் அறிவுரைகளையும் கேட்டோம்:
மறந்தோம்
வைத்தியசாலைக் கொலைகளை
அகதிமுகாம் அவலங்களை
தோழிகளின் யோனிச்சிதைவுகளை
...........
- கிளிப்பிள்ளையாய்
ஒரு உயிருக்கு
பல்லாயிரம் கொலைகளைச் சமானஞ்செய்வதில்
ஜன்ஸ்டீனின் e=mc^2மாய்
எஞ்சிய அன்போ
வெறுப்போ அடங்கியிருக்கலாம்
...........
- விந்தைதான்.
தலைவரின் தாயைப் பிணமாக்கியவரை
மறக்கவும் முடியும்
செய்த கொலைகளுக்கு
மன்னிப்புக் கேடகவும் தோன்றும்
'கொலையாளியின்' ஜீனை பிரதமராக்கி
தேசியம்பாடவும் முடிகிறது
...........
- உங்களுக்கு
மனிதத்தில் அக்கறையிருந்தால்
ஆயுதங்களில் நம்பிக்கையில்லையெனில்
தலைவருக்காய்
பலியிடப்பட்ட ஆயிரம் 'வீரர்கள்' குறித்தும் பேசுங்கள்
வல்லரசுக் கனவுகளையும் கைவிடுங்கள்
...........
- ஒடுக்கப்பட்டவர்கள்
என்றும் விளைவது
ஆண்-பெண் உறவின்
பரஸ்பரப் புரிந்துணார்வு
உங்களின் விருப்பு
ஆண்டாள்-அடிமை விசுவாசமெனில்
கட்டுங்கள் நடையை
..........
- *வீழ்வதும் எழுவதும்
எதுவெனினும்
நாம் நாமாகவே
இருக்கப் பிரியப்படுவோம்.

*தோழியொருத்தின் கடித வரிகள்

மூன்று படைப்பாளிகள்

Wednesday, February 22, 2006

-வலைப்பக்க அறிமுகங்கள்-

(1)சனாதனன்


ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும் எழுதி உள்ளனர். சனாதனனின் ஓவியக் கண்காட்சிகள், ஈழம், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று பல இடங்களில் நடைபெற்றுள்ளன.. இவரது சில ஓவியங்களை இந்தக் தளத்திலும், கண்காட்சிப் படங்களை இங்கேயும் பார்க்கலாம்.

(2)சுஜித்(ஜி)


இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். முதலாவது ஆல்பம், Singles, இரண்டாவது ஆல்பமான சிலோன் (Ceylon) இந்த வருடம் நடுப்பகுதில் வர இருக்கிறது. தானே பாடல்கள எழுதி, பாடவும் செய்கின்ற சுஜித்தின் பாடல்கள், ராப் பாடல்களிலும், தமிழ் ரீமிக்ஸ்களிலும் கரைந்துபோகின்ற என்னைப் போன்றவர்களுக்கு பிடிக்காமற்போகாதுதானே. அநேக ராப் பாடல்களில் (கானாப் பாடல்களைப் போல) ஒருவித எள்ளல் தொனி இருக்கும் (specially Eminem's lyrics). அதையும் சுஜித் முயற்சித்துப் பார்த்திருப்பது நன்றாக இருக்கிறது. 'அன்புக் காதலி'யும், 'பயணமும்' மிகவும் பிடித்த பாடல்கள். 'ஒரு சில பெண்களின்...' பாடலில், ஒரு ஆணின் பார்வை வலிந்து தெரிந்தாலும் beatம் பாடல் வரிகளும் இணைந்து போகின்றதால், திரும்பத் திரும்பக் கேட்கமுடிகிறது.

உண்மையில் எத்தனையோ சீரழிவுகள் நிரம்பிக் கிடக்கும் நமது சமூகம் போன்ற ஒன்றில் தீவிரமாய் சில விசயங்களைப் பேசுவதை விட, நக்கலடித்து எழுதுவதுதான் நிரம்பப் பேரை சென்று அடையும் என்ற தனிப்பட்ட எண்ணம் என்னளவில் உண்டு. இந்த ஆல்பத்தில் (Singles) தான் வாழும் இலண்டன் தமிழ்ச் சமூகத்தையும், தன்னையும் நையாண்டி செய்து பாடப்பட்ட பாடல் ('கொஞ்சம் கொஞ்சம் நில்') இரசித்துக் கேட்கக்கூடியது. இரண்டாவது ஆல்பத்தில் சேர்க்கப்படவிருக்கும் Buyakka பாடலை (நட்பின் நிமிர்த்தம்) முழுதாய்க் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தபோது, மிகவும் பிடித்திருந்தது (அதற்கு தனிப்பட்ட ஒரு காரணமும் இருந்தது என்க :-)). இதன் Memo version ஐ இங்கே சென்றும் கேட்டுப் பார்க்கலாம்

இதுவரை ரீமிக்ஸ் செய்து பாடல்களை இசைத்தட்டுக்களாய் வெளியிட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் சுஜீத்தைப் போல அடுத்த கட்டங்களுக்கு நகர முயற்சிப்பது நமது தமிழ் அடையாளங்களை புலம்பெயர்ந்த தேசங்களில் நிலை நிறுத்த ஏதேனும் ஒருவகையில் உதவி புரியலாம் (I beleive it's the time to change these tamil guys from DJs (or MCs) to Rappers. Also If it is expensive to release whole album at the beginning, they may release single CDs like black guys releasing mix tapes. So they can know who are the audience for them and can get sponsors). இவ்வாறு தன்பாட்டில் பாடல்களை எழுதி, பாடவும் செய்கின்ற ஒருவரைக் கண்டபோது, இவர் வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. நினைத்ததைப் போல எழுத்து, விவாதங்கள் என்ற வேறு தளங்களிலும் சுஜீத் ஈடுபாடுடையவர் என்றறிய முடிந்தது. ஆனால் தனது இசை சம்பந்தமான விடயங்கள், பிற விடயங்களோடு கலந்து வாசிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்னொரு புனைபெயரில் அவற்றில் இருக்கின்றார். எப்படி எனினும் அவர் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பது நல்ல விடயந்தானே. நாமும் வாழ்த்துவோம்.

(3)திருமாவளவன்


புலம்பெயர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒரு கவிஞர். அவருடனான அரசியற்புள்ளிகள், இலக்கியவாதிகள் பற்றிய பார்வை என்று பல புள்ளிகளில் எனக்கு முரண்பாடான கருத்துக்கள் இருந்தாலும் என்னை மிகவும் வசீகரிப்பது நறுக்குத் தெறித்தாற்போல வந்து விழும் அவரது கவிதை நடை. பனி வயல் உழவு, அஃதே இரவு அஃதே பகல் என்று இரண்டு கவிதைத் தொகுதிகளையும் மிகக் குறுகிய கால இடைவெளிகளில் வெளியிட்டவர். அவரது கவிதைகள் மட்டுமின்றி கதைகளையும், பிற முயற்சிகளையும் இந்தத் தளத்தில் காணலாம்.

மலர்களும், 'மலர்களும்'

Tuesday, February 14, 2006

காதலர் தினம் என்றவுடன் எத்தனையோ நினைவுகள் ஞாபக அலைகளில் புரள்கின்றன. காதலர் தினம் என்பது 'காதலிப்பவர்க்கு' மட்டுமல்ல அன்பைப் பகிர விரும்பும் எந்த உறவுகளுக்கும் உரியது என்று விரிவான தளத்தில்தான் எடுத்துக்கொள்கின்றேன்.

இப்படித்தான் பலவருடங்களுக்கு முன், படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்ணில் ஈர்ப்பு வந்து, கனக்க ரோசாப்பூக்கள் வாங்கி வைத்தபடி அவருக்குக் கொடுக்கக் காத்திருந்தேன். வாங்கி வைத்திருந்த ரோசாப்பூக்கள் அவரது வயதைவிட கூடுதலாக - ஒன்றரை டசினுக்கு- மேலாய் இருந்தது. சரி பிள்ளை ரோசாப்பூக்களில் மயங்கி என்னையும் உச்சிமுகர்ந்து போகப்போகின்றது என்று கனவில் அமிழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளையோ அதை வாங்கி அருகிலிருந்த குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டு காற்றாய் நகர்ந்துவிட்டது. காதல் முகிழவில்லை என்ற வருத்தத்தைவிட எவ்வளவு காசு செலவழித்து வாங்கிய பூக்கள் வீணாய்ப்போய்விட்டதே என்ற கவலைதான் அதிகம் என்னில் எஞ்சியது. அதுவும் அந்தக்காலத்தில் ஒரு டொலருக்கே அம்மாவிடமும் அண்ணாக்களிடமும் சிங்கியடித்துக்கொண்டிருந்த காலம். ரோசாப்பூவைக் கொடுக்கமுன்னர் நான் ரோசாப்பூக்களின், விலைப்பட்டியலை முன்னுக்கே நீட்டியிருந்தால் ஆகக்குறைந்தது ரோசாப்பூவை குப்பைத் தொட்டிக்குள் எறியாது -recycle செய்வதுமாதிரி வேறொருவருக்கு கொடு என்று- அந்தப் பெண் கூறிவிட்டாவது சென்றிருப்பார் என்று பிறகு யோசித்துமிருக்கின்றேன்.

இந்தச் சம்பவத்தில் எங்கே தவறு நடந்தது என்று நண்பர்களுடன் அலசி ஆராய்ந்தபோது, 'டேய் காதல் என்றால், டசின் கணக்கில் பூக்கள் கொடுப்பதில்லை, ஒன்றே ஒன்று என்று ஒரு சிவப்பு ரோஜாவை மட்டும் கொடுக்கவேண்டும்' என்றார்கள் (அதாவது என்னிடம் இருக்கும் ஒரேயொரு இதயம் உனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சிம்பாலிக்காய் காட்டவேண்டுமாம்). ஆனால் நான் நினைத்தது என்னவோ, ஒரு ரோஜாவைக் கொடுத்தால் இவ்வளவு கஞ்சத்தனமாய்த்தான் பிறகு அன்பையும் காட்டுவான் என்று அவர் நினைக்கககூடும். ஆகவே ஒன்றரை டசினில் ரோசாப்பூக்களை வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு விசாலமான அன்பு தன்னில் இருக்கிறது என்று நினைத்து உடனேயே என் நேசததை பிள்ளை ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்திருந்தேன். நாம் நினைப்பவை எல்லாம் நடந்துவிடுகின்றதா என்ன? ரோசாப்பூக்களைக் கொடுத்தவுடனேயே, குப்பைத் தொட்டிக்குள் bastket ballஜ வளையத்தில் எறிகின்றமாதிரி துல்லியமாய்ப் போட்டவருக்கு, எப்படி நான் கண்டுபிடித்த காதற்தத்துவங்களையோ, அதற்கான பொழிப்புரைகளையோ, பொறுமையாகக் கேட்க நேரம் கிடைத்திருக்கும்?

பிறகு, ஒருமுறை நண்பன் ஒருவன் தனது காதலியின் தாயாரை முதன்முதலாய்ச் சந்திக்கப்போகின்றேன், 'என்னடா அவருக்குக் கொடுக்கலாம்?' என்றபோது 'பூக்களை வாங்கிக்கொடு' என்றேன். 'நான் அவாவைக் காதலிக்கிறனா அல்லது அவாவின்ரை மகளைக் காதலிக்கின்றேனா என்று நீ நினைக்கின்றாய்?' எனப் 'புத்திசாலித்தனமாய்' அவன் திரும்பிக்கேட்டான். இப்படி விதாண்டவாதம் கதைப்பவனோடு என்னத்தை மேற்கொண்டு கதைப்பதாம்? 'நீ பூவை வாங்கிக்கொடுத்தால் என்ன, இல்லை விளக்குமாற்றை வாங்கிக்கொடுத்து உன்ரை மாமியின்ரை கையால் அடிவாங்கினால் என்ன, இனிமேல் என்னிடம் மட்டும் அட்வைஸ் கேட்காதே' என்று கோபத்தில் கூறிவிட்டு அமைதியாகிவிட்டேன்.

Mothers day, பிறந்ததினங்கள் என்றால், நான் அதிகம் பூக்களை வாங்கித்தான் பரிசளிப்பேன். பூக்களில் எப்போதும் ஒருவித அலாதிப் பிரியம் உண்டென்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்ற விடயங்களைப் போலத் தேடி தேடி கடைகளில் அலையாமல் இலகுவாய் தேர்ந்தெடுக்கக்கூடிய பரிசு இது என்பது மற்றொரு காரணமும் ஆகும். இப்படித்தான் எனக்குப் பிரியமானவர்களுக்கு பூக்களைப் பரிசளிப்பதற்காய் ஒரு பூக்கடைக்கு அடிக்கடி போய் அந்தக் கடையில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் ஒருவித ஈர்ப்பு வந்தது. பிறகு பிரியமானவர்களுக்குப் பரிசளிக்க பூ வாங்கப் போகின்றேனா அல்லது அந்தப் பெண்ணைத் தரிசிப்பதற்காய் அடிக்கடி பூவாங்கி பிறருக்கு பரிசளிக்கின்றேனா என்ற சந்தேகம் எனக்குள் நெடுகாலத்துக்கு இருந்தது.

பலவருடங்களாய் மறந்து இருந்த இந்தப்பழக்கம், சென்றவருடம் இயல் விருது பத்மநாப ஐயருக்கு வழங்கியபோது மீண்டும் விழித்துக்கொண்டது. விழாவன்று, மேசை நிறைய ரோசாப்பூகளை அழகுபடுத்துவதற்காய் வைத்திருந்தார்கள். ஒரு எழுத்தாளரின் மனைவி, இருந்த ரோசாப்பூக்கள் அனைத்தையும் வீட்டுக்கு கொண்டுபோகவேண்டும் என்ற அவசரத்தில் சுருட்டிக்கொண்டிருந்தார். வளர்ந்த மகன் யாராவது என்னைப்போல வீட்டில் சோம்பறியாயிருந்து, யாராவது பெண்ணுக்கு ரோசாப்பூ கொடு என்று மகனுக்கு அன்புக்கட்டளையிடுவதற்காய் பூக்களை அவர் சேகரித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.

நானும் இடையில் புகுந்து ஒரு ரோசாப்பூவைக் கடினப்பட்டுக் கைப்பற்றினேன். பிறகு அது பத்திரமாய் களவு போய்விடாமல் இருக்க புத்தகத்தின் பக்கங்களின் இடையில் அதை வைத்துக்கொண்டிருந்தபோது, கண்டவர்கள் எல்லாம், 'என்ன யாரோ உமக்கு ரோஸ் தந்திச்சினமோ?' என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ரோசாப்பூவை யாராவது தந்திருந்தால், இந்த நேரம் பச்சைக் கிளியோடு வானத்தில் அல்லவா பறந்துகொண்டிருப்பேன். இப்படி அலுப்பூட்டும் after ceremony இலக்கியக்கூட்டங்களில் ஏன் நான் நிற்கப்போகின்றேன் என்று பிறருக்கு விளங்காது, ரோசாப்பூவுக்கும் மட்டும் கேட்கக்கூடியதாய்க் கூறிக்கொண்டிருந்தேன்.

உயர்கல்லூரியில் காதலர் தினமன்று நல்லதொரு ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ரோசாப்பூ -செருப்படி விழாது safetyயாய்- கொடுக்கவேண்டும் என்றால், ஒரு இடத்தில் போய், ரோசாப்பூ கொடுக்கப்படவேண்டியவரின் வகுப்பையும் பெயரையும் பதிவு செய்துவிட்டால், உங்கள் பெயரோடு அல்லது விருப்பம் இல்லையெனில் anonymousயாய், அந்த நபருக்கு ரோசாபூவைக் கொண்டுபோய் வகுப்பு நேரத்தில் கொடுப்பார்கள். என்னைப் போன்றவர்களின் வேலை அந்தச்சமயங்களில் என்னவென்றால், எந்தப் பெண்ணுக்கு அதிகம் ரோசாப்பூகள் கிடைக்கிறதென்று எண்ணிக்கொள்வது. பின்னே, அதிகம் ரோசாப்பூ கிடைப்பவரைத்தானே அதிகம் பேர் நேசிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம். அத்தோடு, அந்த லிஸ்டில் எங்களின் பெயரையும் அடுத்த முறை இணைத்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையும் எங்களில் அனேகம் பேருக்கு இருந்து என்பதுவும் உண்மைதான். சரி, சரி உனக்கு எத்தனை ரோசாப்பூக்கள் கிடைத்தன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையைச் சொன்னால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்?

உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரேயொருவருக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்திருக்கலாம், தவறவிட்டுவிட்டேன் என்று இப்போதும் கவலைப்படுவதுண்டு. அவர் என்னோடு படித்த பெண் அல்ல, அவர் எங்களுக்கு programming language கற்பித்த ஒரு பெண் ஆசிரியர். பெண் ஆசிரியர் என்றவுடன், நீங்கள் ஆசிரியர்-மாணவர் crush என்று நினைத்துவிடாதீர்கள். இது அதற்கு எதிர்மாறானது. அன்புக்குப் பதிலாக வெறுப்பைக் காட்டுவது. நல்ல ஆசிரியர்தான். எனக்கும் programmingல் ஆரம்பத்தில் நல்ல ஆர்வம் இருந்தது. பிறகு கணணிமொழியை விட பெண்களின் மனமொழியில் அதிக ஆர்வம் வரத்தொடங்க, பாடத்தில் கவனம் சிதறத்தொடங்கியது. வகுப்புக்களுக்கு அடிக்கடி கட் பண்ணினால் வீட்டுவேலை(homework) போன்றவற்றிற்கு 'group work'தான் செய்யவேண்டும். Group work என்றால் அப்படி இப்படித்தானே இருக்கும். ஆனால் மனுசியோ அவன், இவனைப் பார்த்து கொப்பியடித்திருக்கின்றான். நீ அவனைப் பார்த்து கொப்பி அடித்திருக்கின்றாய் என்று எங்களை வைத்து வெருட்டத்தொடங்கிவிடும். அத்தோடு அவரும் மிக இளையவராய் இருந்ததால் அவருக்கும் இந்த 'group work'ன் அடியும் நுனியும் நன்கு தெரியும். பிறகு மனுசி சிலவேளைகள் தனித்துச் செய்தாலும், group work செய்யப்பட்டிருக்கின்றதா என்று கண்ணுக்குள்ளை விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு தேடிப்பார்க்கும். அந்தக் கோபத்திலேயே அவரின் வகுப்புக்களையும், அந்தப்பாடத்துக்கான இறுதிப் பரீட்சையையும் தவறவிட்டு boycott செய்திருக்கின்றேன். (அதன் இழப்பு வளாகத்தில் ப்ரோகிராமிங் பாடங்கள் எடுக்கும்போது புரிந்தது, வேறு விடயம்).

இந்த மனுசிக்கு காதலர் தினத்தில் unknown nameல் அல்லது ex-lover என்றோ, இல்லை ஏலியன் என்ற பெயரிலோ, ஒரு ரோசாப்பூ அனுப்பி அவர் முகம் கொஞ்சம் வெளிறுவதைக் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றேன். பின்னே, அவா எத்தனை முறை என்னைப்போன்றவர்களின் முகத்தை வெளிறச் செய்தவர்? இதை விட வேறு எது சிறந்த குருதட்சிணையாக என்னைப்போன்றவர்கள் அவருக்கு வழங்கிவிடமுடியும்?

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகும் உயிர்ப்பும் நிறைந்தது. அனைவரும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் மற்றும் உங்கள் மீது பிரியம் வைத்திருப்பவர்களுக்கு உங்கள் நேசத்தை இந்தப்பொழுதில் தெரியப்படுத்துங்கள். ப்ளுவாய் (blue) இன்றைய பொழுது துயரமாயும், அலுப்பாயும் கழிகின்றவர்களுக்கு, உங்களுக்கான இனிய பொழுது நாளை விடியக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள், உயிர்ப்புடன் இருங்கள்.

விரைவில் திருமணஞ்செய்து வாழ்வின் 'இன்பக் கடலில்' மூழ்கிச் சாகாவரம் காண வேண்டும் என்று துடிதுடித்துக்கொண்டிருக்கும் தோழர்களும், தோழிகளுக்கும், 'அச்சச்சோ புன்னகை ஆள்கொல்லும் புன்னகை' என்று இன்றையபொழுதில் உங்களைப் பார்த்து யாரோ ஒரு இளைஞனோ, யுவதியோ புன்னகைக்க வாழ்த்துகின்றேன்.

வளாக நாட்கள்

Thursday, February 02, 2006

இங்கே ring ceremony என்று ஒரு கொண்டாட்டம் பொறியியல் படித்து முடிப்பவர்களுக்கு வளாகங்களில் நடக்கும். கனடாவுக்கு மட்டுமே உரித்தான, தனித்துவமான விழா அது. அந்த நிகழ்வில், தவறுதலாய்க் கட்டி நொறுங்கிய ஒரு பாலத்தின் இரும்பிலிருந்து, மோதிரம் செய்து தருவார்கள். நீங்கள் அதை உங்களது சின்னவிரலில் அணிந்துகொள்ளலாம். இந்த நிகழ்வுக்காய் ரூட்யாட் கிப்ளிங்தான் (Rudyard Kipling) ஒரு பாடல் எழுதிக்கொடுத்திருக்கின்றார். விழா ஒரு மூடிய நிகழ்வாய், பொறியியல் படிக்கும் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு நிகழும். நான்காம் வருடம் வரமுன்னர், மற்றப் பொறியியல் மாணவர்களுக்கும் விழாவைப் பார்க்க அனுமதி இருப்பதில்லை.

இந்த நிகழ்வு எங்களுக்கு நடந்தபோது சரியான உற்சாகத்தோடு போனேன். பின்னே, இப்படி ஒளிப்பு மறைப்பாய் இருந்தால், அங்கே கனக்க சுவாரசியமான விடயங்கள் இருக்கும் என்றுதானே எவரும் நினைப்பார்கள். ஆனால் அங்கே போனால் அலுப்பூட்டும் பேச்சுக்களும், ஒரு நீண்ட சங்கிலியை எல்லோரின் கையாலும் பிடிக்கச் சொல்லிவிட்டு, ஒரு உறுதிமொழியையும் எடுக்கவைத்திருந்தனர் (நீங்கள் படித்ததை எந்தப்பொழுதிலும் சமூகத்துக்குத் தவறாய்ப் பிரயோகிக்கக்கூடாது என்ற எச்சரிக்கைதான் அந்த உறுதிமொழியில் அதிகம் தெரிந்தது). அந்த விழாவில் ஒருவர் பேசும்போது, தான் ஜப்பானில் வேலை செய்துகொண்டிருந்தபோது, நண்பர்கள் எவரும் இல்லையென்று சலித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு பெண் தனது சின்னவிரலில் இருந்த மோதிரத்தைக் கண்டுவிட்டு, are you from Canada என்று கேட்டு தன்பொழுதுகளைப் பிறகு 'இனிமையாக்கினார்' என்று கூறியதைவிட வேறெதுவும் நான் அங்கு சுவாரசியமாய்க் கேட்கவில்லை.

ஒரு திருமணவிழாவும், அங்கே மோதிரம் மாற்றும் நிகழ்வும்தான் அலுப்பான விடயம் என்று அதுவரை நினைத்திருந்தேன். ஆனால் அதையும் விட இந்த் ring ceremony மிகவும் அலுப்பூட்டுவதாய் இருந்தது. இந்த மோதிரத்தைப் பெற்றபின், சென்றவருடம் கோப்பிக்கடையில் சில நண்பர்களைச் சந்தித்தபோது சுவாரசியமான தகவல்கள் சில கிடைத்தன. யார் யாரெல்லாம் மோதிரம் போட்டுக்கொண்டு திரிகிறார்கள் என்று பார்த்தபோது, ஒரு நண்பன் தான் போடுவதில்லை என்றான். ஏன் என்று கேட்டபோது, ரெஸ்ரோரண்டில் பாத்திரங்களை உரஞ்சிக்கழுவ இந்த இழவு பிடித்த மோதிரம் இடைஞ்சலாயிருக்கிறது என்றான். இன்னொருவன் தான் படிப்பதற்காய் பெற்ற லோனைக் கட்டும்வரை இதைப் போட்டுக்கொண்டு திரியப்போகின்றேன் என்றான் (மோதிரத்தை பார்த்து பார்த்து, கட்டிமுடிக்கவேண்டிய லோனை அடிக்கடி நினைவுபடுத்துவானாம்). எங்கேயாவது வேறுநாடுகளுக்குப் போனால் அணிந்துகொண்டு திரியலாம் என்று நினைக்கின்றேன் என்றேன் நான். ஏன் என்று கேட்டபோது, இல்லை இங்கைதானே எல்லோருக்கும் எங்களின் வண்டவாளம் தெரியும். வேறு நாட்டில் என்றால், சிலவேளை அந்த ஜப்பான் ஆசாமிக்கு நிகழ்ந்தது போல, யாராவது ஒரு பெண் ஓடிவந்து are you from Canada? என்றும் I love enginerds என்றும் கூறி என்பொழுதை வனப்பாக்க கூடுமல்லவா? என்றேன்.

ஆனாலும் என்ன, இப்படி இந்த விழா அலுப்பாய் இருக்கும் என்று தெரிந்தோ என்னவோ தெரியாது, எங்கடை தமிழ்ப்பெடியள் புதுவிழா ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார்கள். Ring ceremonyக்குப் பிறகு எங்களின் party இரவில் நடக்கும். ரிங் அணியும் அந்த வருடத்து மாணவர்கள், காசு போட்டு, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு விருந்து கொடுப்பது சம்பியதாயமாக எங்கள் வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் நிகழும். Ring party என்று நாகரிகமாய் நாங்கள் அழைத்தாலும், அது உண்மையில் drink partyதான். பணம், ராப் பாடல்களில் பறக்கும் தாள்களாய்ப் பறக்க பறக்க,பாரில் குடிவகைகள் ஆறாய்ப் பெருக்கெடுக்கும். வழமையாய் இந்தப் பார்ட்டிகள், எங்கள் வளாக pubற்குள்தான் நடைபெறும். நாங்கள் செய்த வருடம், எங்களால் pubற்குள் இடம் எடுக்கமுடியாமற்போய்விடவே, வெளியே வேறொரு pubல் செய்வதாய்த் தீர்மானித்திருந்தோம். இந்த ரிங் பார்ட்டிக்கு, இதுவரை பங்குபெற்றாத பெண்களும் தாங்களும் இந்தமுறை வரப்போகின்றோம் என்றார்கள். ஆகா, iron ring ceremonyயோடு, ஒரு wedding ring ceremonyயும் எனக்கு வைக்கலாம் என்று வழமைபோலக் கனவுகாண நானும் தொடங்கிவிட்டிருந்தேன். அத்தோடு ஒரு தோழியிடம், இந்தமுறை குடி குடியென்று குடித்து போதையில் மூழ்கி எனது வீரத்தைக் காட்டுகின்றேன் பார் என்று சபதமும் செய்திருந்தேன்.

விருந்து அழகாய்த்தான் ஆரம்பித்தது. sex on the beachஜ எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தால், அங்காலை பெண்கள் தங்களுக்குள் ஆட்டம் போடத்தொடங்கியிருந்தார்கள். ஆகா எல்லாம் நான் நினைத்த ஒழுங்கில் நிகழ்கின்றது என்று புளங்காகிதம் அடைந்து இரண்டு மூன்று ஸிப் இழுத்திருப்பேன், நண்பர்கள் சிலர் வந்து 'நீதானே குடிப்பதில்லை (sex on the beach எல்லாம் குடி என்ற வகைக்குள் அவர்கள் அடக்குவதில்லை), இரவு உணவுக்காய் கொத்து ரொட்டி மற்றும் கறிகள் ஒரு வீட்டில் செய்யச் சொல்லியிருக்கின்றோம் எடுத்துக்கொண்டு வா'வென்றார்கள். நாசாமாய்ப்போறவங்களே வாழ்க்கையில் செட்டில் ஆவோம் என்று நினைத்தால், என்னை chef ஆக்கத் திட்டம்போடுகின்றீர்களே என்று திட்டிக்கொண்டுபோனாலும், ஒரு சின்ன சந்தோசம் மனதில் இருந்தது. எனென்றால், நாங்கள் கொத்து ரொட்டி செய்யச்சொன்ன வீட்டில் மற்றொரு யூனிவர்சிட்டியில் படிக்கிற ஒரு பெண் இருக்கின்றார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை இழக்கச் செய்து இன்னொரு அரிய தருணத்தை உருவாக்கித் தருகின்றார் என்று மனதில் நினைத்துக்கொண்டு அவர்களின் வீட்டுக்குப் போனேன். அவர்களின் விட்டுக் கதவைத் தட்டியவுடனேயே, 'உவங்கள் அங்கே குடிக்கவும் கூத்தடிக்கவும் செய்ய, நாங்கள் இங்கை கிட்சினிற்குள் அவிந்துகொண்டிருக்கின்றோம்' என்று எல்லோரையும் பார்த்து பொதுவாய்த் திட்டவேண்டியதை, என்னையும் அவரது தாயாரையும் மாறி மாறிப் பார்த்து அந்தப்பெண் திட்டத்தொடங்கினார். நிரம்பக் குடித்து மயங்கிக்கிடக்கவேண்டும் என்ற சபதத்தைத்தான் நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தத்தோடு இங்கு வந்தால், நீங்களும் இப்படிக் கூறுதல் நியாயந்தானா என்று கேட்க விரும்பினாலும், அந்தப்பெண்ணின் கையில் சுடச்சுட ஆவி பறந்துகொண்டிருந்த கொத்து ரொட்டி என் முகத்தைப் பதம் பார்த்துவிடுமோ என்ற பயத்தில் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கொத்து ரொட்டியையும், அந்தப்பிள்ளையின் திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு ஸ்நோவிற்குள்ளால் போனால், அங்கே எல்லோரும் குடித்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்கள். அதுவும் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று வளாகத்தில் பதுங்கி பதுங்கித் திரிந்தவன்கள் எல்லாம், குடித்த கிளாசுகளை உடை உடையென்று கீழே போட்டு உடைத்துக்கொண்டு நல்ல மப்பில் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்க்க, என் வயிற்றில் எரிந்த நெருப்பு வெளியே உறைந்துகிடந்த ஸ்நோவைக் கூட உருகச்செய்துவிடும் போல இருந்தது.

வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது நான் அதிகம் சேர்ந்து திரிந்த நண்பர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு பத்து வயது வித்தியாசம் இருக்கும். அதில் ஒருவர் எனது அண்ணாவுடன் யாழில் ரீயூசனில் படித்திருந்தார். இங்கே உள்ள கல்விமுறையில் எனக்குப் பிடித்த இரண்டு விடயங்கள், ராக்கிங் இல்லாததும், எவரும் எந்த வயதிலும் படிக்கலாம் என்பதுவும். அனேகமான தமிழ் பெடியங்கள், படித்துக்கொண்டிருக்கும்போது இடையில் தங்கள் துணையை, குடும்பத்தை கனடாவுக்கு அழைக்கவேண்டிய சந்தர்ப்பம் வரும்போது படிப்பை இடையில் நிறுத்தி, வேலை செய்துவிட்டு, பிறகு சில வருடங்களுக்குப் பிறகு படிப்பைத் தொடர்வார்கள். எனக்கு என்னைவிட வயது மூத்த நண்பர்கள் இருந்ததால் எப்போதும் செல்லப்பிள்ளையாக அவர்களுடன் இருப்பேன். போற வாற வழியில் கேர்ள்ஸை கண்டு மனஞ்சிலிர்த்தால் மட்டும், 'உன்ரை கொப்பருக்கு ரெலிபோன் அடித்து ஹலோ சொல்லட்டோ?' என்று மட்டும் 'அன்பாய்' அதட்டுவார்கள். அப்படி இருந்தாலும் பலசமயங்களில், 'அண்ணை எனக்கு இந்தப்பாடத்திலை கொஞ்சம் டவுட், அவாவிடம் கேட்டு கிளியர் பண்ணிவிட்டு வருகின்றேன்' என்று நைசாக நழுவியும் இருக்கின்றேன் ('கிளி'யர் பாடத்துக்கா அல்லது வேறெதுக்கா என்பது யாருக்குத் தெரியும்? ). அனேகமாய் பெண்களோடு கதைக்கின்ற இடமென்றால், uni food courtயாய் இருக்கும். Tim Hortonsனில் லைனில் நிற்கும் பெண்களைப் பார்த்துவிட்டு 'என்ன coffee வாங்கவா நிற்கின்றீர்கள்?' என்றுதான் கதையை என்னைப் போன்றவர்கள் ஆரம்பிப்போம். கலியாண வீட்டுக்குள் இருந்துகொண்டு, என்ன கலியாண வீட்டுக்கோ வந்திருக்கின்றியள் என்று கேட்பது போலத்தான் Tim Hortonsனில் நின்றுகொண்டு கோப்பி வாங்கவா நிற்கிறியள் என்பது. என்றாலும் பெண்களும் எங்களின் 'புத்திசாலித்தனம்' பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கும் தெரியும் எங்களில் அனேகம் பேர், தங்களை இரசிப்பதற்கு மட்டும் அல்ல, ஓசியாய் தங்கடை காசில் கோப்பி குடிக்கவும்தான் வழிந்துகொண்டு நிற்கின்றாங்கள் என்று.

வளாகத்தில் Science Faculty உள்ள கட்டடத்தை நாங்கள் அந்தப்புரம் என்றுதான் அழைப்பதுண்டு. எனென்றால் அங்கேதான் விஞ்ஞானபீட, வரத்தகபீட மாணவிகள் எல்லாம் குழுமியிருப்பார்கள். அதுவும் மதியவேளைகளில் அங்கே போனால், யாராவது ஒரு தோழிகொண்டுவரும் சாப்பாடாவது கிடைக்காமற் போகாது. இதுக்காகவே, லெக்சர்களுக்குப் போகமறந்தாலும் மதியவேளைகளில் அந்தப்புரத்துக்குப் போவதை மட்டும் என்னைப் போன்றவர்கள் மறந்ததில்லை. உள்ளங்கையில் மட்டும் நிரம்பக் கூடியதாய் 'நிரம்ப' உணவு கொண்டுவரும் பெண்களின் உணவில் எங்களைப் போன்றவ்ர்கள் கைவைத்தால் அவர்களுக்கு இறுதியில் எது எஞ்சும் என்று உங்களுக்கு படம் வரைந்து விளக்கத்தேவையில்லை. வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும், எதிர்காலத்தில் இவங்களை மாதிரி ஆக்கள் மட்டும் புருஷனாய் வந்து தொலைக்கக்கூடாது என்று மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அதேபோல, என்னைப்போன்றவர்கள் நன்கு உறைப்புப்போட்டுச் சமைக்கும் உணவுகளைச் சாப்பிடமாட்டோம் என்று புரிந்துகொண்டு, நல்ல காரமாய் உணவைச் சமைத்துக்கொண்டுவந்துவிட்டு, 'வாருமன் சாப்பிட..' என்று நக்கல் சிரிப்புச் சிரிக்கும் 'அருமையான' தோழிகள் சிலரும் இருந்தார்கள் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

வளாகத்தில் படிக்கும்போது எனக்கு மிகக் கஷ்டமாய் இருந்த ஒரு விடயம். பல sources லிருந்து ஒரு masterpiecesஜ உருவாக்குவதான். நீங்கள் sources, masterpieces என்றவுடன் பயந்துவிடாதீர்கள். பழைய (past years) assignments, labs போன்றவற்றிலிருந்து profs லிருந்து பிடிபடாமல் எப்படி நல்ல மார்க்ஸ் வாங்க எங்களின் பிரதியை (masterpiece) எழுதுவது என்பதுதான் இதன் அர்த்தம். அதிக profs, அலுப்பில் syllabusஜ பல வருடங்களுக்கு மாற்றமாட்டார்கள். ஆரம்ப வருடத்தில் நாங்கள்தான் இப்படி 'group work' செய்கின்றோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் 'அறிவு' வளர வளரத்தான், எலலா மாணவர்களும் இன, மொழி, இன்னபிற வித்தியாசம் இல்லாமல் இதில் கலக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவந்தது. அதுவும் சில மாணவர்கள், பரிசோதனைகள் (labs) செய்யும்போது, sorucesஜ bagsகளிலும், binderகளிலும் இருந்து எடுத்து பயமில்லாது அந்தமாதிரி வெளுத்துக்கட்டுவார்கள். soruceற்கு ஒருசமயம், masterpieceற்கு ஒருசமயம் என்று ஏன் இரட்டிப்பு வேலை செய்வான் என்று பரிசோதனைக்கூடத்திலேயே இரண்டையும் ஒன்றாய் செய்து கொடுத்து நிம்மதியாய் வீடு போய்ச்சேரும் இந்த 'intellectuals'ஜப் பார்த்து பெருமூச்சைத்தான் என்னைப்போன்றவர்கள் விடுவார்கள்.

இப்படி, soruce - masterpiece விவகாரம், நான்காம் வருடத்தில் வளாகம் முழுதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் வருடத்தில், ஆங்கிலப்பாடம் ஒன்று கட்டாயம் எடுக்கவேண்டும். அதற்கு இரண்டு கட்டுரைகளும் இறுதிப்பரீட்சையும் மட்டுமே இருந்தன. பூச்சியத்தையும் ஒன்றையும் வைத்து மண்டையைக் குழப்புவனுக்கு எல்லாம் இருபத்தாறு எழுத்துக்களைத் தந்து கட்டுரைகள் எழுது என்றால் எனன செய்வது? வழமைபோல அனேகருக்கு google கடவுள் அவதாரம் தந்தார். அவர் காட்சிதான் தந்தார். ஆனால் வரத்தை நாங்கள்தானே கேட்கவேண்டும். ஆனால் எங்களின் வகுப்பில் பலருக்கு தாங்கள் கடவுளாய் ஆகவேண்டும் என்ற ஆசை வந்து, கூகிளிலிருந்து கட்டுரைகளை அப்படியே இறக்கி எதையும் மாற்றாது சமர்ப்பித்தனர். அதுதான் பிறகு பிரச்சினையாகப் போய்விட்டது. நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் plagiarism என்று பிடிபட்டு பெரிய விவகாரமாகி பிபிஸி வரை எங்களின் 'புகழ்' பரவியது. நானும் கொஞ்சம் கூகிளிலும், மிச்சம் என்னுடைய சொந்த சரக்கிலும் கட்டுரையை (The Influence of Gender Issues on Deciding Potential Careers) எழுதி, புத்திசாலித்தனமாய் ஒரு தோழியிடம் அனுப்பி மெய்ப்பு பார் என்று அனுப்பியிருந்தேன். அவளுக்குத் தெரியாதா என்ன, எனது ஆங்கில அறிவின் உச்சம். எனவே ஆறுதலாக மெய்ப்பு பார்த்து கூகிள் வார்த்தைகளை எல்லாம் அழகாக மாற்றிவிட்டிருந்தாள். நல்ல மார்க்ஸும் கிடைத்தது. பிறகு இரண்டாவது கட்டுரை எழுத வந்தபோது, ஏன் கடவுளை -கூகிளை- கஷ்டப்படுத்துவான் என்று, சில outlinesஐ மட்டும் கட்டுரைக்கு எடுத்துக்கொடுத்து அவளிடம் கட்டுரையை நீயே எழுதித்தாவென்று இருந்துவிட்டேன். அவளும் தானெழுதும் கட்டுரைகளை விட கஷ்டப்பட்டு உழைத்து நல்லதொரு கட்டுரையைத் தயார்படுத்தி எனக்குத் தந்திருந்தாள். வழமைபோல் என்னுடைய நல்லபழக்கத்தால் அது சரியில்லை இது சரியில்லை என்று நொட்டைகளைத்தான் அவளுக்கு நன்றியாகத் திருப்பிக் கொடுத்திருந்தேன். அப்படி ஏதாவது 'நல்ல வார்த்தைகள்' எதுவும் கூறாவிட்டால், எனக்கு அன்று நித்திரையே வராது என்று அவளுக்கும் நன்கு தெரியும் என்பதால் இப்படியான சமயங்களில் அவள் ஒன்றும் திருப்பிக்கூறுவதில்லை.

வளாக வாழ்வில் நடந்த சுவாரசியமான பல சம்பவங்களில் ஒன்று, இந்த இணைய அரட்டை. பெடியங்கள் நள்ளிரவிலிருந்து விடிய விடிய இணையத்தில் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். மற்றப்பக்கம் கதைக்கின்ற கேர்ள் கனடா, அமெரிக்கா என்றால் கொஞ்சமாவது பரவாயில்லை. தூக்கம் வருகின்றது என்று கூறி குறிப்பிட்ட நேரத்தில் போய்விடுவார்கள். உள்ளூரில் மட்டுமில்லாது சர்வதேசம் எங்கும் தோழிகளை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நேரப் பிரச்சினையால், இரவுத் தூக்கம் எல்லாம் இல்லாமற் போய்விடும். சிலபேர் சீரியஸாய் லல் பண்ணத் தொடங்கினால் நிலைமை பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அது கூடப் பரவாயில்லை, சிலர் என்ன செய்வாங்கள் என்டால், நண்பர்களின் பெயரை தங்களின் மெஸஞ்சரில் சேர்த்துவிட்டு, பெண்களின் பெயரில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். இதுகள் அப்பாவிகள் மாதிரி உருகி உருகி கதைத்து, சிலதுகள் காதலிக்கின்ற நிலைமை வரை போயிருக்கிறதுகள். பிறகு நிலைமை சீரியாசாகப் போகின்றது என்று புரிந்து உண்மையைச் சொன்னால் எல்லாக் கனவுகளும் பொடிப்பொடியாகப் போய் முழுசிக்கொண்டு நிற்பதைப் பார்க்க பரிதாபமாய் இருக்கும்.

இணையம், இணைய அரட்டை குறித்து பல எதிர்மறையான விடயங்கள் இருந்தாலும், எனக்குத் தெரிந்த பல தோழர்கள், தோழிகள் தங்கள் காதல்களை, துணைகளை இணையத்தின் மூலம் கண்டுபிடித்திருக்கின்றார்கள். வெளியேபோய் ஒரு ஆணோடு கதைப்பது (dating போன்றவை இன்னும் முழுமையாய் அங்கீகரிக்கப்படாத எங்கள் சமூகத்தில்) இந்த அரட்டைகள் மூலம் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள முடிவது நல்லதொரு விடயந்தானே. அண்மையில் ஒருவரின் வீட்டுக்குச் சென்றசமயத்தில் ஒரு பதின்மவயதுப் பையன் இணையஅரட்டை செய்வதைப் பார்த்தபோது, அவர்கள் பயன்படுத்தும் பல சொற்களின் (slangs) அர்த்தம் புரியாது முழித்துக்கொண்டிருந்தேன். என்னைப்போன்றவர்களுக்கான காலம்-இணைய அரட்டை- முடிந்துவிட்டதே என்ற கவலையில் ஒப்பாரி வைக்கவேண்டும் போலத்தோன்றியது. இப்போது webcam போன்றவையும் வந்துவிட்டதால் எவரும் எவரைம் இலகுவில் எமாற்றவும் முடியாது.

அந்தப் பையனோடு நின்றபோது, இரவு பத்து மணி இருக்கும்... சட சடவென்று இவன் வெளிக்கிட்டான், தலைக்கு ஜெல் வைத்து, sun glass, leather jacket எல்லாம் போட்டு அமர்களப்படுத்தினான். 'என்னடா எங்கையாவது வெளியில் (இரவிலையும் sun glass போடுகின்றவன் அறிவாளியாகத் தானிருக்கவேண்டும்) என்று வினாவ, 'இல்லை, என்ரை மச்சாள் ஜேர்மனியில் இருந்து சாட்டுக்கு வாற நேரம் அதான்' என்றான்....அதுக்குத்தான் இந்த ஆரவாரம், அமர்க்களம். 'cologne யும் மறந்துவிடாது ஸ்பிரே பண்ணடா, பிறகு மச்சாள் அங்கையிருந்துகொண்டு bad smell வருகிறது எண்டு சொல்லப்போறா கவனமடா' என்றேன் நான். அதைவிடச் சிரிப்பு, இவருக்கு பதினைந்து வயது, இவரது மச்சாளுக்கு இவரை விட ஜந்தோ அல்லது ஆறோ வயது அதிகம். இப்படி எல்லாம் இங்கே நான் 'அன்பாய்' எழுதுவது, நான் ஏதோ அவனுடைய மச்சாளின்ரை ஈமெயில் முகவரியைத் தாவென்று கேட்டபோது, அவன் தராது மறுத்த கடுப்பில்தான் என்று பிழையாக நீங்கள் விளங்கிக்கொள்ளக்கூடாது பாருங்கோ.

இன்று மெல்லப்பின்னோக்கி வளாக வாழ்வைப் பார்த்தால் அந்த வாழ்வில் அனுபவித்திருக்கவேண்டிய அரிய பல தருணங்களைத் தவறவிட்டாலும், கழித்து வந்த வருடங்கள் மிகவும் இதமாயிருக்கிறது. எத்தனையோ பிரச்சினைகள், பிணக்குகள், வேதனைகள் என்று அலைந்திருந்தாலும், இன்று நினைவில் நிற்பது நல்ல நினைவுகளே. அதுதான் வாழ்வின் அதியற்புதம் போலும்.

(இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் Shakiraவுக்கு)