கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கனவுகளை உடைத்து கரைபுரளும் வாழ்வு

Monday, December 25, 2006

'உனது கனவுகளுக்குள் சிக்கி சிதைந்து போகாதே. உனது மொழியை முற்றாய் இழந்துவிட்ட நிலையில் இனி உனக்கான எழுத்து என்பது சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் எல்லா படைப்பாளியும் தான் எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் தன்னை ஒரு நல்ல வாசகனாக ஆக்கிக் கொள்வதற்கான அவசியம் நேர்கிறது. கனவுகளை மீறிய வாழ்க்கை வெளியில் இருக்கிறது.'
(ரமேஷ்:பிரேமின் 'பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை')

உறவுகள் குறித்து எவ்வளவு நெருக்கமாயும் வியப்பாயும் பேசமுடியுமோ அதேயளவுக்கு சிக்கல்களும் வலிகளும் குழைந்தும் அவை குறித்து பேச முடியும். ஏதாவது ஒரு பூர்வீக நிலப்பரப்பின் பின்னணியில் பிறக்கின்ற மனிதனுக்கு அவன் விரும்பியோ விரும்பாலோ உறவுகள் என்று பெயரிடப்பட்டு பல இழைகள் பிறந்தவுடனேயே பிணைக்கப்பட்டு விடுகின்றன. அடையாள மறுத்தலைப் போல பிறப்பால் வருகின்ற உறவுகளை வெட்டிச் சிதைத்துக்கொண்டு போகமுடியுமெனினும், புதிதாய் மலரும் உறவுகளுக்கு அவனவன்களும், அவளவள்களும் மட்டுமே பொறுப்பாக முடிகின்றது. அவற்றை வளர்ப்பதும் சிதைப்பதும் அவரவர்களுக்கான உள்ளங்கைகளுக்குள் ஒரு பூவைப்போல பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தினுள் புதைந்துகிடக்கின்றது.

இவ்வாறான ஒரு மார்கழிப்பொழுதில் குளிர் உதைத்து தன்னை வின்ரர் வெளியில் துரத்தப்போகின்றதா, இல்லை ஊர் ஞாபகம் வந்து தன்னைச் சிதைக்கப்போகின்றதா என்று யோசித்தபடி தாரகைகள் இல்லா அடர்கருவானத்தை அவன் பார்த்தபடியிருக்கின்றான். நல்ல நண்பர்கள் என்றைய பொழுதும் தன்னை விட்டு நீங்காதிருப்பார்கள் என்ற நம்பிக்கை இவன் வசத்து நிறையவே உண்டு. நண்பர்கள் என்று கூறிக்கொண்டு பிறகு ஏதோ ஒரு புள்ளியில் முகஞ்சுழித்துப் போகின்றவர்களும் இவனுக்கு வாய்க்காமலில்லை. அவர்களில் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி தொடர்ந்து காயங்களை உண்டாக்கியபடி தம் இருப்பை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள். நீங்கள் என்னை நோக்கி முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நான் இன்னும் இரண்டு அடிகள் பின்னோக்கி வைப்பேன் என்றபடி அவர்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தியப்படுத்துவதுதான் இதிலிருந்து தப்பிப்பதற்கு எளிய வழியென்று நினைப்பவன் இவன். மேலும் இவனுக்கு முரண்பாடாய்/அசூசையாய் தெரியும் அவர்களின் புள்ளிகள் அவர்களுக்கான அளவில் நேர்மையாக/ஓர்மமாக இருக்கலாம் என்ற புரிதலும் உண்டு. தம்மோடு ஒத்த புள்ளிகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதற்காய் அவர்களில் கோளாறு என்று முடிவுசெய்தலும் தவறு. உனதும் எனது புள்ளிகள் என்றேனும் ஒருநாள் மீண்டும் சந்திக்கையில் கைகுலுக்கி அறிமுகங்கள் செய்துகொள்வோம் என்று கூறி கைகுலுக்கி விடைபெறும் நேர்மையான சந்தர்ப்பங்கள் இவனுக்கு இன்னும் வாய்க்கவில்லை என்பதும் சோகமான விடயமே. அவ்வாறு மனம் மலர்ந்து பிரியாவிடை கொடுத்திருப்பின் எவரையும்/எதனையும் நினைத்து காலகாலங்களில் சோகித்திருக்கத் தேவையும் இருக்காதில்லையா?

ஒரு நாள் அவள் அவனின் எழுத்தின் தடங்களைப் பின்பற்றியபடி வந்து சேர்ந்தாள். எப்போதும் தனது எழுத்துக்களினூடாக தன்னை வந்தடையும் பாதைகளை சாமர்த்தியமாய் கலைத்தபடி இருப்பவனுக்கு அவள் அவனது இருப்பிடத்தை வந்தடைந்தது வியப்பாயிருந்தது. அறிமுகபடுத்திக்கொண்டாள். வந்தவளுக்கு தேநீரும் இனிய சொற்களும் கொடுத்து வரவேற்கவேண்டும் என்ற சம்பிரதாயத்தையே மறந்து போயிருந்தான் (அல்லது அப்படிக் காட்டிக்கொண்டான்). என்ன வேண்டும் என்ற ஒரு அதிகார மையத்தின் முதற்கேள்வியைப் போல அவன் அவளைப்பார்த்து முறைத்துக்கொண்டான். என்னைச் சமதையாக வைத்து உரையாட முடியுமெனில் உரையாடு இல்லையெனில் திரும்பிப் போகின்றேன் என்றாள் அவள். இப்போது அண்மையாக எழுதிய என் எழுத்துக்களினூடாக வந்த நீ, திரும்பிப் போவதற்குள் நீ வந்த பாதையைக் கலைத்துபோட்டு இன்னொரு எழுத்தை எழுதினால் எப்படித் திரும்பிப்போவாய் என்று அவளை வளைத்துவிட்ட பெருமிதத்தோடு கேட்கின்றான் இவன் (அந்தச் சமயத்தில் சுருள் சுருளாய் இவன் புகைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்). திரும்பி வந்த இடத்தைப் போய்ச்சேருவது மிக இலகுவானது ஏனெனில் உனது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முடிவடையும் புள்ளி ஒரு பெண்ணிடம் அன்பை எதிர்பார்த்து உள்ளுக்குள் மறுகிக்கொண்டிருப்பது.... எனவே நீ புதிதாய் எழுதும் ஒரு படைப்பினூடாகவும் நான் எனது வழியை எளிதாய் கண்டுபிடித்துத் திரும்பிப்போயிவிடுவேன் என்கிறாள் அவள்.

இப்படித்தான்.... சிக்கலான ஒரு தேற்றத்தை பரீட்சைநேரம் முடிவதற்குள் நிறுவிவிட முடியாத பதட்டத்துடன்தான் அவன் ஒவ்வொருமுறையும் அவளுடனான உரையாடல்களில் தோற்றுக்கொண்டேயிருந்தான். தனது வாழ்க்கையை தனது தனிமையாலும், விரும்பிக்கற்றுக்கொண்ட கணித எண்களாலுமே தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தவன் அவன். எல்லோரைப்போல மையநீரோட்டத்தில் வாழ விரும்பம் எனினும் தனது கடந்தகாலப் பயங்களும் எதிர்கால அச்சங்களுமே தன்னை இப்படியான எண்களால் கட்டியமைக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுக்க வைத்தது என்று பொழுதுபோகாத நேரமொன்றில் பொழிந்துகொண்டிருந்த ஸ்நோவில் நனைந்தபடி கூறிக்கொண்டிருந்தான். வார்த்தைகள் முடிந்த மறுமுனையில் அவள் நின்று கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். அவன் அவளது பெயரை தன்னையறியாது பனியில் கிறுக்கிக்கொண்டிருந்தபோது தானும் அவனது பெயரை மணலில் எழுதிக்கொண்டிருந்தேன் என்றபடி சிரிததபடி வருகின்றாள் அவள் மீண்டும்.

அவள் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தாள். தனக்கான பயங்களை, தனது தாய்நிலம் சூறையிடப்படும் அவல நிலையை, எதிர்கால இலட்சியங்கள் பற்றி இன்னவும் பிறவுமாய். அவள் நேசித்த ரஷ்ய படைப்பிலக்கியங்களையும், பயணம் செய்யும் விரும்பும் ஆபிரிக்கா வனாந்தரங்களையும் அறிய அறிய, அவன் இப்போதைக்கு உடையாது எனத்திடமாய் நம்பிய அவனது பாதுகாப்பு அரண்கள் உருகத் தொடங்கின. என்றாலும் இவன் சளைத்தானில்லை, வார்த்தைகளை கொண்டு விமர்சனக்கத்திகள் ஆயிரமாயிரம் செய்து போரிடும் சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்பதால் அவளை வலிக்கச் செய்யக்கூடிய இடங்கள் பார்த்து விமர்சனக்கணைகளை எண்ணற்று எய்யத் தொடங்கினான். அவள் பரிவுடன் வருபவளுக்கு கருணை பொங்கும் அன்னை மேரி; போரென்று வந்துவிட்டால் கண்ணீரைப் புதைதோண்டிப் புதைத்துவிட்டு விழிகள் சிவக்கும் உக்கிரமான காளி என்பது அவனுக்கு முன்னரே தெரியாமற்போய்விட்டது. (மணிமேகலையைத்தான் காளியாய் பிற்காலத்தில் 'இந்து'சமயம் ஆக்கிவிட்டது என்ற ஒரு ஆய்வுக்குறிப்பையும் கூடவே சேர்த்துக்கொள்ளவேண்டும்). இவ்விடத்தில் பிறழ்வாய் இருக்கக்கூடுமெனினும், அவள் ஆடிய உக்கிரமான ஆட்டந்தான் இவனின் அனைத்துக் கர்வங்களையும் துடைத்தெறிந்து அவளிடம் நேசம் வைக்கச் செய்தது என்பதுவும் உணமையுமாகும்.

எதையும் எதிர்ப்பார்க்காத அன்பு எப்படிப்பட்டது என்பதை அவளிடமிருந்து அவன் அறிந்துகொண்டான். தனக்கென்று எதையுமே அவனிடம் கேட்டு வாங்கிக்கொள்ள தொடர்ந்து மறுத்துக் கொண்டேயிருப்பவள்; எப்போதாவது அன்பளிப்பாய் கொடுக்கும் நாலைந்து புத்தகங்களைத் தவிர பெறுமதியான எதையும் அவள் இற்றைவரையும் ஏற்றுக்கொண்டதுமில்லை. தனக்காய் சிறிது நேரத்தையும் நேசத்தையும் தந்துவிட்டு நீ எதையும் எவற்றையும் செய்துகொள்ளலாம் என்ற மிகப்பெரும் சுதந்திரவெளியை வழங்கிக்கொண்டிருப்பவள். இவை அனைத்தையும் விட தன்னைப் புத்தகங்கள் மட்டுமே நேசிக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, அவன் மீது தனக்கு பிரியமுள்ளதென்று அவளே தயக்கமேதுமின்றி வந்து முதலில் நேசத்தை வெளிப்படுத்தியதுதான் இவனுக்கு வியப்பாயிருந்தது. அவள் தன்னை நேசிக்கின்றாள் என்பது புரியவே இவனுக்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதற்கு இவன் நிறைய தமிழ் சினிமாக்கள் பார்த்திருந்தததைத் தவிர வேறு எதுவும் காரணங்களாகிவிடாது.

நேசம் அரும்பிய ஆரம்பப்பொழுதில் திருமணம், இன்னபிற அடையாளங்களுடன் வாழுதல் தன்னால் சாத்தியமில்லை என்று முற்றுப்புள்ளியில்லாது வாக்கியங்கள் நீளநீளமாய் அமைத்தபோது, - கூறி முடித்துவிட்டாயா என்று பொறுமையுடன் காத்திருந்துவிட்டு-இப்படித்தான் எல்லா முற்போக்காளர்களும் கூறிக்கொண்டிருப்பார்கள், பிறகு அவர்களின் அனைத்து வண்டவாளங்களும் தெரியும் என்றாள். இதற்குப் பிறகும் இவை குறித்து அவனால் வாய் திறந்து பேசமுடியுமா என்ன? இதைவிட தனது அடையாளங்களை தொடர்ந்து மறுதலித்துக்கொண்டே வருபவள் என்றபடியால், கலாச்சாரம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் திலகமிடுதலிருந்து நகைகள் அணிவது வரை புறக்கணித்துக்கொண்டே இருப்பவள் அவள். பட்டுப்புடவை சரசரக்க கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் மினுங்க ஒரு 'தமிழ்'ப்பெண்ணை எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பவனின் கனவை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கின்றேனோ என்ற கவலை அவளுக்கு உண்டு போலும். எனினும், 'ஏனெனில் நானொரு அரசிளங்குமரி/எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை/இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ/அதை மட்டுமே நான் அணிவேன்' என்று இண்டியா அரி பாடுவதுபோல வாழவும் விரும்பும் பெண்கள் இருக்கின்றார்கள் என்ற எளிய புரிதல் இவனுக்கும் உண்டு. நீ இன்று வெறுத்தொதுக்கும் ஆபரணங்களை, நாளை நீ அணிய விரும்புகின்றாய் என்றாலும் அதனூடாக நான் உன்னை அணுகப்போவதில்லை. அதற்கும் உனக்கான் என் பிரியங்களுக்கும் எந்தச் சமன்பாடுகளும் காலத்தின் எந்தப்புள்ளியிலும் வரப்போவதில்லை என்று மட்டுமே விளம்பமுடிகிறது இவனால்.

பின்னான காலங்களில் இவன் பலவற்றை அறிந்துகொண்டான். எழுத்துக்களினூடாகவும் வாசிப்பினூடாகவும் ஒருவரை இன்னொருவர் அறிந்துகொள்வது என்பது சுவாரசியமானது. எழுதுபவர்களின் வாசிப்பவர்களின் வாழ்க்கை அப்படி வியந்து சொல்லக்கூடியதாக அல்ல என்று கடந்தகால வரலாறுகள் வெள்ளிடைமலையென காட்டிக்கொண்டிருந்தாலும் அப்படியிருப்பது இருவருக்கும் பிடித்துக்கொண்டது. கணணித் திரையில் ஒரு அஞ்சலை அனுப்பிவிட்டு அது பெறுநரைப் போய்ச்சேரும் நேரத்தைவிட, உறவு ஒன்று சிதைந்துபோவதற்கான கால அவகாசம் குறைவானதே என்ற அச்சமிருந்தாலும்.... அவள் மீதான இந்தக்கணத்து நேசம் என்பது உண்மையானதும் எதிர்ப்பார்ப்புக்களின் அப்பாற்ப்பட்டதும் கூட.

'நேற்று இல்லாத மாற்றம் என்னது/ காற்று என் காதில் ஏதோ சொன்னது?' என்று அவள் அவனையறிந்த ஒருவருடத்திற்கும் பின்பான பொழுதொன்றில் பாடுகின்றாள். அதுவரை பாடவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தவள் அன்றைய பொழுதில் இன்னும் பல பாடல்களைக் காற்றில் கரைக்கின்றாள். இராகத்துக்கும் தாளத்திற்கும் பல்லவிக்கும் சரணத்திற்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் முறையிலா உறவிருக்கிறது என்று மூளையைப்போட்டு குழப்பிக்கொண்டிருக்கின்றவனுக்கும் அவள் பாடுவது பிடித்துத்தான் போகின்றது. இதைவிட தனக்கு மிக நெருக்கமாயிருப்பவள் தன்னைவிட தீவிர வாசிப்பும், ஆளுமைமிக்க எழுத்துத்திறனும் கொண்டிருப்பதும் அவனுக்கு மகிழ்வைத் தருகின்றது. தனக்குப் பிடித்த கவிதையொன்றை எழுதும்போது தான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று தீர்க்கமான நம்பிக்கை அவனுக்கு உண்டு. அந்தக் கடைசி கவிதையில் அவள் இருப்பதுதான் அவள் தந்துகொண்டிருக்கும் அற்புதமான தருணங்களுக்கு அவன் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

0 comments: