கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தவறவிடப்பட்ட தருணங்களும் விழுங்கப்பட்ட வார்த்தைகளும்

Friday, March 16, 2007

-ஈரானியத் திரைப்படம் Baranஐ முன்வைத்து-

அகதிகளின் வாழ்வை எவராலும் முழுமையாகப் பதிவு செய்துவிடமுடியாது. இருண்ட குகைக்குள் ஒரு மின்மினியின் ஒளியாவது வந்துவிடாது என்றவாறுதான் பல அகதிகள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களுடன் வாழுகின்ற அகதிகளுக்கு வாழ்வில் சின்னச்சின்னதாய் தம்மை நெகிழ்த்திவிட்டுப்போகும் அழகிய தருணங்கள எத்தகை அருமையானது என்பதை -பிறரைவிட- அவர்களே அதிகம் அறிவர். தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லுதல் சிலருக்கு சில மாதங்களில், சிலருக்கு சில வருடங்களில், சிலருக்கு வாழ்நாட்களில் அப்படியொரு சந்தர்ப்பம் வராமலே போய்விடுவதுமுண்டு. Baran என்கின்ற இப்படம் அகதி வாழ்வில் முளைக்கும் மென்மையான காதலை இயல்பாய்க் காட்சிப்படுத்தியபடி விரிகின்றது.

ஈரானில் ஒரு அடுக்குமாடியைக் கட்டும் பின்புலத்தோடு படம் ஆரம்பிக்கின்றது. அங்கே ஈரானியர்களும் -அரசால் வேலை செய்ய உரிமை மறுக்கப்பட்ட- ஆப்கான் அகதிகளும் வேலை செய்கின்றார்கள். கட்டட வேலை செய்வதற்காய் பதின்மவயது லரீஃவ் (Lateef) அந்த இடத்திற்கு வருகின்றார். அங்கே லரீஃப் பிறரைப்போல சீமெந்துப்பைகளைக் காவுவதையோ, சுவர்களைக் கட்டியெழுப்புவதிலோ ஈடுபடுவதில்லை. அவருக்கான வேலை, அந்த வேலைத்தளத்தில் வேலை செய்பவர்களுக்கு தேநீரும், உணவும் தயாரித்து வழங்குவது. அதன் காரணமாக பிறரால் கேலி செய்யப்பட்டும், அவ்வப்போது சிலரோடு சண்டையும் பிடித்தபடியும் இருக்கின்றார், லரீஃவ்.

ஒருநாள் தவறுதலாய் ஒரு ஆப்கானிய அகதித்தொழிலாளர் மாடியிலிருந்து கீழே வீழ்ந்துவிடுகின்றார். அவரது கால் பலமாய்க் காயப்பட்டு வேலை செய்ய முடியாதுபோக அவரது மகனொருவன் (Rahmat) வேலைக்காய் வருகின்றார். கட்டட மேற்பார்வையாளர், அந்தப் பையன் மிகவும் சிறுவனாயிருக்கின்றான்; இவனால் கடுமையான் வேலைகளைச் செய்ய முடியாது என்று முதலில் நிராகரிக்கின்றார். இறுதியில் இந்தப்பையனுக்கும் வேலை இல்லாது போனால் அந்தக்குடும்பத்தால் சாப்பிடக்கூட முடியாது என்றபடியால் வேலைக்குச் சேர்த்துக்கொள்கின்றார். எனினும் அந்தப்பையன் வாய்திறந்து பேச முடியாத ஊமையாக இருக்கின்றான். ரமட் கடுமையான வேலைகளைச் செய்யக் கஷ்டப்படுவதால், லரீஃவின் வேலை ரமட்க்கு வழங்கப்படுகின்றது. மேலும், ரமட் தயாரிக்கும் தேநீரும், மதியவுணவும் சுவையாக இருக்கின்றது என்று பிறர் கூறுவது லரீஃவிற்கு பொறாமையைத் தருவதோடு, தனது இலகுவான வேலையை புதிதாய் வந்த ரமட் எடுத்துவிட்டார் என்று ரமட் மீது கோபமும் வருகின்றது. எனவே லரீஃவ் தொடர்ந்து ரமட்டை நக்கலடித்தபடியும் காயப்படுத்தியபடியும் வேலைத்தளத்தில் இருக்கின்றார்.

b4

தற்செயலாய் ஒருநாள் ரம்ட் ஆணல்ல -ஆண்வேசம் போட்ட பெண் என்பதை- லரீப்ஃ கண்டுபிடிக்கின்றார். அதன்பிறகு, அதுவரை ரமட் மீது இருந்த வெறுப்பும் பொறாமையும் போய்விட லரீஃப்ற்கு அந்தப்பெண் -rahmat- மீது ஈர்ப்பும் பரிவும் வந்துவிடுகின்றது. சில வாரங்களின் பின், ஆப்கான் அகதிகள் சட்டதிற்கு புறம்பாய் வேலை செய்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு அரச அதிகாரிகள் வேலைத்தளத்திற்கு வர லரீஃவ், ரமட்டை அவர்களிடமிருந்து காப்பாற்றுகின்றார். எனினும் தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆப்கான் அகதிகள் வேலை செய்யமுடியாத நெருக்கடிநிலை வருகின்றது.

ரமட் வேலைக்கு வருவதை முற்றாக நிறுத்தியதால், லரீஃவ்வை பிரிவும் வெறுமையும் சுழற்றியடிக்கின்றது. ரமட்டை தேடி லரீஃவ் ஆப்கான் அகதிகள் வாழ்கின்ற ஈரானிய நிலப்பரப்பை நோக்கிச் செல்கின்றார். வேலை எதுவுமின்றி ரமட்டும், காயப்பட்ட அவரது தகப்பனாரும் மிகவும் கஷடப்படுகின்றார்கள் என்பது புரிகின்றது. லரீஃவ் திரும்பவும் தனது வேலைத்தளத்திற்கு மீண்டு, தனது மேற்பார்வையாளரிடம்- ஊரில் தனது சகோதரி கடும்பிணியில் இருக்கின்றார்- ஒருவருடதிற்கான தனது சம்பளத்தை இப்பவே தாருங்கள் என இறைஞ்சுகிறார். மேற்பார்வையாளரும் பரிதாபப்பட்டு பணத்தைக் கொடுக்க, அதை ரம்ட் குடும்பத்தினரிடம் கொடுத்துவும்படி அவர்களின் நண்பரொருவரிடம் லரீஃவ் கொடுத்தனுப்புகின்றார். அந்த நபரோ --ரமட்டின் தகப்பனிடம் பணத்தைக் கொடுக்காது- அந்தப் பணத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு ஓடிவிடுகின்றார்.

இப்படியாக லரீஃவ், ரமட்டுக்கு உதவி செய்யப்போகின்ற ஒவ்வொருமுறையும் ஏதோவொரு தடங்கல் வந்துகொண்டேயிருக்கின்றது. இறுதியில் வேலை செய்வதற்கு அவசியமான த்னது அடையாள அட்டையை விற்று லரீஃவ் பணத்தைத் திரட்டுகின்றார் (அந்தப்பகுதியில் அகதிகள் நிறைய இருப்பதால் அடையாள அட்டை மிகவும் பெறுமதி வாய்ந்தது; புகைப்படத்தை கிழித்துவிட்டு வேறொருவரின் படத்தை அதில் இலகுவாய் ஒட்டி விற்கலாம்) . அந்தப்பணத்தை லரீப்ஃ நேரடியாக ரமட் குடும்பத்திடம் கொடுக்கும்போது அவர்கள் கூறும் ஒரு செய்தி இடியாக லரீஃவ் வின் நெஞ்சினில் இறங்குகின்றது. தன்னைவிட்டு ரமட் விரைவில் விலகப்போகின்றார் என்ற துயரம் லரீஃவ்வின் விழிகளில் கசிகிறது. கடைசிக்காட்ச்யில், ரமட் சிறுகுட்டையில் தனது பாதச் சுவட்டை பதித்துவிட்டுப் போவதை லரீஃவ் வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றார். ரமட், லரீஃவ்வை விட்டு விலகிச்செல்ல செல்ல, பெய்கின்ற மழை ரமட்டின் பாத அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாய் மறைப்பதுடன் படம் முடிகின்றது.

இப்படம் எளிய காட்சிகளாலும் சொல்லாடல்களாலும் நகர்த்தப்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வருகின்ற கதாமாந்தர்கள் வளவளவென்று நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருப்பதில்லை. பருவங்களோடு காட்சிகள் சடுதி சடுதியாய் மாறுவதைக் கமரா கலைநயத்தோடு படம்பிடிக்கின்ற அதேசமயம், கதை நிகழும் நிலப்பரப்பிலிருந்து கமராக் கோணம் நகர்ந்தும் விடுவதில்லை. இப்படம் ஒரு அகதிப்பெண் மீது, இன்னொரு நாட்டு ஆண் காதல் கொளவதை மென்மையாகச் சொன்னாலும், வருகின்ற ஆண்-பெண் பாத்திரங்கள் வாய் திறந்து எந்த உரையாடலையும் நேரடியாக நிகழ்த்தவில்லை. அவர்களுக்கிடையில் முகிழும் இவ்வழகிய உறவு சிறுசிறு காட்சிகளால் மட்டுமே நுட்பமாய் கவனப்படுத்தப்பட்டிருக்கும்.

(2)

இப்படத்தைப் பார்க்கும்போது காலம் எனக்குள் பின்னோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொள்ளத் தொடங்கியது. என்னுடைய பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் மட்டக்களப்பிலிருந்து ஒரு பெண் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் இருந்த சூழ்நிலை அவரையும் அவரது குடும்பத்தையும், வடக்கு நோக்கி துரத்தி அடித்திருந்தது. அதுவரை நாங்கள் -மூன்று பெடியங்கள்- வகுப்பில் முதல் மூன்று இடங்களில் மாறி மாறி வந்துகொண்டிருப்போம். ஆனால் புதிதாய் வந்திருந்த பெண்ணின் அறிவுக்கூர்மை எங்கள் எவரேனும் ஒருவரின் இடத்தை இல்லாமற்செய்துவிடும் என்ற பதட்டத்தை உருவாக்கியிருந்தது. என்னென்ன நேரங்களில் எப்படி எல்லாம் அவர் படிகின்றார் என்பதை எல்லாம் கவனமாய் நாங்கள் உளவு பார்க்கத் தொடங்கியிருந்தோம். எனினும் அவர் ஒவ்வொருமுறையும் பாடங்களில் கூடிய புள்ளிகள் எடுக்கும்போது ஒருவித பொறாமை கலந்த மகிழ்வுடன் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

b3

பிறகு போர்ச்சூழ்நிலைகளால் பல மாதங்களாய் பாடசாலை நடைபெறாமல் இருந்தவேளை அவரது வீட்டிற்கு சென்று ஆங்கிலமும் கணிதமும் படிப்பது நாளாந்த கடமையாயிற்று. அவரது தந்தையார் ஒரு கணித ஆசிரியர். நான் விடிகாலை எழும்பி முகங்கழுவி -நல்ல மூட் இருந்தால் குளித்துவிட்டு- அவர்களின் வீட்டை போனேனென்றால் மதியவுணவு வரை எங்களுக்கு கணித வகுப்பு நடக்கும் (வெவ்வேறு வயதுகளிலிருந்த பத்துப்பேர்கள் வரை அங்கே படித்துக்கொண்டிருந்தோம்). மதியவுணவின் பின் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறும். இன்னொரு ஊரில் அவர்களின் வீடு இருந்தபடியால், மதியவுணவுக்காய் வீட்டை வந்தபின் பிறகு பின்னேர வகுப்புக்காய் சைக்கிளை உழக்குவேன். சிலவேளைகளில் அந்தப்பெண்ணின் வீட்டிலையே சாப்பிட்டுவிட்டு நண்பர்களோடு விளையாடுவதும் உண்டு. ஆங்கிலச் சொற்களின் ஸ்பெல்லிங்கை கிளிப்பிள்ளை போல மனப்பாடம் செய்துவந்த பருவத்தில் -அப்படியல்ல- சொற்களை ஒலியாய் உச்சரிப்பதன் மூலம் இலகுவாய் ஸ்பெல்லிங்கூட்டி எழுதலாம் என்ற விளங்கப்படுத்திவிட்டவரும் அவர்தான். எனினும் நாங்கள் ஓம்/இல்லை என்பதற்கப்பால் பெரிதாக எதையும் உரையாடியதில்லை. வகுப்பில் எனது இடத்தை அவர் அபகரித்துவிடுவார் என்ற அச்சமும் பொறாமையும் என்னை அவரிடம் அதிகம் நெருங்க அனுமதிக்கவில்லை போலத்தான் தோன்றுகின்றது. ஆயினும் -இருவரும்- நமக்கிடையிலுள்ள ஈர்ப்பையும் பரிவையும் வேறு விதங்களில் வெளிப்படுத்தியபடி இருந்திருக்கின்றோம். பிறகு எங்கள் ஊர்ப்பக்கம் நிலைமை மிகவும் மோசமாகத் தொடங்கியது. ஒருநாள் ஒழுங்கையொன்றில் சந்தித்த அந்தப்பெண்ணின் தம்பி, தாங்கள் இன்னும் சில நாட்களில் இந்தியாவிற்குப் படகில் போகப்போகின்றோம் என்று கூறினார். அப்போதுதான் முதன்முறையாக அந்தப்பெண்ணோடு -ஓமோம்/இல்லை என்பதற்கப்பால்- சற்று விரிவாக மனந்திறந்து ஒருமுறையேனும் பேசவேண்டும் என்ற ஆசை எனக்குள் அரும்பத்தொடங்கியது.

எனது பொறாமைகள், பதட்டங்களுக்கு அப்பால் அவரை நோக்கி காதல்(?) மெல்லியதாய் வளர்ந்துகொண்டிருந்தது என்பது அந்தச்செய்தியினூடு எனது உள்மனதிற்குள் விளங்கத்தொடங்கியது. அவருடன் பேசுகின்றபோது ஏதேனும் ஒரு வார்த்தையிலேனும் எனது நேசத்தைத் தெரிவித்துவிடவேண்டும் என்ற விருப்பு நுரையாய் ததும்பிக் கொண்டிருந்தது. எனினும் போர் அதற்கெல்லாம் அவகாசம் தராமல் எங்களிருவரையும் வெவ்வேறு திசைகளில் மிக வேகமாய்.... மிக மோசமாய்... அடித்துத் துரத்தியது. தவறவிடப்பட்ட தருணங்களும், விழுங்கப்பட்ட வார்த்தைகளும் காலம்பூரா தொண்டைக்குழிக்குள் சிக்கிய மீன்முள்ளாய் மெல்லிய வலியைத் தந்துகொண்டிருக்கின்றது.

(3)
மஜீத் மஜீதியின், இப்படம் (Baran) அவரின் Children of heaven, Colour of Paradise போன்ற படங்களுக்குப் பிறகு 2001ல் வெளிவந்திருந்த படம். தணிக்கையும், ஒடுக்குமுறைகளும்(?) இருக்கும் ஈரானிலிருந்து இப்படியான படங்கள் வருகின்றன் என்பதோடு ஈரானில் குறிப்பிடத்தக்க பெண் நெறியாள்கையாளரும் இருகின்றார்கள் என்பதை மேற்கத்தேய சிந்தனைகள் ஈரான் பற்றி கட்டியெழுப்பும் விம்பங்கள குறித்து நிறைய யோசிக்கவேண்டி இருக்கின்றது. ஈரானின் பல்வேறு பகுதிகளில் அடிப்படைவாதத்தை மீறிய இஸ்லாம் இருப்பதைப்போன்று கூட, அமெரிக்கா பின்புலத்தில் இருக்கும் சவுதி அரேபியாவின் பலபகுதிகளில் இல்லையென்பது கவனிக்கத்தக்கது.

மஜீதியின் பிறபடங்களைப் பார்த்தவர்கள் இந்தப்படத்திலும் அவற்றின் தொடர்ச்சியைக் காணமுடியும். தேநீர் பரிமாறுகின்ற நேர்த்தி, நகர- புறநகர் பாகுபாடுகள் தொடர்ச்சியாக மஜீத்தின் படங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. Children of Heaven படத்தின் இறுதியில் வரும் சிறு மீன் குட்டையும், சிவப்பு மீன்களும் இந்தப்படத்திலும் வருகின்றது. மீன் குட்டையையும், மீன்களையும் ஒரு படிமமாய் நாங்கள் பார்க்கமுடியும். நாமெல்லோரும் பல நேரங்களில் தொட்டிக்குள் அகப்பட்ட மீன்கள்தான். நாம் விரும்பினாலும் நம்மால் அதன் கரைகளை உடைத்து நினைத்த விடயங்களைச் சாதிக்கமுடியாமல் பல சந்தர்ப்பங்களில் யதார்த்ததில் இருக்கின்றோம் அல்லவா? இப்படத்தில் வரும் லரீப்ஃ, ரமட்டும் கூட, நமக்கு தொட்டிக்குள் அகப்பட்ட மீன் குஞ்சுகளாய்த்தான் தெரிகின்றார்கள்.

b2

Baran படம், காதல் அரும்புவதை மென்மையாகச் சொல்வதைப் போன்றிருந்தாலும் அடிநாதமாய் இருப்பது அக்திகளில் துயரவாழ்வுதான். அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களும் சக மனிதர்களாய் மதிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கபபட ஒவ்வொரு நாடும் உதவ வேண்டும் என்ற அவாவே இப்படத்தில் முக்கிய இழையாக இருக்கின்றது. 9/11 தாக்குதல் அமெரிக்காவில் நடப்பதற்கு முன்னரே, ஈரானில் 1.5 மில்லியன் ஆப்கான் அகதிகள் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படக்கூடியது. தலிபான காலத்து ஆப்கானிஸ்தானை சித்தரிக்கும் ஒசாமா (Osama) படத்தைப் பார்க்கும் ஒருவர், அப்படத்தில் Baran படத்தின் பாதிப்புக்கள் சில இடத்தில் இருப்பதை தெளிவாகக் காணமுடியும்.

பலவேறு மொழிகளைப் பேசுபவர்களாய், வெவ்வேறுபட்ட நிலப்பரப்புகளிலிருந்து வருகின்றவர்களாய் இருப்பினும் அகதிகளின் சோகங்களும் வெறுமைகளும் ஆளுக்காள் அவ்வளவு வேறுபடுவதில்லை. எல்லா அகதிகளும் தம் சொந்த நாட்டிற்கு/ ஊரிற்கு திரும்புவதைப் பற்றியே நிறையக் கனவுகளைக் கண்டுகொண்டிருக்கின்றார்கள். பலருக்கு அவை வெறும் கானல் கனவுகளாய்ப் போய்க்கொண்டுமிருக்கின்றன. பலர் தங்கள் நாட்டில்/ஊரில் அழகான ஆறுகளும், உயர்ந்த மலைகளும், அற்புதமான வாழ்வும் ஒருகாலத்தில் இருந்ததென -தேவதைக்கதைகள் போல- தமது சந்ததிகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். போர்ச்சூழலில், எல்லாமே எங்களைக் கைவிட்டபொழுதிலும் உயிர்வாழ்வதற்கு நல்ல தண்ணீரைத் தருவதை மட்டும் எங்கள் ஊர்க்கிணறுகள் ஒருபோதும் நிறுத்தியதேயில்லை என்று அகதியாக்கப்பட்ட நானும் பிள்ளைகளுக்குச் சொல்லவென சில கதைகளை மனதினுள் தேக்கிவைத்திருந்தேன். ஆனால் இப்போது தண்ணீருக்குப் பதிலாய் மனித உடல்கள் எங்களூர்க்கிணறுகளிலிருந்து மிதந்துகொண்டிருக்கின்றன என்பதை அறிந்தபின்னும் எப்படி கிணறுகள் பற்றிக் கதைகள் சொல்லமுடியும்?

(அண்மையில் கொலைசெய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்ட யாழ் வளாக மாணவி, மயூராவிற்கு....)

நினைவெழுதும் ஒரு காலத்தின் உறைநிலை

Monday, March 12, 2007

(நாளை, உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்போகின்றன. காற்பந்தாட்டத்தில் பிரேசில் வெல்லவேண்டும் என்று விரும்ப, சென்றவருடம் நிலைமை தலைகீழாய் மாறியிருந்தது. எனவே அவுஸ்திரேலியா வெல்லட்டும் என்று வெளியே உரக்கச்சொல்லிக்கொண்டு, மேற்கிந்தியத்தீவுகள் கிண்ணத்தை சுவீகரிக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்கின்றேன். இந்தமுறை வெல்கிறதோ இல்லையோ இலங்கை அணிக்கு எனது ஆதரவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் வெல்லாது போனால், அடுத்து தென்னாபிரிக்கா (if not) நியூசிலாந்து வெல்ல வேண்டும் என்று நேர்ந்துகொள்கின்றேன்).
-விளையாட்டுக்கள் பற்றிய சில குறிப்புக்கள்-
(மீள்பதிவு)

அண்மையில் ஒரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது கதையின் நடுவில் எனக்கு கிறிக்கெட் ஒரளவுக்கு விளையாடத்தெரியும் என்றபோது அவரால் நம்பமுடியவில்லை. யாழில் இருந்தபோது பாடசாலையின் பதினைந்து வயதுட்குட்பட்டவர்களின் கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றேன் என்ற அத்தாட்சிப்பத்திரம் வாசித்தபோதும் அந்த நண்பர் ஒருவித நகைச்சுவையாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமில்லை, இன்று மிகச் சோம்பேறியாக காலங்கழிக்கும் எனக்கும் இப்படியெல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன் என்று நினைக்கும்போது வியப்பாய்த்தானிருக்கிறது. -எங்கள் தாத்தாவுக்கு முன்னொருகாலத்தில் யானை இருந்தது - என்று பழம்பெருமை பேசுவதை விட வாழ்வில் உவப்புத்தரக்கூடிய விடயங்கள் வேறேதும் உள்ளனவா என்ன?

யாழில் இருந்தபோது கிறிக்கெட் மட்டுமில்லை, உதைபந்தாட்டம், சதுரங்கம் போன்றவற்றிலும் ஆர்வத்துடன் பங்குபற்றி, பாடசாலை பாடசாலைகளாய் போட்டிகளுக்காய் அலைந்து திரிந்தது என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அதுவும், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து சிறந்த பெறுபேறுகள் பெற்றாலும் கிடைக்காத புகழ் -பத்து நிமிடத்தில் பிரபல்யம் ஆகுவதுபோல- இவ்வாறான விளையாட்டுக்களில், தடகளபோட்டிகளில் ஈடுபடுபவர்க்கு பாடசாலையில் வந்துவிடுவது பலருக்கு பொறாமையைத்தான் கொடுத்திருக்கின்றது.

பாடசாலைக்கு அருகிலேயே வீடு இருந்ததனால் சிறுவயதிலேயே, அதிகமான பின்னேரப்பொழுதுகளை பாடசாலை விளையாட்டு மைதானத்தில்தான் கழித்திருக்கின்றேன். மைதானத்தின் நடுவில் கிறிக்கெட் பயிற்சிகள் நடக்கிறதென்றால், மைதானத்தின் இருகரைகளிலும் உதைபந்தாட்டப்பயிற்சிகள் களைகட்டும். இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று மைதானத்தின் ஒருமூலையில் வலைபந்தாட்டப் பயிற்சிகள் (netball) நடக்கும். பயிற்சிகளில் பங்குபெற முடியா சிறுவயதில் இவற்றில் எந்த விளையாட்டை நான் அதிகம் இரசித்துக் கொண்டிருப்பேன் என்று எவருக்கும் கூறத்தேவையில்லை. எனது இந்தப்பழக்கம் -தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்- தொடர்வதை என் சுயபுராணத்தின் சாட்சிகளாய் நீங்கள் அவதானித்துக்கொண்டிருப்பதால், தன்னடக்கம் காரணமாய் அது குறித்து விதந்து பேசுவதை இந்தப்புள்ளியில் நிறுத்திக்கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை நான்குபுறமும் சூழ்ந்து வகுப்பறைகள் இருந்ததனால், கிறிக்கெட்டோ, உதைபந்தாட்டமோ, வலைபந்தாட்டமோ நடைபெறப்போகின்றதென்றால், மத்தியானமளவிலேயே பாடசாலையை மூடிவிடுவார்கள். வீடு அருகில் இருப்பவர்கள் வீடுகளுக்குப் போய்த் திரும்புவதும், தொலைவில் இருப்பவர்கள் அன்றைய விளையாட்டு முடியும்வரை பாடசாலையில் நிற்பதுமாய் அனேகருக்கு அன்றையபொழுது இனிதாய்க் கழியும் (வகுப்புக்குள் இருந்து, புத்தகத்தைத் திறந்து, கொட்டாவி விட்டு, வாத்தி முறைத்துப் பார்க்காத எந்தப்பொழுதும் எனக்கு அருமையானதுதான்). ஒரு காலத்தில் எங்கள் பாடசாலையின் உதைபந்தாட்டப் புகழ் அகில இலங்கைவரை பரவியிருந்தது (’பட்டிக்காடா பட்டணமா?’ என்று போஸ்டர் ஒட்டி ஆட்டங்களை விறுவிறுப்பாக்கும் வரைபோனதாகவும்…) என்று கேள்விப்பட்டிருந்தாலும், நான் படித்த காலங்களில் பெண்கள்தான் வலைப்பந்தாட்டத்தில் மிகப்பிரபல்யமாய் இருந்தனர். அதிலும் வலைபந்தாட்டத்துக்கு என்று ‘என்றுமே புகழ்’ பெற்றிருந்த உடுவில், சுண்டிக்குளி, வேம்படி மகளிர் கல்லூரிகளுக்கே இவர்கள் பயத்தை வரவழைத்துக் கொண்டிருந்த காலமது. வலைப்பந்தாட்டத்துக்கு கூடும் கூட்டத்தைப்பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான விடயங்கள் குறித்தும்- சொல்லாமல் புரிவர் பெரியார்- என்பதற்கிணங்க அதிகம் விபரிக்கத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

பாடசாலை அணிக்காய் வலைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த அக்காமார்களில் சிலர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாய் இருந்ததாலும் அவர்கள் மூலம் வலைபந்தாட்டம் விளையாடும் பிற அக்காமார்களும் எனக்கு நன்கு பழக்கமாயிருந்ததாலும் கொம்புகள் முளைத்த மாதிரியான எண்ணந்தான் அன்றையகாலகட்டத்தில் எனக்குள் பரவியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இப்படி ‘பெரும் புகழுடன்’ நானிருக்கின்றேன் என்று பல அண்ணாமார்களுக்குத் தெரிந்து, விளையாடும் அக்காக்களுடன் ‘சில உடன்படிக்கைகள்’ செய்யும் நோக்கத்துடன் என்னை இரகசியமாய் அணுக எனது நிலை சிறகுகளில்லாமல் வானில் பறந்த கதையாயிற்று. ஆனால், அது பிறகு 'வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்' சில அண்ணாக்களுக்கு நான் உபத்திரமாய் ஆகிப்போனதும் சோகமான விடயந்தான்.

எனக்கு விளையாட்டுக்களின் மீது ஆர்வம் வந்தற்கு, எனது அண்ணாவுக்கு கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றிலிருந்த மோகம் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு முக்கியமான காரணமும் இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. அது என்னவென்றால், பெடியங்கள் கிறிக்கெட், உதைபந்தாட்டம் விளையாடும்போது அவர்களை உற்சாகப்படுத்தவரும் பெண் இரசிகர்களின் எண்ணிக்கையையும் உற்சாகத்தையும் கண்டும்தான் எனக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் எங்கள் கிறிக்கெட் அணிக்கு தலைமைதாங்கும்போது அது ஒரு சோகமான நிலையை அடைந்தது குறித்து பிறகு கூறுகின்றேன். பன்னிரண்டு வயதளவில் பதினைந்து வயதுட்குட்பவர்களின் கிறிக்கெட் அணியில் எடுபடும் வாய்ப்பிருந்தும், கொழும்புக்கு விடுமுறையில் சென்று சில வாரங்கள் கழித்ததில் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனதில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. சரி கிறிக்கெட்தான் கைநழுவிப்போய்விட்டது உதைபந்தாட்டத்திலாவது கவனஞ்செலுத்தலாம் என்று அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பலானேன். விடிகாலையில்தான் உதைபந்தாட்டப் பயிற்சிகள் நடக்கும். பயிற்சி முடிந்தபின் - அன்றையகாலகட்டத்தில் பிரேமதாசா பாடசாலைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு கப் பாலும், சங்கிலி பணிஸ¤ம் எல்லோருக்கும் வழங்கப்படும். ஒரு மாதிரியாக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது போட்டியில் முதலாவது கோலும் அதிஸ்டவசமாய் நான் போட்டிருக்கின்றேன். எப்படி கோல் போட்டது என்று சொன்னால் கொஞ்சம் அவமானந்தான் ஆனால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. வேறொரு நண்பன் கோலுக்கு அடித்த பந்தை, கோலி தட்டுத்தடுமாறித்தடுக்க அதையெடுத்துத்தான் கோல் போட்டனான். Rose is a rose is a rose என்ற மாதிரி எப்படி என்றாலும் கோல் கோல்தானே என்று என்சார்பாய் நீங்கள் பேசுவதும் நன்றாகவே என் காதுகளில் விழுகிறது என்க.

ஆட்டங்களுக்கு முன் ஒரு சம்பிரதாயமான பழக்கம் -ஆதிகாலத்தில் இருந்தே- எங்கள் பாடசாலையில் இருந்தது. பாடசாலையில் இருந்த கோயிலிலும், பக்கத்த்தில் இருந்த வைரவர் கோயிலிலும் தேங்காய் உடைத்து ‘வெற்றியைத்தாரும்’ என்று பிரார்த்திப்பதுதான் அது. ஆனால் கோயில்களுக்குள் போக முன்னரோ, போனதன் பின்னரோ, அல்லது இடையிலோ பச்சை முட்டைகள் குடிப்பதை மட்டும் மறக்கமாட்டோம். குடிக்கின்ற ஒவ்வொரு பச்சை முட்டைக்கேற்ப போடுகின்ற கோல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது எங்களில் பலருக்குள் ஒரு ‘ஜதீகமாய்’ இருந்தது. நான் விளையாடிய காலத்தில் நாங்களும் இன்னொரு பாடசாலையும் (வசந்தன் படித்த பாடசாலையும்) வலய/கோட்டமட்டத்தில் எடுபட்டு யாழ் மாவட்ட அளவில் விளையாடப் போயிருந்தோம். உதைபந்தாட்டத்தில் கத்தோலிக்க பாடசாலைகளின் திறமைபற்றி கூறவே தேவையில்லை. உலகில் பிரேசில் எப்படி கால்பந்தாட்டத்துக்கு மகுடம் சூட்டுபவர்களோ அப்படித்தான் யாழில் கத்தோலிக்கப் பாடசாலையினர். யாழ் மாவட்ட அளவில் எங்களுடன் முதலில் மோத வந்த அணி நாவாந்துறை சென்மேரிஸ் (பெயர் சரியா?) அணியினர். ஆனால் அன்று நடந்த சோகத்தைக் கேட்டால் என்னவென்று விளம்புவேன்? அவர்கள் அணியில் இருந்த அனைவரும் ரொனால்டோவாயும் ரொனால்டினோவாயும் இருந்தனர். ஒன்றா… இரண்டா… (என்ற ‘ஆசைகள்’ அல்ல, இது அவமானம்) ஏழு கோல்களைப் போட்டு, ஏதோ எங்களோடு பயிற்சி செய்வதைப் போலத்தான் அந்தப்பெடியங்கள் விளையாடினார்கள். கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் இனியும் நின்றால் அவமானம் என்று நினைத்து ஆட்டம் பார்க்க வந்த மாமாவின் சைக்கிளில் ஏறி, நண்பர்களையும் விட்டுவிட்டு உடனேயே வீடு திரும்பியதாயும் நினைவு.

(2)
கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியபோது நான் படித்த பாடசாலை சொந்த இடத்தைவிட்டு பல்வேறு ஊர்களுக்கு எங்களைப்போல அதுவும் அகதியாய் அலையத்தொடங்கியிருந்த காலம். கிறிக்கெட் விளையாடுவதற்கு சொந்தமாக விளையாட்டு மைதானமே இல்லாதபோது, ஒருமாதிரி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை கண்டுபிடித்திருந்தோம். அந்த இடத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இந்திய இராணுவம் முகாம் போட்டுத் தங்கியிருந்தது. மழைவந்தால் நீர் தேங்கக்கூடிய அதிபள்ளமான பகுதியும் கூட. அத்தோடு பக்கத்தில் இருந்த அரிசி ஆலையிலிருந்த உமி, கரி முழுவதையும் இந்த ஒதுக்குப்புறமான காணியில்தான் கொட்டிக்கொண்டுமிருந்தார்கள். அந்தப்பக்கமாய் போனால் உமியும் கரியும் சாம்பலும் காற்றில் பறந்து வந்து கண்ணில், மூக்கில் எல்லாம் உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். ஒருமாதிரி pitch போட்டு அதற்கு மேல் Matting எல்லாம் ஆணியால் இழுத்து மண்ணோடு இறுக்கி அடித்து கிறிக்கெட் விளையாடுவதற்குத் தயாராக்கியிருந்தோம். ஆனால் இரசிகைகள் அந்தமாதிரி கூடுவார்கள் என்று விளையாட நான் பிரியப்பட்ட கிறிக்கெட்டை எந்த இரசிகையும் இல்லாமல் விளையாடி முடிந்ததுதான் மிகுந்த அவலமான விடயம். ஏனென்றால் எங்கள் பாடாசாலை இயங்கிக்கொண்டிருந்த நகரை விட்டு பக்கத்து நகரில்தான் விளையாட்டு மைதானம் இருந்தது என்றபடியால் கிறிக்கெட்டுக்காய் என்று கூறிவிட்டு பயணம் செய்து வருவது பெண்களுக்கு கடினமாயும் இருந்தது. (ஆனால் வகுப்புக்களிடையில் ‘சென்றுவருக தோழர்களே வென்று வருக’ என்று அனுப்பி வைப்பதை மட்டும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நாங்களும் ஓமோம் ஓமோம் என்று தலையாட்டிவிட்டு… அடுத்த நாள் தோற்றகதையை வந்து சொல்வதும் வழமையான நிகழ்வாய் இருந்தது). யுத்தகாலம் என்றபடியால் வாகன வசதிகளும் அவ்வளவாய் இல்லையென்பதால், வரும் பார்வையாளர்களும், விளையாடும் எதிர் அணியினரும் உட்கார்வதற்கு என்று எங்கள் கைகளிலும் தோள்களிலும் நீண்ட வாங்குகளைக் காவிக்கொண்டு எல்லாம் நெடுந்தூரம் நடந்துபோய் இருக்கின்றோம்.

சென் பற்றிக்ஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி போன்றவற்றோடு விளையாடி, இரண்டு ஆட்டங்களில் வெற்றிதோல்வியின்றியும், மிகுதி இரண்டு ஆட்டங்களில் தோற்றும் இருக்கின்றோம்.

அதுவும் யாழ் இந்துக்கல்லூரியுடன் தோற்றதையும் அங்கு நிகழ்ந்ததையும் பற்றி இப்போது நினைத்தால் கூட நெஞ்சில் ஒரு அக்கினிக்கோளம் உருவாகின்றமாதிரித்தான் தோன்றுகின்றது. ஆட்டம் இந்துக்கல்லூரி மைதானத்தில்தான் நடந்தது. நாங்கள் விக்கெட்டுக்கு முன்னால் வளைந்துநின்றால் வளைந்த உடம்பிற்கு அளவாய்த்தான் விக்கெட்டும் இருக்கும், ஆனால் இந்துக்கல்லூரிப்பெடியங்களில் பலர் விக்கெட்டைப்போல இரண்டு மடங்களவில் பெரிய உருப்படியாக இருந்தாங்கள். என்றாலும் தாவீதை வென்ற கோலியாத்தின் கதை தெரியும் என்பதால் நாங்கள் இதற்கு எல்லாம் அவ்வளவாய்ப் பயப்பிடவில்லை. அன்றைக்கு என்று என்னோடு ஒப்பினிங் போலிங் போடுகின்றவன் வருத்தம் என்று காரணத்தைக் காட்டி விளையாடவும் வரவில்லை. வருத்தம் என்பதைவிட அவனுக்கு தனக்கு அணித்தலைமை பதவி தரவில்லை என்ற கடுப்பு ஏற்கனவே இருந்தது. எனவே தோற்கப்போவதை படுதோல்வியாக்குவதில் தனது பங்கும் இருக்கட்டும் என்று பெரிய ஃபீலா காட்டிக்கொண்டு வராமல் நின்றான். இந்துக்கல்லூரிக்கு அப்போது யோகிதான் பயிற்சியாளராய் இருந்தார். நாங்கள் 50ற்குளேயே சுருண்டு விட்டோம். அவங்கள் அடிகிறாங்கள் அடிக்கிறாங்கள் முடிகிறபாடாய் காணவில்லை. ஓட்டங்கள் இருநூறைத் தாண்டிவிட்டது…இரண்டு பேர் 50ற்கு மேலாய் அடித்தமாதிரியும் நினைவுண்டு. கடைசியில், சரி இவங்கள் பாவங்கள் என்று மனமிரங்கி ஆட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு எங்களை இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாட அழைத்தார்கள். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே என்னைப் பற்றிய பூர்வீகம் ஏற்கனவே தெரிந்து, வெளியாலை இருந்து இந்துக்கல்லுரிப் பெடியங்கள் நக்கலடித்துக்கொண்டிருந்தாங்கள். பூர்வீகம் வேறு ஒன்றுமில்லை.; அதற்கு ஒராண்டு முன்னர்தான் இந்துக்கல்லூரிக்கு படிக்கப்போய் ஒரு மாதம் வரை இருந்துவிட்டு இது நமக்கெல்லாம் ஆகாது என்று பழைய பாடசாலைக்கு மீண்டு(ம்) போயிருந்தேன். அதை தெரிந்து வைத்து அவங்களுக்கு ஒரே நக்கல்…இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. பந்து வீசும்போதுதான் எதையும் செய்ய முடியவில்லை…துடுப்பாட்டம் செய்யும்போதாவது இவங்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று கறுவிக்கொண்டேன். ஆடிக்கொண்டிருந்தபோது நடுமைதானத்துக்குக் கூடக் கேட்கக்கூடியமாதிரி என்னுடைய ‘புகழை’ கலிங்கத்துப்பரணி ரேஞ்சுக்குப் பாடிக்கொண்டிருக்க, எனக்கு வந்த விசருக்கு அப்போது நல்ல லெந்தாய் வந்த பந்துக்கு கண்ணை மூடிக்கொண்டு விசுக்கினேன். ஒன்டு அடிபட்ட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டி நிற்கின்ற அவங்களின்ரை தலையில் படவேண்டும், இல்லாவிட்டால் விசுக்கின்ற bat ஆவது கைநழுவிப்போய் இரண்டு பேரின்ரை மண்டைகளையாவது உடைக்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு -அந்தமாதிரித்தான் batஜ- விசுக்கினனான். ஆனால் பிறகு -ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது- அந்தப் பந்து நடு ஸ்டாம்பை துவம்சம் செய்துகொண்டு போக மாமியார் முன் நாணிப்போகும் மருமகனாய் என் ‘வீரதீரச்செயல்’ முடிவுக்கு வர பவுலியனை நோக்கித் திரும்பவேண்டியதாயிற்று. அதற்கும், ஒழுங்காய் லெந்தான பந்தைக் கூடப்பார்த்து அடிக்கத்தெரியாதவன் ஒரு அணிக்கு தலைமைதாஙக வந்துவிட்டான் என்று வாய்க்கரிசி போட்டு வாழ்த்தாத குறையாக அவங்களின் ‘வாழ்த்து’க் கிடைத்தது. எனினும் இந்துக்கல்லூரி நண்பர்களோடு அருந்திய அருமையான பால் தேத்தண்ணியினதும் வடையினதும் வாய்ப்பனினதும் சுவையும் நட்புக் கலந்த வார்த்தைகளும்தான் இப்போது அதிகம் நினைவில் நிற்கின்றது என்பபதையும் குறித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றில் இருந்த விருப்பைப் போல சதுரங்கத்திலும் மிகப்பெரும் விருப்பு எனக்கு ஈழத்தில் இருந்தபோது இருந்தது. இப்போதும் யாகூவின் சதுரங்கத்தளத்துக்கு வந்தால் நான் ஓடித்திரிந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கவும் கூடும். சிறுவயதிலேயே -ஏழு அல்லது எட்டு வயதளவில் - சதுரங்கம் விளையாடத்தொடங்கியிருந்தேன் என்று நினைக்கின்றேன். சதுரங்கப் பலகையை முதன்முதலில் எனது அண்ணாவும் அக்காவும் வாங்கித்தந்த நாள் கூட நினைவில் நிற்கின்றது. அதை வாங்கியவன்றுதான், அண்ணாவின் நண்பரொருவரின் வீட்டில் பொம்மர் அடித்து அவர்களின் வீடு சிதைந்துபோனதும், அதிஸ்டவசமாய் அந்த அண்ணாவும் அவர்களின் குடும்பமும் தப்பியிருந்தாலும் பொம்மரைக் கண்டு பாதுகாப்புக்கென ஒதுங்கிய ஒருவர் இறந்துபோனதும்…அந்த கசப்பான நாள் நினைவில் இப்போதும் மிதக்கிறது. சதுரங்கப்பலகையை வாங்கிய சாபத்தால்தான் இப்படி நடந்தது என்று நெடுங்காலத்துக்கு எண்ணிக்கொண்டும் இருந்திருக்கின்றேன். யாழ் நகரில் சனசமூக நிலையங்கள், YMCA போன்றவை நடத்திய அனேக போட்டிகளில் பங்குபற்றி சிலதில் பரிசுகள் வாங்கியதும் இனிமையான தருணங்கள்தான். அந்தப்பொழுதுகளில் அப்பாவோடு சுமூகமான உறவுகள் இருந்ததும் - முக்கியமாய் எதையும் எதிர்த்துக் கதைக்காத ‘நல்ல பண்பும்’ என்னிடம் இருந்ததை அப்பா கூட இப்போது நனவிடை தோய்ந்து அந்தக்காலத்தை மகிழ்வுடன் அசை போடவும் கூடும். பிறகு பாடசாலைகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் யாழ் மாவட்டவளவில் தொடர்ந்து runners-up யாய் -யாழ் இந்துக்கல்லூரிக்கு- அடுத்ததாய் வந்திருக்கின்றோம். எங்கள் அணியில் பெண்கள் இருப்பதைப் பார்த்து ஒருவித எகத்தாளத்துடன் விளையாடத்தொடங்கியவர்களை எல்லாம், அசர வைத்து வெற்றி வாகை சூடிய நாளகளும்….பதின்மூன்று பதினான்கு வயதுகளிலேயே வயது வித்தியாசமின்றி உயர்தரம் படிக்கின்றவர்களோடு நண்பர்களாகிக் களித்ததும் அருமையான பொழுதுகள்தான்.

(3)
விளையாடும் காலங்களைப்போல விளையாட்டை வெளியிலிருந்து இரசிக்கும் காலங்களும் மிகவும் அருமையானது. உள்ளூரிலிருந்து சர்வதேசம் வரை வெறிபிடித்தலையும் விளையாட்டு இரசிகர்கள் குறித்து பக்கம் பக்கமாய் எழுதலாம். நமது ஊர்களில்தான் மண்டையை உடைக்கின்றவரை இரசிகர்கள் போவார்கள் என்பதை… ஜரோப்பிய நாடுகளில்/ இலத்தீன் அமெரிக்காவில் நடக்கும் இரசிகர்களின் சண்டைகளைப்பார்த்தால் நாங்கள் எல்லாம் அவர்களின் கால்தூசிக்கும் வரமாட்டோம் என்றுதான் எண்ணிக்கொள்ளவேண்டிவரும். இன்றைய பொழுதில் வடஅமெரிக்கத் ‘தேசியத்தில்’ தவண்டும் புரண்டும் நீந்தியும் எழுந்தும் கொண்டிருப்பதால் கிறிக்கெட்ட் போன்றவற்றின் மீது வெறி போய், ஜஸ் கொக்கி, கூடைப்பந்தாட்டம், பேஸ்போல் போன்றவற்றில் பித்துப்பிடித்தலையும் நிலை வந்துவிட்டாலும் கனடாவில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் ஒருவித வெறியுடன் கிறிக்கெட் உதைபந்தாட்டம் போன்றவற்றைப் பார்த்திருக்கின்றேன்.

கனடா வந்தசமயத்தில்தான் இலங்கை கிறிக்கெட் அணி உலகக்கோப்பையை சுவீகரித்திருந்தது. நான் இலங்கையணியின் இரசிகனாவே என்றும் இருந்திருக்கின்றேன். இப்போது அல்ல, சிறுவயதிலிருந்தே டிலிப் மெண்டிஸ், அர்ச்சுன இரணதுங்கா போன்ற தொப்பை வண்டிக்காரர்களால் இலங்கை அணி நிரப்பட்டு எல்லா நாடுகளும் வந்து மொங்கு மொங்கு என்று அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த காலத்திலிருந்தே நான் இலங்கையணியின் தீவிர இரசிகன்தான். அதற்கு அடுத்து மேற்கிந்தியத்தீவுகளுக்கு. எனது அண்ணாமார், அப்பா போன்றவர்கள் மேற்கிந்த்தியத்தீவின் தீவிர இரசிகர்கள். கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால் ஈழத்துக்கும் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கும் நிரம்ப ஒற்றுமை இருப்பது புரிபடும். சுமூகமற்ற அரசில் சூழ்நிலைகள், போராட்ட இயக்கங்கள், காலநிலை, அழிவுகள், மீண்டும் உயிர்ப்புடன் எழுதல்… என்று பல புள்ளிகளில் ஒன்றுபடமுடியும். இப்படியான ஒரு ‘தீவிரமான ஆராய்ச்சியின்’ ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு ஸ்பானியப் பெண்கள் மீது ஈர்ப்பு வருவதும் அதிசயமில்லைதானே (அப்பாடா ஒருமாதிரி நான் நெடுங்காலமாய் கூற நினைத்த விடயத்தை காரணகாரியங்களுடன் நிரூபித்துவிட்டேன்).

எனக்குத் தெரிந்து, அண்ணா ஊரில் இருந்தபோது நடத்தி விளையாடிக்கொண்டிருந்த் அணிக்குக் கூட Gary Sobers என்று பெயரிட்டதாய்தான் நினைவில் இருக்கிறது. கிறிக்கெட் வேல்ட் கப் நடந்துகொண்டிருந்தபோது நாங்கள் இங்கே பேப்பர் போட்டுக்கொண்டிருந்தோம். தனியே பேப்பர் போடுவது -அதுவும் வின்ரர் காலங்களில்- கடினமென்பதால் நானும் அவ்வவ்போது அண்ணாக்களுடன் உதவிக்கு என்று போவதுண்டு. ஆனால் இங்கு விடிகாலை நேரத்துக்கே வேல்ட் கப் ஆட்டங்கள் தொடங்கிவிடும் என்பதால், பேப்பர் போடப்போகாது தூங்குவது போலக் கள்ளமாய் நடிக்கத்தொடங்கிவிடுவேன். ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தை பார்க்காவிட்டால் அது ஒரு ஆட்டம் பார்த்ததுமாதிரி இல்லை என்று வெறிபிடித்த இரசிகனாய் இருந்த காலம் அதுவாம். அண்ணாக்களும் என்ரை கள்ளம் விளங்கியோ அல்லது பாவப்பட்டோ விட்டுவிட்டுப்போக நான் கொஞ்சநேரத்தில் எழும்பி ஆட்டம் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாக்களின் நண்பர்களும் வந்து குவிய, இடைக்கிடை ஆட்டம் பற்றிய கதைகள், ஈழத்தில் அவர்களின் நனவிடைதோய்தல்கள் என்று விரிந்துபோக ஆட்டங்களைப் பார்ப்பது சுவாரசியமாகும் (இங்கே சாதாரண ரீவி சானல்களில் கிறிக்கெட்டை ஒளிபரப்பமாட்டார்கள்). நான் இங்குசந்தித்த நண்பர்களில் மட்டுமில்லை, 2004ல் இலங்கைகுச் சென்றபோது சந்தித்த நண்பர்கள் வரை 90% மேற்பட்டவர்கள் தீவிர இந்திய இரசிகர்களாக்வே இருக்கின்றார்கள் எனபதில் இந்தியாவின் பாதிப்பு ஈழத்துமக்களிடையே எவ்வளவுதூரம் என்பது வெள்ளிடை மலை. அதுவும் 2004ல் திருகோணமலையில் நின்றபோது ஏதோ ஒரு கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடியபோது இருந்த சனம் முழுதும் இந்தியாவுக்கு ஆதரவாய் நிற்க - சித்தியின் மகள் மட்டுமில்லை சித்தி கூட - இலஙகை வீரர்களைத் திட்டித்திட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, என்னுடைய மானத்தைக் காக்கவேனும் இலங்கையணி வெல்லவேண்டும் என்று நேர்ந்துகொண்டேன். அவர்கள் இறுதியில் வென்றுகாட்டி, ஒரு இரசிகனுக்குத் தரவேண்டிய மிகப்பெரும் சந்தோசத்தை எனக்கு அன்று அளித்துமிருந்தார்கள்.

ஆனால் 96ல் நடந்த உலகக்கோப்பையை இலங்கையணியின் இரசிகன் என்றவகையில் - என்னால் என்றுமே மறக்கமுடியாது. உலகக்கோப்பையைத் தமதாக்கிக்கொள்ளும்வரை எந்தப்போட்டியிலும் தோற்காமல் அருமையாக அவர்கள் ஆடியிருந்தார்கள். அதிலும் இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டமும், ஆஸ்ரேலியாவுடனான இறுதியாட்டமும் உயர்தர ஆட்டங்கள். கைதராபாத்தில்(?) நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜெயசூரியாவின் பந்துகள் -துடுபடுத்தாடியவர்க்ள் வெளியே போகின்றது என்று விலத்திவிட- பின்னங்கால்களுக்குள் சுழன்றாடி விக்கெட்டுக்களை விழுத்திய காட்சிகளையெல்லாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன? அதேபோல இறுதியாட்டத்தில் அசைக்கமுடியாது என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி 250 தாண்டிவிட்டு பெருமிதமாய் நிற்க, இலஙகையின் அன்றைய ஆரம்பநிலை ஆட்டக்காரர்களான ஜெயசூரியாவும், களுவிதானவும் கொஞ்ச ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்துபோக, அரவிந்த டீ சில்வா- அசங்க் குருசிங்கா, அர்ஜூன இரணதுங்கா, மகாநாமவுடன் very coolயாய் இணை துடுப்பெடுத்தாடி, சதமும் அடித்து அணியை உலகின் உச்சிக்கு கொண்டுபோய கிண்ணத்தை கைப்பற்ற வைத்த ஆட்டம், என்னைப்பொறுத்தவரை ஒரு classicதான். அதுபோல் பிரான்சோடு இறுதி ஆட்டத்தில் 3-0 தோற்று, அதற்கடுத்த உலகக்கோப்பையில் ரொனால்டோ ஒரு படைப்பின் நேர்த்தியுடன் பந்தின் இலயத்தோடு இயைந்து, ஜேர்மனியை மண்கவ்வச் செய்த பிரேசிலின் ஆட்டமும் அவ்வளவு இலகுவில் மனதைவிட்டு அகலாது.

(4)
மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள், ஒரு ப்னீக்ஸ் பறவையைப் போல எழுந்துவரும் நம்பிக்கையைத் தருவதும், இன்று ஆரம்பிக்கின்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் -ஏதாவது பெருந்தவறுகள் விட்டாலன்றி- பிரேசில் வெல்லப்போகின்றது என்ற கட்டியங்களும் மீண்டும் கிறிக்கெட்ட்டிலும், உதைபந்தாட்டதிலும் எனக்கு ஈர்ப்பைக் கொண்டுவரச்செய்கின்றன. அதைவிட ரெக்கேயும், சம்பாவும் ஆடியும் பாடியும் ஆட்டங்களை ஒரு திருவிழாவின் கொண்டாட்டங்கள் போல ஆக்கும் இரசிகைகளைப் பார்க்கும்போது -எனக்குள் இருக்கும் இரசிகன் என்றும் உறைந்துபோய்விடமாட்டான் போலதான் தோன்றுகின்றது. இரசிகைகள் விளையாட்டு வீரர்கள் மீது பித்துப்பிடித்தலைவதும், என்னைப் போன்ற இரசிகன்கள் இரசிகைகள் மீது மையல் கொள்வதும் காலங்காலமாய் நடப்பதுதானே.

அம்மாவிற்கு

Thursday, March 08, 2007

பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.


(2006)
-மீள்பதிவு-

--------------
(இன்று -Mar 08- பிறந்தநாளைக் கொண்டாடும் அம்மாவிற்கு...)