கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Federico García Lorca

Thursday, May 31, 2007

-மொழிபெயர்ப்பு கவிதை முயற்சிகள்-

கார்சியா லோர்கா தமிழ்ச்சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு ஸ்பானிய படைப்பாளி. அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க ஒரு புதுவிதமான உலகு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எளிமையான வார்த்தைகளால்... ஆனால் நிறைய படிமங்களால் ஆனவை அவரது கவிதைகள். சடப்பொருடகளுடனான அவரது உரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. (அப்படி நினைக்கும்போது தமிழ்ச் சூழலில் நினைவுக்கு வருபவர், சோலைக்கிளி). லோர்காவின் நாடகங்களை விதந்து பேசியளவுக்கு அவரது கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தமிழில் வாசித்தது குறைவு. இடதுசாரித்துவம் மீது ஈர்ப்பிருந்த லோர்கா ஸ்பானிய உள்நாட்டுப்போரால அவரது 38 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். (லோர்காவின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத விருப்புண்டு; ஆசை கோடி, பட்டியலோ நீளும்.)


lorca
(1898-1936)
Saturday Paseo: Adelina

தோடை
கடலில் வளர்வதோ
காதல் *செவில்லாவில் முகிழ்வதோ அன்று.
நீ நிழலில் நான் தகிக்கின்ற சூரியன்
உனது குடையை இரவல்தா

நானெனது பொறாமையின் விம்பங்களை அணிவேன்
எலுமிச்சையும் நாரத்தையுமான சாறு
உனது வார்த்தைகள்
உனது குற்றமுள்ள சிறு வார்த்தைகள்
சிறிது நேரத்திற்கு நீந்தத் தொடங்கும்.

தோடை
கடலில் வளர்வதில்லை.
ஆ.., அன்பே!
செவில்லாவில் காதலும் இல்லை.

*A city
----------------------

கிற்றார்
(The Guitar)

கிற்றாரின் விசும்பல்
ஆரம்பிக்கிறது
விடியலின் கோளங்கள்
துவசமாக்கப்பட்டன.
கிற்றாரின் விசுமப்ல
ஆரம்பிக்கிறது.
அதை அமைதியாக்குவது
பயனற்றது.
அதை நிசப்தமாக்குவது
சாத்தியமற்றது.
அது அலுப்புடன் விசும்புகிறது,
பனிப்புலத்தின் மேலாய்
நீரைப் போல
காற்றைப் போல
விசும்புகிறது
அதை அமைதியாக்குவது
சாத்தியமற்றது
தொலை தூரத்திலுள்ளவைக்காய்
அது விசும்புகிறது
சூடான தென்னக பாலைவனங்கள்
வெள்ளை கமீலியாஸுக்காய் காத்திருக்கின்றன.

விசும்பும்;
இலக்கில்லாத அம்புக்காய்
காலை இல்லாத அந்திக்காய்
கிளையின் மேல் இறந்த முதலாவது பறவைக்காய்.
ஓ கிற்றார்!
ஜந்து வாட்களால்
இதயம் பயங்கரமாய்க் காயப்படுத்தப்பட்டது.
------------------------

பேச்சற்ற சிறுவன்
(The Little Mute Boy)

சின்னப்பையன் தேடிக்கொண்டிருந்தான்
தனது குரலை
(சில்வண்டுகளின் அரசனிடம் அது இருந்தது)
தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

அதனுடன் பேசுவதற்காய் அதெனக்கு(குரல்) வேண்டாம்
நானொரு மோதிரத்தை அதிலிருந்து உருவாக்குவேன்
அவ்வண்ணம் அவன் தனது சின்னவிரலில அணியக்கூடும்
எனது மெளனத்தை.

தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

(கைப்பற்றப்பட்ட குரல், வெகு தொலைவில்
சில்வண்டுகளின் ஆடையை அணிகிறது)
------------

பிரியாவிடை
(Farewell)


நான் இறந்தால்,
பலகணியைத் திறந்தபடியே விடுக.

சிறுவன் தோடம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, அவனைப் பார்க்க முடியும்)

அறுவடை செய்பவன் கோதுமையை அறுவடை செய்துகொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, நான் அவனைக் கேட்கமுடியும்)

நான் இறந்தால்,
பலகணியை திறந்தபடி விடுக.
--------------


மலட்டுத் தோடையின் பாடல்
(The song of the Barren Orange Tree)

மரம்வெட்டி.
என்னிலிருந்து எனது நிழலை வெட்டு
கனியாக ஆகமுடியாத அவஸ்தையை
என்னிலிருந்து விடுவி

கண்ணாடிகளுக்கு மத்தியில் நானேன் பிறப்பிக்கப்பட்டேன்?
நாள்
என்னைச் சுற்றி சுற்றி படர்கின்றது
இரவு
தனது அனைத்து நட்சத்திரங்களிலும்
என்னை நகலெடுக்கிறது.

நானெனது விம்பமில்லாது வாழ விரும்புகிறேன்.
பிறகு என்னைக் கனவு காண அனுமதி,
எறும்புகளும் *Thistledownம்
எனது இலைகளும் கிளிகளுமாக.

*தமிழில் எப்படிக் கூறுவது?
--------------------------

பிரியமுள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்புவதற்காய் கார்சியா லோகாவின் கவிதைகள் சிலதை மொழிபெயர்த்தேன். எனது மொழியின் போதாமையால் இதை மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நான் இக்கவிதைகளை விளங்கிக்கொண்டளவில் தழுவி எழுதியிருக்கின்றேன் என்றுதான் -நேர்மையாக- ஒப்புக்கொள்ளவேண்டும்.

வலிகளை ஆவணப்படுத்துதல்

Friday, May 04, 2007

-Provoked & Bordertownஐ முன்வைத்து-

பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று கட்டியெழுப்பப்பட்ட மதங்களோ, கலாசார நிறுவனங்களோ இவ்வாறான விடயங்களில் அதிகளவு குறுக்கீடு செய்யவிரும்புவதில்லை. தொடர்ச்சியாக உடல்/உளரீதியான சுரண்டலகளுக்கு ஆளாகும் பெண்கள் மனப்பிறழ்வுக்கு உள்ளாபவர்களாகவும் தற்கொலையை நாடுபவர்களாகவும் அதிக சந்தர்ப்பங்களில் மாறிப்போகின்றார்கள். அண்மைக்காலமாய் ரொரண்டோ சபவேகள் எங்கும் பெண்கள், சிறுவர்களுக்கான வன்முறைக்கெதிரான (violence against women and children) விழிப்புணர்வு பதாதைகள்/விளம்பரங்கள் பரவலாகத் தென்படத்தொடங்கியுள்ளன. வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் ஒன்றான ரொரண்டோவில் கூட இவ்வாறான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பதை திடீரென்று முளைக்கும் இவ்விளம்பரங்கள் நமக்கு சாட்சியப்படுத்தியபடியிருக்கின்றன.


Provoked என்கின்ற இத்திரைப்படம், கிரண்ஜிட் என்ற இலணடனில் வசித்த பஞ்சாபி பெண்ணுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களாய் தனது கணவருடனும், இருகுழந்தைகளுடன் வசிக்கும் கிரண் தனது கணவனை ஓரிரவில் தீயிட்டு கொளுத்திவிடுகின்றார். தீக்காயங்களினால் இறக்கும் கணவரைக்கொன்ற குற்றத்திற்காய் கிரணிற்கு பன்னிரண்டு ஆண்டுகால ஆயுட்தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சம்பவத்தை கிரண் செய்ய அவரை உந்தித்தள்ளியது எதுவென ஆராய்கின்றபோது அவரது கணவனின் உடல்/உள வன்கொடுமைகள்தான் காரணம் என்று தெரியவருகின்றது. எனினும் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் பேச முடியாத, தன் உடற்காயங்களை வெளிப்பார்வைக்குக் காட்டத்தயங்குகின்ற கீழைத்தேய மனதுடைய கிரணால் தனது வழக்கறிஞர்களின் ஊடாக இதுகுறித்த விவாதத்தை நீதிமன்றத்தில் நடத்த முடியாமல் போகின்றது. மேலும் கிரணிற்கு தனது கணவரைத் தான் தீயிட்யெரித்து கொலைசெய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு இன்னும் உறுத்துகிறது.

provokedGood

ஜெயிலில் பிற பெண்களால் கிரண் bullying ற்கு (தமிழில் என்ன?) ஆரம்பத்தில் உட்பட்டாலும், பிறகு சில நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். ஜெயிலில் இருக்கையில், 'இப்போதுதான் எனது இரவுகள் நிம்மதியாகக் கழிகின்றன' என்கின்றபோது அவரது திருமணவாழ்வு அவருக்கு எத்தகை வலியைத் த்ந்திருக்கின்றது என்பது பார்ப்பவருக்கு புரியவரும். இதற்கிடையில் கிரணை இந்தக் கொலையைச் செய்வதற்கு உந்தித்தள்ளியது எதுவென South Asian Black Sisters என்ற அமைப்பு ஆராயத் தொடங்குகின்றது. அவரது கணவர் நிகழ்த்திய உடல் மீதான வன்முறை/பாலியல் பலாத்காரங்கள் தான் இத்தகைய முடிவுக்கு வர கிரணை provoke செயதது என்ற பிரச்சாரத்தை இலண்டன் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளத்தொடங்குகின்றார்கள். அதன் நீட்சியில் கிரணின் வழக்கை மேன்முறையீடு செய்ய விரும்பும்போது ஜெயிலில் இருக்கும் பெண்ணொருவரின் சகோதரர் முறையிலான வழக்கறிஞர் ஒருவரின் உதவி வாய்க்கிறது. அவர் இங்கிலாந்து இராணிக்கு சட்ட நுணுக்கஙளை சொல்லவல்லபர் என்பதால் இவ்வழக்கு இன்னும் பரவலான கவனத்தைப் பெறுகிறது. இறுதியில் attempted murder என்ற நிலைய்லிருந்து manslaughterற்கு வழக்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கு முடிவதற்குள் -நான்கு வருடங்கள்- கிரண் ஜெயிலிற்குள் தண்டணை பெற்றுவிட்டபடியால் அத்தோடு அவர் விடுதலை பெறுகின்றார்.

கிரணைப்போன்ற கதைகள் -துணைவர்களால துன்புறுத்தப்படுகின்ற சம்பவங்கள்- பல இடங்களில் 'சாதாரணமாய்' நடந்துகொண்டிருந்தாலும், இந்தச் சம்பவத்தின் தீர்ப்பே பிற கதைகளிலிருந்து இதை வித்தியாசப்படுத்துகின்றது. 'கொலையும் செய்வாள் பத்தினி' என்று நமது கீழைத்தேயமரபுகள் போதித்துக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு பெண் தன்னை விடுதலை செய்வதற்காய் கொலை செய்திருக்கின்றார் என்பது சற்று 'அதிர்ச்சியானது'தான். புலம்பெயர் நாடுகளில் நமது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பவை. மேலும் எம்மைப்போன்ற கீழைத்தேயங்களிலிருந்து வருகின்றவர்களுக்கு இருக்கும் கண்காணிப்புச்சுவர்கள் இவை குறித்த திறந்த விவாதங்களைப் பெண்கள் தொடக்கி வைக்க அவர்களுக்கு தடைக்கற்களாகவும் இருக்கின்றன.

இப்படத்தில் கிரணாக, ஜஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கின்றார். ஆரம்பத்தில் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் தெளிவாகப் பேசமுடியாத பெண்ணாக இருந்து பிறகு ஜெயிலில் ஆங்கிலம் கற்று தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணாக மாறுவது என நல்லதொரு நடிப்பை ஜஸ்வர்யா தந்திருக்கின்றார். ஜெயிலிற்குள் வருகின்றபோது, பொதுவில் வைத்து ஆடைகளைக் கழற்றி ஜெயில் உடுப்புகள் அணியவேண்டும் என்ற நிலை வரும்போது, 'எங்கள் கணவருக்கு முன்னாலேயே ஆடைகள் மாற்றக் கூச்சப்படுபவர்கள் நாங்கள்' என்று ஜஸ்வர்யா பதட்டப்படுவது, உடல் குறித்த நமது சமூகத்தின் கண்காணிப்பு அரசியலை மறைமுகமாய் காட்சிப்படுத்துக்கிறது. நந்திதா தாஸ் south asian black sisters என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளாராய் வருகின்றார். எனினும் அவர் தனது நடிப்பை வெளிப்படுத்துவத்றகான் காட்சிகள் மிகக்குறைவாகவே இத்திரைப்படத்தில் இருக்கின்றது. மது அம்பட்டின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ஆரின் இசையும் புலம்பெயர்ந்த மேற்கத்தைய நாட்டில், கீழைத்தேயவரின் வாழ்வு முறையை இன்னும் நெருக்காமாய்க்காட்டுகிறது.

இங்கே கிரண் கொலையைத்திட்டமிட்டுச் செய்யப்படவில்லை என்று - அந்தக்கணத்தின் வன்முறையின் கொடூரத்தில் உந்தப்பட்டு செய்யமுயன்றார்- என்பதே கிரணிற்கான தண்டனையைக் குறைக்கின்றது. கொலை நடந்த சந்தர்ப்பத்தில் எப்படியான மனநிலையில் கிரண் இருந்தார் என்ற ஒரு பொலிஸின் சாட்சியே கிரணிற்கான முக்கிய சாட்சியாக இருக்கின்றது. அவ்வாறு நிரூபிக்கப்படாதவிடத்தில் கிரணிற்கு ஒரு கொலையைச் செய்தவருக்கான தண்டனையே வழங்கப்பட்டிருக்குமென்பது நினைவில் கொள்ளக்கூடியது.

(2)

இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தான், போர்டர் ரவுண் (Bordertown) என்ற ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez), அன்ரோனியோ பாண்டரஸ் (Antonio Banderas) நடித்த படத்தைப் பார்த்திருந்தேன். மெக்ஸிக்கோ-அமெரிக்க எல்லையில், மெக்ஸிக்கோ சுதந்திர வர்த்தக வலயத்தில் (Free Trade Zone) அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் கொலை செய்து புதைக்கப்படும் உண்மைச் சம்பவங்களை அடையாளப்படுத்துகின்றது. சுதந்திர வர்த்தக வலயத்தில் இருக்கும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) குட்டிச் சர்வாதிகாரிகள் போலச் செயற்படுகின்றன. தமக்கான தனிப்பட்ட சட்டதிட்டஙகளை கொண்டு, இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இத்தொழிற்சாலைகள், இளம்பெண்களை வேலைக்கு எடுப்பதில் முக்கிய கவனம் எடுப்பதோடு, (அப்போதுதான் அவர்கள் ஓய்வில்லாது வேலை செய்து தமது நிறுவங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்) இரவு நேரங்களில் வேலை முடிந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறு வீடுதிரும்பும் வழிகளில் பல பெண்கள் காணாமற்போகின்றார்கள். அப்படியொருநாள் வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்ச்சியிற்கு உள்ளாக்கப்பட்டு அரையுயிருடன் தப்பும் ஒரு பூர்விக குடிப்பெண்ணின் மூலம் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரத்தொடங்குகின்றன. ஆனால் இந்த உயிருள்ள சாட்சியைக் கொலைசெய்ய பலர் தீவிரமாக முயற்சிக்க, அந்தப்பெண் ஒரு பத்திரிகையின் உதவியை நாடுகின்றார். அதே சமயம், இவ்வாறு பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பெண்களின் செய்தியறிந்து சிகாகோவிலிருக்கும் ஒரு பத்திரிகை, செய்திகள் சேகரிப்பதற்காய் தமது நிருபரை (ஜெனிபர் லோபஸை) மெக்சிக்கோவிற்கு அனுப்புகிறது. சுதந்திர வர்த்தக வலயங்களில் நடக்கும் கொடூரங்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையினூடு கட்டுரைகளாக எழுதி ஜெனிபர் தனது பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்புகிறார். இந்தக்கதைகள் வெளியுலகத்திற்கு வந்தால்தான் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணின் எதிர்கால வாழ்வு காப்பற்றப்படும் என்ற நிலையிலும், அமெரிக்க பத்திரிகை நிறுவனம் அந்தக்கட்டுரைகளை பிரசுரிக்க மறுக்குகின்றது. கோபம் கொண்டு நிருபர் (ஜெனிபர்) வினாவுகின்றபோது, பத்திரிகை உடபட எல்லாமே பெருநிறுவனங்களால் ஆளப்படுபவை; அவற்றிற்கு எதிராய் எதையும் எழுதிவிடமுடியாது என்ற காரணம் கூறப்படுகிறது. இதற்கிடையில் மெகிசிக்கோவில் ஜெனிபருக்கு உதவியாக இருக்கின்ற பத்திரிகையாளர் (அன்ரோனியோ பண்டர்ஸ்) கொல்லப்படுகின்றார். இனி அமெரிக்கப் பத்திரிகையில் தனக்கு வேலை வேண்டாம் என்று தனது வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வருகின்ற ஜெனிபர் தனது நண்பரின் மெக்ஸிக்கோ பத்திரிகையில் இணைந்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.

இறுதியில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மனித உரிமைகள் அமைப்பால் பாதுகாக்கப்பட்டு, அவரைப் பாலியல் வன்புணர்ந்து கொலைசெய்ய முயன்ற சில கொலைகாரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். எனினும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபடி இருக்கின்றன. இந்தக்கொலைகள் நடப்பதை ஏதோவொருவகையில் அமெரிக்கப் பெருநிறுவனங்களும், மெக்ஸிக்கோ அரசும் அங்கீகரிக்கின்றன என்ற குறிப்புகளை விட்டபடி திரைப்படம் நிறைவுறுகிறது. வறுமையான கிராமப்புறங்களிலிருந்து வரும் பெண்கள் பாலியல் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கில் அடையாளங்கள் இல்லாது மறைக்கப்படுவது குறித்து எவருக்கு அக்கறையிருக்கப்போகின்றது? அரசுக்கு தமது கெளரவம் வெளியுலகில் கெட்டுவிடக்கூடாது என்ற கவலையும், பெரு நிறுவங்களுக்கு இவ்வாறான செய்திகளால் தமது இலாபம் பாதிக்கப்படும் என்ற பதட்டம் வருவதும் 'சாதாரண'மானதே.

bDGood

உழைப்பவர்களை மனித இயந்திரங்களாக்கி ஓய்வுநேரங்களையும் மனித விழுமியங்களையும் மூன்றாமுலக நாடுகளில் விழுங்கி ஏப்பமிட்டுக்கொண்டிருக்கும் உலகமயமாதலின் விளைவுகள் குறித்து விரித்து ஆராய வேண்டிய அவசியம் இங்கு தேவையில்லை. இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத்தில் இருந்தபோது, 'இலங்கை வளநாட்டை பொருளாதாரத்தால் உயர்விக்க அமைக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயங்களையும், வந்திறங்கிய நிறுவங்களையும்' பாடப்புத்தகங்களில் வாசித்த குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன. கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் எங்களோடு பஸ்ஸிலும், நடந்தும் வருகின்ற சுதந்திர வர்த்தக வலயத்தில் உழைப்பவர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள்/சுரண்டல்கள் குறித்து நிதானமாய் இப்போது யோசித்துப்பார்க்கமுடிகின்றது. அதைவிட made in Sri Lanka, made in Bangaladesh என்று வருகின்ற ஆடைகளை அணியும்போது எத்தனைபேரின் உழைப்பு மிகக்கேவலமாய் சுரண்டப்பட்டிருக்கும் என்பது குறித்தும் கவலைப்படவேண்டியிருக்கிறது.

இப்படத்தை எடுக்கும்போது மெக்ஸிக்கோ நாட்டின் கண்காணிப்பு அதிகளவு இருந்தது என்று இப்படம் எடுத்தவர்களின் குறிப்பு கூறுகின்றது. அதைவிட அமெரிக்கா பெருநிறுவங்களை இதை எப்படி உன்னிப்பாய் கவனித்திருக்கும் என்பது குறித்துக் கூறத்தேவையில்லை. தமது நடிப்புத் தொழில் இவ்வாறான ஒரு படத்தில் நடிப்பதால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை மீறி, இப்படத்தில் நடிக்கமுன்வந்த ஜெனிபஸ் லோபஸும், அன்ரோனியோ பண்டரஸும் பாராட்டப்படக்கூடியவர்கள். மேலும் இப்படி பிரபலமானவர்கள் நடிக்கின்றபோடு இவ்வாறான திரைப்படங்கள் பரவலான பார்வையாளர்களைப் போய்ச்சேரும் என்பதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Provoked, BorderTown போன்ற படங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படவேண்டும். பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டு விரிவான உரையாடல்கள் வளர்க்கப்படவேண்டும். அவற்றின் மூலமான அதிர்வுகள் ஆட்சியிலிருப்பவர்களையும், அதிகாரங்களை ஆக்குபவர்களையும் சலனமடையச் செய்தாலே பல மாற்றங்கள் சாத்தியப்படக்கூடும். கிரண் தனது வழக்கின் முடிவில் கூறுவார், இங்கே நான் பாதிக்கப்பட்டேன், விடுதலை பெற்றுவிட்டேன் என்று மகிழ்ச்சியடைய முடியாது, வெளியில் சொல்லப்படாத பல கதைகள் சொல்லப்படாமலே இருக்கின்றன. அவை குறித்தும் நமது பார்வைகள் விரியவேண்டும் என்பது நம் எல்லோருக்குமானது.