கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அடையாளங்களைப் புறக்கணித்தல்

Friday, March 28, 2008

-M.G.Vassanji யின் The Assassin's Songஜ முன்வைத்து-

1.
நம்பிக்கைகள் சிலதோடு வாழ்பவரை விட, அதீத நம்பிக்கைகள் எவற்றிலும் இல்லாது வாழ்பவரைச் சமூகம் அதிகவேளைகளில் புறக்கணித்துவிடுவதாகவே இருக்கின்றது. அதேபோன்று எந்த மதமும் எமக்குச் சம்மதமில்லை என்பவரையோ அல்லது எல்லா மதங்களும் எமக்கு ஒரே மாதிரியானது என்பவரையோ சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்வள்வதுமில்லை. 'உனக்குரிய தெரிவை, உனக்கான அடையாளத்தை தெளிவாய் முன் வை' என்றுதான் உலகம் வன்முறையான முறையில் கேட்கின்றது. எமக்கான தெளிவான அடையாளம் என்ற ஒன்றில்லாது எல்லாவற்றோடும் இயைந்தும் முரண்பட்டும் கொண்டிருக்கின்றோம் என்றால் ஏளனப் பார்வையை வீசியபடி மனிதர்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு எந்த மதமும் தமக்குரிய தனித்த அடையாளமில்லையெனவும் (அல்லது எல்லா மதமும் தமக்குச் சம்மதமென) நினைத்து வாழும் சூஃபி மாந்தர்களின் வாழ்வைப் பகிர முனையும் புதினந்தான் எம்.ஜி.வசாஞ்ஜி எழுதிய The Assassin's Song என்ற புதினம்.

இப்புதினத்தின் கதை, ஹசன் என்ற கதை சொல்லியின் மூலமாகச் சொல்லப்படுகின்றது. குஜராத்தில் ஒரு சிறுகிராமத்தில் வளரும் ஹசனின் வாழ்வோடு, அம்மக்களின் வாழ்வியல், கலாசாரம் போன்றவை விபரிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் சமாந்தரமாய் கி.பி 12ம் நூற்றாண்டில் ஒரு நாடோடியாக அலைந்து திரிந்த நூர் பஸால் (Nur Fazal) என்ற சூஃபியின் கதையும் மாறி மாறி அத்தியாயங்களுக்குள் சொல்லப்படுகின்றது. இவ்வாறாக மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து அலைந்து திரிந்து இந்தியாவில் தங்கியிறந்துபோன நூர் பஸால் சூஃபியின் வழித்தோன்றல்களே ஹசன் போன்றவர்களாவார்கள். இஸ்லாமிய மதத்தையோ அல்லது இந்து மதத்தையோ சாராது தமக்குரிய கலாசாரங்களுடன், தனித்த வழிபாட்டு முறைகளுடன் இருக்கும் சூஃபியின் கோயிலுக்கு ஹசனின் தந்தையாரே பொறுப்பாக இருக்கின்றார். பலவேறு இடங்களிலிருந்து மக்கள் தமது நோய, இன்னபிற கஷ்டங்களைத் தீர்க்கும் பொருட்டு ஹசனின் தந்தையாரையும், சூஃபியின் சமாதியையும் நாடி வருகின்றார்கள்.

ஒரு கட்டத்தில் பதின்மவயதிலிருக்கும் ஹசனை, அவரது தந்தையார் தனக்குப்பிறகு கோயிலை வழிநடத்தும் குருவாக (Saheb) அறிவிக்கின்றார். குஜராத்தில் பல்வேறு காலகட்டத்தில் இந்து - முஸ்லிம் கலவரம் நடந்தபோதும் சூஃபி வழிபாட்டில் நம்பிக்கையுள்ள இந்நகரம் வன்முறையால் பாதிப்படைந்ததில்லை. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹசனின் மாமனார் ஒருவரான ராஜ்கோபால் பாகிஸ்தானுக்குச் சென்று தனது பெயரை இக்பால் என மாற்றி முஸ்லிமாக வாழத்தொடங்குகின்றார். ஹசனின் வளரிளம்பருவத்தில் இந்து - முஸ்லிம்களுக்கிடையில் அவர்கள் இருந்த ஊரில் கலவரக்கொதிப்பு மனோநிலை வெடித்துக்கிளம்பும்போது (அது விரைவில் அணைந்தும்விடுகின்றது), ஹசன், தனது தந்தையிடம் நாம் முஸ்லிம்களா அல்லது இந்துக்களா? எவரைத் தெரிவு செய்யவேண்டும்? என வினாவுகிறார். தந்தையார், நாம் எந்த மதத்திற்கும் உரியவர்களில்லை (அல்லது நாம் எல்லா மதங்களாகவும் இருக்கின்றோம்) என்று தெளிவுபடுத்துகிறார்.

ஊரில் இந்து முன்னணி அமைப்பு, ஒன்று சீன-இந்தியா எல்லை மோதலிற்குப் பின், 'இந்தியத் தேசியத்தை' முன்வைத்து வீரியம் பெறுகின்றது. அந்த இந்து முன்னணியின் தலைவர், தம்மிடம் இந்து கலாசாரம் மற்றும் இந்தியத் தேசியம் குறித்து அறிய, வகுப்புக்களுக்கு ஹசனை அனுப்பக் கேட்கும்போது, ஹசனின் தந்தையாரும் மறுக்காது அனுப்பி வைக்கின்றார். ஆரம்பத்தில் பாடங்களைக் கற்பித்தலாயிருக்கும் இந்து முன்னணியினரின் வகுப்புக்கள், பிறகு தடிகள், கத்திகளுடன் சண்டைப் பயிற்சி வகுப்புக்களாய் மாற்றம் பெறுகின்றன. ஹசனின் நடுப்பெயரில் வரும் முஸ்லிம் பெயரைத் தொடர்து கேலி செய்து வரும் இந்து முன்னணியின் தலைவர், ஒருநாள் பயிற்சி வகுப்பின்போது சண்டையில் ஒரு 'இந்து' மாணவனை ஹசன் வென்றது பிடிக்காது ஹசன் மீது காழ்ப்புக் கொள்ளத் தொடங்குகின்றார்.


இவ்வாறு வளர்ந்துகொண்டிருக்கும் ஹசன், தான் நம்பிய சூஃபி வழிபாட்டில் சில அபத்தங்களைக் கண்டுகொள்கின்றார். முக்கியமாய் அவர்களின் கோயில், தந்தையார் என்ற எதுவும் 'பரிசுத்தமானதல்ல' என்ற புரிதல்களை வந்தடைகின்றார். தனது தந்தையும், முடிசூட்டப்பட்ட தனது எதிர்கால 'குரு' பதவியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அவதானிக்கும் ஹசன், அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின்பேரில் விண்ணப்பிக்கின்றார். எதிர்பாராத விதமாய் ஹவார்ட் வளாகத்திற்கு ஹசனுக்கு அனுமதியும் கிடைக்கிறது. ஹசன், தகப்பனின் விருப்பையும் மீறி அமெரிக்கா செல்கின்றார்; எனினும் திரும்பி வந்து தானொரு சாகிப்பாய் தனது முன்னோரான சூஃபியின் கோயிலில் பணியாற்றுவேன் என்ற வாக்குறுதியையும் தனது தந்தையிற்கு வழங்குகின்றார்.

அமெரிக்காவின் புதிய சூழலுக்கு தன்னைப் பழக்கப்படுத்துவதற்கு ஹசன் தொடக்ககாலங்களில் மிகவும் கஷடப்படுகின்றார். அதேவேளை எவரது கண்காணிப்புமின்றி தனது இயல்போடு இருக்கவிடும் அமெரிக்கச் சூழல் ஹசனுக்குப் பின்னாட்களில் பிடித்துப்போகின்றது. அவரின் பிற நண்பர்களில் அநேகர் குடியும், பெண் நண்பிகளுமெனத் திரிய, கீழைத்தேச நாடொன்றிலிருந்து வரும் ஹசனுக்கு இவற்றை எவ்வாறு எதிர்கொள்வதென்ற சிக்கல்கள் வருகின்றன. அதேசமயம், தான் தனது கிராமத்திலிருந்து அந்நியப்பட்டு விலகிப்போய்க்கொண்டிருக்கும் அவலமும் ஹசனுக்கு உறைக்கின்றது. இவ்வாறான அல்லாடல்களுக்கிடையில் ஒருநாள், 'தாயிற்குச் சுகமில்லை அவசரமாக வரவும்' என்ற தந்தியோடு ஒரு வழிப்பாதை ரிக்கெட்டும் கூடவே ஏற்பாடு செய்து ஹசனின் தந்தையார் அனுப்புகின்றபோது, இது தன்னை இந்தியாவுக்கு அழைத்து அங்கேயே இருத்தவிரும்பும் அப்பாவின் எண்ணமென்ற யோசனையில் ஹசன் இந்தியாவிற்குப் போவதை நிராகரிக்கின்றார். எனினும் தன் மீது மிகவும் பிரியம் வைத்திருக்கும் அம்மாவிற்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்ற சிந்தனை ஹசனைத் தினமும் அலைக்கழித்தபடி இருக்கின்றது. ஒரு கட்டத்தில் எங்கேயும் (அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ) தன்னை முழுமையாக பொருத்த முடியாத அவதியில் மிகவும் மனவுளைச்சலுக்குள்ளாகி மனநோய் வைத்தியரைப் பார்க்கத் தொடங்கின்றார்.


2.
ஹசன் தனது கலாநிதிப் பட்டத்தை முடிக்கின்றகாலகட்டத்தில் இந்திய-ஆங்கிலேய கலப்புப் பெற்றோருக்குப் பிறந்த மார்கியைச் (Marge) சந்திக்கின்றார். பிறகு, அந்தப்பெண்ணையே திருமணஞ்செய்து, அப்பெண்ணின் பெற்றோர்களிலிருக்கும் கனடாவின் வினிபெக் நகரில் கல்லூரி பேராசிரியர் வேலையையும் எடுத்துக்கொண்டு ஹசன் தனது குடும்ப வாழ்வைக் கன்டாவிலேயே தொடங்குகின்றார். தனது திருமண விடயத்தை மட்டும் இந்தியாவிலிருக்கும் பெற்றோருக்குத் தெரிவிக்கும் ஹசன், கொஞ்சம் கொஞ்சமாய்த் தனது இந்தியத் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்கின்றார் (இக்காலகட்டத்தில் ஹசன் என்ற தனது பெயரை கிருஷ்ணா எனவும் மாற்றிக்கொள்கிறார்). ஹசனும் அவரது துணைவியாரும் அவர்களின் ஒரே மகன் மீது அளவற்ற பிரியங்களை வைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் உதைபந்தாட்டம் ஆடியபின் சாலையை கடக்கும் சந்தர்ப்பத்தில் காரொன்றினால் அடிக்கப்பட்டு அவர்களின் பிரிய மகன் கொல்லப்படுகின்றான். நாம் இவ்வளவு காலமும் சந்தோசமாய் வாழ்ந்தோம் எனினும் எனது குழந்தை இறந்ததன் பிறகு என்னால் இங்கே வாழமுடியாதென ஒரு நாள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு ஹசனின் துணைவியார் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுகின்றார். இவ்வளவு காலமும் அழகாகவும் மகிழ்வாகவும் இருந்த இல்லற வாழ்வுக்கு தனது மகன் மட்டுமா ஒரே அடித்தளமாய் இருந்தாராவென குடும்ப உறவின் அபத்தம் குறித்து ஹசன் யோசிக்கத் தொடங்குகின்றார். தனது துணைவியார் அவரது -கடந்தகால- பாடசாலை நண்பரொருவனோடு வன்கூவரில் சேர்ந்து வாழ்கின்றார் என பின்னாட்களில் ஹசன் அறிந்துகொண்டாலும், அவர் தொடர்ந்து அதே நகரத்திலே தங்கியபடி, கல்லூரியில் கற்பித்தபடி, தனியாளாக வாழந்துகொண்டிருக்கிறார்.

ஒருநாள் வினிபெக்கில் தற்செயலாக சந்திக்கும் தனது ஊர்க்காரரால் ஹசனுக்கும் அவரது தந்தையிற்குமான உறவு மீண்டும் கடிதம் வாயிலாகப் புதுப்பிக்கப்படுகின்றது. தனது தாய் இறந்துவிட்டதை ஹ்சன் அறிகின்றார்; தந்தையும் தனது பேரக்குழந்தை இறந்த துயரைக் ஹசனுடன் பகிர்ந்துகொள்கின்றார். 70களில் இந்தியாவை விட்டு வெளியேறிய ஹசன் 2000 வரை இந்தியாவுக்குத் திரும்பி ஒரு முறைகூட போகாதிருக்கின்றார் என்ற அவலம் அவருக்கு உறைக்கின்றது. ஹசனின் தந்தையாரும் தான் சாக முன்னர் ஒருதடவையாவது ஹசனை மீண்டும் தனக்குப் பார்க்க விருப்பமிருப்பதாய்ச் சொல்கின்றார். இந்த நேரத்திலேயே குஜராத்தில் மீண்டும் -கோத்ரா இரெயினை எரித்ததோடு- கலவரம் மோசமாக நிகழத் தொடங்குகின்றது. அதுகுறித்து இணையம்/தொலைக் காட்சி மூலம் அறிகின்ற ஹசன் இதற்கு முன்னர் வன்முறை தீண்டப்படாத கிராமமாய் இருந்த தனது கிராமம் இந்தமுறையும் தப்பும் என நினைத்துக்கொள்கின்றார். எனினும் நிலைமை தலைகீழாகப் போகின்றது. தமது கோயிலில் அடைக்கலமான மக்களைக் காப்பதன் பொருட்டு உரையாட முன்வரும் ஹசனின் தந்தையை, இந்து வன்முறைக்குழு ஒன்று வெட்டிக்கொல்கின்றது. முஸ்லிமாய் மாறிப்போன ஹசனின் இளைய சகோதரன் மன்சூரை (முஸ்லிமாய் ஆனபின் ஒமர்) கோத்ரா இரெயின் எரிப்பில் ஒரு குற்றவாளியாகப் பொலிஸ் தேடத் தொடங்குகின்றது.

இறுதியில் இந்தியாவுக்கு -30 வருடங்களின் பின் - ஹசன் பயணமாகின்றார். உருக்குலைந்து போன தனது கிராமத்தைக்கண்டு மனம் வெதும்புகின்றார். பொலிஸால் தேடப்படும் தனது சகோதரை இரகசியமாகச் சந்திக்கும் ஹசன், பொலிசிடம் அவரைச் சரணடையும்படி வேண்டுகின்றார். கோத்ரா எரிப்புச் சம்பவத்தில் தான் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லையென்கின்ற மன்சூர், பொலிஸில் சரணடைந்தால், தன்னையும் என்கவுண்டர் முறையில் கோத்ராவில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களைப் போல பொலிஸார் கொன்றுவிடுவார்கள் எனப் பயப்பிடுகின்றார். இறுதியாக மன்சூர் தப்பியோடி பாகிஸ்தானுக்குப் போனதாய்ச் செய்தி ஹசனுக்கு வருகின்றது.

இதற்கிடையில் இதுவரை மறைக்கப்பட்ட நூர் பஸால் பற்றிய உண்மையை ஹசன் அறிந்துகொள்கின்றார் (சூஃபியின் வரலாற்றை அறியும் ஆதிப்பிரதிகள் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே வாசிக்கமுடிகின்றமாதிரி ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றது). இன்று ஒரு ஞானியாக மதிக்கப்படும் நூர் பஸால் ஒரு Assassin என்பதை ஹசன் அறிகின்றார் (Nur Fazal the sufi, I concluded, had been an Assassin. Everything I read in the book in my hand seemed to confirm this (p 302)). ஈரானின் மேற்குப் பகுதியில் இஸ்மாயில்ஸ் (assassin) என்றொரு சமூகம் இருந்தது(?) எனவும், அவர்கள் பிற முஸ்லிம்கள் செய்யும் தொழுகையையும், ஷரியா போன்ற மதச்சடங்குகளையும் நிராகரிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் எனவும் ஹசன் அறிந்துகொள்கின்றார். இவ்வாறு assassin சமூகத்தில் பிறந்த நூர் பஸால் இந்தியாவுக்கு வந்து அலைந்து திரிந்து அனுபவங்கள் பெற்று ஒரு ஞானியாகி இந்து அரசன் ஒருவனின் (விஸால் தேவ்) மகளைத் திருமணம் செய்து கொள்கின்றார். எனினும் இவரொரு Assassin யாய் இருந்தார் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும், மிகுதி அனைவருக்கும் அவர் ஒரு சூஃபி ஞானியே (Pir Bawa).

இனி தனது வாழ்க்கையில் என்ன செய்வது என்று யோசிக்கின்ற ஹசன், இன்னமும் தன்னையொரு சாகிப்பாய் -சூஃபி ஞானியின் வழித்தோன்றலாய்- நினைத்துக்கொள்கின்ற மக்களுக்காய் தனது ஊரிலேயே தங்கிவிடத் தீர்மானிக்கின்றார். சீரழிக்கப்பட்ட சூஃபியின் கோயிலையும், மக்களின் வாழ்வையும் கட்டியெழுப்பப் போவதனான ஹசனின் நம்பிக்கைப்பார்வையினூடாக இப்புதினம் முடிகின்றது.

3.
எம்.ஜி.வசாஞ்ஜி, இப்புதினத்திற்கு பின்னிணைப்பாய் -நூர் பஸால் என்ற பாத்திரம்- கற்பனையே என்றும் ஆனால் மத்திய காலத்தில் முஸ்லிம் ஞானிகள் இந்தியாவுக்கு வந்தது வரலாற்று உண்மையெனவும் குறிப்புகள் கொடுத்திருக்கின்றார். இந்தக் குறிப்புகளை ஒரு புறமாய் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், இப்புதினம் இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றை நிராகரித்து வேறொரு பார்வையில் நாம் சிந்தித்துப் பார்க்கும் வெளிகளைத் தருகின்றதென்ற புரிதல்கள் எமக்கு வரக்கூடும். எழுதப்பட்ட வரலாற்றையெல்லாம் கலைத்து மாறி மாறி ஆடிப் பார்க்கும் ஆட்டம் என்பதே ஒரு சுவாரசியமான ஆட்டந்தானே. வரலாற்றை மட்டும் பார்த்துத் தேங்கிவிடாது, நிகழ்காலத்திலும் வந்திறங்குவதால் இந்தப் புதினம் இன்னும் அதிக கவனம் பெறுகின்றது. இன்னும், போகின்றபோக்கில் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டு ஆசிரியர் போகின்றாரே தவிர, இந்து, முஸ்லிம் மக்களைப் பற்றி அதிகம் காழ்ப்புணர்ச்சியின்றி - சார்புநிலை எடுக்காது- எழுதப்பட்டிருப்பது இதமாயிருக்கிறது. இப்புதினத்தில் பலரது பாத்திரங்கள் மர்மம் நிறைந்த வெளிகளாக விடப்பட்டிருக்கின்றன. கோத்ரா கலவரத்தில் ஹசனின் சகோதரர் சம்பந்தப்படவில்லையென்பதை மன்சூரைக் கொண்டே மறுதலிக்கப்படுகின்றதே தவிர, ஆசிரியர் எந்த ஒரு தெளிவான முடிவையும் வாசகரிற்கு கொடுக்காத இடைவெளியாக விடுகின்றார். அதேபோன்று ஹசனின் தகப்பனை வெட்டிக்கொல்கின்ற இந்து முன்னணிக்குழுவினர், சூஃபியின் கோயிலுக்குள் அடைக்கலம் புகுந்த -இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடில்லாத- மக்களை என்ன செய்தார்களெனற பகுதியும் பூர்த்திசெய்யப்படாதே இருக்கின்றது. (குஜராத்தில் கலவரம் நடந்தபோது, தாம் இந்துக்கள் என்று சொல்லித் தப்ப முயன்ற முஸ்லிம்களை ஆடைகளை அகற்றி அடையாளம் கண்ட அதிவன்முறையையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்). இந்நாவலை வாசித்து முடிக்கும்போது மத அடையாளங்களோடு இருப்பவரை விட, அவ்வாறு எந்த அடையாளங்களுமின்றி இருப்பவருக்கான உலகந்தான் இன்னும் அச்சமூட்டுவதாய்...., பாதுகாப்பில்லாதிருக்கின்றது என்ற உணர்வே மேலோங்குகின்றது.

இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இருக்க விரும்பாத (அல்லது இரண்டாகவும் இருக்கவிரும்பும்) சூஃபிகள் சமூகம் பற்றிய இக்கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது, நினைவலைகள் பால்யங்களை நோக்கி ஓடத்தொடங்கியது. ஈழத்துக் கல்விமுறையில் மூன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை 'சமயம்' ஒரு கட்டாய பாடமாக இருக்கின்றது. நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாத பெற்றோராயிருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு சமயம் ஒன்றைத் திணித்து கற்பிக்கச் செய்யத்தான் வேண்டும். அத்தோடு தெரிவு என்பது ஒன்றாகவிருக்கும்போது, வெவ்வேறு சமயங்களில் கலப்புத் திருமணஞ்செய்த பெற்றோர் இரண்டு 'சமயங்களை'த் தெரிந்தெடுத்து பிள்ளைக்குக் கற்பித்துவிடவும் முடியாது. அதைவிட அபத்தமாய், 'சமயம்' என்கின்ற கட்டாயப் பாடத்தில் உங்களுக்குரியதாய் நினைக்கும் 'மதம்' குறித்துக் கற்பிப்பார்களே தவிர எல்லா மதங்களையும் அறிந்துகொள்கின்ற கற்கை நெறிகளும் நமது பாடத்திட்டத்தில் இல்லை. சமயத்தோடு இயைந்து வாழும் ஒவ்வொருவரும் தமது நாளாந்த வாழ்வில் தமது சமயம் குறித்து அறிவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. ஆனால் பிறமதங்கள் குறித்து அறிவைப் பரவலாக பெறுவதற்குரிய இடமாக இருக்கும் பாடசாலையோ அந்த வெளியை மறுத்து, 'உனக்குரியதான மதத்தை மட்டும் கற்க' என்று கூறுகின்றது. இவ்வாறான சூழலிலிருந்து வெளியேறும் மாணவர்கள் எங்ஙனம் மத நல்லிணக்கத்தோடோ, பிற மதங்கள் குறித்த சகிப்புத்தன்மையோடோ பாடசாலையிலிருந்து வெளியேற முடியுமென எதிர்பார்க்கமுடியும்? இன்னும், பதின்மங்களில் தமது சுய அறிவை வளர்த்துக்கொண்டு சமயத்தை மறுக்கவிரும்பும் மாணவருக்கு எந்த ஒரு தெரிவையும் எமது கல்விச் சமூகம் வழங்குவதேயில்லை என்பதுதான் எவ்வளவு அபத்தமானது.


(படங்கள்: chapters.ca)
(வைகறையிற்காய் எழுதப்பட்டது)

'வெளி'யை மீறும் பெண்கள்...

Thursday, March 13, 2008

-Volver மற்றும் Aksharayaவை முன்வைத்து-

அகஞ்சார்ந்த பிரச்சினைகள் நம்மைத் தினமும் அல்லாட வைத்துக்கொண்டிருக்கின்றன. பொது விடயங்கள் குறித்து பிறரோடு வெளிப்படையாகப் பகிரவோ, விவாதிக்கவோ முடிகின்ற அளவுக்கு நம்மால் நம் அகமனதின் தத்தளிப்புக்களை அவ்வளவு எளிதாய்ப் பகிரமுடிவதில்லை. சிலவேளைகளில் பகிர்வதற்கான எமது அகமனத்தடைகளை உடைத்து வெளியே வந்தாலும் அதனை எப்படிப் பிறருக்குப் புரியவைப்பதென்ற நிறைந்த சிக்கல்களும் இருக்கின்றன. அதேபோன்று நமது அகமனதை முழுதாய்த் திறந்து வைக்கும்போது நம்மையறியாமலே நமது கள்ளங்களும் கபடங்களும் வெளியே வந்துவிடும் என்ற தயக்கங்களும் நம்மில் பலருக்கு உண்டு. பகிரவேண்டிய விடயங்கள் உரிய நேரத்தில் பகிரப்படாது போனதால் சிதைந்துபோன உறவுகள்..., வாழ்வைத் தொலைத்த மனிதர்கள்..., பால்யங்கள சிதைந்த சிறார்களென... பலரை வாழ்க்கையின் ஏதோவொரு புள்ளியில் நாம் சந்திக்கவும் செய்கின்றோம்.

Pedro Almodovarன், Volverம், அசோக ஹந்தகமவின் Aksharaya (A Letter of Fire)ம், சொல்லப்படவேண்டியவை சொல்லவேண்டிய காலத்தில் சொல்லப்படாமல் போனதால் ஏற்படும் பாதிப்புக்களை வாழ்க்கையின் போக்கில் நின்று பதிவுசெய்கின்றன. சொல்லப்படவேண்டியவற்றை சொல்லாமற்சென்றதால் சொல்லாமல்விடுபவரை மட்டும் அச்சம்பவங்கள் பாதிப்பதில்லை; தொடர்ந்து அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் பாதித்துக்கொண்டிருக்கின்றன என்பதைத்தான் இவ்விரு படங்களும் வெளிப்படுத்த அதிகம் முயற்சிக்கின்றன. நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் நமது கடந்தகாலம் நம்மைப் பின் தொடர்ந்து வந்து தன் கொடிய கரங்களுக்குள் இழுத்துக்கொளள முயற்சிப்பதுண்டல்லவா? அவ்வாறுதான் இக்கதை மாந்தர்கள் பலரின் வாழ்வு இருக்கின்றது. சிலர் கடந்தகாலத்தின் கசப்பைப் புரிந்துகொண்டு கடந்துசெல்கின்றார்கள்; வேறு சிலரோ கடந்தகாலத்தில் சிக்குப்பட்டு தமது நிகழ்கால வாழ்வையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்கின்றார்கள்.

பெட்ரோ அல்மொடோவரின் அநேக படங்களைப்போல இதுவும் பெண்களைச் சுற்றியே சுழல்கின்றது (All About My Motherன் சாயல் சற்று இப்படத்திலுண்டு). Raimunda மற்றும் Sole என்ற இரண்டு சகோதரிகள், தீ விபத்தில் கொல்லப்பட்ட தமது பெற்றோரின் கல்லறைகளைச் சுத்திகரித்து அவர்களின் இழப்பை நினைவுகொள்வதோடு படம் ஆரம்பிக்கின்றது. கிழக்குக் காற்று வேகமாய் வீசுகின்றது; இவ்வாறான ஒரு பருவத்திலேதான் இவர்கள் தமது பெற்றோரைத் தீவிபத்தில் பலிகொடுத்தவர்கள். அதேசமயம் இப்பெண்களின் பக்கத்துவீட்டுப் பெண்மணியும் (Agustina) கல்லறையிற்கு வருகின்றார். Agustinaவின் தாயார் ஹிப்பி வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்; அடிக்கடி வீட்டை விட்டும் ஓடிப்போகின்றவரும் கூட. இறுதியாக, பக்கத்து வீட்டில் நடந்த தீவிபத்தோடு ஓடிப்போனவர் இன்னும் வீடு திரும்பாமல் Agustinaவால் தேடப்பட்டுக்கொண்டிருப்பவர்.

Raimundaவும் Soleம் தமது கிராமத்திலிருக்கும் அன்ரியொருவரைச் சந்தித்துவிட்டு, அவர்கள் தற்சமயம் வாழ்ந்துகொண்டிருக்கும் மெட்ரிக் நகரிற்குத் திரும்புகின்றனர். இவ்விருவரில் Sole தனது துணையை விவாகரத்துச் செய்துவிட்டு வீட்டோடு சிகையலங்காரக் கடைவைத்து வாழ்வை நடத்திச் செல்பவர். மற்ற மகளான Raimundaக்கு துணைவரும், பதின்மத்தைத் தொட்ட ஒரு மகளுமுண்டு. பெற்றோரின் கல்லறையிலிருந்து வீடு போய்ச்சேருகின்ற Raimundaவிடம், தனக்கு வேலை போய்விட்டதென கணவர் கூற தனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து Raimunda கவலை கொள்கின்றார்.

ஒருநாள் வீட்டில் தனியேயிருக்கும் Raimundaவின் கணவன், அவரது மகளை பாலியல் வன்புணர்ச்சியிற்கு உட்படுத்த முயற்சிக்கின்றார். 'என்னைத் தொட்டால் கத்தியால் குத்திவிடுவேன்' என்று பயமுறுத்துகின்ற மகளிடம், 'நீ எனக்குப் பிறந்த மகளில்லை'யெனச் சொல்லி வன்புணர்ச்சியிற்குக் கட்டாயப்படுத்தும்போது, மகள் குசினியிலிருக்கும் கத்தியால் தகப்பனைக் குத்திக் கொன்றுவிடுகின்றார். வேலையால் வீட்டுக்கு வருகின்ற Raimundaவிடம் நடந்தததை மகள் விபரிக்கின்றார். என்ன செய்வதென்று முதலில் திகைக்கின்ற Raimunda கணவனின் உடலத்தை வீட்டினில் மறைத்துவைக்கின்றார். பிறகு நேரம் பார்த்து தொலைத்தூரத்திலிருக்கும் ஆற்றோரமாய் கணவனின் உடலை எவருக்குந் தெரியாமல் புதைத்தும்விடுகின்றார். உறவுகள், சுற்ற்த்திடம் தனது கணவன் தன்னைவிட்டு ஓடிப்போய்விட்டாரென Raimunda கூறுகின்றார். Raimundaவின் மகள், கொல்லப்பட்டவர் தனது வளர்ப்புத் தந்தையெனில், யார் தனது உண்மையான தகப்பன் எனக்கேட்கின்றபோது உனது தந்தையார் கிராமத்திலிருந்தார் என்று கூறி அவரது வாயை Raimunda அடைத்துவிடுகின்றார்.

இதேசமயத்தில் கிராமத்திலிருக்கும் Raimundaவின் பிரிய அன்ரி இறந்துபோகின்றார். கணவரின் உடலை மறைக்கிற சிக்கலில் இருக்கின்ற Raimundaவால் அன்ரியின் இறுதி நிகழ்வுக்குப் போகமுடியாது போகின்றது; அவரது சகோதரி Sole மட்டும் போகின்றார். அங்கிருந்து Sole திரும்பிவருகின்றபோது ஒரு அதிசயம் நிக்ழ்கின்றது. Sole இறந்துபோன தனது தாயை அவர்களின் அன்ரியின் வீட்டில் காண்கின்றார். கிராமத்தில் -இவர்களின் அன்ரியின் வீட்டில்- இவர்களது தாய் பேய் வடிவில் வந்து கதைப்பதைக் கேட்டதாய் அயலவர்கள் கூறியிருந்தால் -தனது ஆசைகள் வாழுங்காலத்தில் நிறைவேறாததால்தான் தனது தாய் பேய் வடிவில் உலாவுகின்றாகின்றாரோவென ஆரம்பத்தில் நினைக்கும் Sole, பின்னர் தனது தாய் அந்தத் தீவிபத்தில் இறக்கவில்லை என்ற உண்மையை உணர்கிறார்.

Sole தனது நகர வீட்டுக்குத் தாயை அழைத்துவந்து தலைக்கு வர்ணம்பூசி, ஸ்பானிய மொழிதெரியாத ஒரு இரஸ்யப்பெண்மணி போல பிறர் காணும்போது நடிக்கச் சொல்கின்றார். இதற்கிடையில் Raimunda ஒரு உணவுச்சாலையை வாடகைக்கு எடுத்து வெற்றிகரமாக நடத்தத்தொடங்குகின்றார். Raimundaவின் தாயிற்கு Raimundaவைப் பார்க்க விருப்பமிருப்பினும், Raimunda வளரத்தொடங்கிய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தாயை மிக வெறுத்து அவரைச் சந்திக்க விரும்பாதவராய் நகரத்தில் வாழத்தொடங்கியவர் என்ற கடந்தகாலம் தாயைப் பயமுறுத்துகின்றது; எனவே ஒவ்வொருமுறையும் Raimunda, Sole வீட்டிற்கு வரும்போது தாய் ஒளித்துக்கொள்கின்றார்.

இறுதியில் Raimundaவும் தாயும் சந்திக்கின்றனர். அவர்கள் இருவரும் மனந்திறந்து பேசத்தொடங்கும்போது கடந்தகால உண்மைகள் மிகுந்த வலியுடன் வெளிவருகின்றன். Raimundaவின் பிள்ளையினது உண்மையான தந்தை, Raimundaவின் தகப்பனே. இதனால் Raimunda ஒரே நேரத்தில் தனது மகளுக்கு தாயாகவும், இன்னொருவிதத்தில் சகோதரியாகவும் இருக்கின்றார். Raimundaவிற்குத் தனது தாய் மீதான கோபத்திற்குக் காரணம், இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்கின்றது என்பதை அறியாது தாய் அசட்டை/கவனயீனத்தோடு இருந்திருக்கின்றார் என்பதேயாகும். ஆரம்பத்தில் இந்த உண்மை தெரியாதிருக்கும் தாய், உண்மையறிந்தவுடன் கோபத்துடன் தனது கணவனைப் பார்க்கப்போகின்றார். அச்சமயம் அவரின் கணவன் பக்கத்து வீட்டு பெண்மணியுடன் (Agustinaவின் தாய்) படுக்கையில் ஒன்றாயிருப்பதைக் கண்டு கோபத்துடன் வீட்டிற்குத் தீமூட்டிவிடுகின்றார். அதே சமயம் கிழக்குக் காற்று மூர்க்கமாய் வீசுகின்றது. தப்ப வழியின்றி எரிந்துபோகின்றவர்களை க்டுங்காற்று தீயையெழச்செய்து ஏப்பமிட்டுவிட்டதென உற்றாரும் அயலவரும் நம்புகின்றார்கள். இவ்வாறு தீயை மூட்டிய தாய் வேறொரு கிராமத்தில் சில வாரங்கள் பதுங்கியிருந்துவிட்டு இவர்களின் தனித்திருக்கும் அன்ரி வீட்டுக்கு வருகின்றார். அன்ரியும் காரணங்களையறிந்து தனது வீட்டில் தாயைச் சேர்த்துக்கொள்கின்றார். வெளியாட்களுக்குத் தெரியாமல் உள்ளேயே தாய் வாழத்தொடங்குகின்றார். அவ்வப்போது சில தடயங்கள கண்டுபிடிக்கப்பட்டாலும் பேய் போல அவர் உலாவுகின்றார் எனப் பல மிகை உண்மைகளை நம்புகின்ற கிராமத்தவர்கள் இதையும் நம்பிக்கொள்கின்றார்கள்.
இதேவேளை இவரின் கணவரோடு கொல்லப்பட்ட ஹிப்பி தாயாரின் மகள் -Agustina- புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார். இனி Agustinaவையும் சாகும்வரை -Raimundaவின் அன்ரியைப் பராமரித்ததுபோல- பராமரிக்கப்போகின்றென தாய் கிராமத்தில் தங்கிவிட அவரின் பிள்ளைகளும், பேரப்பிள்ளையும் அக்கிராமத்திற்கு வருவதோடு படம் முடிகின்றது. கை நழுவிப்போன சந்தோசமான நாட்கள் மீண்டும் வருகின்றதுமாதிரியும்... வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் பிறரால் பழிவாங்கப்பட்ட இப்பெண்கள் நிம்மதியாக வாழப்போகின்றதுமான எண்ணங்களைப் பார்ப்பவரிடையே இப்படம் விதைக்கின்றது.

இந்தப்படம் பாலியல் இன்னபிற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் 'வாழ்க்கையைத் தொலைத்துப் போகவேண்டும்' என்ற பொதுப் பார்வையை மறுக்குகின்றது. பெண்கள் அவர்கள் அறியாமலே, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறையைக் கடந்துசென்று தமக்குப் பிடித்தமான வாழ்வை வாழ்ந்துபார்க்கலாம் என்ற நம்பிக்கையின் கீற்றை வழங்குகின்றதென்றவகையில் இப்படம் முக்கியமான ஒரு படமே. அதேவேளை தான் தனது தகப்பனால் பாலியல் வன்முறைக்குட்டபட்ட மாதிரி, தனது மகளும் பாலியல் வன்முறைக்குத் தனது கணவனால் பலியாக்கப்படும்போது 'தனது பேசப்படாத மெளனம்' தன்னை மீண்டும் இன்னொருவகையில் வந்து பாதிப்பதை Raimunda பாத்திரத்தினுடாக நாம் அவதானிக்கின்றோம். மேலும் தனது கடந்தகாலத்தின் மூலம் பாடத்தைக் கற்றுக்கொண்ட Raimundaவால் ஒரு கொலை செய்யப்பட்டுவிட்டதே என்ற பதற்றமில்லாது தனது மகளையும் நுட்பமாகக் காப்பற்றமுடிகின்றது. அத்துடன் தனது தாய் தன்னை எதுவுமறியாது அல்லது எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று வளர்த்தது போலவன்றி, Raimunda தனது மகளை வன்முறைகளிலிருந்து தப்புவதற்கான விழிப்புணர்வுடன் வளர்த்திருக்கின்றார் எனபது பார்க்கும் நமக்கும் புரிகின்றது.

கொலைகளை எந்தப்பொழுதிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற நம்பிக்கையுடைய பலரையும் இப்படத்திற்குள் அமிழும்போது அந்த எண்ணத்தை எழச்செய்யாமல் கதையை நகர்த்திச் சென்றிருப்பதில்தான் நெறியாள்கையாளரின்/க்தாசிரியரின் ஆளுமை துலங்குகின்றது. சோகமான/மர்மமான இருண்ட கதை என்றாலும் படம் முழுக்க மகிழ்ச்சியிற்கான வர்ணங்களில் எடுக்கப்பட்டிருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை எவ்வளவு அபத்தங்களாலும் அவலங்களாலும் நிரம்பியிருந்தாலும் கிடைக்கின்ற சொற்ப நிமிடங்களையும் வாழ்ந்து பார்க்கப் பிரியப்படுகின்ற மனிதர்களே இப்படத்தில் வருவதால் படம் முழுக்க வரும் வர்ணக்கலவைகள் கண்களுக்கு உறுத்துவதில்லை. Joint புகைக்கின்ற Agustina , பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் (இவர் தான் Raimunda குழிதோண்டி தனது கணவரின் சடலத்தை மறைக்கின்றபோது உதவுகின்றார்) என இப்படத்தில் வரும் அனைவரும் அவர்களின் இயல்பில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதோடு எல்லாப்பெண்களும் நேசிக்கப்படக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள்.

2.
அசோக ஹந்தகமவின் Aksharaya, இளம் வயதில் சீரழிந்துபோகும் குழந்தைகளையும் அதிகார வேட்கையையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. ஒரு நீதிமன்றத்தில் நீதிபதியாக (Magistrate) இருக்கும் தாய், தனது பிள்ளையை மிக அந்நியோன்னியமாக வளர்க்கின்றார். தனது பிள்ளை தனது உடலின் ஒரு பகுதியெனவும், தனது சுவாசத்தையே கருவிலிருக்கும்போது அவனும் சுவாசித்தவன் என்ற நினைப்பும் உடையவர் அத்தாய். அத்தோடு ஒவ்வொரு நாளும் சிறுவன் வளர்ந்துகொண்டிருப்பதை அளந்துகொண்டிருப்பவர். சிறுவன் வளர வளர அவன் தன்னை விட்டு விலகிப்போய்விடுவான் என்ற பயங்களும்/பதற்றங்களும் உடையவர்.


இத்தாயின் (Piyumi) நெருக்கம் எப்படிப்பட்டதெனில் அந்தச் சிறுவனோடு சேர்ந்து நிர்வாணமாய்க் குளிப்பதிலிருந்து, பன்னிரண்டு வயதிலிருக்கும் சிறுவனுக்கு முலைகளைச் சப்பக்கொடுப்பது வரையான நெருக்கமுடையது (இக்காட்சி மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது; அது குறித்த அரசியலைப் பிறகு பார்ப்போம்). இப்படி வளர்கின்ற சிறுவன் பாடசாலைக் கணணியில் இன்னொரு சிறுவனோடு இருந்து, பெண்கள் நிர்வாணமாயிருக்கும் படங்களைப் பார்க்கின்றான். இதெல்லாம் 'கெட்ட' படங்கள் என்கின்றான் மற்றச்சிறுவன். இவனோ இதிலென்ன கெட்ட விசயங்கள் இருக்கின்றது; தான் தனது தாயை இவ்வாறான நிர்வாணத்துடன் பார்த்தவன் என்கின்றான் (பார்க்கும் படங்களிலுள்ள பெண்களின் முலையைத் தனது தாயின் முலையுடன் ஒப்பிட்டுக் கதைக்கவும் செய்கின்றான்). இவ்வாறு இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பாடசாலை முன்றலில் இந்த இரு சிறுவர்களும் தண்டிக்கப்படுகின்றார்கள். அவ்வாறு நடுவெயிலில் தண்டனைக்காய் நிறுத்திவைக்கப்படுகையில் பாடசாலைக்கு வரும் பொலிஸ் தங்களைத்தான் தேடி வருகின்றதென நினைத்து இவ்விரு சிறுவர்களும் பாடசாலையை விட்டு ஓடி ஒரு பாழடைந்த கட்டடத்தில் பதுங்கிக்கொள்கின்றார்கள். அவ்வாறு பதுங்கியிருக்கையில் யாரோ நடந்து வரும் காலடிச்சத்தங்களை கேட்டு பொலிசென நினைத்து ஒரு பாலியல் தொழிலாளியைத் தற்செயலாய்க் கத்தியாற் குத்தி -நீதிபதியின் மகன்- கொன்றுவிடுகின்றான். மற்றச்சிறுவன் பொலிசிடம் சென்று நடந்ததைக் கூற, கொலைசெய்த நீதிபதியின் மகன் அலைந்து திரிந்து மியூசியமொன்றில் மீண்டும் பதுங்கிக்கொள்கின்றான்.

மியூசியத்தில் அடைக்கலமாகின்ற சிறுவன் அங்கே வரும் ஒரு சிறுமியோடு நட்பாகின்றான். அந்த (தாயிழந்த) சிறுமியின் தந்தையார் மியூசியத்தில் காவலாளியாக வேலை செய்கின்றார். தனது வீட்டுக்குக் சிறுவனைக் கூட்டிச்செல்கின்ற காவலாளி, நீதிபதியிற்கு தொலைபேசுகின்றார். நீதிபதி, தனது மகன் கொலைக்குற்றத்திற்காய்த் தேடப்படுகின்றார் என்று கூறி அச்சிறுவனை காவலாளியின் வீட்டிலேயே ஒளித்து வைக்கும்படி இலஞ்சம் கொடுக்கின்றார். இதற்கிடையில் நீதிபதியின் மகனே குற்றவாளியாக இருப்பதால் பத்திரிகைகள்/பொலிஸ் நீதிபதியைத் தொடர்ந்து கேள்விகளால் தொந்தரவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். அதேவேளை காவலாளி வீட்டில் பதுங்கியிருக்கின்ற சிறுவன் தாய் -தனது பதவியின் பொருட்டு- மகனைப் பிடிக்க உத்தரவுகொடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்து- தன்னோடு மிக நேசமாய் முன்பு இருந்த தாய் இவரில்லையென கோபங்கொள்கின்றான்.

இவ்வாறு கதை ஒருபக்கமாய் நகர்ந்துகொண்டிருந்தாலும் சமாந்திரமாய் இன்னொருவிதமான கதையும் நகர்ந்துகொண்டிருக்கின்றது. இச்சிறுவனின் தந்தையாரும் ஒரு ஓய்வுபெற்ற உயர்நீதிமனற் நீதமானாவார் (Highcourt Judge). அவருக்கும், இச்சிறுவனின் தாயாருக்கும் உற்வு சுமுகமாய் இருப்பதில்லை. எப்போதும் சண்டையும் சச்சரவுமாய் இருக்கின்றார்கள். அச்சிறுவன் பிறந்தபின் 'தாம்பத்ய' உறவு இல்லாது இருவரும் வெவ்வேறு தனித்தனி அறைகளில் வசித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இரகசியங்களை அறிந்த, வீட்டுவேலை செய்து அங்கேயே தங்கியிருக்கும் பெண்ணோடு ஓய்வுபெற்ற நீதமானுக்கு உடல்சார்ந்த உறவு இருக்கின்றது.

இவ்வாறு காவலாளி நீதிபதியிடம் இலஞ்சம் வாங்கி சிறுவனை ஒளித்து வைத்திருந்தாலும் ஒருகட்டத்தில் பொலிஸ் தன்னை நெருங்கத்தொடங்கியதை அறிகின்ற காவலாளி அச்சிறுவனின் தாயிடம் சிறுவனைத் தனது வீட்டிலிருந்து கூட்டிச்செல்லக் கட்டளையிடுகின்றார். இதன் நிமித்தம் மியூசியத்திற்கு இரவில் வருகின்ற நீதிபதிப் பெண், தனது பயங்களை, சிறுவன் மீதிருக்கும் தனது அளவற்ற அன்பைச் சொல்லும்போது, இது சாதாரண தாய் - மகன் உறவைத் தாண்டிய ஒன்று எனக் காவலாளி பதட்டமடைகின்றார். ஒருகட்டத்தில் காவலாளி, 'இச்சிறுவனின் தந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வாளாவிருந்தாரா? அவரெல்லாம் ஒரு தகப்பனா?' எனத் திட்டும்போது, அப்பெண் மூர்க்கமடைந்து மியூசியத்திலிருக்கும் விலைமதிப்பற்ற பொருட்களை உடைக்கத் தொடங்குகின்றார். காவலாளியும் பொருட்கள் உடைபடுகின்ற கோபத்தில் அப்பெண்ணை மூர்க்கமாய் அடித்து வன்புணரத்தொடங்குகின்றார். வன்புணர்விற்குப் பின், -பெண் பொருட்களை உடைத்ததால்- தனது வேலை போகப்போகின்றதெனக் கவலைப்படும் காவலாளியிடம், இதுவரை காலமும் சிறைபட்டிருந்த தனது உடலை சுதந்திரமாக்கி எனக்குரியதாக்கி மீளத் தந்துவிட்டாயென எக்காளமாய் அப்பெண் சிரிக்கின்றார். அதே கணத்தில் இதுவரை பனிப்பாளமாய் உருகிக்கிடந்த தனது கடந்த கால இரகசியங்களை அந்த மியூசியத்தில் அப்பெண் உடைக்கத் தொடங்குகின்றார்.

Piyumiயின் தாயார் சிறுவயதில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் வேலை செய்துவருகின்றார். அப்பணக்காரத் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தபோது அவரே செவிலித் தாயுமாகின்றார். வளர்கின்ற அந்தப் பணக்கார ஆண், செவிலித் தாயோடு உடலுறவு கொண்டதன் நிமித்தமே Piyumi பிறக்கின்றார். இந்த விசயம் கேள்விப்பட்ட அந்த பணக்காரப் பெற்றோர், இச்சிக்கலிலிருந்து தப்புவிப்பதற்காய் தமது மகனை கேம்பிறிஜுக்கு படிக்க அனுப்புகின்றார்கள். அதேவேளை பிறந்த குழந்தையிற்கும்( Piyumi) நல்ல கல்வி வசதியை ஒழுங்கு செய்துகொடுக்கின்றனர். இவ்வாறு வளர்ந்துவரும் சிறுமி பணக்காரக்குடும்பத்தில் தானுமொரு அதிகாரம் நிறைந்த இராணியாக பிற்காலத்தில் வரும் ஆசையை வளர்த்துக்கொண்டபடியிருக்கின்றார். அவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டுமெனில் அவ்வீட்டு 'இளவரசனை'த் தனது கைக்குள் கொண்டுவரவேண்டுமெனத் திட்டம்போட்டு உடலைச் சூதாட்டமாய்வைத்து அந்த ஆணோடு ஆட்டத்தைத் தொடங்குகின்றார். இந்த உறவை ஒருபொழுதில் கண்டுபிடிக்கின்ற Piyumiயின் தாயார் கடந்தகால உண்மையை உடைக்கின்றார். Piyumi உறவு வைத்திருக்கும் ஆணே Piyumiயின் தகப்பனாகவும் இருக்கின்றார் என்பதைக் கூறுகின்றார். கொஞ்ச நாட்களில் Piyumiயின் தாய் இறந்துபோனாலும், தனது அதிகாரப்போதையை கைவிட முடியாத Piyumi அந்த ஆணையே திருமணமுஞ் செய்து ஒரு குழந்தையையும் (கொலை செய்த சிறுவன்) பெறுகின்றார். சிறுவன் பிறந்தபின்னே Piyumi தனக்குத் தெரிந்த உண்மையை தனது கணவனிடம் (இன்னொருவிதத்தில் தகப்பனுமாய் இருக்கின்றவரிடம்) உடைக்கின்றார். அந்தவேளையில் தனது கணவனின் ஆண்குறி வலியில் விறைத்து ஒரு இரும்பாயிற்று என்று கூறி Piyumi நக்கலாய்ச் சிரிக்கின்றார். Piyumi தான் நினைத்தை நிறைவேற்றியதால் -அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டதோடு- தனது கணவன் + தகப்பனையும் பழிவாங்கிய திருப்பதியோடு தனது மகனோடு நெருக்கமாகின்றார். எல்லாமே பிறழ்வாய் போன அத்தாயிற்கு மகனோடான உறவும் ஒருவிதமான பிறழ்வாய்ப் போய்விடுகின்றது. தொடர்ந்து என்ன நடக்கின்றது என்பதைப் படத்தைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்காய் விட்டுவிடுவோம்.

சிறுவயது நினைவுகள் (childhood trauma) எப்படி ஒவ்வொருவரையும் பாதிக்கின்றதென ழாக் தெரிதா எழுதியவற்றை வாசித்ததே இக்கதையிற்கான பின்னணி என்று ஒரு நேர்காணலில் கூறுகின்ற அசோகம ஹந்தகம, அதன் நிமித்தமே தெரிதாவின் ஒரு நூலின் தலைப்பையே இப்படத்திற்கும் பெயராக வைத்ததாகக் கூறுகின்றார். எனினும் சிறுவயது பாலியல் துஷ்பிரயோகங்களைவிட இப்படம் பிராய்டிசத்தையே அதிகம் முன்வைக்கின்றது போலத் தோன்றுகின்றது (அல்லது அவ்வாறான காட்சிகளுக்குத்தான் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது எனத்தான் சொல்லவேண்டியிருக்கிறது). தாயிடம் குழந்தை பால் குடிக்க தொடங்கும்போது குழந்தையிற்கான பாலியல் உணர்வு தொடங்கிவிட்டதென பிராய்ட் குறிப்பிடுவதை நினைவில் கொள்ளலாம் (அதன் மறுமுனையில் தாயிற்குள்ளும் பல விடயங்கள் நிகழும் சாத்தியமுண்டதென மறைபொருளாய்ப் பார்க்கலாம்). அத்தோடு நெறியாள்கையாளரும், தாயிற்கும் சிறுவனுக்குமான நெருக்கங்களைக் காட்டத்தான் அதிகம் மினக்கெடுக்கிறார் போலவும் இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

படத்தில் தாயும் மகனும் நிர்வாணமாய்க் குளிக்கும் காட்சி மிகுந்த சர்ச்சைகுள்ளாகியிருக்கின்றது. தாய்மையைக் கேலிசெய்கின்றதெனவும், வேறு சில காரணங்களுக்காகவும் இலங்கையில் இப்படம் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. அத்தோடு அந்தக்காட்சியிற்காய், படக்குழுவினர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பேரில் வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கின்றது. எனினும் அசோக ஹந்தகம அந்தக் காட்சி தனித்தனியே எடுக்கப்பட்டு பிறகு பொருத்தப்பட்டிருக்கின்றதென சாட்சியம் அளித்திருக்கின்றார். மேலும் அப்படத்தின் பெண் ஒளிப்பதிவாளரின் மகனே அச்சிறுவனாக நடித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு நெறியாள்கையாளரின் சுதந்திரவெளியில் நாமெவரும் தலையிடமுடியாது என்றாலும் நிர்வாணமாய் அப்பெண்ணை, சிறுவனின் முன் குளியலறையில் காட்டியிருக்கத்தேவையில்லை. இப்படத்தில் எத்தனையோ நுட்பமான காட்சிகளை வைக்கத் தெரிந்த நெறியாள்கையாளர் அந்த நிர்வாணக்காட்சியில்லாமலே பார்ப்பவருக்குத் தான் சொல்லவந்ததைத் தெளிவாய்ப் புரியவைத்திருக்கலாம் (Volverல் பாலியல் துஷ்பிரயோகங்கள் நேரடியாகக் காட்சிப்படுத்தப்படாமலே மிக தத்ரூபமாய் பார்ப்பவருக்குப் புரியவைக்கப்பட்டிருக்கும்). பிரான்சு அரசு இப்படத்திற்கு நிதி கொடுக்கின்றதென்பற்காய் பாலியல் குறித்த உரையாடல்கள் இன்னும் ஆரம்ப நிலையிலிருக்கும் இலங்கை போன்ற நாட்டிலிருந்தபடி அதிரடியாக் காட்டவேண்டுமென்பதற்காய் இவ்வாறான காட்சியை எடுக்கவேண்டுமென்ற அவசியமுமில்லை. இல்லாவிட்டால் மேலைத்தேயப் பார்வையாளர்களை நோக்காகக் கொண்டு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கின்றாரென்ற குற்றச்சாட்டை அசோக ஹ்ந்தகம ஏற்கவேண்டியிருக்கின்றது. எனினும் மியூசியத்தில் அப்பெண் வெறித்துப் பார்க்கும், முலைகளையுடைய (இந்து) பெண் தெய்வத்தின் காட்சியை எடுத்திருப்பதன் மூலம் கீழைத்தேயத்தில் கடந்தகாலத்தில் மிகவெளிப்படையாக பாலியல் பேசப்பட்டிருக்கின்றது கதையாடலையும் ஹ்ந்தகம வளர்க்க விரும்புகின்றாரெனவும் வாசிப்புச்செய்யும் சாத்தியமும் உண்டு. இங்கே படைப்பாளியின் வெளியில் குறுக்கிடுவதல்ல எனது நோக்கம். ஆனால் இவ்வாறான காட்சியை வைத்ததால், அதிக உரையாடலக்ளை வேண்டி நிற்கும் மற்ற விடயங்கள் கவனிக்காமற் போய்விடும் என்ற நோக்கிலே -குளியலறைக்காட்சியைத் தவிர்த்திருக்கலாம்- எனச் சொல்லவேண்டியிருக்கிறது. இப்படத்தில், சிறுவர்கள - ஏழை/பணக்காரர்கள்- என்ற வித்தியாசமில்லாது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதை நோக்கிக் கேள்வி எழுப்புவதுபோல, 'சுதந்திர இலங்கைக் குடியரசின்' அதிகார அமைப்புக்கள் குறித்தும் எழுப்பப்படும் முக்கியமான கேள்விகள் -தேவையில்லாத சர்ச்சையினால்- முனை மழுங்கிவிடும் ஆபத்துண்டு. முக்கியமாய் நீதிபதியே இலஞ்சம் கொடுத்து தனது பிள்ளையைக் காபாற்றுவதும், ஒரு நீதிபதியாக இருக்கும் பெண்ணையே ஒரு ஆண் சாதாரணமாய் வன்புணரச்செய்யும்போது இந்த நாட்டின் ச்ட்டங்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த நுட்பமான விமர்சனங்கள் இப்படத்தில் எழுப்பப்படுகின்றன என்பதைப் பார்ப்பவர் உணர்ந்துகொள்ள முடியும்.

3.

பெட்ரோ அல்மொடோவரின் Volverம், அசோக ஹந்தகமவின் A leffer of Fireம், அநேக திரைப்படங்களில் நம்மால் பார்க்கமுடியாத பெண்களின் பாத்திரங்களைச் சித்தரிக்கின்றன. தனது மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவனை எரிக்கும் மனைவியை, தனது மகள வன்புணர்விலிருந்து தப்புவதற்காய் கொலை செய்த கணவனின் உடலை சாட்சியங்கள் எதுவுமின்றி அழிக்கும் பெண்ணை, அதிகார வேட்கையுடைய, தனது குழந்தையை அதிகம் நெருங்குவன் மூலம் தனது கணவனை நுட்பமாய்ப் பழிவங்குகின்ற ஒரு மனைவியை/தாயை எனப் பலவேறுபட்ட பெண்களைப் பார்க்கின்றோம். இதுவரைக் காலமும் எழுதப்பட்ட/விவாதிக்கப்பட்ட பெண்/தாயின் பிரதிமைகள் தாய்மை X வேசி என்ற கறுப்பு வெள்ளைப் பார்வைக்குள் கட்டியமைக்கப்பட்டவை குறித்து இவ்விருபடங்களிலும் வரும் பெண்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். இவ்வாறான தெளிவான அடையாளங்களில் சிக்குபவர்களல்ல பெண்கள், அன்பும், தாபமும், பொறாமைகளும், சூழ்ச்சிகளும், அதிகார வேட்கையும் கொண்ட சாதாரண மனிதர்களே பெண்கள் என்ற புரிதல் இவ்வாறான படங்களைப் பார்க்கும்போது நமக்கு வருகின்றன. மேலும் இதுவே அதிகவேளைகளில் யதார்த்தமாயும் இருக்கின்றன. இவ்வாறான் புரிதல்கள் வருகின்றபோது தாய்மையென்று தலையில் வைத்துக் கொண்டாடுவதையோ... வேசி என்று காலால் உதைத்துப் புறக்கணிப்பதையோ விடுத்து, கலாசார காவலர்களெனும் முகமூடிகளையணியாமல் ஆண்கள, பெண்களைப் பெண்களாகவே விளங்கிக்கொள்ள முயலலாம். பெண்களை அவர்களின் இயல்பில் புரிந்துகொள்ளும்போது பெண்களும் தமக்கான கலாசார வேலிகளைத் தாண்டி (முக்கியமாய் திருமணம்/உறவு/'கற்பு'/கண்காணிப்பு) சுதந்திரமான காற்றை சுவாசிக்கத் தொடங்குவார்கள். அந்த விடுதலை -ஆண்கள்- நமக்கான விடுதலையையும் ஏதோ ஒருவகையில் உறுதி செய்வதாய் அமையவும் கூடும்.