கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அ.முத்துலிங்கத்தின் உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்

Tuesday, March 24, 2009


'...இவ‌ன் பிற்கால‌த்தில் தேவார‌ம் பாடுவ‌தை நிறுத்திவிட்டு உதைப‌ந்தாட்ட‌த்தில் பிர‌ப‌ல்ய‌ம் அடைந்த‌வ‌ன். அவனுடைய இல‌ட்சிய‌ம் எல்லாம் எவ்வ‌ளவு ப‌ல‌ம் உண்டோ அவ்வ‌ள‌வையும் பிர‌யோகித்து ப‌ந்தை உய‌ர‌த்துக்கு அடிப்ப‌து. குறிப்பாக‌ அது சூரிய‌னிடம் போக‌ வேண்டும்; குறைந்த‌ப‌ட்ச‌ம் அதை ம‌றைக்க‌ வேண்டும். பார்வையாள‌ர்க‌ள் எல்லாம் க‌ழுத்தை முறித்து இர‌ண்டு நிமிட‌ம் மேலே பார்க்க‌ வேண்டும். எதிர் சைட்டில் க‌விழ்த்து வைத்த‌ ப‌ வ‌டிவ‌த்தில் ஒரு கோல் போஸ்ட் இருப்ப‌தோ, அத‌ற்குள் ப‌ந்தை அடித்தால் ஒரு கோல் கிடைக்கும் என்ப‌தோ, கோல்க‌ளை எண்ணியே வெற்றி நிச்ச்யிக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தோ அவ‌னுக்கு பொருட்டில்லை. பந்து காலில்ப‌ட்டால் அது உய‌ர‌த்துக்கு எழும்ப‌வேண்டும் என்ப‌தே குறிக்கோள்.
(ப‌க்க‌ம் 45)


1.
எல்லோருக்கும் சொல்வ‌த‌ற்கு நிறைய‌க் க‌தைக‌ள் கைவ‌ச‌மிருக்கின்ற‌ன‌. அவ்வாறு த‌ம‌து க‌தைக‌ளை எழுத்தில் ப‌திவு செய்த‌வ‌ர்க‌ள் என்று பார்த்தால் அவ‌ர்க‌ள் மிக‌க்குறைவே. அந்த‌க் குறைவான‌வ‌ர்க‌ளிலும் நுட்ப‌மாக‌வும், சுவார‌சிய‌மாக‌வும் த‌ம் க‌தைக‌ளைப் ப‌கிர்ந்துகொண்டவ‌ர்க‌ளென்றால் இன்னும் மிக‌ச் சொற்ப‌மே. த‌மிழ்ச்சூழ‌லில் சாதார‌ணங்க‌ளின் க‌தையை அசாதார‌ணமாக்கிய‌ க‌தைசொல்லியாக‌ ம‌ட்டுமில்லாது, நாம் க‌ட‌ந்துவ‌ந்த‌/த‌வ‌ற‌விட்ட‌ எளிய‌ விட‌ய‌ங்க‌ளைக் கூட‌ அழ‌கிய‌லோடு ப‌திவுசெய்த‌வ‌ர்க‌ளில் முக்கியமான ஒருவ‌ர் அ.முத்துலிங்க‌ம். பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ் ப‌டைப்பாளிக‌ளின் எழுத்துக்க‌ளின் உள்ளே -உல‌ர்ந்துபோன‌ ந‌தியாய் வ‌ற‌ண்டுபோன‌- அங்கதத்தை மிக‌ முக்கிய‌ கூறாய் த‌ன் ப‌டைப்புக்க‌ளில் முன்னிலைப்ப‌டுத்திய‌வ‌ர் அ.முத்துலிங்க‌ம். இவ்வாறாக‌ அவ‌ர் ப‌டைப்புக்க‌ளில் ஊற்றெடுக்கும் ந‌கைச்சுவையும், எளிமையான‌ வார்த்தைக‌ளிலான‌ க‌தை சொல்ல‌லும், அள‌வுக்க‌திமான‌ வ‌ர்ண‌னையில்லாது ந‌றுக்கென்று ச‌ம்ப‌வ‌ங்க‌ளைக் க‌ட‌ந்துசெல்லலுமே அ.முத்துலிங்க‌த்திற்கு ப‌ர‌வ‌லான‌ வாச‌க‌ர்க‌ளைக் கொண்டுவ‌ந்து சேர்த்துமிருக்கின்ற‌து. ஈழ‌ப்போர் உக்கிர‌ம‌டைய‌ முன்ன‌ரான‌ 83ற்கு முன் (70க‌ளில்) பொருளாதார‌ நிமித்த‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌ அ.முத்துலிங்க‌த்தின் எழுத்து ந‌டைக்கு வெவ்வேறு தேச‌ங்க‌ளில் ப‌ணிபுரிநத‌/வாழ்ந்த‌ அனுப‌வ‌மும், அந்நாடுக‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லும் இன்னும் வ‌ள‌ஞ்சேர்ப்ப‌வையாக‌ இருக்கின்ற‌ன‌.

'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்' ஒரு நாவ‌லென‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டாலும், இஃதொரு புனைவு சேர்ந்தூட்ட‌ப்ப‌ட்ட‌ சுய‌ச‌ரிதைக்குறிப்புக‌ள் என்ப‌தை எளிதாக‌ ஒருவ‌ர் அடையாள‌ங்க‌ண்டுகொள்ள‌ முடியும். இந்நாவ‌ல் ஆர‌ம்பிப்ப‌த‌ற்கு முன்,
'இந்நாவ‌லில் இருப்ப‌து அத்த‌னையும் என் மூளையில் உதித்த‌ க‌ற்ப‌னையே. அதிலே நீங்க‌ள் ஏதாவ‌து உண்மையைக் க‌ண்டுபிடித்தால் அது த‌ற்செய‌லான‌து. அத‌ற்கு நான் பொறுப்பாக‌ மாட்டேன்' என்று வீணாக‌ ஒரு ப‌க்க‌த்தை அ.முத்துலிங்க‌ம் வீண‌டித்த‌ற்கு ப‌தில், இஃதொரு ஆட்டோ ‍ பிகச‌ன் (Auto-Fiction) என்று ஒற்றை வ‌ரியில் எழுதிவிட்டு ந‌க‌ர்ந்திருக்க‌லாம். மேலும் நாவ‌லென‌க் குறிப்பிட‌ப்ப‌டும் (உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்/ நாவ‌ல்/ அ.முத்துலிங்க‌ம்) ஒரு ப‌டைப்பில் 'உண்மை'க‌ளை வாச‌க‌ர் தேடக்கூடும் என்று அ.மு அஞ்சும‌ள‌வுக்கு வாச‌க‌ர் மீது அ.முவிற்கு ந‌ம்பிக்கையில்லையா என்ற‌ கேள்வியும் எழுகின்ற‌து.

ஒரு ப‌டைப்புக்குள் நுழைய‌முன்ன‌ர் இவ‌ற்றையெல்லாம் பார்க்க‌வேண்டுமா என்ற‌ அலுப்பு வாசிக்கும் ந‌ம‌க்கு ஏற்ப‌ட‌லாம். எவ்வாறு ஜெய‌மோக‌னின் ப‌டைப்புக்க‌ளுக்குள் போவ‌த‌ற்கு முன்ன‌ர், எப்ப‌டி அவ‌ர‌து முன்னுரைக‌ள் எம்மைச் சோர்வடையச் செய்யுமோ அவ்வாறே, இவ்வாறான‌ அதிக‌ப் பிர‌ச‌ங்க‌ங்க‌ளும் வாசிப்ப‌த‌ற்கு முன் இடையூறுக‌ளாய் விடுகின்ற‌ன‌. அநேக‌மாய் த‌மிழ்ச்சூழ‌லில் எழுதுகின்ற‌ ப‌டைப்பாளிக‌ள் எல்லோருமே, தம் படைப்புக்கள் தொகுப்பாய் ப‌திப்பிக்க‌ப்ப‌ட்ட‌பின் அது வாச‌க‌ர்க‌ளுக்குச் சொந்த‌மாகிவிடுகின்ற‌து என்ப‌தை மட்டும் அடிக்க‌டி நினைவூட்டிவிட்டு, அதேபோக்கில் வாச‌க‌ர்க‌ளையும் தாம் நினைப்ப‌து மாதிரியே வாசிக்க‌வேண்டும் என்றும் பாட‌சாலை ஆசிரிய‌ர்க‌ளைப் போல‌ அத‌ட்டுகின்ற‌ன‌ர்.


2.
'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்' யாழ்ப்பாண‌த்தில் (கொக்குவிலில்) ஆர‌ம்பித்து கொழும்புக்கு ந‌க‌ர்ந்து பிற‌கு ஆபிரிக்காக் க‌ண்டநாடுக‌ளான‌ சியரா லியோன், சோமாலியா, கென்யாவுக்கும், ஆசிய‌ க‌ண்ட‌ நாடுக‌ளான‌ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கும், பின்ன‌ர் வ‌ட‌ அமெரிக்காக் க‌ண்ட‌ நாடுக‌ளான‌ க‌ன‌டா, ஜ‌க்கிய‌ அமெரிக்காவென‌ ப‌ல‌வேறு நில‌ப்ப‌ர‌ப்புக‌ளை ஊடுருவிச் செல்கின்ற‌து. ஆர‌ம்ப‌த்திலிருந்தே க‌தைசொல்லியே எல்லாக் க‌தைக‌ளிலும் வ‌ருகின்றார். சில‌ இட‌ங்க‌ளில் அவ‌ரே ஒரு பாத்திர‌மாக‌வும், சில‌ இட‌ங்க‌ளில் அவ‌ர் ஒதுங்கி நின்று பிற‌ர‌து க‌தையைக் கூறுப‌வ‌ராக‌வும் இருக்கின்றார். நாவ‌லென்ற‌ வ‌டிவ‌ம் குறித்து ப‌ல‌வேறு வித‌மான‌ நிலைப்பாடுக‌ள் இருக்கும்போது இஃதொரு நாவ‌ல் வ‌டிவ‌ததைச் சேர்ந்த‌தா இல்லையா என்ற‌ வாத‌ பிர‌திவாத‌ங்க‌ளை ஒதுக்கிவைத்துப் பார்த்தாலும், இந்நாவ‌ல் ப‌ல்வேறு சிறுக‌தைக‌ளைக் கொண்ட‌ ஒரு தொகுப்பு என்ற‌ எண்ண‌மே வாசிக்கும்போது வ‌ருகின்ற‌து. நாற்பத்தைந்து அத்தியாங்க‌ள் கொண்ட‌ ஒரு நாவ‌லாக‌ இது இருந்தாலும், ஒவ்வொரு அத்தியாங்க‌ளுக்கும் த‌லைப்பு இட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இன்றைய‌ நாவ‌ல் உல‌கில் இவ்வாறு ஒவ்வொரு அத்தியாங்க‌ளுக்கும் த‌லைப்பிட்டு வ‌ருவ‌து என்ப‌து மிக‌ அரிதே.

இவ‌ற்றையெல்லாம் த‌விர்த்து நாவ‌லுக்குள் நாம் நுழைந்தால் ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் வாசிப்ப‌வ‌ரை அவ‌ர்க‌ள் அறியாது சிரிக்க‌ வைப்ப‌த‌ற்கு அ.முத்துலிங்க‌த்திற்கு ஒரு ச‌ம்ப‌வ‌மோ, சில‌வேளைக‌ளில் சில‌ வ‌ரிக‌ளோ கூட‌ போத‌மான‌தாயிருக்கின்ற‌து. வாசிக்கும் நீங்க‌ள் இந்நாவ‌லை எத்த‌கைய‌ சூழ்நிலையில் விரித்து வாசிக்க‌த் தொட‌ங்கினாலும் உங்க‌ளைய‌றியாம‌லே சிரிக்க‌ வைத்துவிடும் நுட்ப‌த்தில்தான் அ.முத்துலிங்க‌த்தின் ப‌டைப்புல‌க‌ம் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்தாகிவிடுகின்ற‌து. முத‌ல் அத்தியாய‌த்தில் ந‌ல்லூர்
கோயில் திருவிழாவில் தொலைகின்ற‌ அம்மாவைப் ப‌ற்றிய‌ க‌தை, என‌க்கு சிறுவ‌ய‌தில் வாசித்த‌ முல்க்ராஜ் ஆனந்தனின் பெற்றோரைத் தொலைத்த‌ குழ‌ந்தையொன்றின் க‌தையை நினைவுப‌டுத்தினாலும், இவ்வாறான‌ விழாக்க‌ளில் குழ‌ந்தைக‌ள்/பெற்றோர் தொலைவ‌தும், க‌ண்டுபிடிக்க‌ப்ப‌டுவ‌துமென‌ -சொல‌வ‌த‌ற்கென‌- எல்லோரிட‌ம் நிறைய‌ச் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌. முத‌ல் சில‌ அத்தியாங்க‌ள் அம்மா,அய்யா, அக்கா, ஆசிரிய‌ர், பாட‌சாலை போன்ற‌வ‌ற்றைச் சுற்றியும், கைவிசேட‌ம் பெறுத‌ல், போர்ததேங்காய் அடித்த‌ல் போன்ற‌ ஒர‌ள‌வு யாழ்ப்பாண‌த்துக்குரிய‌தான‌ ப‌ண்பாட்டுச் சூழ‌ல் ப‌ற்றியும் பேசுகின்ற‌ன‌.

அறுப‌துக‌ளில் எழுத‌ப்ப‌ட்ட‌ எஸ்.பொவின் ச‌ட‌ங்கு, யாழ் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின் பாலிய‌ல் சார்ந்த‌ அவ‌திக‌ளை மிக‌ நுட்ப‌மாக‌ ப‌திவு செய்ததோடு, யாழ்ப்பாண‌ப் பெண்க‌ளின் சுய‌ இன்ப‌ம் காணுதல் குறித்தும் பேசியிருக்கின்ற‌து. அதேபோன்று அ.முத்துலிங்க‌த்தின் இந்நாவ‌லிலும் ஒரு அத்தியாய‌ம், ஐம்ப‌துக‌ளில் பாட‌சாலை விடுதிக‌ளிலிருந்த‌ ஆண்க‌ளுக்கிடையிலான‌ ஓரின‌ப்பால் உற‌வுக‌ளைப் ப‌ற்றி (ம‌றைமுக‌மாய்ப்) பேசுகின்ற‌து. ஒருவித‌ அக்க‌றையோடு அ.முத்துலிங்க‌ம் இதைப் ப‌திவுசெய்தாலும், எஸ்.பொ ச‌ட‌ங்கில் ப‌திவு செய்த‌தைப் போல‌வ‌ன்றி, இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தில் ஒரு வித‌ த‌ய‌க்க‌ம் அ.முவிற்கு அவ‌ர‌வ‌ள‌விலேயே இருக்கின்ற‌து என்ப‌து போல‌, வாசிக்கும்போது தோன்றுகின்ற‌து. ஆனால் இந்த‌ விடுதிக‌ளில் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ள் த‌ங்கியிருந்த‌தையும், ப‌ல‌ பாட‌சாலைக‌ளில் வேறு நாடுக‌ளிலிருந்து (இந்தியா, சிங்க‌ப்பூர்) வ‌ந்து ஆசிரிய‌ர்க‌ள் க‌ற்பித்த‌தையும் அறியும்போது -போரோடு பிற‌ந்த‌ த‌லைமுறையைச் சேர்ந்த‌- எங்க‌ளுக்கு மிக‌ப்பெரும் க‌ன‌வாக‌த்தான் தெரிகின்றது.

மிக‌ இள‌ வ‌ய‌திலேயே (13) க‌தைசொல்லியின் தாயார் இற‌ந்துவிட‌ மூத்த‌ அண்ணாவின் அர‌வ‌ணைப்பிலேயே இவ‌ர‌து குடும்ப‌ம் வ‌ள‌ர்கின்ற‌து. க‌தைசொல்லியின் அண்ணா கொழும்பில் இருக்கும்போது அவ‌ருக்கு வ‌ருகின்ற‌ பெய‌ர் தெரியாத‌ நோயிற்கு, எந்த‌ச் சிகிச்சையும் ப‌ய‌ன‌ளிக்காது அவ‌ர் த‌ன‌து வாழ்வின் இறுதிக்க‌ட்ட‌த்தை அடைகின்ற‌வேளையில், யாரோ த‌ற்செய‌லாய் வ‌ரும் ஒருவரின் அறிவுரையில் அண்ணா ப‌டுக்கும் க‌ட்டிலோடு ஒரு ஆடு க‌ட்டிவிட‌ப்ப‌டுகின்ற‌து. அந்த ஆடு அண்ணாவின் அறைக்குள்ளேயே ஒன்றாக இருந்து சில‌ வார‌ங்க‌ளில் இற‌ந்துபோகையில் எவ‌ராலும் குண‌ப்ப‌டுத்த‌ முடியாத‌ அண்ணாவின் நோய் குண‌மடைகின்ற‌து. அந்த‌ ஆடுதான் நோயை த‌ன்னோடு எடுத்துச் சென்றிருக்கும் என்றும், ஆனால் பிற்கால‌த்தில் அந்த‌ ஆட்டைப் ப‌ற்றிக் கேட்டால் முக‌ம் இருள‌டைகின்ற‌ அண்ணாவின் பாத்திர‌மும் மாய‌ ய‌தார்த்த‌ வ‌கைக்குள் அட‌ங்க‌க்கூடிய‌து. அதேபோன்று பின் அத்தியாய‌ங்க‌ளில் பொஸ்ர‌னில் க‌தைசொல்லியின் மக‌ள் நீண்ட‌ கால‌த்திற்கு க‌ருத்த‌ரிக்காது இருக்கும்போது, அமெரிக்காவின் பூர்வீக‌க்குடிக‌ளின் ந‌ம்பிக்கைப்ப‌டி குதிரைக்கு உண‌வூட்டினால் பெண் க‌ர்ப்ப‌ம‌டைவாள் என்ப‌த‌ற்கிண‌ங்க‌, க‌தைசொல்லியுட‌ன் சென்று ம‌க‌ள் உண‌வூட்டுவ‌தும், பின்ன‌ர் ம‌க‌ளுக்கு ஒரு ம‌க‌ள் பிற‌க்கும்போது எப்போது ம‌க‌ள் க‌ருவுற்றிருப்பார் என்று பின்னோக்கிப் பார்க்கும்போது, கிட்ட‌த்த‌ட்ட‌ குதிரைக்கு உண‌வூட்டிய‌ கால‌த்தில்... என்று க‌தைசொல்லி விய‌ப்ப‌தும் ப‌குத்த‌றிவுக்கு அப்பால் ம‌ன‌ம் நீட்சிய‌டைந்து விய‌ந்துகொள்கின்ற‌ ப‌குதிக‌ளாகும்.

1958ம் ஆண்டு ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌க்க‌ல‌வ‌ர‌த்திலிருந்து கொழும்பிலிருந்து
த‌ப்பி க‌ப்பலில் க‌தை சொல்லி யாழ் செல்கின்றார் . பிற‌கு மீண்டும் ஒரு வ‌ருட‌த்தில் கொழும்புக்குத் திரும்பி, கொழும்புப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌டிக்கும் கால‌த்தில் ந‌ண்ப‌னுக்கு 'காத‌ல் துரோகி'யாவ‌தும், பின்ன‌ர் சாட்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ன்ட் ஆகி சிங்க‌ள‌வ‌ர்கள் நிர்வ‌கிக்கும் நிறுவ‌ன‌த்தில் -க‌ண‌க்காய்வாள‌ராக‌ப் ப‌ணிபுரிகையில்- ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் சுவார‌சிய‌மான‌வை. இல‌ங்கையில் இருக்கும்போது நிறுவ‌ன‌ங்க‌ளில் க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளில் ந‌ட‌க்கும் தகிடுதித்த‌ங்கள் போன்று ஆபிரிக்கா நாடுக‌ளிலும் ந‌ட‌க்கும்போது அவ‌ற்றை எப்ப‌டி எதிர்கொள்கின்றார் என்ப‌தும், க‌ட‌ந்துபோகின்றார் என்ப‌தையும்... அவ‌ற்றுக்கூடாக‌ அம்ம‌க்க‌ளின் குடும்ப‌ விழுமிய‌ங்க‌ளையும், ப‌ண்பாட்டுச் சூழ‌ல்க‌ளையும் சொல்ல‌ முய‌ல்வ‌துமென‌ நாவ‌லின் ந‌டுப்பாக‌ங்க‌ள் ந‌க‌ர்கின்ற‌ன‌. பெரும் நிறுவ‌ன‌ங்க‌ளில் இருக்கும் அதிகாரிக‌ள் இவ்வாறான‌ திருட்டுக‌ளைச் செய்யும்போது, வ‌ங்கிக‌ளைக் கொள்ளைய‌டிக்கும் கொள்ளைய‌ர்க‌ளை விட‌ வ‌ங்கிக‌ளை நிர்வ‌கிப்ப‌வ‌ர்க‌ளே அதிக‌ம் கொள்ளைய‌டிப்ப‌வ‌ர்க‌ள் என்றொரு க‌விஞ‌ர் ஏதோவொரு புர‌ட்சிச்சூழ‌லில் சொன்ன‌து நினைவில் வ‌ந்துபோகின்ற‌து.

3.
நாவ‌லின் பிற்ப‌குதி கதைசொல்லி எப்ப‌டி க‌ன‌டாவிற்கு வ‌ந்து இன்னொரு புதிய‌ சூழ‌லுக்குத் த‌ன்னை த‌க‌வ‌மைத்துக் கொள்கின்றார் என்ப‌தையும், ஐக்கிய‌ அமெரிக்காவிலுள்ள‌ த‌ன‌து ம‌க‌ள்/பேரப்பிள்ளை என்ப‌வ‌ர்க‌ளினூடான‌ அனுப‌வ‌ங்க‌ளையும் பேசுகின்ற‌ன‌. யாழில் அத்தியாவ‌சிய‌மான‌ சைக்கிள், இங்கே பொழுதுபோக்கிற்காய் ஆகிப்போன‌து ப‌ற்றிப் பேசும் ஓர் அத்தியாய‌த்தில், க‌தை சொல்லி சைக்கிளை எப்ப‌டி ஓட‌ப்ப‌ழ‌கினார் என்ற‌ ப‌குதி மிகுந்த‌ ந‌கைச்சுவையான‌து. இந்த‌ அத்தியாய‌ம், வாசிக்கும் எல்லோரையும் அவ‌ர‌வ‌ர் தாங்க‌ள் சைக்கிளை முத‌ன் முத‌லாய் ஓடிப்போன‌ கால‌த்திற்கு இழுத்துக்கொண்டு செல்லும் த‌ன்மை வாய்ந‌த்து.

ஓரிட‌த்தில், க‌தைசொல்லி த‌ன‌து ட‌ய‌ரியில் இற‌ந்துபோன‌ ந‌ண்ப‌ர்க‌ளின் தொலைபேசி இல‌க்க‌ங்க‌ளை அழிக்கும்போது, இப்போது உயிருட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ளை விட‌ உயிருட‌ன் இல்லாத‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையே அதிக‌மாய் இருக்கின்ற‌து என்கின்ற‌போது ச‌ட்டென்று உண‌ர்வு நிலை மாறி மிக‌ப்பெரும் வெறுமை ந‌ம்மையும் தொற்றிக்கொள்கின்ற‌து. அதேபோன்று இன்னொரு அத்தியாய‌த்தில் புத்த‌க‌ வாசிப்பைப் ப‌ற்றிக்குறிப்பிடும்போது, க‌தைசொல்லி த‌ன‌க்கு மிக‌ப்பிடித்த‌மாய் ஏதாவ‌து வ‌ரிக‌ளை யாராவ‌து எழுதியிருந்தால் த‌ன‌க்கு கையால் த‌லையில் அடிக்கும் ப‌ழ‌க்க‌ம் இருக்கிற‌து என்று சொல்லி, இப்போது 'என்னைய‌றியாம‌ல் த‌லையில் அடிப்ப‌தும் அதிக‌மாகிக்கொண்டு வ‌ருகின்ற‌து. என்னுடைய‌ எஞ்சிய‌ வாழ்நாள் ம‌ட்டும் குறைந்து போகின்ற‌து' என்று முடிக்கும்போது ம‌ன‌தொரு க‌ண‌ம் க‌ன‌த்து ந‌க‌ர்கின்ற‌து.

ந‌கைச்சுவையும் -அவ்வ‌ப்போது எள்ள‌லும்- இந்நாவ‌ல் முழுதும் தொட‌ர்ந்து ஒரு ந‌தியாக‌ ஓடி வாசிப்ப‌வ‌ர்க‌ளைக் குளிர‌வைத்துக்கொண்டேயிருக்கிற‌து. இந்நாவ‌லில் வ‌ரும் க‌தா மாந்த‌ர்களின் ப‌ல‌வேறுவித‌மான‌ அழுக்காறுக‌ளையும், க‌ச‌டுக‌ளையும் இந்த‌ப் ப‌கிடி ஆறு அள்ளியெறிந்துகொண்டு போவ‌தால் அநேக‌மான‌ ம‌னித‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் இய‌ல்புக‌ளோடு நேசிக்க‌ முடிகின்ற‌து. அ.முத்துலிங்க‌த்தின் க‌தையுல‌கில் வெறுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ள் என்று எவ‌ருமே இருப்ப‌தில்லை. இங்கும் கொழும்பில் க‌தைசொல்லி த‌ன‌து வேலை நேர்காண‌ல் ஒன்றுக்குப் போவ‌த‌ற்காய் ம‌டித்து வைத்திருந்த‌ புதிய ஆடைக‌ளை, இர‌வில் த‌ங்கி நின்ற‌ ந‌ண்ப‌ன் விடிகாலையில் அப‌க‌ரித்துச் செல்லும்போது ம‌ட்டுமே கொஞ்ச‌ம் கோப‌ம் காட்ட‌ப்ப‌டுகின்ற‌தே தவிர‌ குறிப்பிடும்ப‌டியாக‌ வேறெந்த‌ வெறுப்பின் சாய‌ல் கூட‌ இந்நாவ‌லில் இல்லை. அதேபோன்று கு.வ‌ன்னிய‌குல‌சிங்க‌ம் த‌மிழ் கொங்கிர‌சுக்காய் கொக்குவிலில் போட்டியிட்ட‌போது, தேர்த‌லில் வாக்குப் போடுவ‌தை உற்சாக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காய் ‍-அணிந்து செல்வ‌த‌ற்கு ம‌ட்டுமே‍ நகைக‌ளைக் கொடுக்க‌- அதை அப்ப‌டியே அப‌க‌ரித்து சுன்னாக‌த்தில் ரெயினேறி கொழும்பில் ம‌க‌னோடு சேர்கின்ற‌ திர‌விய‌ம் மாமி ஒரு க‌ள்ளியாக‌க் கூட‌ச் சித்த‌ரிக்க‌ப்ப‌டாம‌ல் -க‌ள‌வைக் கூட‌ பிடிப‌டாம‌ல் செய்வ‌து என்றறியாத‌ அவர‌து அப்பாவித்த‌ன‌மே- வாசிப்ப‌வ‌ர்க‌ளிடையே ப‌டிய‌விட‌ப்ப‌டுகின்ற‌து. க‌ள்ள‌ம் பிடிப‌ட்டு பொலிஸ் அவ‌ரைக் கொழும்பு ஜெயிலுக்கு கூட்டிச் செல்ல‌ப்ப‌டும்போது கூட‌, அவ‌ர் கேட்கின்ற‌ கேள்வி, 'கு.வ‌ன்னிய‌குல‌சிங்க‌ம் தேர்த‌லில் வெற்றி பெற்றுவிட்டாரா?' என்ப‌துதான். அந்த‌க்கேள்வியோடு அந்த‌ அத்தியாய‌ம் முடிகின்ற‌போது க‌ள‌வு என்ற‌ விட‌ய‌மே அங்கே காணாம‌ற்போய்விடுகின்ற‌து.

இவ்வாறான‌ மிக‌ நுட்ப‌மாய் க‌தையை எப்ப‌டிககொண்டு போவ‌து குறித்தும், எப்ப‌டி முடிப்ப‌து ப‌ற்றியும் அறிந்த‌ ப‌டைப்பாளியான‌ அ.முத்துலிங்க‌ம் சில‌ இட‌ங்க‌ளில் முக்கிய‌மான‌ விட‌ய‌ங்க‌ளைக் கூட‌ -மிக‌ எளிமையாக‌- மெல்லிய‌ ந‌கைச்சுவையால் -க‌ட‌ந்துவிடச் செய்கின்றார். முக்கிய‌மாய் எல்லோரைப் போல‌வும் அம்மாவில் அதிக‌ பாச‌ம் கொள்கின்ற‌ க‌தைசொல்லி, அவ‌ர‌து ப‌தின்மூன்றாவ‌து வ‌ய‌தில் ஏற்ப‌டுகின்ற‌ அம்மாவின் இழ‌ப்பை மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துபோய்விடுகின்றார். அதேபோன்று 1958 க‌ல‌வ‌ர‌த்தின்போது கொழும்பில் அக‌தியாக்க‌ப்ப‌டுகின்ற‌ க‌தைசொல்லி அந்த‌ அத்தியாய‌த்தோடு சிங்க‌ள‌ ‍த‌மிழ் பிர‌ச்சினையை ம‌ற‌ந்து போய்விடுகின்றார். மீண்டும் இறுதி அத்தியாய‌ங்க‌ளில் 'சுவ‌ர்க‌ளுட‌ன் பேசும் ம‌னித‌ர்' ப‌குதியில் ம‌ட்டுமே மொழி,ஈழ‌ம் ப‌ற்றி நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌ (ஒரு மொழி நீண்ட‌ கால‌மாய் உயிருட‌ன் இருக்க‌வேண்டுமாயின், அந்த‌ மொழியை முன்நிலைப்ப‌டுத்தும் ஒரு அர‌சு வேண்டுமென்ப‌து இங்கே வ‌லியுறுத்த‌ப்ப‌டுகின்ற‌து). 1983 இன‌ப்ப‌டுகொலையின்போது, க‌தைசொல்லி ஈழ‌த்திலிருந்து ஏற்கன‌வே புல‌ம்பெய‌ர்ந்த‌தால் அத‌ன்பின்ன‌ரான‌ கால‌ங்க‌ளை எழுதுத‌ல் க‌டின‌மென‌ எடுத்துக்கொண்டாலும், க‌தைசொல்லி நேர‌டியாக‌ப் பாதிப்புற்ற‌ 58 க‌ல‌வ‌ர‌ம் ப‌ற்றிக்கூட‌ ம‌ன‌தில் ப‌தியும் ப‌டியாக‌ எழுதிவிட‌வில்லை என்ப‌தை ஒரு ப‌லவீன‌மாக‌த்தான் கொள்ள‌வேண்டும்.


அதேபோன்று இந்நாவ‌லில் 'வ‌ளைக்காப்புக்காய் வீடு திரும்பும் ம‌னைவி' (ப 108) குறித்தெல்லாம் வ‌ருகின்ற‌து. ஈழ‌த்தில் வ‌ழ‌க‌த்தில் இல்லாத‌ சொற்றொட‌ர்க‌ள்/வ‌ழ‌க்குக‌ள் வ‌ருவ‌த‌ற்கு அ.முத்துலிங்க‌ம் தன‌து பிர‌தியைத் திருத்த‌க்கொடுத்த‌, த‌மிழ‌க‌த்து 'நாளொன்றுக்கு 2000 சொற்க‌ள் எழுதும்' ந‌ண்ப‌ரோ அவ‌ர‌து துணையோ கார‌ணமாயிருக்கூடும். மேலும் 'கேர்ண‌ல்' (ப 77) என்றெல்லாம் திரிச‌ங்கு நிலையில் சொற்க‌ள் வ‌ருகின்ற‌ன‌. ஈழ‌த்து வ‌ழ‌க்கில் 'கேண‌ல்' என்றோ அல்ல‌து ஆக‌க்குறைந்து இந்திய‌ வ‌ழ‌க்கில் 'க‌ர்ன‌ல்' என்றாவ‌து எழுதாம‌ல், இப்ப‌டி வ‌ருவ‌து அச்சுறுத்துகின்ற‌து. இன்னொரு இட‌த்தில் த‌ன‌து த‌ம்பியை வாச‌க‌ருக்கு அறிமுக‌ப்ப‌டுத்தும்போது 'இவ‌ன் எங்க‌ள் வீட்டின் கோமாளி' என்று அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். நான‌றிந்த‌வ‌ரை ஈழ‌த்தில், குடும்ப‌த்திலுள்ள‌வ‌ர்க‌ள் த‌ம் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளை 'கோமாளி' என்று அறிமுக‌ப்ப‌டுத்துவ‌தை அறிந்திலேன். இவ‌ன் 'ந‌ல்ல‌ ப‌கிடிக்கார‌ன்' அல்ல‌து 'ச‌ரியான‌ குழ‌ப்ப‌டிக்கார‌ன்' என்று அழைக்கப்ப‌டுவார்க‌ளே த‌விர‌ 'கோமாளி' என்ற‌ வ‌ழ‌க்கு இருப்ப‌தாய் நான‌றியேன். அதேபோன்று க‌ம்ப‌ராமாய‌ண‌த்தில் ஆறுக‌ளைப் ப‌ற்றிப் பேசும் ஆற்றுப்ப‌ட‌லம் என்று ஓரிட‌த்தில் வ‌ருகின்ற‌து. ஆனால் ஆற்றுப்ப‌ட‌ல‌ம் என்ப‌து ஆறுக‌ளைப் ப‌ற்றிப் பேசுவ‌த‌ல்ல‌. அது ஒரு புல‌வ‌ன் தான் அர‌ச‌னொருவ‌னிட‌ம் பெற்ற‌ பொற்கிழியைப் போல‌ இன்னொரு புல‌வ‌னையும் போய்ப் பெறுக‌ என்று ஆற்றுப்ப‌டுத்துவ‌தையே ஆற்றுப்ப‌ட‌ல‌த்தில் உள்ள‌ட‌க்குவதாய் ‍‍ கூட‌வே என்னோடு இந்நாவ‌லை வாசித்த‌ ந‌ண்ப‌ர் குறிப்பிட்டார் (என‌து க‌ம்ப‌ராமாய‌ண‌ அறிவு, அத‌ன் சில‌ ப‌குதிக‌ளை என்னுடைய‌ ப‌த்தாம் வ‌குப்போடு வாசித்த‌து ம‌ட்டுமே).

4.
சிறுக‌தைக‌ளைப் போல‌வ‌ன்றி நாவ‌லுக்கு நில‌ப்ப‌ர‌ப்பு முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து. உல‌கில் இன்று விய‌ந்தோந்த‌ப்ப‌டும் எந்த‌ நாவ‌லை எடுத்தாலும், அவ‌ற்றில் வ‌ரும் பாத்திர‌ங்க‌ளைப் போல‌வே க‌தை நிக‌ழ்கின்ற‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளும் முக்கிய‌த்துவ‌ம் உடைய‌தாக‌வே இருக்கின்ற‌ன‌. நாம் வாழ்விலே காண‌வே முடியாத‌ பிர‌தேச‌ங்க‌ளில் எல்லாம் நாமும் ந‌டமாடிக்கொண்டிருப்ப‌தான‌ எண்ண‌த்தை எத்த‌னையோ ப‌டைப்புக்கள் ந‌ம‌க்குள் ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌. ஆனால் அ.முத்துலிங்க‌ம் இந்நாவ‌லில் ஆக‌க்குறைந்து அவ‌ருக்கு அதிக‌ம் ப‌ரிட்ச‌ய‌மான‌ அந்த‌க்கால‌த்து யாழ்ப்பாண‌த்தைக்கூட‌ கூட‌ அவ்வ‌ள‌வு விரிவாக‌ காட்சிப்ப‌டுத்த‌வில்லை. கொக்குவில் ப‌குதியில் இருக்கும் ஒழுங்கைக‌ளையும், புகையிலை அவிக்கப்படும் குடிசைகளுக்கும் அப்பால் அவ‌ர‌து ஊர் கூட‌ விரிவாகச் சித்தரிக்க‌ப்ப‌ட‌வில்லை. அது கூட‌ ப‌ர‌வாயில்லை. யாழ்ப்பாண‌த்தவ‌ர்க‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லில் முக்கிய‌ கூறாக‌ இருந்த‌ சாதி ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் கூட‌ இந்நாவ‌லில் இல்லை. 80க‌ளின் பின்பான‌ ஈழ‌ ஆயுத‌ இய‌க்க‌ங்க‌ளின் எழுச்சியின் பின், சாதி ஒரு ம‌றைபொருளாக‌ இருந்த‌து என்று ஒர‌ள‌வுக்கு ஒப்புக்கொண்டாலும், 50/60க‌ளில் சாதிய‌ ஒடுக்குமுறை மிக‌க் கொடூர‌மாக‌வும், அத‌ற்கெதிரான‌ போராட்ட‌ங்க‌ள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெடித்துக் கிள‌ம்பியும் இருந்திருக்கின்ற‌ன‌. ஆக‌க்குறைந்த‌து. பாட‌சாலையில் ஆசிரிய‌ர்க‌ளால்,சில‌ மாண‌வ‌ர்க‌ள் வெறுக்க‌ப்ப‌டுவதையும் ந‌க்க‌ல‌டிக்க‌ப்ப‌டுவ‌தையும் குறிப்பிடுகின்ற‌ அ.முத்துலிங்க‌ம், யாழ் சூழ‌லின் அத‌ன் உண்மையான‌ கார‌ண‌மாக‌ பெரும்பான்மையாக‌ அம்மாண‌வ‌ர்க‌ளின் சாதியே கார‌ண‌ம் என்ப‌தையாவ‌து ஒளிவும‌றைவின்றி நேர‌டியாக‌க் கூறியிருக்க‌லாம். யாழ்ப்பாண‌த்த‌வ‌ர்க‌ளின் ஒவ்வொரு சின்ன‌ச் சின்ன‌ விட‌ய‌த்திலும் சாதி முக்கிய‌ கூறாய் உட்பொதிந்திருப்ப‌தை எவ‌ராலும் எளிதாக உய்த்துண‌ர‌முடியும். இவ‌ற்றையெல்லாம் எழுதாமல் ஒருவ‌ர் யாழ்ச் சூழ‌லை ப‌திவு செய்ய‌ முடியாதா? என்று நாம் கேள்வி எழுப்ப‌லாம். ஆனால் இவ‌ற்றுக்கெல்லாம் நாம் விரும்பியோ/விரும்பாம‌லோ சாட்சியாக‌ இருந்திருக்கின்றோம் என்றால், இன்றைய‌ கால‌த்திலாவ‌து இவ‌ற்றை விம‌ர்சிக்காது நாசூக்காய்த் த‌விர்த்து நாம் யாழ்ப்பாண‌ம் ப‌ற்றிக் க‌தை சொன்னால், அது யாருக்காய், யாரைப் ப‌ற்றிய‌ க‌தைக‌ள் என்ற‌ கேள்வியை எழுப்புத‌லும் த‌விர்க்க‌ முடியாதே இருக்கின்ற‌து.

இவ்வாறானவ‌ற்றோடு அ.முத்துலிங்க‌த்தின் நாவ‌ல் என‌ச்சொல்ல‌ப்ப‌டும் இதை வாசிப்ப‌வ‌ர்க‌ள், 75 சிறுக‌தைக‌ள் உள்ள‌ட‌க்கிய‌ அ.முத்துலிங்க‌த்தின் சிறுக‌தைக‌ள் (2004) என்ற‌ தொகுப்பை ஏற்க‌ன‌வே வாசித்திருந்தால், இத‌ன் உள்ள‌ட‌க்க‌த்தில் பெரிய‌ மாற்ற‌ம் எதையும் எதிர்பார்க்க‌முடியாது என்ப‌தே மிக‌ப்பெரும் ப‌ல‌வீன‌மாக‌க் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. சிறுக‌தைக‌ளைத் தொட‌ர்ந்து எழுதி வ‌ரும் அ.முத்துலிங்க‌ம் ஒரு நாவலை எழுதியிருக்கின்றார் என்று உற்சாக‌த்தோடு வாசிக்க‌ வ‌ரும் ஒரு வாச‌க‌ருக்கு இந்நாவ‌லில் வ‌டிவ‌த்திலோ, க‌தை சொல்லும் முறையிலே எத்த‌கைய‌ புதிய‌ வளர்ச்சியையும் கண்டறிய் முடியாது இருக்கின்ற‌து. அத்தோடு புன்ன‌கைக்க‌ வைப்ப‌தால் ம‌ட்டுமே ஒரு ப‌டைப்பு சிற‌ந்த ப‌டைப்பாக‌ உல‌கில் கொண்டாட‌ப்ப‌டுகின்ற‌தா என்று பார்த்தால் அவ்வாறிருப்ப‌வை மிக‌ அரிதே என்ப‌தே ய‌தார்த்த‌மாயிருக்கிற‌து. ஈழ‌ப்ப‌டைப்பாளிக‌ளில் பிற‌ரைப் போல‌வ‌ன்றி ப‌ல‌வேறு நாடுக‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லில் வாழ‌வும், ப‌ல்வேறு உல‌க‌ப்ப‌டைப்பாளிக‌ளை நிறைய‌ வாசிக்க‌வும், ச‌ந்திக்க‌வும் செய்கின்ற‌ அ.முத்துலிங்க‌த்தால் ஏன் இன்னும் ம‌ன‌தை நெருடுகின்ற‌ ப‌டைப்புத்த‌ர‌ முடிய‌வில்லை என்ற‌ வினா அ.முத்துலிங்க‌த்தை வாசிக்கும் ப‌ல‌ வாச‌க‌ர்க‌ளுக்கு எழ‌வே செய்யும். அ.முத்துலிங்க‌ம் ந‌ன்கு ப‌ண்ப‌ட்ட‌ ம‌ண்ணை, வ‌ளமான‌ உர‌த்துட‌ன், வீட்டுக்குள்ளேயே ஒரு பூந்தொட்டியிலே ப‌ல‌ செடிக‌ளை நாட்டித் த‌ந்திருக்கின்றாரே த‌விர‌, க‌ட்ட‌ற்ற‌ எல்லைக‌ளுட‌ன், காடொன்றில் எல்லாக் கால‌நிலைக‌ளுட‌னும் போராடி ஆழ‌ வேர் ப‌ர‌ப்பி கிளை ப‌ர‌ப்புகின்ற‌ ஒரு விருட்ச‌த்தை எப்போது த‌ருவார் என்ப‌தை -இந்த‌ நாவ‌லில் அல்ல‌- இனி வ‌ருங்கால‌ங்கால‌ங்க‌ளில்தான் எதிர்பார்க்க‌ வேண்டியிருக்கின்ற‌து.

என்றாலும் இப்போது என்ன‌, இந்நாவலில் க‌தை சொல்லி ஓரிட‌த்தில் கூறுவார், த‌ன‌க்கு க‌ல்கியை சிறுவ‌ய‌தில் வாசித்த‌போது க‌ல்கியைப் போல‌ எழுத‌வேண்டும் என்றும், பின்ன‌ர் ஜேம்ஸ் ஜோய்ஸை வாசித்த‌போது ஜோய்ஸை எழுத‌வேண்டும் என்றும், இன்னும் கொஞ்ச‌க்கால‌ம் செல்ல‌ புதுமைப்பித்த‌ன் ஆக்கிர‌மிக்க‌ புதுமைப்பித்த‌னைப்போல‌ எழுத‌வேண்டும் என்றும் ஆசைப்ப‌ட்ட‌தாக‌வும் குறிப்பிடுவார். அதைப் போல‌த்தான் அ.முத்துலிங்க‌த்தின் ப‌டைப்புக்க‌ளை வாசிப்ப‌வ‌ர்க‌ளில் (என்னைப் போன்ற‌) ஒரு சில‌ராவ‌து அ.முத்துலிங்க‌த்தைப் போல‌ சொற் சிக்க‌ன‌மாக‌வும், எளிமையாக‌வும் அதே நேர‌த்தில் மெல்லிய‌ புன்ன‌கை வ‌ர‌ச்செய்வ‌துமாய் எழுதிவிட‌வேண்டுமென‌ மான‌சீக‌மாய் நினைக்க‌ச்செய்வார்க‌ள் என்ப‌தும் இயல்பே.

க‌ன‌வுக‌ளைச் சாம்ப‌ல் வான‌த்தில் தூவிச்சென்ற‌ இருப‌ற‌வைக‌ள்

Friday, March 13, 2009

1.
உன‌க்கான‌ இட‌ம் இதுவ‌ல்ல‌வென‌ உன‌க்கு ந‌ன்கு தெரியும். ப‌ல‌முறை ப‌ல‌வேறு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் அது நிரூபிக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌து. ஆனாலும் நீ சாம‌ர்த்திய‌மாய் சில‌ கார‌ண‌ங்க‌ளை உருவாக்கி அவ‌ற்றுக்காய்த்தான் இங்கே தொங்கி பிடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொண்டிருக்கின்றாய். உன‌து சுய‌ம், உன‌து க‌ர்வ‌ம், உன‌து கோப‌ம் எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அழிக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை நீ ந‌ன்க‌றிவாய். இனி முதுகை இன்னுமாய் வ‌ளைப்ப‌த‌ற்கு முள்ள‌ந்த‌ண்டும், போலியாய்ச் சிரிப்ப‌த‌ற்கு உத‌டுக‌ளும் இல்லையென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய‌ புதிய‌ முக‌மூடிக‌ளை அணிந்துகொள்வ‌த‌ற்கு நீ த‌யாராக‌ இருக்கிறாய். உன்னுடைய‌ க‌ன‌வுக‌ள் வேறுவித‌மான‌வை என்று நீ செம்ம‌ண் த‌ரைக‌ளில் காற்ச‌ட்டை க‌ழ‌ன்று விழ‌ விழ‌ ஓடிய‌ நாட்க‌ளிலிருந்தே நாம‌னைவ‌ரும் அறிவோம். ஆனால் ஒரு ம‌த்தியான‌ நாளில் உன‌து ம‌ண்ணையும், (அரைக்)காற்ச‌ட்டைக‌ளையும் நீ கைவிட்டு வந்த‌பின், உன‌து க‌ன‌வுக‌ளையும் கைவிட்டு வ‌ந்துவிட்டாயோ என்றுதான் எண்ண‌த்தோன்றுகின்ற‌து. ஆனால் குளிர்கால‌த்தில் பெருங்காற்று வீச‌ உன‌து அறைக்க‌ண்ணாடி ய‌ன்ன‌ல் அல‌றுவ‌துபோல‌, உன‌க்கும் உன‌க்கான‌ க‌ன‌வுக‌ள் அவ்வ‌ப்போது ஞாப‌க‌ங்க‌ளில் வ‌ந்து போகின்ற‌ன‌. நீ த‌னிமையையும், உரையாடும் மெல்லிய‌ குர‌ல்க‌ளையும் விரும்புகின்ற‌வ‌னாய் இருந்திருக்கின்றாய். இப்போது எழும் உன‌து க‌டுமையான‌ குர‌ல்க‌ளில் நீ நீயில்லாத‌வ‌னாகிப் போய்க்கொண்டேயிருக்கின்றாய். உன்னோடு உரையாடும் பிற‌ரோடு அள‌விற‌ந்த‌ அன்போடு உரையாட‌லைத் தொட‌ரும் நீ, ச‌டுதியாய் ஒருபுள்ளியில் ஏதோ சூனிய‌த்தில் த‌னித்த‌லைப‌வ‌னாய் மிக‌ மிக‌ அமைதியாகிப் போகின்றாய். அந்த‌த் திடீர் ம‌வுன‌ம் எதிரே உரையாடிக்கொண்டிருப்ப‌வ‌ரை ம‌ட்டுமல்ல‌ உன்னையும் மிக‌வும் அச்ச‌மூட்ட‌ச் செய்கின்ற‌து. ஆனால் உன்னைப் புரிந்துகொள்ப‌வ‌ர்க‌ளாய் உன்னோடு உரையாடுப‌வ‌ர்க‌ள் இருப்ப‌தால் அவ‌ர்க‌ள் மீண்டும் உன்னோடு உரையாட‌ப் பிரிய‌த்தோடு வ‌ருகின்றார்க‌ள். அது உன‌க்குச் ச‌ற்று ஆசுவாச‌மாய் இருக்கிற‌து.

ஒரு கால‌த்தில் நீ வித‌ந்து ஏற்றிய‌வையெல்லாம் உன்னை விட்டுத் தொலைதூர‌த்தில் போயிருப்ப‌தைப் பார்க்க‌ உன‌க்கு மிக‌வும் விச‌ன‌மாக‌ இருக்கிற‌து. உண்மையில் அவைக‌ள் உன்னைவிட்டு வில‌கிப்போக‌வில்லை; நீதான் அவைக‌ளை விட்டு வெகுதொலைவுக்கு வ‌ந்துவிட்டாய். பெண்க‌ள், இய‌ற்கை, ப‌ய‌ண‌ம், ம‌து அருந்துத‌ல் (குடித்த‌ல் அல்ல‌) என்று உன‌க்கு விருப்ப‌மான‌ ப‌ட்டிய‌லை எழுதத் தொட‌ங்கினால் அது முடிவ‌ற்றுப் போய்க்கொண்டிருக்க‌க்கூடும். ஒரு குழ‌ந்தையிட‌ம் அத‌ற்குப் பிடித்த‌மான‌து எவை என்றால் அது த‌ன‌க்குத் தெரிந்த‌ எல்லாவ‌ற்றையும் ‍எவ்வித‌ முன்முடிவுக‌ளின்றி சொல்லிக்கொண்டிருக்குமோ அதுபோல‌ நீயும் இந்த‌ உல‌கை ஒருகால‌த்தில் அத‌ன் அழ‌கிய‌லோடும் குரூர‌த்தோடும் சேர்த்தே நேசித்திருக்கின்றாய். ந‌ல்ல‌தும் கெட்ட‌தும், அழ‌கும் அழ‌கின்மையும், ம‌கிழ்ச்சியும் துக்க‌மும் க‌ல‌ந்தவையே 'உண்மையான‌வை' என்றும், அவ்வாறான‌ க‌ல‌வைக‌ளை எதிர்கொள்வ‌தும் அனுபவிப்ப‌தும், க‌ட‌ந்துசெல்ல‌லுமே வாழ்க்கையின் அற்புத‌மென‌ நீ ஒரு கால‌த்தில் சொல்லிக்கொண்டு திரிந்த‌து உன‌க்கு நினைவு இருக்கிற‌தோ தெரியாது என‌க்கு ந‌ன்கு நினைவிலுண்டு. நீ இன்று ஒற்றை இல‌க்கைக் கொண்ட‌வ‌னாய், ஒற்றைத் த‌ன்மைக்குள் எல்லாம் அட‌ங்கிவிடுமென‌ ந‌ம்புப‌வ‌னாய் ம‌ட்டும் க‌ண்ணும் க‌ருத்தாய் இருப்ப‌தைப் பார்க்கும்போது மிக‌வும் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து. ஆனால் இதைவிட‌ மிக‌ச் சோக‌மான‌து என்ன‌வென்றால் இவ்வாறு ஒன்றுக்காய் ம‌ட்டுமே ஓடிக்கொண்டிருப்ப‌து உன‌து இய‌ல்பு இல்லை என்ப‌தால் ஒவ்வோரு முய‌ற்சியிலும் நீ தோற்றுக்கொண்டேயிருக்கிறாய். முய‌ற்சிப்ப‌தோ, தோல்விக‌ளைச் ச‌ந்திப்ப‌தோ த‌வ‌று என்று எவ‌ரும் சொல்ல‌ப்போவ‌தில்லை. ஆனால் தோல்விக‌ளிலிருந்து எதையாவ‌து க‌ற்றுக்கொள்ளும்போது தான் உன‌து முயற்சிக‌ள் ஆக்க‌பூர்வ‌மான‌தாய் மாறும் என்ப‌தை நீ ஒருகால‌த்தில் அறிந்த‌தை நீ இப்போது ம‌றந்துவிட்டாய். எனெனில் நீ ஒற்றை இல‌க்குடைய‌ ஒற்றைத் த‌ன்மையுடைய‌வ‌னாய் மாறிவிட்டாய். இத‌ற்காய் நீ உன‌து எல்லா இய‌ல்புக‌ளையும் க‌லைத்து நிற்ப‌வ‌னாய்ப் பார்க்கும்போது, என‌க்கு இலைக‌ளை உதிர்ந்த‌ இலையுதிர்கால‌த்து ம‌ர‌ங்க‌ள்தான் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. ஆனால் இலையுதிர்கால‌த்து ம‌ர‌ங்க‌ளுக்கு ப‌ருவ‌ங்க‌ளுக்கேற்ப‌ த‌ங்க‌ளைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளும் இய‌ல்பு உள்ள‌தால் அவை மீண்டும் வ‌ச‌ந்த‌ கால‌த்தில் த‌ங்க‌ளை இலைக‌ளைத் துளிர்க்க‌ச் செய்து, த‌ம் வாழ்வைக் கொண்டாடுப‌வையாக‌ இருக்கின்ற‌ன‌. ஆனால் நீ அப்ப‌டியில்லை, இலைதுளிர்கால‌ம், வ‌ச‌ந்த‌கால‌ம், இலையுதிர்கால‌ம், ப‌னிக்கால‌ம் என‌ எல்லாக்கால‌ங்க‌ளிலும் ஒற்றை இல‌ட்சிய‌த்தோடே ஓடிக்கொண்டிருப்ப‌தால், உன்னால் உன‌து தோல்விக‌ளின்போது உன்னை மீண்டும் புத்துயிர்வாக்க‌ முடிவ‌தில்லை.

2.
இன்று ஒரு மாதிரியாக‌ நீ ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌தன் மூல‌ம் உன‌து இட‌த்தை நிரூபித்துவிட்டாய். ஒரு விட‌ய‌த்தின் வெற்றியை/தோல்வியை பிற‌ரோ பிற‌தோ தீர்மானிப்ப‌தில்லை. அது ந‌ம‌து ம‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து என‌ நானும் நீயும் பில்லிய‌ட்ஸ் விளையாடிய‌ப‌டி விவாதித்த‌து நினைவுக்கு வ‌ருகின்ற‌து. நாம் ஒரு முயற்சியில் ஈடுப‌ட்டு அதில் நாம் எதிர்பார்த்த‌ விளைவு கிடைக்காவிட்டாலும், எம‌தள‌வில் நாம் முழுதாய் முய‌ற்சித்தோம் என்று வ‌ரும் ந‌ம்பிக்கை, நாம் ஒரு விட‌ய‌த்தில் 'தோற்றிருந்தாலும்', ந‌ம்மைப் பொருத்த‌வ‌ரை அது ம‌கிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌ 'வெற்றியே' என‌த்தான் புதிதாய் வ‌ரைய‌றையும் செய்திருந்தோம். இன்னும் விரிவாய் விள‌ங்குவ‌த‌ற்காய் நாம் ஒவ்வொரு செம்ஸ்ட‌ரிலும் எழுதும் ப‌ரீட்சையை உதார‌ண‌த்திற்கு எடுத்திருந்தோம். ப‌ரீட்சையில் அதிக‌ புள்ளிக‌ள் என்ப‌தில‌ல்ல‌ ந‌ம‌து வெற்றி, நாம் ஒரு ப‌ரீட்சையை திருப்ப‌தியாய் எம்ம‌ள‌வில் செய்திருக்கின்றோம் என்று வ‌ருகின்ற‌ நிம்ம‌தியே ந‌ம‌க்கான‌ வெற்றியென‌ச் சொல்லிய‌ப‌டி ரீடோ ஆற்ற‌ங்க‌ரையிலும், பொறியிய‌ல் பீட‌மிருந்த‌ மெக்க‌ன்ஸி வ‌ளாக‌த்திலும் க‌ண‌ட‌ க‌ண்ட‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு விள‌க்க‌ம் கொடுத்து அவ‌ர்க‌ளைக் 'கொடுமை'யும்ப‌டுத்தியிருக்கின்றோம். ஆக‌ ந‌மதான‌ வரைய‌றுப்பில் ஒரு பாட‌த்தில் குறைய‌ புள்ளிக‌ள் எடுத்தாலும் (சில‌வேளைக‌ளில் தேர்ச்சிய‌டையாம‌ல் போனால் கூட‌) ந‌ம‌த‌ள‌வில் திருப்ப‌தியாய்ச் செய்திருக்கின்றோம் என்றால் எம‌தான வெற்றியே. இவ்வாறாக‌ வெற்றி X தோல்வியை வ‌ரைய‌றுத்த‌ நாம், நீ 'ப‌ண‌த்தைச் சேக‌ரிப்ப‌தில் ம‌ட்டுமே ந‌ம‌து எல்லாப் பெருமித‌ங்க‌ளும், ச‌ந்தோச‌ங்க‌ளும் இருக்கிற‌து' என்கின்ற‌போது கேட்க‌ச் ச‌ங்க‌ட‌மாக‌வே இருக்கிற‌து. இத‌ன் பொருட்டு உன‌து உழைப்பையோ அல்ல‌து பொதுவாக‌ உழைப்பையோ கேவ‌ல‌ப்ப‌டுத்துவ‌த‌ல்ல‌ என‌து நோக்க‌ம‌. மிக‌க்குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்தின் கார‌ண‌மாக‌ ஏழு நாட்க‌ளாக‌ வேலை செய்ப‌வ‌ர்க‌ளையோ, ஒரு நாளில் 12 ம‌ணித்தியால‌த்துக்கு மேலாய் இர‌ண்டு ஷிப்ட்(shift) செய்ப‌வ‌ர்க‌ளையோ நாமெல்லோரும் ம‌திக்க‌வே செய்கின்றோம் என்ப‌தை நீய‌றிவாய். ஆனால் உன‌து வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ எட்டு ம‌ணித்தியால‌ வேலையிலேயே உன‌க்குப் போதுமான‌ ப‌ண‌த்தை உழைத்தும் இன்னும் வேண்டுமென‌ நீ அலைய‌த்தொட‌ங்கிய‌போது உன‌க்கும் என‌க்குமிடையில் விரிச‌ல் வ‌ந்திருக்க‌வேண்டும் போலும். நீ உன‌து எட்டு ம‌ணித்தியால‌ வேலைக்குப் பிற‌கும் புதிய‌ புதிய‌ வேலைக‌ளைச் செய்ய‌த்தொட‌ங்கினாய். அவ்வாறான‌ உதிரிவேலைக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டால் உன‌து சிறுவ‌ய‌துக் க‌ன‌வுக‌ளைப் போல‌ அவையும் நீண்டுகொண்டே போக‌க்கூடிய‌தாக‌ இருக்கும். ஒரு ப‌ல்பொருள் அங்காடியில் போய் எல்லாப் பொருட்க‌ளையும் எடுக்க‌முடிவ‌துபோல‌ உன்னிட‌ம் வ‌ரும் வாடிக்கையாள‌ரிட‌ம் நீயே அவ‌ர்க‌ளின் வாழ்க்கைகுத் தேவையான‌ எல்லாவ‌ற்றையும் செய்து த‌ருகின்றேன் என்கின்ற‌போதுதான் ப‌ய‌முறுத்துகின்ற‌து. எல்லாவ‌ற்றையும்... சாம‌ர்த்திய‌ வீட்டிலிருந்து க‌லியாண் வீடுவ‌ரை ப‌க்கேட்ஜாக‌ (package) கொடுப்ப‌தைப் போல‌, நீ அவ‌ர்க‌ளுக்கு எல்லாவ‌ற்றையும் செய்துகொடுப்ப‌வ‌னாக‌ இருக்கின்றாய். நீ ஒருகால‌த்தில் ப‌ண‌த்தை ருசிப்ப‌வ‌னாக‌ இருந்து, இப்போது ப‌ணம் உன்னை உருசிப்ப‌தாய் இருக்கும்போது, அந்த‌ வெறியில் நீ புதிய‌ ம‌னித‌ர்க‌ளை (உன‌து மொழியில் சொல்வ‌த‌னால் வாடிக்கையாள‌ர்க‌ளை)தேடி ஓட‌த்தொட‌ங்குப‌வ‌னாய் ஆகிவிட்டாய். இப்போது உன்னோடு உரையாடும்போது -தொலைபேசியில் வ‌ரும் ஒரு ரெலிமார்க்கெட்டிங் குர‌லுக்கும்- உன்னுடைய‌ குர‌லுக்கும் அவ்வ‌ள‌வு வித்தியாச‌ம் தெரியாது -மிக‌ இய‌ந்த‌ர‌த்த‌ன‌மாய்ப்- போய்விட்ட‌து. உன‌து எல்லாப் பேச்சும் ப‌ணத்தை இன்னும் இன்னும் எப்ப‌டி அதிக‌மாய்ச் ச‌ம்பாதிப்ப‌து என்ப‌தாய் இருக்கிற‌து. தொலைபேசி -ரெலி மார்க்கெட்டிங்- குர‌லை ஆக‌ இய‌லாத‌ ப‌ட்ச‌த்தில் ச‌ட்டென்று துண்டித்து அடுத்த‌ வேலையைப் பார்க்க‌ப் போய்விடலாம். ஆனால் என்னால் உன‌க்கு அதைச் செய்ய‌முடியாது; எனெனில் நீ என‌க்கு ஒரு கால‌த்தில் எல்லாவ‌ற்றையும் ப‌கிரும் உண்மையான‌ ந‌ண்ப‌னாக‌ இருந்த‌வ‌ன்.

உன‌க்கான‌ புக‌ழ், நீ விரும்பிய‌ அந்த‌ஸ்து எல்லாம் இப்போது வ‌ந்துவிட்ட‌ன. ஒரு கைய‌ட‌க்க‌மான‌ விசிட்டிங் கார்ட்டில் எவ்வ‌ள‌வுதான் எழுத்தை நுணுக்கி நுணுகி எழுதினாலும் நீ செய்துகொண்டிருக்கும் ப‌ல‌வேறு வேலைக‌ளுக்கான‌ விப‌ர‌ங்க‌ளை எழுதிவிடுத‌ல் க‌டின‌மாய் இருக்கிற‌து. உன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்காய் இனி வ‌ருங்கால‌த்தில் விசிட்டிங் கார்டுக‌ள் 11 X14 ப‌க்க‌ சாதார‌ண‌ ப‌க்க‌மாய் மாற‌வும் கூடும். நீ விரும்பிய‌ ஒற்றைக் குறிகோளின் உச்ச‌க்க‌ட்ட‌த்தில் ச‌மூக‌ம் முழுதாய் உன்னை ம‌திப்ப‌த‌ற்கு ஏதோ ஒன்று குறைகிற‌தென்றாய். ஒருநாள் நீ சொன்னாய், ச‌மூக‌த்தில் ம‌திப்புள்ள‌ ம‌னித‌ன் என்றால் அவ‌ன் சுற்ற‌ம் சூழ‌ல் சூழ‌ ஒரு பிர‌மாண‌ட‌த் திரும‌ண‌த்தைச் செய்ப‌வ‌னாக‌ இருந்தாக‌ வேண்டும். நீ உன‌து வாடிக்கையாள‌ருக்கு எல்லாவ‌ற்றையும் ப‌க்கேட்ஜாக‌ கொடுப்ப‌தைப் போல‌ திரும‌ண‌த்தை ஒரு ஆட‌ம்ப‌ர‌ ப‌க்கேட்ஜாக‌ செய்வதில் உன‌க்கு எந்த‌ப் பிர‌ச்சினையுமில்லை. ஆனால் என‌க்கிருக்கும் க‌வலை என்ன‌ என்றால் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம், வீடியோ, சட‌ங்கு செய்யும் அய்ய‌ர், வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கான‌ விருந்துண‌வு என‌ எல்லாம் சேர்ந்தே வ‌ரும் ப‌க்கேட்ஜ்க‌ளில் இருப்ப‌துபோல‌, ம‌ண‌ம‌க‌ன் தேடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ண‌ம‌க‌னும், ம‌ண‌ம‌க‌ள் தேடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ண‌ம‌க‌ளும் சேர்ந்த ஒரு சிற‌ப்புப் ப‌க்கேட்ஜ் வ‌ர‌க்கூடுமோ என்ப‌தே. உன‌து திரும‌ண‌த்தின்போது நீ சீத‌ன‌ம் வாங்க‌வில்லை என்ப‌து சிறு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. என‌து ந‌ண்ப‌னின் சில‌ இய‌ல்புக‌ள் இன்னும் மாறாம‌ல் இருக்கிற‌து என்ப‌தில் என்னைவிட‌ வேறு யார் அதிக‌ம் குதூக‌லிக்க‌ முடியும்? எனினும் சில‌ர் நீ உன‌து ம‌ண‌ம‌க‌ளைத் தேர்ந்தெடுக்கும்போது பெண் அக்குடும்ப‌த்தில் ஒரெயொரு பிள்ளையாக‌ இருக்க‌வேண்டுமென்ப‌தில் உறுதியாய‌ இருந்த‌தாக‌வும் அத‌ற்கான‌ கார‌ண‌ம் எப்போதோ ஒரு கால‌த்தில் அவ‌ர்க‌ளின் முழுக்குடும்ப‌ச் சொத்தும் உன‌க்கு வ‌ரும் என்கின்ற‌ ம‌றைவான‌ திட்ட‌ம் இருந்த‌தாக‌வும் பேசியிருக்கின்றார்க‌ள். ஆனால் அது குறித்து நான‌திக‌ம் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை. எனெனில் எல்லாவ‌ற்றையும் ஆக‌வும் அல‌சி ஆராய்ந்தால் எவ‌னுமே யோக்கிய‌ன் இல்லையென்ப‌தை நாமெல்லோருமே அறிவோம். ஆக‌ குறைந்த‌ப‌ட்ச‌ம் எம்மால‌ இய‌லக்கூடிய‌வ‌ற்றை நாம் ந‌ம்பிய‌வ‌ற்றை கைவிடாதிருப்ப‌து ஒவ்வொரு ம‌னித‌ருக்கு அவ‌சிய‌மான‌து என்ப‌தை உண‌ர்ந்து வைத்திருக்கின்றேன்.

உன‌க்குத் துணையாக‌ வ‌ந்த‌ பெண் அவ்வ‌ள‌வு அருமையான‌வ‌ள் என்ப‌தைவிட‌, நாம் தானே ஒருவ‌ர் ந‌ல்ல‌வ‌ராக‌ அல்ல‌து அல்லாத‌வ‌ராக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை உருவாக்குவ‌தாய் இருக்கின்றோம். 'தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ரா' என்ப‌து எவ்வ‌ள‌வு அருமையான‌ வ‌ரிக‌ள். ந‌ம‌தான‌ வாழ்வை நாமே அமைக்கும்போது எல்லா விளைவுக‌ளுக்கும் நாமேதானே பொறுப்பாக‌ முடியும். ஓரிட‌த்தில் நிலையாக‌ இருக்கும் க‌திரையைக் க‌வ‌னிக்காது, நம‌து கால்க‌ள் அடிப‌ட்ட‌வுட‌ன், க‌திரை அடித்துவிட்ட‌தென்று கூறுவ‌து எவ்வ‌ள‌வு அப‌த்த‌மான‌து. ந‌ம‌து கால்க‌ள‌ க‌திரையை அடித்துவிட்ட‌தென்று சொல்வ‌த‌ல்ல‌வா சால‌ச்சிற‌ந்த‌து. இந்த‌த் 'தேற்ற‌ம்' குறித்து விரிவாக‌ உரையாடிய‌து, தே(ர்)மோ டைன‌மிக்ஸ் (Thermo Dynamics) எக்சாமிற்குப் ப‌டிப்ப‌த‌ற்காய் அம‌ர்ந்த‌ ஒரு நாளில் என்ப‌து என‌க்கு நன‌றாக‌ நினைவிருக்கிற‌து. இப்போது தேர்மோ டைனமிக்ஸில் என்ன‌ ப‌டித்தோம் என்ப‌து ஞாப‌க‌ அடுக்குக‌ளில் இருப்ப‌தைவிட‌ இந்த‌ விதண்டாவாத‌ங்க‌ள் தான் அதிக‌மாய் நினைவில் ஓடிய‌ப‌டியிருக்கிற‌து. நம்மைப் போல‌வே நாம் ப‌டிக்க‌த் தேர்ந்தெடுத்த‌ துறையும் த‌வ‌றான‌து என்று கூறுவ‌தைவிட‌ வேறென்ன‌ சாட்டைச் சொல்லி ந‌ம்மை நாமே ஆறுத‌ற்ப‌டுத்துவ‌து? என‌க்குத் தெரியும் நான் இப்ப‌டிக்கூறுவ‌து உன‌க்குப் பிடிக்காது என்று. 'வ‌ல்ல‌வ‌னுக்கு புல்லும் ஆயுத‌ம்' என்றிருக்கும்போது இப்ப‌டிச் சாட்டுக்க‌ள் கூறிக்கொண்டிருப்ப‌து என்ப‌து ஒருவ‌கைத் த‌ப்பித்த‌ல் என்றுதான் நீ அடிக்க‌டி கூறுவாய். உண்மையாயிருக்கலாம். போரிலிருந்து, நேச‌த்திலிருந்து, க‌ற்ப‌திலிருந்து என்று எத்தனை வித‌மான‌ விட‌ய‌ங்க‌ளிலிருந்து த‌ப்பித்து ஓடிக்கொண்டிருக்கும்போது இதுவும் இன்னொரு த‌ப்பித்த‌லாய் இருக்கலாம்தான்.

3.
நீ உழைத்துப் பெறும் ப‌ண‌த்தைப் போல‌வே உன‌து துணையையும் ச‌ட‌ப்பொருளாக‌ நினைத்து நட‌த்திய‌போதுதான் எல்லாச் சிக்க‌ல்க‌ளும் உன‌து திரும‌ண‌ வாழ்வில் வ‌ர‌த்தொட‌ங்கின‌. ப‌ண‌த்தைப் போல‌ பெண்ணையும் நீயுன‌து உட‌மையாக்கிய‌போது உயிருள்ள‌ எந்த‌ ஆத்மாவால்தான் தாங்க‌ முடியும்? உன‌து ப‌ண‌ம் சேக‌ரிக்கும் ஆசையில் ப‌க‌ல்- பின்னேர‌ம் என்று ஓட‌ ஓட‌ உன‌து துணை மிக‌ப்பெரும் த‌னிமையில் விட‌ப்ப‌ட்டிருக்கிறாள். திரும‌ண‌மான‌ பெண்ணை ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ட்டுமில்லை, அதுவ‌ரை எல்லாவ‌ற்றையும் க‌வ‌னித்து க‌வ‌னித்துக் கொடுக்கின்ற‌ பெற்றோர் கூட அவ‌ளை வேறொருத்தியாய் பார்க்கும் நிலையை என்ன‌வென்று சொல்வ‌து? ஒருநாள் நீ விட்டுக்கு வ‌ந்த‌போது அவ‌ள் த‌ன‌து மாமியின் ம‌க‌னோடு வீட்டிற்குள் க‌தைத்துக்கொண்டிருந்த‌து உன‌க்குள் ப‌ல ச‌ந்தேக‌ங்க‌ளை விதைக்க‌த் தொட‌ங்கின‌. பிள்ளை இல்லாத‌ப‌டியால்தானே இவ‌ள் இப்ப‌டி ம‌ற்ற‌வ‌ரோடு ப‌ல்லைக்காட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறாள் என்று விரைவில் உங்க‌ளுக்கான‌ பிள்ளையைப் பெறும் முய‌ற்சியில் ஈடுப‌ட‌த்தொட‌ங்கினாய். பிள்ளை வ‌ந்தால் எல்லாப் பிர‌ச்சினையும் தீருமென்ற‌ கால‌ம் கால‌மாய் சொல்ல‌ப்ப‌ட்ட‌த்தை நீயும் ந‌ம்புவ‌தாயிருந்த‌போது, நாம் க‌விதையொன்றில் விவாதித்த‌ வ‌ளாக‌ கால‌த்து ந‌ண்ப‌னாய் நீ இல்லையோ என‌ என‌க்குத் தோன்றிய‌து. உன‌து துணை மீதான ச‌ந்தேக‌ம், அவ‌ள் த‌ன்னை அழ‌குப‌டுத்துவ‌தில், த‌னியே வெளியே செல்வ‌தில், தொலைபேசுவ‌தில் என‌ எல்லாவ‌ற்றிலும் சந்தேக‌ப்ப‌டத்தொட‌ங்கினாய். அவ‌ள் செய்யும் ஒவ்வொரு விட‌ய‌த்திற்கும் நீ விள‌க்கம் கேட்க‌த்தொட‌ங்கினாய்.

ஒரு நாள் நானும் நீயும் செக‌ண்ட‌ க‌ப்பில் (Second Cup) தேநீர‌ந்திக்கொண்டிருந்த‌போது, 'இவ‌ள‌வை வெளியே எல்லாத்தையும் மூடிக்கொண்டு உள்ளே எல்லாவ‌ற்றையும் திற‌ந்துகொண்டு திரிகிறாள‌வை' என்றாய். இதைக்கேட்ட‌ ஆத்திர‌த்தில் 'ஏன் நாங்க‌ளுந்தானே எவ‌ள் திற‌ந்து காட்ட‌மாட்டாளென்று எங்க‌டைய‌ளை துருத்திக்கொண்டு திரிகிறோம்' என்று நான் சொன்ன‌போது உன் க‌ண்க‌ளில் தெரிந்து விய‌ப்பா கோப‌மா என்ப‌து குறித்து நான் அக்க‌றை கொள்ள‌வில்லை. உன‌க்கு ஞாப‌க‌ம் இருக்குமோ இல்லையோ தெரியாது, ஒரு கால‌த்தில் நாங்க‌ளுந்தானே ஒரு பெட்டையாவ‌து எங்க‌ளோடு க‌தைக்கா மாட்டாளா.., சேர்ந்து கூட‌த்திரிய‌ மாட்டாளா என்று ஏங்கிக்கொண்டிருந்திருக்கின்றோம். ஒருமுறை ந‌ல்ல‌ வ‌டிவான‌ பெட்டை short skirtம், white topமுமாய் ப‌ஸ்சில் ஏறிய‌போது, வ‌குப்புக்காய் க‌ம்ப‌ஸில் இற‌ங்காம‌ல் அவ‌ள் எங்கே இற‌ங்குவாளோ அங்கே போய் இற‌ங்குவோம் என்று, அவ‌ளோடு போய் அவ‌ளை அவ‌ள் வீடு வ‌ரை ப‌த்திர‌மாய்க் கொண்டுபோய் விட்ட‌தை ம‌ற‌ந்துவிட்டாயா? அப்ப‌டித் திரும்பி வ‌ருகையில் ஒரு ப‌ல்ல‌க்கு ம‌ட்டும் இல்லை; இருந்திருந்தால் அவ‌ளை இந்த‌ ந‌க‌ர் பூரா நாங்க‌ள் அடிமைக‌ள்போல‌ தூக்கிக்கொண்டு திரிய‌வும் த‌யாராயிருந்திருப்போம் என்று எங்க‌ள‌ நிலையை நாங்க‌ளே ந‌க்க‌ல‌டித்த‌ அந்த‌ப் பின்னேர‌ப்பொழுதை ம‌ற‌ந்து, எப்ப‌டி 'இவ‌ள‌வை எல்லாவ‌ற்றையும் விரித்துக் காட்டிக்கொண்டு திரிகிறாளாவை' என்கிறாய்.

4.
செய்கின்ற‌ எல்லாவ‌ற்றுக்கும் விள‌க்க‌ங்க‌ள் கொடுத்துக்கொண்டிருக்க‌ முடியுமா என்ன‌? அவ‌ள் சில‌வேளைக‌ளில் உன‌து கேள்விக‌ளுக்கு எதையும்பேசாது ம‌வுன‌மாகும்போது வார்த்தைக‌ள் த‌டிக்க‌ப் பேசிய‌ உன் வ‌ன்முறை மெல்ல‌ மெல்ல‌ உட‌லில் கைவ‌க்கும‌ள‌வுக்கு மாறிப்போய்விட்ட‌து. 911 ஜ‌ அழைப்ப‌தோ, த‌ன‌து பெற்றோரை அழைத்து த‌ன‌து நிலைமைக‌ளைச் சொல்வ‌தோ அவ‌ளுக்குக் அவ்வ‌ள‌வு ஒன்றும் க‌டின‌மான‌ விட‌ய‌மில்லை. உன் மீதான‌ அன்பின் நிமித்த‌மோ அல்ல‌து பெண் என்றால் பொறுத்துதான் ஆக‌வேண்டும் என்ற‌ க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌ப‌டியாலோ அவ‌ள் எதுவும் எதிர்வினை செய்யாத‌தை உன‌க்கு வ‌ச‌தியான‌தாய் ஆக்கிக்கொண்டாய். ஒருநாள் இவ்வாறு நீ ஆம்பிளைத்த‌ன‌த்தைக் காட்டிய‌ ம‌றுநாள் நான் உங்க‌ள் வீட்டுக்கு வ‌ந்திருந்த‌போது அவ‌ளின் வ‌ல‌துப‌க்க‌ வாய் மிக‌வும் வீங்கியிருப்ப‌தை அவ‌தானித்திருதிருக்கின்றேன். 'என்ன‌ ந‌ட‌ந்த‌து' என்று கேட்ட‌த‌ற்கு 'ஒன்றுமில்லை ப‌ல்லு வ‌லி அதான்' அப்ப‌டியென்றிருக்கிறாள். ஆனால் மூக்கின் மேலே பிளாஸ்ர‌ர் ஒட்ட‌ப்ப‌ட்டிருந்த‌த‌ற்கும் ப‌ல் வ‌லிதானா காரண‌மா என்று கேட்க‌ விரும்பிய‌ வார்த்தைக‌ளை நான் என‌க்குள் விழுங்கிக்கொண்டேன். இப்ப‌டி மூர்க்க‌மாய் வ‌னமுறை செய்ப‌வ‌ர்க‌ள் மூர்க்க‌மாக‌வே அன்பும் செய்து வ‌ன்முறைக்குள்ளாவ‌ர்க‌ளை த‌ங்க‌ளுக்கு ஏற்ற‌வாறு அடக்கி வைத்திருப்பார்க‌ள் என்ப‌து குறித்து தெளிவிருந்தாலும், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள் வாய் திற‌ந்து முறைப்பாடு செய்யாதிருக்கும்வ‌ரை பிற‌ரால் எதுவும் உத‌வ‌ முடிவ‌தில்லை என்ப‌தே ய‌தார்த்த‌மாயிருக்கிற‌து. அத்தோடு அப்போது உன‌து துணை க‌ர்ப்ப‌மாக‌வுமிருந்தாள். ஆக‌வே நானும் 'எல்லோரையும்போல‌' பிளளை பிற‌ந்த‌வுட‌ன் உங்க‌ள் இருவ‌ருக்குமான‌ உற‌வு சுமுக‌மாகிவிடுமென‌ ந‌ம்பியிருந்தேன். பிள்ளை பிற‌ந்து அவ‌னுக்கு ஒரு வ‌யது வ‌ந்த‌வுட‌ன் ஒரு பெரிய‌ பிற‌ந்த‌நாள் விழாவைக் கொண்டாட‌ச் செய்திருந்தாய். சாம‌ர்த்திய‌ வீடுக‌ள் போல‌ பிற‌ந்த‌நாட்க‌ளுக்குப் போவ‌தும் என‌க்குப்பிடிப்ப‌தில்லை என்ப‌தால், நான் மொன்றிய‌லுக்குப் போக‌ இருப்ப‌தால் வ‌ர‌முடியாதிருக்கென‌ ஒரு சாட்டுச் சொன்னேன். நீ என்னோடு நெருங்கிப் ப‌ழ‌கிய‌வ‌ன் என்ப‌தால் உன‌க்கு எது உண்மையென‌ப் புரியுமென‌ என‌க்கு ந‌ன்கு தெரியும். ஆனால் ம‌னித‌ ம‌ன‌து ‍-முக்கிய‌மாய் உன‌து ம‌ன‌து‍- ஏதோ ஒரு கார‌ண‌த்தை, அது பொய்யாக‌ இருந்தாலும் அதைக்கேட்க‌வே விரும்புகிற‌து. வ‌ள்ளுவ‌ரும் சூழ‌லைப் பொறுத்து பொய் சொல்வ‌தையும் ஏற்றுக்கொள்ள‌லாம் என்கிறார். கூட‌க்குடித்து கூழ்ப்பானைக்குள் விழுந்த‌தைவிட‌ அற‌ப்பானைக்குள் விழுந்தெழும்பிய‌து இவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் எப்ப‌டி உத‌வுகிற‌து பார்த்தாயா?

இப்ப‌டி உன‌து துணையை க‌ன்ன‌ம் வீங்கியும், மூக்கும் உடைந்த‌துமான‌ சில‌ வார‌ங்க‌ளின் பின் அவ‌ள் என‌து செல்போனுக்கு அழைத்திருந்தாள். என்னை அழைத்த‌ற்கான‌ விசேட‌ கார‌ண‌ம் எதாவ‌து இருக்கிற‌தா என‌ வினாவிய‌போது எதையோ சொல்வ‌த‌ற்குத் த‌ய‌ங்கிக்கொண்டிருப்ப‌து ம‌றுமுனையின் ம‌வுன‌த்தின் மூல‌ம் விள‌ங்கிய‌து. 'இப்ப‌டியே சும்மா போனை காதில் வைத்துக்கொண்டிருக்காம‌ல் சொல்ல‌ வ‌ந்த‌தைச் சொல்லுங்க‌ள்' என்று வ‌ற்புறுத்திய‌போதுதான், நீ, அவள் என்னோடு ப‌டுத்தாளா? என்று கேட்டு ச‌ண்டைபிடித்த‌தாய் மெல்லிய‌ குர‌லில் சொன்னாள். 'உங்க‌ளை இப்ப‌டிக் கேட்டுவிட்டு ந‌ண்ப‌ன் அடித்தானா?' என்று கேட்டேன். 'இல்லை' என்று எச்சிலை விழுங்கிய‌போது என்ன‌ பிற‌கு ந‌ட‌ந்திருக்குமென்று ஊகித்த‌றிவ‌து அவ்வ‌ள‌வு க‌டின‌மாயிருக்க‌வில்லை. உன்னைப் போன்ற‌ ஆணாக‌வே நானிருப்ப‌தால் துணையாக‌ வ‌ரும் பெண் மீது ச‌ந்தேக‌ம் கொள்வ‌தைப் புரிந்துகொள்ள‌ முடிகிற‌து. எம‌க்கு எம்மோடு இருப்ப‌வை முழுமையாக‌வும், எம‌க்கு ம‌ட்டுமே உரித்தாக‌வும் இருக்க‌வேண்டும் என்று க‌ன‌வுக‌ள் க‌ண்டுகொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தால் உன‌க்கு வ‌ந்த‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு வ‌ராது/வ‌ர‌ப்போவ‌தில்லை என்றும் சொல்ல‌ப்போவ‌தில்லை. ஆனாலும் ப‌டுக்க‌ வேறு பெண்க‌ள் இல்லாது உன‌து துணையோடு ப‌டுக்க‌ தூண்டில் போடுவேன் என்று நீ நினைத்திருக்கிறாய் என்ற‌போதுதான் உன் மீதான‌ என் ம‌திப்பீடுக‌ள் அத‌ல‌பாதாள‌த்தில் போன‌து போல‌த் தோன்றிய‌து. ரொர‌ண்டோவின் ய‌ங் ஸ்ரிட்டில் இருந்த‌ ஸான்சிபாரில் ஸ்ரிப் டான்ஸ் பார்த்துவிட்டு, விடுதியை மூடிய‌நேர‌த்தில், அங்கே ஆடிய‌ பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெவ‌ரி மோட்ட‌லுக்குப் போன‌து ப‌ற்றி உன‌க்கு இன்னொரு முறை நினைவூட்ட‌வா? வேண்டாம், திரும‌ண‌த்தின்பின் அநேக‌ரைப் போல‌ நானும் புனித‌மாக‌ப் போகின்றேன், எந்த‌க்கார‌ண‌த்தை முன்னிட்டும் என் துணையிட‌ம் என‌து க‌ட‌ந்த‌கால‌ங்க‌ளைப் பேச‌க்கூடாதென‌ நீ கேட்டுக்கொண்ட‌து இப்போது ஞாப‌க‌த்தில் வ‌ந்து தொலைக்கிற‌து. நான் உன‌து துணையோடு ப‌டுத்தேனா என்று நீ கேட்ட‌தை அவ‌ள் தொலைபேசியில் சொன்ன‌போது, ஏன் அடிக்க‌டி நீ ஸான்சிபாருக்கு திரும‌ண‌த்துக்கு முன்பு போனாய் என்று கேட்கும்ப‌டி அவ‌ளிட‌ம் சொல்ல‌ விரும்பிய‌தை ம‌றுமுனையில் எத‌ற்காக‌வோ அழுத‌ உன‌து ம‌க‌னின் குர‌ல் த‌டுத்து நிறுத்தியிருந்த‌து.

இத‌ன்பிற‌கு ஒருநாள் நாங்க‌ள் த‌ற்செய‌லாய் உன‌து வீட்டுக்க‌ருகிலிருந்த‌ தெருவில் ச‌ந்தித்த‌போது 'வா பாருக்குச் சென்று ம‌து அருந்துவோம்' என்று வ‌ற்புறுத்தி நீயென‌து காரில் ஏறிக்கொண்டாய். ம‌துவின் உச்ச‌த்தில், 'நான் உன் ம‌னுசியோடு ப‌டுத்தேனா என்று கேட்டிருக்கிறாய் நீ ம‌ட்டும் என்ன‌ திற‌மா?' என்று க‌த்தினேன். எதையும் திருப்ப‌ப்பேசாத‌ உன‌து ம‌வுன‌ம் என‌க்கு மிக‌வும் ஆச்ச‌ரிய‌மாயிருந்த‌து. அன்றிர‌வு உன்னை உன‌து வீட்டடியில் இற‌க்கிவிட்டுத் திரும்பிய‌ ப‌த்து நிமிட‌த்தில், 'நீ பாரில் கேட்ட‌ கேள்விக்கு இப்போது ப‌தில் சொல்லுகிறேன் துணிவிருந்தால் என் வீட்டுக்கு வாடா?' என்றாய். உன‌து வீட்டுக்குள் வ‌ந்த‌போது ஒரு பிர‌ள‌ய‌ம் ந‌ட‌ந்த‌மாதிரி எல்லாம் குலைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. வ‌ர‌வேற்ப‌றையிலிருந்த‌ தொலைபேசி இர‌ண்டாக‌ உடைக்க‌ப்ப‌ட்டு அது வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்காலியும் காலில்லாது இருந்த‌து. 'எங்கைய‌டா உன‌து ம‌னுசி?' என்று கேட்ட‌போது உன்ன‌வ‌ள் குசினிக்குள் மூச்சுப்பேச்சில்லாம‌ல் கிட‌ப்ப‌தைச் சைகையால் காட்டினாய். அவ‌ளுக்கு நெற்றியிலும், பின்ன‌ந்த‌லையிலும் காய‌ங்க‌ள் ஏற்ப‌ட்டு இர‌த்த‌ம் க‌சிய‌த்தொட‌ங்கியிருந்த‌து. What the F***.என்று 911ஐ அழைக்க‌த்தொட‌ங்கினேன். அத‌ன்பிற‌கு ச‌ட்ட‌ம் வ‌ரைய‌றுத்த‌ப‌டி எல்லாம் நிக‌ழ்ந்து முடிந்திருந்த‌து. ஆனால் நாம் எவ‌ருமே எதிர்பாராத‌ ஒன்று பிறகு நிக‌ழ்ந்த‌து. உன‌க்குரிய‌ த‌ண்ட‌னை முடிந்து, குறிப்பிட்ட‌ ஊர‌ட‌ங்குட‌ன் நீ வெளியே வ‌ந்த‌ ஒரு ச‌னிக்கிழ‌மை நீ த‌ற்கொலை செய்துகொண்டாய். இத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளைத் தேடிப்போவ‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. எல்லோரும் உன்னைப் போல‌ ஒரு ஒற்றைக் கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்து த‌ங்க‌ளை ச‌ட்ட‌த்தின் தேவ‌ர்களாக் ஆக்கிக்கொண்டன‌ர். ஆனால் உன‌து முடிவுக்குக் கார‌ண‌த்தை ஆராய‌ வேண்டுமெனில் எம்மைப் போர் துர‌த்திய‌ கால‌த்திலிருந்து ஆர‌ம்பித்த‌, எம‌து பிற‌ழ்ந்த‌ ம‌னோநிலைக‌ளை ஆதியோடு அந்த‌மாய் ஆராய‌ வேண்டும்.

ஆனாலும் நாம் வீழ்ச்சியின் நாய‌க‌ர்க‌ளாய் ஆனோம். க‌ட‌ந்த‌கால‌த்தில் நாம் பேசிய‌, வ‌ரைய‌றுத்த‌ எல்லாமே வீழ்ச்சி என்ற‌ புள்ளியில் முடிந்துபோன‌தை என்ன‌வென‌ச் சொல்வ‌து? அப்ப‌டியெனில் நாம் ந‌ம்பிய‌வையெல்லாம் க‌ற்ப‌னையின் விளைநில‌த்திலிருந்தா முளைத்து எழும்பியிருக்கின்ற‌ன‌? நாம் வ‌ளாக‌த்தில் எம‌து துறைக்கு அப்பால் க‌ற்ற‌ அந்திரோபோல‌ஜியும், சோஸியலாஜியும், அர‌சிய‌ல் விஞ்ஞான‌மும் எம‌க்குக் க‌ற்றுத்த‌ந்ததுதான் என்ன‌? உன‌து த‌ற்கொலை என‌து வாழ்வில் இனி நிக‌ழ‌ப்போவ‌து எல்லாம் மிக‌ப்பெரும் வீழ்ச்சியென்றுதான் ம‌றைமுக‌மாக‌க் கூறுகின்ற‌தா? எனெனில் நானும் நீயும் ஒத்த‌ அலைவ‌ரிசையிலே இருந்திருக்கின்றோம். ஒருவ‌ர் நினைத்து உரையாடுவ‌தை இன்னொருவ‌ர் இடைவெளி நிர‌ப்ப‌க்கூடிய‌வ‌ராக‌ இருந்திருக்கின்றோம். என‌க்கு மிக‌ப்ப‌யமாயிருக்கிற‌து, நாம் ந‌ம்பிய‌வைக‌ள் பிழைத்துப்போய்விடுவ‌தற்குள் கொஞ்ச‌ கால‌மாவ‌து 'வாழ்ந்துவிட்டுப் போக‌ ஆசைப்ப‌டுகின்றேன். இப்போது நான் உன‌து துணையோடும், ம‌க‌னோடுந்தான் சேர்ந்து இருக்கிறேன். என்னைப் போல‌வோ உன்னைப் போல‌வோ அன்றி, எல்லாவ‌ற்றையும் க‌ட‌ந்துபோய் வாழ்வ‌தில் என்றுமே ந‌ம்பிக்கைகொள்கின்ற‌ ந‌ம‌து துணையைப் போல‌ அவ‌ன் வ‌ள‌ர‌ட்டும். என‌க்குத் தெரியும், 'பார்த்தாயா நான் நினைத்த‌துபோல‌ அவ‌ள் உன்னோடு ப‌டுத்துவிட்டாள் தானே' என்று நீ சொல்ல‌ப்போகின்றாய் என்று. ம்...எல்லா ஆண்க‌ளும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரேமாதிரித்தான் சிந்திக்கின்றோம் தானில்லையா?

இங்கே என்னையொரு புனித‌னாய் உருவ‌கித்து எழுதிய‌ பிர‌திக்கு எதிர்மறையான பிரதியை நீ எழுதுவதற்கு உள்ளாய் என்பதும் நானறிவேன். இப்போதெல்லாம் பனி பொழிந்து கொண்டிருக்கும் இந்த வீதியில் யாரோ நள்ளிரவில் நடந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் காலடித்தடங்களை ம‌ட்டும் விட்டு விட்டு தன்னை மறைத்துக்கொண்டு போவது நீயாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய அச்சமெல்லாம் நானில்லாத ஒரு நாளில் நீயெழுதிய பிரதியை எங்களின் பையனுக்கு வாசிக்க‌க்கொடுத்து -அவ‌ன் சொல்ல‌ப்ப‌டாத‌ இன்னொரு உண்மையை- அறிந்த‌ அச்ச‌த்தில் நானும் உன்னைப் போல‌ த‌ற்கொலை செய்துவிடுவோனோ என்ப‌தாக‌ இருக்கிற‌து.

-----------