கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'கால‌ம்' இத‌ழில் வெளிவ‌ந்த‌ க‌தை

Tuesday, May 26, 2009


ஹேமா அக்கா
-இள‌ங்கோ


'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.

பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி. இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌கால‌த்தில் கூட‌, இப்ப‌டி அள்ள‌ அள்ள‌க்குறையாத‌ ந‌ல்ல த‌ண்ணியும், தார‌ள‌மாய் ல‌க்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன‌ ச‌னிய‌னுக்கு நீங்க‌ள் ச‌ண்டை பிடிக்கிறிய‌ள் என்றொரு ஆமிக்கார‌ன் ச‌ன‌த்தை செக்பொயின்றில் வைத்து ப‌ரிசோதித்துப் பார்க்கும்போது கேட்ட‌தாயும் ஒரு க‌தையிருந்த‌து. அவ‌ன் அப்படிகேட்ட‌திலையும் பிழையில்லைத்தான். ந‌ல்ல‌ தோட்ட‌க்காணிக‌ள், நிறைய‌ ப‌னைம‌ர‌ங்க‌ள், ஆடு மாடுக‌ள் என்று எங்க‌ள் ஊரிலை ச‌ன‌ங்க‌ள் இருந்த‌போது அவ‌னுக்கு அப்ப‌டித் தோன்றிய‌தில் பிழையுமில்லை.

நாங்க‌ள் க‌த்து க‌த்தென்று க‌த்த‌ அண்டை அய‌லிலிருந்த‌ ச‌ன‌மெல்லாம் கிண‌ற்ற‌டியில் கூடிவிட்ட‌து. விழுந்த‌ கிண‌று ஒரு ப‌ங்குக்கிண‌று. ஆனால் ப‌ங்கிருக்கிற‌வைய‌ள், இல்லாத‌வைய‌ள் என்று ஊரிலையிருக்கிற‌ எல்லாச் ச‌ன‌மும் அதைத்தான் பாவிக்கிறவையள். எங்க‌ள் ஊரின் மண், ச‌ன‌ம் சாதி பார்க்கிற‌ மாதிரி வ‌ஞ்ச‌ம் எதுவும் செய்த‌தில்லை. யார் தோண்டினாலும் ந‌ல்ல‌ த‌ண்ணியைத் த‌ந்துகொண்டிருந்த‌து. இல‌ங்கை ஆமியின் ஒபரேஷ‌ன் லிப‌ரேச‌னோடு தொட‌ங்கிய‌ பொம்ம‌ர‌டியிலிருந்தும், ப‌லாலியிலிருந்தும் காங்கேச‌ந்துறையிலிருந்தும் அடிக்கின்ற‌ ஷெல்ல‌டியிலிருந்தும் த‌ப்புவ‌த‌ற்கென‌, நானும் அம்மாவும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் எங்க‌ள் வீட்டு செவ்விளநீர் ம‌ர‌த்தடிப் ப‌க்க‌மாய் வெட்ட‌த் தொட‌ங்கிய‌ ப‌ங்க‌ருக்குள்ளேயே ஆற‌டி வ‌ர‌முன்ன‌ரே தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்ந்திருக்கின்ற‌து. 'டொங்கு டொங்கு' என்று அலவாங்கு போட‌ உறுதியாயிருக்கும் சுண்ணாம்புக் க‌ல்லுக்குள்ளிலிருந்து எப்ப‌டித்தான் இப்ப‌டி ந‌ல்ல‌ சுவையான‌ த‌ண்ணீர் வருகின்ற‌தென்ப‌து என‌க்கும் அந்த‌ வ‌ய‌தில் சரியான வியப்பாய்த்தானிருக்கும். ஹேமாக்கா விழுந்த‌ கிண‌று த‌ண்ணிய‌ள்ளுகின்ற‌ கிண‌று என்றப‌டியால் அந்த‌ள‌வு ஆழ்ப்ப‌மில்லை. ஆன‌ப‌டியால் த‌ப்பிவிட்டா. இப்போ யோசிக்கும்போது ஹேமாக்கா தான் உயிரோடும் இருக்கோனும், ஆனால் அதேச‌ம‌ய‌ம் த‌ன‌து எதிர்ப்பையும் காட்ட‌வேண்டுமென‌ ச‌ம‌யோசித‌மாய் யோசித்துத்தான் இந்த‌க்கிண‌ற்றுக்குள்ளை குதித்திருப்பா போல‌... இல்லை, த‌ன் உயிரை மாய்த்துக்கொள்ள‌ வேண்டும் என்று நினைத்திருந்தால் அவா தன் வீட்டுக்கு இர‌ண்டு வீடுக‌ள் தாண்டிக்கிட‌ந்த‌ ஆழ்ப்பமான‌ கிண‌த்துக்குள்ளையெல்லோ குதித்திருக்க‌வேண்டும். அந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதித்தால் ச‌ன‌ம் உயிரோடு த‌ப்ப‌முடியாத‌ள‌வுக்கு அந்த‌ மாதிரி ஆழ்பப‌மாயும், அடியில் நிறைய‌ப் பாசியுமாயும் அது இருந்தது.

'ஹேமாக்கா வெளியே வாங்கோ, வெளியே வாங்கோ' என்று நாங்க‌ள் கிண‌த்துக்க‌ட்டைச் சுற்றி குஞ்சைப் ப‌ருந்திட்டைப் ப‌றிகொடுத்த கோழி மாதிரி க‌த்திக்கொண்டிருந்தோம். ஹேமாக்கா என்ன‌ க‌ட் வும‌னா இல்லை சுப்ப‌ர் வும‌னா... சும்மா அப்ப‌டியே 'விர்ர்' என்று கிண‌த்துக்குள்ளையிலிருந்து ப‌ற‌ந்துவ‌ர‌. யாரோ ஒராள் ந‌ல்ல‌ மொத்த‌மான‌ க‌யிறையெடுத்து கிண‌த்துக்குள்ளை விட‌ அவா அதைப் பிடித்து ஏறி வ‌ர‌மாட்டேனென‌ அட‌ம்பிடித்துக்கொண்டிருந்தா. அவாவை எப்ப‌டி வெளியே எடுக்கிற‌து என்று எல்லோருக்கும் பெரிய‌ பிர‌ச்சினையாய்ப் போயிட்டுது. அதைவிட‌ ப‌ர‌ப‌ர‌ப்பாய் வ‌ந்த‌ ச‌ன‌மெல்லாம் ஏன் இந்த‌ப் பெட்டை கிண‌த்துக்குள்ளை குதித்தாள், அத‌ற்கான‌ கார‌ண‌ம் என்ன‌வென்று ஆராய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. பொழுதும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் இருள‌த்தொட‌ங்கிவிட்ட‌து. ஹேமாக்காவும் கீழே விட்ட‌ க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு மேலேயேறி வ‌ர‌மாட்டென‌ அட‌ம்பிடித்துக்கொண்டு உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறா. யாராவ‌து பெடிய‌னை கிண‌த்துக்குள்ளை இற‌க்கி அவ‌னைப் பிடித்துக்கொண்டு ஹேமாவாக்காவை தூக்க‌லாமெண்டாலும், ஹேமாக்கா ஒரு கும‌ர்ப்பெட்டையாயிருப்ப‌து 'க‌ற்பு' சார்ந்த‌ பிர‌ச்சினையாக‌வும் ச‌ன‌த்துக்கு இருக்கிற‌து. வ‌ய‌துபோன‌ கிழ‌டுக‌ளை இற‌க்க‌லாந்தான். ஆனால் ஹேமாக்காவின் பார‌த்தை த‌ங்க‌டை தோளிலை தாங்கிக்கொண்டு க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறுவ‌த‌ற்குள் கிழ‌டுக‌ளுக்கு சீவ‌ன் இருக்குமா என்ப‌தும் கேள்விக்குரிய‌துதான். ஒரு த‌ற்கொலை முய‌ற்சி த‌ப்பித்துவிட்ட‌து என்ற நிம்ம‌திப்பெருமூச்சை தெரிந்தே செய்கின்ற‌ ஒரு கொலையில் ப‌ரீட்சித்துப் பார்க்க‌ எவ‌ருக்கும் அவ்வளவாய் உட‌ன்பாடில்லை. என‌வே கிழ‌வ‌ர்க‌ளையும் இற‌க்க‌முடியாது. ஆக‌ இவ்வாறாக‌ ஹேமாக்காவை வெளியே எடுப்ப‌து பெரும் சிக்க‌லாகிவிட்ட‌து. வெளியே நிற்கிற‌ ச‌ன‌ம் என்ன‌ செய்வ‌து என்று கையைப் பிசைந்துகொண்டிருப்ப‌தைப் பார்த்துப் பார்த்து ச‌லித்தே ஹேமாக்கா தான் இந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதிக்கமுன்ன‌ர் த‌ன் முடிவை ஆழ‌ ம‌றுப‌ரிசீல‌னை செய்திருக்க‌லாம் என்று கூட நினைத்திருக்க‌லாம்.

க‌டைசியாய், இர‌ண்டுப‌க்க‌மும் கையிருக்கிற‌ க‌திரையிலை நான்கு க‌யிறைக் க‌ட்டி ஒரு பெட்டியை இற‌க்கிற‌மாதிரித்தான் க‌திரையை இற‌க்கிச்சின‌ம். ஹேமாக்கா க‌திரையிருந்து நாலு க‌யிற்றில் இர‌ண்டு க‌யிற்றைக் கையிர‌ண்டாலும் பிடிக்க‌, வெளியிலிருந்து ச‌ன‌ம் தூக்க‌த்தொட‌ங்கிச்சினம். சூர‌ன்போரிலை சூர‌னையும் முருகையும் அங்கால் ப‌க்க‌ம் இங்கால் ப‌க்க‌ம் ஆட்டுகின்ற‌ மாதிரி கிண‌த்தின்றை உட்சுவ‌ரிலை அடிப‌ட்டு அடிப‌ட்டு ஹேமாக்கா வெளியே வ‌ந்திருந்தா. அவாவைப் பார்க்க‌ச் ச‌ரியாய்ப் பாவ‌மாயிருந்த‌து. ம‌ழைக்கால‌த்திலை ந‌னைகின்ற‌ கோழிக்குஞ்சுக‌ள் மாதிரி பாவாடை ச‌ட்டை எல்லாம் ந‌னைந்து கூனிப்போயிருந்தா. அத்தோடு ச‌ன‌மெல்லாம் ஒரு மாதிரியாய்ப் பார்த்த‌ பார்வை அவாவையின்னும் கூனிக்குறுக‌ச் செய்திருக்கும்.

2.
ஹேமாக்கா கிண‌ற்றில் விழுந்த‌ற்கான‌ கார‌ண‌த்தை ச‌ன‌ம் அல‌சிப் பிழிவ‌த‌ற்கு முன்ன‌ரே என‌க்கு அத‌ற்கான‌ கார‌ண‌ம் தெரிந்திருந்த‌து. உண்மையிலேயே ச‌ன‌ம் ஹேமாக்காவைக் குற்ற‌வாளிக்கூண்டில் ஏற்றினால் நானுமோர் சாட்சியாக‌ ஏறத்தான் வேண்டியிருக்கும். ஆனால் அவ்வாறான பொழுதில் மவுனமாய் இருந்திருப்பேனே த‌விர‌ ஹேமாக்காவிற்கு எதிராய் எதுவும் சொல்லியிருக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொல்வேன். எனெனில் ஹேமாக்கா அவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வா; என‌க்கும் அவாவை எங்க‌டை அமமாவிற்கு பிற‌கு அப்ப‌டிப் பிடிக்கும்.

எங்க‌ள் வீட்டையும், ஊரிலையிலிருந்த‌ ப‌ள்ளிக்கூட‌த்தையும் பிரிப்ப‌து ஒரு ரோட்டுத்தான். க‌ல்லு நிர‌ப்பி தார் ஊற்றி ச‌ம‌த‌ள‌மாய் அமைப்ப‌துதான் தெருவென்றால், இதைத் தெருவென்றே கூற‌முடியாது. ஒரு வெள்ள‌வாய்க்காலாய் இருந்து கால‌ப்போக்கில் பரிணாமடைந்து ஒரு ஒழுங்கையாகிவிட்ட‌து என்றுதான் சொல்ல‌வேண்டும். ம‌ழை பெய்து வெள்ள‌ம் ஓடுகின்ற‌ வேலையில் வாழைக்குற்றியில் வ‌ள்ள‌ம் விடுவ‌த‌ற்கு மிக‌ உக‌ந்த‌ இட‌மென‌ச் சொல்ல‌லே இன்னும் சால‌ச் சிற‌ந்த‌து. அவ்வாறு எங்க‌ள் வீடுக‌ளையும், ப‌ள்ளிக்கூட‌த்தையும் பிரிக்கின்ற‌ ஒழுங்கையினூடு நீங்க‌ள் செல்வீர்க‌ளாயின் 'ட‌'வ‌டிவில் நீங்க‌ள் வ‌ல‌து கைப்ப‌க்க‌மாய் திரும்பினால் ஒரு ஹொஸ்ட‌லைக் காண்பீர்க‌ள். அங்கேதான் தூர‌ இட‌ங்க‌ளிலிருந்து வ‌ந்து பெடிய‌ன்க‌ள் ப‌டித்துக்கொண்டிருப்பார்க‌ள். ஹொஸ்ட‌லிலிருந்து பின்ப‌க்க‌மாய் ஒழுங்கைக்குள் நுழைவதற்கு இருக்கும் கேற் எப்ப‌வும் பூட்டிய‌ப‌டியேதான் இருக்கும். என‌வே ஹெஸ்ட‌லுக்குப் போவ‌த‌ற்கோ அல்ல‌து அங்கிருந்து வெளியே வ‌ருவ‌த‌ற்கோ நீங்க‌ள் உய‌ர‌ம் பாய‌த‌லில் தேர்ச்சி பெற்ற‌வ‌ராக‌ இருக்க‌வேண்டும். எனெனில் ம‌திலேறிக் குதிக்க‌வேண்டும். என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் ஹொஸ்ட‌லில் ப‌ட‌ம் போடும்போது, ப‌ட‌ம் தொட‌ங்கிய‌பின் இருட்டோடு இருட்டாய் உள்ளே மதிலேறிக்குதித்துப் போய்விடுவோம். ப‌ட‌ம் தொட‌ங்க‌ப்போகின்ற‌தென்றால் ஹொஸ்ட‌லில் இருக்கும் அண்ணாமார்க‌ள் விசில‌டிப்பார்க‌ள். நாங்க‌ள் முன்னேறிப்பாய்வ‌த‌ற்குத் த‌யாராய் ஹொஸ்ட‌ல் ம‌தில‌டிக்க‌டியில் நின்றுகொண்டு இருப்போம். ஆனால் நாங்கள் சிறுவர்களாயிருந்ததால் மதிலில் ஏற்றிவிடுவதற்கு யாரினதோ உதவி தேவையாகவிருக்கும். இவ்வாறாக‌ நிறைய‌ப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்திருக்கின்றோம், சில‌ அண்ணாக்களின் பிற‌ந்த‌நாள் கொண்டாட்டங்க‌ளில் க‌ல‌ந்துகொண்டிருக்கின்றோம்.

ஹொஸ்ட‌லிருக்கும் பெடிய‌ங்க‌ளுக்கு சில‌வேளைக‌ளில் க‌ர‌ண்டில்லாவிட்டால் குளிக்க‌த் த‌ண்ணியில்லாது போய்விடும். அப்போது ம‌டடும் பின்ப‌க்க‌ கேற் திற‌க்க‌ப்ப‌ட்டு எங்க‌ள் வீட்டுக்கிண‌றுக‌ளில் குளிக்க‌ ஹொஸ்ட‌ல் நிர்வாக‌த்தால் அனும‌திக்க‌ப்ப‌டுவார்க‌ள். ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்டால், எங்க‌டை ஊரும் அல்லோல‌க‌ல்லோல‌ப்ப‌ட்டுவிடும். இன்னும் குறிப்பாக‌ச் சொல்ல‌ப்போனால், ஊரிலையிருக்கிற‌ கும‌ர்ப்பெட்டைய‌ளுக்குத்தான் உள்ளூற‌ ம‌கிழ்ச்சி த‌தும்பியோடியபடியிருக்கும். அதுவ‌ரை வீட்டிலை அம்மாமார் 'பிள்ளை த‌ண்ணிய‌ள்ளிக்கொண்டு வாங்கோ' என்றால் ஓடிப்போய் ஒளித்துக்கொள்ப‌வ‌ர்க‌ள் கூட ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்றால் வாளியோடு கிண‌த்த‌டிக்கு அடிக்க‌டி போவதும் வருவதுமாய் இருப்பார்கள். கிண‌த்த‌டியில் விழிக‌ளும், புருவ‌ங்க‌ளும் நிக‌ழ்த்துகின்ற‌ உரையாட‌ல்க‌ளுக்கு காப்பிய‌ங்க‌ளின் சுவை கூட‌ நிக‌ரான‌வையா என்ப‌து ச‌ந்தேக‌ந்தான். தாங்க‌ள் இர‌க‌சியாய்ப் பெண்க‌ளால் இர‌சிக்க‌ப்ப‌டுகின்றோம் என்று, ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ளுக்கும் ந‌ன்கு தெரியும். என‌வே ஹொஸ்ட‌லை விட்டு வ‌ரும்போது ஏதோ பெரிய‌ ஊர்வ‌ல‌ம் வாற‌ மாதிரி க‌த்திக் குழறி த‌ங்க‌ளை வ‌ர‌வை ப‌றைசாற்றிக்கொண்டே வ‌ருவார்க‌ள். இன்னுஞ்சில‌ர் உற்சாக‌த்தின் மிகுதியில் சேர்ட் எல்லாம் க‌ழ‌ற்றி கையில் வைத்த‌ப‌டி, த‌ம‌து 'ஆண்மையை' காட்டமுய‌ற்சிப்பார்க‌ள். அந்த‌ நேர‌த்தில் எத்த‌னையோ வீடுக‌ளின் வாச‌ல்க‌ளில் இருந்து வெளிவ‌ந்த‌ பெருமூச்சுக்களின் வெப்ப‌த்தில் அடுப்புக‌ளில் தீ கூட‌ ப‌ற்றியெரிந்திருக்க‌லாம்.

இப்ப‌டி குளிக்க‌ வ‌ந்த‌ பொழுதிலோ அல்ல‌து வேறு ச‌ந்த‌ர்ப்ப‌த்திலோதான் ஹேமாக்காவிற்கும் சசி அண்ணாவுக்கும் நேச‌ம் முகிழ்ந்திருக்க‌வேண்டும். அவ‌ர்க‌ளுக்கிடையிலான‌ ஊடாட்டட‌ங்க‌ளுக்கு நானொரு தூதுவ‌னாக‌ மாற‌வேண்டியிருந்த‌து. க‌டித‌ப்ப‌ரிமாற்ற‌ங்க‌ள், உட‌ன‌டிச் செய்திக‌ள், திட்ட‌ மாற்ற‌ங்க‌ள் என்று ப‌ல்வேறு ப‌ரிணாங்க‌ளில் ஊழிய‌ம் செய்து அவ‌ர்க‌ளின் காத‌லுக்கு நானொரு த‌விர்க்க‌முடியாத‌ தீவிர‌ தொண்ட‌னானேன். இவ்வாறான‌ ஊழிய‌ங்க‌ளுக்கு ஹேமாக்கா த‌ங்க‌டை வீட்டில் நின்ற‌ மரங்களிலிருந்து விளாம்ப‌ழ‌ங்க‌ள், தோட‌ம்ப‌ழ‌ங்க‌ளையும், ஆல‌ம‌ர‌த்த‌டிச் ச‌ந்தியிலிருந்த‌ முருக‌ன் விலாஸில் எட்னா, க‌ண்டோஸ் வ‌கையான‌ சொக்கிலேட்டுக்க‌ளையும், வாய்ப்ப‌ன்க‌ளையும் போண்டாக்க‌ளையும் ச‌ன்மான‌மாக‌ அளித்து த‌ன‌து அன்பையும் ம‌திப்பையும் வெளிப்ப‌டுத்தியிருந்திருக்கிறார்.

ஒருநாள் இப்ப‌டித்தான் ஹேமாக்காவும், சசியண்ணாவும் ஹெஸ்ட‌ல் ம‌திலடியில் ச‌ந்திப்ப‌தாய் ஏற்பாடு. வ‌ழ‌க்க‌ம்போல‌ நிக‌ழ்வ‌துபோல‌ ஹேமாக்கா என்னை ம‌திலால் தூக்கிப்பிடிக்க‌ நான் விசில‌டித்து சசிய‌ண்ணாவுக்கு சிக்ன‌ல் அனுப்பினேன். இவ்வாறான ச‌ந்திப்புக்க‌ள் ந‌ல்லாய்ப் பொழுதுப‌ட்டு, இர‌வு மூடுகின்ற‌ ஏழும‌ணிய‌ள‌வில்தான் ந‌ட‌க்கும். அப்போதுதான் ஒழுங்கைக்குள் ச‌ன‌ ந‌ட‌மாட்ட‌ம் குறைவாயிருக்கும். அத்தோடு ச‌ன‌ம் த‌ற்செய‌லாய்க் க‌ண்டாலும் யாரென்று முகம் பார்ப்பதற்குள் த‌ப்பியோடக்கூடிய‌தாக‌வும் இருக்கும். நான் ம‌திலுக்குள்ளால் எட்டிப்பார்த்து சசிய‌ண்ணா வாறாரா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். குர‌லை வைத்துத்தான் அடையாள‌ம் காண‌க்கூடிய‌ள‌வுக்கு அன்று ந‌ல்ல‌ இருட்டு. என்னுடை விசில் ச‌த்த‌ம் கேட்டு வ‌ந்த‌ சசிய‌ண்ணா என்னுடைய கையைப் பிடித்தார். ஆனால் இப்ப‌டி ஒருநாளும் இறுக்க‌மாய்ப் பிடிப்ப‌தில்லையே என்று 'ஆ... கை நோகின்ற‌தென்று' நான் சொல்ல‌, 'யாரடா நீ உன‌க்கென‌ன‌ இந்த‌ நேர‌த்திலை இங்கே வேலை?' என்று ஒரு குர‌ல் கேட்ட‌து. இது நிச்ச‌யமாய் சசிய‌ண்ணாவின் குர‌லில்லை. 'ஐயோ இது ஹொஸ்ட‌ல் வோட‌னின்ரை குர‌லெல்லோ' என்று என‌க்கு உட‌ம்பு ந‌டுங்க‌த் தொட‌ங்கிவிட்ட‌து. த‌ப்பியோட‌லாம் என்றால் ம‌னுச‌ன் கையை விடுகிற‌தாகவும் இல்லை. அங்காலை ஹேமாக்கா என்ரை காலைத் தூக்குபிடித்துக்கொண்டு நிற்கிறா. 'எத‌ற்க‌டா இப்ப‌ விசில‌டித்தாய்?' என்று அந்த‌ ம‌னுச‌ன் உறுமுகிற‌து. ப‌க‌ல் வேளைக‌ளில் நாங்க‌ள் ப‌க்க‌த்திலையிருக்கிற‌ ப‌ற்றைக் காணிக்குள்ளை கிரிக்கெட் விளையாடும்போது ரெனிஸ் போல் சில‌வேளைக‌ளில் ஹொஸ்ட‌லுக்குள் விழுவ‌துண்டு. அவ்வாறான‌ த‌ருண‌ங்க‌ளில் நாங்க‌ள் ம‌திலுக்கு இங்காலை நின்று 'ப‌ந்தை எடுத்துத்தாங்கோ' என்று க‌த்துவோம். அப்ப‌டியொருத்த‌ரும் எடுத்துத் த‌ர‌ இல்லையெண்டால் நாங்க‌ளாகவே ம‌திலேறிக் குதித்து ப‌ந்தை எடுப்போம். அப்ப‌டி இற‌ங்கியெடுக்கும்போது வோட‌னின் க‌ண்ணில்ப‌ட்டால் ப‌ந்து எடுக்க‌வ‌ந்தோம் என்று சொல்லித் த‌ப்பிவிடுவ‌துண்டு. இப்ப‌ வோட‌ன் என்ரை கையைப் பிடித்துக்கொண்டு 'யார‌டா நீ யாற்றை மோன‌டா நீ'? என்று வெருட்ட‌, என‌க்கு எல்லா அறிவும் கெட்டு, 'ரெனிஸ் போல் விழுந்துவிட்ட‌து எடுக்க‌வ‌ந்த‌ன்' என்டு வாய்த‌வ‌றி உள‌றிவிட்டேன். இந்த‌ இருட்டுக்குள்ளை யார்தான் ரெனிஸ் போல் தேட‌ வ‌ருவாங்க‌ள், வேறேதோ விவகார‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து என்று வோட‌னுக்கு இப்ப‌ ந‌ல்லா விள‌ங்கிட்டுது. ச‌னிய‌ன் பிடித்த‌ ம‌னுச‌ன் என்னை விடுவ‌தாயில்லை. இனியும் இப்ப‌டிக்காரண‌ஞ் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லாவ‌ற்றையும் போட்டுக் கொடுக்க‌வேண்டிவ‌ரும் என்ற‌நிலையில் ச‌ட்டென்று வோட‌னின் பிடியிலிருந்து ஒரு கையை உத‌றியெடுத்து ந‌ல்லாய் 'நொங்கென்று' அவ‌ற்றை த‌லையில் குட்டினேன். ம‌னுச‌னுக்கு நொந்திருக்க‌வேண்டும்; மற்றக் கையின் பிடியைத் த‌வ‌ற‌விட்டார். நானும் ஹேமாக்காவும் பேய் ஒன்று எங்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌மாதிரி பின்ன‌ங்கால் த‌லையில்பட எங்க‌டை வீடுக‌ளுக்கு ஓடிப்போய்ச் சேர்ந்திருந்தோம்.

எப்ப‌டிப் ப‌த்திர‌மாய் பொத்தி பொத்தி வைத்தாலும் எந்த‌ விஷ‌ய‌ம் என்றாலும் ஒருநாள் வெளியே வ‌ர‌த்தானே செய்யும். அப்ப‌டித்தான் ஒருநாள் ஹேமாக்கா-சசிய‌ண்ணா காத‌லும் ஹேமாக்கா வீட்டுக்குத் தெரிய‌வ‌ர. இர‌ண்டு நாளாய் வீட்டில் அறைக்குள் வைத்து ஹேமாக்காவிற்கு செம அடி. அவா பிடிவாத‌மாய் சசிய‌ண்ணாவைத்தான் காத‌லிப்ப‌ன், க‌லியாண‌ங்க‌ட்டுவன் என்று நின்றிருக்கிறா. இர‌ண்டு நாளாய் அறைக்குள்ளையே பூட்டிவைத்திருக்கின‌ம். இனி பிடிவாத‌த்தை விட்டுவிட்டுவாள் என்று நினைத்து மூன்றாம் நாள் வெளியே விட‌த்தான் ஹேமாக்கா இப்ப‌டி கிண‌த்துக்குள்ளை குதித்திருக்கிறா. இப்ப‌ ஹேமாக்காவின் காத‌ல் ஊருல‌க‌த்திற்கு எல்லாம் தெரிய‌வ‌ந்துவிட்ட‌து. இப்ப‌டியாக ஹேமாக்கா-சசியண்ணா விடயத்தில் ஒரு முடிவும் காண‌முடியாது இழுப‌றியாக‌ போன‌போதுதான் இந்திய‌ன் ஆமிப் பிர‌ச்சினை வ‌ந்த‌து. ப‌ள்ளிக்கூட‌மெல்லாம் பூட்ட‌ ஹொஸ்ட‌லிலிருந்த‌ பெடிய‌ங்க‌ளும் த‌ங்க‌ள் த‌ங்க‌ள் ஊருக‌ளுக்குப் போக‌த் தொட‌ங்கிட்டின‌ம். ஹேமாக்காவின் பெற்றோருக்கும் 'அப்பாடா இந்த‌ப்பிர‌ச்சினை இப்படிச் சுமுக‌மாய் முடிந்துவிட்ட‌தே' என்று பெரிய‌ நிம்ம‌தி. ஊர்ச்ச‌ன‌த்தின் வாய்க‌ளும் இப்போது ஹேமாக்காவின் க‌தையைவிட‌ இந்திய‌ ஆமிப்பிர‌ச்சினையைப் ப‌ற்றித்தான் அதிக‌ம் மென்று துப்பத் தொட‌ங்கிவிட்ட‌து. சண்டை தொடங்கியதால், என‌க்கும் ப‌ள்ளிக்கூட‌ம் இல்லையென்றப‌டியால் நானும் ஹேமாக்கா வீட்டிலைதான் அதிக‌ம் பொழுதைக் க‌ழிக்கத்தொடங்கினேன். இந்தியன் ஆமிக்கும் புலிக‌ளுக்கும் ச‌ண்டை தொட‌ங்கி எங்க‌டை ஊர்ச் ச‌ன‌மெல்லாம் உண‌வில்லாது ச‌ரியாய்க் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில். ம‌க்க‌ளைத் த‌ங்க‌ளுக்குள் உள்ளிழுக்க‌வேண்டுமென்றால் அவ்வ‌ப்போது நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌வேண்டுமென்று -உல‌க‌த்திலுள்ள‌ எல்லா அதிகார‌ அர‌சுக‌ளும் நினைப்ப‌துபோல‌- இந்திய‌ன் ஆமியும் த‌ங்க‌டை முகாங்களுக்குச் ச‌ன‌த்தைக்கூப்பிட்டு சாமான்க‌ள் கொடுப்பான‌கள். ஒரு வீட்டிலையிலிருந்தும் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ பெடிய‌ள் பெட்டைக‌ளை இந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கு அனுப்புவ‌தில்லை; 'எதுவுமே' ந‌ட‌க்கால‌மென்ற‌ ப‌ய‌ந்தான். ஆக‌வே ப‌த்துவ‌ய‌சுக்குள்ளையிருந்த‌ என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள்தான் ஆமிக்கார‌ன் த‌ருகின்ற‌ நிவார‌ண‌த்துக்கு கியூவிலை நிற்ப‌ம். ஒருமுறை ஆமிக்கார‌ன் த‌ன்ரை ஹெல்மெட்டாலை அள்ளிய‌ள்ளி கோதுமை மாவை நிவார‌ணமாகத் தந்த‌பொழுதில்தான், காவ‌லில் நின்ற‌ இன்னொரு ஆமிக்கார‌ன் என்னைக் கூப்பிட்டு ஒரு கூலிங் கிளாஸைத் த‌ந்தான். என‌க்கென்டால் அந்த‌மாதிரிச் ச‌ந்தோச‌ம். அவ்வ‌ள‌வு பேர் கியூவிலை நிற்கேக்கை என‌க்கு ம‌ட்டும் ஆமிக்கார‌ன் கூலிங்கிளாஸ் தாறானென்டால் நான ஏதோ வித்தியாச‌மானவனாய்த்தானே இருக்க‌வேண்டும். நான் ஊருக்குள்ளை ஓடிப்போய் ஒவ்வொர் வீட்டிலையும் ஏறியிற‌ங்கி ஆமிக்கார‌ன் என‌க்கு 'கூல்டிங்' கிளாஸ் த‌ந்துவிட்டான் என்று பெருமைய‌டித்துக்கொண்டிருந்தேன். 'அது 'கூல்டிங்' கிளாஸ் இல்லைய‌டா கூலிங் கிளாஸ்' என்று ஹேமாக்கா தான் திருத்தினா. 'உங்க‌ளுக்கு ஒரு கூல்டிங் கிளாஸ் கிடைக்க‌வில்லை என்று பொறாமை அதுதான் நான் சொல்வ‌தை நீங்க‌ள் பிழையெண்டிறிய‌ள்' என்று நான் சொல்ல‌ ஹேமா சிரித்துக்கொண்டிருந்தா. ஹேமாக்கா சிரிக்கிற‌து எவ்வ‌ள‌வு அழ‌கு. அவாவின்ரை ப‌ற்க‌ளின் விம்பம் கூலிங் கிளாஸில் தெறிப்ப‌தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் நானும் ஹேமாக்காவும் அவ‌ங்க‌டை வீட்டிலை தனியே இருக்கேக்கை இந்தியன் ஆமிக்கார‌ன்க‌ள் செக்கிங்குக்கு என்டு வ‌ந்தாங்க‌ள். செக்கிங்கில் வ‌ந்த‌ ஆமிக்கார‌ங்க‌ளில் என‌க்கு கூலிங்கிளாஸ் த‌ந்த ஆமிக்கார‌னுமிருந்தான். நான் அப்போதும் அந்த‌ கூலிங்கிளாசை என்னோடுதான் வைத்திருந்தேன். அந்த‌ ஆமிக்கார‌ன், bomb bomb என்றான். எங்கையோ குண்டை ஒளித்துவைத்திருக்கின்றம் என்டு ஐமிச்சத்தில் அவன் தேடுகின்றான் போல‌ என்று முதலில் நினைத்தேன். No Sir No Bomb என்று ஹேமாக்கா த‌ன‌க்குத் தெரிந்த‌ ஆங்கில‌த்தில் சொன்னா...ஆமிக்கார‌ன் bomb bomb என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருந்தான். you bomb என்றான்....ஹேமாக்கா bomb ஒளித்துவைத்திருக்கிறா என்றமாதிரி அவாவோடை மார்பைப் பிடித்தான்....அக்காவிற்கு என்ன செய்வ‌தென்டு திகைப்பு....நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற‌ன் என்று ஆமிக்காரனுக்கு நினைவுக்கு வ‌ந்திருக்கோனும். you bomb you bomb என்று சொல்லிக்கொண்டு முன்னாலிருந்த‌ அறைக்குள்ளை ஹேமாக்காவைக் கொண்டு போனான்...நான் விளையாடுகின்ற‌மாதிரி பாவனை செய்துகொண்டு ஓர‌க்கண்ணால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த‌ அறைக்கு உள்ளே கொக்கி போட்டு மூடினால்தான் பூட்ட‌ப்ப‌டும். ஆமிக்கார‌னுக்கு 'செக்கிங்குக்காய்' அடுத்த‌ வீட்டுப் போகும் அவ‌ச‌ர‌மோ அல்ல‌து கொக்கி போட்டு அறையை மூடினால் நான் க‌த்தி சனத்தைக் கூட்டிடுவேனே என்று நினைத்தானோ தெரியாது...மெல்லிய‌தாய் க‌தவைச் சாத்தினான்...அதனால் அறை முழுதாய் மூடப்ப‌டாது கொஞ்ச‌ம் நீக்க‌லுட‌ன் திற‌ந்த‌ப‌டியிருந்த‌து. you bomb bomb என்டு ஹேமாக்காவின் ச‌ட்டையைக் க‌ழ‌ற்ற‌ச் சொன்னான். பிற‌கு அக்காவைச் சுவ‌ரோடு அழுத்தியபடி ஆமிக்கார‌னின் பின்புற‌ம் அங்குமிங்குமாய் அசைவ‌தும‌ட்டுமே தெரிந்த‌து. ஆமிக்கார‌ன் 'செக்கிங்' முடித்துப்போன‌போது என‌க்கு அவ‌ன் த‌ந்த‌ கூலிங்கிளாஸ் பிடிக்க‌வில்லை. வீட்டை அதைக் கொண்டுபோய் அம்மம்மா பாக்கு இடிக்கிற‌ க‌ட்டையாலை அதை அடித்து உடைத்தேன்.

இந்திய‌ன் ஆமி வெளிக்கிட‌, வ‌ந்த‌ பிரேம‌தாசாவின் ஆட்சிக்கால‌த்தில் சசிய‌ண்ணா ஒருநாள் எங்க‌ள் ஊருக்கு வ‌ந்திருந்தார். எல்லாச் ச‌னிய‌னும் இந்திய‌ன் ஆமிக்கால‌த்தோடு ஒழிந்துவிட்ட‌தென‌ நினைத்த‌ ஹேமாக்காவின் பெற்றோருக்கு, சசிய‌ண்ணா த‌ன‌க்கு ஹேமாக்காவைக் க‌லியாண‌ங்க‌ட்டித்த‌ர‌க்கேட்ப‌த‌ற்காய் வ‌ந்திருந்த‌து அதிர்ச்சியாயிருந்த‌து. ஏற்க‌ன‌வே எடுத்த முடிவையே திரும்ப‌வும் சொன்னார்க‌ள். 'ஏலாது' என்று ஹேமாக்காவின் பெற்றோர் உறுதியாய்ச் சொன்ன‌தோடு, சசிய‌ண்ணா திரும்பி அவ‌ருடைய ஊருக்குப் போய்விட்டார். எல்லாம் சுமுகமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்த‌ ஒருபொழுதில் ஹேமாக்காவைக் காண‌வில்லையென்று ஊரெல்லாம் தேட‌த்தொட‌ங்கியது. பிற‌கு ஹேமாக்கா சசிய‌ண்ணாவோடு சேர்ந்து ஓடிப் போய்விட்டா என்ப‌து எல்லோருக்குந் தெரிய‌வ‌ந்த‌து. 'ஏன் ஹேமாக்கா இங்கேயிருக்காது தூர இட‌த்திற்கு ஓடிப்போன‌வா?' என்று அம்மாட்டை நான் கேட்ட‌த‌ற்கு, 'சும்மா வாயை மூடிக்கொண்டிரு' என்றுதான் அம்மா அந்த நேரத்திலை சொன்னா. பின்னாட்க‌ளில் அப்ப‌டி ஹேமாககா ஓடிப்போன‌த‌ற்கு சசிய‌ண்ணாவும் ஹேமாக்காவும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற‌ கார‌ண‌த்தை அறிந்தேன். ஊரிலையிருந்து ச‌ன‌ம் கொழும்புக்குப் போய்விட்டு வ‌ருகின்ற‌போது ஹேமாக்காவும், சசிய‌ண்ணாவும் கிளிநொச்சிப் ப‌க்க‌மாய் இருக்கின‌ம் என்று த‌க‌வ‌லை அறிந்து சொல்லிச்சு. நாள‌டைவில் ஹேமாக்காவை ம‌ற‌க்க‌ வைக்கும்ப‌டி போர் எங்க‌டை ஊர்ப்ப‌க்க‌மாய் திரும்ப‌வும் உக்கிர‌மாக‌த் தொட‌ங்கிய‌து.

4.
95ம் ஆண்டு யாழில் நிக‌ழ்ந்த‌ பெரும் இடம்பெய‌ர்வின்போது எங்க‌ளுக்கு முத‌லில் அடைக்க‌லந்த‌ந்த‌து ஹேமாக்க‌வும் சசிய‌ண்ணாவுந்தான். காட்டையும் குள‌த்தையும் அண்டியிருந்த‌ அவைய‌ளின்றை ம‌ண்ணால் மெழுகிப் பூசியிருந்த‌ வீடு உண்மையிலேயே அந்த‌ நேர‌த்திலே சொர்க்க‌மாய்த்தானிருந்த‌து. சில‌ மாத‌ங்க‌ள் ஹேமாக்கா வீட்டையிருந்துவிட்டு நாங்க‌ள் த‌னியே இன்னொரு இட‌த்திற்குப் போயிருந்தோம். ஆனால் அதிக‌மாய் ஒவ்வொரு பின்னேர‌மும் நான் ஹேமாக்கா வீட்டுப்பக்கமாய் வ‌ந்துபோய்க்கொண்டிருந்தேன். ப‌தின்ம‌ங்க‌ளில் நான் இருந்த‌ ப‌ருவ‌ம். எல்லாவ‌ற்றையும் மூர்க்க‌மாய் நிராக‌ரித்துக்கொண்டு நான் ம‌ட்டும் சொல்வ‌து, செய்வ‌தே ச‌ரியென்று உடும்புப்பிடி பிடித்துக்கொண்டிருந்த‌ கால‌ம‌து. நானும் சசிய‌ண்ணாவும் அடிக்க‌டி அர‌சிய‌ல் பேசிச் சூடாகிக் கொண்டிருப்போம். அவ‌ருக்கு எங்க‌டை பிர‌ச்சினையில் நிதான‌மாய் இந்தியாவை அணுகியிருக்க‌வேணும் என்ற‌ ஒரு எண்ண‌ம் இருந்த‌து. அதாவ‌து இந்தியாவோடு அணுச‌ர‌ணையாய் இருந்திருந்தால் எங்க‌ளின் பிர‌ச்சினை எப்ப‌வோ தீர்ந்திருக்குமென்ப‌து அவ‌ருடைய‌ அசைக்க‌முடியாத‌ ந‌ம்பிக்கை. எங்க‌ளின் இந்த‌ முர‌ண் அர‌சியல் விவாத‌ங்க‌ளை சில‌வேளைகளில் செவிம‌டுக்கிற‌ ஹேமாக்கா, 'உங்க‌ள் இர‌ண்டுபேராலையே ஒரு விச‌ய‌த்துக்கு பொதுவான‌ முடிவுக்கு வ‌ர‌முடியாது இருக்கும்போது எப்ப‌டித்தான் எங்கடை ச‌ன‌த்துக்கு எல்லாம் பொதுவாய் வாற‌ தீர்வு கிடைக்க‌ப்போகின்ற‌தோ தெரியாது' என்று சிரித்துக்கொண்டு சொல்லுவா.

ஒருநாள் இப்ப‌டித்தான் வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌ல் பேசி நான் மிக‌வும் கொந்த‌ளித்துக்கொண்டிருநத‌ நேர‌ம். அந்த‌ நேர‌த்தில் சசிய‌ண்ணாவை அடித்தால் கூட‌ப் ப‌ர‌வாயில்லை என்ற‌மாதிரி அவர் மீதான கோப‌ம் நாடி ந‌ர‌ம்புக‌ளில் ஏறிக்கொண்டிருந்த‌போது என்னைய‌றியாம‌லே, 'நீங்க‌ள் ஒரு ம‌னுசரே, எங்கடை ஹேமாக்காவை இந்திய‌ன் ஆமி கெடுத்தாப்பிற‌கும் அவ‌ங்க‌ளைச் ச‌ப்போர்ட் ப‌ண்ணிக்கொண்டிருக்கிறிய‌ள்' என்றேன். என‌க்கே நான் என்ன‌ சொன்னேன் என்று அறிய‌முடியாத‌ உண‌ர்ச்சியின் கொந்த‌ளிப்பு. யாரோ க‌ன்ன‌த்தில் ப‌டாரென்று அறிந்த‌மாதிரி ச‌ட்டென்று எங்கள் எல்லோருக்குள்ளும் தாங்கிக்கொள்ள‌வே முடியாத‌ மிக‌ப்பெரும் ம‌வுன‌ம் கவிழ்ந்திருந்தது. அதுவரை வாஞ்சையோடு என்னைப் பார்க்கும் ஹேமாக்காவின் விழிக‌ள் அப்ப‌டியே உறைந்துபோயிருந்த‌ன. என்ன‌ வித‌மான‌ உண‌ர்ச்சியென்று இன‌ம்பிரித்தறியா முடியாத‌ள‌வுக்கு நான் குற்ற‌த்தின் க‌ட‌லுக்குள் மூழ்க‌த்தொட‌ங்கியிருந்தேன். எதுவுமே சொல்லாம‌ல் எவ‌ரிட‌மும் முறையாக‌ விடைபெறாது நான் வீட்டை போய்ச் சேர்ந்திருந்தேன்.

அடுத்த‌ நாள் விடிய‌ அம்மா, 'டேய் த‌ம்பி ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா என்டு ச‌ன‌ம் சொல்லுது... ஓடிப்போய் என்ன‌ நடந்ததெண்டு பார்த்திட்டு வா' என்று ப‌ட‌பட‌வென்டு கையால் த‌ட்டி எழுப்புகிறா. நான் வோட‌ன் என்னைப் பிடிக்க முயன்ற பொழுதை விட‌ வேகமாய் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அறிய‌ சைக்கிளையெடுத்துக்கொண்டு ஓடுகின்றேன். ஹேமாக்காவுக்கு ஒன்றும் ந‌ட‌ந்திருக்க‌க்கூடாது என்று எங‌கள் ஊர் வைர‌வ‌ரை நேர்ந்துகொண்டு சைக்கிளை வேக வேகமாய் உழக்குகின்றேன். ஹேமாக்காவை குள‌த்துக்குள்ளாலை இருந்து தூக்கிக்கொண்டு வ‌ருகின‌ம். 'ஐயோ ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா எல்லோரும் ஓடிவாங்கோ' என்று, சிறுவனாய் இருக்கும்போது நான் கத்தியது மாதிரி இப்போது க‌த்த‌முடியாது நான் உறைந்துபோய் நிற்கின்றேன். சசிய‌ண்ணா என் கையைப்பிடித்துக்கொண்டு, 'இந்திய‌ன் ஆமி உம்ம‌ளை கெடுத்த‌து ப‌ற்றி இதுவ‌ரை ஏன் என்ன‌ட்டை சொல்லேலை என்டு ம‌ட்டுந்தான் கேட்ட‌னான் வேறொன்றுமே கேட்க‌வில்லை. ஒன்டுமே பேசாம‌ல் இருந்த‌வா இப்ப‌டிச் செய்வா என்டு நான் க‌ன‌விலையும் நினைத்துப் பார்க்க‌வில‌லை' என்று ந‌டுங்கும் குர‌லில் சொல்லிக்கொண்டு இருந்தது என‌க்கு யாரோ பங்கருக்குள்ளிலிருந்து முணுமுணுப்பதுபோலக் கேட்கிற‌து. 'ஹேமாக்கா எழும்புங்கோ நான் வ‌ந்திருக்கின்றேன். உங்க‌ளுக்குத் தெரியுமா உங்க‌ளுக்கு அண்டைக்கு ஆமி அப்ப‌டிச் செய்த‌தைப் பார்த்த‌போது நான் அவ்வளவு காலமும் க‌வ‌ன‌மாய்ப் பொத்திவைத்திருந்த‌ கூலிங்கிளாசையே உடைத்து நொறுக்கின‌வ‌ன்.... நீங்க‌ள் எப்ப‌வும் எங்க‌டை ஹேமாக்காதான். எழும்புங்கோ...எழும்புங்கோ' என்டு ம‌ன‌ம் விடடுக்குழ‌றி அழ‌வேண்டும் போல‌ இருக்கிற‌து. கொலைக‌ளைச் செய்த‌வ‌ர்க‌ளால் ம‌ன‌தை லேசாக்க‌ அழ‌முடிய‌வதில்லை; உள்ளுக்குள்ளேயே ம‌றுகி உருகி த‌ங்க‌ளின் பாவ‌ங்கள் எப்ப‌வாவ‌து க‌ரையாமாட்டாதா என்று காலம் முழுதும் ஏங்கிக் கொண்டிருக்க‌வேண்டிய‌துதான்.



ந‌ன்றி: கால‌ம் (2009)

மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் - த‌மிழாக்க‌ம்: எம்.ஏ. நுஃமான்

Monday, May 25, 2009

உயிர்த் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போது

உயிர் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போது
கூலிக்கு மார‌டிப்போரிட‌மிருந்து அவ‌ர்க‌ளைப் பாதுகாப்ப‌த‌ற்காக‌
நான் விழித்திருக்கிறேன்

நான் அவ‌ர்க‌ளுக்குச் சொல்கிறேன்:
நீங்க‌ள் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்
அங்கு முகில்க‌ளும், ம‌ர‌ங்க‌ளும், கான‌லும், நீரும் இருக்கும்

ந‌ம்ப‌முடியாத‌ நிக‌ழ்விலிருந்து,
ப‌டுகொலைக‌ளின் உப‌ரி மதிப்பிலிருந்து
அவ‌ர்க‌ள் பாதுகாப்பாய் இருப்ப‌தையிட்டு
நான் அவ‌ர்க‌ளைப் பாராட்டுகிறேன்

நான் கால‌த்தைத் திருடுகிறேன்
ஆக‌வே அவ‌ர்க‌ள் என்னைக் கால‌த்திலிருந்து இழுத்தெடுக்க‌ முடியும்
நாம் எல்லோரும் உயிர்த்தியாகிக‌ளா?

நான் குசுகுசுக்கிறேன்: ந‌ண்ப‌ர்க‌ளே,
ஒரு சுவ‌ரைத் துணிக்கொடி க‌ட்டுவ‌த‌ற்கு விட்டுவையுங்க‌ள்,
ஒரு இர‌வைப் பாடுவ‌த‌ற்கு விட்டுவையுங்கள்

நீங்க‌ள் விரும்பும் இட‌த்தில் உங்க‌ள் பெய‌ர்க‌ளைத் தொங்க‌விடுவேன்,
ஆக‌வே ச‌ற்றுத் தூங்குங்க‌ள்
புளித் திராட்சையின் ஏணிப்ப‌டியில் தூங்குங்க‌ள்

உங்க‌ள் காவ‌ல‌ரின் குத்துவாளிலிருந்து
நான் உங்க‌ள் க‌ன‌வுக‌ளைப் பாதுகாப்பேன்
தீர்க்க‌த‌ரிசிக‌ளுக்கு எதிரான‌ புத்த‌க‌த்தின் ச‌தியிலிருந்து
நான் உங்ளைப் பாதுகாப்பேன்

இன்றிர‌வு தூங்க‌ச் செல்கையில்
பாட‌ல் இல்லாத‌வ‌ர்க‌ளின் பாட‌லாய் இருங்க‌ள்

நான் உங்க‌ளுக்குச் சொல்கிறேன்:
நீங்க‌ள் ஒரு புதிய‌ தேச‌த்தில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்
ஆனால், அதை ஒரு பாய்ந்து செல்லும் பெண் குதிரையின்மீது வையுங்க‌ள்

நான் குசுகுசுக்கிறேன்: ந‌ண்ப‌ர்க‌ளே,
நீங்க‌ள் எம்மைப்போல் ஒருபோதும் இன‌ந்தெரியாத‌
தூக்குமேடையின்
சுருக்குக் க‌யிறாக‌ இருக்க‌மாட்டீர்க‌ள்.


ம‌னித‌னைப் ப‌ற்றி

அவ‌ன‌து வாயில் துணிக‌ளை அடைத்த‌ன‌ர்
கைக‌ளைப் பிணைத்து
ம‌ர‌ணப் பாறையுட‌ன் இறுக‌க் க‌ட்டின‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு கொலைகார‌ன் என்று

அவ‌ன‌து உண‌வையும் உடைக‌ளையும்
கொடிக‌ளையும் க‌வ‌ர்ந்து சென்ற‌ன‌ர்
ம‌ர‌ண‌ கூட‌த்தினுள் அவ‌னை வீசி எறிந்த‌ன‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு திருட‌ன் என்று

அவ‌ன் எல்லாத் துறைமுக‌ங்க‌ளில் இருந்தும்
துர‌த்த‌ப்ப‌ட்டான்
அவ‌ன‌து அன்புக்குரிய‌வ‌ளையும்
அவ‌ர்க‌ள் தூக்கிச் சென்ற‌ன‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு அக‌தி என்று

தீப்பொறி க‌ன‌லும் விழிக‌ளும்
இர‌த்த‌ம் ப‌டிந்த‌ க‌ர‌ங்க‌ளும் உடைய‌வ‌னே
இர‌வு குறுகிய‌து
சிறைச்சாலைக‌ள்
என்றென்றைக்கும் எஞ்சியிரா
ச‌ங்கிலிக் க‌ணுக்க‌ளும் எஞ்சியிரா
நீரோ இற‌ந்துவிட்டான்
ரோம் இன்னும் இற‌க்க‌வில்லை
அவ‌ள் த‌ன் க‌ண்க‌ளாலேயே இன்றும் போரிடுகிறாள்
காய்ந்து போன‌ ஒரு கோதுமைக் க‌திரின் விதைக‌ள்
கோடிக்க‌ண‌க்கில் ப‌சிய‌ க‌திர்க‌ளால்
ச‌ம‌வெளியை நிர‌ப்ப‌வே செய்யும்.


தாய்நாடு

ஈச்சைம‌ர‌த்தின் பாளைக‌ளில் என்னைத் தொங்க‌விடு
என்னைத் தூக்கிலிடு,
நான் ஈச்சையை வ‌ஞ்சிக்க‌மாட்டேன்

இந்த‌ நாடு என‌து.
நீண்ட‌ கால‌த்துக்கு முன்பு ந‌ல்ல‌, கெட்ட‌ ம‌ன‌நிலைக‌ளில்
நான் ஒட்ட‌க‌ங்க‌ளில் பால் க‌ற‌ந்திருக்கின்றேன்

என் தாய்நாடு வீர‌ப்ப‌ழ‌ங்க‌தைக‌ளின் ஒரு பொதிய‌ல்ல‌
அது ஒரு நினைவோ, இள‌ம்பிறைக‌ளின் ஒரு வ‌ய‌லோ அல்ல‌

என‌து தாய்நாடு ஒரு க‌தையோ அல்ல‌து கீத‌மோ அல்ல‌
ஏதோ ம‌ல்லிகைச் செடியின் கிளையில் விழும் வெளிச்ச‌மும் அல்ல‌

என‌து தாய்நாடு, நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌னின் கோப‌ம்
முத்த‌மும் அர‌வ‌ணைப்பும் வேண்டும் ஒரு குழ‌ந்தை.

ஒரு சிறைக்கூட‌த்தில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ காற்று
த‌ன் ம‌க‌ன்க‌ளுக்கும் த‌ன் வ‌ய‌லுக்குமாக‌த்
துக்க‌ம் அனுஷ்டிக்கும் ஒரு கிழ‌வ‌ன்

இந்த‌ நாடு என் எலும்புக‌ளைப் போர்த்தியிருக்கும் தோல்
என் இத‌ய‌ம் ஒரு தேனீபோல் அத‌ன் புற்க‌ளுக்கு மேலால் ப‌ற‌க்கிற‌து

ஈச்சைம‌ர‌த்தின் பாளைக‌ளில் என்னைத் தொங்க‌விடு
என்னைத் தூக்கிலிடு
நான் ஈச்சையை வ‌ஞ்சிக்க‌மாட்டேன்.


நான் அங்கு பிற‌ந்தேன்

நான் அங்குதான் பிற‌ந்தேன்
என‌க்கு நினைவுக‌ள் உள்ள‌ன‌
ம‌னித‌ர்க‌ள் போல‌வே நான் பிற‌ந்தேன்
என‌க்கு ஒரு தாய் இருக்கிறாள்
ப‌ல‌ ஜ‌ன்ன‌ல்க‌ள் உள்ள‌ ஒரு வீடும் உண்டு
ச‌கோத‌ர‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் உள்ள‌ன‌ர்
இத‌ய‌ம‌ற்ற‌ ஜ‌ன்ன‌லுட‌ன் ஒரு சிறைக்கூட‌மும் உள்ள‌து
நீர்ப்ப‌ற‌வை எழுப்பிய‌ அலை என‌துதான்
என‌க்கென்று சொந்த‌ப்பார்வை உண்டு
ஒரு மேல‌திக‌ புல் இத‌ழும் உண்டு
உல‌கின் தொலைதூர‌ச் ச‌ந்திர‌ன் என‌துதான்
ப‌ற‌வைக் கூட்ட‌ங்க‌ளும்
அழிவ‌ற்ற‌ ஒலிவ‌ ம‌ர‌மும் என‌துதான்
வாள்க‌ளுக்கு முன்பு நான் இந்த‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்தேன்
அத‌ன் வாழும் உட‌லை ஒரு துய‌ர‌ மேசையாக்கினேன்

நான் அங்குதான் பிற‌ந்தேன்
வான‌ம் த‌ன் தாய்க்காக‌ அழுத‌போது
நான் வான‌த்தை அத‌ன் தாயாக‌ மாற்றினேன்.
திரும்பிவ‌ரும் மேக‌ம் என்னைத் தெரிந்துகொள்வ‌த‌ற்காக‌
நானும் அழுதேன்.
இர‌த்த‌ நீதிம‌ன்ற‌த்துக்குரிய‌ எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்றேன்
அத‌னால் விதியை என்னால் மீற‌முடிந்த‌து
நான் எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்று
பின்ன‌ர் அவ‌ற்றை உடைத்தேன்
ஒரேயொரு சொல்லை உருவாக்க‌: அதுதான் என் தாய்நாடு


ந‌ன்றி: மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் (அடையாள‌ம் ப‌திப்ப‌க‌ம்)

குறிப்பு: 'இந்நூலில் உள்ள‌ ஏதாவ‌து ஒரு ப‌குதியைப் ப‌ய‌ன்ப‌டுத்துவோர் மொழிபெய‌ர்ப்பாள‌ருக்கோ வெளியீட்டாள‌ருக்கோ தெரிவிக்க‌ வேண்டுகிறோம்' என்ற‌ குறிப்பு நூலில் உள்ள‌து. த‌னிப்ப‌ட்டு எம்.ஏ.நுஃமானிட‌ம் இவற்றைப் ப‌திவிடுவ‌த‌ற்காய் அனும‌தி வாங்கியிருந்தேன். எவ‌ராவ‌து இவ‌ற்றை மீள்பிர‌சுர‌ம் செய்வ‌தாயின் த‌ய‌வுசெய்து உரிய‌வ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற‌வும். ந‌ன்றி

காத‌லும் சாக‌ச‌மும் சில‌ க‌ன‌வுக‌ளும்

Wednesday, May 06, 2009

-Sin Nombre ஸ்பானிய‌ திரைப்ப‌ட‌த்தை முன்வைத்து-

"…though your sins are like scarlet, they shall be as white as snow… ”
(Isaiah 1:18, NKJ)
காதலும் சாக‌ச‌ங்க‌ளும் இல்லாது வாழ்க்கை ந‌க‌ர்வ‌தில்லை. கால‌ங்கால‌மாய் தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌ காத‌ல், அவ‌ர‌வ‌ர் அள‌வில் த‌னித்துவ‌மாய் இருக்கிற‌து. ஒவ்வொருத்த‌ருக்கும் அவ‌ர்க‌ளின் காத‌ல் அனுப‌வ‌ங்க‌ள் சிலிர்ப்ப‌டைய‌ச் செய்வ‌தாக‌வோ, ச‌லிப்பைப் பிதுக்கித் த‌ள்ளுவ‌தாக‌வோ, துரோக‌த்தை நினைவூட்டுவ‌தாக‌வோ அமைந்துவிட‌வும் கூடும். ஒரு கால‌த்தில் புதிய‌ நாடுக‌ளைக் க‌ண்டுபிடிக்க‌ க‌ப்ப‌லில் புற‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு சாக‌ச‌ ம‌ன‌து அதிக‌ம் வேண்டியிருந்த‌து. இன்னும் சில‌ரோ த‌ம‌து காத‌லுக்காய்ப் பிற‌ நாடுக‌ளைச் சூறையாடியுமிருக்கின்றார்க‌ள். இன்று உல‌க‌ம‌யமாத‌ல் நில‌ப்பர‌ப்புக்க‌ளை இன்னுஞ் சுருக்க‌வும்/சுர‌ண்ட‌வும் செய்ய‌, வ‌றுமையிலிருந்தும் வ‌ன்முறைக‌ளிலிருந்தும்த‌ப்பி ஒரு வ‌ச‌தியான‌ வாழ்வை அமைப்ப‌த‌ற்காய் ம‌க்க‌ள் புல‌ம்பெய‌ர‌ச் செய்கின்ற‌ன‌ர்.


ஹ‌ண்டோர‌ஸில் இருக்கும் ஸ‌யீராவையும் (Sayra), அவ‌ர‌து மாமாவையும் அமெரிக்காவிற்குக் கூட்டிப்போக‌, த‌ந்தை நியூ ஜேர்சியிலிருந்து வ‌ருகின்றார். ஆனால் இவ‌ர்க‌ளிருவ‌ரையும் முறையான‌ வ‌கையில் அமெரிக்காவுக்குக் கூட்டிச் செல்ல‌ முடியாது. எனெனில் இவ‌ர்க‌ளிட‌ம் எல்லை க‌ட‌ப்ப‌த‌ற்கான‌ விஸா கிடையாது. ஹ‌ண்டோர‌ஸில் இருந்து மெக்சிக்கோ எல்லை வ‌ரை முத‌லில் போக‌வேண்டும். அதுவே மிகுந்த‌ ஆப‌த்தான‌ பய‌ண‌மாகும். பிற‌கு மெக்சிக்கோ எல்லையிலிருந்து மெக்சிக்கோ‍-அமெரிக்கா எல்லைப் பாதுகாவ‌ல‌ரின் க‌ண்ணில் ம‌ண்ணைத் தூவிவிட்டு அமெரிக்காவுக்கு எல்லை க‌ட‌க்க‌வேண்டும்.

ஸ‌யீராவும், அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ரும் தோட்ட‌ங்க‌ளினூடாக‌வும் குறுகிய‌ பாதைக‌ளினூடாக‌வும் தொட‌ர்ச்சியாக‌ ந‌ட‌ந்து சென்று, சர‌க்குக‌ளை ஏற்றிச்செல்லும் ரெயினொன்றில் ஏறுகின்றார்க‌ள். ரெயினில் உரிய‌தான‌ இருக்கைக‌ள் கிடையாது. மேற்கூரையிலோ அல்ல‌து பொருட்க‌ள் ஏற்றிய‌து போக‌ மிச்ச‌மிருக்கும் சொற்ப‌ இட‌த்திலோ நெருக்கி உட்கார‌ வேண்டும். அவ்வ‌போது ரெயில் த‌ரித்து நிற்கும்போது த‌ண்ட‌வாள‌த்திலேயே ப‌டுத்தும், அருகிலிருக்கும் வ‌ச‌தி குறைந்த‌ இட‌த்தில் குளிய‌ல்/இன்ன‌பிற‌ இய‌ற்கை உபாதைக‌ளைச் செய்வ‌த‌ற்காய் இட‌ங்க‌ளைத் தேடியாக‌ வேண்டும்.


ரெயினின் மேற்கூரையில் ஸ‌யீராவும் அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ரும் உட்கார்ந்து ப‌ய‌ணிக்கின்றார்க‌ள். இர‌வோ, குளிரோ, காற்றோ எல்லாவ‌றையும் தூக்க‌மில்லாது த‌ம‌து எதிர்கால‌க் 'க‌ன‌வு' வாழ்க்கைக்காய்த் தாங்கிக்கொள்கின்றார்க‌ள். அவ்வ‌ப்போது சில‌ எல்லைக‌ளைக் க‌ட‌க்கும்போது பொலிஸின் கைக‌ளில் பிடிப‌டாம‌ல் ரெயினிலிருந்து இற‌ங்கி ஓடி ஒளிந்தோ அல்ல‌து இல‌ஞ்ச‌ம் கொடுத்தோதான் போக‌வேண்டியிருக்கிற‌து. இவ்வாறாக‌ ஸயிரா குடும்ப‌த்தின‌ரின் ப‌ய‌ண‌ம் ஒரு புற‌த்தில் நிக‌ழ்ந்துகொண்டிருக்க‌, இன்னொரு க‌தை இத‌ற்குச் ச‌மாந்த‌ர‌மாய்ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து.

மெக்ஸிக்கோவில் இருக்கும் ப‌ல்வேறு வ‌ன்முறைக் குழுக்க‌ளில் ஒன்றில் விலி(Willy) உறுப்பின‌ராய் இருக்கின்றார். கொலை, கொள்ளை, போதை ம‌ருந்து க‌ட‌த்த‌ல் என‌ எல்லாவித‌ செயல்க‌ளையும் எவ்வித‌ குற்ற‌வுண‌ர்வும் இன்றிச் செய்கின்றார்க‌ள். த‌ங்க‌ள் எதிராளிக் குழுவைச் சேர்ந்த‌வ‌ர்க‌க‌ளை -நாம் நினைத்தே பார்க்க‌முடியாத‌ அள‌வில்- சித்திர‌வ‌தைக‌ள் செய்து கொலை செய்கின்றார்க‌ள். புதிதாக‌த் த‌ங்க‌ள் குழுவில் உறுப்பின‌ர்க‌ளைச் சேர்க்கும்போதும் அவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு உறுதியான‌வ‌ர்க‌ள் என்ப‌தை அறிய‌, மூர்க்கமான‌ உட‌ல்வ‌தை செய்து தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்க‌ள். தாம் இந்த‌க் குழுவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் என்ப‌தைப் பெருமித‌மாக‌க் காட்டுவ‌த‌ற்கும், பிற‌ரை அச்சுறுத்த‌ச் செய்வ‌த‌ற்குமாய் -எந்த‌க்கால‌த்திலும் அழிய‌ முடியாத‌வ‌ள‌வுக்கு- த‌ம‌து குழுவின் பெய‌ரைப் ப‌ச்சைக் குத்திக்கொள்கின்றார்க‌ள். இவ‌ர்க‌ளுடைய‌ செய‌ற்பாடுக‌ள் மெக்சிக்கோவில் ம‌ட்டுமில்லாது அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ள் தாண்டிய‌ அள‌வில் இருக்கிற‌து.

ப‌தின்ம‌ வ‌ய‌திலிருக்கும் விலி, ப‌த்து ப‌தினொரு வ‌ய‌திருக்கும் ஒரு சிறுவ‌னை த‌ங்க‌ள் குழுவுக்குக் கொண்டுவ‌ந்து சேர்க்கின்றான். சிறுவ‌னைக் குழுவில் சேர்க்க‌முன்ன‌ர் குழுவைச் சேர்ந்த‌ எல்லோரும் அடித்து உதைத்து அவ‌னை 'வீர‌னா'க்குகின்றார்க‌ள். க‌ள‌ம் ப‌ல‌ காண்ப‌த‌ற்கு 'க‌ன்னி' முய‌ற்சியாக‌ ஏற்க‌ன‌வே பிடித்து வைத்திருந்த‌ எதிர்க்குழுவின‌ன் ஒருவ‌னைச் சுட்டுக்கொல்ல‌ சிறுவ‌ன‌ ப‌ணிக்க‌ப்ப‌டுகின்றான். சிறுவ‌னும், விலியின் உத‌வியோடு தன‌க்குக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ணியைச் செவ்வ‌னே செய்து முடிக்கின்றான்.

இவ்வாறு ஒரு கொடூர‌மான‌ குழுவிலிருக்கும் விலிக்கு காத‌லால் வில்ல‌ங்க‌ம் வ‌ருகின்ற‌து. சாதார‌ண‌மாக‌ இவ்வாறான‌ குழுக்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் குழுக்க‌ளைச் சார்ந்த‌ பெண்க‌ளோடு ப‌ழ‌குவ‌தைத் த‌விர்த்து பிற‌ பெண்க‌ளோடு ப‌ழ‌க‌ அனும‌திக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்ப‌து உல‌கிலுள்ள‌ அநேக‌ வ‌ன்முறைக் குழுக்க‌ளுக்குப் பொதுவான‌ ஒன்று. இங்கே விலி வெளியிலிருக்கும் ஒரு பெண்ணை நேசிக்கின்றான். தான் ப‌ழ‌க்கியெடுத்த‌ சிறுவ‌னைக் காவ‌லுக்கு விட்டுவிட்டு அப்பெண்ணோடு காத‌ல் ச‌ர‌ச‌மாடுகின்றான். விலிக்குக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வேலையையெல்லாம் ஒழுங்காக‌ச் செய்யாது விலி காத‌ற்போதையில் மூழ்கிக் கிட‌ப்ப‌தைக் குழுத்த‌லைவ‌ன் க‌ண்டுபிடிக்கின்றான். ஒருநாள் அவ‌ர்க‌ளின் குழுவிருக்கும் இட‌த்துக்கு வ‌ரும் விலியின் காத‌லியை பாலிய‌ல் ப‌லாத்கார‌ம் செய்ய‌ குழுத்த‌லைவ‌ன் முற்ப‌ட‌, அதிலிருந்து த‌ப்பிக்க‌ முய‌லும் விலியின் காத‌லியைத் த‌லைவ‌ன் அடிக்க‌ அவ‌ள் த‌லை மோதி இற‌ந்துவிடுகின்றாள். த‌ன் காத‌லிக்கு நிக‌ழ்ந்த‌து குறித்து அறிந்தும் விலியால் ஒன்றும் செய்ய‌முடிய‌வில்லை. குழுவிற்கோ, குழுத்த‌லைவ‌னுக்கோ எதிராக‌ குர‌ல் எழுப்புவ‌ர்க‌ள் நீண்ட‌கால‌ம் உயிரோடு இருந்த‌தாய் அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ர‌லாற்றில் இல்லை. இவ்வாறாக‌ துய‌ர‌த்தையும் வெஞ்சின‌த்தையும் த‌ன‌க்குள்ளே அட‌க்கி வைத்திருக்கும் விலியை, ஒருநாள் கொள்ளை அடிக்க‌ப் போவ‌த‌ற்காய் குழுத்த‌லைவ‌ன் கூப்பிடுகின்றான். கூட‌வே விலி ப‌ழ‌க்கிய‌ சிறுவ‌னும் போகின்றான். இவ‌ர்க‌ள் கொள்ளைய‌டிக்க‌த் தேர்ந்தெடுத்த‌ இட‌ம், ஸ‌யிராவும், த‌க‌ப்ப‌னும் வ‌ந்துகொண்டிருக்கின்ற‌ கூட்ஸ் ரெயின்.

த‌ம‌து ஆயுத‌ங்க‌ளைக் காட்டிப் ப‌ண‌த்தையும் உடைமைக‌ளையும் ப‌றிக்கின்ற‌ விலியின் குழுத்த‌லைவ‌னுக்கு, ச‌யீரா மீது ச‌ப‌ல‌ம் ஏற்ப‌டுகின்ற‌து. ச‌யீராவைதக் குழுத்த‌லைவ‌ன் அடுத்து என்ன‌ச் செய்ய‌ப்போகின்றான் என்ப‌தை உய்த்துண‌ர‌க்கூடிய‌ விலி -பின்விளைவுக‌ள் குறித்து யோசிக்காது- ரெயினின் மேற்கூரையில் வைத்துக் கொன்று விடுகின்றான். கூட‌வே இருக்கும் சிறுவ‌னையும் ஓடிப்போய்விடு என்று துர‌த்திவிடுகின்றான். அடுத்து என்ன‌ செய்வ‌து என்று அறிய‌ முடியாது -தொட‌ர்ந்து அந்த‌ ரெயினிலேயே- ப‌ய‌ணிக்கின்றான். கூட‌ப்ப‌ய‌ணிக்கும் ப‌ய‌ணிகளுக்கு இப்ப‌டியொரு வ‌ழிப‌றிக் க‌ள்வ‌னோடு/கொலைகார‌னோடு ப‌ய‌ணிப்ப‌தில் உட‌ன்பாடில்லை. அவ‌ர்க‌ள் விலியை கொலை செய்வ‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்திற்காய்க் காத்திருக்கின்ற‌ன‌ர். அவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் வ‌ரும்போது ச‌யீரா த‌ன் சாம‌ர்த்திய‌த்தால் விலியை ஓடும் ரெயினிலிருந்து காப்பாற்றிவிடுகின்றாள்.

ச‌யீராவுக்கு விலி த‌ன்னைக் காப்பாற்றிய‌வ‌ன் என்ற‌வ‌கையில் விலி மீதோரு ப‌தின்ம‌ ஈர்ப்பு வ‌ருகின்ற‌து. அவ‌னைத் த‌ன‌து ரெயில் ப‌ய‌ண‌த்தில் -ப‌ற‌வையொன்று த‌ன் சிற‌குக‌ளுக்குள் பாதுகாக்கும் குஞ்சாய்- தொட‌ர்ந்து காப்பாற்றியப‌டி வ‌ருகின்றாள். த‌ன் மீதான‌ ச‌யீராவின் ஈர்ப்பை விலி அறிந்திருந்தாலும், த‌ங்க‌ள் குழுத்த‌லைவ‌னைக் கொன்ற‌தால் த‌ன‌க்கான‌ நிலையான‌ வாழ்வு இனிச் சாத்திய‌மில்லை என்ப‌தை விலி ந‌ன்கு அறிந்தே வைத்திருக்கின்றான். அத‌ன் நிமித்த‌ம் ச‌யீரா உற‌ங்கும் ஓர் பொழுதில் ரெயினில் இருந்து இற‌ங்கிப்போகின்றான‌. ச‌யீரா நிம்ம‌தியாக‌ அமெரிக்காப் போய்ச்சேர்ந்துவிடுவாள் என்ற‌ நினைப்பு, அவ‌னைப் பின் தொட‌ர்ந்து வ‌ரும் ச‌யீராவைக் க‌ண்டு குலைகின்ற‌து. ச‌யீராவைக் க‌ண்டு ப‌த‌ட்ட‌மாகி மீண்டும் இருவ‌ரும் ரெயினில் ஏறுவ‌த‌ற்குள் ரெயின் புற‌ப்ப‌ட்டும் விடுகின்ற‌து. விலி ச‌யீராவைக்கூட்டிக்கொண்டுபோய் -த‌ன‌க்கு குழுவால் ஏற்க‌ன‌வே ப‌ழ‌க்க‌ம் ஏற்ப‌ட்ட‌ ஒருவ‌ரிட‌ம்- த‌ன‌க்கு உத‌வி செய்யும்ப‌டி வேண்டுகின்றார். இத‌ற்கிடையில் த‌லைவ‌ன் கொல்ல‌ப்ப‌ட‌, பிற‌ உறுப்பின‌ர்க‌ள‌ விலியைத் தேடி சிறுவ‌னுட‌ன் அலைய‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். விலியும், ச‌யீராவும் எல்லை க‌ட‌ந்து அமெரிக்காப் போய்ச்சேர்ந்தார்க‌ளா என்ப‌தும் ச‌யீராவின் த‌க‌ப்ப‌னுக்கும் மாமாவுக்கும் என்ன‌வாயிற்று என்ப‌தும் ப‌ட‌த்தில் தொட‌ர்ச்சியில் வ‌ருப‌வை.

க‌தை என்று பார்க்கும்போது இது ஒரு மிக‌ச்சாதார‌ண‌ க‌தை. ஆனால் அதை ப‌ட‌மாக்கிய‌வித‌ந்தான் அதிக‌ம் வ‌சீக‌ரிப்ப‌தாயிருக்கின்ற‌து. ப‌ட‌ம் முழுதும் ரெயின் தொட‌ர்ந்து வ‌ந்த‌ப‌டியிருக்கின்ற‌து. ரெயின் நுழையும் ஒவ்வொரு புதிய‌ நில‌ப்ப‌ர‌ப்பும் த‌ன‌க்குரிய‌ க‌தையைச் சொல்கின்ற‌து. ரெயினில் இவ்வாறு மேலே குந்திக் க‌ள்ள‌மாய்ப்போப‌வ‌ர்க‌ள் ப‌ற்றி ஊர்க‌ளிலுள்ள‌ ம‌க்க‌ள் ந‌ன்கு அறிவார்க‌ள் போலும். சில‌ ஊர்க‌ளில் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளிலிருந்த‌ ப‌ழ‌ங்க‌ளை ரெயினின் மேல் இருப்ப‌வ‌ர்க‌ள் மீது (உண‌வாக்கிக் கொள்ள)எறிகின்றார்க‌ள். சில‌வேளைக‌ளில் இப்ப‌டி த‌ங்க‌ள் ப‌சியை ஆற்றிக்கொள்ள‌ ஏதாவ‌து கிடைக்கும் என்று ரெயினுள்ள‌வ‌ர்க‌ள் எதிர்பார்க்கும்போது சில‌ சிறுவ‌ர்க‌ள் குறும்புத்த‌ன‌மாய் க‌ற்க‌ளால் எறிகின்றார்க‌ள்.

இந்த‌ எல்லை க‌ட‌த்த‌ல் ப‌ய‌ண‌த்தைத் தொட‌ங்கும்போது, ஒரு போதும் எந்த‌ இட‌த்திலும் மீண்டும் திரும்பிப்போக‌ முடியாது என்ப‌தை அறிந்தே தொட‌ங்குகின்றார்க‌ள். அது எவ்வ‌ள‌வு ப‌த‌ற்ற‌மாக‌வும் ப‌ய‌மாக‌வும் இருக்கும் என்ப‌தை இப்ப‌டியான‌ ப‌ய‌ண‌ங்க‌ளை மேற்கொண்ட‌வ‌ர்க‌ள் ந‌ன்க‌றிவார்க‌ள். மேலும் ஏற்க‌ன‌வே இப்ப‌டி த‌ம‌து 'க‌ன‌வு வாழ்க்கையை' அமைக்க‌ எல்லை க‌ட‌ந்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இடையிலேயே த‌ம‌து வாழ்வை ம‌ர‌ண‌த்திலேயே முடித்துக்கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தையும் இந்த‌ப் ப‌ய‌ண‌த்தை மேற்கொள்ப‌வ‌ர்க‌ள் அறிந்தே வைத்திருக்கின்றார்க‌ள். இவ்வாறான‌ ப‌ய‌ணங்க‌ளைச் செய்ய‌ இவ்வ‌ள‌வு ஆப‌த்துக‌ளுக்கும் அப்பால் உந்தித்த‌ள்ள‌ச் செய்ப‌வை அவ‌ர்க‌ளுக்கு வாய்த்த‌ ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்க்கை என்ப‌தை -ஸ‌யீரா போன்ற‌வ‌ர்க‌ளின் வாழ்வோடு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள்- ந‌ன்கு அறிவார்க‌ள்.

இந்த‌ப்ப‌ட‌த்தில் முக்கிய‌ பேசுபொருளே எல்லை க‌ட‌த்த‌லும் அத‌ன் ஆப‌த்தும் தான். ஆனால் எத‌ற்காய் இவ்வாறான‌ ஒரு தேர்வை இந்த‌ ம‌க்க‌ள் ஆப‌த்துக்க‌ளுக்கிடையில் தேர்ந்தெடுகின்றார்க‌ள் என்ப‌த‌ற்காய்த்தான், அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்விட‌ப் பின்புல‌த்தில் குழுவ‌ன்முறையும் வ‌றுமையும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌து போலும். இங்கே விலிக்கும், ச‌யீராவுக்கும் இடையில் முகிழும் மெல்லிய‌ காத‌ல் கூட‌ நாம் ச‌க‌ ம‌னித‌ர்க‌ள் மீது வைக்க‌வேண்டிய‌ அன்பைத்தான் வலியுறுத்துகின்ற‌தோ என‌ எண்ண‌த்தோன்றுகின்ற‌து. எல்லாவ‌ற்றையும் இழ‌ந்து புற‌ப்ப‌டும்போது இப்ப‌டியான‌ ச‌க‌ ம‌னுச‌ அன்பும் இல்லாதுவிட்டால் ப்ர‌வ‌க்கூடிய‌ வெறுமையை எவ‌ராலும் தாங்கிக்கொள்ள‌ முடியாது என்ப‌தே உண்மையான‌து. ப‌ட‌த்தில் ரெயின் ஊட‌றுத்துச் செல்லும் நில‌ப்ப‌ர‌ப்புக‌ளின் ப‌சுமையையும் அத‌ற்கு அப்பால் நீள்கின்ற‌ மிக‌ மோச‌மான‌ வ‌றுமையையும் துல்லியமாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருகின்ற‌ன‌. விலி, ச‌யீரா, சிறுவ‌னாய் ந‌டிப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் அந்த‌ப் பாத்திர‌ங்க‌ளைப் போல‌ இய‌ல்பாய் ந‌டித்திருக்கின்றார்க‌ள்.

விலியால் வ‌ள‌ர்க்க‌ப்ப‌டும் சிறுவ‌னே, பிற‌கு த‌ன்னை அக்குழுவின் ந‌ம்பிக்கைக்கு உரிய‌வானாக்க் காட்டிக்கொள்வ‌த‌ற்காய் விலியைக் கொலை செய்ய‌ வெறியுட‌ன் திரிப‌வ‌னாக‌ அலைவ‌தும் வாழ்க்கைதான். இவ்வ‌ள‌வு கொடூரமான‌ குழுவிலிருந்த‌ விலியின் ம‌ன‌திலும் அன்பு க‌சிய‌க்கூடியதென‌ க‌ண்டுபிடிப்ப‌வ‌ளாய் -மென்னுண‌ர்வுக‌ளைத் த‌ட்டியெழுப்புப‌வ‌ளாய் ச‌யீரா இருப்ப‌தும்- அதே வாழ்க்கை நீரோட்ட‌த்தில்தான். நாம் யார் யாரைச் ச‌ந்திக்கின்றோம் என்ப‌தில் ந‌ம‌து வாழ்க்கையும் தீர்மானிக்க‌ப்ப‌டுகின்ற‌து என‌ப‌து கூட‌ ஒருவ‌கையில் உண்மைப்போல‌த்தான் தோன்றுகின்ற‌து.

மே தினம்

Saturday, May 02, 2009

-NO ONE IS ILLEGAL சார்பாக-

(படங்களின் மேல் அழுத்திப் பெரிதாக்கிப் பார்க்கலாம்)