கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – கறுப்பி

Wednesday, August 14, 2013


ளங்கோ ஆளுமைமிக்க கவிஞனாக, பத்தி எழுத்தாளனாக, விமர்சகனாக அறிமுகமாகித் தற்போது  ”சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்” எனும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளனாகவும் எம்மிடையே அறிமுகமாகியுள்ளார். நேர்மையும், தீவிரமும் கொண்டு சளைக்காமல் இயங்கிவரும் இவரது படைப்புக்கள் புலம்பெயர் தமிழ் இலக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

விமர்சனக் கட்டுரைகளை மூன்று வகையாக நான் பிரித்துப் பார்ப்பதுண்டு.
முதலாவது கல்வியாளர்களின் கோட்பாட்டு விமர்சனம், அல்லது திறனாய்வு முறை, இரண்டாவது வரலாற்றுப் பதிவு முறை, மூன்றாவது இரசனை அல்லது அழகியல் முறை. திறனாய்வு முறை என்பது ஆழமான மொழியோடு அமைந்திருக்கும் ஆனால் உணர்வு வழி விமர்சனமாக அது இருப்பதில்லை. வரலாற்றுப் பதிவு முறையில் ஈழத்து சிறுகதைகளுக்கான விமர்சனம் எனும் போது தாம் அறிந்த எழுத்தாளர்கள் அனைவரையும் குறிப்பிட்டு விமர்சிப்பது. மூன்றாவது வகை இரசனை அல்லது அழகியல் முறை. இது இலக்கியத்தின் மீதான ஆளுமை, பயிற்சி நேசம் போன்றவற்றினால் உந்தப்பட்டு வைக்கப்படுவது..

இந்த மூன்று விமர்சனங்களையும் இன்னும் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். அதாவது ஒன்று சார்புநிலை, மற்றது குரோதநிலை. நடுநிலையான விமர்சனங்கள் என்பது மிகவும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. விமர்சனங்களை படிக்கும் போதோ, உரையாகக் கேட்கும் போதே சில வினாடிகளின் பின்னர் இது எந்தவகையான விமரச்னம் என்பதை இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

ழ இலக்கியத்தில் 80களுக்குப் பின்னான காலத்தில் போர்சூழல் காரணமாக எழுத்தாளர்களின் வருகை அதிகரித்ததாலும், எழுதுவதற்கான தளங்கள், காரணிகள் அதிகரித்ததாலும் இக்காலத்தில் தோன்றிய போர்க்கால இலக்கியங்கள் அதிகம் கவனிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்துள்ளன. இருந்தும் இவை இலக்கிய நயமற்ற வெறும் ஒப்பாரிகள், கூச்சல்கள் என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இக்கால கட்டத்தில் ரஞ்சகுமார், உமா வரதராஜன் அ. இரவி போன்றோர் ஈழத்தமிழ் இலக்கிய வாசகர்களால் பரவலாகப் பேசப்பட்டவர்கள். இவர்களைத் தொடர்ந்து தனித்துவமான தனது புனைவு மொழியால் தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் சோபாசக்தி. அவரின் எழுத்து வீச்சின் பாதிப்பில் உருவானவர்களே அவரைத் தொடர்ந்து போர்ச்சூழலை மையமாகக்கொண்டு பல தரமான சிறுகதைகள், நாவல் போன்றவற்றைப் படைத்துக்கொண்டிருக்கும் த.அகிலன், யோ. கர்ணன், சயந்தன் போன்றோர் என்பது எனது கருத்து. கருணை ரவியின் கடவுளின் மரணத்தையும் இதற்குள் அடக்கலாம்.

இதே கால கட்டத்தில் சமாந்தரமாக புலம்பெயர் இலக்கியமும் தோற்றமளிக்கின்றது, போர்ச்சூழலால் ஏற்பட்ட வடு அவர்களையும் ஈழத்தை மையமாகக் கொண்ட போர்சூழல் இலக்கியத்தையே படைக்கத் துாண்டிக்கொண்டிருக்கின்றது. அன்றேல் ஈழ மையப்படுத்தப் படாத போர்சூழல் அற்ற, இலக்கியங்கள் வாசகர்களால் நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் அவர்களை அதற்குள்ளேயே உழல வைத்துக் கொண்டிருக்கின்றது.

மிகக் குறைந்த அளவிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்மக்களின் வாழ்வு கதைக்காரணியாகப் பதியப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வு என்பது கூட, போர்சூழல் இலக்கியம் என்பதே என் எண்ணம். புலம்பெயர்ந்து வாழும் அத்தனை தமிழ் மக்களின் அவலங்களும், பாதிப்புக்களும், ஏற்ற இறக்கங்களும் ஈழத்தை மையமாகக் கொண்ட போர்ச்சூழலின் எச்சங்கள்தான். இந்த வகையில் சாம்பல் வானதில் மறையும் வைரவர் தொகுப்பில் பல சிறுகதைகள் புலம்பெயர் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கினது என்பதனால் தனித்துவமான முக்கியத்தைப் பெறுகின்றது.

எந்த அளவிற்கு ஈழப்போராட்ட அவலங்கள் பதியப்பட வேண்டுமோ, அதே அளவிற்கு புலம்பெயர் வாழ்நிலையும் பதியப்பட வேண்டிய ஒன்றே. ஆனால்  போர்ச்சூழல், இயக்க முரண், முள்ளிவாய்க்கால் உண்மைகள், போருக்குப் பின்னான ஈழமக்கள் வாழ்வு என்பனவே இன்றைக்கு கதைக் காரணிகளுக்கான முன்நிலையில் நிற்பதனால் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களும் அக்காரணிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் தேவகாந்தனின் விமர்சனத்தின் பகுதி ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன்
”நிலமற்றவரென்று பெரும்பாலும் எந்தக் குடும்பமும் இலங்கையில் இல்லையென்பது இந்தியத் தமிழனுக்குத் தெரியுமா? 'குண்டி குத்த' ஒரு முழம் மண் அங்கே எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் அவற்றின் வகை தொகை வேறு வேறுதான்.”

ஈழ மண்ணில் வாழும் மனிதர்களின் அவலங்கள் வெளிப்படையானவை அவற்றை இலகுவில் எழுத்தில் கொண்டுவர முடியும். புலம்பெயர் மண்ணில் வாழும் மனிதர்களின் அவலங்களின் வகை தொகைகள் வேறு வேறு.. அவற்றை அடையாளம் கண்டு எழுத்தில் கொண்டுவருவதென்பது பெரும் சவாலான விடயம். இதைப் புலம்பெயர் இலக்கியவாதிகள் நிச்சயம் செய்தே தீரவேண்டும் என்பேன்.

இளங்கோ இளம் வயதில் கனடாவிற்குப்  புலம்பெயர்ந்தவர், பாடசாலை, பல்கலைக்கழ அனுவங்கள் கனடாவில் அவருக்கு இருப்பதனால், ”ஆட்டுக் குட்டிகளும், உதிர்ந்த சில பழுப்பு இலைகளும், சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்து போனவன், யாழ்ப்பாணியின் சோக வாக்கு மூலம் போன்ற கதை புனைதல் இலகுவில் அவருக்கு சாத்தியப்படுகின்றது. இது முக்கியமான ஒன்று, குறும்படங்களின் மூலம், அல்லது ஆய்வுக்கட்டுரைகளின் மூலம் மட்டும் பதியப்பட்டு வந்திருக்கும் புலம்பெயர் இளைஞர் சமுதாயத்தின் வாழ்வியல், மனநிலை இளங்கோ போன்ற இளைய எழுத்தாளர்களால் பதியப்பட்டுக்கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஹேமா அக்கா, மினி, கோபிகா ஏன் அப்படிச் செய்தாள், போன்ற சிறுகதைகளில் கதைசொல்லி ஆண் பாத்திரத்தின் மூலம் கதையை நகர்த்தினாலும் மையப் பாத்திரங்கள் பெண்களாகவே இருப்பது, கதைசொல்லி பெண்களை எவ்வளவு துல்லியமாக அவதானித்துக்கொண்டும் அவர்களின் உணர்வுகளோடு உறவாடிக்கொண்டுமிருக்கின்றார்  என்பதனைக் காட்டுகின்றது.

இவரின் ஆரம்ப காலக் கதைகளுக்கும், அண்மைக்காலக் கதைகளுக்குமிடையில் புனைவு மொழியில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஆரம்ப காலக் கதைகள் எளிமையான முறையிலான கதைகளாக சம்பவங்களை நேரடியாகப் பதிவு செய்பவையாகவும், அண்மைக் காலக் கதைகள் பல பரிசோதனை முயற்சிக் கதைகளாகவும் காணப்படுகின்றன. எளிமையான நேரடிக் கதைகளைத் தீவிர இலக்கியவட்டம் அலட்சியம் செய்வதனால் பல நல்ல எழுத்தாளர்கள் தமது புனைவுப் போக்கினை மாற்றியமைக்க முயல்கின்றார்கள். இதனால் பல நல்ல கதைகள் அடிபட்டுப் போவதோடு எழுத்தாளர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி பரிசோதனை முயற்சிக் கதைகளுக்குள் தள்ளி விடுகின்றது. சிறந்த கதை என்பது அதன் வடிவத்தில் காணப்படுவதில்லை என்பதற்கு நல்ல உதாரணம் டால்ஸ்ரோயின் எழுத்து முறை. அவரது பெயர் பெற்ற அனாகரணீனா எளிமைத் தன்மைகொண்டது என்று விமர்சனத்தைப் பெற்றிருக்கின்றது.

இளங்கோவின் பரிசோதனை முயற்சிக் கதைகள் உலக இலக்கியத்துடனான அவரது பரிச்சயத்தை அடையாளம் காட்டுகின்றது. கதை சொல்லியின் ஒவ்வொரு கதையும் தனக்கான ஒரு புனைவு மொழியைக் கண்டடையும் நோக்கத்துடனான முயற்சியாக அமைந்திருப்பது நேர் எதிர் இரண்டு விளைவுகளையும் தரக்கூடியன. எந்த ஒரு புனைவாளரும் தனக்கான ஒரு புனைவு மொழியைக் கண்டடைந்து சொற்களோடு விளையாடுவதையே விரும்புவார் இக் கதையாக்கல் முறையைத்தான் எழுத்தாளர் மெலிஞ்சிமுத்தனும் தனது குறுநாவல்கள், சிறுகதைகளின் கையாண்டிருக்கின்றார்.

அந்த வகையில் இளங்கோவும் தனக்கான ஒரு நிரந்தர புனைவு மொழியைக் கண்டடையும் நோக்கோடு பல புனைவு மொழிகளை கையாண்டு பார்த்துள்ளார். இவரது இப்பரிசோதனை முயற்சி ”சிறகு வளர்த்த குரல்களுடன் பறந்து போனவன்”, மூன்று தீவுகள், கள்ளி போன்ற சில நல்ல கதைகளை வாசகர்களுக்கு விட்டுச் சென்றுள்ளது.

தொகுப்பு முழுவதுமே பரிசோதனை முயற்சியால் நிறைந்து கிடப்பின் வாசகர்களுக்கு கதைக்குள் புக முடியாத சலிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது. எந்த ஒரு படைப்பும் ஆரம்பமாகி சில நிமிடங்களில் பாத்திரங்களை அடையாளம் கண்டு படைப்பிற்குள் உள்செல்லும் சௌகர்யத்தை வாசகர்கள், பார்வையாளர்கள். ரசிகர்களிற்கு கொடுத்து விடுதல் முக்கியம் என்பேன். படைப்பாளியே தனக்கான மொழியைக் கண்டு கொள்ளாமல் குழம்பிப் போகும் நிலை ஏற்படின், அவரது நம்பிக்கையின்மை வாசகர்களுக்குள்ளும் புகுந்து கொள்ளும். இது போன்ற பரிசோதனை முயற்சிகள் எதிர்மறை விளைவுகளை படைப்புக்களுக்கு கொடுத்துவிடும் அபாயமும் இருக்கின்றது. இளங்கோ சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் எனும் சிறுகதை எழுதிய அனுபவத்தின் மூலம் தனக்கான ஒரு புனைவு மொழியைக் கண்டடைந்திருப்பார் என்றே நம்புகின்றேன்.

ஒரு சிறுகதைத் தொகுப்பின் 12 சிறுகதைகள் இருப்பினும், அவை அனைத்தும் ஏதோ ஒருவகையில் ஊடாட்டமாகவேணும் தொடர்பு பட்டிருத்தல் அவசியம். அதுவே வாசகரை படைப்பினுள் இழுத்துச் செல்லும். சில படைப்புக்களைத் திறந்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்துக்கொண்டிருப்போம். சில படைப்புக்கள் எத்தனை தத்துவம் நிறைந்திருந்தாலும், எத்தனை சமூக அக்கறையோடு படைக்கப்பட்டிருந்தாலும் இரண்டு பக்கத்திற்கு மேல் நகர முடியாத அவஸ்தையைத் தரும். இங்குதான் புனைவு மொழி தனது இலக்கியத் தரத்தை நிர்ணயித்துக் கொள்கின்றது. சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் சிறுகதைத் தொகுதி தனது ஏற்ற இறக்கங்களோடு புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தைப் பெற்றிருக்கின்றது என்பேன்.

கா.நா.சுப்ரமணியம்.அவர்கள் சரஸ்வரி ஓகஸ்ட் 1958 சஞ்சிகையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார். ”தமிழ் தமிழ் என்று பெருமைப் பட்டுக்கொண்டால் போதாது. தமிழில் பழசுக்கும் புதுசுக்கும் இலக்கிய விமர்சனம் தேவை. நல்லது கெட்டது பார்த்துத் தரம் சொல்லி, நல்லதில் சிறந்தது எது எதனால் என்று சொல்லுகிற விமர்சன வளம் நமக்கு இப்போது உடனடியான தேவை.” இதுதான் எனது கருத்தும்.

ஈழ புலம்பெயர் தமிழ் இலக்கியத்தைப் பல இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் விமர்சனம் செய்திருக்கின்றார்கள். குறிப்பாக காலம் 15இல் வெளியான வேதசகாய குமாரின் விமர்சனமும், ஜெயமோகன், சுந்தரராமசுவாமி போன்றோரின் விமர்சனங்களும் பலரின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

வேதசகாயகுமாரின் விமர்சனத்தைத் தொடர்ந்து பதிவுகள் தளத்தில் வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் சம்பூர்ண நிராகரணம் கட்டுரையும் எதிர்வினையும் அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனின் எதிர்வினையும் ஈழ இலக்கியத்திற்கான முக்கியமான பதிவுகள். இந்தியப் பெண் எழுத்தாளர்கள் ஈழ இலக்கியம் பற்றிய விமர்சனக் கட்டுரை பதிந்திருக்கின்றார்களா என்பது எனக்குத்  தெரியாது நான் அறிந்தவரை இல்லை என்றே நம்புகின்றேன். அதே போன்று சிறுகதை எழுத்திலும் ஈழத்துப் பெண்கள் தொடர்ந்து எழுதுவது மிக அபூர்வமாகவே உள்ளது..

அனைத்து விமர்சகர்களுமே தமக்கான சார்புநிலையிலிருந்து கொண்டுதான் விமர்சனங்களைப் பதித்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களது விமர்சனங்களை அவதானித்துக் கொண்டுவருபவர்களால் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஜெயமோகன் தனது சிறுகதை விமர்சனம் ஒன்றில் இப்படிக் கூறுகின்றார். "தமிழ்ச் சிற்றிதழ்களில் நல்ல சிறுகதைகளை வாசிக்க நேர்வது மிக அபூர்வமாகவே இருக்கிறது. இருந்தாலும் எப்போதும் ஒரு தேடலுடன் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்."
தேடலுடன் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் எனும் இவரின் கூற்றில் நிச்சயம் ஈழத்து, புலம்பெயர் இலக்கியங்களும் அடங்கும் என்றே நம்புகின்றேன்.  ஆழமாக, நுணுக்கத்துடன் தனது விமர்சனங்களைப் பதிந்து  கொண்டிருக்கும் ஜெயமோகனால் ஏன் த.அகிலனையோ, யோ.கர்ணனையோ, சயந்தனையோ, இளங்கோவையோ, மெலிஞ்சி முத்தனையோ அடையாளம் காணமுடியவில்லை. இவர்களின் அங்கீகாரம் வேண்டுமா வேண்டாமா என்பது வேறு வாதம்.

ஆனால் மேற்கூறியவர்களின் எழுத்து தரமில்லை என்று வாதத்தை ஜெயமோகன் முன் வைப்பின், அ.முத்துலிங்கத்தின் கதைகள் பற்றி இவர் இப்படிச் சொல்கின்றார்  ”ஓர் இலக்கிய விமர்சகனாக நான் ஒன்றைச் சொல்வேன், ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே.” பின்னர் அவரே இப்படியும் கூறுகின்றார்.. "விமர்சனங்களில் அண்மை ஒரு பெரும் பிரச்சனையாகவே இருக்கும். தனிப்பட்ட முறையில் தெரிந்த எழுத்தாளர்கள் எழுதும் எழுத்துக்கள், தெரிந்த சூழல் சார்ந்த எழுத்துக்கள், ஏற்கெனவே ஈடுபாடுள்ள விஷயங்கள் குறித்த எழுத்துக்கள், அவை நம்மை அவற்றின் இலக்கியத் தரம் மீறி கவரக்கூடும். இந்த அபாயம் எல்லா விமர்சகர்களுக்கும் உண்டு."  இந்த இடத்தில் ஜெயமோகன் மிக நியாயமான விமர்சனத்தை வைத்துள்ளார் என்பது என் கருத்து. இந்த வேளை சுந்தர ராமசுவாமி தனது உரையொன்றில் குறிப்பிட்டிருந்து எனது ஞாபகத்திற்கு வருகின்றது. "நீ என் முதுகைச் சொறிந்து விடு நான் உன் முதுகைச் சொறிந்து விடுகின்றேன்" என்ற பாணியில் மாறி மாறி முதுகு சொறிவதே பல படைப்பாளிகள் விமர்சகர்களின் வேலையாகிப் போய்விட்டது. மீறி உண்மையாக விமர்சித்தால் கோபக்காரார்கள் ஆகிவிடுகின்றோம்.

ஏதோ ஒரு வகையில் சார்புநிலையில்தான் அனைத்து விமர்சகர்களுமே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் எனும் போது சிறுகதை, கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றிற்கு விமர்சனக் கூட்டம் வைப்பது போல் இனிமேல் விமர்சனங்களுக்கான விமர்சனக் கூட்டமும் தேவை என்று கூறிக்கொண்டு எனது விமர்சனத்தை முடிக்கின்றேன்.

('அம்ருதா' - ஜூலை 2013 இதழில் வெளியானது)

0 comments: