கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

The Grand Budapest Hotel

Monday, March 31, 2014

சில திரைப்படங்கள் அவற்றின் திரைக்கதையினால் எம்மைக் கவரும். வேறு சில திரைப்படங்கள் -அழுத்தமான கதைகள் இல்லாவிட்டாலும்- அவற்றைக் காட்சிப்படுத்திய விதத்தில் நம்மை வசீகரிக்கும். The Grand Budapest Hotel படம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. வழமையான ஹொலிவூட் படங்களின் பாணியை விட்டு விலகி, பகுதி பகுதியாக வெவ்வேறு மூன்று காலகட்டங்களை இப்படம் காட்சிப்படுத்துகிறது.

ஒருகாலத்தில் செழிப்பாயிருந்த ஹொட்டல் தன் வீழ்ச்சியை அடைகின்ற காலத்தில் ஒரு எழுத்தாளர் அங்கே செல்கின்றார். தற்செயலாய் இந்த எழுத்தாளர் அந்த ஹொட்டலின் சொந்தக்காரரான முஸ்தபாவை அங்கே சந்திக்கின்றார். அவரிடம் தன் இளமைக்காலத்தில் கேட்ட கதையை, இந்த எழுத்தாளர் தன் முதுமையில் எமக்குச் சொல்லத் தொடங்குகின்றார். சிலவேளை இந்தக் கதை நடந்ததா எனச் சந்தேகம் கேட்பவர்க்கு வந்தாலும், இவ்வாறே நிகழ்ந்ததெனவே சொல்லப்பட்டதாக எமக்குச் சிறு எச்சரிக்கை தரப்படுகிறது.

 இந்த ஹொட்டல் பிரபல்யமாயிருந்த காலத்தில் குஸ்தவேயே ஹொட்டலை நிர்வகிப்பவராக இருக்கின்றார். அவரின் கவனிப்பாலேயே ஈர்க்கப்பட்டே நிறையப் பேர் -முக்கியமாய் வயது முதிர்ந்த பெண்கள்- அவருக்காகவே வருகின்றனர். எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியபடி இருக்கும் குஸ்தவேயிடம், பதின்மூன்று வயதுச் சிறுவனான முஸ்தபா 'லொபி பையனாக' வந்து சேருகின்றார். பிறகு இவர்கள் இருவருக்குமிடையில் உருவாகும் நட்பும், அவர்கள் செய்யும் வீரதீரச் செயல்களுமே இந்தப் படம்.

குஸ்தவேயின் கவனிப்பில் களிப்புற்ற மூதாட்டியொருவர் அவரின் வீட்டில் வைத்துக் கொலை செய்யப்படுகின்றார். குஸ்தவேயின் மீது நேசத்திலிருக்கும் அந்த மூதாட்டி ஒரு விலையுயர்ந்த ஓவியத்தை உயிலாக குஸ்தவாவிற்கு எழுதி வைத்திருப்பதைக் கண்டு அந்த மூதாட்டியின் முழுக் குடும்பமே கோபப்படுகிறது. இதனால் குஸதவாவே இந்தக் கொலையைச் செய்தவரென சாட்சிகளை உருவாக்கி, அவரைச் சிறையில் தள்ளிவிடவும் செய்கின்றனர்.

அந்த ஜெயிலில் இருந்து குஸ்தவே எப்படித் தப்பிக்கின்றார் என்பதையும், ஹொட்டல்களை நிர்வகிப்பவர்களிடையே இரகசியமாக இயங்கும் குழுவின் உதவியினூடு எப்படித் தன்னை நிரபராதியென நிரூபிக்கின்றார் என்பதுவும் விறுவிறுப்பானது, இறுதியில் குஸ்தவேயுற்கு என்ன நிகழ்ந்தது என்பதையும், எவ்வாறு லொபி பையனாக இருந்த முஸ்தபா அந்த ஹொட்டலை நிர்வாகிக்கும் ஒருவராக மாறுகின்றார் என்பதையும் சற்று நகைச்சுவையும் கலந்து இத்திரைப்படத்தில் அன்டர்சன் காட்டுகின்றார்.

யுத்தங்களுக்கிடையில் (1ம்/2ம் உலகமகாயுத்தம்) வெவ்வேறு இராணுவங்களால் எல்லைகள் கைப்பற்றப்படுவதை, அவ்வப்போது இரெயினில் பயணிக்கும் குஸ்தவேயும் முஸ்தபாவும் -எந்த நாட்டு இராணுவம் எல்லையைக் கைப்பற்றியிருக்கிறதென அறியாது -அவ்வப்போது மாட்டுப்பட்டு முழிப்பதும் அடிவாங்குவது எள்ளலாகக் காட்டப்பட்டாலும், இன்னமும் 'எல்லை கடத்தல்களில்' இருக்கும் வேதனைகளின் துயரங்கள் அவ்வளவாய் மாறிவிடவில்லை என்பதே யதார்த்தமாகும்.

அதேபோன்று லொபி பையனாக இருக்கும் முஸ்தபா, தன் பெற்றோரைப் போருக்குப் பலிகொடுத்து எவருமில்லாது எவ்வித ஆவணங்களில்லாது இந்த ஹொட்டலில் அடைக்கலமாகும் கதை கூறப்படும்போது நகைச்சுவையாக நீளும் காட்சிகளில் சடுதியாய் மெளனம் கவிழ்ந்து மெல்லிய சோகம் இழையோடத் தொடங்குகின்றது. அத்துடன் பான் கேக் செய்யும் பெண்ணோடு, முஸ்தபாவிற்கு முகிழும் காதல் ஒருவகை அழகென்றால், ஜெயிலில் இருந்து தப்பிவரும்போது குஸ்தவேயும், முஸ்தபாவும் -அந்தப் பதற்றம் உணராது- நீண்டநேரம் தங்களை மறந்து உரையாடி இறுதியில் கவிதை சொல்வது மெல்லிய புன்முறுவலைத் தூண்டச் செய்கிறது.

ஒவ்வொரு சிறுசிறு காட்சிகளிலும் அன்டர்சன் என்கின்ற இயக்குநரைத் தாண்டி அவருக்குள்ளிருக்கும் எழுத்தாளர் மிளிர்ந்துகொண்டேயிருக்கிறார். ஹொட்டலை பிங் நிற திருமணக்கேக் போல வடிவமைத்ததிலிருந்து, ஹொட்டல் செய்யும் கேக் வடிவத்திலேயே ஜெயிலிருந்து தப்புவதற்கான உபகரணங்களை காவலர்க்குத் தெரியாமல் அனுப்புவதெனத் தொடர்ந்து, இரகசியமாக undergroundயாய் இயங்கும் ஹொட்டலை நிர்வகிப்பவர்களின் குழு, தமது உறுப்பினர் ஒருவருக்காய் சட்டென்று உயிர்பெற்று அவர்களுக்கிடையில் தகவல்கள் பரிமாறப்படுவதை ஒரு சிறுகவிதைக்கு நிகராய்க் காட்சிப்படுத்துவரை அன்டர்சன் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.

கதையொன்றால் குறிப்பிட பெரிதாக ஒன்றுமில்லை. வேண்டுமெனில் ஏற்கனவே நமக்குத் தெரிந்த கதைகளையே பகுதிகளாகப் பிரிதது தனக்குரிய முறையில், வித்தியாசமான சட்டகங்களுடான (Robert Yeoman )ஒளிப்பதிவோடு அன்டர்சன் திரைப்படமாக்கியிருக்கின்றார் எனச் சொல்லலாம்.. ஏற்கனவே எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. சொல்லப்பட்ட கதைகளை இன்னொருமுறை எப்படி புதிய முறையில் சொல்வது என்பது இன்றைய காலத்தின் முன்னாலுள்ள சவால் எனக் கூறுவோரும் உண்டு. அந்த வகைக்கேற்ப இந்தப்படம் இருக்கிறது.

எதையும் நிறைய எதிர்பார்க்காது, திரைப்படம் செல்லும் திசையெங்கும் நாமும் அலைந்தால், இத்திரைப்படம் நம்மை வசீகரிக்கக் கூடும்.

'நிழல்முற்றத்து நினைவுகள்'

Thursday, March 27, 2014

(நன்றி: காட்சிப்பிழை - மார்ச், 2014)

'நிழல் முற்றம்' என்ற தியேட்டரைப் பின்புலமாகக் கொண்டு பெருமாள் முருகன் எழுதிய நாவலை நம்மில் பலர் வாசித்திருப்போம். அந்த நாவலின் பின்னணியைப் பற்றி அல்லது அதிலே சொல்லப்படாது விடப்பட்ட பகுதிகள் குறித்து பெருமாள் முருகன் இதில் விரிவாக நனவிடை தோய்தல் வடிவில் பதிவு செய்கின்றார். திருச்செங்கோட்டில் எப்படியொரு புதிய தியேட்டர் தொடங்கபடுகிறது என்பதிலிருந்து அதன் வீழ்ச்சி வரை அதனோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள்/மனிதர்களோடு அழகாய் பெருமாள் முருகன் எழுதிச் செல்கிறார்.

இத்தியேட்டரின் உள்ளே தகப்பன்/தமையனோடு சோடா தயாரித்து விற்றவராக பெருமாள் முருகன் ஒருகாலத்தில் வேலை செய்திருந்திருக்கின்றார். அந்த அனுபவங்களை மட்டும் கூறாது தனக்கு இந்தத் தியேட்டர் என்ன கற்பித்தது, தான் எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என நீட்சித்து எழுதியிருப்பது இதைக் கவனிக்கத்தக்கதொரு நினைவுக்குறிப்பாய் ஆக்கியிருக்கின்றது.

'டாக்கீஸி'ல் இருந்து 'தியேட்டராக' மாறும்போது நவீன வசதிகளை கிராமத்து மக்கள் எவ்வாறு பழகிக்கொள்ளக் கஷ்டப்படுகின்றார்கள் என்பதிலிருந்து, அருகிலிருக்கும் தியேட்டர்களுடன் ஏற்படும் முரண்களிலிருந்து, எந்தந்தப் படங்கள் அன்றைய காலத்து மக்களை வசீகரித்து நிறைய நாட்கள் ஓடியது என நாம் மறந்துபோன ஒரு காலத்தை நம் கண்முன்னே பெருமாள் முருகன் கொண்டுவந்து நிறுத்துகிறார். தியேட்டரினுள்ளே பார்வையாளர்கள்/முதலாளிகள் மட்டுமின்றி அதற்குள்ளே சிறுகடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களையும், அங்கே வேலை செய்யும் மனிதர்களையும் (முக்கியமாய் சிறுவயது பையன்கள்) பற்றியதொரு இன்னொரு உலகமும் இதற்குள் விரிகின்றது.

கெட்ட வார்த்தைகள் சாதாரணமாய்ப் புழங்கும், பிறர்க்குப் பட்டம் வைத்துக் கேலி செய்யும் பையன்களிடையே எப்படி 'எச்சி இலை பொறுக்கிறவன்' எனத் திட்டும்போது மட்டும் எவ்வளவு 'கெட்ட வார்த்தை'யாகவும், மிக மூர்க்கமாய் அவர்களைக் கோபம் செய்கின்றதாகவும அது அமைந்தது என்பதற்கான காரணங்களை அவ்வளவு எளிதில் கடந்து போகமுடியாது. அனேகமாய் இவ்வாறான சிறுகடைகளில் வேலைக்குச் சேரும் பையன்கள், ஒன்று பெற்றோரை இழந்தவர்களாகவோ அல்லது வீட்டை விட்டு ஓடி வந்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே அப்படி வரும்போது, அவர்கள் தொடக்க காலங்களில் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் எச்சில் இலைகளிலிருக்கும் உணவையே உண்டு உயிர் பிழைத்திருப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவ்வாறான பையன்களுக்கு வேலை செய்யும்போது 'நீ எச்சியிலை பொறுக்கியவநதானே' என்கின்றபோது கடந்தகாலம் நினைவூட்டப்பட்டு அதை அவர்களால் தாங்கமுடியாது இருந்ததென குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒரு வாத்தையால் திட்டப்பட்டதாலேயே வேலையௌ உதறித்தள்ளிவிட்டுப் போன பையன்களும் இதில் பதிவு செய்யப்படுகின்றார்கள்.

இதே தியேட்டரில் ஓரிரவு எவருமே இல்லாத அநாதையென வரும் பெண்ணை, அங்கே ஆபரேட்டராய் வேலை செய்யும் ஒருவர் அந்தக்கணத்திலே தீர்மானித்து திருமணஞ்செய்வதையும், சாதி தீவிரமாய்ப் பார்க்கும் அதே ஊரில் என்ன சாதியென அறியாமலே அவர்கள் -அவ்வாறு திருமணம் செய்து- மிக நன்றாக வாழ்ந்தார்களென வருகின்ற குறிப்புகள் நெகிழ்ச்சி தரக்கூடியவை.

புதுப்படங்களுக்கு விளம்பரம் பகலில் ஒட்டப் போகும்போது ஏற்படும் சுவாரசியம் ஒருபுறமென்றால், தியேட்டரின் -எந்தப் படத்தையும் பார்க்காத- முதலாளிக்குத் தெரியாமல் காலைக்காட்சிகளில் 'சாமிப்படம்' போடுவதுவரை பல விடயங்களை தியேட்டர் சூழல் சார்ந்து பெருமாள் முருகன் பதிவுசெய்கின்றார். காலவோட்டத்தில் எப்படி ஒருகாலத்தில் நவீன வசதிகளுடன் பிற தியேட்டர்களுக்கு சவால் விட்ட இநதத் தியேட்டர் எல்லாக் காட்சிகளுக்கும் 'பிட்டு'ப்படம் போட்டு ஓடவேண்டியிருந்த நிர்ப்பந்தத்தையும், பிறிதொருகாலத்தில் தியேட்டரினுள் இயங்கிய கடைகளெல்லாம் முற்றுமுழுதாக இல்லாமற்போகும் சோகத்தையும் இந்நினைவுக்குறிப்புக்களில் காணலாம்.

எட்டாண்டுகள் இந்தத் தியேட்டரோடு பின்னிப்பிணைந்திருந்த பெருமாள் முருகன், அவரின் தந்தையார் மற்றும் தியேட்டர் முதலாளியின் மரணங்களோடு அதன் அனுபவங்களில் இருந்து விலகிவிட்டவரெனினும், தியேட்ட்ரிற்குள் இயங்கிய உலகினுள் இருந்த மனிதர்களை தன் பயணங்கள் ஒவ்வொன்றின்போது -அவர்களை மீண்டும் சந்திக்க முடியாதா- என்கின்ற ஆசையோடு தேடிக்கொண்டிருக்கின்றார். வாழ்வு சிதறிப்போன ஒரு சிலரைப் பின்னர் சந்திக்கவும் செய்கின்றார். அந்த நினைவுகளையும் பதற்றங்களுடன் பதிவும் செய்கின்றார்.

தங்கள் தலைமுறையில் எவருமே படிக்காதபோது, படிக்க விரும்பிய தன்னை தன் தந்தை -அங்கே பகுதி நேரமாய் வேலைக்கு வந்த ஒரு ஆசிரியருக்கு இருந்த மதிப்பின் காரணமாக- தொடர்ந்து படிக்க வைத்தாரென பெருமாள் முருகன் எழுதுகின்றபோது தியேட்டர் எதையோ சிலருக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றது என்பது விளங்குகின்றது. தொடர் குடிகாரனாய்த் தன் தந்தை இருந்தாலும், தியேட்டரினுள் இருந்த கடையாலும், அங்கே சந்திக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களாலும் தன்னை ஏதோ ஒன்றுக்கு ஒப்புக்கொடுத்த தந்தையால், தியேட்டர் மூடப்பட்டதை தாங்கமுடியாது ஒருவருடத்திற்குள்ளேயே ஏதேதோ நினைவுகளாலும், குடியாலும் அலைக்கழிக்கப்பட்டு மரணமடைகின்றார் என்பதையும் துயரத்துடன் பதிவு செய்கின்றார்.

சாதி இறுக்கமாய் எல்லா விடயங்களில் இருக்கின்ற கிராமத்தில் பிறந்த தன்னால், அதை மீறி வரச்செய்வதற்கு இந்தத் தியேட்டரும், அங்கே பல்வேறு பையன்களோடு பழகிய அனுபவங்களும் மட்டுமே காரணமென பெருமாள் முருகன் குறிப்பிடுகின்றார். இத்தோடு என்னை இன்னும் வசீகரித்த ஒரு விடயம் என்னவெனில், படிப்பறிவேயற்ற ஒரு தலைமுறையிலிருந்து முதன்முதலாக வெளியே வருகின்ற பெருமாள் முருகன் தனக்கான கல்வியைக் கற்று, எழுத்தில் தனக்கொரு இடத்தையும் இன்றையகாலத்தில் அடைந்திருக்கின்றார் என்பதல்லவா பெரும் பாய்ச்சல். இதைத்தான் இதை வாசித்தபின்னும் தொடர்ந்தும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். முன்னே மூர்க்கமாய் வளர்ந்து நின்ற தடைகளையெல்லாம் உடைத்து எடுத்து வைக்கின்ற முதலடி என்பதே பெரும் நிகழ்வுதானன்றோ.

'நிழல் முற்றத்தை' பல வருடங்களுக்கு முன்னர் வாசித்திருத்தேன். அந்நாவல் பிடித்திருந்ததால், பின்னர் வ.கீதா அதை ஆங்கிலத்தில் 'Current Show' என மொழிபெயர்த்திருந்ததையும் வாங்கியிருந்தேன். எனவே 'நிழல் முற்றத்து நினைவுகளை' வாசித்தபோது அந்தப் புதினத்தை மீறி இதிலென்ன கூறப்பட்டிருக்குமென அசுவாராசியத்துடனேயே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் பக்கங்கள் விரிய விரிய எனக்குத் தெரியாத காலத்திற்குள் சென்று அங்கே அந்தப் பொழுதில் வாழ்ந்த மனிதர்களோடு பழகியது போன்ற வாசிப்பனுபவம் வாய்த்திருந்தது. 'நிழல் முற்றம்' நாவலை வாசிக்காதவர்கள், வாசித்தவர்களென எவரும் தயக்கமின்றி இதை வாசித்துப் பார்க்கலாம்; புதிய விடயங்களுள்ள சுவாரசியமான நினைவுக்குறிப்பு.

சொற்கள் (The Words)

Tuesday, March 25, 2014

ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பை எழுதுவதை விட, அதைப் பிரசுரிக்க இன்னும் எவ்வளவோ கஷ்டப்படவேண்டியிருக்கிறது. தமிழ்ச்சூழலில் பதிப்பாளர்களைத் தேடுவது ஒருவிதமானதென்றால், ஆங்கிலச் சூழலில் அது வேறு வகையானது. பதிப்பாளர்களை மட்டுமில்லை, அந்தப் படைப்பிற்கான எடிட்டர், இடையிலான ஊடாடட்டங்களுக்கு ஏஜண்ட் என நிறையப் பேரைக் கொண்ட சிக்கலான உலகுதான் இது. ஆக, ஒருவர் நல்லதொரு படைப்பை எழுதிவிட்டால் கூட, உரிய பதிப்பகம் கிடைக்காதுவிடின் அப்படியே தன் படைப்பைக் கிடப்பில் போட்டு விடவேண்டியதுதான்.
'சொற்கள்' என்ற இந்தப் படம் எழுதுவதையே தன் விருப்பாகவும் தொழிலாகவும் கொண்ட ஒரு எழுத்தாளனைப் பின் தொடர்ந்து செல்கின்றது. நல்லதொரு நாவலை எழுதியிருந்தாலும், வித்தியாசமான எழுத்து நடையில் இருக்கிறது எனச் சில பதிப்பாளர்கள் கூறினாலும் அந்நாவலை வெளியிடத் தயக்கங் காட்டுகின்றார்கள். நாவலைப் பதிப்பிக்காமல் உரிய வருமானம் கிடைக்காது என்பதால் இந்த எழுத்தாளன் தன் தந்தையிடம் உதவி பெறுகிறார். அதேசமயம் இப்படியே நீ எழுத்தை நம்பி இனியுமிருக்கமுடியாது ஏதாவது வேலையைத் தேடு, இனி தன் உதவி கிடைக்காதென இறுதி எச்சரிக்கையும் தகப்பனால் கொடுக்கப்படுகின்றது.

துணை மட்டும் இந்த எழுத்தாளரைப் புரிந்துகொள்கின்றார். நாவலைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஒவ்வொருமுறையும் தோல்வியடையும்போது அவரை அரவணைத்து நம்பிக்கை கொடுக்கின்றார். இவ்வாறான ஒரு காலகட்டத்தில் பாரிஸில் ஒருகாலத்தில் antique கடையில் வாங்கிய பிரீவ்கேஸில் யாராலோ எழுதப்பட்ட ஒரு நாவலில் கையெழுத்துப் பிரதியை இந்த எழுத்தாளர் கண்டுபிடிக்கிறார். அது 2ம் உலகமகாயுத்தத்தில் சிக்குப்பட்ட ஒரு காதல் சோடியின் கதை. அதை வாசித்துவிட்டு அதன் பாதிப்பில் தனது புதிய நாவலைத் தட்டச்சு செய்ய முற்ப்படுகின்ற இந்த எழுத்தாளர், அந்த நாவல் கதைக்களனின் ஈர்ப்பில் அதை அப்படியே வரிக்கு வரிக்கு தட்டச்சு செய்கின்றார்.

தற்செயலாய் தட்டெழுத்துச் செய்யப்பட்ட இந்த நாவலை அவரது துணை வாசித்து, இந்த நாவலை இந்த எழுத்தாளரே எழுதினார் என நம்பி, அதைப் பதிப்பகத்திற்குக் கொடுக்க  உற்சாகப்படுத்துகின்றார். நடந்த உண்மையைச் சொல்ல, எழுத்தாளர் தன் துணைக்கு முயன்றாலும் -தான் எழுதிய முதல் நாவல் வெளிவராத சோர்வில் இந்த நாவலை எழுதவில்லை என்பதை எல்லோரிடமிருந்து மறைத்து-ஒருகட்டத்தில் இந்நாவலைப் பதிப்பாளரிடம் எடுத்துச் சென்று பதிப்பிகின்றார். இதன் பின் என்ன நிகழ்கின்றது என்பதே இத்திரைப்படம். ஒருவகையில் பெரும் புகழ் கொடுக்கும் இந்நாவலை, எப்படி தான் எழுதாத நாவல் என்ற குற்றவுணர்ச்சியுடன் எதிர்கொள்வதென்ற சிக்கலை இப்படம் அழகாய் முன்வைக்கின்றது. இதைவிட அந்த கையெழுத்துப் பிரதி எழுதியவரே உயிருடன் இருந்து இந்தப் படைப்பாளியைச் சந்தித்தால் எப்படியிருக்கும்?

நாவல், நாவலுக்குள் இன்னொரு நாவல், பிறகு இந்த நாவலுக்குள் இன்னொரு நாவலென மூன்று தளங்களில் இத்திரைப்படம் மிகுந்த சுவாரசியத்துடன் விரிகிறது. 'சொற்கள்' என்பது உண்மையிலே புகழ்ச்சியிற்குரியதா அல்லது சாபமா என ஒவ்வொரு பொழுதுகளிலும் நினைவுபடுத்தியபடி இருக்கிறது. இதுவரை அவ்வளவு ஈர்க்காத Bradley Cooper கூட இவ்வளவு அருமையாக நடிக்க முடியுமா என நினைக்க வைத்த ஒரு திரைப்படம். இறுதியில் இது fictionனா அல்லது auto-fictionனா என ஓர் இளம் பெண் வந்து உடைத்துப் போடுகின்ற இடத்தில் படம் முடிவது கூட சுவாரசியமானதுதான்.

எல்லாவற்றுக்கும் அப்பால் எதுவும் இருக்கலாம்...

Friday, March 21, 2014

மூன்று திரைப்படங்கள்-

It's a Diaster

நான்கு இணைகள் அடிக்கடி வாரவிறுதிகளில் சந்தித்துக்கொள்கின்றார்கள். அவ்வாறு சந்திக்கும் வாரவிறுதியில் ஒரு நண்பர் தனது புதிய இணையை அறிமுகப்படுத்த அழைத்துவருகின்றார்.  சாதாரணமாய் உரையாடல்களில் தொடங்கி, விருந்துடன் முடியும் சந்திப்புக்களில், இமமுறை திருமணமான ஒரு இணை தாங்கள் பிரிவதற்கான செய்தியை விருந்திற்குப் பிறகு கூறுவதற்குக் காத்திருக்கின்றனர். இடையில் அந்த வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியும், இணையமும் ஒழுங்காய் இயங்காது போகின்றது.

பிரியவிருக்கும் இணையின் ஆண், தன் துணைவிதான -வேண்டுமென்று- பில் கட்டாமல் இருக்கின்றார் எனக் குற்றஞ்சாட்டுகின்றார். இதனால் துரதிஷ்டவசமாய் விருந்திற்குப் பிறகு கூற விரும்பிய 'பிரியும் செய்தி' முன்னரே மற்ற நண்பர்களுக்குள் பரவிவிடுகின்றது.  மகிழ்ச்சியாய் ஒரு விருந்தை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டு பிரிய நினைத்த திட்டம் இப்படி ஆயிற்றே எனக் கோபத்தில் அந்தப் பெண் துணை வீட்டை விட்டு வெளியேறுகின்றார். அதேசமயம், அயல்வீட்டுக்காரர் உடம்பு முழுக்க பாதுகாப்பான ஆடைகளால் மூடி, அமெரிக்காவின் ப்ல்வேறு நகர்களில் இரசாயனத்தாக்குதல் நடக்கின்றது. ஒருவரும் வீட்டை விட்டு வெளியே போகவேண்டாம் என்று எச்சரிக்கின்றார்.

இப்போது சூழ்நிலை மாறுகின்றது. நான்கு இணைகளும், வீட்டின் கதவுகளை விஷக்காற்று புகமுடியாதவாறு டேப்பால் ஒட்டிவிட்டு உள்ளே இருந்துகொண்டு அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கின்றனர். தங்களால் இந்த இரசாயனத்தாக்குதலில் இருந்து தப்பமுடியுமா என்ற அச்சத்திடையே தமக்கிடையிருக்கும் உறவுகள் பற்றி இதுதான் கடைசித்தருணம் போல உரையாடத் தொடங்குகின்றனர். பிரிய நினைத்த இணை பழைய நினைவுகளில் தம்மைத் தோய்த்து மீண்டும் ஒன்றாகச் சேவதற்கான சமிக்ஞைகளைக் காட்டத் தொடங்குகின்றனர். பிரிவதற்கான எந்த த்டயததையும் கொண்டிராத -விரைவில் திருமணம் செய்யவிருக்கும்- இன்னொரு இணை எதிர்பார்க்காமல் பிரிந்துபோகின்றனர். தமது துணைகளை நேசித்துக்கொண்டு, பிற நண்பர்களோடும் உறவு கொண்ட சில இணைகளின் புதையுண்ட உண்மைகளும் வெளியில் மிதக்கத் தொடங்குகின்றன. இவ்வாறாக நினைத்துப் பார்க்காத காட்சிகளும்,பதற்றங்களும் இந்த இணைகளுக்கிடையில் மாறி மாறி வரத்தொடங்குகின்றன.

இறுதியில் எப்படியோ வெளியே நடக்கும் இரசாயனத்தாக்குதலில் இறக்கத்தான் போகின்றோம் என்று இந்த இணைகள் முடிவெடுத்துக் கொள்கின்றனர். இப்போது அவர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று இரசாயனத்தாக்குதல் தங்கள் வீட்டை நெருங்கும்வரை காத்திருந்து, இறப்பது. ஆனால் அது மிகவும் கொடூரமாய் இருக்கும். எனெனில் இரசாயனம் உடலோடு கலந்து உடலுறுப்புக்களை ஒவ்வொன்றாக செயலிழக்கச்செய்துதான் இறுதியில் இறப்பு நிகழுமென அந்த இணைகளில் இரசாயனம் கற்பிக்கும் ஆசிரியர் விளங்கப்படுத்துகிறார். இன்னொரு தெரிவு, வீட்டில் இருக்கும் பல்வேறு வகையான  மாத்திரைகளை வைனோடு கலந்து உடனேயே வலியின்றி இறந்துபோவது. இதில் இரண்டாவது தெரிவை கிறிஸ்தவத்தோடு நெருங்கிய தொடர்புடையவர் முன்வைக்கிறார். இதில் எந்தத் தெரிவை இந்த இணைகள் எடுக்கின்றார்கள் என்பதுதான் சுவாரசியமானது.

இப்படத்தில் வீட்டுக்கு  வெளியில் நடக்கும் ஒன்றையும் காட்டாது -இரசாயனத்தாக்குதலைக் கூட- அந்தப் பதற்றத்தையும், அவ்வாறு நடந்திருக்கக்கூடிய சாத்தியங்களையும் சில காட்சிகளால் மட்டும் காட்சிப்படுத்தியபடி, முற்றுமுழுதாக வீட்டுக்குள் நடப்பவற்றையே திரைப்படமாக்கியிருப்பார்கள். சாதாரணமாய்ப் பார்த்தால், கதையென்று ஒன்றுமில்லாத, இப்படி நிகழவே சாத்தியமில்லாத ஒரு திரைப்படம் போலிருக்கும், ஆனால் வலுவான திரைக்கதையால் அலுப்பின்றி நகர்த்திக்கொண்டே சென்றிருப்பார்கள். உலகின் கடைசிக்கணம் இப்படித்தான் இருக்கப்போகின்றது என்றால் நாமெல்லோரும் என்ன செய்வோம்  என்று ஒருகணமாவது பார்ப்பவரை ஆழ யோசிக்க வைக்கின்றார்கள். ஆனால் வாழ்க்கை திட்டமிட்ட பாதையில் செல்வதோ அல்லது விரும்பியபடி விடயங்கள் நிகழ்வதில்லை என்பதைத்தான்  ஏற்கன்னவே திட்டமிட்டு பிரிய நினைத்த தம்பதிகள் மீண்டும் இணைவதையும், திருமணஞ்செய்யக் காத்திருக்கும் இன்னொரு இணை திடீரென்று பிரிவதையும் காட்சிப்படுத்தினார்களோ தெரியவில்லை. இப்படம் நெருக்கமானதற்கு -எவ்வித எதிர்பார்ப்புமில்லாது- கதை எதுவென்று தற்செயலாய் பார்க்கத் தொடங்கியதும் ஒரு காரணமோ இருந்திருக்குமோ தெரியாது.

As luck would have it

 வேலையில்லாவிட்டாலும் கணவனை/தகப்பனை நேசிக்கும் குடும்பம். மனைவியுடனான காதலை மீளக்கண்டுபிடிக்கச் செல்லும் இடத்தில் விபத்து. 18 வருடமாய் ஒழுங்காய் வீட்டுக்கடனைக் கட்டினாலும் வேலை இல்லாததால் 2 மாதம் கட்டத்தவறியவுடனேயே கள்ளனைப் போல நடத்தும் வங்கி. அனைவரின் மீதான கோபத்தில் விபத்தை வைத்து விளம்பரம் செய்ய முயல்தல். ஊடகங்கள் -சிலியில் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளிகளைப் போல- இங்கேயும் நடந்த விபத்தைச் சுரண்ட அவசரப்படுதல். ஆனால் இங்கே விபத்து நடந்தவர் இறந்தால்தான் 200 மில்லியன் யூரோ என்கின்றது ஊடகம்.

 இறுதியில் என்ன நடக்கிறது... பின் தலையில் குத்திய இரும்புக்கோலுடன் படுத்திருக்கும் மனிதரோடோ முழுப்படம் நகர்ந்தாலும், மனித உறவுக்களுக்கிடையிலான அழகான மெல்லிய தருணங்களையும்,  பணத்தை மீறிய மனிதாபிமானத்தை நோக்கியும் கவனத்தைக் குவிப்பதால் பார்க்கலாம்.  இவ்வளவு நீளத்துக்குப் படத்தை இழுத்திருக்கத் தேவையில்லை. எனினும் எப்போதும் கவர்ந்திழுக்கும் Salma Hayekற்காகவும், தற்செயலாய்க் கண்டுபிடித்த Carolina Bangற்காகவும் படத்தின் நீளத்தைக் கூட சற்று மன்னித்துவிடலாம்.

Eat Pray Love

உறவுகள் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு கதகதப்பானவையோ அந்தளவுக்கு சிக்கலானவையும் கூட. மேலும் ஒவ்வொருவரும் தத்தம் துணைகளைத் தேர்ந்தெடுப்பது என்பதே விசித்திரமான பாதையைப் போன்றதுதான். தந்தையையோ, தாயையோ தேர்ந்தெடுக்கும் தெரிவுகள் நமக்கிருப்பதில்லை. ஆனால் ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது நமதே நமக்கான தெரிவாக இருக்கின்றது. அந்த ஒரு தெரிவுக்கே வாழ்வில் எத்தனை கஷ்டப்படவேண்டியிருக்கின்றது. சிலவேளைகளில் த்ம் வாழ்க்கைக் காலம் முழுதையுமே சிலர் தொலைத்துமிருக்கின்றார்கள்.

இவ்வாறாகத் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு பெண்ணுக்கு அந்தத் துணையோடு தொடர்ந்து வாழமுடியாத ஒரு வெறுமை ஏற்படுகின்றது. திருமண உறவை முறித்துவிட்டு இன்னொரு ஆடவனோடு ஒரே வீட்டில் வாழத்தொடங்கினாலும் அங்கும் வாழ்வில் எதுவோ ஒன்று இல்லாதது போலத் தோன்றுகின்றது. ஆகவே அவரையும் கைவிட்டு ஒரு நெடும்பயணத்தை இத்தாலி - இந்தியா- பாலி என ஆரம்பிக்கின்றார்.  இத்ற்கு சில வருடங்களுக்கு முன் பாலிக்குச் சென்றபோது அங்கேயிருக்கும் முதியவர் ஒருவர் இப்பெண்ணின் கையைப் பார்த்து, நீ உன் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சக்காலத்தில் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு மீண்டும் பாலிக்கு வருவாய் என்பதும் இவருக்கு நினைவுக்கு வருகின்றது.

 பல்வேறு வகையான உணவுகளுக்கு பிரபல்யம் வாய்ந்த ரோமின் வீதிகளில் மீண்டும் தனக்கான ருசியைக் கண்டுபிடிக்கின்றார். இதுவரை அமெரிக்காவில் எல்லாவற்றையும் - உடல் எடை கூடிவிடும்- எனறு கவனமான டயட்டில் இருந்ததையெல்லாம் துறந்துவிட்டு தனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தங்களைத் தேடித்தேடிச் சாப்பிடுகின்றார். ஒரு இத்தாலியர் 'அமெரிக்கரான உங்களுக்கு வாழ்வில் என்ன எல்லாம் வேண்டும் என நன்கு தெரியும், ஆனால் அவற்றை அனுபவிக்கத்தான் தெரியாது. நாங்கள் அவ்வாறானவர்கள் அல்ல, வாழ்வை அனுபவித்து இரசிப்பவர்கள்' என்கிறார். இறுதியில் புதிதாய் இத்தாலியில் கிடைத்த நண்பர்களுக்கு அமெரிக்க வகையில் Thanks Giving Dinner Turkey செய்துகொடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்று இந்தியாவிற்குப் பயணமாகின்றார்.

இந்தியாவில் ஒரு சுவாமிஜியின் ஆச்சிரமத்திற்குச் செல்வதே இவரது இலக்கு. இந்தச் சாமியாரை, அமெரிக்காவிலிருக்கும் அவரின் ஆண் நண்பரே அறிமுகஞ்செய்து வைத்திருக்கின்றார். மனதுக்கு நிம்மதி நிச்சயம் கிடைக்கும் என ஆச்சிரமத்திற்குப் போகின்றவர் அங்கே சாமியார் அமெரிக்காவிற்குப் போய்விட்டார் என்ற முதல செய்திலேயே ஏமாற்றத்தை அடைகிறார். மேலும் அவரால் அந்த ஆச்சிரமத்தின் சூழலுக்கு எளிதாய்த் த்கவ்மைக்கவும் முடியாதிருக்கிறது, அமெரிக்காவில் அவருக்கு நெருக்கமான இரு ஆடவரின் நினைவுகளும் அடிக்கடி வந்து குறுக்கிடுகின்றன. இறுதியில் இன்னொரு நண்பரின் உதவியுடன் மனதிலிருக்கும் துயரங்களையும், பாவங்களையும் இறக்குகின்றார். இப்போது எல்லாப் பழைய நினைவுகளையும் உதிர்ந்துவிட்ட தெளிவுடன் பாலிக்குச் செல்லும் அவர், ஏற்கனவே இவரின் எதிர்காலத்தைக் கணித்த முதியவரைச் சந்திக்கின்றார். அவர் இந்தியாவில் கற்ற தியானத்தை தினமும் காலையில் செய்யச் சொல்கிறார். வாழ்க்கையின் வெற்றிடம் மெல்ல மெல்லமாய் நிரப்பப்படுகிறது. எதிர்காலம் எதை தன் கரங்களில் வைத்திருக்கின்றது என்று தெரியாவிட்டாலும் இப்பெண் தனக்குரிய கணங்களில் வாழத்தொடங்குகின்றார். வெளியில் மட்டுமில்லை மனதிற்குள்ளும் அழகிய வர்ணங்கள் பரவததொடங்குவதுடன் படம் நிறைவுறுகிறது.

இந்தப் படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்தபோது, ஓஷோ முன்வைத்த Loneliness மற்றும் Aloneness குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன்.  Alonenessஐ நேர்மறையாகவும், Alonenesஐ எதிர்மறையான சக்தியாகவும்  ஓஷோ பார்ப்பது நினைவில் வந்தது. இன்று உலகில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தனிமையில் உழன்று தம்மைத் தொலைத்துக்கொண்டிருகின்றார்கள். ஒரே வீட்டில் ஒரே வெளியைப் பகிர்ந்துகொள்ளும் இணைகளில் கூட இந்த loneliness ஒரு துயரைப் போல படிந்திருக்கிறதென ஓஷோ குறிப்பிடுகின்றார். அதேவேளை alonenessஐ தன்னையொருவர் அறிவதற்கான, புதிய செயல்களை நிகழ்த்திக்காட்டுவதற்கான நேர்மறையான விடயமாய்ப் பார்க்கின்றார். அதுவும் முக்கிய்யமாய் காதலர்க்கிடையில் இருக்கும் -தனித்து இருத்தல்- என்பது அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை இன்னும் ஆழமாக்குவதாகவும், அவ்வாறு தனித்திருந்துவிட்டு சந்திக்கையில் அந்த உறவு இன்னொரு பரிமாணத்தை அடையவும் கூடுமெனக் கூறும் ஓஷோ, அவ்வாறு  நீண்டகாலம் தனித்து இருந்தவர்களே புத்தர் உள்ளிட்ட பல போதிசத்துவர்கள் என்கிறார்.

இந்த இடத்திலேயே ஓஷோ, சார்த்தரின் மிகவும் சர்ச்சிக்கப்பட்ட  'Other is hell' என்ற விளக்கத்தை எடுத்துக்கொள்கிறார்.  ஒருவர் தன்னை, த்ன் அகமனதை நேசிக்காமல்/கண்டுபிடிக்காமல்,  மற்றவரை/மற்றதை நேசித்தல் சாத்தியமில்லை. ஆகவே 'மற்றது' என்பது அப்படி தன்னை நேசிக்காத் ஒருவருக்கு நரகமாகவே இருக்குமென ஓஷோ தான் இதில் கண்டுபிடித்த விளக்கத்தை அளிக்கிறார். அதேவேளை சார்த்தரில் விளக்கம் வேறுமாதிரியாக இருந்ததாலேயே அவர் பிற்காலத்தில் இவ்வாறு கூறியதற்காய் வருத்தப்பட்டு அதை மாற்றவும் விரும்பினார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

Eat, Pray, Love என்கின்ற இப்படம் முதலில் நாவலாக எழுதப்பட்ட கதையை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கும் ஒருவர் தன் அகமனதை மெல்ல மெல்லமாகப் பார்க்கத் தொடங்குகின்றபோது தனக்கான ஆனந்த்தை அடைந்துகொள்ளத் தொடங்குகின்றார். ஆனால் நாளாந்த வாழ்க்கையில் எல்லாமே எங்களை துரிதப்படுத்திக்கொண்டு இயந்திரமாக்கும் சூழலிலும், நாம் கடந்தகாலததின் சுவடுகளை காவிக்கொண்டும் வருகின்றபோதும் இவ்வாறு எமக்கான வெளியைக் கண்டடைதல் என்பது அவ்வளவு எளிதானதுமல்ல. நம்மை நாமே அறிதல் என்பதோ, நம் சுயத்தில் நம்பிக்கை வைப்பது என்பதோ சுயநலமாய் இருப்பது என்ற அர்த்தமல்ல. நம்மை நாமே அறியத்தொடங்குகையில் பிறரையும் நேசிக்கத்தொடங்கும் இன்னொரு உயிர்ப்பான விடயமும் நிகழத்தொடங்குகிறது. அதுவேதான் அனைவருக்கும் அவசியமானதும், முக்கியமானதுமான விடயமாகும். இன்றைய உலகில் எல்லாமே பண்டமாகவும், நுகர்வாகவும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் Eat Pray Love  நம்மை நாமே அறிவதற்கு வயதோ, சூழலோ, வசதியோ அவ்வளவு முக்கியமில்லை என்பதை முன்வைப்பதே என்னளவில் முக்கியமானதாயிருக்கிறது.

(September 12, 2013 at 11:54am)

நெடுஞ்சாலை (Highway)

Wednesday, March 12, 2014

யணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும், மறக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன.

இவ்வாறு எதிர்பாராது நிகழும் பயணம் ஒன்றைத்தான் 'ஹவே' எங்களுக்குக் காட்சிப்படுத்துகின்றது. கழுத்தை நெரிக்கும் திருமணச் சடங்குகளாலும், உறவுகளாலும் திணறும் ஓர் இளம பெண், திருமணத்திற்கு முதல் நாளிரவு, தன்னை ஆசுவாசப்படுத்த தன் நண்பரோடு காரில் புறப்படுகின்றார். அந்தச் சிறு பயணம் எப்படி -தற்செயலான பல்வேறு நிகழ்வுகளால்- நெடும் பயணமாக மாறுகின்றதென்பதே இத் திரைப்படம்.

பயணிப்பது என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை. பயணிப்பவர்கள் எல்லோரும், புதிய தேடல்களுக்காய்த்தான் தம் பயணங்களைத் தொடங்குகின்றார்கள் என்பதுமில்லை. மேலும் ஊரடங்குச் சட்டங்களும், கொலைகளும் நிகழ்ந்த போர் நிகழ்ந்த தேசத்தில் வாழ்ந்து பழகிய என்னைப் போன்றவர்களுக்கு, ஒரு நாளின் இரவில் பயமின்றித் திரிவது என்பதே எத்தகைய வீரதீரப் 'பயணம்' என்பதை அறிவோம். பிற்காலத்தில் அடையாள அட்டைகளை உடலின் ஓர் அங்கமாய் திணிக்கப்பட்ட நம்மைப் போன்றவர்களுக்கு நினைத்த இடத்திற்கு விரும்பிய நேரத்தில் பயணிப்பதென்பது பெருங்கனவாகவே ஒருகாலத்தில் இருந்துமிருக்கின்றது.

ஆண்களுக்கே இப்படியென்றால், பெண்கள் பயணிப்பது பற்றிச் சொல்லவே தேவையில்லை. போர்ச் சூழலில் இருந்த பெண்களுக்கு மட்டுமில்லை, சனநாயக நாடுகள் எனக் கூறப்படுகின்ற நாடுகளில் வாழ்கின்ற பெண்களுக்கும் பயணிப்பதென்பதே பெரும் சவாலான விடயம். ஒருநாளின் இரவில் கூட நிம்மதியாக நடமாட முடியாததையல்லவா நேற்றைய உமாமகேஸ்வரியிலிருந்து இன்னும் பலர் நமக்கு மிகுந்த துயரத்துடன் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

'ஹவே'யில் மிகுந்த வசதிகளுடன் வளர்ந்த வீரா, அதற்கு எதிர்முனையில் வாழ்பவர்களுடன் சந்தர்ப்பவசத்தால் பயணிக்கின்றார். ஒரு கடத்தல் எப்படி நெகிழ்வான சம்பவங்களால் மறக்கமுடியாத பயணமாக மாறுகின்றது என்பதையும், துவித முனைகளில் இருந்தவர்கள் எவ்வாறு மற்றவர்களைப் புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் -அதீத சென்டிமென்டல்கள்- இல்லாது 'ஹவே' நமக்குள் பதிவு செய்துவிட்டுச்செல்கின்றது.

இந்தப் பயணம் இறுக்கமான மனதுடைய ஒருவரை மனம் நிறைந்து சிரிக்க வைக்கிறது. உள்ளே அடக்கி வைத்து துயரை வெளியே பகிரச் செய்கிறது. இறுதியில் எல்லாவற்றையும் மறந்து காதல் கொள்ளக் கூட வைக்கிறது. உயர்தரவர்க்கத்தில் இருப்பவர்களில் கூட மனம் நெகிழக்கூடியவர்களும், நேசிக்கக்கூடியவர்களும் இருக்கின்றார்கள் என்பதை அவருக்கு -ஒரு பெண்ணின் அருகாமை- உணர்த்தியும் விடுகிறது.

தே பயணம், இதுவரை பிறர் முன்னால் பணிவாக நடக்கவும், மென்மையாகக் கதைக்கவும் பழகிய இன்னொருவரை, எது குறித்தும் அச்சப்படாது பேச வைக்கிறது. குடும்பத்திற்குள் நடந்த ஒரு விடயத்தை -அந்நியர்கள் என்ற உணர்வேயில்லாது- அவர்கள் முன்னிலையில்- அது குறித்துப் பகிரவும் வைக்கிறது.

பயணங்களின் புதிய சூழல் நம்மை வேறொரு மனிதராக மாற்றிவிடுகின்றது. அவ்வணணமே நாம் இதுவரை பேசாத விடயங்களையெல்லாம் நீரூற்றுக்கள் போல தன்னியல்பில் பொங்கச் செய்தும்விடுகின்றன. அவ்வாறான பாத்திரங்களாய் இத்திரைப்படத்தில் வீராவும், மஹாவீரும் இருக்கின்றார்கள்.


இந்தியாவின் நிலப்பரப்பை - அதீத வர்ணக்கலப்புகளின்றி- இவ்வளவு இயல்பாய் வேறெந்த இந்திப்படங்களிலாவது காட்சிப்படுத்தியிருப்பார்களோ என்றளவிற்கு ஒளிப்பதிவு இருக்கின்றது. இயல்பென்பது அதன் இயற்கையை, வறுமையை, புழுதியெழும் வீதிகளை காட்சிப்படுத்துவதிலிருந்து, அந்தந்த நிலப்பரப்பு மக்களை எந்த சினிமா ஜிகினாத்தனமுமில்லாது- காட்டுவதுவரை... எனக் குறிப்பிட விழைகிறேன். ரஹ்மான் தான் இசைதான் என்றாலும், அநேக இடங்களில் 'மெளனத்தின் இடைவெளி' விடப்பட்டிருப்பதும், இயற்கையோடு பின்னணி இசை வருவதும் பிடித்தமாயிருக்கிறது. ரஹ்மானின் இசையில் வரும் தாலாட்டுப் பாடடு ஒருபக்கம் மனதை நெகிழ வைக்கிறதென்றால், இன்னொரு ஹிப்-ஹாப் பாடலிற்கு வீராவும், அவர் ஆடுவதைப் பார்த்து இன்னொருவரும் போடும் ஆட்டம் நம்மை உற்சாகத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சொல்பவை.

வளவளவெனக் கதைப்பதிலிருந்து, முரட்டுத்தனமாய் இருப்பவரையே பேசி பேசி ஓட விரட்டுவதிலிருந்து, இறுதியில் தன் குடும்பத்தினர்/உறவினர் முன் இதுவரை மனதில் ஒளித்து வைத்த் உண்மைகளைப் போட்டு உடைப்பதிலிருந்து அற்புதமான நடிகையாக வீராவாக நடித்த அலியா பட் பரிணாமிக்கிறார்.

துயரமான நினைவாய் இப்படத்தின் முடிவு பார்ப்பவரிடையே தங்கிவிடக்கூடாது என்பதற்காய், இறுதியில் வரும் சிறு காட்சியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் நம்பிக்கைகளிலிருந்து முகிழ்வதும்தானே வாழ்க்கை.

மேலும், ஒரு பயணம் ஒரு புதிய அத்தியாயத்தை ஒரு பெண்ணின் வாழ்வில் தொடக்கி வைத்திருக்கிறது என்பதற்காகவும், எவரின் துணையுமின்றி தனித்து எதையும் அப்பெண்ணால் செய்ய முடியுமென்பதற்காகவும் -அந்த முடிவையும்- நாம் வரவேற்போம்.