கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'நிழல்முற்றத்து நினைவுகள்'

Thursday, March 27, 2014

(நன்றி: காட்சிப்பிழை - மார்ச், 2014)

'நிழல் முற்றம்' என்ற தியேட்டரைப் பின்புலமாகக் கொண்டு பெருமாள் முருகன் எழுதிய நாவலை நம்மில் பலர் வாசித்திருப்போம். அந்த நாவலின் பின்னணியைப் பற்றி அல்லது அதிலே சொல்லப்படாது விடப்பட்ட பகுதிகள் குறித்து பெருமாள் முருகன் இதில் விரிவாக நனவிடை தோய்தல் வடிவில் பதிவு செய்கின்றார். திருச்செங்கோட்டில் எப்படியொரு புதிய தியேட்டர் தொடங்கபடுகிறது என்பதிலிருந்து அதன் வீழ்ச்சி வரை அதனோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள்/மனிதர்களோடு அழகாய் பெருமாள் முருகன் எழுதிச் செல்கிறார்.

இத்தியேட்டரின் உள்ளே தகப்பன்/தமையனோடு சோடா தயாரித்து விற்றவராக பெருமாள் முருகன் ஒருகாலத்தில் வேலை செய்திருந்திருக்கின்றார். அந்த அனுபவங்களை மட்டும் கூறாது தனக்கு இந்தத் தியேட்டர் என்ன கற்பித்தது, தான் எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என நீட்சித்து எழுதியிருப்பது இதைக் கவனிக்கத்தக்கதொரு நினைவுக்குறிப்பாய் ஆக்கியிருக்கின்றது.

'டாக்கீஸி'ல் இருந்து 'தியேட்டராக' மாறும்போது நவீன வசதிகளை கிராமத்து மக்கள் எவ்வாறு பழகிக்கொள்ளக் கஷ்டப்படுகின்றார்கள் என்பதிலிருந்து, அருகிலிருக்கும் தியேட்டர்களுடன் ஏற்படும் முரண்களிலிருந்து, எந்தந்தப் படங்கள் அன்றைய காலத்து மக்களை வசீகரித்து நிறைய நாட்கள் ஓடியது என நாம் மறந்துபோன ஒரு காலத்தை நம் கண்முன்னே பெருமாள் முருகன் கொண்டுவந்து நிறுத்துகிறார். தியேட்டரினுள்ளே பார்வையாளர்கள்/முதலாளிகள் மட்டுமின்றி அதற்குள்ளே சிறுகடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களையும், அங்கே வேலை செய்யும் மனிதர்களையும் (முக்கியமாய் சிறுவயது பையன்கள்) பற்றியதொரு இன்னொரு உலகமும் இதற்குள் விரிகின்றது.

கெட்ட வார்த்தைகள் சாதாரணமாய்ப் புழங்கும், பிறர்க்குப் பட்டம் வைத்துக் கேலி செய்யும் பையன்களிடையே எப்படி 'எச்சி இலை பொறுக்கிறவன்' எனத் திட்டும்போது மட்டும் எவ்வளவு 'கெட்ட வார்த்தை'யாகவும், மிக மூர்க்கமாய் அவர்களைக் கோபம் செய்கின்றதாகவும அது அமைந்தது என்பதற்கான காரணங்களை அவ்வளவு எளிதில் கடந்து போகமுடியாது. அனேகமாய் இவ்வாறான சிறுகடைகளில் வேலைக்குச் சேரும் பையன்கள், ஒன்று பெற்றோரை இழந்தவர்களாகவோ அல்லது வீட்டை விட்டு ஓடி வந்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே அப்படி வரும்போது, அவர்கள் தொடக்க காலங்களில் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் எச்சில் இலைகளிலிருக்கும் உணவையே உண்டு உயிர் பிழைத்திருப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவ்வாறான பையன்களுக்கு வேலை செய்யும்போது 'நீ எச்சியிலை பொறுக்கியவநதானே' என்கின்றபோது கடந்தகாலம் நினைவூட்டப்பட்டு அதை அவர்களால் தாங்கமுடியாது இருந்ததென குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒரு வாத்தையால் திட்டப்பட்டதாலேயே வேலையௌ உதறித்தள்ளிவிட்டுப் போன பையன்களும் இதில் பதிவு செய்யப்படுகின்றார்கள்.

இதே தியேட்டரில் ஓரிரவு எவருமே இல்லாத அநாதையென வரும் பெண்ணை, அங்கே ஆபரேட்டராய் வேலை செய்யும் ஒருவர் அந்தக்கணத்திலே தீர்மானித்து திருமணஞ்செய்வதையும், சாதி தீவிரமாய்ப் பார்க்கும் அதே ஊரில் என்ன சாதியென அறியாமலே அவர்கள் -அவ்வாறு திருமணம் செய்து- மிக நன்றாக வாழ்ந்தார்களென வருகின்ற குறிப்புகள் நெகிழ்ச்சி தரக்கூடியவை.

புதுப்படங்களுக்கு விளம்பரம் பகலில் ஒட்டப் போகும்போது ஏற்படும் சுவாரசியம் ஒருபுறமென்றால், தியேட்டரின் -எந்தப் படத்தையும் பார்க்காத- முதலாளிக்குத் தெரியாமல் காலைக்காட்சிகளில் 'சாமிப்படம்' போடுவதுவரை பல விடயங்களை தியேட்டர் சூழல் சார்ந்து பெருமாள் முருகன் பதிவுசெய்கின்றார். காலவோட்டத்தில் எப்படி ஒருகாலத்தில் நவீன வசதிகளுடன் பிற தியேட்டர்களுக்கு சவால் விட்ட இநதத் தியேட்டர் எல்லாக் காட்சிகளுக்கும் 'பிட்டு'ப்படம் போட்டு ஓடவேண்டியிருந்த நிர்ப்பந்தத்தையும், பிறிதொருகாலத்தில் தியேட்டரினுள் இயங்கிய கடைகளெல்லாம் முற்றுமுழுதாக இல்லாமற்போகும் சோகத்தையும் இந்நினைவுக்குறிப்புக்களில் காணலாம்.

எட்டாண்டுகள் இந்தத் தியேட்டரோடு பின்னிப்பிணைந்திருந்த பெருமாள் முருகன், அவரின் தந்தையார் மற்றும் தியேட்டர் முதலாளியின் மரணங்களோடு அதன் அனுபவங்களில் இருந்து விலகிவிட்டவரெனினும், தியேட்ட்ரிற்குள் இயங்கிய உலகினுள் இருந்த மனிதர்களை தன் பயணங்கள் ஒவ்வொன்றின்போது -அவர்களை மீண்டும் சந்திக்க முடியாதா- என்கின்ற ஆசையோடு தேடிக்கொண்டிருக்கின்றார். வாழ்வு சிதறிப்போன ஒரு சிலரைப் பின்னர் சந்திக்கவும் செய்கின்றார். அந்த நினைவுகளையும் பதற்றங்களுடன் பதிவும் செய்கின்றார்.

தங்கள் தலைமுறையில் எவருமே படிக்காதபோது, படிக்க விரும்பிய தன்னை தன் தந்தை -அங்கே பகுதி நேரமாய் வேலைக்கு வந்த ஒரு ஆசிரியருக்கு இருந்த மதிப்பின் காரணமாக- தொடர்ந்து படிக்க வைத்தாரென பெருமாள் முருகன் எழுதுகின்றபோது தியேட்டர் எதையோ சிலருக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றது என்பது விளங்குகின்றது. தொடர் குடிகாரனாய்த் தன் தந்தை இருந்தாலும், தியேட்டரினுள் இருந்த கடையாலும், அங்கே சந்திக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களாலும் தன்னை ஏதோ ஒன்றுக்கு ஒப்புக்கொடுத்த தந்தையால், தியேட்டர் மூடப்பட்டதை தாங்கமுடியாது ஒருவருடத்திற்குள்ளேயே ஏதேதோ நினைவுகளாலும், குடியாலும் அலைக்கழிக்கப்பட்டு மரணமடைகின்றார் என்பதையும் துயரத்துடன் பதிவு செய்கின்றார்.

சாதி இறுக்கமாய் எல்லா விடயங்களில் இருக்கின்ற கிராமத்தில் பிறந்த தன்னால், அதை மீறி வரச்செய்வதற்கு இந்தத் தியேட்டரும், அங்கே பல்வேறு பையன்களோடு பழகிய அனுபவங்களும் மட்டுமே காரணமென பெருமாள் முருகன் குறிப்பிடுகின்றார். இத்தோடு என்னை இன்னும் வசீகரித்த ஒரு விடயம் என்னவெனில், படிப்பறிவேயற்ற ஒரு தலைமுறையிலிருந்து முதன்முதலாக வெளியே வருகின்ற பெருமாள் முருகன் தனக்கான கல்வியைக் கற்று, எழுத்தில் தனக்கொரு இடத்தையும் இன்றையகாலத்தில் அடைந்திருக்கின்றார் என்பதல்லவா பெரும் பாய்ச்சல். இதைத்தான் இதை வாசித்தபின்னும் தொடர்ந்தும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். முன்னே மூர்க்கமாய் வளர்ந்து நின்ற தடைகளையெல்லாம் உடைத்து எடுத்து வைக்கின்ற முதலடி என்பதே பெரும் நிகழ்வுதானன்றோ.

'நிழல் முற்றத்தை' பல வருடங்களுக்கு முன்னர் வாசித்திருத்தேன். அந்நாவல் பிடித்திருந்ததால், பின்னர் வ.கீதா அதை ஆங்கிலத்தில் 'Current Show' என மொழிபெயர்த்திருந்ததையும் வாங்கியிருந்தேன். எனவே 'நிழல் முற்றத்து நினைவுகளை' வாசித்தபோது அந்தப் புதினத்தை மீறி இதிலென்ன கூறப்பட்டிருக்குமென அசுவாராசியத்துடனேயே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் பக்கங்கள் விரிய விரிய எனக்குத் தெரியாத காலத்திற்குள் சென்று அங்கே அந்தப் பொழுதில் வாழ்ந்த மனிதர்களோடு பழகியது போன்ற வாசிப்பனுபவம் வாய்த்திருந்தது. 'நிழல் முற்றம்' நாவலை வாசிக்காதவர்கள், வாசித்தவர்களென எவரும் தயக்கமின்றி இதை வாசித்துப் பார்க்கலாம்; புதிய விடயங்களுள்ள சுவாரசியமான நினைவுக்குறிப்பு.

0 comments: