கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நெடுஞ்சாலை (Highway)

Wednesday, March 12, 2014

யணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும், மறக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன.

இவ்வாறு எதிர்பாராது நிகழும் பயணம் ஒன்றைத்தான் 'ஹவே' எங்களுக்குக் காட்சிப்படுத்துகின்றது. கழுத்தை நெரிக்கும் திருமணச் சடங்குகளாலும், உறவுகளாலும் திணறும் ஓர் இளம பெண், திருமணத்திற்கு முதல் நாளிரவு, தன்னை ஆசுவாசப்படுத்த தன் நண்பரோடு காரில் புறப்படுகின்றார். அந்தச் சிறு பயணம் எப்படி -தற்செயலான பல்வேறு நிகழ்வுகளால்- நெடும் பயணமாக மாறுகின்றதென்பதே இத் திரைப்படம்.

பயணிப்பது என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை. பயணிப்பவர்கள் எல்லோரும், புதிய தேடல்களுக்காய்த்தான் தம் பயணங்களைத் தொடங்குகின்றார்கள் என்பதுமில்லை. மேலும் ஊரடங்குச் சட்டங்களும், கொலைகளும் நிகழ்ந்த போர் நிகழ்ந்த தேசத்தில் வாழ்ந்து பழகிய என்னைப் போன்றவர்களுக்கு, ஒரு நாளின் இரவில் பயமின்றித் திரிவது என்பதே எத்தகைய வீரதீரப் 'பயணம்' என்பதை அறிவோம். பிற்காலத்தில் அடையாள அட்டைகளை உடலின் ஓர் அங்கமாய் திணிக்கப்பட்ட நம்மைப் போன்றவர்களுக்கு நினைத்த இடத்திற்கு விரும்பிய நேரத்தில் பயணிப்பதென்பது பெருங்கனவாகவே ஒருகாலத்தில் இருந்துமிருக்கின்றது.

ஆண்களுக்கே இப்படியென்றால், பெண்கள் பயணிப்பது பற்றிச் சொல்லவே தேவையில்லை. போர்ச் சூழலில் இருந்த பெண்களுக்கு மட்டுமில்லை, சனநாயக நாடுகள் எனக் கூறப்படுகின்ற நாடுகளில் வாழ்கின்ற பெண்களுக்கும் பயணிப்பதென்பதே பெரும் சவாலான விடயம். ஒருநாளின் இரவில் கூட நிம்மதியாக நடமாட முடியாததையல்லவா நேற்றைய உமாமகேஸ்வரியிலிருந்து இன்னும் பலர் நமக்கு மிகுந்த துயரத்துடன் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

'ஹவே'யில் மிகுந்த வசதிகளுடன் வளர்ந்த வீரா, அதற்கு எதிர்முனையில் வாழ்பவர்களுடன் சந்தர்ப்பவசத்தால் பயணிக்கின்றார். ஒரு கடத்தல் எப்படி நெகிழ்வான சம்பவங்களால் மறக்கமுடியாத பயணமாக மாறுகின்றது என்பதையும், துவித முனைகளில் இருந்தவர்கள் எவ்வாறு மற்றவர்களைப் புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் -அதீத சென்டிமென்டல்கள்- இல்லாது 'ஹவே' நமக்குள் பதிவு செய்துவிட்டுச்செல்கின்றது.

இந்தப் பயணம் இறுக்கமான மனதுடைய ஒருவரை மனம் நிறைந்து சிரிக்க வைக்கிறது. உள்ளே அடக்கி வைத்து துயரை வெளியே பகிரச் செய்கிறது. இறுதியில் எல்லாவற்றையும் மறந்து காதல் கொள்ளக் கூட வைக்கிறது. உயர்தரவர்க்கத்தில் இருப்பவர்களில் கூட மனம் நெகிழக்கூடியவர்களும், நேசிக்கக்கூடியவர்களும் இருக்கின்றார்கள் என்பதை அவருக்கு -ஒரு பெண்ணின் அருகாமை- உணர்த்தியும் விடுகிறது.

தே பயணம், இதுவரை பிறர் முன்னால் பணிவாக நடக்கவும், மென்மையாகக் கதைக்கவும் பழகிய இன்னொருவரை, எது குறித்தும் அச்சப்படாது பேச வைக்கிறது. குடும்பத்திற்குள் நடந்த ஒரு விடயத்தை -அந்நியர்கள் என்ற உணர்வேயில்லாது- அவர்கள் முன்னிலையில்- அது குறித்துப் பகிரவும் வைக்கிறது.

பயணங்களின் புதிய சூழல் நம்மை வேறொரு மனிதராக மாற்றிவிடுகின்றது. அவ்வணணமே நாம் இதுவரை பேசாத விடயங்களையெல்லாம் நீரூற்றுக்கள் போல தன்னியல்பில் பொங்கச் செய்தும்விடுகின்றன. அவ்வாறான பாத்திரங்களாய் இத்திரைப்படத்தில் வீராவும், மஹாவீரும் இருக்கின்றார்கள்.


இந்தியாவின் நிலப்பரப்பை - அதீத வர்ணக்கலப்புகளின்றி- இவ்வளவு இயல்பாய் வேறெந்த இந்திப்படங்களிலாவது காட்சிப்படுத்தியிருப்பார்களோ என்றளவிற்கு ஒளிப்பதிவு இருக்கின்றது. இயல்பென்பது அதன் இயற்கையை, வறுமையை, புழுதியெழும் வீதிகளை காட்சிப்படுத்துவதிலிருந்து, அந்தந்த நிலப்பரப்பு மக்களை எந்த சினிமா ஜிகினாத்தனமுமில்லாது- காட்டுவதுவரை... எனக் குறிப்பிட விழைகிறேன். ரஹ்மான் தான் இசைதான் என்றாலும், அநேக இடங்களில் 'மெளனத்தின் இடைவெளி' விடப்பட்டிருப்பதும், இயற்கையோடு பின்னணி இசை வருவதும் பிடித்தமாயிருக்கிறது. ரஹ்மானின் இசையில் வரும் தாலாட்டுப் பாடடு ஒருபக்கம் மனதை நெகிழ வைக்கிறதென்றால், இன்னொரு ஹிப்-ஹாப் பாடலிற்கு வீராவும், அவர் ஆடுவதைப் பார்த்து இன்னொருவரும் போடும் ஆட்டம் நம்மை உற்சாகத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சொல்பவை.

வளவளவெனக் கதைப்பதிலிருந்து, முரட்டுத்தனமாய் இருப்பவரையே பேசி பேசி ஓட விரட்டுவதிலிருந்து, இறுதியில் தன் குடும்பத்தினர்/உறவினர் முன் இதுவரை மனதில் ஒளித்து வைத்த் உண்மைகளைப் போட்டு உடைப்பதிலிருந்து அற்புதமான நடிகையாக வீராவாக நடித்த அலியா பட் பரிணாமிக்கிறார்.

துயரமான நினைவாய் இப்படத்தின் முடிவு பார்ப்பவரிடையே தங்கிவிடக்கூடாது என்பதற்காய், இறுதியில் வரும் சிறு காட்சியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் நம்பிக்கைகளிலிருந்து முகிழ்வதும்தானே வாழ்க்கை.

மேலும், ஒரு பயணம் ஒரு புதிய அத்தியாயத்தை ஒரு பெண்ணின் வாழ்வில் தொடக்கி வைத்திருக்கிறது என்பதற்காகவும், எவரின் துணையுமின்றி தனித்து எதையும் அப்பெண்ணால் செய்ய முடியுமென்பதற்காகவும் -அந்த முடிவையும்- நாம் வரவேற்போம்.

0 comments: