கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

The Grand Budapest Hotel

Monday, March 31, 2014

சில திரைப்படங்கள் அவற்றின் திரைக்கதையினால் எம்மைக் கவரும். வேறு சில திரைப்படங்கள் -அழுத்தமான கதைகள் இல்லாவிட்டாலும்- அவற்றைக் காட்சிப்படுத்திய விதத்தில் நம்மை வசீகரிக்கும். The Grand Budapest Hotel படம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. வழமையான ஹொலிவூட் படங்களின் பாணியை விட்டு விலகி, பகுதி பகுதியாக வெவ்வேறு மூன்று காலகட்டங்களை இப்படம் காட்சிப்படுத்துகிறது.

ஒருகாலத்தில் செழிப்பாயிருந்த ஹொட்டல் தன் வீழ்ச்சியை அடைகின்ற காலத்தில் ஒரு எழுத்தாளர் அங்கே செல்கின்றார். தற்செயலாய் இந்த எழுத்தாளர் அந்த ஹொட்டலின் சொந்தக்காரரான முஸ்தபாவை அங்கே சந்திக்கின்றார். அவரிடம் தன் இளமைக்காலத்தில் கேட்ட கதையை, இந்த எழுத்தாளர் தன் முதுமையில் எமக்குச் சொல்லத் தொடங்குகின்றார். சிலவேளை இந்தக் கதை நடந்ததா எனச் சந்தேகம் கேட்பவர்க்கு வந்தாலும், இவ்வாறே நிகழ்ந்ததெனவே சொல்லப்பட்டதாக எமக்குச் சிறு எச்சரிக்கை தரப்படுகிறது.

 இந்த ஹொட்டல் பிரபல்யமாயிருந்த காலத்தில் குஸ்தவேயே ஹொட்டலை நிர்வகிப்பவராக இருக்கின்றார். அவரின் கவனிப்பாலேயே ஈர்க்கப்பட்டே நிறையப் பேர் -முக்கியமாய் வயது முதிர்ந்த பெண்கள்- அவருக்காகவே வருகின்றனர். எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியபடி இருக்கும் குஸ்தவேயிடம், பதின்மூன்று வயதுச் சிறுவனான முஸ்தபா 'லொபி பையனாக' வந்து சேருகின்றார். பிறகு இவர்கள் இருவருக்குமிடையில் உருவாகும் நட்பும், அவர்கள் செய்யும் வீரதீரச் செயல்களுமே இந்தப் படம்.

குஸ்தவேயின் கவனிப்பில் களிப்புற்ற மூதாட்டியொருவர் அவரின் வீட்டில் வைத்துக் கொலை செய்யப்படுகின்றார். குஸ்தவேயின் மீது நேசத்திலிருக்கும் அந்த மூதாட்டி ஒரு விலையுயர்ந்த ஓவியத்தை உயிலாக குஸ்தவாவிற்கு எழுதி வைத்திருப்பதைக் கண்டு அந்த மூதாட்டியின் முழுக் குடும்பமே கோபப்படுகிறது. இதனால் குஸதவாவே இந்தக் கொலையைச் செய்தவரென சாட்சிகளை உருவாக்கி, அவரைச் சிறையில் தள்ளிவிடவும் செய்கின்றனர்.

அந்த ஜெயிலில் இருந்து குஸ்தவே எப்படித் தப்பிக்கின்றார் என்பதையும், ஹொட்டல்களை நிர்வகிப்பவர்களிடையே இரகசியமாக இயங்கும் குழுவின் உதவியினூடு எப்படித் தன்னை நிரபராதியென நிரூபிக்கின்றார் என்பதுவும் விறுவிறுப்பானது, இறுதியில் குஸ்தவேயுற்கு என்ன நிகழ்ந்தது என்பதையும், எவ்வாறு லொபி பையனாக இருந்த முஸ்தபா அந்த ஹொட்டலை நிர்வாகிக்கும் ஒருவராக மாறுகின்றார் என்பதையும் சற்று நகைச்சுவையும் கலந்து இத்திரைப்படத்தில் அன்டர்சன் காட்டுகின்றார்.

யுத்தங்களுக்கிடையில் (1ம்/2ம் உலகமகாயுத்தம்) வெவ்வேறு இராணுவங்களால் எல்லைகள் கைப்பற்றப்படுவதை, அவ்வப்போது இரெயினில் பயணிக்கும் குஸ்தவேயும் முஸ்தபாவும் -எந்த நாட்டு இராணுவம் எல்லையைக் கைப்பற்றியிருக்கிறதென அறியாது -அவ்வப்போது மாட்டுப்பட்டு முழிப்பதும் அடிவாங்குவது எள்ளலாகக் காட்டப்பட்டாலும், இன்னமும் 'எல்லை கடத்தல்களில்' இருக்கும் வேதனைகளின் துயரங்கள் அவ்வளவாய் மாறிவிடவில்லை என்பதே யதார்த்தமாகும்.

அதேபோன்று லொபி பையனாக இருக்கும் முஸ்தபா, தன் பெற்றோரைப் போருக்குப் பலிகொடுத்து எவருமில்லாது எவ்வித ஆவணங்களில்லாது இந்த ஹொட்டலில் அடைக்கலமாகும் கதை கூறப்படும்போது நகைச்சுவையாக நீளும் காட்சிகளில் சடுதியாய் மெளனம் கவிழ்ந்து மெல்லிய சோகம் இழையோடத் தொடங்குகின்றது. அத்துடன் பான் கேக் செய்யும் பெண்ணோடு, முஸ்தபாவிற்கு முகிழும் காதல் ஒருவகை அழகென்றால், ஜெயிலில் இருந்து தப்பிவரும்போது குஸ்தவேயும், முஸ்தபாவும் -அந்தப் பதற்றம் உணராது- நீண்டநேரம் தங்களை மறந்து உரையாடி இறுதியில் கவிதை சொல்வது மெல்லிய புன்முறுவலைத் தூண்டச் செய்கிறது.

ஒவ்வொரு சிறுசிறு காட்சிகளிலும் அன்டர்சன் என்கின்ற இயக்குநரைத் தாண்டி அவருக்குள்ளிருக்கும் எழுத்தாளர் மிளிர்ந்துகொண்டேயிருக்கிறார். ஹொட்டலை பிங் நிற திருமணக்கேக் போல வடிவமைத்ததிலிருந்து, ஹொட்டல் செய்யும் கேக் வடிவத்திலேயே ஜெயிலிருந்து தப்புவதற்கான உபகரணங்களை காவலர்க்குத் தெரியாமல் அனுப்புவதெனத் தொடர்ந்து, இரகசியமாக undergroundயாய் இயங்கும் ஹொட்டலை நிர்வகிப்பவர்களின் குழு, தமது உறுப்பினர் ஒருவருக்காய் சட்டென்று உயிர்பெற்று அவர்களுக்கிடையில் தகவல்கள் பரிமாறப்படுவதை ஒரு சிறுகவிதைக்கு நிகராய்க் காட்சிப்படுத்துவரை அன்டர்சன் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.

கதையொன்றால் குறிப்பிட பெரிதாக ஒன்றுமில்லை. வேண்டுமெனில் ஏற்கனவே நமக்குத் தெரிந்த கதைகளையே பகுதிகளாகப் பிரிதது தனக்குரிய முறையில், வித்தியாசமான சட்டகங்களுடான (Robert Yeoman )ஒளிப்பதிவோடு அன்டர்சன் திரைப்படமாக்கியிருக்கின்றார் எனச் சொல்லலாம்.. ஏற்கனவே எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. சொல்லப்பட்ட கதைகளை இன்னொருமுறை எப்படி புதிய முறையில் சொல்வது என்பது இன்றைய காலத்தின் முன்னாலுள்ள சவால் எனக் கூறுவோரும் உண்டு. அந்த வகைக்கேற்ப இந்தப்படம் இருக்கிறது.

எதையும் நிறைய எதிர்பார்க்காது, திரைப்படம் செல்லும் திசையெங்கும் நாமும் அலைந்தால், இத்திரைப்படம் நம்மை வசீகரிக்கக் கூடும்.

0 comments: