கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கோணங்கியை பின்னிரவில் வாசித்தல்

Monday, April 28, 2014

சில படைப்பாளிகளை விரிவாக வாசிக்காது, சும்மா சந்தித்துப் பேசும்போது சொல்லப்படும் சில வரிகளை மட்டும் கொண்டு அந்தப்படைப்பாளிகள் பலரால் மதிப்பிடப்படுகிறார்கள். ஆழமான வாசிப்பில்லாது இவ்வாறு 'கதை'களைக் காவிக்கொண்டு திரிவது தமிழ்ச்சூழலின் அவலம் என யாரோ எழுதியது நினைவிலுண்டு. கோணங்கியின் 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி'யை ஏற்கனவே வாசித்தபோதும், தவறவிட்ட சில கதைகளுக்காய் மீண்டும் வாசிக்கத் தொடங்கியபோது கோணங்கியும் அவ்வாறு அரைகுறையான 'பேச்சுக்காவி'களால் தவறாக மதிப்பிடப்படுகின்றார் எனவே தோன்றுகின்றது. இந்த தொகுப்பிலிருக்கும் 70 கதைகளில் ஆகக்குறைந்தது 45 கதைகளை மிக எளிதாக வாசித்துவிடமுடியும். மிகுதிக்கதைகளுக்கு வேண்டுமென்றால் 'புரியாத மொழியில் எழுதுகிறார்' என்ற விமர்சனத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளலாம். ஆனால் கோணங்கியின் கதைகளின் மொழி எவ்வாறு மாற்றமடைந்து போகிறது என்பதற்கு இந்நூலை முன்வைத்து நல்லதொரு விமர்சனத்தை ஒருவர் வைக்கலாம் (நான் அவரின் நாவல்களை இங்கே சேர்க்கவில்லை).

கதைகளிலும் கவிதைகளிலும் என்னை ஒருகாலத்தில் அதிகம் வசீகரித்த படைப்பாளிகள் ரமேஷ்-பிரேம். ஆனால் இன்றும் என்னால் அவர்களின் தொடக்ககால படைப்பான 'அதீதனின் இதிகாசத்தை' முழுமையாக வாசிக்க முடியாமற்றானிருக்கிறது.  அதில் ஐந்தாறு பக்கங்களை வாசித்தவுடனேயே எங்கையோ தொலைந்துவிடுபவனாக ஆகிவிடுகின்றேன். ஆக, ரமேஷ்-பிரேமின் ஆரம்பகால எழுத்துக்களே எனக்கு விளங்கவில்லை என நினைத்து விலத்தியிருந்தால் பிறகு அவர்களை எனக்கு நெருக்கமானவர்களாக  என்றுமே அடையாளங் கண்டிருக்க முடியாது. அது போல 'காவப்படும் கதைகளை' மட்டும் கவனத்தில் எடுத்திருந்தால் நான் கோணங்கியையும் தவறவிட்டிருப்பேன். 'மதினிமார்களின் கதை'யையும், 'கொல்லனின் ஆறு பெண்மக்களையும்', 'பொம்மைகள் உடைபடும் நகரத்தையும்' தேடிக்கொண்டிருந்தபோது எனக்கு கிடைத்தவை அவையல்ல, 'பாழி'யும் 'பிதிரா'வும்தான்.  இந்நாவல்களின் பெயர்கள் வசீகரித்த அளவுக்கு, அவற்றின் உள்ளடக்கம் இப்போதைக்கு தொடக்கூடாதென்றளவுக்கு மிகவும் பயமுறுத்தியிருக்கின்றன. அதேவேளை அவை எழுதப்பட்டிருக்கும் மொழியினோடு எனக்கு இன்னும் பரிட்சயம் வரவில்லை என்று நினைத்திருக்கின்றேனோ தவிர எழுதிய ஆசிரியரை 'இப்படி எழுதியிருக்கின்றாரே, நாசமாகப்போக' எனச் சாபம் கொடுக்கவில்லை.

'சொல் என்றொரு சொல்'லும் முதல் சிலமுறை வாசித்தபோது உள்ளிழுக்காதபோதும், சட்டென்று ஒருமுறை இழை இழையாகப் பிரிந்து விளங்க முழு மூச்சாக அதை வாசித்து முடித்திருந்தேன். மேலும் எல்லாமே எப்போதும் விளங்கவேண்டும் என்ற அவசியமிருக்கா என்ன?  நகுலனின் எழுத்துக்களை சுய அலட்டல்கள், உள்ளோளி தரிசனங்கள் இல்லையென்பவர்கள் ரொபர்த்தோ போலானோவின் எழுத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என யோசித்துப் பார்க்கின்றேன். உள்மனத் தரிசனங்களுக்கு இலக்கியத்தில் ஒரிடமிருப்பதுபோல சுய அலட்டல்களுக்கும் ஓர் இடம் கொடுத்தால் என்னதான் குறைந்துவிடப்போகின்றது?

ஒற்றைத்தன்மையான, இறுக்கமான தமக்கான பார்வையினூடாகப் பார்ப்பது மட்டுமே நல்ல இலக்கியங்கள் என்று உரத்துக் கூறுபவர்களை, 'நீங்கள் கூறுவதற்கும் ஓரிடம் உண்டு, ஆனால் அந்த இடம் மற்ற வகைமைகளை உதாசீனப்படுத்துவதால் வருவதால் அல்ல' என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டிக் கொள்வோம்.  கதைகளில் ஒரு தெளிவான 'கதை' இருக்கவேண்டும், முடியும்போது நெற்றிப்பொட்டில் அடித்தால்போல ஒரு முடிவு அமையவேண்டும் என்றெல்லாம் உறுதியாக இருப்பவர்களோடு நாம் நிதானித்து நின்று பதில் சொல்லவேண்டியதுமில்லை (புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் tragedy  பற்றி மெளனி எழுதியதை இங்கே நினைவுபடுத்தியும் பார்க்கலாம்).

ஆக என்னுடைய வாசிப்பை வைத்துச் சொல்வதென்றால், கோணங்கியைப் பதற்றமின்றி வாசிக்க அவருடைய சிறுகதைகளிலிருந்து தொடங்கலாம். 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி' இன்னுஞ் சிறப்பான தேர்வாக இருக்கும், எப்படி அவர் இன்று அதிகம் விமர்சிக்கபப்டுகின்ற 'புரியாத மொழியில்' எழுதுகிறார் என்ற புள்ளிக்கு கோணங்கி வந்தடைகின்றார் என்பதையும் கூட அலசி ஆராய்ந்து பார்க்க இத்தொகுப்பு உதவக்கூடும்.

'மஞ்சட்பூத் தெரு' வில ஜி.நாகராஜனும், 'ஆறில்' புதுமைப்பித்தனும், இறந்துவிட்ட பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறதில்' நகுலனும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அண்மையில்  'அறம்' பாடி உன்னதமாக்கப்பட்ட சில எழுத்தாள ஆளுமைகள் (ஆவிகள் எனச்சொல்வதும் சிலவேளைகளில் பொருந்தும்) போல மீள் உருவாக்கம் கொள்ளவில்லை. அவர்களின் பலங்களோடும் பலவீனங்களோடும் கோணங்கியிடமிருந்து வெளிப்படுகின்றார்கள். அதுதான் முக்கியமானது, இது படைப்புக்கான வெளியே தவிர,  சோகம் மேல் சோகமாய், தியாகம் மேல் தியாகமாய், அறம் மேல் அறமாய்.... போதும் போதும் என்றளவிற்கு ஒரு திரைக்கதைக்குரிய கதைகளாக இருக்கமுடியாது. எனெனில் வாழ்க்கை இப்படியென்றுமே அதீதமாய் இருப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இறுதியில் விமர்சனமாய் கோணங்கியின் படைப்பில் தெரியும் ஒரு விடயத்தையும் கூறியாக வேண்டியிருக்கிறது. நான் வாசித்தவரையில் அசோகமித்ரனின் படைப்புக்களில் கூட அவ்வளவு துருத்திக்கொள்ளாத சுயசாதி அபிமானம் கோணங்கியின் படைப்புக்களில் பிறீட்டு வெளிப்படுகிறது. ஒருவர் தன் சுயசாதி அடையாளத்தை மறைக்கவேண்டிய அவசியமில்லைத்தான். ஆனால் தன் சுயசாதி ஓர் ஒடுக்குகின்ற சாதியாக இருக்கின்றபோது அங்கே பெருமிதம் பேசுவதை விட, தன் சாதியின் பெயரால் பிறரை ஒடுக்குவதை பதிவுசெய்வதை, தன் சுயசாதியைக் கிண்டல் செய்வதையும் முக்கியமாய்க் கொள்ளவேண்டும்.  அந்த விடயம் கோணங்கியின் கதைகளில் காணாமல் போயிருப்பது என்னளவில் ஏமாற்றமே. சுந்தரராமசாமி நாசூக்காய் மறைத்ததும், அசோகமித்ரன் கண்டும் காணாததுமாய் விட்டதும், ஆனால் ஆதவன் நக்கல் செய்ததும், கிருத்திகா 'வானேஸ்வரத்திலும்', கரிச்சான் குஞ்சு 'பசித்த மானுடத்திலும்' தாம் வந்த சாதிகளைக் கிழிகிழியென்று கிழித்துமிருக்கின்றார்கள் என்பது ஒரு நினைவூட்டலுக்கு.

'அடே...அப்பிச்சி....உன் தாத்தனுக்காக இருக்கவேண்டாமய்யா... நீ போய்யா, நல்லா இருப்ப, இன்னாரு பேரன். சுப்பையாத் தேவன் பேரன்னு பேரெடுத்துப்பாப் போதுமுடா. நாங்க மண்ணுக்குள்ள போறாமுடா' என 'அப்பாவின் குகையில் இருக்கிறேனில்' சொல்வதை ஓர் உணர்ச்சித்தளத்தில் வைத்துப் பார்க்காலாந்தான். ஆனால் அதற்கப்பால் தலைமுறைக்குள்ளால் தன் சுயசாதிப் பெருமிதங்களைக் கடத்தும் சாமர்த்தியங்கள் இதில் இருக்கிறதெனவும் வாசிக்கலாம். 'தேவர்கள் நிறையக்கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். ஆகவே தான் கோணங்கி 'உங்கள் உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை'யும் தேவர் சாதிச் சிறுத்தைதானோ என சந்தேகிக்கவும் வேண்டியிருக்கிறது என அவருக்குச் சொல்லவும் வேண்டியிருக்கிறது. இதற்கப்பாலும் 'சிறுத்தையின் உடல் புள்ளிகள் பிரபஞ்சத்தின் ஆயிரம் கண்களாகத் திறந்து வைலட் கற்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் தீரவே தீராமல் ' (உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை) போர்ஹேயின் புலி போலும் எனச் சமாதானம் செய்துகொள்ள முயல்கிறேன்.

(ஒக்ரோபர் 01, 2011, 1.36 a.m.)

இரண்டு நண்பர்கள்

Friday, April 18, 2014

ன்னும் கொஞ்ச நாட்களில் இலையுதிர்காலம் தொடங்கிவிடும். பொழியத்தொடங்கும் மழையுடன்  மெல்ல மெல்லமாய் குளிர் பரவுவதும் நம்மையறியாமலே நிகழ்ந்துவிடும். இங்குள்ள காலங்களில் எனக்குப் பிடித்த பருவம் என்றால் இலையுதிர்காலந்தான் என்று அடிக்கடி எழுதிவிட்டேன். மரங்கள் மஞ்சளாறு (கடல்புறாவில் வரும் மஞ்சளகியல்ல) போல நகர்வதையும், சட்டென்று தீப்பிடித்து எரியும் காடுகள் ஆவதையும், பின்னர் அனைத்தும் உதிர்ந்து சாம்பல் வர்ணமாவதையும் பார்த்த எவருக்கும் இந்தப் பருவம் பிடித்துவிடும். ஆனால் அதேசமயம் இலைகள் எல்லாம் உதிர்ந்து போகுமொருகால், மனதில் பரவும் வெறுமையும் சொல்லிமாளாது. எல்லாமுமே வாழ்க்கையில் இயல்பு என இயற்கையைவிட நமக்கு வேறு யார்தான் கற்றுத்தரமுடியும்?

என்னால் ஒரளவுக்கு நினைவுகொள்ளக்கூடிய இருபத்தாறு காதல் சம்பவங்களில் (இதை அறியாதவர்கள், வாசிக்க 'கம்பராமாயணம் படித்த கதை') அநேகமாய் நான் காதல்வயப்பட்டதும் இவ்வாறான இலையுதிர்காலங்களில் அல்லது குளிர்காலங்களில் என்பது தற்செயலானதுமல்ல. வெளியே சூரியனை அவ்வளவு எளிதாய்க் காணமுடியாக் காலம், மனதுக்கு ஒரு வெதுவெதுப்பைத் தந்துவிடுகின்றது. ஆகவே மனிதர்களை இன்னுமின்னும் நேசிக்க மனம் அவாவத் தொடங்குகின்றது. இந்த இருபத்தாறு சம்பவங்களில் வரக்கூடிய - நீங்கள் கேலியாய்ச் சிரிக்கக்கூடுவீர்களென்றாலும்- அஸினோடு காதல் வயப்பட்டதும் இப்படியான ஒரு தருணமாய்த்தான் இருக்கவேண்டும். கைக்கிளைக் காதலாய் இருந்தாலும், மடலேறும்படி அஸின் வற்புறுத்தமாட்டார் என்பது எவ்வளவு நிம்மதியைத் தருகின்றது. ஆக காதலில் வீழ்வது மட்டும் முக்கியமில்லை, நம்மை காதலின் பொருட்டு அவர்கள் காவு கொடுக்கமாட்டார்கள் என்று அறிந்துகொள்வதும் நம் ஆயுளை நீட்டிக்கும் ஒரு வழி என்க.

இலையுதிர்க்காலம் கதகதப்பானது என்றாலும் நான் இப்போது அதன் அழகைப்பற்றியல்ல பேசப்போகின்றேன். இலைகள் உதிர்வதைப் போல இந்த இலையுதிர்க்காலத்தில் - முக்கியமாய் செப்ரெம்பரில்- என்றென்றைக்குமாய் இழந்துபோன நண்பர்களைப் பற்றிச் சொல்லப்போகின்றேன். ஆகவே துயரங்களை கேட்கப் பிடிக்காதவர்கள் இந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடலாம். ஓர் இரவு இப்படி வீணாயிற்றேயென நீங்கள் பிறகு யோசிக்கக்கூடாது.

எத்தனை விதம் விதமான கனவுகள் மட்டுமில்லை நினைவுகள் கூட நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. அதுவும் சிறுவயது நினைவுகள் என்பது அவ்வளவு எளிதில் மறந்து போய்விடமாட்டாது. அவ்வாறு என் சிறுவயதுகளில் ஒன்றாய்ப் படித்த நண்பனை இந்த மாதமொன்றில்தான் ஒரு விபத்தில் இழந்திருக்கின்றேன். நாம் ஒரே ஊரில் ஓரே பாடசாலையில் படித்தவர்கள் என்பதால் நிறைய நினைவுகள் அவனைப் பற்றி எனக்கிருக்கிறது. கனடாவிற்கு நாமிருவரும் வெவ்வேறு காலங்களில் வந்திருந்ததால் -முன்னர் ஈழத்தில் இருந்த அதே நட்புத்தொடர்பாடல் இல்லாவிட்டாலும் அவனது இழப்பு என்னைப் பாதித்த ஒன்று. இங்கே கனடா வந்ததன்பிறகு முதன்முதலில் அவனைச் சந்தித்தபோது நான் ரஹ்மானை விரும்பிக்கேட்கிறேன் என்பதற்காய் அவன் தான் வாங்கி வைத்திருந்த 'லவ் பேர்ட்ஸ்' பாடல்கள் அடங்கிய கஸற்றைத் தந்திருக்கின்றான். நிறையக் காலம் அதை பத்திரப்படுத்தி கனடா வந்ததன் நினைவாய் வைத்திருந்திருக்கின்றேன்.

அப்படி நினைவுகொள்ளக்கூடிய இன்னொரு டேப் என்றால், 'ஆசை' படப்பாடல்கள். கொழும்பில் இருந்த தோழிகள் நீ நிச்சயம் கேட்கவேண்டுமென உசுப்பேற்ற ஏதோ ஒருகடையில் காவல் நின்று அந்தப்பாடல்களைப் பதிவுசெய்துகொண்டு வந்து வெள்ளவத்தை ஸ்ரேசன் ரோட்டில் தங்கியிருந்த வீட்டில் கேட்டிருக்கின்றேன். அதுவும் குறிப்பாய் 'கொஞ்சநாள் பொறு தலைவா' வை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்பதும் நினைவில் இல்லை. அந்தப் பாடலை திரும்பத் திரும்பச் சுழல வைத்து, ஏதோ கூரையைப் பிய்த்துக்கொண்டு காதலி வந்துவிடுவார் என நான் ஏகாந்தமாய்க் கூரையைப் பார்த்துக் கொடுத்த போஸை பதிவுசெய்திருந்தால் ஒரு  நல்ல குறும்படம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்திருக்கும். கனடாவிற்கு விமானம் ஏறியபோது கூட என்னுடைய இலட்சியங்களில் ஒன்றாய், வந்து இறங்கியவுடன் 'ஆசை' படம் பார்ப்பதும் இருந்திருக்கிறது. ஆனால் ராகுவிற்கும் கேதுவிற்கும் உள்ள உறவைப் போல பாடல்களுக்கும் அஜித்தின் ஆடலிற்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி நாமெல்லோரும் அறிவோம் என்பதால் மேலே எதும் கூறத்தேவையில்லை.

நண்பன் விபத்தில் மோசமாய்ச் சிக்கி கோமாவிற்குள் இருந்தாலும் எப்படியும் தப்பிவிடுவான் என நம்பிக்கொண்டிருந்தேன். தமிழ்த்திரைப்பட விழாவில்  critic award  கொடுப்பதற்காய் நடுவர்களில் ஒருவராய்ப் படங்களை அரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது நண்பன் என்றென்றைக்குமாய் எங்களை விட்டுப்போய்விட்டான் என்ற செய்தி வந்தது. என் வயதொத்த அவனின் இழப்பென்பது, எனக்கு முன்னும் மரணம் அருகில் நின்றுகொண்டிருக்கின்றது என்பதை நினைவுபடுத்த வந்த அச்சம் சொல்லிமாளாது. எப்போதும் நிகழலாம் மரணம், அதற்குள் உனக்குப் பிரியமானவர்களுடன் நேசத்துடன் இரு என நண்பன் சொல்லாமற் சொல்லிச் சென்றிருந்தான்.

அவனை நினைத்துத்தான்.... 'அகாலம்' என்ற கவிதையை எழுதினேன்.

நாள்குறிக்கப்பட்ட மரணத்தை
எப்படியெதிர்கொள்வதென
மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில்
பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன்
நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி
எல்லாப் புத்தகங்களும்
மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதே தவிர
இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை
இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில் புரட்டத்தொடங்குகின்றான்
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை.
சில்வியா பிளாத்தின் கவிதையோடு
விரியுமொரு தாளில்
உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை
இவன் உற்றுநோக்கியபொழுதில்தான்
நண்பனின் வாசனை உதிர்ந்திருக்கவேண்டும்
தனிமை இருகரங்கொண்டு தோளிலழுத்த
துயரினில் மூழ்கி விறைத்துக்கொண்டிருக்கும் இரவை
சிறுவனாயிருப்பின்
அம்மாவின் முதுகின்பின் முடங்கிப்படுத்தாவதுகடந்துபோயிருக்கலாம்
'என்னைவிட்டுபோயிட்டானடா' எனஆஸ்பத்திரி ப்ளோரில்
பதறியோடிவந்து விரல்நடுங்கும் காதலிக்கு
ஆறுதல்கூற வார்த்தையில்லா மொழியின் வெறுமை
மூளை சிதைந்து
வடிந்துகொண்டிருந்த நண்பனின் குருதியாய்
இவனில் பரவ
கள்ளிச்செடிகளில் தேன்குடித்து
பூவிலமர்ந்த தும்பிகளை
துரத்தியோடிய சிறுவயதுநினைவுகள்
சட்டமிட்ட ஓவியமாய் உறைந்துபோகின்றது.

ஊருமில்லை; பால்யம் விரிந்த ஒழுங்கைகளுமில்லை;
இனி நீயுமில்லை.

-------------

ப்படி ஒரு செப்ரெம்பரில் இன்னொரு நண்பனின் இழப்பும் நிகழ்ந்தது. நண்பரொருவரின் உறவினரை வைத்தியசாலைக்குப் பார்க்கப் போனபோதுதான் ஈழநாதனின் அகால மரணத்தை அறிய நேர்ந்தது. நம்பவே முடியாத ஒரு மரணமது. அதை உறுதிப்படுத்தும் ஒவ்வொருகணமும் அது ஈழநாதனாய் இருக்கக்கூடாதென மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆம், நண்பர்களே இறுதியில் முப்பது வயதுகளிலே நம் அருமையான நண்பனை நாமிழந்தோம்.2005/2006 காலப்பகுதியை என் வலைப்பதிவுகளில் உற்சாகமானதும் மறக்கமுடியாததுமான காலம் என நினைத்துக்கொள்வதுண்டு. தீவிர வாசிப்பில் அக்கறையும் அதேசமயம் நகைச்சுவையாகவும் உரையாடக்கூடிய அற்புதமான பல நண்பர்களைக் கண்டெடுத்திருக்கின்றேன். ரொறொண்டாவில் வலைப்பதிவு சந்திப்பு, அதன் நீட்சியில் அமெரிக்காவில் பெயரிலி என்கின்ற இரமணியைச் சந்தித்து அங்கு கார்த்திக், சுந்தரவடிவேல் போன்றவர்கள் வந்ததென உண்மையிலேயே அழகிய வலைப்பதிவுக்காலமேதான். இந்த நண்பர்களின் உற்சாகமே எனது முதற்கவிதைத் தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகள்' அச்சிடுவதற்கு உந்துசக்தியாகவும் இருந்துமிருக்கின்றது.

ஈழநாதனின் வலைப்பதிவை ஏற்கனவே வாசித்திருந்தாலும், ஈழநாதனை மதிதான் முறையாக எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும். அவரையும் என்னைப் போலவே வீட்டில் 'இளங்கோ' என்றழைப்பார்கள் என்பது இன்னும்  நெருக்கத்தைத் தந்திருந்தது. அவர் சேகரித்த/சேகரிக்க விரும்புகின்ற புத்தகங்கள்/திரைப்படங்களின் பட்டியலை பகிர்ந்துகொள்வதுவரை நட்பு நீண்டிருக்கின்றது.கடந்தகாலத்து என் பதிவுகளில் ஈழநாதன் எழுதியிருக்கும் பின்னூட்டங்களை வாசிக்கும் ஒவ்வொரு பொழுதும் அவரின் நினைவுகள் எனக்குள் வழிந்து பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. மைக்கல் ஒண்டாச்சியில் எனக்கு பெருவிருப்பு இருப்பதை அறிந்த ஈழநாதன் ஓரிடத்தில் இப்படி எழுதியிருப்பார் 'மைக்கல் ஒண்டாச்சி புத்தகம் எழுதினால் அதுக்கு டிசே விமர்சனம் எழுதுவார் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.' அவ்வளவுக்கு என்னைக் கூர்ந்து கவனித்த ஒரு நண்பர்.

நூலகம் என்ற மாபெரும் கனவுத்திட்டத்தின் முதற்பங்களிப்பார்களில் ஒருவர் மட்டுமில்லை பல விடயங்களைச் செய்ய கனவுகள் கொண்டிருந்தவர் என்பதை அவரின் மறைவின்போது நண்பர்கள் எழுதிய பதிவுகள் சாட்சி சொல்கின்றன.இன்று ஈழநாதன் இல்லாது ஒரு வருடம் கழிகின்றபோதும் அவர் இன்றில்லையென்பதை நம்பவே மனம் மறுக்கிறது. எத்தனை மனிதர்களை நம் வாழ்வில் சந்திக்கின்றோம், ஆனால் சிலர் மட்டும் நம்மில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்  ஏன் என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ளமுடிவதில்லை. இத்தனைக்கும் ஈழநாதனை நான் நேரில் ஒருமுறை சந்தித்ததோ அல்லது தொலைபேசியில் கூட உரையாடியதோதில்லை. ஆனால் ஏன் அவரின் இழப்பு எனக்குள் பெரும் வெற்றிடத்தை உருவாக்கிறதெனத் தெரியவில்லை.

சிலவேளைகளில் என்னைப் போல விருப்புக்களும், கனவுகளும் கொண்ட ஒருவர்தான் ஈழநாதன் என்பதால்தானோ தெரியவில்லை. அவரின் இழப்பு, என் கனவுகளும் கூட சட்டென்று ஓரிடத்தில் அரைகுறையாக முடிந்துவிடக்கூடுமென்பதைத்தான் நினைவுபடுத்துகிறதோ நானறியேன்.

இலையுதிர்க்காலம் மரங்கள் உதிர்கின்றபோது பெரும் வெறுமை மனதில் தோன்றினாலும், அவை இன்னொருபொழுதில் துளிர்க்கும் என நம்பிக்கை கொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்கள் உதிர்ந்துபோகின்றபோது அவர்களின் நினைவுகள் மட்டுமே நம்மில் எஞ்சுகின்றன. அதைவிட என் சிறுவயது நண்பனுக்கோ அல்லது ஈழநாதனுக்கோ நான் உங்கள் மீது இவ்வளவு நேசத்துடன் இருந்திருக்கின்றேன் என்று அவர்கள் உயிருடன் இருந்த காலங்களில் சொல்லமுடியாமற்போய்விட்டதே என்ற குறுகுறுப்பு நெஞ்செங்கும் பரவவுதைத் தவிர்க்கவும் முடியவில்லை. இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்றுதானே நாமெல்லோரும் தேடிக்கொண்டிருக்கின்றோம். என்றைக்கோ ஒருநாள் நாமெல்லோரும் இந்த இலைகளைப் போல சலனமற்று உதிர்ந்து போகப்போகின்றோம் என்பது தெரிந்தாலும், ஏன் இழப்புக்கள் இவ்வளவு துயருடையதாக இருக்கின்றது. அவற்றை அவ்வளவு எளிதாய்க் கடந்துபோக முடியாதிருக்கின்றது? நாம் என்றுமே பிறர் மீது பிரியம் வைக்க ஆசைப்படும் எளிய மனிதர்கள் போலும். அதுவே நம்மைக் கதகதப்பாக்கி வாழ்வை சலிப்பின்றி வாழ வைக்கும்  என்று நினைப்பவர்கள் போலும். ஆகவேதான் நாம் பிரியம் வைக்கும் மனிதர்கள் இல்லாமற்போகும்போது நம்மில் ஒருபகுதியை இழப்பதாய் உணர்கிறோம் போலும்.

ஆளுமைகள் மறையும் போதுமட்டுமல்ல 'காற்றில் கலந்த பேரோசை' . நமக்குப் பிடித்தமான பிரியமான மனிதர்கள் கரைந்துபோகும்போது அது கூட நமக்குக் 'காற்றில் கலந்த பேரோசை'தான் அல்லவா?

(Sep,17, ,2013)