கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழர், முஸ்லிம்கள்: சில குறிப்புகள்

Friday, June 20, 2014

-சிறு எதிர்வினை-

1.
இலங்கையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்ற இவ்வேளையில் தமிழ் X முஸ்லிம் விவாதங்கள் நடைபெறுவதையும் அதனால் மனம் நொந்து சில முஸ்லிம் நண்பர்கள் எழுதியிருக்கின்ற சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இந்த விவாதம்(கள்) தொடங்கிய அடி நுனி எதுவும் தெரியாதபோதும் (அவற்றைத் தேடிப் போக விருப்பமுமில்லை) சிலவற்றை எழுதிவிட விரும்புகிறேன்.

நம் தமிழ்ச்சூழலில் கருத்துக்களை உதிர்ப்பதென்பது -அதுவும் முக்கியமாய் அரசியல் சார்ந்து- மிகவும் எளிதானது. அவ்வாறு அரைகுறையுமாய் எழுதுபவர்களே பின்னாட்களில் அரசியல் ஆய்வாளர்களாகவோ அல்லது ஊடகங்களில் எளிதில் நுழைந்துவிடக்கூடியவர்களாகவோ அல்லது ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுபவர்களாகவோ ஆகிவிடுவது இன்னொரு துரதிஷ்டம்.

இவ்வாறான அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்களில் அநேகர் இரண்டு வகையான அரசியல் எழுத்து இருப்பதைக் கூட அவ்வளவு எளிதில் உள்வாங்குவதில்லை. ஒன்று, ஒரு பிரச்சினையிற்கான உடனடி எதிர்வினை. மற்றது நிதானமான ஆய்வு வகையிலான வரலாற்று, கலாசாரப் பின்னணியை உள்ளடக்கிய எழுத்துவகை. ஆனால் நம் தமிழ்ச்சூழலை உற்றுப்பார்க்கும் ஒருவர் அரசியல் கட்டுரைகள் என்றெழுதப்படும் அநேகம் உடனடி எதிர்வினை வகையைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறான உடனடி எதிர்வினைகளையே அரசியல் ஆய்வுக் கட்டுரைகளாகத்தான் அநேக தமிழ் ஊடகங்கள் பிரசுரித்தபடியுமிருக்கின்றன.

இப்போது இலங்கையில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றபோது நாம் அனைவருமே உடனடி எதிர்வினைகளையே செய்யவேண்டியவராகின்றோம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அங்கே நிலைமை கட்டுக்கடங்காமலும், உயிர்ச்சேதம் இன்னும் ஏற்படப்போகின்றதோ என்ற பதற்றத்துடன் நாம் தோழமை உணர்வோடு ஒன்று சேர வேண்டியவர்களாகின்றோம்.

2.

முஸ்லிம் மக்களுக்கு தமிழர்களாகிய நாம் செய்த கொடுமைகள் வரலாற்றுப் பக்கங்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. முஸ்லிம்களை நாம் 'அந்நியராக' அவர்களின் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, அவர்களைப் பார்த்து நீங்கள் தமிழர் என அடையாளப்படுத்த விரும்பாதவர்கள் என்ற குரலை இப்போதும் கேட்க வேண்டியது என்பது எவ்வளவு அவலம். 'தமிழர்கள்' என்ற அடையாளத்திற்குள் இருந்தவர்களை விலத்தி/விலக்கிவிட்டு இப்போது தமிழர்கள் என்ற அடையாளத்திற்குள் வாருங்கள் என அழைப்பது, சிங்களவர்கள், நீங்கள் ஏன் தமிழர்களென பிரிந்து நிற்கின்றீர்கள், வாருங்கள் அனைவரும் இலங்கையர் என ஒற்றுமைப்படுவோம் எனச் சொல்வதற்கு நிகர்த்தது. இலங்கை முஸ்லிம்களை தமிழர் என்ற அடையாளத்திற்குள் மீண்டும் வர அழைப்பவர்கள், சிங்களப் பேரினவாதம் செய்த அனைத்தையும் மறந்துவிட்டு இலங்கையர் என்ற ஒற்றையடையாளத்திற்குள் தமிழர்களாகிய நாம் நுழைய முடியுமா என யோசித்தால் இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதில் எழுப்பவே முடியாது.

நாம் அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தமிழராய் நின்று அங்கு நடக்கும் கொடூரங்களுக்கு எதிர்த்துக் குரல்களை எழுப்பலாம் அல்லது வேண்டுமானால் மவுனத்தைத் தேர்ந்தெடுத்துக் கூட கொள்ளலாம். அதை விடுத்து முள்ளிவாய்க்கால் காலத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்புவது, உயிர்களும் உடைமைகளும் ஊசலாடிக்கொண்டிருக்கும் பதற்றமான கணத்தில் மனிதாபிமானம் அற்றது. முள்ளிவாய்க்கால் காலத்தில் போர் நடைபெற்ற வன்னி தவிர்ந்து தமிழர்கள் கணிசமாய் வாழ்ந்த யாழ் மாவட்டத்திலோ அல்லது வேறு பிரதேசங்களில் இருந்து கூட எதிர்ப்புக்குரல் எழுப்ப முடியாது அல்லவா இருந்தது? அவ்வாறு மெளனம் காத்ததற்கு அங்கிருந்தவர்க்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்ததுபோல, தமிழர்களுக்காய் குரல் கொடுக்க விரும்பியபோதும் இலங்கை முஸ்லிம்களுக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கலாம் என்பதைக்கூட ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது?

மேலும், முஸ்லிம்களுக்கு தமிழர்களாகிய நாம் பல அநீதிகளைச் செய்துவிட்டு எமக்கான அநீதியிற்கு நீங்கள் குரல்கொடுக்கவில்லை என்பது எவ்வளவு சுயநலமாக இருக்கும்? நாம் இதுவரை கடந்த காலங்களில் செய்த விடயங்களுக்காய், மீளிணக்கம் செய்ய என்ன செய்திருக்கின்றோம் என்று ஆறுதலாக யோசித்திருக்கின்றோமா? அந்நியராகவும் துரோகிகளாவும் துரத்தியடிக்கப்பட்ட அவர்களுடனான மீளிணக்கம் என்பது கூட எவ்வளவு நெடிய பாதையென்பதை அறிந்து, தொடர்ந்து நாம் நல்லிணக்கச் சமிக்ஞைகளை அனுப்ப வேண்டியவராய் அல்லவா இருக்க வேண்டும். அந்த சமிக்ஞைகளை ஏற்றுக்கொள்வதற்கும் விலத்துவதற்கும் நம்மால் ஒடுக்கப்பட்ட அவர்களுக்கே தெரிவு இருக்கிறதே தவிர நமக்கில்லை என்பதையும் அறிந்தாகவும் வேண்டும்.

உதாரணமாக, எதிர்காலத்தில் சிங்களச் சமூகம், நடந்தவற்றை மறந்து ஒற்றுமையாக வாழ்வோமென தமிழர்களை நோக்கி நல்லிணக்கச் சமிக்ஞைகளை அனுப்பினாலும், அவர்கள் மீது நம்பிக்கை வந்து எதிர் நல்லிணக்க சமிக்ஞை அனுப்பும் தெரிவு தமிழர்களுக்கு இருக்கிறதே தவிர சிங்களவர்க்கு இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லை.

அவ்வாறான ஒருநிலையேதான் முஸ்லிம்கள் தொடர்பாய் தமிழர் தரப்பிற்கு இருக்கின்றது என்பதை அறிந்தாக வேண்டும். நடந்தவற்றை மறந்துவிட்டு பழையபடியிருப்போம் என புலிகளோ,சம்பந்தரோ அறிக்கைகளால் மட்டும் சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது. அதற்கப்பால் என்னவிதமான சூழ்நிலைகள் நம்மால் உருவாக்கப்பட்டிருக்கிறதென்று கவனித்தாகவேண்டும். இப்போது முஸ்லிம்கள் சிங்களப்பேரினவாதத்தால் ஒடுக்கப்படும்போது எவ்வித நிபந்தனையுமின்றி முஸ்லிம்களின் பக்கம் நின்று நாம் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறையிற்கு எதிராகக் குரல் கொடுப்பது, அவ்வாறான நல்லிணக்க சமிக்ஞைகளில் ஒன்றுதான்.

முஸ்லிம்களுக்கு இதில் தெரிவிருக்கிறது. தமிழர் தரப்பிலிருந்து நீட்டப்படும் கரத்தைப் பற்றிக்கொள்வதா அல்லது இன்னும் காலம் வரவில்லையென மறுப்பதா என்பது குறித்து. ஆனால் தமிழர்களாகிய நாம் தொடர்ந்து அவர்களுக்காய் தோழமைக் குரல் கொடுப்பதை மட்டுமே செய்யமுடியும். காலம் ஒருநாள் கனியும்போது நாம் எமது வித்தியாசங்களை விளங்கிக்கொண்டு, அருகருகில் இணைந்து சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடலாம் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடாது.

3.
இந்த விடயத்தோடு இன்னொரு தகவலையும் அடிக்கடி பார்க்கின்றேன். தமிழர்களின் தரப்பிலிருந்து தொடர்ந்து அரசோடு இணைந்து நிற்கும் முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பது பற்றியது. தமிழர்களாகிய எமக்கு முஸ்லிம்களோடு தோழமை உணர்வை வளர்ப்பதே முக்கியமே தவிர, முஸ்லிம் காங்கிரசிற்கு அறிவுரை கூறுவது முக்கியமற்றது. இவ்வாறான அறிவுரைகளால், திருப்பவும் நாங்கள் அவர்களை ஆதிக்கம் செய்ய விரும்புகின்றோமா என எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டியவர்களாகின்றோம். முஸ்லிம் மக்கள் தமக்கு எந்தத் தலைமை தேவையெனத் தேர்ந்தெடுக்கட்டும். முஸ்லிம் காங்கிரஸ் மீது நிறைய முஸ்லிம்களுக்கு விமர்சனம் இருக்கிறதென்பதை அவர்கள் பலரின் எழுத்தைப் பார்த்தாலே தெரிகிறது என்பது வேறுவிடயம்.

இதையேன் சொல்கிறேன் என்றால், இந்த எரியும் பிரச்சினையில் நாம் விமர்சனமும் கண்டனமும் செய்யவேண்டியது சிங்களப் பேரினவாதமே தவிர, முஸ்லிம் காங்கிரஸ் அல்ல என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டும். இந் நிகழ்விற்கு எதிர்ப்பாய் எழுதிய சிங்களவர்களின் கட்டுரைகளை வாசித்தபோது அவர்கள் எவரும் முஸ்லிம் காங்கிரசிற்கு அறிவுரை கூறவில்லை. முக்கிய எதிரியான அரசையும், பொதுபல சேனாவையும்தான் குறிவைத்து எழுதுகின்றார்களே தவிர முஸ்லிம் தலைமை குறித்து எதுவும் எழுதி வாசித்தாக நினைவினில்லை.

தொடர்ந்து சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசோடு இணைந்திருப்பதா இல்லையா என்பதை முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்யும் நேரம் வரும். முஸ்லிம் மக்களும் காலமும் அதைத் தீர்மானிக்கட்டும். அதைத் தமிழர்களாகிய நாம் எதைச் செய்யவேண்டுமென அவர்களுக்குச் சொல்லிக் காட்டத் தேவையில்லை. தொடர்ந்து இவ்வாறு இணக்க அரசியல் செய்யும்போது சிலவேளைகளில் பேரினவாத அரசோடு இயங்கும் தமிழ்க்கட்சிகளுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்புத்தான் தங்களுக்கும் எதிர்காலத்தில் நிகழுமென்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணராமலா இருக்கப் போகின்றது

4.
இந்த விடயம் குறித்து மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், இப்போது தமிழர்களாகிய நாம் முஸ்லிம்களுக்கு தோழமைக் குரல் கொடுப்பதும், நிகழும் கொடூரங்களுக்கு எதிராக நம் முழு ஆதரவை முஸ்லிம் மக்களுக்கு நிபந்தனையின்றி வழங்கவேண்டும் என்பதே. இங்கும் நான் அதைச் செய்தேன், நீங்கள் இதைச் செய்தீர்கள் என்றோ அல்லது உங்களுக்கு இது வேண்டும் என்கின்ற சிறுபிள்ளைத்தனமாய் அரசியல் செய்வதைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். இது தமிழர் தரப்பு தன் நல்லிணக்க சமிக்ஞையைக் காட்டுவதற்கு மிக முக்கியமான தருணமாகும். காலம் அவ்வளவு எளிதில் எல்லாப் பொழுதுகளிலும் சந்தர்ப்பங்களை வழங்கிவிடுவதில்லை.

சிங்களவர் சிலருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நமக்கில்லையென்றால் எவ்வளவு வெட்கப்படவேண்டும்.


(ஜூன் 17, 2014, முகநூலில் எழுதியது)

0 comments: