கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தேமாப்பூ குறிப்புகள்

Tuesday, April 21, 2015

The Hungry Ghosts

ஷ்யாம் செல்வதுரையின் 'The Hungry Ghosts' சிங்கள-தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்தவரும் தற்பாலினருமான சிவனின் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. நாவலில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரமும் பிற பாத்திரங்களுடோ முரண்களோடும் அதனால் வரும் பதற்றங்களோடும் சிலவேளைகளில் மூர்க்கத்தோடும் இருக்கின்றன. சிறுவனான சிவன் தன் வாழ்வில் பிறரில் நலங்களுக்காய்த் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலிபீடத்திற்கு முன் வைக்கப்படும் ஒருவனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார். கதையின் முதற்பாகம் 83 இனக்கலவரத்தோடு முற்றுப்பெற, இரண்டாம் பாகம் ரொறொண்டோவில் நிகழ்கின்றது.

ரொறொண்டோவிலிருந்து பிறகு வன்கூவருக்கும், திரும்பவும் இலங்கையிற்கும் என நீளும் நாவலை சுவாரசியமாக வாசித்துக்கொண்டு போகலாம். ஒவ்வொரு பாத்திரமும் தான் தெரிந்தோ தெரியாமலோ இழைக்கும் குற்றங்களுக்கு அடுத்த பிறப்பிலாவது நல்வினை கிடைக்காதா என ஏங்குகின்றன. ஆனால் அந்த ஏக்கங்களும் அதற்காய்ச் செய்ய முயலும் பிரயச்சித்தங்களும் இன்னுமின்னும் குற்றங்களைப் பெருக்குவதை ஒவ்வொரு பாத்திரமும் செய்வதறியாது திகைத்துப் பார்த்தபடியிருக்கின்றன.

ஜேவிபி காலம், புலிகள், சந்திரிக்கா அரசு, யோர்க் பல்கலைக்கழகம், ஸ்காபரோ, மெட்ரோ ரொறொண்டோ என நாம் பரீட்சயம் கொண்ட/கொள்கின்ற பின்னணிச் சூழல் கதையை வாசிக்கும் நம்மை நெருக்கமாய் உணர வைக்கின்றது. ஆனால் தெரிந்த பின்னணியில் தெரியாத கதையை ஷ்யாம் எழுதியிருப்பாரோ எனத் தேடும்போது சிலவேளை ஏமாற்றம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம் தற்பாலினரின் உறவுகள் -முக்கியமாய் புலம்பெயர்ந்த தற்பாலினர்- எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாகவும் அங்கேயும் இருக்கக்கூடிய காதல், பொறாமை, கோபம் பற்றி நுட்பமாகவும் உறவுகள் குறித்துப் பேசும் பகுதிகளும் குறிப்பிடத்தக்கவை.

ஷ்யாம் உறவுகளில் இருக்கும் சிறுசிறு விடயங்களைக் கூட நுண்ணியதாய் அவதானித்து வைக்கும்போது இரசிக்க முடிகின்றது. ஆனால் கதையில் -முக்கியமாய் இலங்கை/புலம்பெயர் வாழ்வு என வாழும் சிவனின் பாத்திரம் - கொஞ்சமேனும் நகைச்சுவை உணர்வில்லாது ஏன் மிகச் சீரியஸாக எப்போதுமிருப்பதாய் வார்க்கப்பட்டிருக்கிறதென்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். முடிவுவரை சுவாரசியமாய் நகரும் நாவல் இறுதியில் சற்று தளம்பினாற் போலிருந்தது. முடிவை வேறு வகையாக முடித்திருக்கலாம் எனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் தவறாது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் எனத் துணிந்து சொல்லலாம்.

A Fine Balance

அண்மையில் வாசித்த ஆங்கில நாவல்களில் A Fine Balance (by Rohinston Mistry) போல பாதித்த நாவல் எதுவுமேயில்லை. எழுத்துக்கள் குறுக்கப்பட்ட மலிவுப்பதிப்பிலே 600 பக்கங்கள் நீள்கின்ற இந்நாவலோடு கடந்த ஒருவாரமாக பயணித்துக் கொண்டிருந்தேன்.இந்தியாவில் 75ம் ஆண்டு எமர்ஜென்சிக் காலப் பகுதியில் நகரும் நாவல். கிராமப்புறங்களில் ஒடுக்கப்படும் தலித்துக்கள், நகரில் மிரட்டப்படும் மத்தியதர வர்க்கம்....என வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வரும் நால்வரின் கதை அல்லது அவர்களின் வாழ்க்கை இடைவெட்டும் புள்ளிகள்.

வெவ்வேறு வாழ்க்கைச் சூழல் எப்படி இவர்களிடையே தொடக்கத்தில் வெறுப்பையும், புரிதலின்மையையும் உருவாக்கிறது என்பதிலிருந்து அவர்களுக்கிடையில் முகிழும் நட்பு வரும் நீண்டு முடிவில் ஒரு பெரும் சரிவை/ அபத்தத்தை நோக்கிப் போகின்றது. இந்திய அரசு /உயர்சாதி வன்முறை, தலித்துக்களிலிருந்து தொடங்கி, இறுதியில் இந்திராவின் கொலையோடு சீக்கியர்களைத் தெருத்தெருவாக கொன்று குவிக்கின்றது வரை பரவுகின்றது என்பதை அறிவதற்காகவேனும் இந்நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும்.

எமர்ஜென்சிக் காலத்தைப் பற்றிக் கொடூரங்களை, ஒரு கொலைகாரன் எப்படி பிறகு சாமியாராக மாறுகின்றான் என்பதை, சாதிக் கொடூரங்களுக்குள் தப்பி வரும் தலித்துக்கள் எப்படி பிச்சைக்காரர்களாக ஆக்கப்படுகின்றார்கள் என்பதை, எல்லா மனிதர்கள் மீதும் பேரன்பு வைக்கின்ற ஒருவன் எப்படி பிறர் மீது நிகழும் அநியாயங்களைப் பார்த்து பின்னாட்களில் தற்கொலை செய்கின்றான் என்பதையெல்லாம் வாசிக்கும்போது பரவும் வெறுமையை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விடமுடியாது.

கிளிநொச்சி - படுவாங்கரை

தீபச்செல்வனின் 'கிளிநொச்சி: போர் தின்ற நகரம்', தீபச்செல்வன் யுத்தம் முடிந்தபின் தன் உறவுகள்/நண்பர்கள்/அயலவர்களைத் தேடிச்செல்கின்ற சம்பவங்களை உருக்கமாய் முன்வைக்கின்றது. அழிவுகளின் போது மட்டுமல்ல அழிவுகளின் பின்னும் வாழ்கின்ற வாழ்வு எவ்வளவு துயரமானது என்பதற்கு இதுவும் சஞ்சயன் எழுதிய 'படுவான்கரையும்' நம் முன் வைக்கப்படுகின்ற சாடசியங்கள்.

சப்வேயில் 'கிளிநொச்சி'யை வாசித்தபோது தானாய் எழுந்த கண்ணீர்த்துளிகளை முன்னால் இருப்பவர்க்கு மறைக்க கஷ்டப்பட்டது ஒருபுறமென்றால் இன்னொருபுறம் இவ்வளவுக்கு அப்பாலும் இனி எதைச் சாதித்து எதைப் பெற்றாலும் இந்நினைவுகளின் 'வடுக்களுக்கு' மருந்திடமுடியுமா என்கின்ற அயர்ச்சியே வந்தது. 'கிளிநொச்சி'யை வாசித்தபோது இன்றைய தீபச்செல்வனை என்னால் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஆனால் அதற்காய் அவரின் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதல்ல அர்த்தம். அவரை இன்னொரு எதிர்முனையில் ஒதுக்கிவைப்பதை விட, சகோதர வாஞ்சையுடன் நமது முரண் உரையாடல்களை அவருடன் தொடங்கவேண்டுமெனவே விரும்புகிறேன்.

The Panic Button

கும் காங்கேசனின் 'The Panic Button' நாவல் எனக்குப் பரிட்சயமான ஸ்காபரோ/டவுன்ரவுன் ரொறொண்டோ/கென்னடி சப்வே போன்ற இடங்களில் நிகழ்வதால் வாசிக்கச் சுவாரசியமாக இருந்தது. ஆனால் கதையென்றால்... அம்மா இரண்டு ஆண்களைக் கஷ்டப்பட்டு வளர்க்கிறார். அப்பா விஸா பிரச்சினையால் 25 வருடங்களுக்குப் பின் இலங்கையிற்கு வருகின்றார் (அதுவரை அவர்கள் தந்தையை நேரில் காணவில்லை என்ற லொஜிக் ஒருபக்கம் இடிக்கிறது). தமையனுக்குத் திருமணம் நடக்கும்போது தம்பிக்கு ஒரு வெள்ளைப் பெண்ணோடு காதல் வருகிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள், அப்பா- மகன் முரண்பாடுகள்.

வாசுகியின் 'Love Marriage'  நாவலைப் போலவே இங்கும் திருமணம் ஒருவகையான 'ஃபான்சியாக' விபரிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த முதல் தலைமுறையின் இளையவர்களின் வாழ்விலும் மரபுரீதியான திருமணம் முக்கியமாய் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் என்ன பிரச்சினையென்றால் அவர்கள் நினைப்பது/விபரிப்பது போல இத்தகை திருமணங்கள் இயல்பில் இல்லை என்பதுதான். கனடாவில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் பேசிய இளைய தலைமுறையைச் சேர்ந்த சிவகாமிக்கு இருக்கும் 'அடையாளம் தேடல்' குறித்த பிரக்ஞை கூட, கும் காங்கேயனுக்கு இல்லாது ஒரு மேற்கத்தைய பார்வையினூடு கதையைக் கொண்டு செல்லல் அலுப்புத் தரக்கூடியது மட்டும் அல்ல கவலை தருவதும் கூட.

0 comments: