கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இமையத்தின் 'எங் கதெ'

Wednesday, September 23, 2015


ம் தமிழ்ச்சூழலில் நல்ல படைப்புக்கள் கவனிக்கப்படாது ஒதுக்கப்படுவதும், 'சுமாரான' எழுத்துக்கள் உயர்வுநவிற்சியாக்கம் செய்யப்படுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றவைதான். அந்தவகையில் இமையத்தின் 'எங் கதெ' யிற்கு வழங்கப்பட்ட/வழங்கப்படுகின்ற மதிப்பீடுகள் சற்று அதிகமோ எனத்தான் இக்(குறு)நாவலை வாசித்து முடித்தபோது தோன்றியது.

'எங் கதெ' அதற்குரிய பலவீனங்களுடன் ஒரு புதிய வகை எழுத்தை முன்வைத்ததா என்றால் அதுகூட நிகழவில்லை. இவ்வாறான தனியன்களின் குரல்களாக அண்மையில் ஒலித்த 'மஞ்சள் வெயில்', 'கானல்வரி', 'மூன்றாம் சிலுவை' போன்றவற்றிற்கு இருந்த கவித்துவமான/தனித்துவமான நடைகூட 'எங் கதெ' யில் சாத்தியப்படவில்லை. இறுதியில் விநாயகம் அடைகின்ற 'தரிசனத்தை'க்' கூட எஸ்.பொ 50களிலேயே 'தீ'யில் தொட்டுவிட்டார். எப்போதும் ஈழத்தமிழரின் படைப்பென்றால் ஒரளவு அலட்சியமாக இருக்கும் தமிழக வாசகர்க்கு வேண்டுமானால், ஜெயமோகன் 'கன்னியாகுமரி'யில் கூட இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கின்றார் என்று இந்தப்பொழுதில் நினைவுபடுத்திவிடலாம்.

உறவுகளுக்கிடையில் வரும் துயரமாயிருந்தாலென்ன, துரோகமாயிருந்தாலென்ன அது ஆணுக்கும் பெண்ணுக்கும் வலியையும் உளைச்சலையுமே தரக்கூடியவை. அதிலெந்த சந்தேகமும் எழப்போவதில்லை. அதுபோலவே ஒவ்வொருவருக்கும் இந்த உறவுகள் குறித்துச் சொல்ல தனித்துவமான கதைகளும் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதை ஒருவரை குற்றவாளியாக்குவதன் மூலந்தான் நம்முடைய நியாயங்களையோ, ஏமாற்றங்களையோ சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை.

விநாயகத்திற்கு கமலாவுடனான உறவு வரும்போதும் ஊரும் உலகமும் சொல்கின்ற அதே விசமான வார்த்தைகளைத்தான், பின்னர் விநாயகம் கமலா மீது அவநம்பிக்கை உருவாகும்போது, கமலாவின் விம்பம் மீது வீசச் செய்கின்றார். இழந்துபோன உறவுக்காய் காலம் முழுக்க ஏங்கிக்கொண்டிருப்போர் என்று ஒருவகையினர் இருக்கின்றார்கள். அதுபோல உறவொன்றில் இருக்கும்போது வேறு உறவுகளை நாடிப்போகின்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றார்கள். இதற்கு இடைநடுவில், இருக்கும் உறவொன்றே போதுமென்று நிம்மதியடைபவர்களும் நிறையப்பேர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தமக்கான நியாயங்களையும், விருப்பங்களையும் எந்தப் புள்ளியில் நின்றாலும் சொல்லக்கூடியவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் சொல்லும் கதை எதுவாயினும் அதற்கு நியாயமிருப்பினும் அது இன்னொருவரை மிதித்துப்போட்டுத்தான் எழுதவோ/சொல்லப்படுமாயின் அது குறித்து நிறையக் கேள்விகள் எனக்கு வரவே செய்யும். அதுவே எங் கதெ'யை வாசிக்கும்போது தோன்றியது.


உறவுகளில், ஒருவர் எவ்வளவோ நிராகரிப்புக்களையோ, அவமானங்களையோ செய்தால் கூட, திரும்பித் திரும்பி அந்த நபரை நோக்கிச் செல்வதற்கான -வெளியே இருப்பவர்களால் விளங்கிக்கொள்ளமுடியா- காரணங்கள் பலருக்கு இருக்கக்கூடும். ஆனால் அதை விநாயகம் போன்றவர்கள் கமலாவை 'வேசி' என அழைத்துக்கொண்டோ, தன்னை அவர் பாவித்திருக்கின்றார் எனத் திட்டிக்கொண்டோ திரும்பத் திரும்பப் போகின்றபோது வினாயகத்தின் நேசம் எத்தகையதென்ற கேள்விகளே எழும்புகின்றன. அது கமலா எந்தப் பொழுதிலும் விநாயகத்தால் நிராகரிக்கப்படமுடியாதவர் என்பதை விட, சீண்டப்பட்ட ஒரு ஆணின் பழிவாங்கும் உணர்ச்சியே நமக்குத் தெரிகின்றது.

தொடக்கத்திலேயே சமூகத்தால் அவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படாத ஓர் உறவையே வேண்டி நிற்கும் விநாயகம், பின்னாட்களில் கமலா தனக்கான ஒரு தேர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, கமலாவை குற்றவாளியாக்கி வாசகர் முன் வைப்பதன் மூலம் அவர் மீண்டும் பொதுச்சமூகம் எப்படி சிந்திக்குமோ அப்படியே சிந்திக்கப்பார்க்கின்றார். எத்தனையோ ஆண்கள் கமலாவை நேசிக்க விரும்பியபோதும் கமலாவின் தேர்வு விநாயகமாய், ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. அப்படியொரு தேர்வின் மூலமே விநாயகத்தால் கமலாவுடன் நெருக்கமாகிப் பழக முடிகின்றதென்றால், அவ்வாறே கமலா இன்னொரு தேர்வை நோக்கி நகரும்போது அது ஏன் அவ்வளவு தவறாகி விடுகிறது.

மலாவிற்கு தேர்வென்பதே ஒருபோதும் இருக்கவில்லையென்றால், விநாயகம் ஒருபோதுமே கமலாவின் வாழ்விற்குள் நுழைந்தே இருக்கமாட்டார். இந்த முக்கிய புள்ளியை விநாயகம் கண்டடைவதாய் நாவலின் இறுதிப் பகுதி அமைந்திருக்குமானால் நாவல் இன்னும் எனக்கு நெருக்கமாகிவிட்டிருக்கும். எஸ்.பொ 50களில் வைத்த முடிவையே இங்கே முடியும்போது விநாயகம் எடுக்கும்போது இவ்வளவு நேரமும் கமலாவை இந்தளவிற்கு வெறுத்திருக்கவே தேவையில்லை எனவே தோன்றுகின்றது.

ஆண்களாகிய எமக்கு விநாயகத்தின் வாழ்வோடு ஒத்திசைந்துபோகக்கூடிய நிகழ்வுகள் எங்கேயாவது ஒரு காலப்பகுதியில் நடந்திருக்க முடியும். நமக்கு வழங்கப்பட்ட புறக்கணிப்புக்களையும், மெளங்களையும் கண்டு மிகுந்த உத்தரிப்பை நாம் அடைந்திருக்கவும் கூடும். காலம் என்கின்ற அருமருந்தன்ன விடயம் ஆற்றுவதற்கு கைவசம் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், நாம் அவர்கள் மீதான நேசத்தையும் வெறுப்பின் மூலமோ/விஷவார்த்தைகளாலோ அன்றி, நமக்கு அவர்கள் தந்துவிட்ட அருமையான பொழுதுகளின் மூலமே அவர்களை நினைவுகொள்ளல் சாலவும் சிறந்தது.

'நீ யார்கூட வேணுமின்னாலும் இரு. எப்படின்னாலும் இரு. ஆனா உசுரோடு இரு. இதுதான் என் ஆச' என விநாயகம் இறுதியில் வந்தடையும் புரிதலுக்கு அவர் எடுத்துக்கொண்ட பாதைதான் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

நீ தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதைகள் எனக்கு உவப்பானவை இல்லை. ஆனால் எனது நேசத்தின் திசைகள் எப்போதும் உன்னை நோக்கி விரிந்தபடியே இருக்கும். உன்னை நினைவுகொள்வது கூட உன்னை வெறுப்பதாலோ, உன்மீது மூர்க்கம் கொள்வதாலோ அல்ல; உன்னோடு இருந்த இனிமையான காலங்களால் அவற்றை நினைவுகூர்வேன் என விநாயகம் இடைநடுவிலேயே முடிவுசெய்து இறுதியில் இந்த மேற்கூறிய முடிவுக்கு வந்தடைந்திருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?


( நன்றி: கூகுள் தேடல், இமையத்தின் புகைப்படம்)

0 comments: