கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கனடாத் தேர்தல் - 2015

Sunday, October 18, 2015


ருகின்ற திங்கட்கிழமை (Oct 19) கனடாவிற்கான தேர்தல் நடக்க இருக்கின்றது.  தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபோது  என்டிபி (புதிய ஜனநாயகக் கட்சி) முன்னணியில் நின்று, இடையில் வலதுசாரிகளான பழமைவாதக்கட்சியினர் ஓட்டத்தில் முன்னே போக, இப்போது லிபரல் கட்சியினர் முன்னணியில் நிற்பதாய் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. கருத்துக்கணிப்புக்கள் நடத்தும் நிறுவனங்கள், அவர்கள் சாம்பிள்கள் எடுக்கும் புவியியல் பின்னணி என்பவறிற்கும் ஓர் அரசியல் உண்டென்பதையும் ஒருபக்கம் நினைத்துக்கொள்வோம்.

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது (வாக்களிக்காமல் விடுவதும் கூட) அவரவர் உரிமை என்பதால் எவரையும் இந்தக் கட்சியிற்குத்தான் வாக்களியுங்கள் என வற்புறுத்த முடியாது. ஆனால் யாரைத் தேர்ந்தெடுத்தால் எமக்குக் குறைந்த பாதிப்பு என்றவகையில் சிந்தித்து வாக்களியுங்கள் என வேணடுமானால் சொல்லலாம்.


மக்கு எப்போதும் தங்குவதற்கு ,வாடகை கொடுத்து இருக்கக்கூடிய இடமொன்று இருப்பதோ அல்லது  (மோட்கேஜ் கட்டியபடி சொந்தமாகிக்கொண்டிருக்கும்) ஒரு வீடு இருப்பதோ என்பது நல்ல விடயமே. நாளை ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்குவதோ அல்லது இருக்கும் வீட்டை விட சொகுசான வீட்டைத் தேடிச் செல்வதில் கூட தவறில்லை. அதை ஒருவரின் தனி விருப்பமாக எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்சனையுமில்லை.

ஆனால் அதேசமயம் எமக்குத் தங்குவதற்கு ஒரு வீடு இருப்பது என்பதற்காய் எல்லோரும் அப்படித்தான் வாழ்கின்றார்கள் என நினைப்பதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. இன்னமும் நிறையப்பேர் ஒரு ஒழுங்கான தங்குமிடம் இல்லாது அலைபவர்களாகவும், தமது வருமானத்தில் பெரும்பாகத்தை வீட்டு வாடகைகளுக்குக் கொடுப்பவர்களாகவும், அவர்களின் வளரும் பிள்ளைகள் வறுமைக்கோட்டிற்குக் கீழாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

கடந்த மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்ற பழமைவாதக் கட்சி வருமானம் குறைந்தவர்கள் வசிக்கக்கூடிய பொது வீட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தபடியே வந்திருக்கின்றது. அவ்வாறான வீடுகள் தேவையான மக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருந்தபோதும் அவர்களின் தேவையை நிவர்த்தி செய்யப்படாமலே இருக்கின்றது. இன்னமும் 90,000 மக்களுக்கு மேலே இந்த வீடுகளுக்கான 'காத்திருப்புப் பட்டியல்களில்' இருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. அதுபோலவே வீடற்றவர்களுக்கான தங்குமிடல்களையும் பல்வேறு இடங்களில் இந்த அரசு மூடியிருக்கின்றது. ஆகவே நமக்குத் தங்க ஓரிடம் இருக்கின்றது என்பதற்காய், மற்றவர்களுக்கும் இடமிருக்கின்றதென எண்ணாது, நமக்கு சிறுவயதில் சொல்லித்தந்த ஒரு மனிதனுக்கு அவசியமான உணவு/உடை/உறையுள் என்ற அடிப்படை வசதிகளாவது சக மனிதர்களுக்கும் இருக்கின்றதா என சற்று யோசிப்பதில் தவறிருக்காதெனவே நினைக்கின்றேன். அதை வழங்கக்கூடிய, அந்த மக்கள் மீது அக்கறையுள்ள ஓர் அரசைத் தேர்ந்தெடுங்கள் எனச் சொல்ல வருகின்றேன்.

இதேபோன்று, நாம் உழைத்துக்கொண்டிருப்பவர்களாய் இருப்பின் நமது சம்பளம் எவ்வளவானாலும் இருக்கட்டும். ஆனால் அடிப்படைச் சம்பளம் (ரொறொண்டோவில்)  $11.25/hr இருக்கின்றது. அதை என்டிபி கட்சி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் கனடா முழுவதற்குமான அடிப்படைச் சம்பளமாக $15.00/hr  வரும் வருடங்களில் உயர்த்துவதாய்க் கூறுகின்றனர். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு முதலாளித்துவ நாடு. ஆகவே நமது ஆசைகளை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டிருப்பார்கள். கனவுகள் எட்டுந்தொலைவில்தான் இன்னுமின்னும் கடுமையாய் உழை என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறான கனவுகளைப் பின் தொடர்ந்து செல்கின்றவர்களை அவர்களின் சுயவிருப்பு என்ற பெயரில் ஏற்றுக்கொள்வதிலும் பிரச்சினையில்லை. ஆனால் அதேசமயம் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யமுடியாதவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

மேலும் புதிய குடியேற்றவாதிகளான நாமெல்லோரும் அடிப்படைச் சம்பளத்திலேயே வேலை செய்தவர்களாகவும்(செய்பவர்களாகவும்) இருந்திருக்கின்றோம். மாணவராக இருக்கும்போதே 17/18  வயதில் வேலை செய்யத்தொடங்கிய என்னைப் போன்றவர்களுக்கும் இதே அடிப்படைச் சம்பளமே வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போதும் நிலைமை மாறவில்லை அப்படியே இருக்கின்றது. ஆகவே அடிப்படைச் சம்பளத்தைச் சற்று உயர்த்தி எல்லோருக்கும் கொடுப்பதில் நாமெதையும் இழக்கப்போவதில்லை. அவ்வாறு அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தச் செய்யும் கட்சிகளுக்கு எமக்கு வாக்களிப்பு கூட நமது ஜனநாயக் கடமைகளில் ஒன்றெனச் சொல்லலாம்.



ன்னொரு முக்கிய விடயம், மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும்போது இருக்கும் கற்றலுக்கான செலவு. ஒவ்வொரு வருடமும் அது உயர்ந்து உயர்ந்து வானை முட்டுமளவிற்குச் செல்கின்றது. அதைவிட நாம் படிப்பதற்காய் எடுக்கும் கடனைத் திரும்பிக் கட்டத்தொடங்கும்போது கடன் தந்த அரசு, அதற்குப் பெரும் விகிதத்தில் வட்டியையும் வசூலிக்கின்றது. வாங்கிய கடனை திரும்பியளிப்பதில் எந்த மனஞ்சுணங்கலுமில்லை. ஆனால் அந்த வட்டி பிறகு குட்டிப் போட்டு வாங்கிய கடனுக்குக் கிட்டவாகக் கூட சிலவேளைகளில் வந்துவிடுகின்றது.

உண்மையில் இதன் நிமித்தமே ஒருகாலத்தில் மேற்படிப்புப் படிக்க விரும்பியபோது இன்னுமின்னும் கடனைக் கூட்டிச் செல்லவேண்டுமா என்ற சோர்வில் படிப்பதைத் தவிர்த்திருந்தேன்.  புதிய ஜனநாயக் கட்சி, படிப்பிற்காய்த் தரும் கடனுக்காய், அறவிடப்படும் வட்டியை தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்குள் இல்லாமற் செய்வோம் எனக் கூறுகின்றார்கள். அது நல்ல விடயம். லிபரலும், புதிய ஜனநாயக்கட்சியினரும் மாணவர்களுக்காய் மில்லியன்கணக்கில் புதிய மானியங்களை (Grants) உருவாக்குவதாய்ச் சொல்கின்றார்கள்.

பழமைவாதக் கட்சியினருக்கு இதுகுறித்து அவ்வளவு அக்கறையில்லை. அவர்களுக்கு கனடாவில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களைப் போல பணக்காரர்கள் என்று நினைப்பு. ஒன்றை மட்டும் அவர்கள் சொல்கின்றார்கள், இதுவரை 60 வாரப்படிப்பிற்கு அரசு  கடன் கொடுத்ததை 34 வாரப் படிப்பிற்கும் கடன் எடுக்க உதவி செய்வோம் என்கின்றார்கள். ஆக இருக்கின்ற கடனை இன்னும் எப்படி நீட்சிக்கலாம் என்பது அவர்களின் கொள்கையாக இருக்கின்றது.

இன்று முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாய் கனடாவில் இருப்பது பூர்வீகக்குடிப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் காணாமற்போவது. இது குறித்து எந்தவிதமான அக்கறையையும் இப்போதிருக்கும் பழமைவாதக் கட்சி எடுக்கவில்லை. புதிய ஜனநாயக் கட்சியும், லிபரலும் தாம் ஆட்சியிற்கு வந்தால் உடனேயே ஒரு விசாரணைக்குழுவை அமைப்போம் எனச் சொல்கின்றார்கள்.  பூர்வீகக்குடிகளின் நிலத்தையே நாமெல்லோரும் பகிர்ந்துகொண்டிருக்கின்றோம். அவர்களின் இன்றைய நிலைமையோ மிகுந்த கவலைக்கிடமானது. கடந்தகால வெள்ளை மேலாதிக்கம் எப்படி அவர்களை திட்டமிட்டு ஒடுக்கியதென்று எளிய உண்மையை விளங்கிக்கொண்டால் இன்று அவர்கள் கேட்கும் அடிப்படை உரிமைகள், அவர்கள் வாழும் நிலஞ்சார்ந்த இடங்களை இனியேனும் ஆக்கிரமிக்காதல் என்பவற்றை விளங்கிக்கொள்ளும் ஓர் அரசு நமக்கு வேண்டியதாயிருக்கின்றது.

சூழலியல் நம் எல்லோருக்குமான பொதுவான பிரச்சினை. பழமைவாதக் கட்சியினருக்கும் சூழலியலுக்கும் எட்டாப் பொருத்தம். கனடாவிற்குள் நிலத்தினூடாக போகும்/ போகப்போகும் எல்லா பெரிய எண்ணெய்க் குழாய்களையும் கிறீன் கட்சி நிராகரிக்கின்றது. என்டிபியினரும்  பெரும்பாலும் கிறீன் கட்சியைச் சார்ந்தே நிற்கின்றனர். லிபரல் கட்சியினர் தேர்ந்தெடுத்த சில திட்டங்களை மட்டும் எதிர்க்கின்றனர். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல, நாம் மட்டும் இந்தப் பூமியில் வாழ்ந்தால் போதாது, எமக்கு அடுத்த சந்ததிகளைப் பற்றியும் கொஞ்சம் யோசிப்பதோடு மட்டுமில்லாது எல்லோருடனும் சேர்ந்து இப்பூமியை இயன்றவரை பாதுகாப்போம்.


றுதியில் எனது அரசியலை பொதுவில் முன்வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கங்களுமில்லை. எனக்கு இங்கே வாக்களிக்கும் உரிமை கிடைத்தபோது முதன்முதலில் லிபரல் கட்சியிற்கு வாக்களித்திருக்கின்றேன். அதற்குப் பிறகு எனது வாக்கு எப்போதைக்கும் புதிய ஜனநாயக் கட்சியினருக்கே இருந்திருக்கின்றது. நான் கடந்தமுறை இருந்த தொகுதியில் ஒரு தமிழர் போட்டியிட்டபோதும் அவர் பழமைவாதக் கட்சியினராக இருந்ததால் -இப்போது கனடாத்தேர்தலில் நாகரீகமாகப் பேசப்படும் இனத்துவ வாக்கையும்- நிராகரித்திருக்கின்றேன்.

இடைக்கிடை grass roots movement ஆன  No One Is Illegal மேதின ஊர்வலங்களில் முன்வைக்கும் 'our votes on the streets'  என்பதை ஏற்றுக்கொண்டு எந்தக் கட்சியிற்கும் எனது வாக்கில்லை என நிராகரித்துமிருக்கின்றேன். சிலவேளைகளில் கட்சியின் கொள்கைகள் ஒரளவு உடன்பாடாக இருந்தாலும், நானிருந்த தொகுதியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்(கள்) சரியில்லை என்பதால் வாக்களிக்காதும் இருந்திருக்கின்றேன்.

சோகம் என்னவென்றால் நான் கனடாவிற்கு வந்ததன்பிறகு கனடா பொதுவிற்குமோ அல்லது (என்) மாகாண அளவிலோ நான் நிறையத்தடவைகள் வாக்களித்த புதிய ஜனநாயக் கட்சியினர் ஒருபோதும் வென்றதே இல்லை என்பதுதான்.

ஆனாலென்ன நம்பிக்கைதானே வாழ்க்கை. தோற்றுக்கொண்டிருப்பதில் கூட நிறையக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா?

இலுப்பைப்பூ குறிப்புகள்

Wednesday, October 14, 2015

Tracks & Wild
Into the Wild நூலாகவும், பின் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டபின் வந்த ஒரு ஆவணப்படத்தில் (Back to the Wild ), 'Chris was so close to become a great adventurer' என ஒருவர் கூறுவார். உண்மையில் கிறிஸ், அலாஸ்காவிலிருந்த அந்த ஆற்றைக் கடந்திருந்தால், -பட்டினியால் இறந்திருக்காது- தனது சாகசப் பயணத்தின் கதையை எங்களுக்கு விரிவாகக் கூறியிருப்பார். Into the wild ஐப் போல Tracks மற்றும் Wild என பயணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூற்களை வைத்து, இரண்டு திரைப்படங்கள் கடந்த வருடங்களில் வெளிவந்திருந்தன. இந்த இரண்டிலும் இருக்கும் விசேட அம்சம் என்னவென்றால், இந்த சாகசப்பயணங்கள் பெண்களால் தனித்துச் செய்யப்பட்டிருப்பது.

Tracks ஆஸ்திரேலியாப் பாலைவனங்களினூடாக இந்துசமுத்திரத்தின் கரையைத் தேடி கிட்டத்தட்ட 9 மாதங்களாய் 1977ல் ஒரு பெண்ணால் செய்யப்பட்ட 2700 கிலோமீற்றர்கள் நீண்ட சாகசப் பயணம். மூன்று ஒட்டகங்களுடனும், ஒரு நாயின் துணையுடனும் செய்யப்பட்ட பயணம் அது. ஒட்டகங்களே இல்லாத ஆஸ்திரேலியாவில் இந்தப் பெண் எப்படி ஒட்டகங்களைப் பெறுகிறார் என்பதும், எப்படி அவற்றை நீண்ட பயணங்களுக்காய் பழக்குகின்றார் என்பதும் சுவாரசியமானது.

PCT எனப்படும் Pacific Crest Trail, மெக்ஸிக்கோவினதும் கனடாவினதும் எல்லைகளைத் தொடும் அமெரிக்காவிலிருக்கும் நீண்ட ஹக்கிங் பாதை. 'Wild' என்று பெயரிடப்பட்டதிற்கிணங்க பயணம் மட்டுமல்ல, இந்தப் பெண்ணின் வாழ்வில் நடக்கும் விடயங்கள் பலவும் கூட 'wild' ஆகவே இருக்கின்றன. சிறுவயதில் வன்முறையான தகப்பனைப் பார்ப்பதிலிருந்து, பிறகு மிக நெருக்கமாயிருக்கும் தாயாரை புற்றுநோயிற்குப் பலிகொடுப்பது, அதன் தொடர்ச்சியில் அதீத போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல், எண்ணற்ற அந்நியர்களுடான உடலுறவென ஒரு தறிகெட்டலையும் வாழ்விலிருந்து சட்டென்று ஒரு மீட்சிக்காய் இந்தப் பயணத்தை இப்பெண் மேற்கொள்கின்றார்.

Into the Wild, Tracks, Wild போன்றவற்றைப் பார்க்கும்போது நாம் செய்த பயணங்களோ அல்லது நாம் செய்யவேண்டுமென கற்பனை செய்திருக்கும் பயணங்களோ ஒன்றுமேயில்லையெனப் போலத்தோன்றுகின்றது.


The festival of insignificance

ந்த நாவல் தொடங்குமிடம் மிகவும் சுவாரசியமானது. தெருவில் நடந்துபோகும் பெண்ணின் தொப்புளைப் பார்த்து அதிலிருந்து ஆராய்ச்சி தொடங்குகின்றது. பெண்ணின் மார்பை, பிருஷ்டத்தை, தொடையை, தொப்புளை இவற்றில் எதை ஒருவன் முதலில் பார்க்கப் பிரியப்படுகின்றானோ, அவனின் காமம் எப்படியென அலசி ஆராயப்படுகின்றது. பின்னர் நாவலின் இடையில் தேவதைகளுக்கு தொப்புள் இல்லையெனச் சொல்லப்படுகிறது. அவ்வாறான ஒரு தேவதையே ஏவாள் எனவும் அவளுக்கு ஒருபோதும் தொப்புளே இருந்திருக்காது என ஒரு உரையாடலில் வரும். எனெனில் அவள் எவரினதும் தொடர்ச்சியில்லை. நேரடியாக 'ஆக்குபவரினால்' உருவாக்கப்பட்டவள். ஆனால் ஏவாளுக்குப் பிறகு பிறந்த எல்லோருமே தொப்புள்(கொடி) என்ற இணைப்பின் மூலம் காலங்காலமாய் தொடர்புபட்டிருக்கின்றோம். ஆகவேதான் எம்மால் எந்த வரலாற்றின் நினைவுகளிலிருந்தும் எளிதாய்த் தப்பிவிடமுடிவதில்லை என மிலன் குந்தேரா எழுதிச் செல்வார்.

எனினும் ,மிகச் சிறந்த படைப்பாளிக்கும் வீழ்ச்சியுண்டு. 'The Festival of Insignificance'ன் முக்கியத்துவத்தை முதல் வாசிப்பில் தவறவிட்டிருக்கலாமென இரண்டாந்தடவை வாசித்தபோதும், மிலன் குந்தேராவின் எழுத்தின் சரிவே இந்நாவலிற்குள் தெரிந்தது. 86 வயதாகிய மிலன் குந்தேராவின் இந்த நாவலின் முதற் பக்கங்களை வாசிக்கத் தொடங்கியபோது, இளமை ததும்பும் ஒரு கதையை மார்க்வெஸ் பிற்காலத்தில் 'Memories of My Melancholy Whores' எழுதியபோல எழுதப்போகின்றார் என்றே எதிர்பார்த்தேன்; நினைத்தது தவறாகிப்போன நாவலிது.

The Girl in the Spider's Web

Stieg Larsson பற்றி அறியாதவர்கள் அவ்வளவு இருக்கமாட்டார்கள். 'The Girl with the Dragon Tattoo', 'The Girl Who Played with Fire','The Girl Who Kicked the Hornets' Nest' என்கின்ற மூன்று நாவல்களும் மில்லியன்கணக்கில் விற்கப்பட்டதும், சுவிடிஷில் அவை படமாக்கப்பட்டு, இறுதியில் ஹொலிவூட்காரர்களாலும் The Girl with the Dragon Tattoo' ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு அண்மையில் வெளிவந்திருந்தது.

அநேக எழுத்தாளர்கட்கு நிகழ்வதுபோல Stieg Larsson 2004ல் இறந்தபின்னே அவரின் துப்பறியும் திகிலான நாவல்கள் பிரபல்யம் பெற்றன என்பது துரதிஷ்டவசமானது. இப்போது இந்நாவல்களின் தொடர்ச்சியாக இன்னொரு எழுத்தாளரான David Lagercrantzஐ கொண்டு 'The Girl in the Spider's Web' எழுதப்பட்டு இம்மாதம் வெளிவருகின்றது. ஏற்கனவே Stieg தனது 50வது வயதில் மரணமுற்றபோது நான்காவது நாவலில் 200 பக்கங்கள்வரை எழுதியுமிருந்தார்.

புதிய புத்தகத்திற்கான முன்னோட்டமே இது. நாவலிலிருந்து 2 அத்தியாயங்களை புத்தகங்களாக்கி தந்தும் கொண்டிருந்தனர். David Lagercrantz இம்மாதம் ரொறொண்டோவிற்கு வரவுமிருக்கின்றார். நாவலின் முக்கியபாத்திரமான Lisbeth Salander போல எல்லாப் பெண்களும் தங்களை உருமாற்றியிருந்தனர். கறுப்பு நிற லெதர் ஜாக்கற், நீண்ட காலுறையுடன், காதிலும் மூக்கிலும் என கூர்மையான ஆபரணங்களையும் அணிந்துமிருந்தனர். நண்பொருவர் அவர்களுக்கருகில் போய் நின்று என்னைப் படங்காட்டச் சொன்னார். ஏற்கனவே சுவிடீஷில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படங்களைப் பார்த்து மிகத் தீவிரமான வன்முறையாய் இருக்கிறதே என இடைநடுவில் பார்ப்பதையே பயத்தில் கைவிட்டவன் நான். அதையறிந்தபின்னும் இந்தப் பெண்களின் அருகில் போக, அவர்கள் கத்தியையோ, கைத்துப்பாக்கியையோ உருவ என்னுயிரைப் பணயம் வைக்க எனக்கென்ன விசரா என்ன?


னடா வந்த பதினேழாவது வயதில்தான் மைக்கல் ஜாக்சனின் "They Don't Care About Us" என்ற பாடலை முதன்முதலில் கேட்டிருந்தேன். அப்போது முகிழ்ந்திருந்த காதலில் என்னை நேசித்த பெண் ஒரு காஸெட் முழுக்க மைக்கல் ஜாக்சனின் பாடல்களைப் பதிவு செய்து தந்திருந்தார். அந்தக் காதல் சொற்ப காலங்களே நீண்டிருந்தாலும், மைக்கல் ஜாக்சனின் கஸெட் நீண்டகாலமாகவே என் வசமிருந்தது. திரும்பவும் அந்த ஞாபகங்களை 2Cellosன் இந்தப்பாடல் நினைவுபடுத்திவிட்டது. அந்தக் காதலை மட்டுமல்ல, இந்தப் பாடல் ஒளிப்படமாக்கப்பட்ட விதமும், கடந்துவந்துவிட்டேன் என நினைத்தாலும் கடக்கவே முடியாத போர்க்கால நினைவுகளையும் கிளறிவிட்டன.

எங்கோ இருப்பவர்களின் சொகுசான பொழுதுபோக்கான போர் என்ற சதுரங்க ஆட்டத்திற்காய் யார் யாரெல்லாம் பலியாக்கப்படுகின்றனர் எனபதை இந்தப் பாடல் காட்சிப்படுத்துகின்றது. ஒவ்வொரு காய் நகர்த்தலும் நிகழும்போது எங்கோ ஓரிடத்தில் குண்டுகள் வெடிக்கின்றன, நகரங்கள் சுற்றிவளைக்கப்படுகின்றன, துப்பாக்கி முனைகளால் மக்கள் சுவடுகளின்றி அழிக்கப்படுகின்றனர்.

இருண்டகாலங்களில் இசையே வெறுமையாய் மிஞ்சுகின்றது. இங்கேயும் இறுதியில் இசைக்கலைஞர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் அவர்களின் இசை ஒலித்தபடியே இருக்கின்றது. நிகழ்ந்த எதையும் மறக்காமலும், நிகழ்ந்த எல்லாவற்றின் சாட்சியங்களுமாய்...!

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' மற்றும் மலைமகளின் 'புதிய கதைகள்'

Tuesday, October 13, 2015

கிளிநொச்சியிலிருந்த 'அறிவமுது' புத்தகசாலையில்தான் தமிழ்க்கவியின் 'இனி வானம் வெளிச்சிரும்' நாவலையும், மலைமகளின் 'புதிய கதைகள்' தொகுப்பையும் வாங்கி வாசித்திருக்கிறேன். 'இனி வானம் வெளிச்சிரும்' நாவல் தன் பிள்ளைகள் ஒவ்வொருவராய் யுத்தகளத்திற்குப் போவதையும் அங்கு மாள்வதையும் மிகுந்த துயரத்துடன் ஒரு தாயின் பார்வையிலிருந்து விபரிக்கிறதென்றால், மலைமகளின் 'புதிய கதைகள்' போராட்டக் களத்தில் நிற்கும் பெண்ணின் பார்வையிலிருந்து தன் அனுபவங்களைப் பேசுவதாய் இருக்கின்றது.

முக்கியமாய் நம் ஈழப்போராட்டத்தில் பெரும் வகிபாகத்தைப் பகிர்ந்த பெண்களின் பங்களிப்புக்கள் மிகவும் குறைவாகவே பதிவு செய்யப்பட்ட சூழலில் இத்தகைய பதிவுகள் எத்தகை முக்கியத்துவம் என்பதை உணர்ந்தாக வேண்டும். மலைமகளின் புதிய கதைகளில் மட்டுமின்றி, மலைமகள் தொகுப்பாளர்களில் ஒருவராய் இருந்த 'வேருமாகி விழுதுமாகி' யில் கூட களத்தில் நிற்கும் பெண்களின் வெளிக்களம் சார்ந்து மட்டுமின்றி, உடல் சார்ந்த அவதிகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மழைக்காலத்தில் பங்கருக்குள் இடுப்பளவோ/கழுத்தளவோ வெள்ளத்தோடு, பெண்களுக்கு வரும் மாதாந்திர உதிரப்பெருக்கோடு போரிடும் பெண்ணின் நிலையை அவ்வளவு எளிதாய் எவரால் கடந்துபோய்விட முடியும். போரென்பதை வெளியில் மட்டுமின்றி தம் உடலோடும் செய்யவேண்டிய பெண்களின் அனுபவப்பகிர்தல்களும் இந்நூற்களில் தொடர்ந்து வந்தபடியேயிருக்கும். 'வேருமாகி விழுதுமாகி' ஜெயசுக்குறு சண்டையில் பெண்கள் தனித்தியங்கிய களங்களையும் அங்கே அவர்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களையும் மிக விபரமாகப் பதிவு செய்கிறது.

யாழில் நிகழ்ந்த பெரும் இடம்பெயர்வுக்கு முன், சுன்னாகம் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாலிருந்த புத்தகசாலையில்தான் முதன்முதலாக மலரவனின் 'போருலா'வும் புதுவையின் 'நினைவழியா நாட்களும்' வாங்கியது நினைவிருக்கிறது. மலரவனின் 'போருலா' ஒரு கெரில்லா யுத்தம் எப்படி இருக்கும் என்பதைவிட அதற்கான தயார்ப்படுத்தல்கள் எப்படியிருக்குமென்பதை பதிவு செய்த முக்கிய நூல். அவ்வாறே 'வேருமாகி விழுதுமாகி' வாசித்தபோது நாம் கற்பனையில் நினைக்கும் போர்க்களங்கள் அல்ல அவையென்கின்ற யதார்த்தத்தை நம் முகத்தில் ஓங்கி அறையச் செய்திருந்தது.

எப்போதும் ஒருபக்கத்தைப் பார்க்கத் தெரிந்த அல்லது அதை மட்டும் பேசத்துடிக்கும் நாம், கஸ்தூரி,பாரதி, வானதி போன்றவர்களைப் பற்றிப் பேசுவது மிகவும் அரிது. அதிலும் எப்போதும் சொல்வதைப் போல, கஸ்தூரி இன்றிருந்தால் மிகப்பெரும் ஆளுமையாக இருந்திருப்பார் என்பதை அவரது இருபதுகளில் எழுதிய கவிதைகளும்/கதைகளும் சேர்ந்த தொகுப்பான 'கஸ்தூரியின் ஆக்கங்களை' வாசித்தவர்கள் அறிந்துகொள்ள முடியும் (அவர் இறந்தபின்னரே இத்தொகுப்பு வந்ததென நினைக்கிறேன்). ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் என்றெல்லாம் நாம் உரையாடத்தேவையில்லை, ஆகக்குறைந்தது அடையாளங்களை மீறி அவரவர்க்கான இடங்களை நாம் அவரவர்க்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துக்கொள்கிறேன்.

வரும் ஆண்டில், தமிழ்க்கவியின் -இறுதி யுத்தக்களத்தை பின்னணியாகக் கொண்ட - புதினமான 'ஊழிக்காலமும்' (தமிழினி பதிப்பகம்), மலைமகளின் புதியகதைகள் (வடலி பதிப்பகம்) மீள்பதிப்பும் வெளிவருகின்றன (மலைமகளும் இப்போது இல்லை). ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது என்பது எவ்வளவு கடினமானது. மேலும் அதை ஒரு பெண்ணாக இருந்து எதிர்கொள்வது இன்னும் எவ்வளவு கொடுமையானது என்பதை அறிவதற்கேனும் இவ்விரு நூற்களையும் ஏற்கனவே வாசித்தவனென்ற வகையில் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். ஆகக்குறைந்தது யுத்தத்திற்குள் வாழாது அது குறித்து ஆவேசமாய்ப் பேசுபவர்களை ஒருகணமாவது நிதானமாய் நின்று யோசிக்க இவை ஏதோ ஒருவகையில் உதவக்கூடும்.

(2013)