கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வேப்பம்பூ குறிப்புகள்

Tuesday, December 29, 2015

Road Song

சில நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கதையொன்றைப் பின் தொடர்ந்து செல்கின்ற குறும்படம், Road Song . திருவண்ணாமலைக் கோயிலில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த ஒருவர் பழனிக்கு முருகனை வழிபடச் செல்கின்றார். அங்கே சாப்பிடும் பப்பாசியின் உருசியில் மயங்கி, அந்த பப்பாசி மரத்தின் வகையைத் தேடி பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கின்றார். இறுதியில் கேரளாவில் கடற்கரையோரத்தில் அந்த பப்பாசி வகையைக் கண்டுகொள்ளும்போது மகிழ்ச்சியில் பாடுகின்றார். அவ்வாறு அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தவரை அந்தக் கடற்கரையோரம் வந்த போர்த்துக்கேயர் தங்கள் கப்பலில் ஏற்றிச் செல்கின்றனர். அவ்வாறு வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்ட இந்தத் தமிழர் ஸ்பெயினில் ஒரு கிராமத்தில் வாழ்நாள் முழுதும் பாடி இறுதியில் அங்கே இறந்தார், புதைக்கப்பட்டார் என்கின்ற ஒரு ஜதீகக் கதை இப்போதும் ஸ்பெயினில் இருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதையைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் தொடருவதே இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தை இயக்கியது பினு பாஸ்கர். நண்பர் அய்யனாரின் பங்களிப்பும் இதில் இருக்கின்றது. அய்யனாரின் ஊடாக இத்திரைப்படத்தில் தயாரிப்பாள (கனடாவிலிருக்கும்) நண்பரினூடாக எனக்கு இந்த படம் வெளிவந்த காலத்தில் கிடைத்துமிருந்தது. நாங்கள் அப்போது 'சுடருள் இருள்' நிகழ்வை நடத்திக்கொண்டிருந்ததால், அந்த நண்பர் மிகுந்த உற்சாகத்தோடு தொலைவிலிருந்து என் வீட்டுக்குக் கொண்டு வந்து இப்படத்தைத் தந்திருந்தார். அடுத்து வரும் நிகழ்வில் இதைத் திரையிடுவதாகவும் அவருக்கு உறுதியளித்துமிருந்தேன். அவரும் தானும் நிகழ்வில் வந்து பங்குபெறுவதாய்க் கூறுயுமிருந்தார். தொடர்ச்சியாக 'சுடருள் இருளை' நிகழ்த்தமுடியாது நாளாந்த வாழ்க்கையிற்குள் சிக்கித் தவிர்த்தபோது இத்திரைப்படத்தை திரையிட முடியாதும், இடையில் நண்பரொருவரிடம் பார்க்கக் கொடுத்து அது திரும்பி வராமலும் போய்விட்டது.

இப்போது இத்திரைப்படத்தை இன்னொருமுறை பார்க்கும்போது அந்த ஜதீகக்கதையினூடாக ஸ்பெயினில் கிராமங்களிலிருக்கும் மக்களின் வாழ்க்கை அவர்களின் நாட்டாரியல் இசை என பலவற்றினூடாக இத்திரைப்படம் பயணிப்பதாய்த் தோன்றுகின்றது. அன்றைய காலத்தைப் போலவல்லாது இயற்கையின் மீது அளப்பெரிய காதல் வந்துள்ள இன்றைய காலத்தில் அன்று பார்த்ததை விட இப்படம் இன்னும் என்னைக் கவர்கின்றது.

ஒரு விடயத்தைத் தேடிப்போகும்போது அது நிச்சயம் கிடைக்கவேண்டும் என்றில்லை. சிலவேளைகளில் அதன் பொருட்டு நிகழ்த்தும் தேடல்/பயணம் நமக்குள் நாமறியாத வேறு பல திறப்புக்களைச் செய்யக்கூடும். நிதானமும் அமைதியும் கைகூடும்வேளையில் இக்குறும்படத்தின் ஒளிப்பதிவும், இசையும், இவற்றோடு உடன்வரும் தேடலும் உங்களுக்கும் என்னைப் போல நெருக்கமாகக் கூடும்.

Chekele

இசை கொண்டாட்டமானதுதான், அதற்குள் ஒரு வரலாறு இருப்பதும், கடந்தகாலத்தில் வாழ்ந்த சாதாரண மனிதர்கள் ஒரு பாடலினூடாக நினைவுகூரப்படுவது என்பதும் இன்னும் அழகானதுதானல்லவா? Chekele என்கின்ற இப்பாடல் ஒரு பழைய வரலாற்றைச் சொல்கின்றது. வறுமையினாலும், சாதியமைப்பினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் கதை இப்பாடலினூடாக வெளிவருகின்றது. 

தோட்டங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலை செய்து, விளைச்சலின் பெரும்பகுதியை நிலச்சுவாந்தர்களுக்கு உரிய நேரத்துக்கொடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குப் பயந்து சாத்தன் மற்றும் நீலி இருவரும் காட்டிற்குள் ஓடித் தப்புகின்றனர். அங்கே அவர்கள் தம் காதலைக் கண்டு கொண்டு வாழ்வை இனிதாக வாழ்ந்தனர் என்பது இப்பாடலின் பின்னாலிருக்கும் ஒரு கதை.

நாட்டார் பாடல் என்பதால் இதற்கு பல்வேறு வகையான இசை வகைமைகளும் இருப்பதும் தவிர்க்கமுடியாது. செவ்வியல் இசையிலிருக்கும் பாடலை Hard Rock ல் கேட்பதும் வித்தியாசமானதுதான். கொண்டாட்டமான இசையோடு,, மறைக்கப்பட்ட அல்லது எல்லோரும் கேட்க மனம் அவ்வளவு இசையாத ஒரு கதையும் கலக்கும்போது இசைக்கும் ஓர் அரசியல் வந்துவிடுகின்றது.



Joy

David Russellன், 'Silver Linings Playbook', 'American Hustle', 'Fighter' போன்ற படங்கள் எனக்குப் பிடித்தமானவை. அதிலும் 'Silver Linings Playbook', 'American Hustle' போன்றவற்றைப் பார்த்தே ஜெனிபர் லோரன்ஸின் தீவிர இரசிகனாவன். 'Joy' முற்றுமுழுதாக ஜெனிபர் லோரன்ஸின் படம். ஒரு பெண் தன் தனிப்பட்ட வாழ்க்கைத் தத்தளிப்புக்களோடு தான் விரும்பிய ஓரிடத்தை அடைகின்ற முயற்சியே இப்படம். ஏதோ ஒன்று குறைந்ததாய் அல்லது தவறவிடப்பட்டதாய் உணர்ந்த திரைப்படம் என்கின்றபோதும் நம் வாழ்வே அப்படியே கழிந்துகொண்டிருப்பதால் இதில் பெரிதாகக் குறையேதுமில்லை.

கூட வந்த நண்பர் தன் அனுபவங்களுக்கு அருகில் வரும் ஒரு திரைப்படம் என்று நினைவுகூர்ந்தார். முற்றுமுழுதான வெள்ளையின மக்களுக்கு மத்தியில் ஒரு தொழில் தொடங்கியபோது சந்தித்த நெருக்கடிகள் அவருக்கு நினைவு வந்திருக்கலாம். கிறிஸ்மஸ் இரவாயினும் படம் வெளிவருமன்றே இந்தப் படத்தைப் பார்க்கத் தேர்ந்தெடுத்ததே ஜெனிபர் லோரன்ஸிற்காக மட்டுமே.  இந்த வயதிலேயே என்னமாய் நடிக்கிறார் என்று ஒவ்வொரு படத்திலும் அவரை வியந்து பார்த்தபடியிருக்கின்றேன்.

0 comments: