கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கே.ராமானுஜமும், வான்கோவும்....

Thursday, April 28, 2016

சென்ற வருடம் சென்னையில் நின்றபோது 'ஆதிமூலம்' நினைவாக நடந்த நிகழ்விற்கு 'ஸ்பேசஸிற்கு'ப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே சி.மோகன் ஓவியர் கே.ராமானுஜம் பற்றி ஒரு நினைவு உரையை 'Mapping Mind and Matter' என்ற தலைப்பில் ஆற்றியிருந்தார். அத்துடன் ராமானுஜடன் படித்த/தெரிந்த பல ஓவியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அன்றைய நிகழ்வில் நடேஷ், தட்சிணாமூர்த்தி, டக்ளஸ், ட்ராஸ்கி மருது போன்றவர்களை கண்ட உற்சாகத்திலும், அலைகள் தழுவி வந்த இதமான இரவுக்காற்றாலும் முழுதாக அமிழ்ந்து சி.மோகனின் உரையைக் கேட்கமுடியவில்லை. நல்லவேளையாக, அந்த உரையை சிறுபுத்தகமாகவும் நிகழ்விற்கு வந்தவர்களுக்கு அச்சிட்டுத் தந்திருந்தார்கள். இப்போது ஆறுதலாக வாசிக்க, எனக்கு ஒரளவு தெரிந்த ராமானுஜம் இன்னும் நெருக்கமாகிப்போகின்றார்.
ராமானுஜத்திற்கும் வான்கோவிற்கும் இடையிலான ஒற்றுமைகளே எனக்குள் விரியத்தொடங்கின. வான்கோ போலவே ராமானுஜமும் மனப்பிளவிற்குள் ஆளானவர். வான்கோ போலவே ராமானுஜத்திற்கும் பாடசாலைப் படிப்பு பிடித்ததில்லை. ராமானுஜம் இடை நடுவில் பாடசாலையிலிருந்து விலகி ஓவியக்கல்லூரியில் சேர்கின்றார். தனித்தும், அதிகம் பேசாதவராகவும் ராமானுஜம் இருந்திருக்கின்றார். வான்கோவிற்கு தியோ இருந்ததுமாதிரி, ராமானுஜத்தின் திறமையைக் கண்டுபிடித்தவர் கே.பணிக்கர். ஆகவேதான் வீட்டால் புறக்கணிக்கப்பட்டு தெருக்களில் ஓரிடமில்லாது அலைந்து திரிந்த ராமானுஜத்தை, பணிக்கர் சோழமண்டலத்திற்குள் இருத்துகின்றார்.

வியம் வரைவதே அக/புற உலகினுள் இருந்து தப்புவதற்கு ஒரேயொரு வழியாக இருவருக்கும் இருந்திருக்கின்றது. வான்கோவின் ஓவியங்களை ஆம்ஸ்டடாமில் 'வான்கோ மியூசியத்தில்' நேரடியாகப் பார்த்தபோது பல விடயங்களை வான்கோவின் ஓவியங்களுக்கு அப்பால் அறிய முடிந்திருந்தது, வான்கோ தான் வரையும் ஓவியங்களை வீட்டின் முன்னால் பிறருக்கு காட்சியிற்கு வைப்பதைப் போல, ராமானுஜமும் ஓவியக்கல்லூரியில் தன் அறையின் முன் வைத்திருக்கின்றார். அவ்வப்போது வரைந்த ஓவியங்களை உணவு போன்ற நாளாந்த விடயங்களை மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்து தம் தேவைகளை இருவரும் நிறைவேற்றியுமிருக்கின்றார்கள்.

அதேபோல வான்கோ தான் வரையும் தாள்களை ஒரளவு ஈரமாக்கி வரைவது போலவே, ராமானுஜமும் தாள்களை ஈரமாக்கி காயமாக்கி பிறகு மெல்லிய ஈரத்துடன் தன் ஓவியங்களை வரைந்திருக்கின்றார். இருவரும் மனிதவுருவங்களை வரைவதிலும் ஆர்வமாய் இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் உருவாக்கிய ஓவியங்கள் பல கனவுநிலையில் இருப்பவை. சிலவேளைகளில் சாதாரண மனிதமனங்களால் அவர்களின் எல்லைக்கு சிறகடித்துப் பறக்கமுடிவதும் அவ்வளவு எளிதாக இருக்காது. அதேபோல இருவருக்குள்ளும் பெண் பற்றிய ஏக்கம் ஆழமாகவும், அதேவேளை அந்த நெருக்கம் அவ்வளவு கிடைக்காதும் தவிர்த்தவர்கள்.

இன்று பல லட்சங்கள் மதிப்பிருக்கும் ராமானுஜத்தின் ஓவியங்கள் அவரிருந்த காலத்தில் அந்தளவிற்கு மதிப்பிருக்கவில்லை. விற்பனை செய்யப்படவுமில்லை. வான்கோவும் எப்படி அவரின் இறப்பின்பின் பிரபல்யமடைந்தார் என்பதைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை.

மேலும், வான்கோ தன் 37 வயதிலும், ராமானுஜம் தன் 33 வயதிலும் தமக்கான மரணத்தை தற்கொலைகள் மூலம் தேர்ந்தெடுத்தும் கொண்டனர்.

மச்சு பிச்சு என்னும் கனவு நகரம்

Thursday, April 14, 2016

(Machu Pichchu, Peru)
பயணக்குறிப்புகள் - 12


பெருவினுள் இருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்வதென்பது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. கனவுகளில் அநேகம் கைக்கெட்டாத கனிகளாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்ததால் இதுவும் அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒன்றெனவே நினைத்துக்கொண்டிருந்தேன். தற்செயலாய் பெருவிற்குச் செல்லல் சாத்தியமானதும், மச்சு பிச்சுவில் கால் வைக்கும்வரை, இது நிஜத்தில் நிகழ்கின்றதென என்னால் நம்பமுடியாதே இருந்தது.

மச்சு பிச்சு, பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து ஏறத்தாள 300 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது. மச்சு பிச்சுவிற்குப் போவதற்கு லிமாவிலிருந்து குஸ்கோ என்கின்ற நகருக்கு ரெயினிலோ அல்லது விமானத்திலோ போகலாம். விமானத்தில் குஸ்கோ நகரை அண்மித்தபோது இந்த நகரில் எப்படி விமானத்தை தரையிறக்கப் போகின்றார்களோ என்கின்ற சிறு அச்சம் வந்திருந்தது. எனெனில் அந்தளவிற்கு நிறைய மலைகள் உடைய சமதரையற்ற நிலப்பகுதி அது. மேலும் கடல்மட்டத்திலிருந்து 3000 மீற்றர்களுக்கு மேலே இருக்கின்றது. தலையிடி/தலைச்சுற்றல் இன்றி இந்த நகரின் காலநிலையை அவ்வளவு எளிதில் எல்லோராலும் உள்வாங்கிக்கொள்ளவும் முடியாது.

மச்சு பிச்சுவிற்குப் போவதென்பதை பலர் மாதக்கணக்காய்த் திட்டமிடுவார்கள். எல்லாவற்றையும் ஒழுங்காய்த் தயார் செய்துவிட்டுத்தான் பெருவிற்குள்ளேயே கால் வைப்பார்கள். நான் அப்படியில்லாது வருவது வரட்டுமென பெருவிற்குப் போய் மச்சு பிச்சுவிற்கான திட்டத்தைப் போடுவோமெனப் போயிருந்தேன். மச்சு பிச்சுவிற்குள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களே நுழைவதற்கு அனுமதி இருக்கிறது. மொன்ரானா அல்லது ஹயானா பிச்சு போன்ற அருகருகிலிருக்கும் மலைகளிலிருந்து மச்சு பிச்சுவின் அழகைப் பருகவேண்டுமென்றால் அதற்கும் தனியே நுழைவுச்சீட்டுக்கள் எடுக்கவேண்டும். ஹயானா பிச்சுவில் ஏறுவதற்கு இருநூறு பேர் மட்டுமே ஒரு நாளில் அனுமதிக்கப்படுவார்கள்.
நான் பெருவிற்குள் இறங்கிய முதல்வாரம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சில தினங்கள் மச்சு பிச்சுவிற்கான பயணமும் தடைபட்டிருந்ததென அங்கே தற்செயலாய் சந்தித்த ஒரு நியூசிலாந்துத் தம்பதியினர் சொல்ல, இவ்வளவு தூரம் வந்துவிட்டதன் பின் என் கனவு நிறைவேறாதோ என்ற கலக்கமும் வந்தது. அதிஷ்டவசமாக நான் செல்வதற்கு நினைத்த நாளில் மச்சு பிச்சுவிற்கான வாசல்கள் மீண்டும் திறந்துவிட்டிருந்தன.

குஸ்கோவிலிருந்து முதலில் ரெயினில் மச்சு பிச்சுவிற்குப் போகலாம் அல்லது இன்காக்களின் இன்னொரு நகரான ஒலாண்டேதம்பேயில் இருந்தும் ரெயின் எடுத்தும் மச்சு பிச்சுப் போகலாம். நான் ஒலாண்டேதம்பே சென்று அங்கிருந்து ரெயின் எடுத்து மச்சு பிச்சுவை அடைந்தேன்.

ஒலாண்டேதம்பேயும் ஒரு பிரசித்தி பெற்ற இன்காக்களின் நகர். இன்னும் இன்காக்களின் கட்டட அமைப்புக்களின் எச்சங்களைப் பார்க்கலாம். எங்கு பார்க்கினும் மலைகள் சூழ்ந்த நகரில் அந்த நகரில் மூன்று நாட்கள் நின்றதும், அந்தவேளை நகரில் நிகழ்ந்த முக்கிய கலாசார விழாவினைக் கண்டு களிக்க முடிந்ததும் மச்சுபிச்சுவிற்கான என் பயணங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

ஒலாண்டேதம்பேயிலிருந்து உள்ளூர் மக்களுக்கென தனிப்பட்ட ரெயினும், பிற நாட்டிலிருந்து வருபவர்க்கென இன்னொரு ரெயினும் புறப்படுகின்றது. உள்ளூர் மக்களுடன் அவர்களின் ரெயினில் போகவே எனக்கு விருப்பம் இருந்தபோதும் அதில் செல்ல அந்நியர்களுக்கு அனுமதியில்லை. பெரு ரெயில் அல்லது இன்கா ரெயில் என்கின்ற சேவைகளில் ஒன்றில் பிறநாட்டவர்கள் போகலாம். கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலம் எடுக்கும் ரெயின் சிறு கிராமங்களையும் மலைகளையும் காடுகளையும் ஆறுகளையும் ஊடறுத்துச் செல்கின்றன. முன்னே தெரியும் மலைகள் பச்சையாய்த் தெரிய, பின்னாலிருக்கும் மலைகளை முகில்களும் பனியும் மூடியிருக்கும் காட்சிகளைப் பார்ப்பது அற்புதமானது. நதியொன்றும் விடாது எங்களோடு தொடர்ந்து மச்சு பிச்சுவரை வந்துகொண்டிருந்தது.

ரெயின் மச்சுபிச்சு அடிவாரத்திற்கு அப்பால் நகர்வதில்லை. பின்னர் பஸ்செடுத்து -30 நிமிடங்கள்- மச்சுபிச்சு அமைந்திருக்கும் மலைக்குச் செல்லவேண்டும். மலையேறியும் போகலாம். ஆனால் நிறைய நேரமெடுக்கும். மச்சுபிச்சுவின் நுழைவாயிலை அடைந்ததும் நிறைய வழிகாட்டிகள் நிற்பார்கள். விருப்பமெனில் அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களைக் கூட்டிச் செல்லலாம்.

மச்சு பிச்சுவின் முக்கிய பகுதிகளைப் போய்ப் பார்க்க முன்னர், மலையில் ஏறுவதற்குத் தயாராகினேன். எனெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மலையில் ஏறவேண்டும். இல்லாவிட்டால் அனுமதியிருக்காது. ஹயானா பிச்சுவிற்கு அனுமதிச் சீட்டு வாங்க முடியாது போனததால் மொன்ரானா மலையினுள் ஏறததொடங்கினேன்.

அடிக்கடி மலையேற்றம் செய்யாவிட்டால் ஏறுவதற்கு கடினமான மலை இது. சிறுபாதைகள்/ செங்குத்தான சரிவுகள் உடைய சற்று ஆபத்தான பாதையும் கூட. மூச்சு இழுத்து கஷ்டப்பட்டு ஏறியபோதும் வழிநெடுகிலும் காட்சிகள் அழகாயிருந்தது. சிலர் இடைநடுவிலேயே இயலாதென திரும்பி விட்டிருந்தனர். நான் உச்சிக்குப்போனபோது 360 பார்வைக்கோணம் உள்ள இடத்தை நேரம் சென்றுவிட்டதென்று மூடிவிட்டிருந்தனர். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு ஏறி வந்திருக்கின்றோம், 10 நிமிடங்கள்தானே பிந்திவந்தோம் என என்னைப் போன்ற நான்கைந்து பேர் 'அனுமதிக்க மாட்டீர்களா?' எனக்கேட்டபோதும் அவர்கள் அந்தப் பார்வைக் கோணத்தை எமக்காகத் திறந்துவிடவில்லை. உடனே திரும்பி நடக்கவும் சொல்லிவிட்டார்கள். எனெனில் நாங்கள் கீழே இறங்கியவுடன் பாதையை முற்றுமுழுதாக மூடி விடவும் வேண்டும். இவ்வளவு உயரம் ஏறிவந்துவிட்டு உடனே திரும்பி இறங்க முடியாது என அங்கேயே அமர்ந்து 'உள்ளே அனுமதிக்கும் போராட்டத்தை' நாங்கள் எல்லோரும் நடத்தினோம். இறுதியில் வழமைபோல அவர்களிடம் தோற்று இறங்கி நடக்கத்தொடங்கினோம். கூடவே ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த குடும்பம் ஒன்று பேச்சுத் துணைக்கு வந்தததால் இறங்கி வருவது அவ்வளவு களைப்பாய்த் தெரியவில்லை.



மச்சு பிச்சுவை அன்றைய காலத்தில் இன்காக்கள் எப்படிப் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்பதை அனுபவிக்க வேண்டுமானால் இன்கா வழித்தடங்கள் (Inca Trails) ஊடாக நான்கைந்து நாட்கள் நடந்து போய்ப் பார்க்கலாம். ஆனால் தனியே போக அனுமதியில்லை. குழுக்களாய்த்தான் சேர்ந்தே போகவேண்டும். இன்கா வழித்தடங்களினூடாகப் போவதென்றால் பல மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்யாவேண்டும், இல்லாவிட்டால் இடம் கிடைப்பது அரிது. இரவுகளில் கூடாரங்கள் அடித்து தங்கவேண்டும். மிகுந்த சுவாரசியமான பயணம் அதுவென மச்சுபிச்சுவில் சந்தித்த ஒரு பிரேசிலிய இணை கூறினார்கள். வழியெங்கும் இயற்கையின் அதிசயங்களையும், பல்வேறு விலங்குகள்/நகர்வனபனவற்றையும் பார்த்து வந்ததை அவர்கள் விபரித்தபோது நல்லதொரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேன் என்ற உணர்வே வந்தது.

ச்சுபிச்சு, 1450 ஆண்டளவில் இன்கா அரசனொருவனால் நிர்மாணிக்கப்பட்டதாய் நம்பப்படுகின்றது. பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் வந்து இன்காவினரையும் அவர்களின் கலாசாரங்களையும் கொடூரமாய் அழித்தபோதும் மச்சுபிச்சு அதிலிருந்து தப்பியதென்பது ஓர் அதிசயமென்றே சொல்லவேண்டும். ஸ்பானியர்களின் கண்களுக்கு மட்டுமின்றி, இன்காவினரின் செழிப்புமிக்க வாய்மொழிப் பாடல்களில் கூட மச்சு பிச்சு பல நூற்றாண்டுகளாய் இல்லாதிருந்தது ஏனென்பதும் இன்னமும் மர்மாகவே இருக்கின்றது. பதினாறாம் நூற்றாண்டில் நடந்த ஸ்பானியர்களின் படையெடுப்புடன் வரலாற்றின் தடங்களில் இருந்து இல்லாமற்போன மச்சுபிச்சு மீண்டும் 1911ல் கண்டுபிடிக்கப்படுகின்றது.

இன்றும் கூட மச்சுபிச்சு எதற்காய் அமைக்கப்பட்டதென்று மர்மமாகவே இருக்கின்றது. புனிதமான வழிபாட்டுக்காய் அமைக்கப்பட்டிருக்கலாமென்று ஒருசாராரும், விவசாயத்தின் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கலாமென்று இன்னொரு சாராரும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இன்றும் கூட மலைகளாலும் பெருங்காடுகளாலும் சூழப்பட்டு இருக்கும் ஓரிடத்தில் இவ்வளவு நுட்பமான ஒரு நகரை அமைத்திருப்பது என்பது அதிசயமாய்த்தானிருக்கிறது. மச்சுபிச்சுயின் உள்கட்டுமானம், இரண்டு பகுதிகளாகத் தெளிவாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒருபகுதி வசிப்பதற்கெனவும், இன்னொரு பகுதி விவசாயம் செய்வதற்குமென வகுக்கப்பட்டிருக்கின்றது. விவசாயத்திற்கென நீர் வழங்கல் முறை நவீன தொழில்நுட்பத்திற்கு சவால் விடும் முறையில் அவ்வளவு கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

மச்சு பிச்சுவில் உயர் வர்க்கம் வாழ்வதற்கென வசதியான வீடுகளும், சாதாரணர்கள் வாழ்வதற்கு எளிய வீடுகளும் அமைக்கப்பட்டிருப்பதை இப்போதும் காணமுடியும். அதேபோன்று சூரிய வழிபாடுகள் நடந்தற்குரிய தடங்களையும் தெளிவாய்க் காணமுடியும். சில இடங்களில் விலங்குகள்/மனிதர்கள் பலிகொடுக்கப்பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகின்றது.

நான் மச்சுபிச்சு சென்றதற்கு முதல்நாள் மழை தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்ததாகவும், இடங்களை நிதானமாகப் பார்க்கவோ, மலையில் ஏறமுடியவோ இல்லையெனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாக நான் போனபோது மச்சுபிச்சுவில் நன்றாக வெயில் காய்ந்துகொண்டிருந்தது. மலையேறல் கூட மிகுந்த தாகத்துடனேயே நிகழ்ந்தது. எனினும் மாலையானபோது மழை எங்கிருந்து ஒளிந்து வந்ததென அறியமுடியாது பெரும்பாட்டமாய் பொழியத்தொடங்கியது. ஒரேநாளில் வெவ்வேறான இரண்டு காலநிலைகளை மச்சுபிச்சுவில் அனுபவிப்பது என்பது கூட ஒருவகையான ஆசிர்வாதமெனத்தான் சொல்லவேண்டும்.

இப்போதிருக்கும் மச்சுபிச்சுவும் அதன் அழகிய சுற்றுப்புறங்களும் இப்படியே தொடர்ந்து இருக்குமெனவும் சொல்லமுடியாது. ஒவ்வொரு வருடமும் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தனியார் நிறுவனங்களும் இவ்வாறான சுற்றுலாப் பயணிகளுக்குச் சொகுசான வசதிகளைச் செய்வதற்கென மச்சுபிச்சுவை அண்மித்து கட்டங்களையும் அமைக்கவும், காடுகளை அழிக்கவும் தொடங்கி விட்டிருக்கின்றனர். காலம் என்பதும் இன்னொரு பெரும் விடயமாக மச்சுபிச்சுவின் மீது கவிழ்ந்து அதன் அழகை மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கி இருக்கின்றது. இவ்வாறுதான் உலகின் புதிய அதிசயங்களில் ஒன்றாக மச்சுபிச்சுவைப் போல மெக்ஸிக்கோவில் இருக்கும் ஸெசென் இட்ஸாவிற்கு (Chetzen Itza)போனபோதும் நிகழ்ந்தது. சில காலங்களுக்கு முன்வரை அந்த பிரமிட்டில் ஏறிப்பார்ப்பது எல்லோருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது அது அழிவை நோக்கிச் செல்வதால் எவருக்கும் ஏறிச்செல்வதற்கு அனுமதியில்லை. வெளியில் நின்றே அதைச் சுற்றிப் பார்க்க முடியும்.

ச்சு பிச்சுவே ஒரு மலையிலிருக்கின்றதென்றால், குஸ்கோ நகரம் அதைவிட இன்னும் கடல்மட்டத்திலிருந்து 3400 மீற்றர் உயரத்திலிருக்கின்றது. ஆகவே நிறையப்பேருக்கு உயரங்காரணமாய் தலையிடி, தலைப்பாரம் போன்றவை சாதாரணமாகவே வந்துவிடும். குஸ்கோ நகரே ஸ்பானியர்களால் கடைசியாகக் கைப்பற்றப்பட்ட நகரம். இங்கேதான் இன்கா மக்கள் மிகுந்த வலிமையுடனும் பெரும் எண்ணிகையுடனும் இருந்தவர்கள். கிட்டத்தட்ட 50-60 வருடங்களாய் ஸ்பானியர்களுடன் பல்வேறு வழிகளில் அவர்கள் சண்டைபிடித்திருக்கின்றனர்.

ப்போது சுற்றுலாப் பயணிகளால் நிறைந்துவழியும் சதுக்கத்திலேயே (Plaza De Armas) இன்காவினது இறுதி அரசன் ஸ்பானியர்களால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார். மியூசியம் ஒன்றிரண்டை கிடைத்த சந்தர்ப்பத்தில் பார்த்தபோது, ஸ்பானியர்கள் இன்கா மக்களைப் பிடித்து சித்திரவதை செய்த முறைகள் நாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதவை. ஒரு சித்திரத்தில் ஒருவரை கை, கால் என நான்கு பக்கங்களும் கயிற்றால் கட்டி ஒவ்வொரு திசையிலிருந்து குதிரையால் இழுத்துத் தண்டணை கொடுத்திருப்பதாய்க் காட்சிப்படுத்தியிருப்பார்கள். வெற்றி மிகுந்த சரித்திரம் எனச் சொல்லப்பட்ட அனைத்தின் பின்னாலும் எஞ்சியிருப்பவை கண்ணீரும் குருதியும் தானல்லவா?

ஏற்கனவே உயரத்தில் அமைந்திருக்கும் நகரில் இன்னும் உயரமான ஒரு மலையில் இந்த வெள்ளை இயேசு காட்சியளிக்கின்றார். 26 அடி உயரமான சிலை எனச் சொல்லப்படுகின்றது. இந்த இயேசு பிரேசிலிருக்கும் பிரபல்யமான ' Christ the Redeemer' சிலையை மாடலாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உயரமான வெள்ளை யேசு அமைக்கப்பட்ட வரலாறுதான் சுவாரசியமானது. இது இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது, அடைக்கலந்தேடி வந்த பாலஸ்தீனியர்களால், தமக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாய் அவர்கள் பெரு மக்களுக்காய் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

பயணங்களில் நாம் பார்க்கும் இடங்களை விட சந்திக்கும் அனுபவங்களே பிறகு ஆறுதலாக இருந்து அசைபோடும்போது முக்கியமானதாக ஆகிவிடுகின்றன. மேலும் மச்சு பிச்சு போன்ற மிகப் பிரசித்திபெற்ற இடத்தை புகைப்படங்களாலும், காணொளிகளாலும் பார்த்தபிறகு நேரில் பார்க்கும்போது அவ்வளவு பெரிய மனவெழுச்சியைத் தராமல் கூடப்போகலாம். எனினும் மச்சு பிச்சுவிற்குச் செல்லும்போது ஒவ்வொருவரின் அனுபவங்களும் தனித்துவமாக இருக்கவே செய்யும். அவ்வாறான தனித்த அனுபவங்களும், இன்காக்களின் பெரும் சரித்திரத்தின் சிதைவுகளை எங்கும் காணக்கூடிய குஸ்கோ, ஒலியாண்டேதம்பே போன்ற நகரங்களில் நின்று தரிசித்த காட்சிகளுமே நீண்ட காலத்திற்கு மனதிற்குள் சேகரமாய்த் தங்கும் போலத் தோன்றுகின்றது.

(‘அம்ருதா’ மாசி இதழிலும், சுருங்கிய வடிவம் இந்தவார (மாசி, 17) ‘தீபம்’ பத்திரிகையிலும் வெளிவந்தது)

உம்பர்த்தோ ஈக்கோவின் 'Numero Zero'

Tuesday, April 12, 2016

1.
ஒரு பெருவணிகர் தன்னுடைய எதிரியான இன்னொரு வணிகரைப் பயமுறுத்த  பத்திரிகை  ஒன்றைத் தொடங்க விரும்புகின்றார். உண்மையிலேயே பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதற்கு கூட அவருக்கு விருப்பமில்லை. இப்படி ஒரு பத்திரிகை வரப்போகின்றது, எதிரியான வர்த்தகர் அம்பலப்படுத்தப்படப்போகின்றார் என்று எச்சரிக்கை செய்யவே பத்திரிகை தொடங்கப்படுகின்றது. எதிரி சரணடைந்தவுடன் அல்லது இப்படி பத்திரிகை வரப்போகின்றது என்று அவர் பயந்தவுடனேயே பத்திரிகையை நிறுத்துவதே அந்தப் பெருவணிகரின் எண்ணம். ஆனால் இந்த உண்மையறிந்தவர்கள் ஒரு சில பேரே. மிகுதி அனைவரும் புதிய பத்திரிகை வரப்போகின்றது என பல்வேறு கனவுகளுடன் 'நாளை' (Domani) எனப் பெயரிடப்படுகின்ற பத்திரிகையில் வந்து சேர்கின்றனர். இந்த உண்மையை ஒரளவு அறிந்த ஒருவரே இந்தப் புதினத்தில் கதையை வருகின்றார்.

கதைசொல்லியான Colonna கடந்தகாலத்தில் எழுத்துத் திருத்தம் பார்ப்பவராகவும், பிறருக்கு படைப்புக்களை எழுதிக்கொடுக்கின்ற ghost writerராகவும் இருந்திருக்கின்றார். இவருக்கு அந்தப் பத்திரிகையில் பொறுப்பாசிரியருக்கு அடுத்த பெரும் பொறுப்புக் கொடுக்கப்படுகின்றது. பத்திரிகை அச்சுக்குப் போவதிற்கு முன்னர் 0-1, 0-2,.....0-12 வரை பன்னிரண்டு இதழ்களைத் தயாரிப்பதே இவர்களின் முதன்மையான வேலையாக இருக்கின்றது. புதிய பத்திரிகையினூடாகப் பல புதிய விடயங்களைச் செய்து பார்க்கலாம் என பல்வேறு கனவுகளுடன் பலர் வருகின்றனர். அதிலும் ஒரு பெண், ஏற்கனவே நடிகர்களின் கிசுகிசுக்களை வேறொரு பத்திரிகையில் எழுதி வந்த அலுப்பில் சொந்தமாய் புதிய ஆக்கங்களை எழுதலாமென வருகின்றார். அவருக்கு மரண அறிவித்தல்களை எழுதும் பொறுப்புக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு குறுக்கெழுத்து, சோதிடம் போன்ற வழமையான பதிவுகளே பிறருக்குக் கொடுக்கப்படுகின்றது.

இதற்கிடையில் இந்தப் பத்திரிகையில் சேரும் Braggadocio முக்கியமான ஒரு விடயத்தோடு வருகின்றார். அதற்காய் நிறையத் தரவுகளைச் சேகரித்து நிறையக் காலம் உழைத்துமிருக்கின்றார். இந்தப் பத்திரிகை, தான் அகழ்ந்தெடுத்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட ஓரிடம் தருமென நம்புகின்றார். அவர் இந்தக் கதைசொல்லிக்கு மட்டும் தனது கண்டுபிடிப்புக்களைச் சொல்கின்றார். தொடக்கத்தில் அதில் அவ்வளவு நம்பிக்கை வராத Colonna, Braggadocio செய்த தேடல்களின் நிமித்தம் எங்கேனும் உண்மை இருக்கக் கூடுமென ஒரு கட்டத்தில் நம்பத்தொடங்குகின்றார். விபரமாகக் கேட்பதற்கு நேரத்தையும் செவிகளையும் தொடர்ந்து வரும் நாட்களில் கொடுக்கின்றார்.

2.
அந்த உண்மை என்னவெனில் இத்தாலியில் பாஸிஸ்ட்டாக இருந்த முசோலினி உண்மையில் வெளியில் சொல்லப்படுவதைப் போலக் கொல்லப்படவில்லை என்பதே. முசோலினி எனக் கொல்லப்பட்டு உலகிற்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவர்,  அவரைப் போல டூப்பாக, முசோலினியால் உலாவ விடப்பட்ட இன்னொருவர் என்று Braggadocio உறுதியாக நம்புகின்றார். அதற்கான பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வருகின்றார். இறுதிநேரத்தில் முசோலினி ஜேர்மனிப் பக்கமாய் தப்பிப் போகும்போது கொல்லப்பட்டதாய்ச் சொல்லப்பட்டபோது, அசல் முசோலினி இத்தாலியின் வேறொரு பகுதியில் இருந்தார் என்றும், வத்திகான் தேவாலயத்தின் உதவியுடன் ஒரு பழமைவாய்ந்த தேவாலயத்தினூடாக சுரங்கப்பாதையினூடு தப்பிப் போயிருக்கின்றார் எனவும் சொல்லப்படுகின்றது.

அமெரிக்கா நேசப்படைகளும், அதன் உளவு நிறுவனங்களும் அவரை அப்படித் தப்பச் செய்ததாகவும், அன்றைய சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கிய புரட்சிகர செம்படை இத்தாலியில் முன்னணியிற்கு வந்தால் முசோலினியை மீண்டும் களத்தில் இறக்கவும் அமெரிக்கா தயாராக இருந்தததாகவும் Braggadocio நம்புகின்றார் . தனது வாதங்களுக்கு வரலாற்றின் ஓட்டைகள்/பலவீனங்கள் இருந்த பகுதிகளில் இருந்து ஆதாரங்களை அள்ளி வழங்குகின்றார். மேலும் முசோலினியின் ஆதரவுடன் ஒரு பெரும் படை இத்தாலியின் உள்ளே இரகசியமாகக் கட்டியமைக்கப்பட்டதாகவும், முசோலினியின் மீள்வரவுடன் இத்தாலி மீண்டும் கைப்பற்றப்படத் தயாராக இருந்ததாகவும் கூறுகின்றார், ஆனால் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த முசோலினி திடீரென இறந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும், அதனால் முசோலினி தப்பி வாழ்ந்த காலம் வரலாற்றிலிருந்து அப்படியே மறைக்கப்பட்டதாகவும் இவர் கண்டுபிடிக்கின்றார். இது ஒரு conspiracy theory என்ற தொடக்க்கத்தில் உதறித்தள்ளிய Colonna, ஒருகட்டத்தில் Braggadocio கூறுவதை நம்பத்தொடங்குகின்றார்.

இந்த உண்மையை உலகம் முழுவதற்குச் சொல்வதற்கு முன்னர் ஒரேயொருவரிடம் கேட்டு உறுதி செய்துவிட்டால் போதுமென Braggadocio ஒருநாள் விடைபெற்றுப் போகின்றார். அவர் சந்திக்கப் போகும் நபர் இத்தாலிய உளவு நிறுவனத்தில் வேலை செய்கின்றவர். அவ்வாறு அந்த உளவு நிறுவனத்தில் இருப்பவரைச் சந்தித்துவிட்டு இரவில் தனியே நடந்து வரும்போது Braggadocio கொல்லப்படுகின்றார்.

3.
அந்தக் கொலையோடு அனைத்து நிலைமைகளும் மாறிப்போகின்றன. அடுத்த நாள் பொலிஸ் இவர்களின் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைகின்றது. கொல்லப்பட்ட நபரின் ஆவணங்களை எல்லாம் கைப்பற்றுகின்றது. அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் யாரென விசாரிக்கின்றது. இந்தக் கதைசொல்லியும் விசாரிக்கப்படுகின்றார். ஆனால் அவர் கவனமாய் தனக்குச் சொல்லப்பட்ட முசோலினி பற்றிய conspiracy theoryஐ மறைத்துவிடுகின்றார்.
பத்திரிகைக்கு பொறுப்பானவர் இனி பத்திரிகை வராதெனவும் இனியெவருக்கும் வேலையில்லையெனவும் எல்லோரையும் இரண்டு மாதச் சம்பளத்துடன் வீட்டுக்கு அனுப்புகின்றார். அவருக்கும் Colonnaவிற்கும் மட்டுமே முசோலினி பற்றிய இந்தப் புதுக்கதை தெரியும். இதனால் இனி தனக்கு ஆபத்தெனவும் தான் இத்தாலியை விட்டு வேறொரு நாட்டுக்குச் சென்று தலைமறைவாக வாழப்போகின்றேன் என்றும், அவ்வாறே Colonnaவையும் எங்கேயாவது சென்று வாழச் சொல்கின்றார்.

Colonnaக்கு தன்னை யாராவது கொலை செய்ய வந்திருவார்கள் என்ற அச்சம் எழுகின்றது. அடுத்தடுத்த நாட்களில் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார். தான் உறங்கிக்கிடந்தபோது யாரோ இரகசியமாக வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றார் என நம்பவும் செய்கின்றார்.

Colonnaக்கு வயது ஐம்பத்துக்கு மேல் ஆகிவிட்டதென்றாலும், பத்திரிகையில் புதிதாய் வந்து சேர்ந்த ஒரு இளம்பெண்ணோடு காதலும் இருக்கின்றது. இனி மிலானில் வசிக்கமுடியாது என முடிவுசெய்து, அந்தக் காதலிக்கு சொந்தமாய் ஒதுக்குப்புறமான கிராமத்தில் இருக்கும் வீட்டுக்குச் சென்று காதலியோடு ஒளிந்துகொள்கின்றார். அப்படியே இருவரும் கிழக்கு ஐரோப்பியா நாட்டுக்கோ அல்லது தென்னமெரிக்கா நாடொன்றுக்கோ தப்பிச் செல்வதே அவர்களின் முடிவாக இருக்கின்றது. பழக்கமில்லாத ஸ்பானிய மொழியை கற்று வழமைபோல பழைய தொழிலைத்தான் செய்யலாமென்றும், காதலியும் வழமையான எழுதும் திரைத்துறை சார்ந்த கிசுகிசுக்களை எழுதி வாழ்க்கையை நகர்த்தலாமெனவும் தீர்மானிக்கின்றனர்.

நாவலின் முடிவில் கூட Colonnaவால் முசோலினி பற்றிய இந்தக்கதை conspiracy theoryயா அல்லது உண்மையில் அப்படி இருந்திருக்கலாமோ என முடிவுசெய்ய இயலாது இருக்கின்றது. உம்பர்த்தோ ஈக்கோவின் இந்த நாவலை வாசிக்கும்போது அவரின் இன்னொரு நாவலான Foucault's Pendulum நமக்கு நினைவுக்கு வரலாம். நமக்கு உண்மையெனச் சொல்லித் தரப்பட்ட வரலாற்றை, ஏன் வேறு விதமாய் இருந்திருக்கக்கூடாது என கேள்விக்குட்படுத்துவதில் ஈக்கோ திறமையானவர். இங்கேயும் எது உண்மையாக இருக்கும் எது கற்பனையாக இருக்கும் என நம்மை கேள்விக்குட்படுத்துவதில் நிறைய விடயங்களை வரலாற்றிலிருந்து எடுத்துக் கொண்டுவருகின்றார். ஒருகட்டத்தில் கதைசொல்லியான Colonna நம்புவது போல, முசோலினி நமக்குச் சொல்லப்பட்டவகையில் கொல்லப்பட்டிருக்கமாட்டாரோ என நம்பவைப்பதில் ஈக்கோவின் எழுத்தின் ஆழம் நமக்குத் தெரியவருகின்றது.

(நன்றி: 'அம்ருதா' - ஏப்ரல்/2016)

Tamasha

Thursday, April 07, 2016

ரு ஆணும், பெண்ணும் தற்செயலாய் பிரான்ஸின் ஒதுக்குபுறமான நகரொன்றில் சந்திக்கின்றனர். சொற்ப காலந்தானே பழகப்போகின்றோம், எனவே உண்மையான அடையாளங்களை மறைத்தபடி பழகலாமென முடிவெடுகின்றனர். ஆண் தன்னை 'டொன்' எனவும், பெண் 'மோனா டார்லிங்' எனவும் பழைய திரைப்படக் கதாபாத்திரங்களின் பெயர்களைத் தங்களுக்குச் சூட்டியும் கொள்கின்றனர். அந்நகரையும், அருகிலுள்ள காடுகளையும், மலைகளையும் இணைந்து சுற்றுகின்றனர். மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கு டொன் மீது காதல் அரும்புகின்றது. திடீரென பயணத்தில் தொலைந்த சூட்கேஸும் பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட, சட்டென்று அந்தப் பெண் இந்தியாவிற்குப் பயணமாகிவிடுகின்றார்.

இடையில் சிறுவன் 'டொன்'னின் கதை சொல்லப்படுகின்றது. எப்போதும் கதைகள் கேட்பதிலும், வாசிப்பதிலும் ஆர்வமிருக்கும் சிறுவனை தந்தை படி படி என கஷ்டப்படுத்துகின்றார். நாடோடிகளாய் அலைபவர்களிடம் வீட்டில் காசு களவெடுத்துச் சென்று கதை கேட்குமளவிற்கு சிறுவன் 'டொன்' கதைகளின் மீது ஈர்ப்புக்கொண்டவனாக இருக்கின்றான். பல்வேறு இதிகாசப் பாத்திரங்களோடு கற்பனையின் விளைநிலங்களில் பறந்து போகின்ற சிறுவன் பதின்மங்களுக்கு வரும்போது, நீ இப்படியிருக்கமுடியாது கணிதம் நன்கு கற்று பொறியியலானாக வரவேண்டுமென வீட்டிலிருந்து ஹொஸ்டலுக்கு அனுப்பப்படுகின்றான். அந்தப் படிப்பு பிடிக்கவில்லை என்றாலும் தந்தையிற்காய் தன்னை வருந்திக் கற்கின்றான்.

பிரான்ஸிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பும் பெண்ணான மகேஸ்வரியின் தந்தையார் மிகப்பெரும் ரீ தொழிற்சாலையை வைத்திருக்கின்றார். மகளான மகேஸ்வரி அந்நிறுவனத்தின் இலாபத்தை அவரின் திறமையால் உயர்த்துகின்றார். என்கின்றபோதும் பிரான்ஸில் 'டொன்னோடு' பழகிய காலங்கள் அவரைத் தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடியே இருக்கிறது. டொன்னை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புக்களும் ஏதுமில்லை. எனெனில் இனி மீண்டும் சந்திப்பதில்லை என்று முடிவெடுத்துத்தான் இருவரும் அடையாளங்களை மறைத்துப் பழகியதோடு மட்டுமின்றி, தொடர்பு கொள்வதற்கான எந்த முகவரிகளையும் இருவரும் விட்டும் பிரியவில்லை.

டொன்னின் நினைவுகள் சுழன்றடிக்க சட்டென்று மகேஸ்வரிக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. டொன் Catch-22 நாவலை பிரான்ஸில் இருக்கும்போது வாசித்துக்கொண்டிருந்ததையும், அது டெல்கியில் இருக்கும் ஒரு புத்தகசாலையில் வாங்கப்பட்டதையும் கண்டுகொள்கிறார். சந்திப்பு நடந்து சில வருடங்களான பின், மகேஸ்வரி டெல்கியிற்குச் செல்கிறார். அந்தப் புத்தகசாலையில் பெரும்பொழுதுகளைக் கழிக்கும்போதாவது டொன்னை எப்போதாவது சந்திக்கவிடக்கூடுமென ஆசைப்படுகின்றார்.

காலத்தின் நீட்சியில் அதே புத்தகசாலையில் தற்செயலாய் டொன்னை மகேஸ்வரி சந்திக்கின்றார். தனக்கு அவரில் அளவிறந்த காதல் இருப்பதாக தன் நிலைமையை உணரச்செய்கின்றார். தொடர்ந்து இருவரும் பழகுகின்றனர். டொன் ஒரு அலுவலகத்தில் மானேஜராக இருக்கின்றார். அவரின் ஒரேமாதிரியான நாளாந்த வாழ்க்கையும், அலுவலகத்தில் மிகவும் கீழ்ப்படிவான ஊழிய வாழ்க்கையும் மகேஸ்வரிக்கு வியப்பைத் தருகின்றது. பயணங்களில் உற்சாகமாகவும், கதைகள் பல சொல்லித் திரிந்த டொன் எங்கே மாயமாய்ப் போனான் என வினாவுகிறார். டொன் இதுதான் எனது நிஜ முகம், நீ பார்த்தது கற்பனையான ஒருவன் என்கின்றார். இந்த சராசரியான அலுவலக வாழ்க்கையிற்குள் சிக்கிக்கொண்ட ஒருவனை என்னால் நேசிக்க முடியாதென, டொன் நண்பர்களுக்கு முன்னிலையில் திருமணஞ்  செய்யக் கேட்கும்போது மகேஸ்வரி நிராகரிக்கின்றார்.

ன் வழமையான வாழ்க்கையிற்குள் டொன் மீண்டும் போகின்றார். அவ்வப்போது schizophreniaவிற்குள்ளும் விழும் டொன், மகேஸ்வரி தன் தவறை உணர்ந்து மீண்டும் காதலை யாசிக்கும்போதும் அதை நிராகரிக்கின்றார். கொஞ்சம் கொஞ்சமாய் தனது அசலான முகத்தைத் தேடத் தொடங்குகின்றார். இடையில் ஒரு ஓட்டோக்காரரை டொன் சந்திக்கின்றார். தனது நகரத்தில் பெரும் பாடகனாக இருந்த அவரை, எப்படி நாளாந்த வாழ்க்கை ஒரு ஆட்டோக்காரராக டெல்கியில் கொண்டு வந்து சேர்த்தென தன் கதையை அந்த ஓட்டோக்காரர் சொல்கிறார்.

அதிலிருந்து ஒரு தீப்பொறி டொன்னுக்குள் நுழைகிறது. தனது கதைசொல்லல்களை மக்களுக்குள் நிகழ்த்திக்காட்டுகின்றார். எப்போதும் சமரசம் செய்து, வேறொரு முகமூடியை அணியச் செய்யும் பெருநிறுவன வேலையை உதறித்தள்ளி, ஆறு மாதங்களாய் அலைந்துவிட்டு, சிம்லாவிலிருக்கும் வீட்டுக்குச் செல்கின்றார். வேலையை விட்டுவிட்டார் என அறிந்த தந்தையும் தாய் பதறுகின்றனர். மீண்டும் வேலையைத் தேடு என அவரைச் சொற்களால் வதைக்கின்றனர்.

அல்லாடும் மனத்திடையே தான் சிறுவனாக இருந்தபோது கதைகளச் சொன்னவரிடம் டொன் மீண்டும் போகின்றார். ஏன் எப்போதும் மகிழ்ச்சி குறுகிய காலமே தங்குகின்றது, மிகுதிக்காலம் முழுதும் துயராக வடிகிறது என சோர்ந்து போகும் டொன், தனது எதிர்காலம் என்னவாகும் இருக்கும் எனக் கேட்கின்றார். மிகவும் முதிர்ந்துபோய் பார்வையும் ஒரளவு இழந்திருக்கும் அந்த கதைசொல்லி, 'நீ பொய்யாக வாழ்கிறாய்...உனது வாழ்க்கையின் கதை எப்படியென என்னிடம் கேட்காதே, உனக்காக கதையை நீதான் சொல்லவேண்டும் அதைத் தேடு' எனத் துரத்திவிடுகின்றார்.

டொன்னின் தேடல் பிறகு என்னவாகிறது? மகேஸ்வரியால் அவரையும், அவரால் மகேஸ்வரியும் புரிந்து கொள்ளப்படுகின்றனரா என்பது இதன் நீட்சியில் நிகழ்கின்றன. டொன்னின் குழந்தைப்பருவம், பதினம், பிறகு தற்போதைய காலம் என மூன்று காலங்களும் ஒரு தொடர்ச்சியின்றி இத்திரைப்படத்தில் சொல்லப்படுகின்றது. மனித மனம் என்பதே நிகழ்காலத்தில் இருக்கும்போதே கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அலைந்துகொண்டிருப்பதுதான் அல்லவா?

இந்தக் கதை இன்றைய நவீன மனிதனின், அதுவும் பெருநிறுவனங்களில் தங்களின் அசல் முகங்களைத் தொலைத்தவர்களைப் பற்றியது எனச் சொல்லலாம். இன்னொருவகையில் நாம் வாழ விரும்பும் வாழ்க்கையிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையிற்கும் இடையில் நெரிபடும் நம் எல்லோருடைய பிரதிபலிப்புத்தான் டொன் எனலாம்.

Beautiful mindல் நாஷிற்குக் வாய்க்கும் ஒரு துணை போல, Tamasha வில் டொன்னுக்குக் கிடைக்கும் காதலி போல எல்லோருக்கும் அமைவது அரிது என்பது ஒருபுறமிருந்தாலும், இதையெல்லாவற்றையும் விட நாம் நமக்கு விரும்பியதைச் செய்வதற்கான தயக்கங்களையும் பயங்களையும் தாண்டிச் செல்வதுதான் நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள பெரும் சவால் போலவும் தோன்றுகின்றது.

(நன்றி: தீபம்)