கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Inner flow (உள்ளோட்டம்)

Friday, May 06, 2016


'சென்ற வருடத்தின் தொடக்கத்தில் ஷங்கரின் (ஷங்கரராம சுப்பிரமணியன்) வீட்டுக்குப் போனபோது அன்பாய்க் கிடைத்தது Inner flow என்கின்ற இந்த நூல். ஓவியங்களும் கவிதைகளுமென மிக அருமையாக பாலாஜியால் தொகுக்கப்பட்டிருக்கின்றது. வாய்மொழி வழக்காக வந்துகொண்டிருந்த மகாபாரதக் கதை, 'சித்திரக் கத' வடிவில் மகாராஷ்டிரா, கர்னாடக எல்லைக் கிராமங்களில் இன்னொரு வடிவம் பெற்று கதையும் சித்திரமாகவும் காலங்காலமாய் வந்துகொண்டிருக்கின்றது என இந்நூலின் தொடக்கத்தில் குறிப்பிடுகின்றது. இதன் இன்னொரு வடிவமாய் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாரதக் கூத்து நடைபெற்று வருதையும் நம்மில் பலர் அறிந்திருப்போம்.

'உள்ளோட்டம்' என்கின்ற இந்நூல் பாடல்களாகவும், இடைநடுவில் கதை சொல்லலாகவும் இருக்கின்ற பாரதக் கூத்தை வேறொருவகையில் இணைத்து பார்க்கின்ற முயற்சி. நாடோடிகளாய்த் திரிந்த தக்கார்ஸ் எப்படி சித்திரக்கத (சித்திரக்கதி)யை பல்வேறு பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றார்களோ அவ்வாறான ஒரு பரிசோதனைக் களனாக பாரதக் கூத்திலிருந்து பல்வேறு பகுதிகளை வரைந்து பார்த்தலே இந்தத் தொகுப்பின் நோக்கமென பாலாஜி குறிப்பிடுகின்றார்.

வெவ்வேறு விதமான ஆறு பெண்களும், ஒரு ஆணுமென ஏழு ஓவியர்கள் பாரதக் கதையிலிருந்து பல்வேறு சித்திரங்களை வரைந்திருக்கின்றார்கள். இந்த ஓவியங்களோடு ஒட்டியும் சிலவேளைகளில் தனித்துமாய் ஷங்கர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்.

வியங்களைப் பார்த்தும் கவிதைகளை வாசித்தும் போகும் எங்களை அவை இரண்டும் தங்களுக்குள் இணைத்தும் தனித்தும் விலத்தியும் பார்க்கச் செய்கின்றது. அதாவது இந்தக் கவிதையை இந்த ஓவியத்தோடு சேர்ந்து வாசிக்காதுவிட்டால் என்னமாதிரியான மனோநிலை இருந்திருக்கும்? அதேபோன்று கவிதை இல்லாது ஓவியத்தை மட்டும் பார்த்திருந்தால் என்னமாதிரியான உலகம் நமக்குள் விரிந்திருக்கும் என்பதே ஒரு சுவாரசியமான விளையாட்டாக எனக்கு இருந்தது.

கவிதைகளில் அநேகம் அருச்சுனன், அரவான், கர்ணன் பற்றியதாக இருக்கின்றது. எனக்கு மிகப்பிடித்த பகுதியாக அரவானின் கவிதைகள் வரும் பகுதி இருந்தது. முதற்கவிதையாக பாரதக் கதைகள் பற்றிய இந்நூலிற்கு ஏன் ஷங்கர் இராமனைப் பற்றிக் கவிதை எழுதினார் என்பது சற்று ஆச்சரியமாயிருக்கின்றது.

நேரடியாக தமிழகத்தில் நடக்கும் எந்தப் பாரதக் கூத்துக்களைப் பார்க்காததால் இந்தவகையான கூத்தில் இராமன் எங்கேனும் இடைவெட்டுகின்றாரா என்று தெரியவில்லை. ஓவியங்களோடு நிச்சயம் தொடர்புடையதாகத்தான் கவிதைகள் இருக்கத்தேவையில்லை என்று தெரிந்தாலும், நூல் தொடங்கும் முதல் ஓவியத்திலே இராமனை பற்றியொரு கவிதை வருவது துருத்திக்கொண்டு தொடர்பில்லாது அந்தரத்தில் நிற்பது போல எனக்குத் தோன்றியது.

அரவானைப் பலிக்குத் தயார் செய்கின்ற ஓவியத்திற்கு எழுதிய ஷங்கரின் கவிதை அருமையாக வந்திருக்கின்றது...

'தியாகிக்கு நிகழ்காலம் இல்லை
தியாகத்திற்கும் தான்
தியாகியின் மரணத்தின் பின்
உருவாகும்
சுதந்திரம்
அரசாட்சி
தேசம்
லட்சிய சமூகம்
எல்லாவற்றிலும் தியாகிக்கும் சிறுபங்குண்டு
ஆனால்
தியாகிகள் வனத்தின் நடுவில் சுடப்படுகின்றார்கள்
எரிந்து மாய்கின்றனர்
வரலாற்றுக்குத் தேவை
எப்போதும் என்போன்ற தியாகிகள்
நாங்கள் எதிர்காலத்தின் மீது
ஏக்கத்தோடு கண் வைத்திருப்பவர்கள்'

ன்னொரு ஓவியத்தில் துரியோதனன் போருக்குப் போக முன்னர் அதுநாள் வரை கண்களை மூடிவைத்திருந்த காந்தாரி கட்டுக்களை அவிழ்த்து துரியோதனை எவராலும் கொல்லமுடியாத சக்தியைக் கொடுக்கின்றார். உடலெங்கும் காந்தாரியின் சக்தி பரவ துரியோதனன் நிர்வாணமாக நிற்கின்றார். ஆனால் கிருஷ்ணர் தெரிந்தோ தெரியாதமாதிரி துரியோதனின் தொடையையும் ஆண்குறியையும் மறைக்கின்றமாதிரி ஒரு செடியைப் பிடித்தபடி இருக்கின்றார். பாரதத்தில் எளிதில் கொல்லப்படமுடியா துரியோதனை பீமன் கதாயுதத்தால் அடித்துக் கொல்வது தொடைப்பகுதி என்பதை பாரதம் வாசித்த நாமனைவரும் அறிந்திருப்போம் அல்லவா?

இந்த ஓவியத்திற்கு அழகாக வந்து விழுகின்றது ஷங்கரின் வார்த்தைகளும்...

'அம்மாவுக்கு
முன்னால் நிர்வாணம் காண்பிக்க
உனக்கு என்ன வெட்கம்...
இலைகொண்டு
பூ கொண்டு
அவளிடம் மறைக்க முடியக்கூடியதா
பிள்ளையின் நிர்வாணம்
நீ சிசுவாக வாழைப்பழம் போல
அவளிடம் தானே இருந்தாய்
ஞாபகம் இல்லையா
நீயும் உண்டாயா
அந்த விலக்கப்பட்ட கனியை?'

பாரத ஓவியமொன்றிலிருந்து நிகழ்கால மனிதனின் கதை விரிகின்றது. ஆனால் இறுதியில் இன்னொரு ஆதிக்கதையான பைபிளில் போய் நின்று நீயும் விலத்தப்பட்ட கனியை நீயும் உண்டாயா? என்கின்றது. வெவ்வேறு உலகங்களுக்கு அந்தரத்தில் மிதந்து நம்மை காலமற்ற காலத்திற்குள் கவிதையும் ஓவியமும் இழுத்துச் செல்கின்றது.

கிட்டத்தட்ட 50 அருமையான வர்ண ஓவியங்களுடனும் கவிதைகளுடனும் ஒருவகையான சித்திரக் கத வடிவில் வந்த இந்நூல் மிக முக்கியமான முயற்சியாகும். செவ்வியலும் நவீனமும் ஒன்றையொன்று இடைவெட்டும்/ஊடுபாவும் ஒரு புள்ளியில் எங்களை நிறுத்திவைக்கும் இந்த 'உள்ளோட்டம்' இன்னும் பரவலாக அவசியம் பேசவேண்டியதொன்றாகும்.

0 comments: