கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அ.முத்துலிங்கத்திற்கான எதிர்வினை

Tuesday, August 30, 2016


நேற்று விகடனில் வந்திருந்த அ.முத்துலிங்கத்தின் ' வெள்ளிக்கிழமை இரவுகள் ' வாசித்திருந்தேன். அ.மு, ஈழப்பிரச்சினை குறித்து எழுதும் கதைகள் ஏன் தொடர்ந்து அபத்தமாய் இருக்கிறதென இன்னும் விளங்கவில்லை. ஒரு விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள்தான் அவற்றையெல்லாம் எழுதவேண்டுமெனச் சொல்லப்போவதில்லை, ஆனால் அவை குறித்து அக்கறையும் அவதானமும் இல்லாது எழுதும்போது விசனமே வருகிறது.

இந்தக் கதை ஏற்கனவே அஷோக ஹந்தகமவின் 'இது எனது சந்திரன்' (This is my moon) என்று 2000ல் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் வந்துவிட்டது. என்ன அது உள்ளூரில் அனைத்தும் நடக்கிறது. இது உள்ளூரில் நடந்து, கனடாவிற்குப் புலம்பெயர்ந்து குழந்தையுடன் திரும்பிப்போய் ஒருவிதமான 'பழிவாங்குதலுடன்' முடிகிறது. அஷோக ஹந்தகம எனக்குப் பிடித்தமான படைப்பாளி என்றபோதும், எப்படி சிங்கள இராணுவமும், புத்தபிக்குவும் தமிழ்ப்பெண்ணை சிதைக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தினாலும், அதில் சிறுபான்மையினராகிய எம்மீதான ஒருவகையான exploitation இருக்கிறதெனவே அது கடந்தகாலத்தில் -இங்கு திரையிட்டபோதும்- விவாதித்திருக்கின்றோம், எழுதியிருக்கின்றோம்.

அ.முத்துலிங்கத்தின் கதை பாதியில் நகரும்போதே எனக்கு மிகுதிக்கதை விளங்கிவிட்டது. 1997ம் ஆண்டு ஜெயசுக்குறு சமயத்தில் மாங்குளத்தில் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றார். பிறகு 2010ல், சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதை அந்தத் தாக்குதலிற்குத் தலைமை தாங்கிய மேஜரின் பெயரை மட்டும் கூறியவுடன், அவருக்குக் கீழேயிருந்து பாலியல் வன்புணர்வு செய்தவரை எளிதாய் இந்தப் பெண்ணின் நண்பி கண்டுபிடித்துச் சொல்லி விடுகின்றாராம். இந்திய வாசகர்கள்தானே எதைக் கொடுத்தாலும் வாசித்துவிட்டு உள்ளொளி பெற்றுவிடுவார்கள் என்று நம்பிக்கை இருக்கலாம். நமக்குத்தானே இன்னும் இந்த தரிசனங்கள் நிகழ்ந்துவிடவில்லையே? எப்படி நம்மால் இதையெல்லாம் எளிதாய்க் கடந்துபோய் விடமுடியும். இடியப்பதையே, இடி'யா'ப்பமாக அவர்களுக்காய் மாற்றி எழுதமுடிகின்றபோது இதெல்லாம் சிறு சம்பவங்கள்தானே என நகரச் சொல்கிறாரோ தெரியவில்லை.

தையில் இருக்கும் இப்படியான நெருடல்களையெல்லாம் விட்டுவிடலாம். கதை எந்த வகையிலுமே பாதிக்கவே இல்லை என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற விடயம். பாலியல் வன்புணர்விற்குள்ளாகிய ஒரு பெண், அவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இப்படி பிள்ளை அப்பா யாரெனக் கேட்கிறது என்பதற்காக, பிள்ளைக்கு இலங்கையிற்குப் போய் அந்த 'அப்பா'வை அறிமுகப்படுத்துவாரா என்ன? அந்தப் பெண், பிள்ளை கேட்கிறார் என்பதற்காகத்தான் போகின்றார் என்றாலும் அவருக்குள் நிகழ்ந்த சம்பவம் குறித்து எத்தகைய கொந்தளிப்பாய் இருந்திருக்கும். அது குறித்து எதுவுமே இல்லாது -ஏதோ வெளிநாட்டிலிருந்து ஊரைப் பார்க்கப் போவது போல- அந்தப் பெண் வெளிக்கிட்டுப் போகின்றார். இப்படியெழுத அ.முவால் மட்டுந்தான் சாத்தியம்.

மேலும், இவ்வாறு பாலியல் வன்புணரப்பட்ட பெண் அவ்வளவு எளிதில் தனது பிள்ளைக்கு அந்தத் தகப்பனை அறிமுகப்படுத்துவாரா? தனது பிள்ளைக்கு எது நல்லதென ஒரு தாயிற்குத் தெரியாதா? அவ்வாறு பிள்ளையுடன் இருக்கும் தாய், உனது தந்தை இறந்துவிட்டார் என்று சொல்லக்கூடுமே தவிர, இப்படி ஓடிப்போய் தன்னைப் பாலியல் வன்புணர்ந்தவரை அறிமுகப்படுத்துவாரா என்பதை வாசிப்பவர்க்கு விட்டுவிடுகிறேன். இந்தப் பெண்பிள்ளை பிறகு வளர்ந்து இந்த உலகின் எல்லா அழுக்குகளையும் அறிந்தபின், ஏன் எனக்கு இப்படிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்தினாய் என தாயைக் காறி உமிழாதா?

மேலும், ஏதோ கனடாவில் gay/lesbian யாய் இருப்பவர்களின் பிள்ளைகளைக் கூட இலகுவில் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் single motherன் பிள்ளைகளைத்தான் கேலி செய்கின்றனர் என்றவகையில் அ.மு எழுதுவதில் எந்தளவு யதார்த்தம் என்பது குறித்தும் யோசிக்கின்றேன். single motherன் பிள்ளைகளுக்கு அவர்களுக்குரிய சிக்கல்கள் இருந்தாலும் இங்கு பொதுச்சூழலில் அவர்களை ஒரளவு ஏற்றுக்கொள்ளும் நிலைமைகள் இருக்கின்றன. மேலும் இந்தப் பிள்ளையை அதிகம் நக்கல் செய்வதாகக் காட்டப்படுவது, gay coupleன் ஒரு பெடியனால். Homosexual இன்னமே பொதுச்சமூகத்தால் அவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சூழலில், ஒடுக்கப்பட்டிருக்கும் அவர்களின் குழந்தைகளை அவர்கள் இப்படி அவ்வளவு எளிதில் வளர்க்கமாட்டார்கள் என்பதோடு, ஏன் அவர்களின் பிள்ளையை இங்கே அ.மு முன்னிலைப்படுத்துகிறார் என்பதில் அ.முவின் தற்பால் அரசியல் தெரிகிறது எனச் சொல்லலாமோ என யோசிக்கிறேன்.
வேண்டுமெனில் இந்தக் கதையிற்காய் விகடன் வாசகர்கள் 'ஆஹா'வென்று உச்சுக்கொட்டக்கூடும். எனக்கென்றால் எரிச்சல் தான் வந்தது.

சிலவேளைகள் நம்மால் முழுதாய் உணர முடியாத விடயங்களை, சரியாக எழுத்தில் வைக்க முடியா கதைகளை எழுதாமல் விடுவதே மிகச் சிறந்த 'அறமாக' இருக்கும் எனவும் -கேட்கிறார்களோ இல்லையோ- சொல்லிவைப்போம்.

0 comments: