கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'நட்சத்திரம்' - ஒரு புத்தக வாசிப்பு

Friday, November 18, 2016

'ட்சத்திரம்' என்கின்ற இந்நாவல் ரஷ்ய (அன்றைய சோவியத் யூனியன்) உளவுக்காரர்களைப் பற்றியது; 2ம் உலகமகாயுத்தத்தில் ஜேர்மனியரைத் துரத்தியடிக்கின்ற காலத்தைய கதைக்களன்.  ஒரு யுத்தத்தில் ஜேர்மனியர்கள் பின்வாங்கி, பெரும் தாக்குதலை ரஷ்யப்படைகள் மீது நடத்த காடுகளுக்குள் பதுங்குகின்றனர். ரஷ்ய உளவுப்படையோ ஜேர்மனியர்களின் தடங்களைத் தவறவிட்டுத் தேடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் அதிகாரியோ கோபத்தில், அம்மாவின் பால் மறவாக் குழந்தைகள் எனவும், பெண்களைத் துரத்துவதைப் போல ஜேர்மனியர்களைத் துரத்தும் கோழைகள் எனவும் அவர்களைப் பார்த்துத் திட்டுகின்றார்.

அவமானங்களை மீறி வேவுப்படையினர் ஜேர்மனியரின் அமைவிடங்களைக் கண்டுபிடிக்கின்றனர். முள்ளுக்கம்பி வெட்டி உள்ளே நுழைகின்ற உளவுப்படையின் ஒருபகுதி திரும்பியே வராது போகின்றது. இதற்கிடையில் யுத்தக் காலத்தில் தொலைத்தொடர்பில் பணியாற்றுகின்ற பெண்ணுக்கு உளவுப்படையின் இளம்தலைவன் மீது காதல் வருகின்றது. மிகவும் அமைதியும், பணியில் தீவிரமும் உடைய அவன் இதை அசட்டை செய்தாலும், அந்தப் படையில் இருக்கும் வீரர்கள் இந்தப் பெண்ணோடு நெருக்கமாகவும், அவளின் காதலை வெற்றிபெறச் செய்வோமெனவும் உறுதியளிக்கின்றனர்.

இறுதியில் இந்த இளம்தலைவன் தலைமையில் முட்கம்பி வெட்டி காடுகளை ஊடுறுத்து, ரஷ்ய உளவுப்படை ஜேர்மனியர்களுக்குள் இறங்குகின்றது. அங்கேயிருந்து அரிய பல தகவல்களை அனுப்பிவைத்தபடியிருக்கின்றனர். சாதாரண ஜேர்மனியப்படை மட்டும் அல்ல, நாஜிக்களின் மூர்க்கமாய்ப் போரிடும் படையணியான எஸ்.எஸும் ஒரு பெரும் தாக்குதலுக்கு அணிவகுத்து நிற்பதை அவதானிக்கின்றனர். தொடர்ச்சியாகத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் சில ஜேர்மனியர்களை இந்த உளவுப்படை கொல்ல, ஜேர்மனியர்கள் சுதாகரிக்கின்றனர். கடும் தேடுதல் நடவடிக்கையில் இவர்களைச் சுற்றிவளைக்க இவர்கள் தாக்கிவிட்டுத் தப்பியோட முயற்சிப்பதோடு நாவல் முடிவடைகின்றது.

அந்தக் காதலி தாங்கள் அனுப்பிவைத்த குழுவிற்குரிய பெயரான 'நட்சத்திரத்திடமிருந்து' தங்கள் தலைமையகமான 'பூமி'க்கு நல்ல செய்தி வருமெனக் காத்திருக்கின்றாள். ரஷ்யப்படை தொடர்ந்து வென்றபடி போகின்றது. போலந்து நாட்டிற்கருகில் -தொடக்கத்தில் உளவுப்படையினரைத் திட்டிய கேணல்- மீண்டும் உளவுப்படையைக் காண்கின்றார். இனி விரைவில் பேர்லினை நாங்கள் பிடித்திடுவோமேன அவர்களை வாழ்த்துகின்றார். ஆனால் அந்தப் பழைய வீரர்கள் இப்போதில்லை. எல்லோரும் புதியவர்கள். அருமையான இளமையான மனிதர்கள் யாரிடையதோ வெறிக்காகவோ நடந்த யுத்தத்தில் காணாமற்போய்விடுகின்றனர்.

ஃதொரு சிறிய நாவலென்றாலும், அதற்குள் யுத்தம் நடக்கும் பின்னணியையும், உளவுப்படைகளின் சவால் நிறைந்த வாழ்க்கையையும் எளிதாக நம்முன்னே கொண்டுவருகின்றது. ஓரிடத்தில் ஒரு ஜேர்மனியரைக் கொல்லும்போது, அவன் 'எனது கைகளைப் பாருங்கள். நானுமொரு தொழிலாளியின் மகன். தொழிலாளர்கள் மீது மிகுந்த காதலுடைய நீங்கள் என்னைக் கொல்லலாமா?' எனக் கேட்கின்றான்.

'திராவ்கினுடைய கண்களில் தோன்றிய இரக்கத்தையும், மாறா உறுதியையும் அந்த ஜெர்மானியன் கண்டான். அவன் ஒன்றுமறியா முட்டாள் அல்ல. அச்சுகோர்க்கும் வேலையிலிருந்து கொண்டே அவன் அநேகப் புத்தகங்களைப் படித்திருந்தான. ஆகவே தன்முன் நிற்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். இரக்கமும் உறுதியும் கலந்த பார்வையுடைய இவ்வழகிய வாலிபனது உருவத்தில் தனது உயிரைக் கவர வரும் காலனைக் கண்டதும் அவன் கண்ணீர் விட்டழுதான்' என நாவலில் எழுதப்பட்டிருப்பது, எதிரியாயினும் அவர்களது மனதினுள்ளும் கடைசி நேரத்தில் என்ன தோன்றியிருக்கும் என நினைத்து எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தது.

இந்நாவலை எழுதிய எம்மானுயில் கஸகேவிச் நிஜவாழ்வில் 'ஸ்கவுட்டுகள்' எனப்பட்ட உளவுப்படையில் இருந்தவர். ஆகவேதான் இந்நூலில் இருக்கும் உளவெடுக்கும் சம்பவங்களை மிக நெருக்கமாக உணரக்கூடியதாக வகையில் அவரால் எழுத முடிந்திருக்கின்றது. மேலும் பக்கங்கள் அதிகம் போகாது மிக நுட்பமாய் நம்மில் கதைகளைக் கடத்தும் இன்றைய இலத்தீன் அமெரிக்கா நாவல்களைப் போல, எப்போதோ எழுதப்பட்ட  இந்த நாவலும் நூறுபக்கங்களுக்குள் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லி நிற்கின்றது.

தமிழில் யார் மொழியாக்கம் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் நியூ செஞ்சுரி ஹவுசினால் 2007ல் இது பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. யாராயினும் இவ்வளவு நுட்பமாய் தமிழாக்கியதற்காய் அவருக்கு நிச்சயம் நாம் நன்றிகூரத்தான் வேண்டும்.


(நன்றி: 'தீபம்)

ஆதிரை

Wednesday, November 16, 2016

'ஆதிரை' நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, எல்லாவற்றையும் விட சயந்தனின் உழைப்பே வியக்கவைத்தது. இவ்வளவு பெரிய நாவலை எழுதுவது எவ்வளவு மிகப்பெரும் விடயமென்பது எழுதுபவராகவும், புலம்பெயர்ந்து இருப்பவராகவும் இருக்கும் ஒருவரால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். புலம்பெயர்வை ஏன் இங்கு விசேடமாய்க் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் அவ்வளவு புழங்காத சூழலில் இருந்துகொண்டு, எழுதுவதின் கடினத்தைப் பற்றிச் சொல்கின்றேன். இவ்வளவு நிறையப் பக்கங்களில், புலம்பெயர்ந்த சூழலில் இருந்து வந்த படைப்புக்கள் எவையென்று யோசிக்கும்போது 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்', 'வரலாற்றில் வாழ்தல்' என்பவை உடனே நினைவிற்கு வந்தன. ஆனால் அவை தன் வரலாறு சார்ந்து எழுதப்பட்ட நூற்கள். புனைவின் எழுத்தின் வகைக்குள் வராதவை. தேவகாந்தனின் 'கனவுச்சிறை'யே நமக்கு முன்னோடியாக இருக்கின்றது. ஆனால் அதைக் கூட தேவகாந்தன் இலங்கை மற்றும் இந்தியாவில் -தமிழ் நன்கு பரிட்சயமான சூழலிருந்தே- பெரும்பகுதியை எழுதியிருக்கின்றார். அந்த வகையில் 'ஆதிரை' நம் புலம்பெயர்ந்த சூழலில் தொடங்கப்பட்ட, ஒரு பயணத்திற்கான முக்கிய காலடி எனத்தான் சொல்லவேண்டும்.

ஆதிரையில் முதல் அத்தியாயமாகவும் இறுதிஅத்தியாயமாகவும் இருப்பவற்றை ஏற்கனவே சிறுகதைகளாக வெளிவந்து அவற்றை வாசித்ததாகவும் நினைவிலுண்டு. ஆதிரை மூன்று தலைமுறைகளின் கதைகளைச் சொல்கின்றது. அதில் ஒரு குடும்பம் மலையகத்திலிருந்து வன்னிக்குள் கலவரங்களில் நிமித்தம் இடம்பெயர்கின்றது. இன்னொரு குடும்பம் வன்னிக்குள்ளேயே நீண்ட காலமாய் வசித்துவருகின்றது. இந்த இரண்டு குடும்பச் சங்கிலிகளுக்குள் வேறு குடும்பங்களும் முக்கியமான பாத்திரங்களாகவும் உதிரிகளாகவும் வந்து சேர்கின்றனர். அவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குள் வந்து சேர்கின்றவர்கள்தான் அத்தாரும், சந்திராவும். அவர்கள் தொடக்கத்தில் யாழில் இருந்து  வன்னிக்குள் வந்தது போரின் நிமித்தம் அல்ல; யாழ்ப்பாணிகளின் சாதித்திமிரிலிருந்து தப்பிவந்தே வன்னிக்குள் தமக்கான வாழ்க்கையை அமைக்கின்றனர்.

இந்நாவலில் வன்னிக்காடும், வேட்டை நுட்பங்களும் அற்புதமாய்ச் சித்தரிக்கப்படுகின்றன. காடும் காடு சார்ந்து வாழ்ந்த சங்கிலியினதும், மயில்குஞ்சனினதும் வாழ்க்கை எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மாறுகின்றன என்பதை நாவல் இயல்பாய் வாசிக்கும் நம்மிடையே எடுத்து வருகின்றது. பண்ணைகள் அமைத்து  அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்டவற்ற பண்ணைகளைச் சுவீகரித்து, இயக்கங்கள் தமக்கான தளங்களை வன்னிக்குள் அமைக்கத் தொடங்குகின்றபோது, காட்டிற்குள் செல்லும் உரிமை மறுக்கப்படும்போது சங்கிலி கொந்தளிக்கின்றார். மயில்குஞ்சன் காலப்போக்கில் இயக்கத்தோடு சேர்ந்து அவர்களது தாக்குதல்களுக்கு உதவி செய்யும் ஒருவராக மாறிப்போகின்றார்.

நாட்டின் எந்தப் பகுதியில் கலவரங்கள் நடக்கின்றபோதும் வன்னி ஒவ்வொரு பொழுதும் அதிர்கின்றது. இறுதியில் போர், வன்னிக்குள்ளும் கால் வைக்கின்றது. இராணுவம் அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்கின்றனர். இயக்கக்காரர்கள் திரும்பி இராணுவத்தோடும் பொலிசோடும் பொருதுகின்றனர். மக்கள் வீணாய்க் கொல்லப்படுகின்றார்கள் என்பதைக்  காரணங்காட்டி மற்ற இனமக்களையும் இயக்கம் கொல்கின்றது. இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், மீண்டும் இலங்கை இராணுவம் என்று இராணுவங்கள்தான் மாறுகின்றரே தவிர, யுத்தம் தொடர்கின்றது. அது ஏற்படுத்தும் அழிவுகளும் மனக்காயங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றது.

போருக்குள்ளும் மறுபுறத்தில் வாழ்க்கை தளிர்க்கின்றது. பிள்ளைகள் பிறக்கின்றனர் .அடுத்தடுத்த தலைமுறைகள் தோன்றுகின்றன. வழமைபோலவே பெண்களும் குழந்தைகளும் எதையும் பேசாது அல்லது அவர்கள் பேசுவதற்கான எந்த வெளிகளும் இல்லாமல் போகின்றது. அவர்களே ஆண்களை விட எல்லா இழப்புக்களையும், வடுக்களையும் தாங்குகின்றனர்.  நெருக்கமானவர்கள் கொல்லப்படுகின்றபோதும், காணாமற்போகும்போதும், இயக்கங்களுக்குப் போகும்போதும் இந்தப் பெண்களே தம் குடும்பங்களை வழிநடத்துகின்றனர். எல்லாத் துயரங்களோடும் அடுத்ததலைமுறையை வளர்த்து ஆளாக்கியும் விடுகின்றனர்.

வ்வளவு பெரிய நாவல் பல்வேறுதளங்களில் ஊடறுத்துச் செல்வதற்கான வெளிகள் இருக்கின்றன. ஆனால் நாவல் புலிகள் ஆதரவு மற்றும் எதிர் என்று இரண்டு தளங்களுக்குள் அப்பால் நகரக் கஷ்டப்படுகிறது. அதிலும் அவ்வப்போது உரையாடும் பாத்திரங்கள் மூலமே எதிர் விமர்சனம் வருகின்றதே தவிர, முழுமையாக வரவும் இல்லை. ஒரு படைப்பாளி ஒரு சார்பு எடுத்து எழுதுவதில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால் ஒரு படைப்பு எப்போது நம்மால் மறக்கமுடியாத நாவலாக மாறுகின்றதென்றால் ஒரு பாத்திரம் அதன் பலவீனங்களுடன் என்றாலும் அதற்குரிய நியாயத்தைக் கொண்டிருப்பதை வாசக மனதில் பதிய வைப்பதில்தான் இருக்கிறது.  ஏன்  எப்போதே எழுதிய ரஷ்ய நாவல்களை இன்றும் விதந்தோத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால் அவர்களின் நாவல்களில் இருந்த பலவீனமான மனிதர்களாயினும் நாம் அவர்களைக் கடந்துபோக முடியாத பாத்திரங்களாய்ப் படைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணம் எனலாம்.

புலிகள் மீது ஒரளவு விமர்சனங்களை வைப்பது சந்திரா என்கின்ற பாத்திரம் மட்டுமே. அந்தப் பாத்திரத்திற்குள் கூட உள்ளே நுழைய சயந்தன்  அவ்வளவு மினக்கெடவில்லை. ஒரு தீவிர புலி அனுதாபியான அத்தாரை, சந்திரா அவ்வப்போது கேள்விகளால் மடக்கின்றாரே தவிர வேறு எந்த நுட்பமான விமர்சனங்களையும் நாவலில் எளிதாய்ப் பார்க்கமுடியவில்லை.  அத்தார் கூட, இளமையில் ஒரு கம்யூனிஸ்டான இருந்த அவர் பின்னாளில் தேசியவாதியாக மாறுகின்றார் என்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. புலிகளால் கொல்லப்படுவதற்காய்த் தேடப்பட்ட எத்தனையோ பேர் பின்னாட்களில் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக மாறியதை நாமறிவோம். அது மட்டுமின்றி அவர்களின் ஒருவகையினர் இன்றும் கூட இத்தனை நிகழ்ந்தபிறகும் புலிகளின் எல்லாவற்றையும் ஆதரிப்பதையும் காண்கின்றோம். அந்தவகையில் சயந்தன் இறுதிப்போர்க்கட்டங்களில் நிகழ்ந்த கட்டாய ஆட்சேர்ப்புக்களை மறைக்காமலும், அதை எந்தவகையிலும் நியாயப்படுத்தாமலும் உள்ளதை உள்ளபடி எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது.

இந்த நாவல்  இத்தனை நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதப்படுகின்றதென்றால், பல்வேறு அடுக்குகளில் இது இன்னும் விரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது. வாசிப்பவர் இந்தப் பாத்திரம் சரியா அல்லது தவறா என்று யோசிப்பதற்கான வாய்ப்புக்கள் அநேக பாத்திரங்களுக்கு வழங்கப்படவில்லை. உதாரணமாக புலிகள் அனுதாதபுரத்தில் சிங்கள மக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இந்திய உளவுத்துறையினர். எல்லா இயக்கங்களும் சேர்ந்து இருந்த கூட்டத்தில் இந்தப் படுகொலையை யார் நிகழ்த்தப்போகின்றீர்கள் எனக் கேட்கப்பட்டபோது ஏனைய இயக்கங்கள் தயங்கியபோது, புலிகள் முன்வந்ததை புளொட்டில் அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஆவணப்படுத்தியிருக்கின்றார்.

ஏன் இத்தனை பெரிய நாவலில் நம் இயக்கங்களின் வளர்ச்சியை இயல்பாக விடாது பயிற்சி முகாங்களும், ஆயுதங்களும் அள்ளிக்கொடுத்து ஊதிப்பெருப்பித்த இந்தியாவின் அரசியல் கோரமுகம் வெளியே வரவில்லை. சிங்கள அரசு மற்றும் இராணுவத்தின் கொடும் முகங்களை இந்தளவிற்குக் காட்டமுடியுமென்றால் மெளனமான பெரும் தந்திரம் நிறைந்த இந்தியா எப்படி நம் போராட்ட வரலாற்றிலிருந்து தப்பிவிட முடியும். இந்திய அரசினதும், உளவுத்துறையினதும் பங்கின்றி நாம் நமது போராட்டங்களின் வரலாற்றை எப்படி எழுதிவிடமுடியும்?

மேலும்,  புலி ஆதரவு  X எதிர்ப்பு என்ற பாத்திரங்களைத் தவிர வேறு எந்த விதிவிலக்கான பாத்திரங்களும் இந்ந்தாவலில் வளர்க்கப்படவில்லை. முக்கியமாய் முஸ்லிம் பாத்திரம் எதையுமே இந்த நாவலில்  காணவேயில்லை. அப்படி ஒரு பாத்திரம் படைக்கப்பட்டிருந்தால் இந்த நாவல் இன்னும் ஆழத்திற்குள் இறங்கியிருக்கும். அதே போன்றே புலிகள் சாராத இன்னொரு இயக்கத்தின் முன்னாள் போராளியின் பாத்திரத்தைக் கொண்டு வந்திருக்கலாம். அதன் மூலம் நமது போராட்டத்தின் உரையாடலை இந்த நாவலில் வளர்த்தெடுத்திருந்தால் எத்தனை அற்புதமாக  இந்நாவல் உருமாறியிருக்குமென  வாசிக்கும்போது நினைத்துக்கொண்டிருந்தேன்.

யந்தனின் சமகாலத்தவனாக இருப்பதால் இந்த நாவல் வாசிப்பில்  அது பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஆனால் நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளைத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் என்ற நினைப்பே வந்தது. இந்த நாவலிற்குள் சயந்தனின் அழகான மொழி நடை  கூடவே வந்ததால் வாசிப்பு அவ்வளவு தடைசெய்யவில்லை. இப்போது நமது ஆயுதப்போராட்டம் குறித்து நிறைய  புதினங்கள் வரத்தொடங்கியிருக்கும் காலத்தில் ஒரு படைப்பாளிக்கு படைப்பைத் தருவதில் மிகப் பெரும் சவால் இருக்கின்றதென நினைக்கின்றேன். நமது ஆயுதப்போராட்டத்தின் இறுதியில் என்ன நடந்தது என்பதற்கு அப்புவின் 'வன்னி யுத்தம்' , யோ.கர்ணனின் 'கொலம்பஸின் வரைபடம்', தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' என்பவை நம் முன்னால் இருக்கின்றன. இன்னொரு புறம் புலிகளின் போராட்டங்கள் பற்றிக்கூற பெண்புலிகளின் போராட்டத்தின் பங்களிப்பைக் கூற 'விழுதுமாகி வேருமாகி', 'மலைமகள் கதைகள்', 'மேஜர் பாரதியின் படைப்பு'க்கள் என நிறைய ஏற்கனவே முன்னரே வெளிவந்திருக்கின்றன. இன்னொரு புறத்தில் 'விடமேறிய கனவு', 'பொக்ஸ் கதைப்புத்தகம்' என புனைவின் நுட்பங்களுக்கு உதாரணங்களாய் இருக்கின்றன.

நிறைய வாசிப்பதென்பது ஒருவித பலவீனமோ என யோசித்த தருணமும் ஆதிரையை வாசித்தபோது எனக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆதிரையின் நிறைய இடங்கள், எனக்கு வேறு படைப்புக்களை நினைவூட்டிக் கொண்டிருந்தது. உதாரணமாக மிகச் சிறப்பாக ஆதிரைக்குள் வடிவமைக்கப்பட்ட வெள்ளையக்கா என்கின்ற மலரின் பாத்திரம் எனக்கு  வெற்றிச்செல்வியின் 'போராளியின் காதலி'யின் முக்கிய பாத்திரத்தை நினைவூட்டிக்கொண்டிருந்தது. ஆதிரையில் வரும் சித்திரவதைக்கூடங்கள் பற்றிய சித்தரிப்பு விடமேறிய கனவின் பக்கங்களையும், இறுதிப்போர் பற்றிய சித்திரங்கள் அப்புவின் 'வன்னியுத்தத்தையும்', கொலம்பஸின் வரைபடத்தை'யும் நினைவுபடுத்தியிருந்தன. இதன் அர்த்தம் ஆதிரை அவற்றைப் பின்பற்றியது என்பதல்ல. ஒரு வாசக மனது எந்தத்திசையில் சிந்தித்தது என்பதைச் சொல்வதற்கு மட்டுமே.

ஆகவே இனி நமது படைப்பாளிகளுக்கு முன்னாலுள்ள பெரும் சவால் என்னவென்றால் உம்பர்த்தோ ஈக்கோ ஓரிடத்தில் சொல்வதுபோல, ‘வாசகருக்கு எது வேண்டுமெனத் தெரிந்து எழுதுவதல்ல. நமது ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்றமாதிரி வாசகரை மாற்றுகின்ற வித்தையை நாம் எழுத்தினூடாக அறியவேண்டியிருக்கின்றது' என்பது பற்றியே நாம் யோசிக்கவேண்டியிருக்கின்றது. அதுவே நம் எல்லோருக்கும் முன்னால் உள்ள சவால். அதை எப்படி எதிர்கொள்கின்றோம், தாண்டிச் செல்கின்றோம் என்பது குறித்து இனி நாம் அக்கறைப்பட வேண்டியிருக்கின்றது..

ஷோபாசக்தியின் 'கொரில்லா' வந்தபோது அதை வியந்து ஷோபாசக்தியின் காலத்தைய ஒரு இயக்க நண்பரோடு உரையாடியிருந்தது நினைவுக்கு வருகிறது. இதிலென்ன இருக்கின்றது இதைவிட நிறைய விடயங்கள் எனக்குத் தெரியும் என அந்த நண்பர் சொன்னபோது எனக்கு கோபமே வந்தது. இப்போது ஆதிரையை பற்றிப் பேசும்போது அதேதான் ஞாபகம் வருகின்றது. சயந்தனின் சமகாலத்தவனாக நானும் இருப்பதால் எனக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளின் தொகுப்பாக இருப்பதால் என்னால் இதை ஒரு மிகச்சிறந்தநாவலாக முன்வைக்கமுடியாது எனச் சொன்னால் நான் 'கொரில்லா'விற்காய் கோபப் பட்டத்தைப் போல யாரேனும் ஒருவர் கோபப்படக்கூடும். அதைப் புரிந்துகொள்ளமுடியும்.

நாவலிற்கான திறனாய்வுகள் என்பது அடுத்து எழுதுவதற்கு ஏதோ ஒருவகையில் உதவும் என்கின்ற முறையில் நம்புகின்றவன். வெளிப்படையாக நாம் வாசிப்புக்களை வைக்கும்போதே நாம் நம் வாசிப்புக்களுக்கு நேர்மையாகவும், அதேவேளையில் படைப்பாளிக்கு உந்துசக்தியாகவும் இருக்கமுடியுமெனவும் நினைப்பவன். ஒரு சிறந்த படைப்பு அது வெளிவரும் காலத்தைய புகழ்ச்சிகள் தூற்றல்கள் என்பவற்றைத்தாண்டி எதிர்காலத்தில் தன்னை நிலைநிறுத்தும். அது வெளியிலிருந்து அல்ல, ஒரு நாவல் அது தன்னியல்பிலேயே தனக்கான வாசகர்களைக் கண்டடைந்துகொள்ளும். சயந்தனின் 'ஆதிரை யும் அப்படித் தன்னை எதிர்வரும் காலங்களில் மீளக் கண்டடையவேண்டும் என பிரியப்படுகிறேன்.

 (கனடாவில் நடந்த 'ஆதிரை' நூல் வெளியீட்டில் நிகழ்த்திய உரை)