கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அல்லிப்பூ குறிப்புகள்

Tuesday, January 17, 2017

ன்குலாப் அவர்கள் காலமானபோது, அவரது கவிதைகளில் பிடித்த ஒரு கவிதையான 'பவுர்ணமி இரவில் வந்தவரே' கவிதையைப் பகிர்வதற்காய் 'இன்குலாப் கவிதைகள்' தொகுப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். வீடு மாறியபின் ஐந்தாறு பெட்டிகளில் திறக்கப்படாது புத்தகங்கள் இருட்டறைக்குள் பதுங்கியிருக்கையில் அவற்றுள் பொறுமையாய் இதைத் தேடி எடுக்கவும் முடியவில்லை. அத்தோடு ஒவ்வொருமுறையும் எதையோ தேடப்போய் எவற்றையோ எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடுவேன். அசதா மொழிபெயர்த்த 'வீழ்த்தப்பட்டவர்களும்' பிரேம்-ரமேஷின் 'மகாமுனி'யும், ஷோபா சக்தியின் 'எம்.ஜி.ஆர்.கொலைவழக்கு'ம் மீள்வாசிப்பிறகாய் வெளிச்சத்திற்கு வந்ததுதான் மிச்சம்.

இன்குலாப் கனடாவிற்கு 2000களின் தொடக்கத்தில் வந்தபோது, அவரை நேரடியாகச் சந்திக்காவிட்டாலும் அந்த நிகழ்வில், 'ஈழத்தில் உங்களுக்கென ஒரு நாடு கிடைத்தாலும் போராட்டம் முடிந்துவிடாது. அதற்குப்பிறகு சாதிக்கு எதிரான போராட்டம் உங்களுக்காய்க் காத்திருக்கிறது' என அவர் அன்றைக்குச் சொன்னதைக் கேள்விப்பட்டபோது, ஓர் அசலனான போராட்டக்காரர் இப்படித்தான் இருக்கவேண்டுமென மகிழ்ந்திருக்கின்றேன்.

இப்போது நான் தேடிய கவிதையை ரசூல் தன் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைக் கண்டேன்.

"பவுர்ணமி இரவில் படகில் வந்தவரே
நதியலை மோதும் நாணல் புதரின் மறைவில்
வெண்மலர் விரிப்பில் நான் இருந்தேன்.
தண்ணீரில் உறங்கும் தாமரையின் கனவுகளாய்
அல்லிகள் விழிக்கும் தடாகத்தின் அருகில் தங்கள்
இதழ்களின் தீண்டுதலை எதிர்பார்த்திருந்தேன்.
உயிரின் ராகங்கள் உதடுகளில் உருகின.
புல்லாங்குழல் நான் புல்லரித்துப் போனேன்
வானத்தின் மீன்கள் வான முந்தானை சோர தங்கள்
கீத லயங்களில் கிறங்கிக் கிடந்தன.
இரவின் கனவுகள் ஓய்ந்து போகும் கருக்கலில்
தங்கள் கானம் நின்றது.
பவுர்ணமி இரவின் படகுக்காரரே
நதி நுரை அலைக்கும்
நாணல் புதர்களை விலக்கிச் செல்கையில்
மெதுவாய் செல்லுங்கள்
வழியில் தண்ணீர் வாத்துகள் அடைகாத்த
முட்டைகள் கிடக்கலாம்.
கால்கள் மோதிவிடாதிருக்கட்டும்"

இதில் வருபவன் சாதாரணக் காதலனாகவோ அல்லது ஒரு தலைமறைவுப் போராளியாகவோ இருக்கலாம். ஆனால் காதலி, வழியில் தண்ணீர் வாத்துக்கள் அடைகாத்த முட்டைகள் கிடக்கலாம், கவனமாக அதை விலத்திச் செல்லுங்கள்' எனச் சொல்கிறார். நீயெனக்குத் தந்த காதலின் அற்புதமான அனுபவத்தைப் போல, பிற உயிர்களின் மீதும் அன்பும் கவனமும் வையெனச் சொல்லும் நெகிழ்வான கவிதை. பத்து வருடங்களுக்கு முன் வாசித்தபோதும், இன்றும் நினைவில் வைத்துத் தேடினேனென்றால் அது ஆழ்மனதில் எங்கோ ஓரிடத்தில் தங்கியிருக்கின்றதெனத்தானே அர்த்தம்.
-------------------------

அளவெட்டி என்னும் அழகான ஊர்

அளவெட்டியோடு எனக்கு முதலில் பந்தம் ஏற்பட்டது எப்போது என்றால், இந்திய இராணுவகாலத்தில் பாடசாலை மூடப்பட்ட காலங்களில் அம்பலவாணர்(?) வீதியில் இருந்த வீடொன்றில் தங்கியிருந்த கணித ஆசிரியரின் வீட்டில் போய்ப் படித்ததோடு என்று நினைக்கின்றேன். கணிதமும் ஆங்கிலமும் படித்ததுபோக, மிகுதி நேரங்களில் அவரின் மகளோடான crushலில் பொழுதுபோக அளவெட்டி மறக்கமுடியாத ஊரானது. பத்து வயதிற்குள்ளேயே crush ஆ என வாய் பிளக்கக்கூடாது. 15/16 வயதுகளில் இயக்கத்திற்குப் போவதென்பது அன்றைய காலங்களில் சாதாரண நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது.

பின்னர் இந்திய இராணுவம் போனபின், இலங்கை இராணுவம் பலாலி, காங்கேசந்துறை, கீரிமலை என எல்லாப் பகுதிகளிலுமிருந்து வலிகாமம் வடக்கின் இடங்களைப் பிடிக்கத் தொடங்கிய காலத்தில், இரவுகளில் வீட்டில் தங்கப் பயந்து இரவில் சாப்பிட்டுவிட்டோ அல்லது சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு நாமெல்லோரும் போய் அளவெட்டியில் தெரிந்த ஒரு வீட்டில் போய் இரவில் தூங்கிவிட்டு விடிகாலையில் வருவோம்.
பின்னர் போர் முற்றி வீட்டு முற்றத்திற்கு வந்தபின், ஊரில் இருக்கமுடியாதென்று சங்கானை அங்கே இங்கேயென்று அலைந்துவிட்டு, அக்கா கற்பித்துக்கொண்டிருந்த அளவெட்டியிலிருந்த பாடசாலைக்கருகில் வந்து தங்கியிருந்தோம்.

அந்த வீட்டின் முன் சிறுவிறாந்தையும் ஒரு அறையும் எங்களுக்குக் கிடைத்திருந்தது. சமைப்பதற்கான குசினியாக முன்பு ஆடு, மாடுகளில் கொட்டிலாய் இருந்த இடத்தை வீட்டின் மறுகரையில் தந்திருந்தார்கள். அம்மா, மரத்தூளினால் நிரம்பிய அடுப்பில் ஊதியூதி சமைத்ததும், மழைக்காலங்களில் உணவை வீட்டிற்குள் எடுத்து வரக் கஷ்டப்பட்டதும் இன்றும் நினைவிலிருக்கிறது.
அப்போது எங்களது பாடசாலையும் மாலை நேரமாக அருணோதயாக் கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தமுறை அதைக் கடந்தபோனபோதும் நாங்கள் மதியத்தில் பாடசாலை தொடங்கக் காத்திருக்கும் அந்தப் பெருமரமும் கோயிலும் இப்போதும் அப்படியே நிற்பது தெரிய காலம் ஏதோ உறைந்துபோனது போலத் தோன்றியது.

அளவெட்டி எனக்கு மிகப்பிடித்த ஊர். இயற்கை வளங்களுக்கு மட்டுமில்லை, கலைகளுக்கும் குறைவில்லாத ஊர். மகாஜன சபையிற்கு அருகிலிருந்த சங்கக்கடையில் நிவாரணங்கள் வாங்கியதும், அதற்கருகில் இருந்த ஒரு கட்டடத்தில் தெல்லிப்பளை நூலகம் இடம்பெயர்ந்து இயங்கிய காலத்தில் நிறையப் புத்தகங்களை அங்கேயே வாசித்து முடித்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள். சுன்னாகத்திற்கு சென்று மிருதங்கம் பழகிய ஆசிரியர் அளவெட்டிக்கு வந்து வகுப்பெடுக்க, அவரின் மிருதங்க வகுப்பைக் கற்றத்தைவிட, கும்பிளாவளைக் கோயிலுக்கு வந்த பிள்ளைகளில் மனம் அலைபாய்ந்ததுதான் அதிகம்.

இதையெல்லாவற்றையும் விட எனது முதற்காதலியும் அளவெட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ஊருக்குத் நன்றி கூறாதிருத்தல் அழகில்லை. இது எத்தனையாவது 'முதற்காதல்' எனக் கேட்கக்கூடாது. வழமையான என் ஒருதலைக்காதல்களைப் போலவில்லாது (நன்றி மடலேறும் நிலைக்கு கொண்டுவராமையிற்கு) அவருக்கும் ஏதோ 'பேய்' பிடித்து என்னை ஒருகாலத்தில் நேசித்திருந்தார். பொன்னொச்சி மரங்கள் பூச்சொரிய மறந்தாலும் அவரின் அந்த அழகிய சிரிப்பை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.

ஒரு புகைப்படம், இவ்வளவு நினைவுகளைக் கிளர்த்துமா தெரியாது; நினைவூட்டிற்று நண்பனின் இந்த அளவெட்டிப் படம்.
(photo- Dinesh)
------------------

'அச்சம் என்பது மடமையடா' எடுத்து, எங்கள் தலையையும் அச்சமின்றி சுவரில் மோதவைத்த கெளதம் வாசுதேவனிற்காய் 2 குறிப்புகள்.

(1) வேலைத்தளங்களில் conflict of interest என்ற ஒருவிடயம் இருக்கின்றது. அதாவது வேலையிடங்களில் ஒருவருக்கு இருக்கும் தகுதியை வைத்து அதன் மூலம் மற்றவர்களில் advantage எடுக்கக்கூடாது என்று சுருக்கமாக இப்போது வைத்துக் கொள்வோம். அதில் ஒருவிடயம் எவ்வகையான தனிப்பட்ட உறவிற்கும் அங்கே இடமில்லை என்பது. அதுபோலவே உங்களின் படங்களில் இனி தயவு செய்து மேல்வீடு, கீழ்வீடு, பக்கத்து வீடு மட்டுமில்லாது அந்தத் தெரு முழுதும், வந்து தங்கும் எந்தப் பெண்ணோடும் காதல் வந்து எங்களைக் கழுத்தறுக்காது விடவேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.

(2) உங்களின் படங்களில் பொலிஸை glorify செய்வது, என்கவுண்டர் செய்வதை நியாயப்படுத்துவது என அலுக்கும் வரை மட்டுமல்ல எங்களுக்கு எரிச்சல்வரும்வரை சொல்லிக்கொண்டேயிருக்கின்றீர்கள். இதிலும், கெட்டவர்களாயிருந்ததால் எல்லாரையும் போட்டுத்தள்ளுகின்றீர்கள், ஆனால் பொலிஸ் மட்டும் கெட்டவராக இருக்கும்போது அவரைப் போட்டுத்தள்ள, 4 வருடங்கள் காத்திருந்து (எங்களுக்கும் கொட்டாவி வரச்செய்து) பொலிஸாகிப் போட்டுத்தள்ளுகின்றீர்கள். அது என்ன பொலிஸுக்கு மட்டும் விதிவிலக்கு. ரெளடியாக இருந்தாலும் அவர்கள் மனிதர்களில்லையா? அல்லது பொலிஸாக இருந்தாலும் அவர் ரெளடியில்லையா?

இங்கேதான் குசும்புத்தனம் அல்ல, வாழைப்பழத்தில் விஷத்தை ஊற்றுவதைப் போன்ற விசமத்தனம் உங்களிலிருக்கின்றது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகின்றோம்.. தமிழர்கள் என்றாலே மலையாள மேனன், நாயர்மார்களுக்கு கண்ணிலே அவ்வளவு காட்டக்கூடாது என்று உளவுத்துறையில் இருப்பவர்களைப் பார்த்தாலே (அவர்கள் செய்வது/எழுதுவதைப் பார்த்தாலே) தெரியும். அதுவும் மலையாள ரா ஆசாமிகளுக்கு ஈழத்தமிழர்கள் என்றாலே உச்சிமோர்ந்து முத்தமிடுகின்ற அளவுக்கு அந்தளவு அன்பிருக்கின்றது.

சீமான் போன்றவர்களே 'நான் தமிழன்டா' என்று ஒரு வார்த்தையை அவர்களின் படங்களில் வைத்ததாய் நினைவினில்லை. நீங்கள் மட்டும் இந்திபேசும் பொலிஸ்காரனிடம் 'நான் தமிழண்டா' என்று ஒரு டயலாக்கை வைக்கும்போது ஆகா, அடடா எங்களுக்குப் புல்லரிப்புத்தான் வருகின்றது. சரி 'நான் தமிழண்டா' என்று சொல்லி பெருமைகொள்வது உங்களின் விருப்பெனவே வைத்துக்கொள்வோம். அப்படிச் சொல்ல வரும்போது நீங்களும் அந்த வாசுதேவ 'மேனனை' எடுத்துவிட்டு வரலாமே அன்பரே.
---------------------

0 comments: