கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Genius திரைப்படமும், தமிழில் எடிட்டர்களும்..

Friday, January 20, 2017

மிழ்ச்சூழலில் இன்னும் படைப்புக்களைச் செம்மையாக்கும் எடிட்டருக்கான தேவை உணரப்படவேயில்லை. எத்தனையோ சுமாரான நாவல்களை நல்ல நாவல்களாக்குவதற்கும், நல்ல படைப்புக்களை சிறந்த படைப்புக்களாக்குவதற்கும் ஒரு எடிட்டர் அவசியம் தேவைப்படுகின்றார். படைப்பாளிக்கும் எடிட்டருக்குமான உறவு என்பதும் கத்திமுனையில் நடப்பது போலத்தான். படைப்பவருக்கு தான் கஷ்டப்பட்டு எழுதியதை கத்தரிக்கின்றார் என எடிட்டர் மீதும், தேவைக்கு அதிகமின்றி இருப்பதை வெட்ட ஏன் இவரேன் தயங்குகின்றாரென படைப்பாளி பற்றி எடிட்டரும் நினைப்பதால் வரும் மனவருத்தங்கள், இரண்டு பேருக்குமான நல்ல பரஸ்பரப்புரிந்துணர்வால் மட்டுமே கடந்துபோகக்கூடியவை.
Genius என்கின்ற இந்தப்படம் Max Perkins என்கின்ற எடிட்டரைப் பற்றிய படம். அவர் Ernest Hemingway, Scott Fitzgerald, Thomas Wolfe போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் சில நூற்களை திருத்திச் செம்மையாக்கி வெளியிட்டிருக்கிறார். பல்வேறு பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டு தமது முதற்படைப்பை வெளியிடத் திணறிய Scott Fitzgerald, Thomas Wolfe போன்றவர்களை Max Perkinsயே முதன்முதலில் கண்டுபிடித்து நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.
இந்தப் படத்தில் எர்னஸ்ட், ஸ்கொட் போன்றவர்கள் இருந்தாலும் அவர்கள் உபபாத்திரங்களாய் இருக்க, Thomas Wolfeற்கும் Max Perkinற்கும் இடையிலான படைப்பாளி-எடிட்டர் உறவே இதில் முக்கியப்படுத்தப்படுகின்றது. எர்னஸ்ட்டும், ஸ்கொட்டும் மிகக் கச்சிதமான சொற்களில் சிறிய நாவல்களை எழுதிக்கொண்டிருக்க, தோமஸோ சொற்கள் வழிந்தோட பெரும் நாவல்கள் எழுதுகின்றார். எப்போதும் எழுதிக்கொண்டிருப்பதில் பித்துப்பிடித்தவரோ என்று நினைக்குமளவிற்கு தோமஸ் நிறைய எழுதித் தள்ளுகின்றார். அதன்பொருட்டு தன் காதலியை, இன்னபிற வாழ்வின் உன்னதமான விடயங்களைக் கூட இழக்கின்றார். ஒருவகையில் எழுத்தைத் தவிர வேறொன்றுமே அவருக்குப் பெரும் விடயங்களாகத் தெரிவதேயில்லை. முதல் நாவலில் ஏதோ ஒருவகையில் அவரது குடும்ப உறவினர்களையும், அவர் வாழ்ந்த நகரையும் பிழையாகச் சித்தரித்து அவமானப்படுத்திவிட்டார் எனக் கோபத்தில் இருந்த அவரது நகர மக்கள், இரண்டாவது நாவலில் அவர் தமது நகரத்தைப் பற்றி எதையும் எழுதவில்லை என்றும் கோபித்திருக்கின்றனர் என்பது ஒரு முரண்நகை.
Look Homeward, Angel மற்றும் Of Time and the River ஆகிய தோமஸின் இரண்டு நாவல்களும் மக்ஸால் மிக நுட்பமாகத் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு பெரும் புகழை தோமஸ் வாழ்ந்த காலத்திலே பெற்றிருக்கின்றன. பின்னர் மக்ஸோடு ஏற்பட்ட முரண்பாடுகளாலும், பெரும் பதிப்பகங்கள் தேடி வந்ததாலும் தோமஸ் வேறு பதிப்பகங்கள் மூலம் தன் படைப்புக்களை வெளியிட்டாலும், அவரது நாவல்கள் முன்னரைப் போல அந்தளவு பிரபல்யம் அடையவில்லை. மேலும் தோமஸ் தனது இளவயதில்(37) காசநோயால் மரணமடைய, அவரின் இறப்பின் பின்னாலே அவர் எழுதிமுடித்த பல படைப்புக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தோமஸின் எழுத்து, அவருக்குப் பின்னால் வந்த பல படைப்பாளிகளில் ( Jack Kerouac, Ray Bradbury) பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. காசநோய் முற்றி, மரணம் நெருங்கிவிட்டதென்பதை அறியும் தோமஸ், சில காலம் தொடர்புகளின்றி இருக்கும், தனது தொடக்க எடிட்டரான மக்ஸிற்கு எழுதும் இறுதிக் கடிதம் மிகவும் உருக்கமானது.
இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது சென்ற ஆண்டு வாசித்த நாவல்களான தேவிபாரதியின் 'நட்ராஜ் மகராஜ்'ஜையும், தேவகாந்தனின் 'கந்தில் பாவை' பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். இவ்விரு நாவல்களுக்கும் நல்ல எடிட்டர்கள் கிடைத்திருந்தால் 50-100 பக்கங்களைக் கறாராகக் கத்தரித்து, சில மாற்றங்களை உட்புகுத்தி செம்மையாக்கியிருந்தால், தமிழில் மிகச்சிறந்த நாவல்களாக இவற்றை ஆக்கியிருக்கலாம் போலத் தோன்றியது.

0 comments: