கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு நாவல் மற்றும் ஒரு திரைப்படம்

Saturday, February 18, 2017

மனாமியங்கள்

சல்மாவின் `மனாமியங்களில்` மெஹரும், பர்வீனும் துயரங்களின் கடலில் தத்தளித்தபடி இருக்கின்றார்கள். எப்போதெனினும் நம்பிக்கையின் ஒரு இறகு அலைகளில் மிதந்து வந்து கரையேற்றாத எனத் தங்களுக்குள் கரைந்தபடி கனவுகள் காண்கின்றார்கள். ஒருவகையில் மனாமியங்கள் மூன்று தலைமுறைப் பெண்களின் கதைகளைச் சொல்ல விழைகிறது. மூத்ததலைமுறை எல்லாவற்றையும் தன்னியல்பிலே ஏற்றுக்கொள்கின்றது. பர்வீன்/மெஹர் போன்ற அடுத்த தலைமுறை தனக்கான தவறுகளிலிருந்து பலவற்றைக் கற்றாலும், மீளத் திரும்ப முடியாக் காலங்களிற்குள் சிறைப்படுகின்றார்கள். அடுத்த தலைமுறையாக வரும் சாஜிதாவிற்கு முன்னிருந்த தலைமுறைகளைவிட நடந்துசெல்வதற்கான எல்லைகள் நீண்டபடி இருக்கின்றன. எனினும் எங்கோ அது அடைபட்டுவிடும் என்கின்ற பதற்றங்களும் பயங்களும் கூட ஒரு நிழலைப்போலப் பின்தொடர்ந்தபடி இருக்கின்றன.

சாதாரண பெண்களுக்கு இருக்கின்ற குறுகிய பரப்பிற்குள் நின்றே கதையைச் சொல்லவேண்டிய நிர்ப்ப்பந்தம் இருக்கின்றபோதும், கிட்டத்தட்ட 300 பக்கங்கள் நீளும் நாவலில் அவ்வப்போது ஒன்றையே திரும்பத்திரும்ப வாசிக்கின்றோமோ என்ற சலிப்பு வருகின்றது. இதுதான் இயல்பு அல்லது யதார்த்தம் எனச் சொன்னாலும், ஏன் சல்மா `நடக்காத விடயங்களை` நோக்கி நகரவில்லை என்ற கேள்வி வந்துகொண்டேயிருந்தது. கணவன் இரண்டாந்திருமணம் செய்தபின், தனக்கான இன்னொரு திருமணத்தைச் செய்கின்ற மெஹருக்கு குழந்தைகள் பிரிக்கப்படுகின்ற துயரம் இருந்தாலும், ஆகக்குறைந்தது அபியோடு கொஞ்சக்காலம் எனினும் மகிழ்ச்சியாக இருந்திருக்கூடாதாவென யோசித்துப் பார்த்தேன். அவ்வாறே பர்வீனுக்கு கணவனின் தள்ளிவைப்பிற்கு பின் அரிதாகக் கிடைக்கும் நட்பான மூர்த்தியோடு தொலைபேசி உரையாடல்களுக்கு அப்பால் இன்னும் சற்று நகரமுடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..

அலுக்க அலுக்க துயரத்தையும், அழுகையையும் (அதுதான் நம் பெரும்பாலானர்க்கு வாழ்க்கையில் இயல்பு என்றாலும்) நாவல் முழுதும் சொல்லிக்கொண்டிருக்காது வேறு பல சாத்தியங்களையும் மனாமியங்கள் பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். இன்னும் புதிய பல வெளிச்சங்களை அது இந்த நாவலுக்குக் கொடுத்திருக்கவும் கூடும். என்றபோதும் முஸ்லிம் பெண்பாத்திரங்களை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலினூடு இன்னும் நெருக்கமாக முஸ்லிம் கலாசாரத்தையும், அது பெண்களுக்கு நெகிழ்வாகத் திறக்கும் யன்னல்களையும், அவ்வப்போது நெரித்து மூடும் கதவுகளையும் அறிந்துகொள்ளலாம்.


Papa 
(Hemingway in Cuba)

எர்னெஸ்ட் ஹெமிங்வே கியூபாவில் இருந்தபோது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஹெமிங்வேயிற்கும், மியாமியில் இருக்கும் ஓர் இளைய பத்திரிகையாளருக்கும் முகிழும் நட்பு பற்றியும், அவரினூடாக ஹெமிங்வேயின் இறுதிக்கால வாழ்வின் சிக்கல்கள் சித்தரிக்கப்படுகின்றன. கியூபாவில் பாட்டீஸ்டா ஆட்சிக்காலத்தில் ஃபிடலின், இராணுவத்தலைமையகத்தைக் கைப்பற்றும் முயற்சி தோற்கடிக்கும்போது ஹெமிங்வே சாட்சியாக நிற்கின்றார். ஏற்கனவே ஸ்பானிய உள்நாட்டுப்போரில் கிளர்ச்சியாளர்களின் பக்கம் நின்று போராடிய ஹெமிங்வே, கியூபாவிலும் புரட்சியாளர் பக்கம் நிற்கக்கூடுமென்ற சந்தேகத்தில் அமெரிக்க உளவுத்துறையும், கியூப அரசும் அவரை நெருக்கடிக்குள்ளாக்கும்போது, ஹெமிங்வே அங்கிருந்து தப்பி அமெரிக்காவிற்கு சென்ற 18 மாதங்களின் பின் தற்கொலை செய்துகொள்கிறார்.


எழுத்தின் மீது பித்துப் பிடித்தலைந்த ஹெமிங்வேயிற்கு இறுதிக்காலங்களில் எழுதுவது கைநழுவிப்போவது பிரச்சினையைக் கொடுக்கின்றது. அதுபோலவே அவருக்கும் அவரது மனைவிற்குமான பிணக்குகள், ஹெமிங்வேயிற்கு இயல்பாகவே அவரின் குடும்ப மரபணுக்களால் கடத்தப்பட்டிருக்கும் உளவியல் சிக்கல்கள் என நாம் இந்தத் திரைப்படத்தில் வேறொருவிதமான ஹெமிங்வேயைப் பார்க்கின்றோம். இவ்வளவு அற்புதமாய் எழுதிய, நோபல் பரிசு போன்ற புகழ் வெளிச்சத்தில் மினுங்கிய ஹெமிங்வே அகமும் புறமுமான நெருக்கடிகளால் இறுதியில் அடம்பிடிக்கும் ஒரு குழந்தையைப் போல ஆகிவிடுகின்றார். ஆனால் அதைத் துயரமாக அல்ல, இவ்வாறு ஆகுதலும் மனித வாழ்வில் இயல்புதானென ஹெமிங்வே மீது பித்துப்பிடித்தலைபவர்கள் (என்னைப் போன்றவர்கள்) அவரை வெறுக்காது, இன்னமும் நெருக்கான ஒருவராய் தமக்குள் ஆக்கியும் கொள்ளவே செய்வார்கள்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

0 comments: