கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அங்கமலி டயரிகள்

Monday, November 06, 2017


ருவருடைய வாழ்வை அவரது தெரிவுகளே தீர்மானிக்கின்றன. தெரிவுகள் எங்கிருந்து வருகின்றன எனப் பார்த்தால் ஒருவகையில் அவர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் உலகினுள் இருந்து வருகின்றன என எடுத்துக்கொள்ளலாம். சிறுவர்களாகவும்/பதின்மர்களாகவும் இருக்கும் பலர் தமக்கான முன்மாதிரிகளை, தமக்கு முன்னிருக்கும் தலைமுறையில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் தெரிவுசெய்யும் நபர்கள் அல்லது விடயங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதிலிருந்தும், ஒருவருக்கான எதிர்கால வாழ்க்கை பிறகு தீர்மானிக்கப்பட்டும் விடுகின்றது.

அங்கமாலியில் வளரும் பதின்மர்கள், ஊரில் 'பிரபல்யம்' வாய்ந்த சண்டைக்காரர்களாகவும், விளையாட்டுக்காரர்களாவும் இருப்பவர்களின் சுவடுகளைப் பின் தொடர்கின்றார்கள். இந்தப் பதின்மர்கள் சற்றுப் படிப்பில் மூழ்கினாலும், பிறகு 'ரெளடி'களாக மாறி விடுகின்றார்கள். பணம் கொழிக்கும் பன்றி இறைச்சி வியாபாரம் செய்கின்றார்கள். அவர்களுக்குள் கொலைகள் நிகழ்கின்றன. பல்வேறு காதல்கள் வருகின்றன. ஓரு சாதாரண ஊர் எப்படி இருக்குமோ அப்படியாகவும், அதன் இயல்பும், கசப்பும்,மகிழ்வும் குலையாத மனிதர்களையும் 'அங்கமாலி டயரிகளில்' நாங்கள் பார்க்கலாம்.

ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட ஒரு கதைதான் அங்கமலி டயரிகளில் ஓடுகின்றது. ஆனால் அதைச் சொல்லிய விதத்தால் நாம் கதையினுள்ளே போய்விடுகின்றோம். இந்தத் திரைப்படத்தில் காட்டப்படுகின்ற உணவுக்காட்சிகளை வாயூறிப்பார்க்காமல் எளிதில் கடந்துவிடமுடியாது. மது அருந்துவாய் இருந்தாலென்ன, தேநீர் குடிப்பதாய் இருந்தாலென்ன, அதையும் அவ்வளவு அழகியலோடு காட்சிப்படுத்துகின்றார்கள். அதேபோல் பின்னணி ஒலி செய்கின்ற சாகசங்களையும் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.

த்து நிமிடங்களுக்கு மேலாய் long shotயாய் எடுக்கப்பட்ட இறுதிக்காட்சியையோ அல்லது 80பேருக்கு மேலே புதுமுகங்களைக் கொண்டது இத்திரைப்படம் என வியப்பதை விட, வேட்டியை மடித்துக்கட்டியபடி அம்மாவின்/தங்கையின் பாசத்திற்குள் இருந்தபடியும் பல்வேறு காதல்/காதலிகளைக் கொண்ட அந்த முக்கியபாத்திரம் அவ்வளவு கவர்கின்றது. திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, ஒலியமைப்பென எல்லாம் அற்புதமாய் இயைந்து வந்திருக்கின்ற ஒரு படம், இந்த ஆண்டில் மலையாளச்சினிமாவில் அதிக வசூல் குவித்த ஒரு படமாய் இருப்பதும் கேரள சினிமா உலகில் மட்டுமே நிகழக்கூடிய ஒருவிடயம் போலத்தான்படுகிறது.

இத்திரைப்படத்தில் வழமையான இவ்வாறான கதைகளுக்கு இறுதியில் வரும் ஒரு துயரமான முடிவை வைக்காதது பிடித்திருந்ததெனினும், முடிவை நெருங்கும்கட்டத்தில் வழமையான எங்கிருந்தோ வரும் ஒரு வில்லனை கொண்டுவராது தவிர்ந்திருக்கலாம் போலவும் தோன்றியது. இந்தப் படத்தின் ஒரு குறைப்பாடாய்த் தெரிந்தது, இதில் ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகள் நிகழ்கின்றன, ஆனால் ஒரு கொலை மட்டுமே அனைவரையும் பாதிக்கின்றதாய் இருக்கின்றது என்பதுதான். இந்தளவிற்கு கொலைகளை எளிதாய்க் கடந்துபோய்விட முடியுமா என்பது ஒருபுறமிருக்க, மலையாளப் பொலிஸ் அநியாயத்திற்கு இவ்வளவு நல்லவர்களாய் இருப்பார்கள் என்று வியக்கும்படியாக வருகின்றனர்.

இந்த சுவாரசியமான 'அங்கமலி ரெளடிகள்' வழமையாக மற்றக் கோஷ்டிகளோடு/ஊர்ச்சனங்களோடு அடிபடும் ரெளடிகளாக மட்டும் இருந்து, படத்தில் கொலைகளைச் செய்யும் சந்தர்ப்பங்களை தவிர்த்திருந்தால், இன்னும் அதிகம் அவர்களை நேசிக்கும்படியாக இருந்திருக்குமோ என்றொரு எண்ணம் வராமலுமில்லை. 'கம்மட்டிப்பாடம்' படம் அற்புதமாக விரிந்து பின்னர் ஒரு பழிவாங்கலாய் மட்டும் சுருங்கும்போது சட்டென்று ஒருவிலகல்  அப்படத்தின் மீது வந்ததோ ('மெட்ராஸ்' படத்திலும் அப்படியே, அன்பு பாத்திரம் கொலையாகின்றதுவரை) இந்தப் படத்திலும் எதிராளியின் மனைவியின் தம்பியை, ஒரு வில்லனாக முன்னிலைப்படுத்தும்போது படத்துடனான ஒரு இடைவெளி வந்திருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வந்தது. இருப்பினும், நம் எல்லோருக்கும் யாரோ ஒரு 'அங்கமாலி ரெளடி' உறைந்துபோய் இருக்கின்றான், வெளியில் வரும் அளவில் தான் கூடக் குறைந்து இருக்கின்றான் என்றவளவிற்கு எங்களையும் உணரச்செய்வதற்காய் நாமிந்தப் படத்தை எடுத்த விதத்திற்காய் வரவேற்றாகவேண்டும்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

0 comments: