கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசித்தலின் பேரின்பம்

Monday, December 11, 2017

1.
நண்பர் இரவு தூக்கம் வரவில்லை, கதை எதையாவது வாசித்துக் காட்டு என்றபோது பிரேம்-ரமேஷின் மகாமுனியை விரித்து 'கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள்' கதையை அவருக்காக வாசிக்கத் தொடங்கினேன். இன்னும் திருத்தமாகச் சொல்லவேண்டுமானால் கதையின் தலைப்பு 'ஜூலை 14, 1789 அன்று கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள்'. நீண்ட இந்தக் கதையின் தலையங்கத்திலிருக்கும் நாளிலேயே பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றிருக்கின்றது. ழீல் என்பவனுக்கும், அவனில் பேரன்பு கொண்ட மதாம் பெர்னாதெத்திற்கும், ழீலிற்கு உளவியல் சிகிச்சை கொடுக்கும் தொனேதேனுக்கும் இடையில் நிகழும் கதைதான் இது. இசை பற்றிய கதையாகத் தொடங்கி மிக விரிவாக வரலாற்றைப் பல்வேறு திசைகளிலிருந்து விசாரிக்கும் அற்புதமான கதை.
அடுத்தநாளும் கதையொன்றை வாசியென நண்பர் கேட்டபோது ஷோபாவின் 'எம்.ஜி.ஆர். கொலைவழக்கு' தொகுப்பிலிருந்து 'வெள்ளிக்கிழமை'யை வாசித்துக் காட்டத் தொடங்கினேன். இதை இப்போது மூன்றாவது தடவைக்கு மேலாய் வாசிக்கின்றேன் என நினைக்கின்றேன். சென்றவருடம் பிரான்ஸ் சென்றபின் பாரிஸின் லா சப்பல் மிகப் பரிட்சயமான பிறகு, இதை வாசித்துப் பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருந்தது. வெள்ளிக்கிழமை எனப் பெயரிட்டவர் ஷாலினி அங்காடியில் குத்துவிளக்கு வாங்குவதற்கான முயற்சிகளைச் சுவாரசியமாகச் ஷோபா வர்ணித்திருப்பார். கதை சாதாரணமாகத்தான் போவதுபோலத் தோன்றும், இறுதியில் முடியும்போது கதை இன்னொரு திசையில் நுழைந்து வாசிப்பவருக்கு அஃதொரு முடிவுறாத கதையென உணர்த்தும்போதுதான் அசாதாரணக் கதையாகிவிடுகின்றது. 
கதைசொல்லி அன்னா கரீனீனாவின் நாடகம் பார்க்க ஆயத்தமாவதிலிருந்து கதை தொடங்குவது, மெத்ரோவிற்குள் வயலின் இசைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு அன்னா, மெத்ரோவிற்குள் பாய்ந்து தற்கொலைத்த வெள்ளிக்கிழமை மீண்டு வருதல் என்பவற்றை இணைத்து பார்க்கும்போது இந்தக்கதையின் முடிச்சுக்கள் அவிழக்கூடும்.அந்த முடிச்சவிழ்ப்பின் சுவாரசியம், எஞ்சியிருப்பதால்தான் இந்தக் கதை மறக்கமுடியாததாகின்றது.
2015 சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்குப் போனபோது நிறைய சிறுகதைத் தொகுப்புக்களை வாங்கி வந்திருந்தேன். அவற்றை ஒவ்வொன்றாய் வாசித்து முடித்துவிட்டு , அவை பற்றிக் குறிப்புகள் எழுத நினைவூட்டிப் பார்த்தபோது, ஒவ்வொருகதையும் ஒவ்வொன்றின் சாயல்களில் இருப்பது போலத்தோன்றியது. எனக்கு முதலிரு தொகுப்புக்களில் பிடித்த ஜே.பி.சாணக்யா கூட பின் தங்கி நின்றார். இந்தத் தொகுப்புக்களின் முக்கிய குறைபாடாக இருந்தது அவை எவ்வித பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கவில்லை என்பதுதான். இத்தனைக்கும் அனேக படைப்பாளிகளின் மூன்றாம்/நான்காம் தொகுப்புக்களாய் அவை இருந்துமிருந்தன. ரமேஷ்-பிரேமின் 'மகா முனி'யையோ அல்லது எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் 'மைத்ரேயி மற்றும் பல கதைகளை' யோ வாசிக்கும்போது அவர்கள் செய்யும் பரிசோதனை முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கும். அதுமட்டுமின்றி பரிசோதனை என்ற பெயரில் வாசிப்பவர்களைச் சோதிக்காமல் சுவாரசியமாக இவற்றில் பலகதைகள் எழுதப்பட்டுமிருக்கும்.
இவ்வாறான புதிய கதைசொல்லலை நான் பார்த்து மிக வியந்தது சிலி எழுத்தாளரான Alejandro Zambraவில். அவரின் Bonsai, The private lives of Tress, Ways of going home என எல்லா நாவல்களையும் தேடித் தேடி வாசித்திருக்கின்றேன். 150-200 பக்கங்களுக்குள் இவ்வளவு விரிவாகவும், சிக்கலாகவும் சிலியினதும், அங்கிருக்கும் மக்களினதும் வாழ்க்கையைச் சொல்ல முடியுமாவென வியந்திருக்கின்றேன். அவ்வாறு பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்லும், பல்வகை கதைசொல்லல் முறைகளை முயற்சித்துப் பார்த்த நாவலாக அருந்ததி ரோயின் The ministry of ultimate happiness ஐயும் சொல்லலாம். காஷ்மீரின் கதையை வாசிக்கும்போது, இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்தபோது நடந்த கதையைத்தானோ சொல்கின்றாரோ என 'வாசிப்பு மயக்கம்' தருமளவிற்கு எழுதிச் சென்றிருப்பார்.
இனி நமக்கு - ஈழம்/புலம்பெயர்ந்து இருப்பவர்க்கு- complex ஆகவும், layers ஆகவும் கதைகளைச் சொல்வதுதான் நமக்கு முன்னாலிருக்கும் பெரும் சவாலாகும். முக்கியமாய் போர் பற்றிய கதைகளைச் சொல்வதற்கு, இனி நாம் நேர்கோட்டு/ யதார்த்தப்பாணி கதை சொல்லல் முறையை மட்டும் நம்பியிருக்கமுடியாது. போருக்குப் பின்பான ரஷ்ய இலக்கியங்களையும், எப்போது எது வெடிக்கும் என்ற கொதிநிலையில் அரசியலைக் கொண்டிருக்கும் இலத்தீன் அமெரிக்கப் படைப்புக்களிலிருந்துமே நாம் கற்றுக்கொண்டு நமக்கான புதிய கதை சொல்லல் முறையைக் கண்டறிந்தாகவேண்டும். இலத்தீன் அமெரிக்கக் கதைகள் என்றவுடன் மாய யதார்த்தக் கதைகளுக்கு பாய்ந்துபோகவோ அல்லது பயப்பிடவோ தேவையில்லை. ரொபர்டோ பாலனோவோ அல்லது அலெஜாந்திரோ ஸாம்பராவோ மாயயதார்த்தத்திற்குள் மட்டும் நின்று கதைகளைச் சொல்கின்றவர்களுமில்லை.

2.
பாலியல் கதைகளும் நம்மிடையே நிறைய அண்மைக்காலங்களில் எழுதப்படுகின்றன. அது குறித்து எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் பாவனை செய்கின்ற பாசாங்கைக் கைவிட்டு எழுத முன்வரவேண்டும். எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பில் 9 வது கதையை (இந்தத் தொகுப்பில் எந்தக் கதையிற்கும் தலைப்பிடப்படவில்லை) ஒருமுறை வாசித்துப் பாருங்கள். பதின்ம பையனுக்குப் பூரணமக்கா பாலியலைக் கற்றுக்கொடுக்க அவனது 'ஆண்மை' விழிப்பதுதான் கதை. ஆனால் எவ்வளவு அழகாக எழுதிச் சென்றுவிடுகின்றார். பூரணமக்கா மழையின் நடந்த பதின்மனைத் துவாயால் துவட்டும்போது, அவனைக் குழப்பும் அவரின் மார்புகள்...என்ரை காளியாச்சியைத் தடவிப் பாரும்....உம்முடைய சாமிதான் சிவலிங்கம்.. என வர்ணனைகள். பிறகு இந்தக் காட்சி சட்டென்று முடிகின்றது. ஆனால் எந்த இடத்திலும் பூரணமக்காவின் பாத்திரம் தாழ்ந்துபோவதேயில்லை. அதுதான் எஸ்.பொ. இப்போது பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாகிய கதைசொல்லி முன்பு நடந்ததை நினைத்து நனவிடைதோய்வதோடு கதை முடிகின்றது.
'ஆண்மை' தொகுப்பை 2000த்தின் கோடையில் நான் வாசித்துவிட்டு இருக்க, எஸ்.பொ 'புலம்பெயர் இலக்கியத்தை முன்னகர்த்துவோம்' என்ற கோசத்தோடு -தமிழ்நாட்டில் காலச்சுவடு தமிழினி-2000ஐ நடத்தும்போது- செப்ரெம்பரில் கனடாவில் வந்து இறங்குகின்றார். அப்போதுதான் நான் பாலகுமாரனின் பாதிப்பிலிருந்து வெளிவந்த பருவம். பெருசிடம், இப்படி ஒரு முரண் உறவிலுள்ள கதையைப் பொதுவில் எழுதலாமா எனக் கேட்கின்றேன். டேய் தம்பி அது எனக்கு நிகழ்ந்த கதையென வைத்துக்கொள்ளேன். நடந்ததை அப்படித்தானே எழுதவேண்டும், ஏன் மறைக்கவேண்டும். எஸ்.பொவிற்கு அது நிகழ்ந்ததா அல்லது இல்லையா என்பதல்ல நமக்கு முக்கியம். எஸ்.பொ மறைந்துவிட்டபின்னும், கிட்டத்தட்ட அதை வாசித்து 17 வருடங்கள் ஆனபின்னும், இப்போதும் வாசிக்கப்போகின்றபோதும் பூரணமக்கா விகசித்துக் கொண்டிருக்கின்றார். அந்தப் பதின்மப் பையனில், எங்களில் யாரேனும் ஒருவர் தன்னைப் பார்த்துக்கொள்ளவும் முடியலாம்.
அது போல அந்தத் தொகுப்பிலே நிறைய பாலியல் சம்பந்தமான கதைகளை எஸ்.பொ எவ்வளவு கவனமாக எழுதியிருப்பாரென்பதையே கவனப்படுத்த விரும்புகின்றேன். அன்றைய காலத்தில் பாலியல் சம்பந்தமாக சாரு நிவேதிதாவின் கதைகளை முன்வைத்து மைக்கேலோடு உரையாடிக்கொண்டிருந்தபோது ஜானகிராமன் தான் காலந்தாண்டியும் நிற்பார், சாருவின் பாத்திரங்களாக இருக்காது என்றார். இப்போதும் ஜானகிராமனின் நாவல்களைப் பற்றிப் பலர் விரிவாகக் கதைத்துக்கொண்டிருக்க, சாரு எங்கேயோ பின் தங்கிவிட்டார் என்பதைத்தான் காலமும் நிரூபித்திருக்கின்றது. அலை எழுகின்றது என்பதற்காய் அவ்வளவு அவசரப்படத்தேவையில்லை. அது துணைகளுடான பாலியலுக்கும் பொருந்தும், எழுதப்படுகின்ற பாலியல் கதைகளுக்கும் பொருந்தும்.
இறுதியில் சுந்தர ராமசாமி கூறியதை நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.
“இளம் படைப்பாளி புதிய தளத்திற்குப் போக வேண்டுமென்றால் அவன் புதிய ஆழம்கொண்ட விமர்சகனாக மலர வேண்டும். வாழ்க்கையை மயக்கங்களின்றி எதிர்கொள்வதன் மூலமே புதிய ஆழத்தை அவன் பெறமுடியும். இன்று வரையிலும் உருவாக்கப்பட்டிருக்கும் சகல கற்பனைச் சுவர்களையும் தாண்டி மனிதன் அடிப்படையில் சமமானவன் என்ற பேருண்மைதான் படைப்பாளிக்கு முடிவற்ற பயணத்தைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது.”
-------------------------
உதவியவை:
மகாமுனி - ரமேஷ்-பிரேம்
எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு - ஷோபாசக்தி
ஆண்மை - எஸ்.பொ
துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம் - சு.வேணுகோபால்

(Oct 08)

0 comments: