கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சூரியகாந்திப்பூ குறிப்புகள்

Monday, January 29, 2018


கட்சிக்காரன்
இமையத்தின் அண்மைக்காலக் கதைகள் என்னை அவ்வளவாய்க் கவர்ந்ததில்லை. பலரால் விதந்தோந்தப்பட்ட இமையத்தின் நாவலான 'எங் கதெ' பற்றி வேறுவிதமான பார்வை இருக்கின்றதென்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேன். அதைவிட விகடனில் என்றாவது ஒருநாள் நல்லதொரு கதை வெளிவந்துவிடுமா என தொடர்ந்து பார்த்தபடியிருப்பேன். வெளியில் நன்றாக எழுதும் படைப்பாளிகள் கூட விகடனில் எழுதும்போது ஏதேனும் நேர்த்திக்கடன் வைத்துவிட்டு படைப்புக்களை அனுப்புகின்றார்களோ என நினைக்குமளவிற்கு எனக்குப் பிடித்த சிலர் விகடனில் எழுதிய கதைகளை வாசிக்கும்போதும் யோசிப்பதுண்டு.

இந்தமுறை விகடனில் இமையம் எழுதிய 'கட்சிக்காரன்' கதை எனக்குப் பிடித்திருந்தது; முக்கியமாய் தி.மு.கட்சிக்காரரான இமையம் தனது கட்சியின் இன்றைய உண்மை நிலையை விமர்சித்து எழுதியிருப்பது. மேலும் தங்கம் தென்னரசு, அவரின் தந்தையான தங்கபாண்டியன் போன்றவர்களை நேரடியாகக் குறிப்பிட்டு, ஒரளவு நேர்மையான அவர்களாலேயே எதையும் இன்றைய தி.மு.கவில் சாதிக்கமுடியாத அவலத்தை சமரசமின்றி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஒரு சிறுகதையிற்குள் விடப்படவேண்டிய மெளனத்தை மட்டுமில்லாது, எல்லாவற்றையும் உரையாடல்களால் சொல்லிவிடுவதையும் இமையத்தின் பலவீனமாய் ஏற்கனவே குறிப்பிட்டு எழுதியிருப்பேன். அதை அவர் இந்தக்கதையில் மீறியிருப்பதால்தானோ என்னவோ இன்னும் இந்தக் கதை பிடித்திருந்ததோ தெரியாது. கிட்டத்தட்ட 19 பக்கங்கள் அளவிற்கு நீளும் 'கட்சிக்காரனை' விகடன் பிரிசுரித்ததைப் பார்க்கும்போது இந்த உலகில் அவ்வப்போது அதிசயங்கள் நிகழும் வாய்ப்பிருக்கின்றதை நாங்கள் நம்பத்தான் வேண்டும் போலிருக்கிறது.
(June 2017)


மழையும் புத்தகங்களும்
தொடர்ந்து விடாத மழைபொழிந்து கொண்டிருக்கும் இன்று அன்னா அகமத்தோவாவும், போர்ஹேஸும், காஃப்காவும் சில மணித்தியாலங்களுக்குத் துணையிருந்தார்கள். காஃப்காவின் The Zürau Aphorisms சிறுசிறு குறிப்புகளாய் (109) எழுதப்பட்டதை வாசிப்பது வித்தியாசமான அனுபவமாயிருந்தது. அது போல போர்ஹேஸின் அனைத்துக் கவிதைத் தொகுப்பிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட 200 கவிதைகளுள்ள நூலில், அவரின் ஒவ்வொரு தொகுப்பிற்கான முன்னுரைகளும் சுவாரசியமானவை. அன்னா அகமத்தோவா சிலுவையில் அறையப்பட்டு முழந்தாழிட்ட நிலையில் தலையைக் குனிந்தபடியிருந்தார். எத்தனை துயரை அவர் வாழ்ந்த காலத்தில் அனுபவித்திருந்திருப்பார். அதையும் மீறி மூடிய நாடொன்றில் நடந்தவற்றை உலகிற்கு எடுத்தியம்பிய துணிச்சல்காரி என்றவகையில் அவரின் மீதான நெருக்கம் கூடிக்கொண்டே போனது.

முன்பு நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்கு அருகேயும் புத்தகங்கள் விற்கும் கடையொன்றும் இருந்தது. குளிர்காலங்களில் வெளியே போக முடியாத சூழ்நிலையில் மதியவுணவு வேளைகளில் அங்கேயே அதிக நேரத்தைச் செலவழிப்பதுண்டு. அவ்வாறே சில புதிய புத்தகங்களை(மேரி ஆன் மோகன்ராஜ் -The Bodies in Motion, ஜூம்பா லகிரி -Unaccustomed Earth , .வி.எஸ்.நைபால்-Magic Seeds , மார்க்வெஸ்--Memories of My Melancholy Whores என்பவை இப்போது நினைவில் வருபவை) காசு கொடுத்து வாங்காமலேயே பகுதி பகுதியாய் அங்கேயிருந்து வாசித்து முடித்துமிருக்கின்றேன். இப்போதெல்லாம் அங்கே ஆறுதலாய் இருந்து வாசிப்பதற்கான வெளியையெல்லாம் குறைத்துவிட்டார்கள்.

அண்மையில் என்னோடு வந்த நண்பரிடம், இந்த மூலையிலிருந்துதான் அவ்வப்போது கண்ணாடிக்குள்ளால் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வாசிக்கின்றனான் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். நம்முன்னாலேயே நடந்த பல பிடித்த விடயங்கள் எல்லாமே எப்போதோ நடந்ததுபோல 'கடந்தகாலமாய்'ப் போய்க்கொண்டிருப்பது ஒருவகையில் துயரமானது அல்லவா?

போர்ஹேஸின் -மேலேயுள்ள- 'காதலின் எதிர்பார்ப்பு' ஐ வாசித்தபோது, முன்னர் இப்படி அந்த புத்தகசாலையில் சென்று வாசித்துக்கொண்டிருந்தகாலத்தில் பறக்கும் நூலகம் என்று எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வந்தது.
(Sep, 2013)


பயனுள்ள ஓரு மாலை
யாரேனும் புதிய ஒருவரை - முக்கியமாய் இலக்கியம்/சினிமா சார்ந்து- சந்திக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அதாவது அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்களுடன் அவர்களைச் சந்திப்பதில்லை என்பதில் அவதானமாய் இருக்கவும் தேவையில்லாத ஏமாற்றங்களை அடையாதிருக்கவும் காலம் கற்றுத் தந்திருக்கின்றது. எனெனில் கடந்தகாலம் அவ்வாறான ஏமாற்றங்களைத் தந்திருந்தது. அவ்வாறான ஒரு நிலையுடன் இன்று ரொறொண்டோவில் நடந்த பயிற்சிப்பட்டறையில் சொர்ணவேலைச் சந்திருந்தேன். பயிற்சிப்பட்டறை காலையில் இருந்து தொடங்கியிருந்தாலும், அது முடியும் போதே சென்றிருந்தேன். அதன்பிறகு சமகால (தமிழ்) சினிமா என்கின்ற கலந்துரையாடலிலும் இருந்தேன். சொர்ணவேல் நிறைய விடயங்களைத் தெரிந்த சுவாரசியமானவராய் ஒருவராய்த் தெரிந்ததால் பிறகு சில நண்பர்களுடன் ஒரு கோப்பிக்கடையில் இருந்தும் நீண்ட நேரம் உரையாடிருந்தோம்.

ஜான் ஆபிரகாம், ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன் என அவர்களோடான தனிப்பட்ட நட்பு சார்ந்தும், அவர்கள் மீது தனக்குள்ள விமர்சனங்களையும் முன்வைத்த சொர்ணவேலின் பார்வை எனக்கு உவப்பானது. அதைவிட அவர் விரிவாக சிலாகித்து உரையாடிய பிறமொழிப் படங்களும், ஆவணப்படங்களும், குறும்படங்களும் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. சொர்ணவேலில் நூலான, 'சினிமா:சட்டகமும், சாளரமும்' பற்றிப் பேசிய தேவகாந்தன் ஓரிடத்தில் இப்படிச் சொல்லியிருப்பார். 'நான் ஒரு தீவிர சினிமா பார்வையாளன் என்று இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் சொர்ணவேலில் நூலை வாசிக்கும்போது அவர் குறிப்பிட்ட படங்களில் 50% மட்டுமே பார்த்திருக்கின்றேன் என்பது புரிய, நான் இதுவரை நினைத்த பார்வைக்கே பங்கம் வந்திருக்கின்றது' என வெளிப்படையாகத் தேவகாந்தன் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கும், சொர்ணவேலோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் குறிப்பிடும் படங்களில் பெரும்பான்மையான பிறமொழிப் படங்களைப் பார்க்கவில்லையே என்ற கவலை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. சொர்ணவேல் எனது வலைத்தளத்தை அவ்வப்போது வாசித்திருக்கின்றார். எனது கதைகளில் ஒன்றான 'கள்ளி' அவருக்குப் பிடித்துமிருந்தது. வாசனையைப் பின் தொடரும் ஒருவனைப் பற்றிய கதையை காட்சிப்படுத்துவது கடினம் என்றாலும் என்றேனும் ஒருநாள் குறும்படமாக்கிப் பார்க்கலாம், சுவாரசியமானது என கதைத்துக்கொண்டிருந்தார்.

இது எல்லாவற்றையும் விட அவருக்கும் எனக்குப் பிடித்த தெரிதா பிடித்திருக்கின்றது. அவரது 'சினிமா: சட்டகமும் சாளரமும்' முன்னுரையிலே தெரிதாவே முக்கியமாய் இடம்பெற்றிருக்கின்றார். தெரிதாவின் மீதான் ஈர்ப்பாலோ என்னவோ முன்னுரையில் இருக்கும் இரண்டு படங்களும் தெரிதாவே இருக்கின்றார். ஆவணப்படங்களில் ஆர்வமும், ஆவணப்படங்களை எடுத்தவருமான சொர்ணவேல் தெரிதா பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்திருப்பார் என்றே நினைக்கின்றேன். எனக்குப் பிடித்த ஆவணப்படங்களில் அதுவுமொன்று.

அயோவா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சொர்ணவேல் தற்போது மிஷிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
(Aug 31, 2013)

ஒரு வாசகர் கடிதம்

Sunday, January 28, 2018

அன்பின் இளங்கோ,


தங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிப்பகத்தாரிடமிருந்து வாங்கினேன். சென்ற ஞாயிறு அந்த சிற்றிதழ் கிடைக்கப்பெற்றேன். வடிவம் புதுமாதிரியாக கொஞ்சம் அகலம் அதிகமாக பாடபுத்தகம் போலிருந்தது வசீகரித்தது, உள்ளடக்கங்கள் எல்லாமே அருமை எனினும் தங்களின் துவக்க கட்டுரை ஒரு பிரியமான கவிதையை வாசிக்கும் உணர்வையும், தொட்டிச்செடியின் முதல் மலரொன்று அளிக்கும் குதூகலத்தையும் மகிழ்வையும் தந்தது, எனவே உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நிச்சயம் என்னை விட இளையவராக இருப்பீர்கள் என்றெண்ணுகிறேன் எனவே வாழ்த்துகிறேன்.
மொழிநடை அழகு நெடுங்கவிதையொன்றினை வாசிக்கும் உணர்விலேயே இறுதிவரைக்கும் இருந்தேன்.

எளிய வாசகரகளின் பாராட்டுக்களையெல்லாம் கடந்துவந்திருப்பீர்கள் என்றெண்னுகிறேன். இருப்பினும் எனக்கு மனமார பாராட்ட வேண்டும் என தோன்றுவதால் சொல்லிக்கொள்கிறேன்.

என் முகனூல் பக்கத்தில் அகநாழிகை குறித்து பதிவிட்டதில் உங்களின் கட்டுரையினைக்குறித்த பகுதிகளை உங்களுக்கு திரும்பவும் எழுதுகிறேன்..

’’விரியும் மலரைப்போல ஒரு பொழுதைப்பழக்குதல் ’’ இதழின் தொடக்க கட்டுரைக்கான சகல அந்தஸ்துடன் இருந்ததென்றே சொல்லலாம்,

அந்த நாள் அந்தப் பொழுது நம் கண் முன்னே மிக மிக அழகாய் மலர்ந்துவருவதை உணர்ந்தபடியே வாசிக்க முடிந்தது. உண்மையில் அது ஒரு நெடுங்கவிதை வாசிப்பனுபவம்.

தினப்படி வாழ்வின் சாதாரண நிகழ்வுகளை அசாதாரண அழகுடன் அருமையான் மொழிநடையுடன் லாவகமாக சொல்லிச் செல்கிறார், வாகன நெரிசலை மறக்கசெய்யும் பரிச்சயமான பெண்கள், ,இருக்கையை விட்டுத்தருவதின் குழப்பங்கள், உளப்போராட்டங்கள், கர்ப்பிணிப்பெண்ணின் நன்றி உண்டாக்கிய மகிழ்வில் சக பணியாளருக்கான பாராட்டொன்றை தயங்கியபடியென்றாலும் சொல்லிவிடுவது, இப்படி சாமான்யனின் ஒரு நாளை சொல்லிக்கொண்டு போகிறது கட்டுரை ஒரு கதையைபோலவே.

ஒரு நாள் என்பது எதிர்பாரா எதனையுமே தன்னகத்தே வைத்திருக்கலாம் என்பதையும் தோழியுடன் காலைஉணவிற்கு செல்கையிலும் அவளை சந்திக்கும் விழிகளை அவசரமாய் இடைமறித்து அந்த நாளை ஆசிர்வதிக்கப்பட்டநாளாக மாற்றிவிடும் சாமார்த்தியமும், பின்னர் அது அவனின் சாமர்த்தியத்தினால் அந்த அருளப்பட்ட நாள் நிகழவில்லை என்றும் தன்னியல்பிலேயே விரியும் மலரைப்போல அது இயல்பானதென்றும் சொல்வதும் பிரியமான கவிதையொன்றினை வாசிக்கும் உணர்வில் புன்னகைக்க செய்கின்றது.

அந்த அழகிய உணர்விற்கு முரணாக திடீரென் வரும் மாறுபட்ட தொலைபேசி அழைப்பொன்று விரும்பத்தகாத செடியொன்றினை போல வாசிக்கும் நம் மனதிலும் பரவி சட சடவென வளருகிறது.

காரணமின்றி தண்டித்தும், பின்னர் தோள் கோர்த்து இன்பங்களை அறிவித்தும், ரணப்படுத்தியும்,இதயத்தை நசுக்கி கூன் விழச்செய்தும்,வாழ்வு நம்முடன் குரூரமாய் எந்த முடிவிற்கும் நாம் வந்துவிட முடியாதபடிக்கு விளையாடிக்கொண்டிருப்பினும், நேசித்தல் எனும் அற்புதம் அவை எல்லாவற்றிலிருந்தும் நம்மை எழவைத்து விடுகின்றதென்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

நமக்கான ஒருவர் எங்கேனும் இருக்கிறார் என்னும் நம்பிக்கை, சில வார்த்தைகள், ஏன் நமக்காக தயாரிக்கப்பட்டு காத்திருக்கும் ஒரு கோப்பை தேநீர் போதுமல்லவா மூழ்கிக்கொண்டிருக்கும் நம்மை முடிசுழற்றி மீண்டும் கரையில் இழுத்துப்போட?

துவக்க கட்டுரை மூலம் இவ்விதழை மிக அழகானதொன்றாக்கிய இளங்கோவிற்கும் சேர்த்து இதோ துவங்கி விட்டிருக்கிறேன் உண்மையிலேயே என் வீட்டுத்தோட்டத்தின் மலர்களுடனும் முன் காலையின் வெம்மையுடனும் கொல்லும் வார்த்தைகளுக்கும் ஆரத்தழுவிக்கொள்ளும் கணங்களுக்கும் இடையே எதிர்ப்பும் கலப்பும் இன்றி இயல்பாய் எனக்கு கையளிக்கப்பட்ட ஒரு அழகிய விடியலோடான நாளொன்றினை இயல்பாக எதிர்கொள்ளவும் என் அன்பினை எனக்கானவர்களென்று நான் நினைக்கும் எல்லாருக்குமாய் அனுப்பி வைக்கவும். 

மிக்க அன்புடனும் வாழ்த்துக்களுடனும்
லோகமாதேவி

பேயாய் உழலும் சிறுமனமே - கொழும்பு

Saturday, January 27, 2018







மஹாகவியின் 'பொருள் நூறு'

ஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் மிகவும் கவனத்தைப் பெற்றவை. அன்றைய காலத்தில் குறும்பாக்கள் நிறைய எழுதி பிரசுரமாவதற்குத் தயாராக இருந்த நிலையில், இன்னொரு வகைமையான 'பொருள் நூறு' என்ற பெயரிலும் மஹாகவி எழுதி வைத்திருந்ததாக எஸ்.பொ இந்நூலின் முன்னீட்டில் கூறுகின்றார். 'குறும்பா' அன்றைய காலத்தில் பிரசுரமானபோதும், ஏதோ ஒருவகையில் 'பொருள் நூறின்' கையெழுத்துப் பிரதி தவறவிடப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப்பிறகு சிற்பியின் சேகரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு எஸ்.பொவினால் 'மித்ர' ஊடாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. சிற்பி தன்னிடமிருந்து கையெழுத்துப் பிரதி 'வானம்பாடி'களை தாங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த காலத்தில் பத்மநாப ஐயரினால் தரப்பட்டதாக இந்நூலின் தொடக்கத்தில் நினைவுகூறுகிறார்.
மஹாகவியின் குறும்பாவிற்குள் ஊடாடும் எள்ளலே இதிலும் கரை புரண்டோடுகிறது. நமக்குப் பழக்கமான/நம்மிடையே இருந்து மறைந்து போன பல்வேறு பொருட்களின் தலைப்புக்களில் நூறு பாடல்கள் இந்நூலில் இருக்கின்றன. நூல் வித்தியாசமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. கவிதைகளோடு வந்திருக்கும் படங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
வழமையாக எஸ்.பொ 'பரணி' பாடும் கைலாசபதி, சிவத்தம்பி பற்றி இதில் இருந்தாலும், எஸ்.பொவின் முன்னீடு சுவாரசியமாக வாசிப்பதற்கான விடயங்களைக் கொண்டிருக்கிறது. அண்மையில் எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பை மீண்டும் புரட்டிக்கொண்டிருந்தபோதும் அதிலும் எஸ்.பொவின் முன்னீடு ஈர்த்திருந்தது. முன்னீட்டை எப்படிச் சுவாரசியமாகவும் சர்ச்சையாகவும் எழுதுவதுமென ஆசானிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்,
வடை
--------
படைப்புப் பல படைத்துப் பலருக் கூட்டும்
கடைப் பொது இடத்திலும் கடித்துச் சுவைக்கக்
கிடைப்பன வடைகள் ஆயினும், உள் வீட்டு
அடுப்படி
நெருப்பின் எதிர் நின்று தன் இடுப்பை
ஒடித்தவள் ஒருவனுக் காகச்
சுடச் சுடக் கிடைப்பதன் சுவையே தனித்ததே.
கமரா
--------
கமரா ஒன்றவன் கையில் இருந்ததால்
அமரா வதியைப் படமெடுத் திட்டான்
அவளின்
சிரிப்பினைத் தன் சிறை செய்தே, விருப்பொடு
தலையணை யடியில் வைத்துப் பலபல
கனவுகள் கண்டு களித்தான்.
'இன்பம் எங்கே உளது?' என்றால்
'என் பழந்தலையணைக் கீழ்'! என்றானே.
கோப்பி
--------
மண்ணில் ஏன் பிறக்கிறோம் மறுபடி மறுபடி?
இன்னும் ஏன் இறவாதிருந்தோம்? பண்ணிய
புண்ணியத்திலே போதாக் குறையோ?
-எண்ணி ஏங்கிக் கண்ணீர் உகுத்தே
இப்படிப்
பேசுவோர் எல்லாம் பெரியோர் ஆவர்!
ஆசைகள் கடந்த அந்நியர்! அவர்க்குக்
கோப்பியைப் பாலொடு கலந்து
சாப்பிடக் கொடுத்திடிற் சஞ்சலம் தீருமே!
துப்பாக்கி
--------
'திடும் திடும்'! என்று சுடும் சுடும் என்பார்.
விடும் விடும், இந்த வீண் கதை விளம்பல்,
வேண்டாம்.
அடுப்படி இடத்திலே ஆரணங்குகள்
அப்பளம் சுடுவதற் குதவத்
துப்பும் உளது கொல் துப்பாக்கிக்கே?
பிளா
-------
பிளாவினைப் பிடித்தேன். பெருங்கள் வார்த்தான்.
கள்ளில் அக் காரிகை கதிர் முகம் தெரிந்தது -
கண்டேன்.
பிளாவினை முடித்தேன். பெருங்கள் வார்த்தான்
கதிர் முகம் காசினி முழுதும்
எதிரிலே தெரிய என் ஏற்றம் விழுந்ததே.
பூசுமா
--------
வாஞ்சை யோடெதிரில் வந்தமர்ந்துள்ளாய்.
மூஞ்சியைப் பூசுமா முழுதும் மறைத்தது.
வாயினைப் பூசிய வண்ணம் மறைத்தது.
கண்ணை மை மறைத்ததென் காதலி! இவற்றைக்
கழுவுக!
முகத்திலே ஓவியம் தீட்டும் இம்முயற்சிகள்
சுகப்படா, சுய உருக் காட்டி,
அகப்படு கைக்குள், என் அன்பைப் பெறுகவே.

ஹருகி முரகாமியின் Tsukuru Tazaki யும், நானும்

Friday, January 26, 2018

ருகி முரகாமியின் 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' நாவலில் பதின்மங்களில் ஐந்து நண்பர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். ஒவ்வொருவரின் பெயர்களும் நீலம், சிவப்பு, கறுப்பு, வெள்ளை என தொடர்புடையதாக இருக்கும். முக்கியபாத்திரமான Tsukuru மட்டும் எவ்வித நிறத்தோடும் தொடர்பில்லாத பெயரோடு இருப்பார். எனவே பிற நண்பர்கள் Tsukuruஐ, நீ நிறமற்றவன் எனக் கேலி செய்தபடியிருப்பார்கள்.
இப்படி நெருக்கமாய் இருக்கும் ஐந்து நண்பர்களும், அவர்களின் 20வது வயதில், சட்டென்று எந்தக் காரணமும் சொல்லாது Tsukuruஐ விலத்தி விடுகின்றார்கள். கிட்டத்தட்ட 16 வருடங்களின் பின்னர் ஏன் அப்படி நண்பர்கள் திடீரென விலகினார்களெனக் காரணங்களைத் தேடி ஜப்பானிலிருந்து பின்லாந்துவரை போவதே கதையின் முக்கிய பகுதி.
அப்போது பழைய நண்பர்கள், நீண்ட இடைவெளியின் பின் சந்திக்கும்போது, அவர்களின் ஞாபகங்களை அலசுகின்றனர். ஒவ்வொருவரும் முன்பு எப்படியிருந்தனர், அவர்களை மற்ற நண்பர்கள் எப்படிப் பார்த்தனர் என்பது குறித்து விரிவாகக் கதைப்பார்கள்.
சோர்வான முகத்தையுடைய (boring face) , தன்னை யாருமே காதலிக்கமாட்டார்கள் எனத் தன்னைப்பற்றி நினைத்து வைத்திருக்கின்ற Tsukuru ஐ, கனிவான, பிறர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்கின்ற நல்ல நண்பனாகவும், அவரை அந்தக் காலத்தில் நேசிக்க விரும்பியதாகக் கூட ஒரு தோழி கூறுவார்.
ஒருவர் தன்னைப் பற்றி நினைத்து வைத்திருப்பதற்கும், பிறர் அவரைப் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என நினைத்துக்கொண்டு என் பதின்மங்களில் எப்படி நான் இருந்திருப்பேன் என யோசித்துப் பார்த்தேன். நம்மை அன்றைய காலங்களில் அறிந்திருக்கின்ற நண்பர்கள் மூலமாக விரிகின்ற நம்மைப் பற்றிய சித்திரம், சிலவேளைகளில் இன்னுஞ் சுவாரசியமாகக் கூட இருக்கும்.
என் பதின்ம காலத்து நண்பரொருவன் பதிவொன்றை இப்போது எழுதியிருக்கின்றான்.
Tsukuru போல... ஒரு நான்.
புனைவுக்கும் வாழ்க்கையிற்கும் அவ்வளவு தொலைவில்லைப் போலும்.

(Oct, 2014)

ஜெயமோகனிற்கான ஓர் எதிர்வினை


இதற்கு முன்பான பதிவுகள் 

(1) மதிப்பீடுகளின் வீழ்ச்சி

(2) மதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வினை



ஜெயமோகன் எனக்கெனக் கூறும் சில விடயங்கள் முக்கியமானவை. அதுவும் ஒரு படைப்பாளியாக இருந்து கொண்டு அவர் வைக்கும் விமர்சனம் எனக்கும் உவப்பானவை. அந்தவகையில்தான் எனக்கு எஸ்.பொவும், மு.தளையசிங்கமும் முக்கியமானவர்கள். படைப்பாளிகளாய் இருந்துகொண்டு அந்த மனோநிலை ஊடறுத்துச் செல்லும் விமர்சனத்தையே நானும் அதிகம் கவனத்தில் கொள்கின்றவன்.

நிற்க.
ஜெயமோகன் உரையை வைத்து, நானெழுதிய பதிவு 'ஒரு அறைகூவல்' என ஜெமோ சொன்னாலும், அதன் முக்கிய பகுதியிற்கு அவர் இன்னும் வரவில்லை. வேறொரு திசையில் உரையாடலை நகர்த்துகின்றார். என்னுடைய முக்கியமான கேள்வியே தமிழகத்தில் இருந்து அண்மையில் வந்த முக்கிய நாவலை முன்வையுங்கள். உரையாடுவோம் என்கின்றேன்.

அவர் ஷோபாவின் 'பொக்ஸ் கதைப் புத்தகத்தை'ப் பற்றி ஓரிரு வார்த்தைளில் நிராகரிப்பதோடு முடிக்கின்றார். சயந்தனின் 'ஆதிரை'யை முக்கியமான நாவலென அவர் சொன்னபோதும், அன்றே கேட்டிருக்கின்றேன். எத்தனையோ விடயங்களைப் பற்றி எழுதும் ஜெமோ ஏன் அது குறித்து, எதனால் அது முக்கியமாகின்றதென விரிவாக எழுதவில்லை என்பது குறித்து. இன்றும் 'ஆதிரை' பற்றி உருப்படியாக அவர் எதையும் விரிவாக எழுதவில்லை.

அதேபோல் அவரது வாசிப்பு ஈழம்/புலம்பெயர்வு சார்ந்து எங்கே இருக்கின்றது என்பது குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. த.அகிலன் இப்போது புனைவு சார்ந்து எழுதுவதையே குறைத்துவிட்டார் (முற்றாகவே எனச் சொல்லலாம்). அவரது 'மரணத்தின் வாசனை' (2009) வந்தே ஏறத்தாழ 10 வருடங்கள் ஆகப்போகின்றன. ஆனால் ஜெமோ சயந்தன், அனோஜன் போல தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரில் அவரும் ஒருவர் என்கின்றார். இது பெரிய முரண் அல்லவா? மேலும் புதியவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கதைகளை அனுப்பச் சொல்லியபோது ஜெமோவின் தீவிர வாசகரான அனோஜன் தன் ‘அசங்க’ கதையை அனுப்பியபோது மட்டுமே அது பற்றிக் கருத்துக் கூறினாரே தவிர, இன்றுவரை அனோஜனின் ‘சதைகள்’ தொகுப்புக் குறித்தோ அவரது பிற கதைகள் பற்றியோ எதையும் பொதுவெளியில் கூறியதை நானறியேன்.

ஆகவேதான் நான் கேள்வி எழுப்புகின்றேன். குணா கவியழகன் பற்றிய ஜெமோவின் பார்வை என்ன? என்னை அவ்வளவு கவராதபோதும், தமிழ்ச்சூழலில் ஒருபகுதியினரால் பெரிதும் பேசப்பட்ட தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' குறித்த அவரது கருத்தென்ன? நம் சூழலில் அதிகம் கவனிக்காது, போரை முன்வைத்து பொதுமக்கள் சார்பில் பேசிய தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' வாசித்தாரா (கவனிக்க ஊழிக்காலத்தையும் அவரது நண்பரின் தமிழினி பதிப்பகம் தான் வெளியிட்டது)?  அதைவிட ஜெயமோகனைப் போல தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் தேவகாந்தனின் நாவல்கள் பற்றி என்னவிதமான அபிப்பிராயத்தை வைத்திருக்கின்றார்? இலக்கியம் என்பது உவத்தல் காய்த்தல் இன்றி பேசுவதாயின் ஜெமோ இவையெல்லாம் குறித்து விரிவாகப் பேசவேண்டும் அல்லவா? ஆகக்குறைந்தது இவற்றை நிராகரிப்பதாக இருந்தால்கூட, ஏன் அவற்றை நிராகரிக்கின்றேன் என்பது குறித்தாவது அவர் பேசியிருக்கவேண்டும்.

ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவல் என் வாசிப்பில் இப்போது பின் தங்கிவிட்டதா இல்லையா என்று ஜெமோ யோசிப்பதைவிட, ஏன் அவரால் நான் முக்கியமாய் முன்வைக்கும் ஷோபாவினது 'பொக்ஸ் கதைப்புத்தகத்திற்கு' நிகராய் தமிழகச் சூழலில் வேறு நாவல்/களை முன்வைக்க முடியாதிருக்கின்றது என்பதே என்னுடைய கேள்வி.

தேவிபாரதியின் 'நிழலின் தனிமை' எப்போது வெளிவந்தது? அதற்குப் பிறகு அவரின் 'நட்ராஜ் மகராஜ்' வந்து தமிழ்ச்சூழலில் உரையாடல் நிகழ்ந்தும் முடிந்துவிட்டது. இப்போது விஷ்ணுபுரம் வட்டம் தேவிபாரதியிற்கு பொன்னாடை போர்த்தியவுடன் அவருக்குத் தேவிபாரதி நினைவுக்கு வருகின்றார். அதுசரி ஜெமோ இதுவரை எங்கே ''நிழலின் தனிமை' குறித்து விரிவாக எழுதியிருக்கின்றார்? எனக்கு 'நிழலின் தனிமை'யை, அது வந்த காலத்திலேயே நல்லா நாவலடா, வாசித்துப் பாரென்று எப்போதோ செல்வம் அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஜெயமோகன் எப்போதும் நான் இவ்வாறான உரையாடலைத் தொடங்கும்போது, வேறு திசையில் கொண்டு போகின்றார். கடந்துமுறை அவரின் அறம் கதைகள் பற்றிய என் பார்வையை வைத்தபோது, நீயொரு காழ்ப்புணர்வு உள்ள, சிங்களவர்களையே விளங்கிக்கொள்ளமுடியாத ஒருவன் என 'ஈழ எழுத்தாளனுக்கு...' என எழுதினார்

நாஞ்சில்நாடன் நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர்களில் ஒருவராக என் பெயரை விகடனில் குறிப்பிட்டது,  என் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ தொகுப்பை வாசித்தபின்தான். ஜெமோ என் தொகுப்பை நிராகரிக்கின்றார் என்றால் கூட அது குறித்து எதுவும் எழுதியதாய்க் கூடத் துலங்கல் இல்லை. அதுவல்ல இப்போது இங்கே பிரச்சினை.

இன்றும் அவர் நான் புனைவில் மற்றதைவிட அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறுவதையும், நாவலோடு வாவென்று அழைப்பதையும் நிதானமாய்க் கேட்டுக்கொள்கின்றேன். ஆனால், இந்தப் பதிவில் நான் என் எழுத்தை முன்வைத்து எழுதியதல்ல. தமிழ் நாவல்களைப் பற்றியல்லவா சொல்லியிருக்கின்றேன். அதற்கு ஓர் எதிர்வினை புரிவதுதானே நியாயம். அதைத்தாண்டி ஏதேதோ எழுதுவது உருப்படியான ஓர் உரையாடலை ஒருபோதும் வளர்க்கப் போவதில்லை.

(Jan 02, 2018)

மதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வினை

Wednesday, January 24, 2018

இப்போதைக்கு இந்த விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. இது தொடர்ந்துசென்று நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்கள் மீதான கவனத்தைக் கலைத்துவிடுமென நினைக்கிறேன். விமர்சனங்களுடன்தான் நான் ஒவ்வொருவரையும் அணுகுகிறேன். இளங்கோ [டி செ தமிழன்] உட்பட இலங்கையில் எந்தப்படைப்பாளி முக்கியமான கதைகளை எழுதினாலும் உடனடியாக அடையாளப்படுத்துகிறேன். இன்றைய சூழலில் சயந்தன், அகிலன், அனோஜன் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அளவுக்குத் தீவிரமாக தமிழகத்தில்இளையோர் எழுதவேண்டிய அவசியம் உள்ளது   என சொல்லமுடியும்தான்  . என்னைப்பொறுத்தவரை நான் சாத்தியக்கூறுகளையே சுட்டிக்காட்டுகிறேன்.என்னால் இப்போதைக்கு எதிர்பார்ப்புகளை மட்டுமே முன்வைக்க முடியும்.
விஷ்ணுபுரம் இலக்கிய்வட்டம்  இலக்கியத்தை உருவாக்குவதற்கான அமைப்பு அல்ல. நாங்கள் நடத்துவது பயிலரங்கும் அல்ல. இது வாசகர்களின் கூட்டம் மட்டுமே. எழுதுபவர்களுக்கு வாசகர்களின் தரப்பிலிருந்து ஒரு கைகுலுக்கல். என் வாசகர்களை இலக்கியத்திற்கான பொதுவாசகர்களாக ஒருங்கிணைப்பதே என் நோக்கம். இலக்கியம் அனைத்து தரப்பிலிருந்தும் கைவிடப்பட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் இத்தகைய ஒரு வாசகர்விழா நம் ஊக்கத்தைத் திரட்டிக்கொள்ள தேவையானதாக உள்ளது.
மற்றபடி, அவருடைய வரிகளில் உள்ள கேள்வி ஒரு கறாரான விமர்சனம் , ஒர் அறைகூவலும்கூட. அதை நான் வரவேற்கிறேன். அதற்கு எதிர்வினையாற்றவேண்டியவர்கள் இங்கே அடுத்த தலைமுறையில் எழுதிக்கொண்டிருப்பவர்களே. அவர்கள் விமர்சனங்களற்ற சூழலில், சிறிய விமர்சனங்களைக்கூட நக்கலும் வசையுமாக எதிர்கொள்ளும் ஃபேஸ்புக் மனநிலையில், வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்த குரல் கேட்கவேண்டும். .இந்த அறைகூவலை அவர்கள் சாதனை மூலம் எதிர்கொள்ளவேண்டும் என விழைவதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
 Box கதைப்புத்தகம் ஷோபா சக்தியின் வீழ்ச்சியைச் சொல்லும் நாவல். அவர் இன்று மாட்டியிருக்கும் அனைத்து தேய்வழக்குகளும் அதில் தொகுக்கப்பட்டுள்ளன – ஈழம் கண்ட இரு மாபெரும் கலைஞர்கள்  அ.முத்துலிங்கமும் ஷோபா சக்தியும்தான்  என்பதை சொல்லியபடியே இதையும் கூறுகிறேன். டி.செ.தமிழன் இதை நல்ல நாவல் என்பதனால் தமிழிலக்கியச் சாதனைகளின் ஒன்றான கொரில்லாவை நன்றாக இல்லை என்று சொல்லியிருப்பார் என ஊகிக்கிறேன். வேறுநாவல் கோரும் டி செ தமிழன் ஒரு மாறுதலுக்காக தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவலை வாசித்துப்பார்க்கலாம்.மிகை மூலம் உலுக்காமல் எப்படி இலக்கியம் உள்ளத்தின் மொழிவடிவமாகச் செயல்படும் என்பதை காட்டும் படைப்பு அது. அவருக்கு ஒருவேளை கலை என்றால் என்ன என்று புரியவைக்கும்.
டி.செ.தமிழனிடம் நான் எப்போதுமே சொல்லிவரும் ஒன்றுண்டு. அவர் அடிப்படையில் புனைகதையாளர். ஈழ அரசியலின் ஒற்றைப்படையான மூர்க்கமும் கசப்புகளும் அவரை  அலைகழியச்செய்கின்றன. எழுத்தாளனிடம் அரசியல்காழ்ப்புகளை மட்டுமே எதிர்பார்க்கும் கூட்டம் அங்கே அதிகம். அதற்கு ‘சப்ளை’ செய்ய ஆரம்பித்தால் அதுவாகவே முடியவேண்டியிருக்கும். கூடவே மொழிவழி அறிதலைவிட காட்சியூடகத்திற்கு அவர் அளிக்கும் மிகையான இடம் அவருடைய சிக்கல். காட்சியூடகம் இலக்கியவாதிக்கு பெரிதாக எதையும் அளிக்காதென்பது என் எண்ணம் – சம்பிரதாயமான கருத்தாகவும் இருக்கலாம்.  இலக்கியத்தை தீவிரமாக அணுகினால் அவரும்  சயந்தனைப்போல முக்கியமான புனைவுகளை உருவாக்கமுடியும். வருக.


-மதிப்பீடுகளின் வீழ்ச்சி: http://djthamilan.blogspot.ca/2018/01/blog-post.html

-ஜெயமோகனின் எதிர்வினை:  http://www.jeyamohan.in/105022#.WmjPl66nHIV

மதிப்பீடுகளின் வீழ்ச்சி

Monday, January 22, 2018

ண்பரொருவரின் (அனோஜன்) முகநூல் பக்கத்தினூடு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது (2017) உரையைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது. எனக்குத் தெரிந்த ஜெமோ வழமையாக இப்படி அவ்வளவு நாடகீயத்தனத்தோடு உரையாற்றுபவரில்லை. சிலவேளை சினிமாப் பிசாசு அவரை இன்றைய காலங்களில் விழுங்கிக்கொண்டு இருக்கின்றதோ தெரியாது. இலங்கைப் பாஷை பேசுகின்றேன் என்று எங்கள் தமிழை இப்படிக் கொன்றிருக்கவும் தேவையில்லை. விருது விழாவிற்கு வந்தவர்கள் ஜெயமோகனின் நடிப்பைப் பார்க்கவா வந்தார்கள்? பேச்சைத்தானே கேட்க வந்திருப்பார்கள். ஒழுங்காய் இயல்பாய் பேசியிருக்கலாம்.
சரி, நான் சொல்ல வந்த விடயம் வேறு. ஜெயமோகன், 'காலம்' செல்வத்தின் 'எழுதித்தீராப் பக்கங்களில்' இருந்து சில பகுதிகளை அங்கே பகிர்ந்திருக்கின்றார். அந்த மகிழ்ச்சியைப் பகிரத்தான் இது. நிறைய எழுதவேண்டும், எப்போதும் எழுதிக்கொண்டிருக்க வேண்டும் வகையைச் சேர்ந்தவர் ஜெமோ. அதற்கு மாறான ஒரு எழுத்து முறையைத்தான் நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றவன். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதினால் போதும். அதுதான் எங்கள் ஈழ எழுத்து எங்களுக்கு கற்றுத்தந்திருக்கின்றது என பல இடங்களில் எழுதியிருக்கின்றேன். செல்வமும் குறைவாகவே எழுதுகின்றவர். ஆனால் அதை நேர்த்தியாக எழுதி இருப்பதால்தான் 'எழுதித் தீராப் பக்கங்கள்' முக்கியமான ஒரு படைப்பாக நம்மிடையே இருக்கின்றது. ஜெமோ அவர் விரும்பியோ அல்லது விரும்பாமலோ செல்வத்தை நினைவுபடுத்தியதற்கு -அவருக்கு மலேசியாவில் 2006ல் அடிவிழாததற்கு ஏதோ நல்லூழ் என்றமாதிரி- இது எங்களின் நல்லூழ் என நினைக்கின்றேன்.
இல்லாவிட்டால் கனடா என்றவுடன் நிறைய எழுதிய/எப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம் அல்லவா ஜெமோவிற்கு நினைவிற்கு வந்திருக்கவேண்டும். ஆனால் செல்வம் ஜெமோவிற்கு நினைவிற்கு வருவதற்கு எது காரணம் என்றால் குறைவாக எழுதினாலும் எவரும் அசட்டை செய்து கடக்கமுடியாது செல்வமும், அவரின் 'எழுதித் தீராப் பக்கங்களும்' இருக்கின்றது என்பதால்தான்.
மற்றது ஜெமோ, சுந்தர ராமசாமி 2000களின் தொடக்கத்தில் ரொறொண்டோ வந்து இனித் தமிழ் கனடாவில் இருக்காது என்பதை 'கலைஞனின் தூர நோக்காய்' கண்டடைந்ததைச் சொல்லி வியப்படைகின்றார். தமிழ் அடுத்த தலைமுறைக்குச் செல்லாது என்பதற்கு கலைஞனாக இருக்கவே தேவையில்லை. ஒரு சாதாரண மனிதராகவே எவராலும் புறச்சுழலை வைத்து எளிதாக எதிர்வுகூறமுடியும். ஆனால் இன்றும் தமிழ் ஏதோ ஒருவகையில் எங்களில் ஊடாடிக்கொண்டு தானிருக்கின்றது. 
ன்று புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பலநூற்றுக்கணக்கான பத்திரிகைகள்/சஞ்சிகைகள் வந்தது என்பது உண்மை. ஆனால் எத்தனை பத்திரிகைகள் இலக்கியம் பேசியது என்பதும் முக்கியமான கேள்வி. இன்றும் கனடாவில் ஏறக்குறைய 10 தமிழ்ப் பத்திரிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. எதிலுமே இலக்கியம் இல்லை. உரையாடுவதற்கான வெளிகள் இல்லை. மற்றும்படி வெளிவரும் சிறுபத்திரிகைகளின் அளவு குறைந்திருக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். அன்றைக்கு அரசியலிலும், இலக்கியத்திலும் துடிப்பாய் இருந்த ஒரு பரம்பரை இன்று ஒதுங்கிவிட்டது.
அதுசரி தமிழகத்தில் கூட எத்தனை சஞ்சிகைகள் தீவிர இலக்கியம் பேசிக்கொண்டு இப்போது வெளிவருகின்றன. சிறுபத்திரிகை என்பதே ஏதோ ஒருகட்டத்தில் அதன் ஆயுளை முடித்துக்கொண்டு உறங்குநிலைக்குப் போவதுதானே. ஆனால் இலக்கியம் என்பது அன்று சிறுகுழுவாலே பேசப்பட்டதுபோல இன்றும் ஏதோ ஒருவகையில் - இணையத்தில்- என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பேசப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றது.
ஏற்கனவே கூறியதுபோல, நாங்கள் குறைய எழுதிக்கொண்டிருப்பவர்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் நமது சுவடுகளையும் இங்கே பதித்துக்கொண்டுதானிருக்கின்றோம். அது தமிழில் மட்டுமில்லாது அந்தந்த நாடுகளில் பேசும் மொழியில் கூட நமது 'தமிழ்க்கதை'களைப் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு மான் 'புக்கர் பரிசு' வென்ற அரவிந்த் அடிகாவின் புதிய நாவலோடு போட்டியிட்டு, தனது முதல் நாவலாயினும் அதை நேர்த்தியாக எழுதி அனுக் அருட்பிரகாசம் தென்னாசியா நாவல் வகையில் பரிசு வென்றிருக்கின்றார். அதை நாம் கொண்டாட அல்லவா வேண்டும்?
2015 ஆவணி கோடைகாலத்தில் நள்ளிரவு தாண்டினாலும் அதன் அருமையான கதைசொல்லலில் கிறங்கி ஒரே அமர்வில் வாசித்து முடித்த ஷோபாசக்தியின் 'Box கதைப் புத்தகம்' நாவலைத் தாண்டி, (ஏறக்குறைய இரண்டரை வருடங்களான பின்னும்) தமிழகத்தில் இருந்து எந்த ஒரு நாவலும் வரவில்லை என்பதை என் வாசிப்பின் மீதிருக்கும் நம்பிக்கையில் வைத்துச் சொல்வேன். அதைத்தாண்டியே இன்னும் போகமுடியாது, பேசுவது என்னவோ தாங்கள் மட்டுமே இலக்கியம் வளர்க்கின்றோம் என்றால் என்னைப் போன்றவர்களுக்கு விசர் வராதா என்ன?
'Box கதைப் புத்தகத்திற்கு அடுத்த நிலையில் என் வாசிப்பில் வைத்திருக்கும் குணா கவியழகனின் 'அப்பால் ஒரு நிலத்திற்கோ' அல்லது ஜெமோவும் ஒரு முக்கிய நாவலாகச் சொன்ன சயந்தனின் 'ஆதிரை'க்குக் கூட நிகராக, தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் எந்த நாவல் வந்திருக்கின்றது எனச் சொன்னால் நானும் மகிழ்ச்சியடைவேன். இன்றைக்கும் ஜெமோ தனது தளத்தினூடாகவும், தன் விஷ்ணுபுர வாசகர் வட்டத்தினாலும் எவ்வளவு கஷ்டப்பட்டு முயன்றுகொண்டிருந்தாலும் அவரின் வளையத்திற்குள் இருந்து வந்த எந்தப் படைப்பாளி இதுவரை சாதித்திருக்கின்றார்?இலக்கியம் என்பது அடித்து கனியவைப்பதல்ல, அது தானாய் அவரவர்களிடத்தே கனிவதுதான் என்று ஜெமோவிற்குத் தெரியாது இருக்குமா என்ன?

(Dec 21, 2017)

Youth

Sunday, January 21, 2018

சுவிஸின் அல்ப்ஸ் மலையினருகில்  ஆடம்பர வசதிகளுடம் இருக்கும் ஹொட்டலில் இத்திரைப்படத்தின் கதை முழுதும் நிகழ்கிறது. ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றிருந்த இசையமைப்பாளர்,  இப்போது இசையிலிருந்து முற்றாக ஓய்வெடுத்துவிட்டு இருக்கின்றார். அவரை ஒரு நிகழ்வில், அவரது பிரசித்தி பெற்ற பாடலை  இசைக்கவேண்டுமென இங்கிலாந்து மகாராணி வேண்டிக் கேட்டும் மறுத்துவிடுகின்றார். எனினும் இசை நிகழ்விற்கான இசைவை வேண்டி தொடர்ந்து  இராணியின் தொடர்பாளர்கள் வந்து அவரைத் தொந்தரவுபடுத்தியபடி இருக்கின்றனர்.

இந்த இசையமைப்பாளரின் நண்பரும் இதே ஹொட்டலில் தங்கி இருக்கின்றார். அவர், தனது அடுத்த படத்திற்கான கதையை தனது குழுவோடு உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். இந்த இருவரும் வாழ்வின் அந்திக்காலத்தில் இருக்கின்றனர். அடிக்கடி வராத சிறுநீரை ஒருபொழுது கழித்துவிட்டாலே, அது பெரும் பேசுபொருளாக இருக்குமளவிற்கு இருவர்க்கும் முதுமை நெருக்கினாலும், வாழ்வின் மீது இன்னும் இழந்துவிடாத நம்பிக்கையோடு இருக்கின்றார்கள்.

இவர்களோடு இந்த இசைக்கோர்ப்பாளரின் மகளும் தங்கிநிற்கின்றார். அந்தப் பெண் திருமணம் செய்திருப்பது, இந்த இயக்குநரின் மகனை. எனினும் இந்தப் பெண்ணின் கணவன், எனக்கு வேறொரு பெண்ணோடு காதல் இருக்கின்றதென ஒரு பாப்- பாடகியோடு போய்விடுகின்றான். மகளுக்கு இந்தச் சிக்கலோடு, தனது தந்தை இசை மீதான பித்தால் தன் சிறுவயதில் தன்னையும் தனது தாயையும் ஒழுங்காய்க் கவனிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றார்.

யக்குநர் தனது திரைப்படத்துக்கான கதையை ஒருவாறாக முடித்துவிட்டு, அவருக்குப் பிடித்தமான ஒரு நடிகையை நடிக்க அழைக்கின்றார். அவரோ 'நீ ஒருகாலத்தில் அருமையான படங்களை எடுத்தவன், ஆனால் அண்மையில் எடுத்த திரைப்படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். உனக்கு இருக்கும் நல்லபெயரைக் காப்பாற்றவேண்டுமென்றால் இனி திரைப்படங்களை எடுப்பதை நிறுத்து' என ஒரு நண்பருக்குச்  அறிவுரை சொல்வது போலக் கூறிவிட்டுச் சென்றுவிடுகின்றார்.
இதற்கிடையில் இன்னொரு நடிகன், தனது அடுத்த பாத்திரத்திற்கு தன்னை மாற்றுவதற்காய் இந்த ஹொட்டலில் வந்து நிற்கின்றான். அவன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ஒரு ரோபோட்டுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததை மட்டும் நினைவுபடுத்தி, காணும் எல்லோரும் பாராட்ட அவனுக்கு எல்லோர்மீதும் வெறுப்பு வருகின்றது. அவனது அடுத்த படத்தில் அவனுக்குரிய கதாபாத்திரம் ஹிட்லருடையது.

அதேபோன்று மிஸ்.யூனிவேர்ஸ் பட்டம் வென்ற அழகி ஒருத்தியும் இங்கே வருகின்றார். அழகிகள் ஒன்றும் அவ்வளவு அறிவில்லாதவர்கள் என்கின்ற இந்த ஆண்களின் வாதத்தை அவர் உடைத்தெறிகிறார். அந்த அழகி பற்றிக் குறைவாக மதிப்பிடும் இந்த இசையமைப்பாளரும், நெறியாளரும், அவள் நிர்வாணமாகக் குளிக்கும்போது பார்த்து இரசிக்கையில், யாரோ அவர்களைப் பார்க்க ஹொட்டலுக்கு வந்திருப்பதாய்ச் செய்தி வருகின்றது. அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய இவர்கள், நாங்கள் முதுமையில் நின்று, நமது வாழ்க்கையில் இறுதி அழகிய துளியை ருசித்துக்கொண்டிருக்கின்றோம் என்கின்றார்கள்.  அது தெரியாமல், ஏன் எங்களைக் குழப்புகின்றீர்கள் எனவும் கோபிக்கின்றார்கள்.

இசைப்பதை நிறுத்திவிட்டாலும், இசையமைப்பாளரால் காற்றில், பசுவின் மணியில், சொக்கிலேட் பேப்பர் கசக்கலில் எனத் தன் இசையை விடமுடியாதவராக இசை அவரைத் தொடர்ந்தபடி இருக்கின்றது. மகள், குற்றப்பத்திரிகை வாசித்த தந்தையை ஒருவகையில் பின்னர் விளங்கிக்கொள்கின்றார். நடிகர், தன் ஹிட்லர் பாத்திரமுள்ள படத்தை கைவிட்டு சாதாரணமனிதர்களை கதைகளைச் சொல்லும் படங்களில் இனி நடிக்கப்போகின்றேன் என்கின்றார்.

இதில் சித்தரிக்கப்படும், ஒருகாலத்தில் உதைபந்தாட்டத்தில் உலகின் கவனத்தை திருப்பி, இப்போது உடல் பருமன் கூடி நடக்கவே சிரமப்படும் மரடோனா, எந்த வார்த்தையும் பேசாது இறுதியில் அந்தரத்தில் மிதக்கும் திபெத்திய புத்தபிக்கு போன்றோர் நமக்கு வாழ்க்கையில் சிலவற்றை மறைமுகமாகச் சொல்ல முயல்கின்றனர். தனது திரைப்படத்துக்கான கதையை முடித்துவிட்டேனென மகிழும் நெறியாளர், தன் நண்பரின் அறையின் பல்கணியினூடாகத் தற்கொலை செய்கின்றார்.

சையமைப்பாளர், எவரினதோ பராமரிப்பிலிருக்கும் தனது நோயுற்ற மனைவியைத் தேடி வெனிஸிற்குப் போகின்றார்.
ஹொட்டலில் இவர்கள் அனைவரும் சந்தித்தாலும், இவர்கள் எல்லோரினதும் வாழ்க்கைப் பாதையும் ஹொட்டலில் தங்கிநிற்கும்போது வேறொரு திசையில் மாறுகின்றது. எதைச் சாதித்தாலும், மனித மனம் வெறுமையை நோக்கித்தான் நகர்கின்றதா? அல்லது வெறுமைதான் வாழ்க்கையின் சாரமாக இருக்கின்றதா? அனைத்துமே கிடைத்ததுபோல வெளிப்பார்வைக்கும் தோற்றமளிக்கும் எல்லோருமே எதையோ இழந்துவிட்டதைத் தேடுவதுபோலத்தான் தமக்குள் தேடிக்கொண்டிருக்கின்றார்களா? நாம் காணும் எந்தக் காட்சி உண்மையானது அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் எந்தப் பாதை நமக்கு ஆசுவாசத்தைத் தரக்கூடியதாக இருக்கும்? இப்படி எண்ணற்ற கேள்விகளை இப்படம் முடிந்தபின்னும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.

நிறைய வருத்தங்கள் தனக்கு இருக்கிறது என நினைத்துக்கொள்ளும் இசையமைப்பாளரைப் பரிசோதிக்கும் ஒரு வைத்தியர், இதுவரை நீங்கள் எண்ணிய எந்த நோயும் உங்களுக்கு இல்லையென இறுதியில் கூறுகின்றார். இதுவரை நோயை ஒரு துணையாக வைத்திருக்கும் அவருக்கு இப்போது என்ன செய்வதென்று திகைப்பாக இருக்கின்றது. இனியான நாட்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனக் கேட்க, வைத்தியர் சொல்கிறார், 'உங்களுக்கு (மீண்டும்) இளமை தரப்பட்டிருக்கின்றது, எதுவுமே நீங்கள் விரும்பியபடி செய்யலாம்' என்று.

நாமும் ஒருவகையில் இந்த இசையமைப்பாளரைப் போன்றவர்கள்தான். நாம் செய்யவிரும்பியதைச் செய்ய விரும்பாது ஏதேதோ காரணங்களைச் சாட்டாகச் சொல்லிக்கொண்டிருப்போம். நாம் நமக்கு இடைஞ்சல்கள் என நினைத்தவை இல்லாமற்போனபின்னும் நமக்குப் பிடித்தவற்றைச் செய்வோமா என நம்மிடம் கேட்டால் சந்தேகமாகத்தான் அதற்கான பதிலைச் சொல்பவர்களாக இருப்போமாக்கும்.

இறுதியில் இசையமைப்பாளர் மீண்டும் இசையைக் கோர்க்கச் செய்கின்றார். வாத்தியங்களினூடு இசை புகுந்து அசைவதைப் போல வாழ்க்கை தன் இயல்பில் நகர்கிறது.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

Cézanne and I

Wednesday, January 17, 2018

பாரிஸில் Musée d'Orsay சென்றபோது அதன் முன்றலில் பால் ஸிஸானின் 'Boy in the Red Vest' வரவேற்றுக்கொண்டிருந்தது. உள்ளே ஸிஸான் வரைந்த மனித உருவங்களின் கண்காட்சி போய்க்கொண்டிருந்தது. பிக்காஸோவினால், ஓவியம் வரைவதில் 'எங்களுக்கெல்லாம் தந்தையைப் போன்றவர்' என்றும், 'எனது ஒரேயொரு குரு அவரே' என்றும் ஸிஸான் மனதாரப் புகழாராம் சூட்டப்பட்டவருமாவார்.

ஸிஸான் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்தபோதும், அவரது காலத்தில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு ஓவியராகவே இருந்திருக்கின்றார். பாரிஸின் மதிப்பு வாய்ந்த ஓவியக்கண்காட்சிக் கூடத்தில் அவரது ஓவியங்கள் ஒவ்வொருமுறையும் தகுதி வாய்ந்தவில்லையென  நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்று அவர் பிரான்ஸின் ஓவியக்கலையின் முன்னோடிகளில் ஒருவராக மாறி, கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

'Cézanne and I' என்கின்ற திரைப்படமானது ஓவியரான ஸிஸானுக்கும், எழுத்தாளரான எமிலி ஸோலாவிற்கும் இடையிலான நட்பைப் பற்றிப் பேசுகின்றது. இவர்கள் இருவரும் பாடசாலை நண்பர்கள். எமிலி மிக வறுமையான குடும்பத்திலும், ஸிஸான் செழிப்பான குடும்பத்திலும் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் ஓவியம்/எழுத்து மீதிருந்த பித்தின் காரணமாக, பின்னர் பாரிஸிற்கு குடிபெயர்ந்து செல்கின்றார்கள். காலம் ஸிஸாணை ஒரு தோற்ற ஓவியனாகவும்,ஸோலாவை பிரபல்யம் வாய்ந்த எழுத்தாளனாகவும் மாற்றிவிடுகின்றது. இப்போது வறுமையும் செழிப்பும் மாறி இருவருக்கிடையில் நுழைந்துவிடுகின்றது.

ஸோலாவின் ஆடம்பர வீட்டில் நிகழும் இரவு விருந்துகளில், அன்றைய கால பிரபல ஓவியர்கள் கலந்துகொள்கின்றார்கள். ஸிஸான் மட்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியவராக, பிறரோடு எப்போதும் சச்சரவுகளில் ஈடுபடுகின்றவராக, எவராலும் நேசிக்க முடியாத ஒருவராக மாறிவிடுகின்றார். ஆனால் எமிலி மட்டும் அவரை அரவணைத்துக்கொள்கின்றார். ஸிஸான் ஒரு சிறந்த ஓவியன், அதியற்புத ஓவியங்களை ஒருநாள் வரைவான் என அவர் நம்புகின்றார்.

Emile Zola and Paul Cezanne
ஓவியர்களையும், தனது வீட்டில் நடக்கும் விருந்துகளையும் முன்வைத்து ஸோலா 'மாஸ்டர் பீஸ்' என்கின்ற நாவலை எழுதுகின்றார். அதிலும் கூட 'என்னைப் பற்றி தவறாகவே எழுதியிருக்கின்றாய்' என ஸோலாவிடம் ஸிஸான் சண்டைபிடிக்கின்றார். இவ்வாறாக அவ்வப்போது சர்ச்சை செய்வதும், 'நீயென்னைப் புரிந்து கொள்ளவில்லை' என விலத்திப் போகின்றதுமாகவும் இவர்களுக்கிடையிலான உறவு இருக்கின்றது.
இறுதிக்காலங்களில், ஒருவர் மற்றவரைச் சந்திக்க விரும்பாத, ஒரு பெரும் இடைவெளியுள்ள உறவாக அது மாறிவிடுகின்றது. பழைய காலங்களுக்கு இருவரும் போக விரும்பினாலும் அவர்கள் அதற்குள் நுழைய முடியாத் துயரத்தோடு அவர்களுக்கான காலம் முடிந்துவிடுகின்றது. ஸோலா ஒரு நாள் நித்திரையின்போது காபன்மொனொக்சைட் வாயுவின் காரணமாக இறந்துபோகின்றார். அது இயல்பாய் நடந்ததா அல்லது திட்டமிட்ட ஒரு கொலையா என்ற சந்தேகம் இன்றுவரை எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.

யதார்த்தவாதக் கதைகளை ஸோலா எழுதியபோதும் அதிகமான பொழுதுகளில் அதிகாரத்திற்கு எதிராகக் குரலை எழுப்பியபடி இருந்தபடியால் அவருக்கு நிறைய எதிரிகளும் அன்றைய காலத்தில் இருந்திருக்கின்றனர். குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு தீவொன்று அனுப்பப்பட்ட ஒருவருக்காய், அது தவறென்று ஒரு பத்திரிகையில் குரல் கொடுத்த காரணத்தால், ஸோலாவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் விருதை அன்றையகால பிரான்சு அரசு திருப்பி வாங்கியுமிருக்கின்றது. ஏழ்மையிலிருந்து வந்த ஸோலா பின்னர் வசதியான வாழ்வு வாழ்ந்தபோதும் அவர் விளிம்புநிலையில் இருந்த மனிதர்களின் பக்கமே நிற்க விரும்பியிருக்கின்றார் என்பது இந்நிகழ்வின் மூலம் நமக்குப் புலப்படுகின்றது.

 Musée d'Orsay, Paris
ஸிஸானுக்கும், ஸோலாவிற்கும் இடையிலான நட்பைப் பற்றியது இத்திரைப்படமாயினும், அன்றையகால ஓவியர்களான Edouard Manet போன்ற பலர் வருகின்றனர். எந்த ஓவியரை முதன்மைப்படுத்தி ஒரு திரைப்படம் வருகின்றதோ அதில் வரும் மற்ற ஓவியர்கள் இரண்டாந்தர பாத்திரங்களாகி விடுவதும், அவ்வாறு அவர்கள் ஆகிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதும் கூட ஒருவகையில் சுவாரசியமானது. இவ்வாறு 'பீட்' காலகட்டத்தை முன்வைத்து, வெளிவந்த திரைப்படங்களான On the Road(ஜாக் கீராவக்), Kill Your Darlings (வில்லியம் பாரோஸ் & அலன் கின்ஸ்பேர்க்), Owl (அலன் கின்ஸ்பேர்க்) போன்றவற்றை ஒருகாலகட்டத்தில் சேர்த்துப் பார்த்திருக்கின்றேன். ஒரு திரைப்படத்தில் எவர் முக்கிய பாத்திரமாக இருக்கின்றாரோ அவர் தனக்கான அதிக நியாயங்களைக் கொண்டிருப்பதையும், மற்றவர்கள் சற்று எதிரிடையாக மாறுவதைப் பார்ப்பதும், இன்னொரு திரைப்படத்தில் அந்தப் பாத்திரம் முக்கியமற்றுப் போவதையும் அவதானிப்பதும் ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருந்தது.
இப்படி 'Cézanne and I' திரைப்படத்தைப் போல அதே காலகட்டத்துப் பிற படைப்பாளிகள் பற்றி வந்த நூல்களையோ அல்லது திரைப்படங்களைப் பார்ப்பது கூட வித்தியாசமான இருக்குமென நினைத்துக்கொண்டேன்.

எல்லாப் படைப்பாளிகளும் தமது சமகாலக் கலைஞர்களோடு நட்புப் பேணவும், தமக்கிடையில் விவாதிக்கவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளவுமே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் காலமும் சூழலும் அவர்களுக்கிடையில் விரிசலை ஏதோ ஒருவகையில் கொண்டுவருகின்றது. பின்னர் அவர்கள் அந்த இனிமையான காலங்களை தமக்கான தனிமையில் இருந்து ஸோலாவும், ஸிஸானும் போல நனவிடைதோய்ந்தபடி பெரும்பாலும் வாழ்ந்தும் முடித்துவிடுகின்றனர் என்பதுதான் சோகமானது.

(நன்றி: 'அம்ருதா' - தை, 2018)

இலங்கைக் குறிப்புகள் - 03

Monday, January 15, 2018

1.
நானும், ஹஸீனும் அக்கரைப்பற்றிலிருந்து எஸ்.எல்.எம். ஹனீபாவைப் பார்ப்பதற்கு பஸ்ஸில் ஏறினோம். இடையில் விபுலானந்தர் அழகியல் கல்லூரியில் ஜெய்சங்கரைச் சந்திப்பதென்றும் தீர்மானித்திருந்தோம். எனினும் இன்னொரு நண்பரைச் சுகம் விசாரித்துவிட்டு பஸ் ஏறவேண்டியதால், ஜெய்சங்கரோடு சந்திப்பதற்கான நேரத்தைத் தவறவிட்டிருந்தோம். இடையில் காத்தான்குடியில் இறங்கி மதியவுணவைச் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் எங்களை ஆசுவாசப்படுத்திவிட்டு ஓட்டமாவடியிற்குப் புறப்பட்டோம்.

ஹனீபா என்கின்ற இளமை ததும்பும் அருமை நண்பர் எமக்காய் முக்கிய சந்தியொன்றில் காத்திருந்தார். முதன்முதலில் சந்திக்கும் மகிழ்ச்சியில் அவரை ஆரத்தழுவினேன். அன்று மாலையே ஓட்டமாவடி அறபாத்தின் 'வாடிவீட்டு'க்குப்போய் நமது பிரம்மச்சாரிய வாழ்வை மீண்டும் வாழ்ந்து பார்ப்பது என்பது ஹனீபாவின் ஏற்பாடு. அறபாத் தன் காரில் வந்து எங்களை அழைத்துப் போகும்வரை, நாங்கள் ஒரு கடைக்குள் கடிக்க/கொறிக்கப் போயிருந்தோம்.

அங்கே வருகின்றவர்கள், போகின்றவர்கள் எல்லாம் ஹனீபாவிடம் சுகம் விசாரித்தபடி இருந்தனர். அந்தளவிற்கு படைப்பாளியாக மட்டுமில்லாது அந்த மக்களோடும் ஒரு நெருங்கிய நபராக ஹனீபா இருந்தார். இது நமது தமிழ் இலக்கியவாதிகள் பலருக்குக் கிடைக்காத ஒரு நல்லூழ் எனத்தான் சொல்லவேண்டும். கடையை வைத்துக்கொண்டிருப்பவரே, 'மாமா(?) எங்கள் வீட்டில் ஒரு புதுமரம் காய் காய்க்கின்றது என்னவென்று தெரியவில்லை. எப்படிக் கண்டுபிடிக்கிறது' எனக்கேட்டுக்கொண்டிருந்தார். இரண்டு பேரும் அந்த மர்மத்தை அவிழ்ப்பதில் போட்டிபோட்டுத் தோற்று அடுத்த நாள் அந்த மரத்தின் கிளையை நேரே கொண்டுவருவது, பிறகு கண்டுபிடிக்கலாம் என்ற முடிவுக்கு இறுதியில் வந்திருந்தனர். அவ்வாறு ஹனீபாவிற்கு ஊரிலிருக்கும் மனிதர்களை மட்டுமில்லை, உலகிலிருக்கும் மரங்கள் பற்றியும் நல்ல அறிமுகம் இருந்தது.

ஹனீபா தொடர்ந்தும் கடைக்குள் இருந்தால், தெருவால் கடந்து போகின்ற மதினிமார்களுக்கும் ஏதாவது உதவிகள் செய்யப்போய் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில், நல்லவேளையாக அறபாத் வந்து எங்களைக் காப்பாற்றினார். வாடிவீடு எங்களுக்காய்க் காத்திருந்தது. அங்கும் ஹனீபா அறபாத் நட்டு வைத்திருந்த மாங்கன்றுகளுக்கும், கொய்யாக்களுக்கும் எப்படி அதை ஆரோக்கியமாய் வளர்ப்பதென்று ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார்.

ப்படியே நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கையில் மலர்ச்செல்வன், சஃரி போன்ற நண்பர்களும் வந்து இணைந்தனர். பஸ்சில் நீண்ட நேரம் வந்த களைப்பிற்கு அங்கேயிருந்த கிணற்றில் தண்ணீரள்ளிக் குளிக்க, சொர்க்கமாய் இருந்தது. மலர்ச்செல்வன் போன்ற நண்பர்கள் பிறகு விடைபெற்றுச் செல்ல, அறபாத்தும் எங்களுக்கான இரவுணவை வாங்கிவரப் போக, நானும் ஹஸீனும், ஹனீபாவும் இருந்து இலக்கியம், இன்னபிற என கதைத்துக்கொண்டிருந்தோம்.

எல்லாவற்றையும் விட, இலக்கியம் தரும் முக்கிய ஓர் அனுகூலம் என்னவென்றால், நாம் அவரவர்களுடைய வயதைக் கடந்து, சமவயது ஒத்தவர்களாக நினைத்துக் கதைக்கலாம், விவாதிக்கலாம் என்பது. அதுவும் ஹனீபா போன்று எங்களைவிட இளமையான எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் கதைப்பது என்றால் இன்னும் சுவாரசியமாகும். கி.ராவும், களனியூரானும் தொகுத்த 'மறைவாய்ச் சொன்ன கதைகள்' போல ஹனீபா அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்த கதைகளுக்கு நானொரு 'தாசனாகி'ப் போய்க்கொண்டிருந்தேன். அதுமட்டுமில்லை ஹனீபாவிற்கு இருக்கும் அரசியல், இலக்கிய அனுபவங்கள் என்பவை நெடும் வரலாறு கொண்டவை என்றபடியால் இன்னும் சுவாரசியமாக அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

இரவுணவையும் சாப்பிட்டுவிட்டு, ஹனீபா சாய்மணைக் கட்டிலில் இருந்தபடி அவர் எழுத விரும்பும் புனைவைச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் புனைவில் யானைகள் ஒரு முக்கிய பாத்திரம் என்பதாலோ அல்லது என்னவோ, சாய்மணைக் கதிரையில் இருந்த ஹனீபாவை நான் வைக்கம் முகமது பஷீர் போல கற்பனை செய்துகொன்டிருந்தேன். எப்படியெனினும் அவரது இந்தக்கதையை எழுத வைத்துவிடவேண்டும் என்ற துடிப்புடன் ஹஸீன் அதற்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். நான் அதை எனது தொலைபேசியினூடு காணொளியாக பதிவாக்கிக் கொண்டிருந்தேன். இரவு இன்னும் இளமையாக எங்களுக்கிடையில் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தது.

2.
னீபாவின் பிரசித்திபெற்ற 'மக்கத்துச் சால்வை' கதையை அநேகமானவர்கள் வாசித்திருப்போம். அவரின் முதலாவது தொகுப்பும் அதன் பெயரிலேயே 1992ல் வெளியானது. ஹனீபாவின் கதைகளை உதிரிகளாக வாசித்திருந்தாலும், அவரின் முழுக் கதைகளையும் 'அவளும் ஒரு பாற்கடல்' என்ற புதிய தொகுப்பிலேயே வாசித்திருந்தேன். 'மக்கத்துச் சால்வை'யில் இருக்கும் 15 கதைகளோடு, மேலும் 10 புதிய கதைகளை இணைத்து இத்தொகுப்பு வெளிவந்திருந்தது.

தான் எழுதிய கதைகளில் எல்லோரும் 'மக்கத்துச் சால்வை' பிடிக்கும் என்கின்றபோது தனக்கு 'மருமக்கள் தாயம் பிடிக்கும்' என்றார் ஹனீபா. மருமக்கள் தாயத்தில் ஒரு முஸ்லிம் பெண்மணி, தமிழ் இயக்கமொன்றுக்கு அடைக்கலமும் தேநீரும் கொடுத்து பராமரிப்பவர். அவர் ஊரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, உடல்நலமின்றி இடம்பெயரும்போது எல்லோரும் கைவிட்டபோதும் இயக்கப்பொடியள் வந்து தனக்கு உதவுவார்கள் என நினைக்கின்றார். அவர்களும் அவரைக் கவனிக்காது சாதாரணமாய் ஜீப்பில் கடந்துபோகின்றதோடு கதை முடிகையில் தமிழ் - முஸ்லிம்களுக்கான பிளவின் முதல் சமிக்ஞை காட்டப்படுகின்றது, மருமக்கள் தாயத்தில்.

நான் ஹனீபாவின் முதல் கதையை என்னுடைய 16 வயதில் வாசித்திருக்கின்றேன், அது 'வெள்ளைக் காகம்' என்ற தலைப்பில் சரிநிகரில் வந்த கதை. சந்திரிக்காவின் ஆட்சிக்காலமும், அவர் சமாதானத்துக்காய் கொண்டுவந்திருந்த இயக்கத்தின் பெயர் வெண்புறா இயக்கம் என்பதாலும், வெள்ளைக்காகத்தை வெண்புறாவோடு தொடர்புபடுத்தி (என் அன்றைய வாசிப்பு அறிவுக்கேற்ப) சமாதானத்தைக் கிண்டலடித்த கதையாக தொடர்புபடுத்தி என் தமிழாசிரியரான அ.இரவியிடம்  இதுபற்றிக் கதைத்தபோது, அவர் இதுவொரு முஸ்லிம் தலைவரை எள்ளல் செய்யும் கதையெனத் திருத்தியது நினைவு இருக்கிறது. அன்று சரிநிகரில் அது ஹனீபா என்ற பெயரிலா அல்லது வேறு புனைபெயரிலா வந்தது என்பது ஞாபகமில்லை. அவ்வாறு விருப்புடன் வாசித்த ஒருவரை மீண்டும் நெடுங்காலத்தின் பின் அவரைத் தேடிச்சென்று அதைச் சிலாகிப்பது என்பதுதான் எத்தனை அழகானது.

லக்கியத்தால் என்ன பிரயோசம் என்றுதான் பலர் கேட்பார்கள். அதில் முக்கியமானது இப்படி வயது வித்தியாசமில்லாது ஆளுமையும் அனுபவமும் உள்ளவர்கள், எங்களை ஈர்ப்பார்கள் என்பதும் ஒன்று. இலக்கியம் எங்கள் எல்லோரையும் ஒரே தளத்தில் வைக்கும். இதை வேறு எதுவும் எங்களுக்கு அவ்வளவு இலகுவில் தராது. வாசிப்பு என்பதே வயதை, இடத்தை கடந்து ஹனீபா போன்றோர்களுடன் எங்களை நட்புப் பேணவும், அவரைத் தேடிப்போய்ப் பார்க்கவும் வைக்கின்றது.

இன்னும் ஒன்று உள்ளது. இன்றைய காலத்தில் தமிழ்- முஸ்லிம் உறவானது மிகவும் இறுக்கமான கட்டத்தில் இருக்கின்றது. அரசியலினூடாக செல்வதை விட, கலை- இலக்கியத்தினூடாக இந்த உறவின் இறுக்கத்தைத் தளர்த்த முடியும் என்று நம்புகின்றவன் நான். ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் எனக்கு எந்த முஸ்லிம் நண்பர்களும் இருந்ததில்லை. 13 அல்லது 14 வயதில் புலிகள் எங்கள் பாடசாலையில் ஒரு பிரச்சாரக் கூட்டம் வைத்த பேசியபொழுதில், 'முஸ்லிம்களை ஏன் வெளியேற்றினீர்கள்?' என துண்டெழுதிக் கேட்டதைத் தவிர வேறு எதுவும் முஸ்லிம் சமூகம் சார்ந்து எனக்கு எதுவும் நினைவினில்லை. பிற எந்த தனிப்பட்ட அனுபவங்களுமில்லை.

அவ்வாறான ஒருவனுக்கு, இன்று முஸ்லிம்களிலும் நண்பர்கள் இருப்பதும், அவர்களும் என்னை 'மற்றதாக' உணரவைக்காமல் பழகுவதும் என்பது இந்த வாசிப்பினூடாகவே எனக்குச் சாத்தியமாயிற்று. இன்று மிகப்பெரும் பிளவு தமிழ்-முஸ்லிம் சமூகத்திற்குள் வந்துவிட்டாலும், ஹனீபா, ஹஸீன் போன்றவர்கள் எவ்வளவு உண்மையான அக்கறையோடு தமிழ் மக்கள் மீதும் இருக்கின்றார்கள் என்பதை நேரே பார்த்திருக்கின்றேன். அதேபோல அவர்கள் ஒருபோதும் முஸ்லிம்கள் தமிழ்மக்களுக்குச் செய்த சில பாதிப்புக்களையும் மறைத்ததுமில்லை. ஹஸீனோடு அக்கரைப்பற்றில் அலைந்த திரிந்தபொழுதுகளிலெல்லாம், முன்னர் இருந்த தமிழ் மக்களின் இடங்கள் இப்போது இல்லையென வரலாற்றை உள்ளபடி எனக்குக் காட்டிக்கொண்டிருந்தார். கைவிடப் பட்ட ஒரு இந்துக்கோயிலின் சிதைபாடுகள் உட்பட.

3.
னீபா இரவு நேரத்திற்கான தொழுகையைச் செய்யப்போகின்றேன் என்றார். பிறகு தொழுகை முடிந்து, வெக்கை அதிகமாய் இருந்ததால் நாம் எல்லோரும் வெளி விறாந்தையில் பாயைப் போட்டு கதைத்தபடி தூங்கத்தொடங்கியிருந்தோம். காலையில் அருகிலிருந்த பள்ளிவாசலில் பாங்கொலி கேட்டு நான் விழித்தபோது ஹனீபா ஏற்கனவே எழும்பி தொழுகையைச் செய்துகொண்டிருந்தார். பள்ளியில் தொழுகையொலி முடிக்கின்றபோது ஏதோ ஒரு கோயிலில் இருந்து அம்மன் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கியது. நாம் மனிதர்களை, மதங்களைத் தாண்டி புரிந்துகொள்ள இந்தக் காலையைவிட ஒரு அருமையான சந்தர்ப்பம் இருக்காது போல எனக்குள் தோன்றியது.

அக்கரைப்பற்றில் மூன்று நாள்கள் தங்கி நின்ற நான், அடுத்த நாள் கொழும்பு போவதாகத் தீர்மானித்திருந்தேன். ஹனீபாவும் ஹஸீனும் என்னை இலங்கைப் போக்குவரத்து பஸ்ஸில் ஒன்றில் ஏற்றிவிட என்னோடு வந்து பெருந்தெருவில் காத்து நின்றனர். பஸ் வர ஏறியமர்ந்தேன். அவர்கள் இருவரும் புள்ளிகளாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத்தொடங்கினார்கள். அருமையான மனிதர்களையும், அனுபவங்களையும் எனக்குள் சேகரமாகிவிட்ட கதகதப்புடன், நான் அவர்கள் தந்த நூல்களில் ஒன்றை எடுத்து விரித்து வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.

(Dec 25, 2017)