கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பார்த்திபனின் 'கதை'

Friday, March 30, 2018


1980களின் தொடக்கத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பார்த்திபன் கதைகளை எழுதிவருகின்றார். 'கதை' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் பார்த்திபன் இதுவரை எழுதிய கதைகளில் இருபத்துமூன்றை அவரின் நண்பர்கள் தொகுத்திருக்கின்றனர். ஒருவகையில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, புனைவுக்கும் நிஜத்திற்கும் இடையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது போலத் தோன்றும். பார்த்திபன் ஒருகாலத்தில் நிறையவும், நிறைவாகவும் எழுதி, பின்னோர் பொழுதில் எப்போதாவது ஒரு கதை என்கின்ற அளவிற்கு தன்னை ஒதுக்கியும்கொண்டவர்.

எழுதப்பட்ட காலவரிசைப்படி கதைகள் தொகுக்கப்பட்டது, ஒரு தொகுப்பிற்கு பலமா பலவீனமா என்பது ஒருபுறமிருக்க, நமக்கு பார்த்திபன் என்கின்ற கதைசொல்லியின் வளர்ச்சியை சீர்தூக்கிப் பார்க்கின்ற ஒரு சந்தர்ப்பம் இதன்மூலம் வாய்த்திருக்கின்றது எனச் சொல்லலாம். இதிலிருக்கின்ற இருபத்துமூன்று கதைகளில் ஏழெட்டுக் கதைகளைச் சாதாரண கதைகளென ஒதுக்கிக் கொள்ளலாம்.  நான்கைந்து கதைகள் நல்ல கதைகளாவதற்வதற்கான முயற்சிகளென எடுத்துக்கொண்டால், ஒரு பத்துக் கதைகள் இத்தொகுப்பில் தவிர்க்கமுடியாத  கதைகளாகத் தம்மை ஆக்கிக்கொள்கின்றன.

ஜேர்மனியில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்வென்பது பல்வேறுவகையில் சிக்கலானது.  இதுவரை பேசிப்பழகியிருக்காத மொழிபேசும் புதிய நிலப்பரப்பில் தம் வேர்களைப் பதிக்கவேண்டிய அவதி நம்மவருக்கு இருந்திருக்கின்றது. தாய்மண் பிடுங்கி எறியப்பட்ட புலம்பெயர்வு ஒருபுறமிருக்க, புதிய மொழிபேசும் மனிதரிடையே தம்மைத் தகவமைக்க வேண்டிய அவதியும் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இத்தொகுப்பில் 'நாளை'. 'ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும்','தெரியவராது', 'ஒரு அம்மாவும், அரசியலும்!', 'வந்தவள் வராமல் வந்தால்', 'இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ', 'தீவு மனிதன்', 'கெட்டன வாழும்', 'மூக்குள்ளவரை!', 'கல்தோன்றி' ஆகியவற்றை  முக்கிய கதைகளாக கொள்ளமுடிகின்றது.

'நாளை' என்கின்ற கதை, புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு பதின்ம வயதினன் தனது அடையாளத்தைத் தேடுகின்ற சிக்கலைப் பேசுகின்றது. தந்தை வேலையோடு அல்லாடிக்கொண்டிருக்க, தாயோ இந்தியத் திரைப்படங்களில் தன்னைத் தொலைத்துக்கொண்டிருக்க, ஜேர்மனிய நிறவெறியை 'நாளை'யில் வருகின்ற வினோத் பாடசாலையில் சந்திக்கின்றான். இவ்வாறான பிரச்சினையை விளங்கிக்கொள்ளவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ இயலாத வினோத் தனக்கு வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு வன்முறையான வழியைத் தேர்ந்தெடுக்கப்போகும் அவலநிலையோடு இந்தக் கதை முடிகின்றது. ஈழத்தமிழர்கள் இவ்வாறான தேசங்களுக்கு புலம்பெயர்ந்து எத்தனையோ தசாப்தகாலம் ஆகியபிறகும், இன்றும் கூட நாம் பல்வேறுவகையான நிறவெறியை எதிர்கொள்ளவேண்டியே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் போலில்லாது நுட்பமாகத் தமது இனவெறியைக் காட்டுகின்ற அளவிற்கு மேற்கு நாடுகள் வளர்ந்திருக்கின்றன என்று சொல்லலாமே தவிர நிறவெறி முற்றாகப் போய்விட்டதென்றால், புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த நமது இரண்டாந்தலைமுறை கூட இதை நம்பாது.

'ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும்' என்கின்ற கதை, ஒரு ஈழத்தமிழருக்கும், குர்திஷ்காரருக்கும் நடைபெற்ற உரையாடல்களால் வளர்த்தெடுக்கப்படுகின்றது. தன்  சொந்தநாட்டு மக்களுக்கு வேலை செய்யும் பொருட்டு, முதலாளி இரவும் வேலை செய்யவேண்டும் எனப் புதிதாய்ப் பிறப்பிக்கும் கட்டளையைப் புறக்கணித்து, தனது வேலையை இழக்கின்றார் குர்திஷ் தொழிலாளி. ஈழத்தமிழரோ தாங்கள் வர்க்கம், பாட்டாளி என்று நிறையக் கதைத்தாலும், இப்படி குர்திஷ் தொழிலாள நண்பர் போல தன்னால்  தான் நம்பும் விடயங்களுக்கு ஏன் உண்மையாக இருக்க முடியவில்லை என யோசிக்கின்றார். தானும், தனது நண்பர்களும் பேசிப் பேசி காலத்தை வீணாக்கின்ற தரவழிகளோ எனக் குழம்புகின்றார். சக தொழிலாளி வேலையிலிருந்து முறையற்று நீக்கப்படும்போது, ஏன் தன்னைப் போன்ற பிறதொழிலாளிகள் குரல்கள் கொடுக்கவில்லை என்றும், நாமெல்லோரும் சுயநலமாக இருக்கின்றோமோ எனவும் யோசித்தபடி, வழமைபோல  எதையும் உருப்படியாகச் செய்யாது சும்மா நண்பர்களோடு சேர்ந்து இப்படியே கதைத்துக்கொண்டு இருக்கலாம் எனக் கதை முடிகின்றது.

'தெரியவராது' கதை நகைச்சுவை போலத் தொடங்கி துயரமாக முடிகின்ற கதை. பாலு என்கின்றவர் நிறையக் கடன்பட்டு ஜேர்மனியில் வந்திறங்குகின்றார். வாங்கிய கடனும், குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டிய அவதியும் இருக்கின்றபோதும், எவ்வளவு கடினப்பட்டு உழைத்தாலும் அவரின் கடன்களை அடைக்கப் பணம் போதாமலே இருக்கின்றது. இந்த நேரத்தில் கனடாவிற்கு ஜெர்மனியிலிருந்து போகின்ற ஒரு சீஸன் ஆரம்பிக்கின்றது. ஒரு கப்பலில் ஏற்கனவே ஜேர்மனியிலிருந்து புறப்பட்டு கனடாவைச் சேர்ந்தடைந்திருக்கின்றனர் என்ற செய்தி பாலுவுக்கு நம்பிக்கை கொடுக்க கனடாவிற்கு விமானமேற முயற்சிக்கின்றார். அவரது ஒவ்வொரு முயற்சியும் ஏதோ ஒருவகையில் இடைநடுவில் பிடிபட்டு ஜேர்மனிக்குத்  திருப்பியனுப்பப்படுகின்றார். ஏற்கனவே இருந்த கடனோடு, இப்போது கனடாவிற்குப் போவதற்காய் வாங்கும் கடனும் சேர்ந்து தலைக்கு மேலாய் கடன் சேர்கின்றது.

இறுதியில் அமெரிக்காவில் இருக்கும் கறுப்பினத்தவரின் முகத்தை பாஸ்போர்டில் மாற்றி, கனடாவிற்குப் போக பாலு முயற்சிக்கின்றார். ஒவ்வொருமுறையும் தோற்றுத் திரும்பிவந்து நண்பர்களின் நக்கல்களையும் கேட்டுச் சலித்த பாலு, இம்முறை சுவிற்சிலாந்திலிருக்கும் நண்பரைப் பார்க்கப் போவதாய் தனது ஜேர்மனி நண்பர்களிடம் பொய்சொல்லிவிட்டு கனடாவிற்கு விமானம் ஏறுகின்றார். ஆனால் பரிதாபம் என்னவென்றால் அவர் ஏறிய விமானம் வெடித்துச் சிதறுகின்றது. பாலு இறந்துவிட்டாலும், அவரது பாஸ்போர்ட்/இன்னபிற விபரத்தை வைத்து தலைமாற்றிய பாஸ்போர்ட்காரரே இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகின்றார். பாலு என்ற ஒரு மனிதர் வாழ்ந்தற்கான எந்த அடையாளமும் இல்லாமல் போகின்றார். அவரது நண்பர்கள் அவருக்காய்க் காத்திருக்கின்றனர். அவரை நிறையக் கடன் வாங்கி அனுப்பிவைத்த குடும்பத்தினரும் பாலு எங்கையோ இருக்கின்றார் என -நடந்தவிபரம் தெரியாது- காத்திருக்கின்றனர் எனக் கதை முடியும். இதேபோல எத்தனை எத்தனை மனிதர்கள் எல்லை கடக்கும்போது அடையாளம் காணாமலே தொலைந்திருக்கின்றார்கள்.

இதே பொருள்தொனிக்கும் இன்னொருகதையை பார்த்திபன் 'இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ' என்ற கதையிலும் எழுதியிருப்பார். அது இவ்வாறான  மனிதர்களிடம் பணம் கறக்கின்ற இலங்கைப் பொலிஸினதும், அவர்களை எல்லை கடக்க வைக்கின்ற ஏஜென்சிகளினதும் மனிதாபிமானமற்ற நிலையைச் சொல்கின்ற கதை. இலங்கைப் பொலிஸுக்கு கடன் தொல்லையால் காசுப்பிரச்சினை வருகின்றபோது, வெளிநாடு வரக்காத்திருக்கும் அப்பாவியை பிடித்துவைத்து அடித்துப் பணம் பறிக்கின்றார்கள். இன்னொருபக்கத்தில் எல்லை கடக்கின்ற மனிதர்கள் இறக்க இறக்க அதைப்பற்றிக் கவலைப்படாது பணத்தில் வெறிகொண்டலைகின்ற ஏஜேன்சிக்காரன் ஒருவன், மொஸ்கோவில் ஒரு பெண், கேட்ட தொகையைக் கொடுக்கவில்லை என்பதற்காய் அவளை விட்டுவிட்டு மிச்சப்பேரை ஜேர்மனிக்குக் கொண்டுவருகின்றான். அந்தப் பெண் அங்கே விட்டுவிட்டதால் ஒரு சிக்கல் என்று ஏஜென்சிக்காரனின் முகவர் தொலைபேச, மற்றவனோ 'என்ன அவள் ரெட் லைற் ஏரியாக்குள் கொண்டுபோய் விட்டிட்டாங்களோ' எனக் கேட்கின்றான். 'இல்லை, அவள் தற்கொலை செய்துவிட்டாள்' என மொஸ்கோவிலிருப்பவன் சொல்கின்றான். மேலும், அவள் தனது ஊர்க்காரி, பாவம் ஊரிலிருப்பவர்களுக்குத் தகவல் தெரிவிப்போமா எனக் கேட்க, மற்ற ஏஜென்சிக்காரனோ தூசணத்தால் திட்டிவிட்டு, இதையெல்லாம் வெளியில் சொன்னால் எங்களை ஜெயிலுக்குள் போட்டுவிடுவார்கள், நீ சொன்ன வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டு போனை வைக்கின்றான்.  'தெரியவராது' கதையில் வரும் பாலுவைப் போல, இந்தக்கதையில் வரும் புனிதாவும் அடையாளமில்லாத ஒரு அநாதையாக அந்நிய நிலப்பரப்பில் கரைந்து போகின்றார்.

'வந்தவள் வராமல் வந்தால்' என்கின்ற கதையும் ஏஜெனசிக்காரர்களால் எல்லைக் கடக்கின்ற துயரத்தைப் பேசுகின்ற கதைதான். ஒருவன் தனது தங்கச்சியை நிறையக் காசு கொடுத்து ஜேர்மனிக்கு எடுக்கின்றான். ஒவ்வொரு நாட்டிலும் தங்கச்சி நிற்கும்போதும், அடுத்த நாட்டுக்கு அனுப்புவதென்றால் காசை உடனே அனுப்பென ஏஜென்சிக்காரன் வெருட்டியபடியிருப்பான். எப்பாடுபட்டாவது தங்கச்சி வந்து சேர்ந்தால் காணும் என அவதிப்படும் தமையன், தனது தங்கச்சியை ஜேர்மனியிலிருக்கும் நண்பன் ஒருவன் திருமணம் செய்துகொள்வான், பிறகு எல்லாக் கஷ்டங்களும் தீருமென நம்புவான. தங்கச்சி ஒரு மாதிரி ஜேர்மனி வந்துசேர்வாள், ஆனால் அவளைத் திருமணம் செய்கின்ற நண்பனோ, இப்படி வாற பெட்டையளை ஏஜென்சிக்காரனோ அல்லது அவளோடு கூடவருகின்றவர்களோ 'அனுபவிக்க வேண்டியதை' அனுபவித்து விட்டுத்தான் அனுப்புவார்கள் என யாரோ சொல்வதைக் கேட்டு இந்தத் தங்கச்சியைத் திருமணம் செய்யமாட்டேன் என மறுப்பான். சரி, இப்படி சந்தேகத்துடன் இருப்பவனோடு திருமணம் செய்தாலும் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் என ஆறுதல் கொள்ளும் தங்கச்சி, பின்னர் ஒரு விபரீதமான முடிவை எடுப்பதாய் இந்தக் கதை முடியும்.

இப்படியொரு கதையை பார்த்திபன் தொடக்க காலத்தில் 'அம்பது டொலர் பெண்ணே' என்று எழுதியிருப்பார். ஆனால் அதில் வரும் பெண் தெளிவாக இருப்பாள். இவ்வளவு சீதனம் கேட்டு என்னை கூப்பிடுகின்ற நான் உங்களைத் திருமணம் செய்யமாட்டேன் என உறுதியாக மறுத்து, தனியே சென்று அகதி அந்தஸ்தைச் சென்று கோருவாள். ஆனால் ஜம்பது டொலர் பெண் ஒரு இயல்பான கதையாக நீளாது, தனக்கிருக்கும் கருத்தை எழுதுபவர் திணித்ததுமாதிரியான வாசிப்பு வரும். அந்தப் பலவீனத்தைத் திருத்தி பார்த்திபன் பிறகான காலங்களில் 'வந்தவள் வராமல் வந்தாலில்' எழுதியிருப்பார்.

'ஒரு அம்மாவும் அரசியலும்' என்ற கதை நமது இயக்கங்களிடையே நிகழ்ந்த சகோதரப்படுகொலைகளைப் பற்றி ஒரு அம்மாவின் மனோநிலையில் நின்று பேசுகின்றது. நண்பர்களாய் ஒருகாலகட்டத்தில் இருந்தவர்கள், பின்னர் வெவ்வேறு இயக்கங்களில் இருக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காய் எவ்வளவு வெறிகொண்டலைந்தார்கள் என்பதை பதிவு செய்வதோடு, இது முடிவுறாத ஒரு படுகுழியெனவும் நமக்கு எடுத்தியம்புகின்றது.

பார்த்திபனின் கதைகளுக்குள் 'தீவு மனிதன்' பற்றி நிறையப்பேசப்பட்டு விட்டது. ஒருவகையில் பார்த்திபன் 'தீவு மனிதன்' போலவே நம் சூழலில் அடையாளங்காணவும்படுகின்றார். ஆனால் இந்தத் தொகுப்பை முழுதாக வாசிக்கும்போது, அதைவிடச் சிறப்பான வேறு சில கதைகளையும் எழுதியிருக்கின்றார் எனச் சொல்வேன்.

முக்கியமாய் 'மூக்குள்ளவரை', 'கல்தோன்றி' இதில் இருக்கும் சிறப்பான கதைகள். பார்த்திபனின் 'மூக்குள்ளவரை' கதையில், எதை எழுதினாலும் அரசியல் எழுதுகின்றான் என்று வெருட்டப்பட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு எழுத்தாளன் நீண்டகாலத்திற்குப் பிறகு சிலரின் வற்புறுத்தலால் ஒரு கட்டுரை எழுதுகின்றான். அரசியலே இல்லாது, தனக்கிருக்கும் அலர்ஜியைப் பற்றிய சுய அனுபவக்குறிப்பே அது. எனினும் அது கூட வேறுவகையாகத் திரிக்கப்பட்டு எழுதியவன் அடிவாங்குவான். அடிவாங்கிய வேதனை ஒருபுறம் என்றால், இன்னொருபக்கம் இந்த ஆய்வாளர்கள் இந்தச் சம்பவத்தை அலசி ஆராயும் தொல்லை சொல்லிமாளாது. இறுதியில் ஒருவர் தீர்ப்பெழுதுவார், எழுதியவனை எவரும் இரும்புக்குழாயால் அடிக்கவில்லை; அவனே தன்னைத்தானே அடித்துக் காயப்படுத்தினான் என்று.

இத்தொகுப்பில் மிக முக்கியமான கதையாக 'கெட்டன வாழும்' கதையைச் சொல்வேன். மிக அற்புதமாக எழுதப்பட்ட கதை முடிகின்ற விதத்திலும் பார்த்திபன் என்கின்ற கதைசொல்லி மிளிர்கின்றார். இனியான காலங்களில் பார்த்திபனை தீவு மனிதன் என்பதை விட 'கெட்டன வாழும்' எழுதிய பார்த்திபனாக நான் அதிகம் கற்பனை செய்துகொள்வேன் போலத்தான் தோன்றுகின்றது. மிக சிக்கலான இந்தக்கதையை, அதன் வீரியம் கெடாமலும் அதேசமயம் வாசிக்கும் நமக்குள்ளும் நிறையக் கேள்விகளை எழுப்பும்படியாகவும் இதில் எழுதப்பட்டிருக்கும்.

தில் பார்த்திபன் 1986ல் இருந்து 2012ம் ஆண்டு வரை எழுதிய கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஒருவகையில் நமது புலம்பெயர் வாழ்வின் 25 வருடங்களின் குறுக்குவெட்டு எனவும் இதை எடுத்துக்கொள்ளலாம். தொடக்க காலங்களில் தனது கருத்துக்களை வலிந்து திணிக்கவேண்டும் என்று யோசிக்கின்ற கதைசொல்லியான பார்த்திபன் பிறகான காலங்களில் கதைகள் தம்மியல்பிலேயே அவற்றுக்கான இடங்களைச் சென்றடையட்டுமென விட்டுவிடுகின்ற ஒரு மனோநிலைக்கு வந்துவிடுகின்றார். அதுவே அவரைத் தீவு மனிதனாக்குகின்றது. தன்போக்கில் அசைகின்ற எவருமற்ற படகில் தனது கதைகளை ஏற்றி அனுப்புகின்றார். பல கதைகள் வாசகருக்கான கரைகளை அடைகின்றன. சில எல்லை கடக்கமுடியாத மனிதர்களைப் போல கரைகளை அடையாமலே அமிழ்ந்தும் விடுகின்றன. ஆனால் பார்த்திபன் கரைகளைத் தனது கதைகளை அடைகின்றதா இல்லையா என்பதைப் பற்றிப் பெரிதும் அக்கறை கொள்ளாது தனது தீவிலிருந்து படகுகளில் கதைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்.

அவர் பிறரைப் போல தாம் தப்புவதற்கான படகுகளைச் செய்ய முயலாது, பிறர் தப்பிக்கொள்வதற்கான படகுகளைக் கதைகளுக்குள் வைத்து அனுப்பிக்கொண்டிருக்கின்ற ஒரு வித்தியாசமான படைப்பாளி. பார்த்திபன் தனக்கான தீவுக்குள் ஒதுங்கிக்கொண்டாலும்,  வெளியுலகத்தோடு கலக்க விரும்பாது ஆமையைப் போல அடிக்கடி தலையை உள்ளிழுத்துக்கொண்டாலும், வாசகர்கள் இந்தக் கதைகளெனும் படகுகளின் மூலம் பார்த்திபனை நினைத்துக்கொள்ளவும், கொண்டாடவும் என்றென்றைக்கும் செய்வார்கள்.
----------------------------------

(நன்றி: 'காலம்' - இதழ்/52)

இலங்கைக் குறிப்புகள் - 05

Thursday, March 22, 2018

நான் கொழும்பில் சென்றிறங்கிய இரண்டாம் நாளில், யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதைப் பற்றி எடுக்கப்பட்ட 'எரியும் நினைவுகள்' திரையிடப்பட இருந்தது. ஆவணப்படத்தை எடுத்த சோமீயும், எனது மற்ற நண்பர்களும் யாழிலிருந்து கொழும்பிற்கு இதற்காய் வந்திருந்தனர்.
நான், போல், இரவி எல்லோரும் சேர்ந்து மாலைத் திரையிடலுக்காகப் போவதாய்த் தீர்மானித்திருந்தோம். இடையில் நண்பர் போல், லக்சலவில் சில பொருட்களை வாங்க வேண்டுமென்றார். அக்காவின் வீட்டில் நின்ற என்னைக் காரில் ஏற்றிக்கொண்டு வந்த டிரைவர் அங்கிளுக்கு, நெரிசலுக்குள் லக்சலவைக் கண்டுபிடிப்பது கஷ்டமாயிருந்தது. 'அக்காவிடம் சொல்லப்போவதில்லை, உண்மையைச் சொல்லும், எதிரேயிருந்த விஹாரமகாதேவிப் பூங்காவில் உமது பழைய சிங்களக்காதலியைத்தானே சந்திக்கப் போகின்றீர்' என்பதாய் அவரின் பார்வை கேட்பதுபோல எனக்குத் தோன்றியது.
முன்வாசலில் இருந்த கஃபேயில் காற்றில் கேசம் அலையப் பேசியபடி இருந்த சிங்களப்பெண்களைக் கண்டவுடன், லக்சலவைக் கண்டுபிடிக்க பட்டகஷ்டமெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்திற்று. போன கொஞ்சநேரத்தில் மழையும் பெய்யவும் தொடங்கியது. கொழும்பின் மொன்சூனை, இந்த அழகிய 'ஆம்பல்களு'டன் இரசிக்கின்றேன் என்றாலும், அதைச் செவிமடுக்காது கனடாவிற்குக் கொண்டுபோக ஒரு புத்தர் சிலை வாங்குவதற்காய் என்னை போல் உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
'எரியும் நினைவுகள்' ஒரு நிறைவான நிகழ்வாக நடந்துமுடிந்தது. தர்மசிறி பண்டாரநாயக்கா இதை ஒழுங்குசெய்திருந்தார். திரையிடல் முடிந்தபின் அவரோடு சற்று நேரம் உரையாட முடிந்திருந்தது இதமாக இருந்தது. எனது கவிதைத் தொகுப்பை கனடாவில் வெளியிட்டபோது அவரது குறும்படத்தையும் திரையிட்டேன் எனவும் அவருக்குக் கூறினேன். நாம் தொலைவிலிருந்து பார்க்கும் ஆளுமைகளை நேரில் பார்க்கும்போது பதற்றத்தில் சிலவேளைகளில் என்ன பேசுவது என்பதும் தெரிவதில்லை. இதே நிகழ்விலேதான் சோமீயின் நண்பனான வசந்தவையும் சந்தித்தேன். வசந்தவோடான நட்பு பிறகு நான் இலங்கையில் நின்றபோது கொழும்பைச் சுற்றிப் பார்த்தல், நீர்கொழும்பு, காலி போன்ற பல இடங்களுக்குச் சேர்ந்து பயணித்தல் என்று நீண்டது.
அடுத்தநாள் காலையில் யாழ்ப்பாணத்திற்குப் போவதாக திட்டமிடப்பட்டிருந்தது. போலும், இரவியும் எனக்கான ரெயின் ரிக்கெட்டை வரும்போதே வாங்கிக்கொண்டும் வந்திருந்தனர். திரையிடல் முடிந்தபின் வசந்த, சோமீ உள்ளிட எல்லோரும் ஒரு மதுபான விடுதியிற்குப் போயிருந்தோம். நள்ளிரவின் பின்னாலும் நாரஹன்பிட்டிச் சந்தியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தோம். அருகிலிருந்த பொலிஸ் ஸ்டேஷனை எல்லாம் முன்னொருகாலத்தில் எப்படியெல்லாம் பயத்தோடு கடந்திருக்கின்றேன் என யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, வசந்த தன் காதல் கதைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
விடிகாலையில் கோட்டையிலிருந்து வவுனியாவிற்கான ரெயினைப் பிடித்தோம். தற்செயலாய் ரெயின் ஸ்ரேஷனில் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த கீரனைச் சந்தித்தோம். ஏதோ ஒரு தடங்கலினால் இரெயின் வவுனியா வந்துசேரக் கொஞ்சத் தாமதம் ஆனாலும், நண்பர்களோடு கதைத்துக்கொண்டு வந்த இந்தப் பயணம் நிறைவாக இருந்தது. யாழுக்கு ரிக்கெட் வாங்கியிருந்தாலும் வவுனியாவில் இடைநடுவில் இறங்கியதற்கு, இரவி தனது இயக்ககால நண்பர் ஒருவரைச் சந்திக்க விரும்பியிருந்தார் என்பதே காரணம்.
ஒருவகையில் அது நல்லதாகப் போய்விட்டது, அவரோடு வவுனியாவில் 19வது நாளாக நடந்துகொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்ணாவிரதப் போராட்ட இடத்திற்குச் சென்றோம். இரவியும் அவரது தோழரும் அந்த மக்களின் துயரங்களை அருகில் இருந்து கேட்டார்கள். எதுவுமே செய்யவியலாத கையாலாகத்தன்மையுடன், இவ்வாறான விடயங்களைக் கேட்பது மிகுந்த அவதி தருமென்பதால் நானும், போலும் சற்றுத் தொலைவிலேயே நின்றோம்.
அப்போது பாடசாலை முடிந்து எங்களைக் கடந்துபோன சின்னப்பிள்ளைகள் போல் தமிழ் பேசுவதைக் கண்டுவிட்டு, 'இஞ்ச பாருங்களடா வெள்ளைக்காரன் தமிழ் பேசுகின்றான்' என்று வியந்தார்கள். நான் 'இல்லை இவரொரு தமிழாள்' என்று அவர்களுக்கு விளங்கப்படுத்தப் பெரும் கஷ்டமாய்ப் போய்விட்டது.
பிறகு நாங்கள் அந்தத் தோழரோடு முல்லைத்தீவில் நடந்துகொண்டிருந்த மற்றொரு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காய் போராட்டம் நடந்த இடத்திற்குப் போனோம். போகும் வழியில் தேக்குகளால்(?) அடர்ந்து இருபுறமும் நிரம்பியிருந்த காட்டைக் காட்டி, இது புலிகள் தங்கள் காலத்தில் வளர்ந்தவை என்றார். பிளாஸ்டிக்கை தடைசெய்வதிலிருந்து, மரங்களைத் தேவையில்லாது தறிக்காமை, வெட்டினாலும் மீள்நடுகை என்பவற்றில் புலிகள் இயக்கம் மிகுந்த கவனத்தில் இருந்தது எனச் சொன்னால் ஒரு கூட்டம் புலிகளா எனப் பாய்ந்துவரும். ஒவ்வொரு இயக்கமும் என்ன நல்லதல்லாதவற்றைச் செய்தார்களோ அப்படியே நிறைய நல்லதையும் செய்திருக்கின்றார்கள் என்று கூறவரும்போது, நிதானமாகக் கேட்க எவருக்கும் பொறுமையில்லை என்பதுதான் ஒருவகையில் நம்முடைய அவலம்.
ன்று மாலையே மன்னாருக்கு ஒரு கூட்டத்திற்கு அந்தத் தோழருக்குப் போகவேண்டியிருந்தது. இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியைக் காட்டுகின்றேன் என்று எங்களைக் கூட்டிச் சென்றார். எங்கள் எவருக்கும் அங்கே போவது உவப்பான விடயம் இல்லையென்றாலும் அவருக்காகச் சென்றோம். வட்டுவாகல் பாலத்தைக் கடந்தபோது மக்கள் எப்படி இந்தத் தண்ணீருக்குள்ளால் இறங்கிவந்தார்கள் எனச் சொன்னார். பின்னர் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு அருகில் போகும்போது, எப்படி இந்தக் குறுகிய நிலப்பரப்பில் இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தார்கள் என்று சுட்டிக்காட்டினார் . வெட்டவெளியாக, பனை வடலிகள் சிறிதாக இருந்த பிரதேசத்தில் மிக அண்மையில்தான் மாபெரும் ஒரு அழிவு நடந்ததை நினைக்கச் சில்லிட்டது. அங்கேயிருந்து வெளியேற வேண்டும் போல மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. வாகனத்தோடு உள்நுழைந்த நம்மை காவலுக்கு நின்ற இராணுவமும் நிறுத்தி வைத்து விசாரித்தது.
அங்கிருந்து பின்னர் இலங்கையின் மேற்குக்கரையான மன்னாரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். இரவிக்கும், அவரது தோழருக்குமாய் அவர்களது நண்பர்கள் காத்திருந்தார்கள். நானும் போலும் அவர்கள் எல்லோரையும் பேசவிட்டு, ரோட்டில் அந்த இரவில் நடக்கத் தொடங்கினோம். பசிக்கவும் தொடங்க அருகிலிருந்த கடையில் பிஸ்கெட்டும், வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டு வந்து மூடியிருந்த ஒரு கடையின் குந்திலிருந்து பேசிக்கொண்டிருந்தோம். ரோட்டால் போய்க்கொண்டிருந்த சனம், வீட்டை விட்டுத்துரத்தப்பட்ட இரண்டுபேர் இதில் குந்தியிருக்கின்றார்கள் போன்ற பார்வையுடன் எங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
இரவு மீண்டும் வவுனியா திரும்பியவுடன் விடுதியில் பசியோடு கொத்துரொட்டிக்கு ஓடர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோம். அவர்கள் கொத்துரொட்டிக்குள் ஒரு tomato sauce போத்தலையே கொட்டிவிட்டுக் கொண்டு வந்திருந்தார்கள். 'தம்பிமார் இப்படியா கொத்துரொட்டி செய்வது?' எனத் தந்தவர்களிடம் கேட்டோம். எனக்கு அப்படிப் பசி கொஞ்சம் சாப்பிட்டேன், மற்றவர்கள் பெரிதாக அதைச் சாப்பிடவில்லை.
அம்மாச்சி உணவகம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தோம். அடுத்தநாள் காலையில் எழுந்தவுடனேயே ஓட்டோ பிடித்துக்கொண்டு வவுனியா அம்மாச்சியில் சாப்பிட்டோம். மிக நன்றாக இருந்தது. பெண்களால் நடத்தப்ப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த உணவகம் நல்லதொரு முன்னுதாரணம். அதன்பிறகு கிளிநொச்சி நோக்கி சில நண்பர்களைச் சந்திக்கப் புறப்படத் தயாரானோம்.
(Jan 26, 2018)

இத்தாலி

Monday, March 12, 2018


த்தாலி என்ற பெயரைக் கேட்டவுடன் பலருக்கு ரோமப் பேரரசு உடனே நினைவுக்கு வரும். இன்னுஞ் சிலருக்கு லியானார்டோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியக்கலைஞர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள். என்னைப் போன்ற வாசிப்பில் ஆர்வமிருப்பவர்க்கு இடலானோ கால்வினோ, உம்பர்த்தோ ஈக்கோ போன்ற எழுத்தாளர்கள் மனக்கண்ணின் முன் வந்து நிற்பார்கள்.

இத்தாலியைப் பார்க்கப்போவதென்று தீர்மானித்தபோது எனது தேர்வில் வெனிஸூம், ரோமும் இருந்தன. நேரமிருந்தால் ப்ளோரன்ஸுக்கும் போகலாமென நினைத்திருந்தேன். ஒவ்வொரு நகரும் ஏறத்தாள  200-300 கிலோமீற்றர்கள் இடைவெளிகளில்  அமைந்து இருந்தன. நல்லவேளையாக ஜரோப்பாவிற்குரிய தனித்துவமான புகையிரதச் சேவைகள் இருந்தனபடியால், ஒவ்வொரு நகருக்கும் விமானம் ஏறி அலுப்படையும் நாள்களை எளிதாகக் குறைத்துக் கொண்டேன்.

வெனிஸ் ஒரு மிதக்கும் நகரம் என்றும் கால்வாய்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது.  'வெனிஸ் நகரத்து வணிகன்' (The Merchant of Venice) என்று அன்றைய கால ஷேக்ஸ்பியரிலிருந்து, 'வெனிஸில் மரணம் (Death in Venice) என்று இன்றையகால தோமஸ் மான் வரை நிறையப் பேர் வெனிஸைப் பின்புலமாக வைத்துக் கதைகளை எழுதியிருக்கின்றனர்.

வெனிஸின் தனித்துவம் என்பதே மிதந்துகொண்டிருக்கும் வீடுகளும் கட்டடங்களுமே ஆகும். அதனூடாக பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளும், ஆடம்பரக் கனலோக்களும் ஊர்ந்து செல்வதைப் பார்ப்பதென்று அழகானது. வெனிஸிற்குச் சென்றால் தொலையாமல் திரும்பி வரக்கூடாது என்ற பிரபல்யமான கூற்றுக்கேற்ப, அங்குமிங்கும் நடந்து நடந்து நான் தொலைந்துகொண்டே இருந்தேன். சிறுசிறு ஒடுங்கிய தெருக்களினூடு நான் தொலைவதும் மீள்வதுமாக இருந்தேன். அதுபோலவே சாதாரண தெருக்களில் ஓடும் பஸ்சைப் போல, நீங்கள் பயணிகளுக்கான படகில் ஏறி பல்வேறு தரிப்பிடங்களில் இறங்கி உங்களுக்கு விரும்பிய இடங்களை வெனிஸில் ஆறுதலாய் இரசித்தும் பார்க்கலாம்.

கோடைகாலம் என்றதாலோ என்னவோ நான் சென்றநேரம் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி  வழிந்துகொண்டிருந்தனர். எனவே ஒருவகையான மூச்சுத்திணறலுக்குள் சிக்கியமாதிரி இருந்தாலும், சனம் அதிகம் குவியாத இடங்களைத் தேடிப் பார்த்தபடி, அமைதியான உணவகங்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டபடியும் இருந்தேன். வெனிஸைப் பார்க்கும்போது ஏற்கனவே நான் பார்த்த இரண்டு இடங்களில் செய்த படகுப் பயணங்கள் நினைவிற்கு வந்தன. ஒன்று ஹாலண்டிலிருந்த ஆம்ஸ்டடாம் மற்றது கேரளாவின் ஆழப்புழா. மனித மனம் என்பது, எப்படித் தவிர்த்தாலும், எதையோ சிலவற்றை ஒப்பிட்டுக்கொள்ளத்தானே துடிக்கின்றது. ஆனால் அவ்வாறு ஒப்பிட்டதனால் இவையெல்லாம் ஒரேமாதிரியானவை என்றோ அல்லது ஒரே அனுபவத்தையோ கொடுக்கின்றதோ என்ற அர்த்தம் இல்லை.

வெனிஸ் அதன் மீன் உணவுகளுக்காகவும் பிரசித்தி பெற்றது. வெனிஸை மட்டுமில்ல வெனிஸிற்கு அருகிலும் பார்ப்பதற்கு அழகான இடங்கள் பல இருக்கின்றன. நான் செலவின் காரணமாக வெனிஸிற்குள் தங்காது அருகிலிருந்த நகரான பதோவா என்கின்ற நகரில் தங்கிநின்றேன். அது ஓர் அமைதியான அழகான நகர். இரவு நேரத்தில் அந்நகரின் சதுக்கத்தில் இசை பொழிய, ஜஸ்கிறிமைச் சுவைத்தபடி, நிலவின் துணையுடன் உலாவித்திரிந்த இரவுப் பொழுதுகள் அவ்வளவு எளிதில் ஞாபக அடுக்குகளிலிருந்து அகலமுடியாதவை.

ப்ளோரன்ஸ் நகர் ஜூலியஸ் சீசரினால் அமைக்கப்பட்ட நகரென்று சொல்லப்படுகின்றது.  14ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டில் ஜரோப்பிவில் முகிழ்ந்த மறுமலர்ச்சிக்காலத்திற்கு (Renaissance) ப்ளோரன்ஸ் நகர் முக்கிய பங்களிப்பை ஆற்றியதால், ஒருவகையில் இந்நகர் மறுமலர்ச்சிக்காலத்திற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. இன்று உலகில் தலைசிறந்த நவநாகரீக நகரில் (fashion city) ஒன்றாக விளங்குகின்றது.

ப்ளோரன்ஸ் ஏனோ ஒருவகையில் இத்தாலியின் மிக நெருக்கமான இடமாக எனக்குள் ஆகியிருந்தது. இங்கே திரும்பும் பக்கமெல்லாம் கலையின் செழிப்பைப் பார்க்கலாம். கலைப் படைப்புக்களிலிருந்து, வானோங்கிய கட்டடங்கள் வரை ஒவ்வொரு மூலையிலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. இந் நகரிற்குள் நுழையும்போது எப்பாடுபட்டேனும் மைக்கல் ஆஞ்சலோவின் மியூசியத்தை மட்டும் தவறவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இதற்குள்ளேதான் ஆஞ்சலோவின் பிரசித்தி பெற்ற 'டேவிட்' தன் நிர்வாணம் மறைக்காமல் உயர்ந்து நிற்கின்றார். அதேபோல இன்னொரு காலரியில் சாண்டோ பாட்டிசாலி வரைந்த பிரபல்யம் வாய்ந்த ஓவியமான வீனஸின் பிறப்பு (Birth of Venus) இருக்கின்றது.

மேலும் ப்ளோரன்ஸிற்குப் போகும் ஒருவர் தவறவிடக்கூடாத இடங்களென uffizi காலரியையும்,   Duomo கதீட்ரலையும் கூறுவேன். uffizi யில் பல்வேறுவிதமான அற்புதமான சிற்பங்களைப் பார்க்கலாம்.   Duomo கதீட்ரலின் பிரமாண்டத்தின் முன், மனிதர்கள் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்ற உணர்வே கட்டாயம் மேலெழும். அந்தக் கதீட்ரலை வெளியே சுற்றிவரவே நீண்ட நேரம் பிடிக்கும். என்னைப் போல இரவு சூழும் மாலை நேரத்தில் போவீர்களாயின் அதனருகிலிக்கும் ஒரு உணவகத்தில் இருந்து சாப்பிட்டபடி, யாரோ ஒரு பாடகன் பாடுவதைக் கேட்டபடி, இந்த கதீட்ரலை மனம் குளிர பார்த்து நீங்கள் இரசிக்கமுடியும்.
ப்ளோரன்ஸிற்கு அருகிலேயே ஒரு மணித்தியாலப் பயணத்தில் சாய்ந்த பைஸாக் கோபுரம் இருக்கின்றது. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தரித்து நிற்கமுடியுமெனில் tuscan கிராமப்புறங்களுக்குச் சென்று அதன் அழகையும், பிரசித்த பெற்ற வைன்களையும் பருகமுடியும்.

ரோமை, ப்ளோரன்ஸிலிருந்து சில மணித்தியால ரெயின் பயணத்தில்  சென்றடைந்திருந்தேன். எல்லாப் பாதைகளும் ரோமிற்கே என்பது இன்று தேய்வழக்காகி விட்டதென்றாலும், ஒருகாலத்தில்  நாகரீகம் செழித்து வளர்ந்து ரோம் ஒரு பெரும் சாம்ராஜ்ஜியமாக இருந்தது என்பதை நாமனைவரும் அறிவோம்.
ரோமிலிருக்கும் கொலீஸியம் அதிகமானவர்களை கவர்கின்ற இடமென்றாலும், அதைச் சுற்றிப் பார்ப்பதற்கு நாற்பதற்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. எப்போதும் சனக்கூட்டம் நிறையும் இடமென்பதால் நீண்ட வரிசையில் நின்று முதலில் கொலீஸியத்திற்குள் நுழையாது, அருகிலிருக்கும் இன்னொரு இடத்தில் ரிக்கெட்டை வாங்கச் சொல்லி ஒருவர் சொல்லியிருந்தார். எல்லா இடங்களையும் பார்ப்பதற்கு ஒரே ரிக்கெட் என்பதால் கொலீசியத்தின் அருகிலிருந்த மற்ற இடங்களைப் பார்த்துவிட்டு, கொடும் வெயிலுக்குள் கால்கடுக்க வரிசையில் நின்று சோர்ந்துபோகாமல் கொலீஸியத்திற்குள் ஆறுதலாக இறுதியில் நுழைந்திருந்தேன்.

இந்தக் கொலீஸியத்திற்குள்ளேயே ரோம் கிளேடியேட்டர்கள் இரத்தம் சிந்தச் சிந்தப் போரிட இதன் இருக்கைகளில் இருந்து 50,000ற்கு மேற்பட்ட மக்கள் இன்னும் இன்னும் என வெறிபிடித்துக் கத்தியிருக்கின்றார்கள் என்றளவிற்கு வரலாற்றின் கறைபடிந்த இடமாக இருக்கின்றது. பின்னர் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கால் இந்த இரத்தம் சிந்தும் மனித விளையாட்டுக்கள் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றன. இப்போதும் ஒவ்வொரு புனித வெள்ளியிற்கும் போப்பாண்டவர் வந்து வழிபாடுகளைச் செய்கின்றார் எனக் கூறினர்.

இதைச் சுற்றி பல்வேறு ரோமக் கடவுள்களுக்கான ஆலயங்கள் இருக்கின்றன. இடையிடையே வெவ்வேறு போர்களில் வெற்றியீட்டியவர்களுக்கான மன்னர்களுக்கான நினைவுத் தூபிகளும் இருக்கின்றன. கோடையில் போனபோதும் சூழல் வறண்டு போயிருந்தது.  இப்படி புழுதி பறக்கும் இந்த உலர் நிலத்திலிருந்தா இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பினார்கள் என்று வியப்பாய் இருந்தது. எல்லாப் பாதைகளும் ரோமாபுரிக்கு என்றொரு காலம் போய், இன்று வரலாற்றின் நினைவாய் மட்டுமே ரோம் எஞ்சியிருக்கின்றது.

கொலீசியத்திலிருந்து ரெயினெடுத்து (மிக அருகிலேயே ரெயின் ஸ்டேசன் இருக்கிறது) சில தரிப்பிடங்கள் தாண்டிப்போனால் வத்திக்கானை அடையமுடியும். வத்திக்கானை எத்தனையோ முறை புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்து ஒரு பிரமாண்டமான சித்திரம் எனக்குள் இருந்தது. நேரே போய்ப் பார்த்தபோது இவ்வளவுதானா என்ற ஏமாற்றமே எஞ்சியது. ஒருகாலத்தில் எத்தனை 'சாமராஜ்யங்களை' தனக்குள் அதிகாரம் செலுத்திய ஒரு பெரும் இடம், இந்தளவு குறுகிய நிலப்பரப்பிற்குள் இப்போது அடங்கியிருப்பது வரலாறு நமக்கு கற்பிக்கும் ஒரு பாடம் எனலாம்.

இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்துவிட்டேன் போப்பாண்டவரைச் சந்திக்கமுடியாமல் போனால் மனது ஆற்றாதேயென அவரை எப்படிச் சந்திக்கலாமேன அங்கே நின்ற ஒருவரிடம் போப்பாண்டவர் எங்கே வசிக்கிறார் எனக் கேட்டேன். அவர் 'இப்படி எளிதாக எல்லோருக்கும் காட்சி தரமாட்டார். அத்தோடு அவருக்கிருக்கும் பாதுகாப்பைத் தாண்டி எவரும் உள்ளே போய்விடவும் முடியாது' எனவும் கூறி அவர் தடுத்துவிட்டார். பாவம் போப்பாண்டவர் என்னைப்போன்ற ஒரு 'நல்லவனை' இறுதிவரை அவரால் சந்திக்கமுடியாமல் போய்விட்டது.

இத்தாலியில் வெனிஸ், ப்ளோரன்ஸ், ரோம் எனப் பல்வேறு நகரங்களில் திரிந்திருந்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது ப்ளோரன்ஸ். இந்த நகரங்கள் எங்கும் வரலாற்றின் வேர்கள் ஆழப் பதிந்திருந்தாலும், ப்ளோரன்ஸில் இருந்த Duomo வின் பிரமாண்டமும், தெருவெங்கும் மிளிர்ந்து நின்ற கலை அழகும், புராதனம் மாறாக் கட்டடங்களும் என்னை அதிகம் அதனோடு நெருக்கம் கொள்ள வைத்திருந்தன. இத்தாலியிற்குப் போகும் எவரும் ப்ளோரன்ஸைத் தவறவிடக்கூடாது என்று சொல்வேன். இத்தாலி கோப்பிகளுக்கும், ஜஸ்கிறிம்களுக்கும் உலகப்புகழ் பெற்றது. இவையிரண்டையும் சுவைத்து உளம் உருகவேண்டுமென்றால் உங்கள் காதலர்களையும் மறந்துவிடாமல் கூட்டிச் செல்லுங்கள்.

(நன்றி: `அம்ருதா`- பங்குனி, 2018)

வேலைத்தளம் பற்றிய சில நாவல்கள்

Saturday, March 10, 2018



Charles Bukowski தனது முதலாவது நாவலான 'Post Office'ஐ எழுதும்போது அவருக்கு ஐம்பது வயது. ஒருவகையில் சுயசரிதைத் தன்மையிலான கதையென்றாலும், சுவாரசியமாக அவ்வப்போது சிரித்தபடி வாசிக்கக்கூடிய ஒரு புதினம். இந்த நாவலின் பெரும்பகுதி தபால் நிலையத்தில் நடக்கின்ற கதை. எப்படி ஒரு சாதாரண கீழ்நிலை ஊழியர் பிழிந்தெடுக்கப்படுகின்றார் என்பதை ப்யூகோவ்ஸ்கி அற்புதமாக சித்தரிப்பத்திருப்பார். அந்த நிலை இவ்வளவு காலம் ஆனபிறகும் அவ்வளவு மாறவில்லை என்பதை இதை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். எல்லா விடயங்களையும் ப்யூகோவ்ஸ்கி  உடைத்துப் போட்டபடியோ எழுத்தில் போய்க்கொண்டிருப்பார். அவர் பெண்களைச் சித்தரிக்கின்ற விதத்தில் நமக்குச் சிக்கல்கள் நிறைய இருந்தாலும், எள்ளல்களுக்கு அப்பாலும் தான் சந்திக்கும் பெண்கள் மீது ஏதோ ஒருவகையில் அனுதாபம் கொண்டிருப்பதையும் அறியலாம்.  ஓரிடத்தில் இப்படி எழுதியிருப்பார்: "Women were meant to suffer; no wonder they asked for constant declarations of love."

இந்த நாவலுக்கு அண்மையாக -அதாவது ஒரு வேலைத்தளத்தை முக்கிய பின்னணியாகவும்/சுவாரசியமாகவும் தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என நினைக்கும்போது எனக்கு ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி'யும், நோயல் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் நினைவுக்கு வந்தன. லெனின் சின்னத்தம்பி ஒரு உணவகத்தில் வேலைசெய்யும் ஒரு ஊழியரின் வாழ்வைச் சொல்வது. அசோகனின் வைத்தியசாலை ஒரு மிருகவைத்தியரின் வேலைச் சூழலை விபரிப்பது. லெனின் சின்னத்தம்பியிற்கு வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று, அது அந்த உணவகத்திற்கும் மட்டும் நின்று கதையைச் சொல்லிவிட்டு, லெனின் சின்னத்தம்பி பிற வாழ்வின் பகுதியைச் சொல்லவில்லை என்பது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, அவ்வாறு அதற்குள் மட்டும் நின்று உழன்றுகொண்டிருந்தபடியால்தான் அது ஒரு இறுக்கமான நாவலாக வந்திருந்தது என்பதாக இருந்தது. இவ்வாறு உடலுழைப்பால் பிழியப்படும் ஒரு ஊழியருக்கு பிற விடயங்கள் பெரும் பொருட்டாக மாறமாட்டாது எனத்தான் எடுத்துக்கொண்டேன்.

அசோகனின் வைத்தியசாலையோ, தனது வேலைச்சூழலிலிருந்து அவ்வப்போது விடுப்பு எடுத்து பிற வாழ்க்கையையும் சொல்லியது. அதனூடாக ஒரு குடிவரவாளர் குடும்பம் எப்படி புலம்பெயர் சூழலுக்கு தன்னைத் தகவமைக்கின்றது என்பதையும் நகைச்சுவையாகச் சொன்னது. ஒருவகையில் இந்த இரு நாவல்களுக்குமிடையில் வர்க்கம் தனது வித்தியாசங்களைக் கொண்டு வருகின்றது. லெனின் சின்னத்தம்பி தொடர்ந்து ஜேர்மனிய இனவெறியை நினைவுபடுத்திக்கொள்ள, அசோகனின் வைத்தியசாலை இனவெறி இருப்பதை அடையாளங்கண்டுகொண்டாலும், எங்குதான் நிறவெறி இல்லையெனக் கூறி  ஒருவகையில் புலம்பெயர் சூழலில் தன்னைச் சமரசம் செய்கின்றது.

ப்யூகோவ்ஸ்கியினது கதை ஒருவகையில் சுயசரிதைத் தன்மை எனச் சொல்லப்படுகின்றது. அதேபோல லெனின் சின்னத்தம்பியினதும், அசோகனின் வைத்தியசாலையினது எழுதியவர்களும் தத்தமது நாவல்களின் பின்னணியில் வேலையும் செய்துகொண்டிருக்கின்றனர்.  வாசிக்கும் எமக்கு அதில் எவை உண்மை/ புனைவு என்று தேடுவது அவசியமும் அற்றது.

 ப்யூகோவ்ஸ்கி, (உம்பர்த்தோ ஈக்கோ) போன்றவர்கள்  நமக்குச் சொல்லும் விடயம் என்னவென்றால்,  முதல் நாவலை 50 வயதிற்குப் பிறகு கூட எழுதலாம் என்பது  மற்றது சாதாரணக் கதைகளைப் போன்று தோன்றுவதைக்கூட  சுவாரசியமாகச் சொன்னால் அவை காலத்தைக் கடந்து மறக்கமுடியாத புனைவுகளாக மாறிவிடும் என்பதையுமாகும்.


(நன்றி: 'பிரதிபிம்பம்')