கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கைக் குறிப்புகள் - 06

Thursday, April 12, 2018

சீன் அக்கரைப்பற்றிலிருந்து எனதும், றஷ்மியினதும் நூல் நிகழ்விற்காக கொழும்பு வந்திருந்தார்.  நிகழ்விற்கு அடுத்தநாள் -திங்கள் மாலை- ஊருக்குத் திரும்புவதாக இருந்த அவர் என்னையும் கூட வருகின்றீர்களா எனக்கேட்டார்.  சந்தர்ப்பங்கள் ஒருமுறையே தட்டும் (காதலிற்கு மட்டும் விதிவிலக்குக் கொடுக்கலாம்) என்பதால் சரி என ஹசீனோடு புறப்பட்டு விட்டேன். கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று ஏழெட்டு மணித்தியாலங்கள் நீளும் ஒரு பயணம். நாங்களே இறுதியாக அந்தப் பஸ்ஸிலிருந்து இறங்கினோம். காலைச் சாப்பாட்டை உண்டுவிட்டு, அக்கரைப்பற்றின் பெருந்தெருவில் நடந்துகொண்டிருந்தோம். ஹசீன்  நகரின்  கடந்தகால வரலாற்றை , வெயில் இன்னமும் உடலை வருத்தாத அந்தக் காலையில் கூடவே சொல்லிக்கொண்டு வந்தார்.

சற்று நேரத்தில் றியாஸ் குரானாவும் ஹசீனின் வீட்டுக்கு வந்திருந்தார். றியாஸின் கவிதைகள் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. கனடாவில் ஒரு நண்பர் றியாஸ் ஏனிப்படி கவிதைகளை எழுதிக் குவிக்கின்றார் என்று விமர்சிப்பார். நானோ கொஞ்சமோ, கூடவோ எப்படி எழுதினாலும் அவை நல்ல கவிதைகளாக வருகின்றதா என்பதைப் பார்ப்பதும்தான் முக்கியம் என்பவன். இன்று புதிதாக எழுத வருகின்ற சிலரில் றியாஸின் பாதிப்பு இருப்பதைப் பார்க்கமுடியும், அந்தளவிற்கு அவரொரு தனித்துவமான  கவிதை மொழியை உருவாக்க முயன்றுகொண்டிருப்பவர். அதேபோல றியாஸ் எழுதும் விமர்சன விடயங்களில் எனக்குச் சிலவேளைகளில் உடன்பாடின்மையும் இருப்பதால் நான் அவ்வப்போது அவர் எழுதுவதைப் பின் தொடர்வதையும் சடுதியாக நிறுத்திவிடுபவனாக இருக்கின்றவன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நாங்கள் அக்கரைப்பற்றில் சந்தித்தபொழுதில் பர்ஹானின் நேர்காணல் 'ஆக்காட்டி'யில் வெளிவந்து கத்னா விவகாரம் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஹசீன், றியாஸுக்கும், பர்ஹானுக்கும் நல்ல நண்பர் என்பதால் இரண்டு பக்கமும் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எனக்கு இதுகுறித்து பெரிதும் தெரியாததால் அநேகமான பொழுதுகளில் அமைதியாகவே இருந்தேன். எனினும் நானும் ஹசீனும், றியாஸிடம் அவர் வைக்கும் விமர்சனங்களின் தொனியை வேறொருவகையில் வைக்கவேண்டும் என்று வற்புறுத்தியிருந்தோம் என்பதாயும் நினைவிருக்கின்றது.

றியாஸின் விவாத வகையால், அவர் ஏதோ கத்னாவிற்கு எதிரானவர் என்ற விம்பம் வந்துவிட்டாலும், நானறிந்தவகையில் றியாஸூம் அதற்கு எதிரானவராக இருக்கின்றார் என்பதாகவே நினைக்கின்றேன். அதுமட்டுமில்லாது அவர் பள்ளிவாசல்கள் மீதும், பெண்களை ஒதுக்குகின்ற வெளிகளைப் பற்றியதுமான விமர்சனங்களை வெளிப்படையாகவே என்னோடு கதைத்திருந்தார். இந்த கத்னா விடயம் தொடர்பாக நடந்த விவாதத்தில் முஸ்லிம்கள் மூடப்பட்ட சமூகம் என்ற பொதுப்புத்திக்கு எதிராக அங்கே progressive ஆன நிறையப்பேர் இருக்கின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தியதே ஒரு முக்கிய விடயம் என்று நினைக்கின்றேன். அதுவும் ஷர்மிளா, பாத்திமா மஜீதா, அனார் போன்ற பெண்கள் பலர் எவ்வளவு உறுதியாக இதில் நின்றார்கள், வெளிப்படையாகப் பேசினார்கள் என்பதை இந்த உரையாடலில் நாம் அவதானித்திருக்கமுடியும்.

டுத்தநாள் காலை அக்கரைப்பற்றை உள்ளே சுற்றிப் பார்ப்போம் என ஹசீனும் நானும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டோம். உள் ஒழுங்கைகளால் அக்கரைப்பற்றுக்குள் திரிந்துகொண்டு இருக்கும்போது அது ஏனோ ஒருவகையில் எனக்கு யாழ்ப்பாணத்து கிராம ஒழுங்கைகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. எங்களோடு றியாஸூம் இணைந்துகொள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு அக்கரைப்பற்றுக் கடற்கரைக்குப் போனோம். காலையானாலும் வெயில் அப்படி எரித்துக்கொண்டிருந்தது.

கரைவலை போட்டுப் பிடித்த மீன்களை  இழுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அருகில் போய் துடித்துக்கொண்டிருந்த மீன்களைப் பார்த்தோம். இப்படிப் பிடிபடும் மீன்களுக்கு உடனேயே ஏலம் எடுப்பதற்கு கரையில் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். அன்று மாலை மருதமுனைக்கு என்னை றியாஸ் கூட்டிக்கொண்டு நண்பர்களைச் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அங்கே நின்ற அந்த நாள்களில் இலங்கை பெட்ரோலிய நிறுவனம்(?), ஒரு இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கைக்குள் வருவதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்திருந்தது. எனவே பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு வந்திருந்தது. ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் இடத்திலும் மக்கள் பெட்ரோலைப் பெறுவதற்கு அல்லாடிக்கொண்டு பெரும் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

அன்றைய மாலை றியாஸோடு மோட்டார்பைக்கிள் ஒரு நெடும்பயணம் செய்து மருதமுனையை அடைந்தோம். தெருவில் இரண்டு புறமும் வயல்கள் சூழ்ந்த இடங்களினூடு பயணிப்பது அழகு. எதிர்க்காற்று முகத்தில் அடித்தாலும், ஹெல்மட் பேசும் வார்த்தைகளை அவ்வப்போது தின்று செமித்திருந்தாலும், றியாஸோடு இலக்கியம் சார்ந்து நிறைய விடயங்களை ஆறுதலாகப் பேசிக்கொண்டு போக இந்தப் பயணம் உதவியிருந்தது.

மருதமுனைக் கடற்கரையில் அம்ரிதா ஏயெம், குர்ஷித்,  மூஷா விஜிலி, டனீஸ்ஹரன் போன்ற நண்பர்கள் காத்துக்கொண்டு நின்றார்கள். அவர்கள் அடிக்கடி இப்படி இந்தக் கடற்கரையில் குழுமி இலக்கியம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். சற்று நேரத்தில் அலறியும், அப்தும் ஜமீலும் வந்துசேர்ந்தார்கள். நண்பர்கள் சிலர் தமது நூல்களைத் தந்தார்கள். இதுவரை இவர்கள் எவரையும் சந்திருக்கவில்லை என்பதால் வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.திரும்பிவரும் வழியில் புதிதாக எழுதும் நம்பிக்கை தரும் படைப்பாளிகள் பற்றி நானும் றியாஸும் கதைத்துக்கொண்டு வந்தோம். சிலரது கவிதைகள் தனியே எழுதும்போது நன்றாகவும், கவிதைத் தொகுப்பாகும்போது அந்த நம்பிக்கையை  தக்க வைத்துக்கொள்ள தத்தளிப்பதையும் றியாஸ் குறிப்பிட்டிருந்தார்.

அன்றிரவு திருக்கோவில் கவியுவனைச் சந்திப்பதாக இருந்தது. எட்டு மணியளவில் எங்களை கவியுவன் தனது காரில் அழைத்துக்கொண்டு சாப்பிடக்கூட்டிச் சென்றார். திருக்கோவில் கவியுவன், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்கள் என் பதின்மங்களின் ஆதர்சங்கள். அவர்களின் கதைகளைக் கொழும்பில் இருந்தபோது சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன்.

வியுவன் ஒரு நெடும் உறங்குநிலைக்குப் போய்விட்டு மீண்டும் வந்திருக்கின்றார். இப்போது புதுப்புதுத்தலைமுறைகள் வந்ததன்பின், அவருக்குத் தனது இடம் எதுவென்பது குறித்த ஒருவகைப் பதற்றம் இருக்கின்றதோ என்பதுபோல அவரோடு கதைக்கும்போது எனக்குத் தோன்றியது. எனினும் அவருக்கான ஓரிடம் என்னைப்போன்றவர்களிடம் எப்போதும் இருக்கும், அது என்றுமே பறிபோய்விடாதெனவே நானிப்போதும் நம்புகிறேன்.

இரவுணவைச் சாப்பிட்டபின், அவர் எங்களைக் கடற்கரைக்குக் கூட்டிச் சென்றிருந்தார். பயங்கரமான இருட்டாக இருந்தது. ஏற்கனவே அந்த இடத்திற்கு வந்திருந்த கவியுவனால் கூட சரியான இடம் தேடி உள்ளே நடப்பது கஷ்டமாயிருந்தது. அருகில் பிள்ளையார் கோயிலோ எதுவோ சற்று வெளிச்சத்தோடு இருந்தது. செல்பேசியின் வெளிச்சத்தைக் கொண்டு பற்றைகளை விலத்தியபடி நடந்துபோனோம். நட்சத்திரங்கள் உமிழ்ந்துகொண்டிருந்த அந்த இரவு வேறுவகையான அழகைத் தனக்குள் கொண்டிருந்தது.  மணலில் அமர்ந்து நாங்கள் கதைத்துக்கொண்டிருந்தபொழுதில் இப்படித்தான் ஒருநாள் தனது சகோதரர் கடற்கரையில் இருந்து இழுத்துக்கொண்டு செல்லப்பட்டு காணாமற்போனார் என்றொரு துயரக் கதையைக் கவியுவன் சொல்லத் தொடங்கினார். நமது முகங்களே தெரியாத இருட்டாயினும், எம் எல்லோரின் முகமும் நிச்சயம் துயரத்தில் இறுகிப்போய்தான் இருக்கும்.

பேரழிவு நம் கண்களின் முன் நடந்தும் கூட,  நாம் இன்னும்  பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கூட, அதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் தேவை என்று சமாதானம் சொல்லி ஏற்றுக்கொள்ள முடிகின்றது. எனினும் சக மனிதர்கள் தமது இழப்பினூடாகப் பேசுவதைக் கூட, கேட்கும் பொறுமையற்றவர்களாக,  உடனேயே சரி /பிழை அரசியலை உக்கிரமாகப் பேசுகின்ற பலரைப் பார்க்கின்றபோது இத்தகைய மனோநிலை நம்மிடையே எங்கிருந்து வந்ததென மிகுந்த அச்சமாகவே இருக்கும். ஏன் கொஞ்சமாவது மற்றவர்களின் வலிகளைப் புரிந்துக்கொள்ள முயற்சிக்ககூடாதென இவ்வாறு தமது அரசியல் நிலைப்பாட்டை பொதுவெளியில் நிலைநிறுத்த முயற்சிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் தோன்றும்.

இழப்புக்கள் நம் காலத்தைய பெருஞ்சோகம்.  இலங்கையைச் சேர்ந்த அநேகர் தமது நெருக்கமானவர்களை இந்த யுத்தத்தில் இழந்திருக்கின்றார்கள், பலர் இன்னமும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள்.  முன்னைய தலைமுறையான எஸ்.பொ, சண்முகம் சிவலிங்கம் போன்றோர் தமது தனயர்களை இழந்ததுபோல, திருக்கோவில் கவியுவன் உள்ளிட்ட பலர் தமது
சகோதர்களையும் இழந்திருக்கின்றார்கள். என்றுமே நிலைத்து நிற்கும் இந்த வடுக்களோடு வாழ்வதும்/வாழ்ந்துகொண்டிருப்பதும் அவ்வளவு எளிதும் அல்ல.

அந்த இரவில் நட்சத்திரங்களைப் பார்த்தும், கடற்கரை காற்றை நுகர்ந்தபடியும், மணலில் கைகளை அளைந்து கொண்டிருந்த
நம் எல்லோருடைய இரவும், பிறகு துயரத்தில் மிதக்கும் ஒரு இரவு போல ஆயிற்று.

0 comments: