கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பட்டியல்..

Tuesday, May 08, 2018

பட்டியல் இடுவது என்பது ஒரு வாசகருக்கு, தான் வாசித்ததை/பார்த்ததை/அனுபவித்ததைப் பகிர்வதற்குரிய உரிய விடயமே தவிர, படைப்பவர்க்கு அது பெரிதாக எதையும் தந்துவிடப்போவதில்லை (அவ்வாறே விருதுகளும் எனக் கொள்க). சிறுபத்திரிகைச் சூழலில் இருந்து வந்தவர்கள் அல்லது அதன் மீது ஒரளவு மதிப்பிருப்பவர்கள் இப்போது விகடனிலோ அல்லது இந்துவிலோ தம் பெயர்களைப் பார்த்து புளங்காகிதம் அடைவதில் அப்படி என்ன இருக்கிறதென யோசித்துப் பார்க்கின்றேன்.

இப்போது எழுதுவதற்கு எத்தனையோ தளங்களிலிருந்தாலும்  நினைத்த நேரத்திற்கு வரும் 'காலத்திலோ' அல்லது 'ஆக்காட்டி' போன்ற சிறுசஞ்சிகைகளிலோ ஆக்கம் ஒன்று வெளிவரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்னைப் பொருத்தவரையில் வித்தியாசமானது.  தமிழகத்தில்  (கோணங்கி கேட்டும் ஒரு படைப்பேனும் இன்னும் அனுப்பாதது ஒருபுறமிருக்க) கல்குதிரையிலோ அல்லது ஹரியின் மணல் வீட்டிலோ ஒரு ஆக்கம் வரும்போதோ அதுவே கூடிய நிறைவை அளிக்கக்கூடியதாக இருக்குமென நம்புகிறேன். அப்படி ஒரு காலத்தில்  கெளதம சித்தார்த்தனின் 'உன்னதத்தில்' அடிக்கடி எழுதிக்கொண்டிருந்த காலமும் அற்புதமானது.

எல்லோரும் அப்படித்தான் இருக்கவேண்டும்/ எழுதவேண்டும் என்பதல்ல  இதன் அர்த்தம். சிறுபத்திரிகை பராம்பரியத்திலிருந்து வருகின்றவர்கள்/ அந்தச் சூழலை மதிப்பவர்கள் என்பதில் இப்போதும் பெருமைகொள்ளும் என்னைப் போல இன்னும் சிலரேனும்  இருப்பார்கள் என்றே நம்புகின்றேன். இதன் பின்னணியில் இருந்து வருகின்றவர்கள் இயன்றளவு தமது சஞ்சிகைகளை வாங்குங்கள் வாங்குங்கள் என்றோ அல்லது நான் மட்டுமே கலை இலக்கிய சேவை செய்கின்றேன் என்றோ என்னை இந்தத் தமிழ்ச்சமூகம் மதிப்பதேயில்லை என்றோ சும்மா அலம்பிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

ஏன் பட்டியலால் படைப்பவர்க்கு எதுவும் நிகழ்ந்துவிடாதென்பதற்கு நானேஓரு நல்ல உதாரணம். எஸ்.ராமகிருஷ்ணன்  2008ல் சிறந்த பத்துத் தமிழ்ப்புத்தகங்கள் என ஒரு பட்டியலிட்டிருந்தார். அதில் இடம்பெற்ற ஒரேயொரு கவிதைத் தொகுப்பு என்னுடையதென நினைக்கின்றேன். அந்தத் தொகுப்பிற்கு  'ஏலாதி' விருதும் கிடைத்திருந்தது.

பட்டியலுக்குள்ளும், விருதுக்கும் உரியதான ஒரு தொகுப்பின் பிறகு நானேன் கவிதைகள் எழுதி வெளியிடவில்லை என யோசித்துப் பார்க்கின்றேன். ஏற்கனவே எழுதிய தொகுப்பைத் தாண்டாவிட்டால் இன்னொன்றை தொகுக்காமல் இருப்பது சிறந்தது என்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும், இங்கே சொல்ல வருவது என்னவென்றால் விருதாலும், பட்டியலாலும் எழுதுகின்றவருக்கு எந்தப் பயனும் பெரிதாகக் கிடைப்பதில்லை என்பதுதான். ஏற்கனவே நாம் எழுதியவற்றை  அழித்தும் /சிதைத்தும், புதியதைத் தேடிப்போவதைத் தவிர பெரிதாய் என்ன திருப்தி எழுத்தில் நமக்கு வந்துவிடப்போகின்றது?

(Dec 29, 2016)

0 comments: