கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 30

Sunday, March 17, 2024

 

 1.


விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் என் பதின்மங்களில் நான் வாசித்த பாலகுமாரனால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்று பாலகுமாரன் எழுதிய 'விசிறி சாமியார்', 'குரு', 'ஆசைக்கடல்' போன்றவற்றினூடாக விசிறி சாமியார் பற்றி நிறைய அறிந்திருக்கின்றேன். முதன்முதலாக திருவண்ணாமலைக்குப் போனபோது நான் பார்க்க விரும்பியது கோயிலையல்ல, யோகி ராம்சுரத்குமாரின் சமாதியைத்தான். ஆனால் அப்போது அது ஒருநாள் குறுகிய‌ பயணமாக இருந்ததால் நிகழாது போயிற்று. பின்னர் அண்மையில் ஐந்து நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி நின்றபோது யோகி ராம்சுரத்குமாரின் ஆச்சிரமத்துக்குப் போனபோது எந்தக் உணர்ச்சிக் கொந்தளிப்பும் ஏற்படவில்லை. அது நிறுவனப்பட்டதால் ரமணருக்கு நிகழ்ந்தது போல, ராம்சுரத்குமாருக்கும்  நிகழ்ந்த சோகம் என எனக்குள் நினைத்துக் கொண்டேன்.


'அமரகாவியம்' என்கின்ற‌ எஸ்.பார்த்தசாரதி (தமிழில் சரஸ்வதி சுவாமிநாதன்) எழுதிய நூல் என்னளவில் முக்கியமானது. ஏனெனில் இது யோகி ராம்சுரத்குமார் நிறுவனப்படாத, அவரின் தொடக்க காலங்களில் அருகில் இருந்து பார்த்து பார்த்தசாரதி எழுதிய அனுபவங்களின் தொகுப்பாகும். அவ்வளவு எளிமையாக, தன்னைத் தேடி வருபவர்களை நாடுகின்ற ஒரு 'நாடோடியாக' புன்னை மரத்தடியில் பகல்வேளையிலும், இரவில் மூடப்பட்ட திருவண்ணாமலைக் கடைகளின் முன்வாசலிலும் உறங்கியெழுந்த ஒரு யோகியைக் காண்கின்றோம். அவர் திருவண்ணாமலைக்கு வரமுன்னர் கிட்டத்தட்ட 18 வருடங்கள் அலைந்து தன் ஞானத்தைத் தேடியது பற்றியும் இங்கு துண்டுதுண்டாகக் கூறப்படுகின்றது. அதேவேளை இதில் பல்வேறுபட்ட முக்கிய நபர்களின் சந்திப்புக்களை மட்டும் அல்ல, சாதாரண மக்களோடு ராம்சுரத்குமார் நடந்தகொண்ட விதங்கள் பற்றியும், அவர்களின் அனுபவங்களைப் பற்றியும் எழுதியிருப்பதுதான் சிலாகித்துப் பேச வேண்டியது. 


தமிழ் அறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரம், பெரியசாமி தூரன், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்கள் அவருக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்திருக்கின்றனர்.  கிட்டத்தட்ட 500 பக்கங்களுள்ள இந்தப் புத்தகம், மதம், நிறுவனப்பட்ட அமைப்புக்களிலிருந்து வெளியேறி ஆன்மீகத் தேடலுள்ளவர்க்கு மிகுந்த ஆர்வங் கொடுக்கக் கூடியது என்று 'அமரகாவியம்' பற்றி 2020களில் எழுதியுள்ளேன் .


இப்போது யோகி ராம்சுரத்குமார் பற்றிய  நல்லதொரு அறிமுகத்தை முரளி அவரது 'சோக்கரட்டீஸ்' தளத்தில் தந்திருப்பதைப் பார்த்தேன். முரளி குறிப்பிடுவதைப் போல காஞ்சி காமகோடி விசிறி சாமியாரிடம் 'உங்கள் கோத்திரம் என்ன?' என்று கேட்டதும் அதற்கு விசிறி சாமியார் நகைச்சுவையாக ஒரு பதில் அளித்ததும் 'அமரபீடம்' நூலிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இருந்த விசிறி சாமியார் பின்னாட்களில் நிறுவனப்பட்டதால் (அது ஒருவகையில் தவிர்க்க முடியாததும் கூட, இல்லாவிட்டால் ஜே.கிருஷ்ணமூர்த்தி, நாராயணகுரு மாதிரி தமது பீடங்களைத் தாமே தயவு தாட்சண்யமில்லாது அவர்கள் வாழும் காலத்திலோ அல்லது தம் வாழ்நாளோடோ நிர்மூலமாக்கும் அதிதிடமும் வேண்டியிருக்கும்) இதே காஞ்சிபீடமே அவரது இறுதிக்கிரியைகளில் உள்நுழைந்து கொண்டது என்பதும் முரண்நகையானது.


என்றாலும் விசிறி சாமியாருடனான‌ அந்தரங்கமான உரையாடல்கள்  இன்றும் எனக்குள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றது.


2

.
Sudani from Nigeria, Argentina Fans Kaattoorkadavu ஆகிய மலையாளத் திரைப்படங்கள் கால்பந்தாட்ட வீரர்கள், இரசிகர்களைப் பின்னணியாகக் கொண்டவை என்றால், Sesham Mike-il Fathima ஒரு கால்பந்தாட்ட இரசிகை எப்படி ஒரு  நேரலை கால்பந்தாட்ட வர்ணனையாளராக மாறுகின்றார் என்பதைப் பற்றியது. மலபுரத்தில், orthodox முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண் எவ்வாறு ஆண்களுக்கே மட்டுமே உரித்துடையதென்கின்ற நேரலை வர்ணணையாளர்கள் பட்டியலில் முதல் மலையாளப் பெண்ணாக இடம்பிடிக்கின்றார் என்பதை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கின்றார்கள்.


மலையாளப் படங்களில் இருந்து எப்படி சிறுபான்மையினங்களை அதன் இயல்பு கெடாமல் சித்தரிக்க வேண்டும் என்பதை நமது தமிழ் நெறியாளர்கள் கற்கவேண்டும். இத்தனைக்கும் இந்த இயக்குநருக்கு இது முதல் படம் என்று சொல்கின்றார்கள். அவர் இஸ்லாமியரும் அல்ல. ஒரு எளிய கிராமத்துப் பெண் தனது கனவை அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளில் நம்மையும் ஒரு சாட்சியாக இத்திரைப்படத்தினூடு அழைத்துச் செல்கின்றனர். இந்தப் பெண் தான் நினைத்ததை சாதிக்காமல் விட்டிருந்தால் கூட, அவர் செய்த அனைத்து முயற்சிகளுக்குமாக நாம் அவரை அள்ளி அரவணைத்திருப்போம். அதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி. 


இதில் நடித்த அனைத்துப் பாத்திரங்களும் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கின்றனர். அதிலும் கல்யாணியின் அந்தத் துடிப்பும், கொண்டாட்டமும் கால்பந்தாட்ட இரசிகராக இல்லாதவர்களைக் கூட  அவ்வளவு வசீகரிக்கும். இரசிகர்களையோ/வாசகர்களையோ தன்னோடு கூட அழைத்துச் செல்லாத எந்தப் படைப்பும் அவ்வளவு பரவலாகச் சென்று சேர்வதில்லை. அந்த magic மட்டும் நிகழ்ந்துவிட்டால் எந்தப் படைப்பும் தன் உயரத்தை அடைந்து ஒளிரும் நட்சத்திரமாகிவிடும். அந்த 'அதிசயம்' இங்கே நிகழ்ந்திருக்கின்றது.



3.


எனக்குப் பிடித்த எழுத்தாளராயினும் விருதுகள் அவர்களுக்குக் கிடைக்கும்போது அவ்வளவாக நான் இங்கே பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் இப்போது ரமேஷ் பிரேதனுக்கு இவ்வாண்டுக்கான பிரபஞ்சன் விருது கிடைத்திருக்கின்றதென்று அறியும்போது அந்த மகிழ்வை இங்கே பகிர்ந்து கொள்ளவேண்டுமெனத் தோன்றியது.ரமேஷ் (‍ - பிரேமும்) என் வாசிப்பில்/எழுத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள். அவர்களை வாசிக்க முடிந்ததால்தான், ஒருகாலத்தில் தொலைவில் வைத்திருந்த நகுலன் உள்ளிட்ட பலரின் படைப்புக்களுக்குள் பின்னர் எளிதாக நுழைய முடிந்தது. இன்றைக்கு ரமேஷ்-பிரேம் என்ற இரட்டையர்களில் இருந்து பிரிந்து ரமேஷ் தனியே எழுதிக் கொண்டிருப்பவை இன்னும் என் மனதுக்கு நெருக்கமானவை.

 

விருதுகளில் மீது தனிப்பட்டு எனக்கு அவ்வளவு உவப்பில்லாதபோதும், என் முன்னோடிகளை விருதுகளைத் தவிர அவர்களை மதிப்பளிப்பதற்கு வேறெந்த வழியும் இப்போதைக்கு தமிழ்ச்சூழலில் இல்லையென்கின்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஆகவேதான் அவ்வப்போது இங்கிருக்கும் 'இயல் விருது', 'விளக்கு விருது' படைப்பாளிகளுக்கு அளிக்கும்போது ரமேஷ் பிரேதன் போன்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கின்றேன்/விரும்பியிருக்கின்றேன். 

 

இப்போது ரமேஷ் பிரேதனுக்கு 'பிரபஞ்சன் விருது' வழங்கப்படுவது மிகுந்த மகிழ்வைத் தருகின்றது. அதுவும் ரமேஷ் போன்றவர்கள் தங்கள் கவிதைக்குள்ளும், புனைவுகளுக்குள்ளும் கொண்டு வந்த,  அவர்கள் மதிக்கும் அதே பிரபஞ்சனின் பெயரால் இந்த விருது வழங்கப்படுவது ரமேஷின் எழுத்துக்களை இன்னும் ஒருபடி மேலே சென்று மதிப்பளிப்பதைப் போன்றது.


ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துகள்.


***********


(மார்கழி, 2023/ தை, 2024)

(புகைப்படங்கள்: நன்றி முகநூல் )

 

'நீர்வழிப் படூஉம்'மும், இன்ன பிறவும்..

Saturday, March 16, 2024

 

காலங்காலமாக மனிதர்கள் வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு, ஓடிப் போகின்றவர்களாக‌ இருந்திருக்கின்றார்கள். ஆதியிலே புத்தரும் இப்படி தன் மாளிகையை விட்டு எவருக்குந் தெரியாமல் சென்றிருக்கின்றார். வீட்டை விட்டு என்றென்றைக்குமாக நீங்குவதற்கு ஒவ்வொருவருக்கும் பல்வேறு அக/புறக் காரணங்கள் இருந்திருக்கின்றன. நமது ஈழப்போராடத்தில் இப்படி பலர் போராட்ட இயக்கங்களில் இணைவதற்காய், குடும்பத்திடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போயிருக்கின்றனர்.  அவ்வாறானவர்களில் பலர் மீண்டும் வீடடையாமல் இடைநடுவில் அகால மரணமும் அடைந்திருக்கின்றனர்.

 

அதுபோலவே தம் மன விடுதலைக்கென, தமக்குப் பிடிக்காத குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லவென‌ பலர் வீட்டை விட்டு நீங்கியிருக்கின்றார்கள். சமகாலத்தில் இப்படி வீட்டை விட்டு ஓடிப்போகின்றவர்களைப் பற்றி நிறையப் புனைவுகளை எழுதிய ஒருவராக இமையத்தைச் சொல்லலாம். எம். கோபாலகிருஷ்ணனின் 'தீர்த்த யாத்திரை',  ஒருவன் தன் தேடலுக்காய் வீட்டை விட்டு விலகிச் செல்கின்றவனாக இருந்தபோதும், கோபாலகிருஷ்ணனின் முதன்மையான படைப்புக்களில் ஒன்றாக அதை வைக்கமுடியாது. அதேவேளை பல வருடங்களுக்கு முன் காசிக்கு ஓடிப்போன ஒரு பெண்ணைத் தேடி, அவள் இறந்துபோனபின் பின்னோக்கிப் பார்க்கின்ற‌ பா.வெங்கடேசனின் 'வாராணசி'யில் இந்த ஓடிப்போதல் கச்சிதமாகக் கையாளப்பட்டிருக்கின்றது.

 

இவ்வாறான 'ஓடிப்போதல்' தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்' நாவலிலும் நிகழ்கின்றது. ஆனால் அது முக்கிய பேசுபொருளாக இல்லை. அதேவேளை அந்த ஓடிப்போதல் நிகழும்போது, ஓடிப்போனவரைப் பின் தொடராது, அவ்வாறு ஓடிப்போனவரால் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு என்ன நிகழ்கின்றது என்பதை நுட்பமாக அலசுகின்றது. நாவிதத் தொழில் செய்யும் காருமாமாதான் இங்கே முதன்மைப் பாத்திரம். காருமாமாவின் மரணத்தோடு தொடங்கும் நாவல் அவரின் மரணம் முடிந்து எட்டாம் நாள் 'தாலியறுப்புச் சடங்கோடு முடிவடைந்து விடுகின்றது. அந்த எட்டோ/பத்து நாட்களில் காருமாமாவின் வாழ்க்கை பற்றி மட்டுமில்லை, அவரோடு சம்பந்தப்பட்ட பலரது கதைககளும் இப்புதினத்தில் சொல்லப்படுகின்றன.

 

மனிதர்களுக்கு கலை இலக்கியம் எதற்கு அவசியமென‌  யோசிக்கும்போது, முதன்மையாக அது ஒருவர் வாழவோ கற்பனை செய்யவோ முடியாத‌ பிறிதான வாழ்க்கை முறைகளை அறிமுகப்படுத்துவ‌தென்று  நான் எண்ணிக் கொள்வதுண்டு. மேலும் அதிகாரப் பெரும்பரப்பில்  விலத்தப்பட்ட உதிரிகளாக/ கவனிக்கப்படாத உயிரிகளான மனிதர்களை, அவர்களுக்கும் வாழ்விருக்கின்றது, அவர்களுக்கென்று கொண்டாட்டங்களும்‍ சரிவுகளும் இருக்கின்றதென்று நம் முன்னே கலை நிகழ்த்திக் காட்டுக்கின்றது. அண்மையில் அலிஸ் வாக்கரின் Colour Purpleஐ தியேட்டரில் பார்த்தபோது, அலிஸ் அன்று அதை எழுதிப் பதிவாக்காவிட்டால் பல்வேறுவகையில் ஒடுக்கப்பட்ட மனிதர்களாயிருந்த‌ கறுப்பினத்தவர்களின் திமிர்தெழுதல்களும், கொண்டாட்டங்களும் நமக்கு ஒருபோதும் தெரிந்திராதென்றே ஒவ்வொரு காட்சிகளிலும் எண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வாறே தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்'மில் விளிம்புநிலையாக்கப்பட்ட நாவிதக் குடும்பங்களில் ஊடாடிக்கொண்டிருந்த அற்புதமான வாழ்வு விரித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

 

 

நான் வாசிக்க வந்த 2000களின் தொடக்கத்தில், அப்போது வாசிக்க முடிந்த பெருமாள் முருகனின் 'கூளமாதாரி'யும், சோ.தர்மனின் 'கூகை'யும், கண்மணி குணசேகரனின் 'கோரை'யும் ஏன் இன்னும் மறக்க முடியாத நாவல்களாய் எனக்குள் தங்கியிருக்கின்றதென யோசிக்கும்போது, அவை எனக்கு அறிமுகமற்ற கதைப்பரப்புக்களை மட்டுமில்லை, அந்த கதையில் உலாவும் மனிதர்களை அவ்வளவு பரந்த தளத்தில் மனதில் தங்கும்படியாக விபரிக்கச் செய்ததும் முக்கிய காரணமென நினைக்கின்றேன். இன்றைக்கு எழுதப்படும் பெரும்பாலான‌ நாவல்களில் இந்தப் புள்ளிகள் தவறவிடப்படுவதால் அவை மட்டுப்படுத்தப்பட்ட வாசிப்பு மன எல்லைக்குள் மட்டும் நின்றுவிடுகின்றன.

 

'நீர்வழிப் படூஉம்' நான் முன்னே குறிப்பிட்ட நாவல்களின் வழி வந்துசேரக் கூடியதொன்றாகும். 'கூளமாதாரி'யில் வரும் சிறுவன் பாத்திரம் போல ஒருவனான கதைசொல்லியாலே இந்நாவலின் கதை பெரும்பாலும் சொல்லப்படுகின்றது. காருமாமாவின் மரணத்தின்போது அவன் திருமணத்துக்கு தயாராகிவிட்ட இருபதுகளில் இருக்கக்கூடிய ஓர் இளைஞன். ஆனால் நனவிடைதோய்தல் முழுதும் அவன் சிறுவனாக இருப்பதிலேயே சொல்லப்படுகின்றது. இந்த நாவலின் கதை, எங்கு வாழ்ந்தாலும் உறவுகளுக்கு இடையிலும்/கூட்டுக் குடும்பங்களில் நடுவிலும் நிகழக்கூடியதுதான். ஆனால் காருமாமா, பெரியம்மா, அம்மா, ராசம்மா அத்தை என்பவர்களைப் பற்றிச் சொல்ல தேவிபாரதியால் மட்டுமே முடியும். ஏனென்றால் அது அவருக்கு மட்டுமே நன்கு பரிட்சயமான வாழ்க்கை. அதை நம்மால் வாழ மட்டுமில்லை, கற்பனை செய்யவும் முடியாது. அவ்வாறு நாம் வாழவும் கற்பனை செய்யவும் முடியாத வாழ்வையும், மனிதர்களையும் நமக்கு நினைவூட்டத்தான் எழுத்துத் தேவையாகின்றது.

 

எந்த மிகச் சிறந்த நாவல்களாயினும் அதில் விடுபடுதல்கள் இருக்கும். அவ்வாறான குறைகள்தான் ஒரு நாவலை முழுமைபடுத்துகின்றதென நம்புகின்றவன் நான்.. இங்கே நாவிதர்கள், அவர்கள் சென்று தொழில் செய்யும் ஆதிக்கச் சாதியினர் குறைகளற்றே விபரிக்கப்பட்டிருக்கின்றனர். சிலவேளைகளில் தேவிபாரதி ஆதிக்கசாதிகள் அது எங்கு இருப்பினும் எவ்வாறு ஒடுக்கும் என்பது நமக்குத் 'தெரிந்த கதை'தானேயென அதை விலத்திச் சென்றிருக்கலாம்.  Colour Purple கறுப்பின மக்களின் வாழ்வைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் சட்டென்று விலத்தி கறுப்புப் பெண் தனது காருக்குப் பெற்றோல் அடிக்கும் இடத்தைக் காட்டும். அங்கே அந்தப் பெண்ணைச் சந்திக்கும் வெள்ளையினப் பெண் இந்தக் கறுப்புப் பெண்ணை தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வாவென்று அதே அடிமை மனோபாவத்துடன் அழைப்பார். இந்தக் கறுப்புப் பெண்ணோ ஏன் அங்கே வேலைக்கு வரவேண்டுமென வாய்காட்டுவாள். அது மட்டுமே அவள் செய்த ஒரே குற்றம். வசதி வாய்ப்புக்களில் எவ்வளவு முன்னேறினாலும் வெள்ளையினத்தவர்களுக்கு அன்று கறுப்பர்கள் அடிமைகள்தான்.

 

அந்த சிறு எதிர்ப்புக்காய் அந்தக் கறுப்புப் பெண், கணவர் பிள்ளைகள் முன்னால் பொலிஸால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாள். அவள் மாதக்கணக்கில், திருப்பி ‘வாய்காட்டி’யதற்காய் தண்டனைக்குள்ளாக்கப்படுவது மட்டுமில்லை, அந்தத் தண்டணை முடிந்தபின்னும் அதே வெள்ளையினப் பெண்மணியின் வீட்டில் வேலைக்குச் செய்வதற்காக அழைத்துச் செல்லப்படுவாள். இவையனைத்தையும் அவளின் கணவர்/பிள்ளைகளால் எதுவுமே செய்யமுடியாது, வேதனையுடன் பார்த்துக் கொள்ளவே முடிகின்றது. அவ்வளவுதான் இத்திரைப்படத்தில் வரும் வெள்ளையினத்தவர் சம்பந்தப்படும் காட்சி. ஆனால் படம் முழுவதும் அந்தப் பெண் செய்த குற்றந்தான் என்ன என்று நம் மனதை ஆழமாகப் பாதிக்கும் விடயமாக அது இருக்கும். இப்படியான திக்கசாதி மனோபாவத்தின் சுவடெதுவும் இன்றி தேவிபாரதி ஒடுக்கப்பட்ட சமூகமொன்றி வாழ்வைப் பற்றி எழுதியதற்கு படைப்பாளியாக‌ அவருக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கவும் கூடும். ஆனால் இற்றைக்கும் சாதிய சமூகமாகவே தமிழ்மனம் தன் ஒவ்வொரு செயற்பாட்டிலும் நிரூபிக்கத் துடித்துக் கொண்டிருக்கும்போது 'இந்த விடுபடல்' ஒரு நெருடலாகவே வாசிக்கும் மனதுக்கு இருக்கும்.

 

ஆனால் இதன் நிமித்தம் 'நீர்வழிப் படூஉம்' தன் சிறப்பை இழக்கப்போவதில்லை. அது தன்னளவிலே ஒரு முழுமையான நாவல்தான். ஒரு படைப்பை வாசிக்கும்போது  வாசிப்புமனம் அதற்கு நிகரான ஏற்கனவே எழுதப்பட்ட படைப்புக்களை ஒப்பிட்டுப் பார்க்கும். இந்த நாவலில் முக்கிய கருப்பொருளில் ஒன்று அண்ணா - தங்கச்சி பாசம்: அது காருமாமாவுக்கும்  இந்தக் கதைசொல்லியின் அம்மாவுக்குமான உறவு. அதை தேவிபாரதி பொதுமனங்களுக்கு நன்கு பரிட்சயமான 'பாசமலர்' சிவாஜி- சாவித்திரி பாத்திரங்களை முன்வைத்து தன் நாவலில் காருமாமா X கதைசொல்லியின் அம்மா உறவை ஆழமாக எடுத்துச் செல்கின்றார். அது ஒரு படைப்பாளிக்குரிய சவால். வாசகரின் முன் அவர்களுக்கு நனகு ஏற்கனவே தெரிந்ததை வைத்து அதைத் தாண்டி என் எழுத்தால் செல்ல முடியும் என்பதால் வருகின்ற கம்பீரம். தேவிபாரதி அந்தச் சவாலை அதியற்புதமாகக் கையாண்டிருக்கின்றார். இதே போன்ற சவாலை, திருமணத்தின் பின் வருகின்ற உறவைச் சொல்லும் படைப்பான 'கமலி'யில் சி.மோகன் நமக்கு நன்கு அறிமுகமான ஜானகிராமனின் படைப்புக்களை அந்த நாவலுக்குள் வைத்தே அழகாக‌ மீறிச்சென்றிருப்பார். 

 

காரு மாமாவும், அவரை விட்டு தன் பிள்ளைகளோடு ஓடிப்போகின்ற ராசம்மா அத்தையும், காருமாமாவின் சகோதரிகளும் இந்தப் புதினத்துக்குள் வராது விட்டிருந்தால், வரலாற்றில் சும்மா வாழ்ந்துவிட்டுப் போயிருக்கக்கூடிய சாதாரண மனிதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் தேவிபாரதி அவர்களை காலத்தில் மறைந்து போகாதவர்களாக மட்டுமின்றி, நம்மைப் போன்று முற்றிலும் அந்நியமான ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடையும் முக்கியமான மனிதர்களாக அவர்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார். இவ்வாழ்வில் சாதாரணமானவர்கள் என்று சொல்லி பொதுப்பரப்பில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களுக்கு, அது கலை அளிக்கின்ற மாபெரும் மரியாதை எனச் சொல்லலாம்.

 

****************

 

( நன்றி: 'அம்ருதா' - பங்குனி/2024)

ஹென்றி மில்லர் என்னும் எதிர்க்கலாசாரவாதி - 03

Thursday, March 14, 2024

 3.

‘இளமையில் இருக்கும்போது தத்தளிப்புக்களுடனும், பதற்றங்களுடனும் எல்லாவற்றோடும் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருப்போம். மத்திய வயதுக்கு வந்தவுடன் எதற்காக ஓடிக்கொண்டிருக்கும் என்கின்ற கேள்விகள் மனதில் எழும். வயது முதிர்கையில் இவை எல்லாமே எவ்வளவு முட்டாள்தனமாவை என்பது விளங்கியிருக்கும். அப்போது மரணம் அல்லது மரணத்திற்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. நான் மறுபிறப்பை நம்புகின்றேன். அது உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை நம்புகின்றேன்' என்று ஹென்றி மில்லர் கூறுகின்றார்.

பசுபிக் கடற்கரையோரம் ஒரு வீடற்றவனாக அலைந்தபோது எனக்கு இந்த நகரின் அழகு தெரியவில்லை. ஒரளவு வசதிகள் வந்தபின் இது அமைந்திருக்கும் இயற்கையின் பேரழகு புரிந்தது என்று கூறிய ஹென்றி கலிபோர்ணியாவில் Big Sur இல் காலமாகும்வரை வாழ்ந்திருக்கின்றார். இதே பெயரில் ஹென்றியினால் பாதிக்கப்பட்ட, பீட் எழுத்தாளரான ஜாக் கீவ்ரோக் ஒரு நாவலை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹெர்மன் ஹெஸ்ஸேயைப் போல இயற்கையாலும், புத்தரினாலும் அதிகம் ஈர்க்கப்பட்ட ஹென்றி மில்லர் ஹெஸ்ஸேயைப் போல ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுடையவராக இருந்திருக்கின்றார்.

தன்னில் உள்ள கெட்டவனை நல்லவனாக்கும் மனோநிலை ஓவியங்களை வரையும்போது இருக்கின்றது என்கின்றார் ஹென்றி. இதையே ஹென்றி மில்லரின் ஆவணப்படத்தில், நிஜத்தில் நல்லவராகத் தோன்றமளிக்கும் நீங்கள் எப்படி மிக மோசமான பாத்திரமாக உங்களை புனைவுகளில் முன்வைத்தீர்கள் எனக் கேட்கும்போது, நான் புனைவுகளில் எனக்குள் இருக்கும் விலங்கு நடத்தைகளையே முன்வைத்தேன். எந்தளவுக்கு மோசமாக என்னை முன்வைக்க முடியுமோ அதை முன்வைக்கும்போது எனக்கு அதில் திருப்தி இருந்தது என்று ஹென்றி கூறுகின்றார்.

பெண்ணிய அலை 60-70களில் அமெரிக்காவில் எழுச்சி பெற்றபோது, ஹென்றி மில்லரின் நாவல்களும், டி.எச்.லோரன்ஸின் எழுத்துக்களைப் போல பேசு பொருளாகின. பெண்களை மோசமாகவும், பாலியல் ரீதியில் கீழானவர்களாகவும் ஹென்றி, (எனக்குப் பிடித்தமான ப்யூகோவ்ஸ்கி உட்பட) பலர் எழுதியிருக்கின்றனர். அப்போதும் பெண்ணியவாதிகளில் ஒரு பகுதி, ஹென்றி மோசமாகப் பெண்களைச் சித்திரித்தாலும் அதில் நேர்மையும்,வெளிப்படைத் தன்மையும் இருக்கின்றது. இது வாழ்விலே நாம் சந்திக்கும் எத்தனையோ ஆணாதிக்கவாதிகளை விடப் பரவாயில்லை. ஒருவகையில் இது இன்னொரு உருமாற்றத்திற்கு ( transformation) வழிவகுக்கும் எனச் சொல்லியிருக்கின்றனர்.

இது பெண்ணியம் சார்ந்து மட்டுமில்லை, அரசியல், கலை பேசப்படும் எல்லா வெளிகளுக்கும் பொருந்தக்கூடியதே. அப்படி நம்மை நாம் திறக்கையில் அது எவ்வளவு மோசமாக இருந்தாலும், நாம் ஒரு அசலான நல்ல மாற்றத்தை விரும்புகின்றோம் என்றால், நம்மை இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியே இருக்கின்றது. அந்தவகையில் ஹென்றி மில்லர் தன் அசல்தனத்தை (அவரின் வார்த்தைகளில் தனக்குள் இருக்கும் மிருக நடத்தைகளை) முன்வைத்திருக்கின்றார். அப்படி ஹென்றி வெளிப்படையாக இருந்ததால்தானோ என்னவோ அவரது வாழ்க்கையில் கடைசி எல்லைவரை பெண்கள் ஹென்றியைப் பின் தொடர்ந்து இடைவிடாது வந்திருக்கின்றார்களோ தெரியவில்லை.

‘நான் சாதாரண மனிதர்கள் என்று சொல்லப்படுவர்களிடையே இருக்க விரும்புகின்றேன். ஒரு நகரத்து மனிதனாக ப்ராக்ளினில் பிறந்து  பாரிஸில் பத்து வருடங்கள் கழித்தவன். பெரும்பாலும் விவசாயமும், எளிய வேலைகளையும் செய்தவர்களோடு பின்னர் நான் கலிபோர்ணியாவின் புறநகர்ப்பகுதியில் வாழ வந்தபோது இச்சூழல் எனக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் கொஞ்சக்காலத்திலே இவர்களே அருமையான மனிதர்கள் என்பதைக் கண்டறிந்தேன். இவர்கள் சாதாரண மனிதர்கள் எனச் சொல்லப்பட்டாலும் அசாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும்/கதைகளையும் கொண்டிருக்கின்றனர். இவர்களோடு இருப்பதில் நான் ஒருபோதும் அலுப்படைவதில்லை’ என்று ஹென்றி தன் Bel Sur வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஹென்றி இந்நகருக்கு வந்து வாழத் தொடங்கியபின், அவரைத் தேடி வாசகர்களும், பிரபலமானவர்களும் வரத் தொடங்கியபின் அவரின் வீடிருந்த அமைவிடம் இன்னும் கவனத்துக்குரியதாகியிருக்கின்றது.

ஹெ
ன்றி தனது வாழ்வில் மூன்று முக்கியமானவர்களை எப்போதும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார். அதில் ஒருவர் எழுத்தாளரான Lawrence Durrell. அவரோடுதான் ஹென்றி கிரேக்கத்திற்கு பயணிக்கின்றார். ஐரோப்பாவில் இரண்டாம் உலக மகாயுத்தம் தொடங்கி, பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்ப கையில் காசில்லாமலும், தற்கொலை எண்ணத்தோடும் இருந்த தன்னைக் காப்பாற்றியவர் லோரண்ஸ் என்கின்றார். மற்ற முக்கியமானவர் அனாஸ். ஹென்றியின் எழுத்தின் முக்கியமான காலத்தில் அருகில் ஒரு காதலியாகவும், பின்னர் ஒரு நீண்டகாலத் தோழியாகவும் இருந்தவர் அனாஸ். ஹென்றி ஒரு ஆவணப்படத்தில் அனாஸிடோடு பேசும்போது, 'நீங்கள் நான் எழுதிய நாவல்களைத் திருத்தி பக்கங்களைக் குறைக்க வேண்டும் என்று அடிக்கடி சண்டை பிடிப்பீர்கள். அப்போது அந்த வார்த்தைகளை கேட்டு நடந்திருந்தால் நான் சிறிய புத்தகங்களாக அவற்றையெல்லாம் எழுதியிருப்பேன்' என்று தன் எழுத்துக்களை மீளச் சென்று பார்க்கவும் செய்கின்றார் ஹென்றி.

ஹென்றியின் வாழ்க்கை ஒருவகையில் நாளாந்த நிகழ்வுகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது போன்று தோன்றும். நியூயோர்க்கில் 'வெஸ்டர்ன் யூனியன்'இல் வேலையை விட்டு விலகுவதிலிருந்து அவர் எந்தப் பணியையும் பிறகு செய்யவில்லை; முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டிருந்தார். அவரது வேலையற்ற வாழ்க்கை தொடக்ககாலத்தில் அவரது நண்பர்களாலும், பின்னர் அவர் எழுதிய நூல்களின் ராயலடியாலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றது.

ஒருவகையில் ஹென்றியின் முதலாவது நாவலான Tropic of Cancer கவனிக்கப்படாது விட்டிருந்தால் ஹென்றி என்னவாக மாறியிருப்பார் என்பது கேள்விக்குரியது. அவர் வசதியற்றவராக,  வீடற்றவராக தெருக்களில் அலைந்து திரிபவராக இருந்திருந்தால் கூட,  அப்போதும் ஒரு எழுத்தாளராக மட்டுமே இருக்க முடியும் என்பது ஹென்றிக்கு நன்கு தெரிந்திருக்கும்.

அந்த வேட்கைதான் ஹென்றியை புறச்சூழல்களின் வேதனைகளைத் தாண்டி எழுத வைத்திருந்தது. எழுத்து மீதான் நேசிப்புத்தான் ஹென்றியை அணைந்து விடாத தீயாக வாழ்க்கையை நேசிக்கவும் வைத்திருக்கின்றது. அந்தத் தீவிரத்திலும் அர்ப்பணிப்பிலும் முகிழ்ந்த ஹென்றியின் எழுத்துக்களை நாம் இன்றும் பேசிக் கொண்டிருக்கின்றோம். அதேவேளை இந்தக் கணமே முக்கியமே தவிர, தன் எழுத்துக்கள் தன் இறப்பின் பின் என்னவாகும் என்பதைப் பற்றி தான் அதிகம் கவலைப்படுவதில்லை என்று சொன்னவரும் ஹென்றிதான்.

***************


(நன்றி: 'காலம்' - இதழ்/60)


ஹென்றி மில்லர் என்னும் எதிர்க்கலாசாரவாதி - 02

Tuesday, March 12, 2024

 

2.

'To be silent the whole day long, see no newspaper, hear no radio, listen to no gossip, be thoroughly and completely lazy, thoroughly and completely indifferent to the fate of the world is the finest medicine a man can give himself.'
-Henry Miller

ஹென்றி மில்லர் தனக்கு மிகப் பிடித்த நாவல்களில் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’வைக் குறிப்பிடுகின்றார். ஸென்னை பற்றிக் குறிப்பிடாமல் அது ஸென்னைப் பற்றிப் பேசுகின்றது என்கிறார். அதேபோல ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதிப்பைப் பெற்றவராகவும் ஹென்றி இருந்திருக்கின்றார். ஸென்னைப் பற்றி குறிப்பிடுகையில் இந்தக் கணமே அடுத்த கணத்தை பாதிக்கும் என்றால், நீங்கள் ஐந்து படிகள் தாண்டி ஒன்றைக் கற்பனை செய்யமுடியாது. அப்படித்தான் பலர் இருக்கின்றார்கள், அதனால் வாழ்வு ஏமாற்றமுடையதாக மாறுகின்றது என்கின்றார்.

எழுத்தாளர் தொடக்க காலங்களில் அசலோடு வருவதில்லை. யார் யாரினதோ பாதிப்புக்களோடுதான் அவர்கள் படைப்பாளிகளாக மாறுகின்றார்கள். தன்னை மிகவும் பாதித்தவராக தாஸ்தவேஸ்கியை ஹென்றி குறிப்பிடுகின்றார். அதேவேளை தன் எழுத்து நடையில் ஆதிக்கம் செலுத்தியவராக நோர்வேஜிய எழுத்தாளரான Knut Hamsun ஐ நன்றியுடன் நினைவு கூர்கின்றார்.

அனாஸ் எழுதிய குறிப்புகளின்  ஹென்றியும் ஜூனும் சம்பந்தப்பட்டவை தொகுக்கப்பட்டு 'Henry and June' என்று தனித்த ஒரு நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. ஹென்றியின் Tropic of Cancer இல் வரும் பாலியல் சித்தரிப்புக்களுக்கு நிகராக, அனாஸின் அனுபவம் சார்ந்த சுயகுறிப்புகளும் இருக்கின்றன. இன்று பெண்ணியல்வாதிகளால் - முக்கியமாக அலிஸ் வாக்கர் உள்ளிட்ட பலரால்- அனாஸ், தனக்கும் ஜூனுக்கும் இடையிலிருந்த பாலியல் உறவுகளை மிகத் தத்ரூபமாகவும், வெளிப்படையாகவும் எழுதியிருக்கின்றார் என்று பாராட்டப்பட்டு, ஒரு சிறந்த சிற்றின்ப வகைப் படைப்பாளி எனவும் இன்று அனாஸ் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

ஹென்றியின் எழுத்து நடையில் அன்று பிரான்சில் பாதிப்புச் செலுத்திய மீமெய்ம்மையியல் (Surrealism) மிகப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் அனாஸ் ஆர்வத்துடன் கற்ற psychoanalysis உம் ஹென்றியில் ஆதிக்கம் செலுத்துவதை அவரது எழுத்துக்கள் தன்போக்கில் ‘திசைகெட்டு அலைந்து திரியும்’போது நாம் கவனிக்கலாம். ஹென்றி மில்லர் அவரது பெரும்பாலான நாவல்களில் அவரது மனைவிகள், காதலிகளைச் சித்தரித்தாலும், அவரது நாவல்களில் அனாஸ் பற்றி புனைவாகவோ, அதற்கு வெளியிலோ சித்தரிக்கப்படவில்லை என்பது வியப்புக்குரியது. ஹென்றி அதன் பிறகு பிரான்ஸை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினாலும், அனாஸின் நீண்டகால நண்பராக ஹென்றிக்கு அவரது மறைவுவரை இருந்திருக்கின்றார்.

பிரான்ஸை விட்டு 1930களின் பிற்பகுதியில் வெளியேறும் ஹென்றி கிட்டத்தட்ட ஒரு வருடம் கிறிஸில் தனது நண்பரொருவருடன் அலைந்து திரிந்திருக்கின்றார். ஹென்றி ஒருவகையில் இப்படியான பயணங்களில் அலைந்து திரிகின்றவர் என்றாலும், இன்னொரு வகையில் தனது காதலிகளைத் தேடியும் வெவேறு நாடு/நகரங்களுக்கு அலைந்து அவர் திரிந்து இருக்கின்றார். தன் வாழ்நாளில் ஐந்து முறை திருமணம் செய்தாலும் காதலிகளைத் தேடித் திரிவது ஒருபோதும் அவருக்கு முடிவடைந்த பயணங்களாய் இருந்ததில்லை.

கிரேக்கத்தில் அலைந்து திரிந்து பயண அனுபவங்களாய் எழுதிய ‘The Colossus of Maroussi’ ஐ ஹென்றி தனது எழுத்துக்களில் மிகச் சிறந்ததாய்ச் சொல்கின்றார். அதன் பின் அமெரிக்காவிற்கு வந்து (1940கள்) பழைய காரொன்றை வாங்கி சில வருடங்கள் அமெரிக்க முழுதும் தனது நண்பருடன் ஹென்றி அலைந்து திரிகின்றார். அப்போது அமெரிக்காவின் இன்னொரு முகத்தைப் பார்க்கின்றார்.

ஐரோப்பாவில் ஒரு புலம்பெயர் வாழ்வைப்  பத்து வருடங்கள் வாழ்ந்த ஹென்றிக்கு அமெரிக்காவை ஒரு வெளியாளாகப் பார்க்கும் பார்வையை இது கொடுக்கின்றது. அமெரிக்காவின் தொழில் புரட்சியையும், பெரும் நுகர்வையும், மறுபுறத்தில் வறுமையையும் கண்டு வெறுத்து அவர் எழுதிய நூலே ‘The Air-Conditioned Nightmare’.

பலரின் மூளைக்குள் கவனமாகப் பொதிக்கப்பட்ட அமெரிக்கக் கனவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும், அவற்றை நியாயப்படுத்த புதைத்த வைத்த தொன்மங்களையும் தொடர்ந்து கேள்விகள் கேட்டபடியால் ஹென்றி எதிர்க்கலாசாரத்தின் ஒரு அடையாளமாகவும் சுட்டப்படுகின்றார். அது மட்டுமின்றி பாலியலை அதிகம் எழுதியதால் தடை செய்யப்பட்ட அவரது நாவல்கள் பின்னர் 1960களில் தடை நீங்கியபோது, பாலியல் எழுத்துக்களை மட்டுமின்றி எதையும் 'எழுத்தின் சுதந்திரத்தால்'  எழுதமுடியும் என்று அமெரிக்காவுக்கு எடுத்துக்காட்டிய ஒரு படைப்பாளியாகவும் அவர் நினைவுகூரப்படுகின்றார். கிட்டத்தட்ட பல்வேறு நீதிமன்றங்களில் 60இற்கும் மேற்பட்ட வழக்குகளை ஹென்றியின் நாவல்கள் அதன் பேசுபொருளுக்காய்ச் சந்தித்திருக்கின்றன.


ஹென்றி நீண்டகாலமாக ஒழுங்கான வருமானம் இல்லாது இருந்தே எழுதியவர். அமெரிக்காவுக்குத் திரும்பிய தொடக்க காலத்தில் வீடற்றவராக கலிபோர்ணியாவில் இருந்தவர். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னரே அவரின் நூல்களுக்கான ரோயல்டி வரத்தொடங்கிய பின்னே ஒரளவு சமூகமான வாழ்க்கையைக் ஹென்றி வாழத் தொடங்குகின்றார். ஹென்றியின் பல நூல்கள் அமெரிக்காவில் 1960களுக்கு பின்னரே, அவரின் 70 வயதிலே சட்டபூர்வமாக பதிப்பிக்கப்படுகின்றது.

ஹென்றியின் எழுத்துக்களின் வகிபாகம் இன்று என்னவாக இருக்கின்றது என்பது முக்கிய வினாவாகும். அன்றைய காலத்தில் (1930களில்) ஹென்றியின் எழுத்துக்கள் காலத்தின் முன்னோக்கிப் பாய்ந்த குதிரையின் நான்கு கால் பாய்ச்சலைப் போன்றது. ஆகவே பல சர்ச்சைகளையும், தடைகளையும் அது சந்தித்தது. இது மூலம் பல திறப்புக்களை அன்றைய காலத்தில் எழுத்துக்குத் திறந்து விட்டிருந்தது.

ஹென்றியின் எழுத்துக்களுக்கு அண்மையாக வரும் எழுத்துக்களையுடைய ப்யூகோவ்ஸ்கி கூட, ஹென்றியை வாசித்திருந்தாலும் ஹென்றியை அல்ல, தனது முன்னோடிகளாக ஹெமிங்வே, நீட்ஷே, செலின் போன்றவர்களையே முன்வைக்கின்றார். ஹென்றி நேரடியாக சில விடயங்களைச் சொல்வது தனக்குப் பிடித்திருக்கின்றது என்று ப்யூகோவ்ஸ்கி சொன்னாலும், ஹென்றி சட்டென்று வேறொரு வகையான கற்பனையான உலகிற்கு தன் எழுத்துக்களை கூட்டிச் செல்வதை ஒரு பலவீனமாகச் சொல்கின்றார்.

அதேயே இன்றைய புதிய தலைமுறைகள் ஹென்றியின் நாவல்களை வாசித்து தமது விமர்சனமாக முன்வைக்கின்றனர். ஆனால் இன்றைக்கு ஹென்றி முதல் நாவலை எழுதி ஒரு நூற்றாண்டு ஆகின்ற வேளையிலும் பலர் ஹென்றி மில்லரைத் தேடித்தேடி வாசிப்பதால் அவர் இன்னமும் காலத்தில் உதிர்ந்து போகாத ஒரு எழுத்தாளராகவும் இருக்கின்றார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

‘ஒரு மனிதன் 9-5 மணி வேலையைச் செய்து, சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இந்த உலகிலிருந்து நீங்கிப் போகலாம். ஆனால் அவன்/ள் வேறொரு வாழ்வை விரும்பினால் அதற்காய் இறக்கும்வரை கூடப் போகலாம்'  என்கின்றார்  ஹென்றி. இது கிட்டத்தட்ட ப்யூகோவ்ஸ்கி ‘ஒன்றைத் தொடங்குவது என்றால் அதன் முடிவுவரை போகவேண்டும், இல்லாவிட்டால் தொடங்கவே கூடாது; என்று கூறுவதைப் போன்றது (‘If you're going to try, go all the way. Otherwise, don't even start’).

ஹெமிங்வே பாரிஸிற்கு 1920களில் போகின்றார். ஒரு படைப்பாளியாக  உருவாக பாரிஸின் அன்றைய சூழ்நிலை ஹெமிங்வேயிற்கு வாய்க்கின்றது. அவ்வாறே 1930களில் ஹென்றி மில்லர் பாரிஸிற்குப் போய் ஒரு சிறந்த புனைகதையாளனாக மாறுகின்றார்.

ஹெமிங்வே அவரது இளமை குதூகலிக்கும் இருபதுகளில் பத்திரிகையாள வேலையோடு ஐரோப்பாவுக்குப் போனது போலவன்றி, ஹென்றி மில்லர் தனது நாற்பதுகளில், கையில் உரிய பணமின்றிப் போய் அவர் விரும்பியதைச் சாதித்திருக்கின்றார். அது மட்டுமின்றி பாலியல் கதைகளைச் சுதந்திரமாக எழுதுபவர்க்கும், எதிர்க் கலாசாரவாதிகளுக்கும், நாடோடிகளாய் அலைந்து திரிபவர்க்கும் பிரகடனங்கள் எதுவுமின்றி தன்னியல்பிலே ஒரு முன்னோடியாகவும் ஹென்றி பிற்காலத்தில் மாறியிருக்கின்றார்.
 

(இன்னும் வரும்)


('காலம்' - இதழ்/60)

 

ஹென்றி மில்லர் என்னும் எதிர்க்கலாசாரவாதி


1.

ஹென்றி மில்லர் என்றவுடனேயே எமக்கு அவரின் சிற்றின்ப (Erotica)  எழுத்துக்களே உடனே நினைவுக்கு வரும். அவரின் இந்தவகை நாவல்கள் அமெரிக்காவில் நீண்டகாலம் தடை செய்யப்பட்டும் இருந்ததால் ஹென்றி இவ்வாறு அடையாளப்படுத்துவதும் ஒருவகையில் புரிந்து கொள்ளக்கூடியதுதான். அதேவேளை ஹென்றி அமெரிக்காவில் எதிர்க் கலாசாரத்தை எழுத்தில் கொண்டு வந்தவராக, மேற்குலகின் தொழில்புரட்சியையும், நுகர்வோர் வெறித்தனத்தையும் மறுதலித்தவராகவும் கொண்டாடப்படுகின்றார். அதனால்தான் அவருக்குப் பின் வந்த நாடோடித் தலைமுறையினரான பீட் குழுவின் ஜாக் கீரோவிக், அலன் ஜின்ஸ்பேர்க் போன்றவர்களில் பாதிப்பைச் செலுத்தியவராகவும் ஹென்றி இருந்திருக்கின்றார்.

ஹென்றியின் பிரபல்யம் வாய்ந்த முதலாவது நாவலான ‘Tropic of Cancer’ பிரான்ஸில் 1934 இல் வெளிவந்தபோது, அது அமெரிக்காவில் வாசிக்கத் தடை செய்யப்பட்டது. இந்த நாவல் மட்டுமின்றி அவர் அடுத்தடுத்து எழுதிய ‘Black of Spring’,’ Tropic of Capricorn’ போன்றவையும் அமெரிக்கா, பிரித்தானியா  போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டன.

ஹென்றி ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். தையல் தொழில் செய்யும் தந்தையின் வருமானத்தையுடைய நடுத்தரக் குடும்பத்துப் பின்னணியைக் கொண்ட ஹென்றி கல்லூரி படிப்பைச் சலிப்புடன் இடையில் நிறுத்திவிட்டு பல்வேறு உதிரி வேலைகளைச் செய்கின்றார். எழுத்தாளராகும் கனவு ஹென்றிக்கு இருந்தபோதும் அவரது நூல்கள் எதுவும் அவரது 40 வயதுகள் வரை வெளிவரவில்லை. அதற்குள் அவர் இரண்டு திருமணங்களையும் செய்துவிட்டார்.


அவரது இரண்டாவது மனைவியான ஜூன் ஒரு நடனதாரகை. ஜூனே ஹென்றியை அவர் செய்யும் வேலையைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளராக  மாறும்படிச் சொல்கின்றார். வேலையை உதறிவிட்டு நியூயோர்க்கின் சனநெருக்கடியுள்ள தெருவால் நடந்துவந்தபோது அப்படியொரு மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன் என்று ஹென்றி இதைப் பிற்காலத்தில் நினைவுகூர்கின்றார். ஆனால் வாழ்க்கை ஹென்றிக்கு அவர் விரும்பியது எதையும் உடனே கொடுத்துவிடவில்லை. ஹென்றியும், ஜூனும் மிகுந்த வறுமையில் அடுத்த பத்து வருடங்களில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஹென்றிக்கு எழுதுவதில் பெரும் விருப்பமிருந்தாலும், தனது எழுத்து நன்றாக இருக்கிறதென்று அவ்வளவு நம்பிக்கை வரவில்லை. அப்போது ஜூனைச் சந்திக்கும் ஒரு செல்வந்தர், ஜூன் ஒரு நாவலை எழுதித்தந்தால் அவர்கள் விரும்பும் இடாம்பீக வாழ்க்கைக்குப் பணம் தருகின்றேன் என்றார். அந்த நாவலை ஹென்றி, ஜூனில் பெயரில் எழுதிக் கொடுக்கின்றார். அதனால் கிடைக்கும் பணத்தில் ஹென்றியும் ஜூனும் சில மாதங்கள் பாரிஸிற்குச் செல்கின்றனர்.

ஹென்றிக்கு பாரிஸ் பல அமெரிக்க எழுத்தாளர்களைப் போலப் பிடித்துவிடுகின்றது. அந்தப் பயணம் செய்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு (1930களில்) ஹென்றி தனித்துப் பாரிஸுக்குப் போகின்றார். அப்படிப் போகும் ஹென்றி கிட்டத்தட்ட 10 வருடங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பி வராது பிரான்ஸிலேயே வாழ்கின்றார். அந்த பத்து வருடங்களே ஹென்றியின் படைப்பாளுமையின் முக்கியமான காலம் எனச் சொல்லலாம். ஹென்றியின் அநேக நாவல்கள் அவரது  சொந்த வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது. ஹென்றியின் பெரும்பாலான படைப்புக்களில் அவரது இரண்டாவது மனைவியான ஜூன் வெவ்வேறு புனைபெயர்களில் வருகின்றார்.  அடுத்த இருபது வருடங்களுக்குப் பின்  எழுத வருகிற சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி  இதே நிலையில் நின்று தன்  சொந்த அனுபவங்களை நாவல்களாக எழுதியது நமக்கு நினைவுக்கு வரலாம்.

ஹென்றி பாரிஸுக்கு வந்தபோதும், அவரிடம் போதிய பணமிருக்கவில்லை. அவர் விடுதிகளில் தங்கி நிற்பதற்காக தனது உடைமைகளை விற்கின்றார். ஒருகட்டத்தில் விடுதிகளில் தங்கமுடியாது பாலங்களுக்கு அடியில் கூட உறங்கி இருக்கின்றார். அப்போதுதான் தற்செயலாக Anaïs Nin என்கின்ற பிரெஞ்சுப் பெண்ணைச் சந்திக்கின்றார். அவர்தான் ஹென்றியின் வாழ்க்கையை மாற்றுகின்றார். அனாஸிஸ் இல்லாதுவிடின் ஹென்றியின் எழுத்துலக வாழ்க்கை இந்தளவுக்குப் பிரபல்யமாக பின்னாட்களில் போயிருக்குமா என்பதும் சந்தேகமே.

அனாஸ்ஸூம் ஒரு எழுத்தாளர். அதுவரை எந்தப் புத்தகமும் பிரசுரிக்காத ஹென்றியைப் புதிய நாவலொன்றை எழுத அவர் உற்சாகப்படுத்துகின்றார். ஹென்றி தனது பிரான்ஸ் வாழ்க்கையையும், எழுத்தாளனாகும் தத்தளிப்புக்களையும், அவரது மனைவியான ஜுன் உள்ளிட்ட பல பெண்களுடனான காதல்/காம வாழ்க்கையையும் கலந்து எழுதியதுதான் ‘Tropic of Cancer’ என்கின்ற அவரது பிரசித்தி பெற்ற முதலாவது நாவல்.

அனாஸ் ஹென்றியின் வறுமையான பாரிஸ் வாழ்க்கைக்கு நிதியுதவி செய்பவராக மட்டுமின்றி, ஹென்றியின் முதல் நாவல் வெளிவருவதற்கும் பணவுதவி செய்கின்றார். அனாஸின் பங்களிப்புடன் வெளிவருகின்ற ‘Tropic of Cancer’  பெரும் வரவேற்பை பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் பெறுகின்றது. அமெரிக்காவில் அதன் காம எழுத்து (Pornography) எனச் சொல்லித் தடை செய்யப்படுகின்றது. ஆனாலும் அமெரிக்காவில் இது இரகசியமாக வாசிக்கப்படுகின்றது. அதன் பின்னரான பத்து வருட பாரிஸ் வாழ்க்கையில், ஹென்றி ஆறுக்கும் மேற்பட்ட நாவல்களை அங்கிருந்து எழுதுகின்றார்.

ஹென்றியும் அவரது மனைவியான ஜூனும் பிரான்ஸில் சில காலம் வாழ்ந்தாலும், திருமணமான அனாஸிற்கும், ஹென்றிக்கும், ஜூனுக்கும் இடையில் இருந்த பாலியல் உறவு என்பது மிகவும் சிக்கலானது. அனாஸ் அன்றைய காலத்தில் (1930களில்) இருபாலுறவுக்காராக ஹென்றியோடும், ஜூனோடும் உறவில் இருந்திருக்கின்றார். சிறுவயதுகளில் இருந்தே ஜேர்னல் எழுதும் அனாஸ் இன் ஜேர்னல் பின்னர் பதிப்பிக்கப்படுகின்றது. தனது கணவர் உள்ளிட்ட எவரும் உயிரும் இல்லாதபோதே இவை பதிக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்த அனாஸின், ஜேர்னல் 1980களில் -இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் காலமான பின்- பதிப்பிக்கப்படுகின்றது.


(இன்னும் வரும்..)


நன்றி: 'காலம்' இதழ் ‍ 60