கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தோழர் விசுவானந்ததேவன் நூலை முன்வைத்து..

Friday, August 25, 2017


பொது வாழ்வாயினும் தனிப்பட்ட வாழ்வாயினும் அடிக்கடி நாம் கேட்டிருக்கக்கூடிய ஒரு விடயம் Learn from your mistakes என்பது. கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது என்பது நல்லதொரு விடயமே. ஆனால் மாற்றம் என்பதே மாறாததே என்று புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை அடித்துச் சொன்னதன்பிறகு, நாம் கடந்தகாலத் தவறுகளிலிருந்து எதைக் கற்றாலும் அதைக் கொண்டுபோய் எங்கே பிரயோகிப்பது என்பதில் சிக்கலுள்ளது. மேலும் நேற்றையகால நிலைமை போல இன்றும் எதுவும் மாறாமல் இருப்பதில்லை, அதுவும் முக்கியமாய் போராட்ட நிலவரங்கள் எப்போது மாறிக்கொண்டிருப்பவை.

எனவே நாம் ஏன் சற்று மாற்றி யோசிக்கக்கூடாது? கடந்தகாலத் தவறுகளைக் கற்றுக்கொள்வதைப் போன்று, கடந்தகாலத்தின் அருமையான விடயங்களை நாமேன் அதிகம் சுவீகரித்துக்கொள்ளக்கூடாது. அதன் மூலம் இன்னுமின்னும் நல்ல விடயங்களை நோக்கி நாமேன் நகரக்கூடாது. ஈழப்போராட்ட இயக்கங்களில் வரலாற்றைப் பார்க்கும்போது வாழும்போதே தன்னை மீண்டும் மீண்டும் விமர்சித்துக் கொண்டும் (Learn from the mistakes of the past), அதே சமயம் நல்ல விடயங்களை நோக்கி நகர்ந்துகொண்டும் இருந்த தலைமைத்துவப் பண்பு கொண்ட ஒருவர் யாரென நினைக்கும்போது விசுவானந்ததேவன் முன்னுக்கு வருகின்றார். எப்போதும் சிறுகுழுக்கள் மீதும், மாற்றம் என்பதே மிக மெதுவாகவே நடப்பது என்றும், நாம் சரியென நினைப்பதை எங்கிருந்தும் எப்போதும் தொடங்கலாமென நம்புபவர்க்கு விசுவானந்ததேவன் மிக நெருக்கமானவராகத் தெரிவதிலும் அவ்வளவு பெரிய வியப்பில்லை.

சண்முகதாசனின் மார்க்சிச-லெனிச கட்சியில் இணைந்து, பின்னர்   தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT ), தமிழீழமக்கள் விடுதலை முன்னணி (PLFT ) போன்றவற்றைக் கட்டியெழுப்பிய விசுவானந்ததேவன், தன்னை மீண்டும் மீண்டும் சுயவிமர்சனம் செய்து சிங்களப் பேரினவாதமே எமது மிகப்பெரும் எதிரி என்பதில் உறுதியாய் இருந்து தொடர்ந்து அதற்கெதிரான போராட்டங்களை நோக்கியே முன்னகர்ந்தபடி இருந்திருக்கின்றார்.

விசுவானந்ததேவனின் வாழ்வென்பதே 34 வருடங்கள்தான். ஆனால் அவர் மரணித்து 30 வருடங்கள் கடந்தபின்னும் இன்னும் அவரைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கின்றோம் என்றால், அவர் தான் நம்பிய கொள்கைகளுக்காய் இறுதிவரை சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருப்பது ஒரு முக்கிய காரணமாகும். அவருடைய இந்தக் குறுகிய வாழ்வில் அவர் நடந்துசென்ற பாதை நீண்டது. ஒவ்வொருபொழுதும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றியமைத்தபடி இருந்திருக்கின்றார்; பல்வேறு தளங்களில் தனது உரையாடலை போராட்டம் குறித்து தொடர்ச்சியாக நடத்தியுமிருக்கின்றார்.

'பிரிவினைக்கும் தேசியமுறைக்கும் எதிராக தமிழ் மக்களே ஒன்றுபடுவீர்' என்ற ஒன்றுபட்ட இலங்கையிற்குள் போராட இடதுசாரிகளோடு சேர்ந்து தொடக்கத்தில் குரல்கொடுத்த விசு, 'பாட்டாளி வர்க்கத் தலைமையை உத்தரவாதம் செய்ததன் பின்னால்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடமுடியும் என அமைப்பினால் (NLFT ) முன்வைக்கப்பட்ட கருத்து தவறாதென நாம் கருதுகிறோம். போராட்டம் முனைப்படைந்து ஏனைய வர்க்கங்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகியிருந்து பாட்டாளிவர்க்கத்தை அணிதிரட்டுவது என்பது சாத்தியமற்றது' என்று கூறியதோடல்லாது, 'ஏனைய வர்க்கங்களால் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பல குறைபாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்போராட்டம் தேசிய விடுதலைக்குரிய சகல பரிணாமங்களையும் கொண்டிருக்கவில்லை.' என எச்சரித்துமிருக்கின்றார்.

மேலும் 'இந்நிலையில் இயங்கியல் ரீதியாகப் பார்க்குமிடத்து முற்போக்குத் தேசியவாதத்தை வளர்த்தெடுக்காமல், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்காமல் பாட்டாளிவர்க்கத் தலைமையை உத்தரவாதம் செய்ய முடியாது. தமிழீழ ஜனநாயகப் புரட்சியையும் நிறைவு செய்ய முடியாது. எனவே இப்போராட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சியாக முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே எமது இலக்குகளை அடையமுடியும்' எனவும் NLFTயிலிருந்து PLFT ஆக பிரிகின்றபோது விடுத்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

அறுபதுகளில் வலுவாக இயங்கியதோடல்லாது, சாதி எதிர்ப்புப் போராட்டங்களையும் முன்நின்று நடத்திய இலங்கை இடதுசாரிகள் பின்னாட்களில் தேசிய இனப்பிரச்சினை குறித்து சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதும் விசு மேலே குறிப்பிட்ட அதே புள்ளிதான். ஆகவேதான் தீவிர தமிழ்த்தேசியவாதிகள் தேசிய இனப்போராட்டத்தை கையிலெடுக்க, பல்வேறு காலகட்டங்களில் இனக்கலவரங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் 80களில் ஆயுதப்போராட்ட இயக்கங்கங்களில் நம்பிக்கைகொண்டு பெரும் எண்ணிக்கையில் போய்ச் சேர்ந்ததும் அதன் பின்னர் நிகழ்ந்தவையும் வரலாறு.

பிற்காலத்தில் சண்முகதாசன் போன்ற ஆளுமைமிக்க இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தமது கருத்துக்களை மாற்றியபோதும், தேசிய இனப்போராட்டம் ஆயுதந்தாங்கிய இயக்கங்களினால் திரும்பிவராத இன்னொரு நிலைமைக்கு மட்டுமில்லை, இடதுசாரிகள் மீண்டும் தலைமைதாங்கக்கூடிய களநிலைமைகளை விட்டும் வெளியே போய்விட்டது என்பதாய் இருந்ததுந்தான் பெருந்துயரம்.

விசுவானந்ததேவன், தேசிய இனப்போராட்டத்தில் இடதுசாரிகளின் தலைமை சரியான முடிவை எடுக்கவில்லை என விலகிப்போகின்றபோதும், அவரை மறைமுகமாக ஒரு அரைகுறை இடதுசாரி எனப் பல மரபார்ந்த இடதுசாரிகள் இத்தொகுப்பில் குறிப்பிட விழைகின்றனர். இன்னுமொன்றையும் கவனிக்கவேண்டும், விசு மிக நிதானமாக வர்க்கப் போராட்டம்/ தேசிய இனப்போராட்டம் என்பதை அந்த வயதில் பார்க்கின்றார் என்கின்றபோதும் இறுதிக்காலகட்டங்களில் ஆயுதப்போராட்டத்தின் மூலமே நமது இலக்குகளை அடையலாம் என்ற முடிவுக்கு வருகின்றார். தனது தோழர்களிடமே 'ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட போராட்டம். இப்போராட்டத்தில் யார் தலைமையேற்கப் போகின்றார்களோ , அவர்கள் மட்டுந்தான் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பார்கள்' (ப 192) எனத் தெளிவாக எதிர்காலத்தை ஒரளவு கணிக்கவும் செய்கின்றார்.

ந்தத் தொகுப்பை வாசிக்கும்போது, விசு எவ்வளவு சனநாயகவாதியாக இருந்திருக்கின்றார் என்பது நன்கு விளங்கும். உதாரணமாக NLFT-PLFT பிளவு வந்தபோதும், ஒவ்வொரு பக்கமும் இருக்கும் இயக்கத்தவர்களின் எண்ணிக்கையிற்கேற்ப தமக்குரிய சொத்துக்கள்/வளங்களைப் பிரிக்கின்றார். கருத்து முரண்பாட்டால் பிரிகின்றோமே தவிர நாங்கள் எப்போதும் ஒரு இலக்கிற்காய்ப் போராடுகின்றவர்கள் என்ற அவருக்கிருந்த தெளிவு, வேறு எந்த இயக்கத்தலைமையில் இருந்தவர்களில் காணமுடியாத ஓர் அரியபண்பு இது. மேலும் பல்வேறு இயக்கங்களின் தலைமைகள் மீது முரண்பட்டு பல போராளிகள் அடுத்து என்னசெய்வது என்று திகைக்கின்றபோடும் விசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் பின் தங்காது நிற்கின்றார்.

புளொட்டின் உட்படுகொலைகளை உலகிற்கு அறிவித்த கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' விசுவின் உதவியில்லாதவிடத்து அவ்வளவு விரைவில் அன்று வந்திருக்காது. அதுபோலவே எஸ்.வி.ஆரிடம் கேட்டு தமிழாக்கம் செய்த நூலான 'புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்' நூலை புளொட்டால் படுகொலை செய்யப்பட்ட சந்ததியாருக்கு காணிக்கை செய்யும்படியும் கேட்டதாக எஸ்.வி.ஆர் குறிப்பிடுகின்றார். மேலும் இயக்கங்களில் விலகி என்னசெய்வதென்று அறியாது சிதறித்திரிந்தவர்களுக்காய் தமிழகத்தில் ஒரு பண்ணையை விசு தனது தோழர்களுடன் தொடங்கியிருக்கின்றார். அதற்கான நிதி அவரிடம் போதியளவு இல்லாதபோது அவர் தனது முன்னாள் தோழர்களான NLFT ஐ நாடி அந்தப் பண்ணையைத் அமைத்தும் இருக்கின்றார். இத்தகைய தோழமையுணர்வை நாம் பிற இயக்கத்தலைமைகளிடம் சல்லடை போட்டுத் தேடித்தான் பார்க்கவேண்டும்.

களப்போராளியாக மட்டுமில்லாது நூல்களை நிறைய வாசிப்பவராகவும் எழுதுபவராகவும் இருக்கும் விசுவை, சிலசமயங்களில் சே  குவேராவைப்  போல கற்பனை செய்துபார்க்கவும் மனம் அவாவிக்கொண்டிருந்தது. 'புதுசு' என்ற இலக்கிய இதழை அன்றைய மகாஜனக்கல்லூரி உயர்தர மாணவர்கள் நடத்திக்கொண்டிருந்தபோது, அவர்கள் சிறியவர்கள் என விலத்தாது அவர்களை அழைத்துப் பேசியதோடல்லாது அந்த இதழில் எழுதவும் செய்கின்றார். அந்த இளைஞர்களோடு இலக்கியம் என்றால் என்ன விவாதிக்கவும் பின்னின்ற்காது இருக்கின்றார். மேலும் கலைகளினூடாக மக்களை அரசியல்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து 'திருவிழா' நாடகத்திற்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கின்றார்.

அதுமட்டுமின்றி, மலையக நண்பர் ஒருவரின் கவிதையை ஒரு சஞ்சிகையிற்கு அனுப்ப அதன் நீளங்காரணமாக வெட்டி அவர்கள் பிரசுரிக்க, அந்த சஞ்சிகைக்குழுவோடு சண்டைபிடித்து அடுத்த இதழில் முழுக்கவிதையையும் வெட்டாது விசு பிரசுரிக்க வைக்கின்றார். எஸ்.வி.ஆர் மொழிபெயர்த்த நூலில் எஸ்.வி.ஆரின் பெயர் தவறவிடப்பட்டதற்கு வருத்தமும் மன்னிப்பும் கோரி விற்கப்படாதிருந்த எல்லாப் பிரதிகளிலும் எஸ்.வி.ஆரின் பெயரைப் பதியவும் செய்திருக்கின்றார். அண்மையில் ஒருவர் விசு பற்றி எழுதிய பதிவொன்றிலும் விசுவைத் தான் சந்தித்தபோது ஆதவனின் 'காகித மலர்களை' விசு வாசித்துக்கொண்டிருக்கின்றாரென பதிவு செய்திருக்கின்றார். அந்த வகையில் எப்போதும் வாசிக்கவும், அதன்மூலம் வேறுவகையில் சிந்திக்கவும் முயற்சித்த விசு இன்னும் நெருக்கமாகின்றார்.

இதேபோல, தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலகட்டங்களில் தனியொருவனாக அஸாம், மணிப்பூருக்கெல்லாம் சென்று அங்கு நடக்கும் போராட்டங்களை எல்லாம் அறிந்துகொண்டாரென, தமிழ்நாட்டில் இருப்பவர்க்கு கூட அவ்வளவு அக்கறையில்லாத காலத்தில் அதைச் செய்தரென இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருகின்றது.

ன்று 80களில் இயக்கங்களிலிருந்து வெளிவந்த பலரைச் சந்திக்கும்போது, மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் அவர்கள் மீது மதிப்பிருந்தாலும், பெரும்பாலானோர் எப்படி அன்றி இயக்கங்களிலிருந்து வெளியேறினார்களோ அதற்கப்பால் பரவலான வாசிப்போ, அவர்கள் வெளியேறபின்னர் களநிலவரங்கள் எப்படி மாறின என்பது குறித்தோ சிறிதுகூட அக்கறையில்லாதபோது ஒருவித அயர்ச்சியே அவர்களுடனான உரையாடல்களில் எப்போதும் எட்டிப் பார்த்தபடியிருக்கும். உண்மையில் களப்பணியில் மட்டுமில்லை கருத்துருவாக்கத் தளத்திலும் இயங்கப்போகின்றோம் என்றால் விசுவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எமக்கு நிறைய விடயங்கள் உள்ளன என்றுதான் கூறுவேன்.

விசுவின் மறைவின் 30 வருடங்களின் பின் இந்த நூல் வருவது ஒரு முக்கிய நிகழ்வாகும். இவ்வாறு விசுவைப் போலப் பலரது, வாழ்வு ஈழப் போராட்டத்தில் அவணப்படுத்த வேண்டியிருக்கின்றது. ஆனால் இத்தொகுப்பிலிருந்து ஒரு முழுமையான விசுவானந்ததேவனை உருவாக்க முடியுமா என்பதிலும் சிக்கலிருக்கின்றது. நானறிந்து விசு NLFTயில் இருந்தபோது மத்திய குழுவில் இருந்தவர்கள் என அறியப்பட்ட முக்கியமான பலர்  இத்தொகுப்பில் எழுதவில்லை. அதேபோல 'புதுசு' சஞ்சிகையிலிருந்து NLFTயின் ஆதரவாளர்களாக அல்லது உறுப்பினர்களாக இருந்தவர்களில் பாலசூரியன் தவிர வேறு எவரினதும் பதிவுகளுமில்லை.  இயக்கம் சார்ந்த பத்திரிகை/சஞ்சிகை  வெளியீடுகளில் பங்காற்றி, இறுதிக்காலத்தில் விசுவுடன் மிக நெருக்கமாகவும் இருந்த சிலரும் இதிலில்லை. இன்னும் நானறிந்து விசுவின் இயக்கத்தில் தலைமறைவாகி இயங்கியவர்கள் எனக்கேள்விப்பட்டவர்களையும் காணவில்லை.

விடுபடுதல் இயல்பெனினும் இவர்களையும் இத்தொகுப்பில் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மேலும் PLFT தோன்றுவதற்கான காரணங்களை முன்வைக்கும் அறிக்கை இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பதுபோல அதற்கு முன் விசுவானந்ததேவன் தலைமை தாங்கிய NLFT உருவாக்கப்பட்டதற்கான அறிக்கையையும் நிச்சயம் இணைத்திருக்கவேண்டும். எனெனில் அதிலும் விசுவின் பெரும் பங்களிப்பு இருக்கின்றது.

'நாங்கள் வரலாற்று ஆசிரியர்களாக இருக்கப்போகின்றோமே தவிர, வரலாற்றை மாற்றுபவர்களாக இருக்கமாட்டோம்' என்று விசு இயக்கங்களுக்கிடையிலான பிளவுகளின்போது மனம் நொந்ததுதான் இதைச் சொன்னார் என்றாலும், வரலாற்றில் ஏற்கனவே இழைத்த தவறுகளை விடாது அடுத்த சந்ததி தன்னை மாற்றிக்கொள்ள விசுவானந்ததேவன் ஒரு ஆசிரியராக என்றைக்கும் இருப்பார்.

கியூபாவில் ஃபிடல் காஸ்ரோ  முதல் புரட்சியின்போது தோற்று, இரண்டாவது தரையிறக்கலின்போது 80ற்கு மேற்பட்ட தோழர்களில் பெரும்பாலானோர் இறக்க எஞ்சியோர் 15 பேராக இருந்தபோதும், வரலாற்று ஆசிரியராக கடந்தகாலத்தவறைக் கற்றறிந்து, வரலாற்றை மாற்றியவராக ஃபிடல் தன்னை ஆக்கிக்கொண்டார். அதுபோலவே, எதிர்காலத்தில் விசுவின் கனவுகள் பலிக்குமாயின் அவரும் வரலாற்று ஆசிரியரிலிருந்து தன்னை விடுதலை செய்து , வரலாற்றை மாற்றப்போகின்றவர்களுக்கு ஒரு உதாரணமாகவும் மாறக்கூடும்.


(விசுவானந்தேவனோடு கூடவே கொல்லப்பட்ட இன்னொரு தோழரான, எனது நண்பர் போலின் சகோதரர் நரேஸின் நினைவுகளிற்கு இது...)

(நன்றி: 'அம்ருதா' - ஆவணி, 2017)